Wednesday, October 28, 2009

ஓரு ஊரிலே (யாதும் ஊரே யாவரும் கேளீர்)

அக்கரைக்குச் சென்று வாழ வேண்டும் என்று கிளம்பிய கூட்டம் எவருமே விருப்பத்துடன் செல்லவில்லை.  இனம்,மதம்,குலம் ஏற்றத்தாழ்வுகள் தந்த வலிகளும் அவமானமும், அவல வாழ்க்கையை பொறுத்துக்கொள்ள முடியாமல் வாழ்ந்த கூட்டம் அது.  "எப்படா கதவு திறக்கும்?  காற்றை சுவாசிக்க முடியும்?" என்று காத்துக்கொண்டுருந்த மக்கள் அவர்கள்.
இலங்கைக்கு சென்ற தொடக்க கூட்டத்திற்கு அங்கு எந்த சம்பளமும் அளிக்கப்படவில்லை.  ஆமாம்.  ஒப்புதல் இருந்தால் உடன் வா?  இல்லாவிட்டால் ஒதுங்கி விடு? என்ற கட்டளைக்கு கீழ்படிந்து அட்டை போல் வாழ புறப்பட்ட கூட்டம் அது.  அப்போது அங்கு வாழ்ந்த சிங்கள மக்களிடம் ஆங்கிலேயர்களின் "அறிவுரை" எடுபடவில்லை.

ஆனால் இலங்கை மட்டுமல்ல.  எந்த நாட்டுக்கும் புலம் பெயர்ந்த தமிழ்கூட்டமும் சரி, இன்று வரையிலும் பெரிதான முன்னேற்றமும் அடைந்து விடவில்லை. உருவாக்கிக்கொள்ளவும் இல்லை.  பசிக்கு ஒரு வாழ்க்கை.  ருசிக்கு ஒரு கொள்கை.  எந்த நாட்டுக்குள் வாழ்ந்தாலும் அவர்களின் மரபு என்பது தமிழ் பரம்பரையின் மூலக்கூறு தானே?  என்ன பெரிதான மாறுதல் வந்து விடபோகிறது.

மொத்தத்தில் போதும் என்ற பரம திருப்தி.  அதற்கு மேலும் அருகில் உடனடியாக தோற்றுவிக்கப்படும் ஆலயம்.  போதாதா? அழுது புலம்புவதற்கும், அரற்றி பாடுவதற்கும் அன்றைய தினம் கழிந்து விடும்.  அடுத்த நாள் என்பது விதியின் கட்டளை.
காரணம் தொலை நோக்கு பார்வை என்பதை எப்போதுமே நம்முடைய தமிழர்கள் தொல்லை நோக்கு பார்வை என்று கருதிக் கொள்வதால் இன்று வரையிலும் உலக தமிழினத்தில் எந்த மாற்றமும் இல்லை.
அரசாங்கம், ஆளுமை, அதிகார வர்க்கம் என்ற எல்லாமட்டத்திலும் தொடக்கத்தில் கீழ்நிலையில் இருந்தவர்கள் அத்தனை பேர்களும் நம்முடைய தமிழர்கள்.

மேலேறிய மேட்டுக்குடி மக்கள் அத்தனை பேருக்கும் மேட்டில் இருந்த காரணத்தால் பள்ளத்தில் இருந்தவர்கள் சிறுபுள்ளியாக தெரிந்த காரணத்தால் அவர்கள் அத்தனை பேருமே முக்கியப்புள்ளி என்ற பெயருடன் முகவரி அற்று காணாமல் போய்விட்டனர்.

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு தமிழனுக்கும் ஒவ்வொரு காரணங்கள்.

மனதில் அடுக்கிக்கொண்டு புழுங்கிக்கொண்டு புதையுண்டு போவதில் அத்தனை திருப்தி?  உள் மனதில் உள்ள ஆசைகளை வெறும் சொறிந்து கொள்ளும் அரிப்பு போல் வைத்துக்கொண்டு தானும் போய்ச் சேர்ந்து தன்னுடைய வழித்தோன்றல்களையும் அவ்வாறே உருவாக்கி விட்டு சுத்தமான வாழ்க்கை என்னும் அசுத்தத்தை வைத்துவிட்டு போனதின் எச்சமும் சொச்சமும் இன்று ஒரு இனத்தின் ஓலம் ஓப்பாறி போல் உங்களையும் என்னையும் வந்து அடைந்து கொண்டுருக்கிறது.

தமிழனின் நீண்ட வரலாற்றில் இரண்டு காலங்கள் பொற்காலம் என்று வர்ணிக்கப்படுகிறது.  ஓன்று சங்க காலம் (கிபி 250 வரைக்கும்) மற்றொன்று சோழர் காலம் (கிபி 900 முதல் 1200 வரைக்கும்)

400 விதமான வரிகளின் மூலம் ஆட்சி புரிந்த மன்னர்களின் ஆட்சி எத்தனை மகத்தானது என்று வார்த்தை ஜாலத்தில் பல பாடங்கள் பாடல்கள் இன்று நம்மிடம் இருந்தாலும் அது மட்டும் முழுமையில்லை.

ஓதுக்குப்புறமாக வாழ்ந்தவர்களின் வாழ்க்கை எப்போதும் போல ஓலமாகத்தான் இருந்தது.  மதம் சார்ந்த விசயங்கள், மாசில்லா தான தர்மங்கள், வறியவர்க்கு வள்ளல் என்று வாழ்ந்த அத்தனை மன்னர்களும் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்க முழுமையான எந்த பங்களிப்புகளையும் அளித்ததாக அதிக சான்றுகள் இல்லை.

அன்று முதல் இன்று வரை குறிப்பிட்ட இனம் என்பது அவர்களின் முன்னேற்பாடுகளினால் உருவான முயற்சிகளும், உழைப்புகளும் தான் அவர்களை முன்னேற்றப்பாதைக்கு அழைத்து வந்துள்ளது.  மக்கள் செழித்து இருந்தார்கள், உன்னதமாகத்தான் வாழ்ந்தார்கள் என்ற அத்தனை சான்றுகளுக்குப் பின்னாலும் ஒளிந்துள்ள வறுமையும், வாழ முடியாத மக்களின் வாழ்க்கை தரமும் (புறநானூறு) பல பாடல்களில் இருக்கிறது.

மூவாயிரம் ஆண்டுகளில் வாழ்ந்ததாக உள்ள தமிழனின் வரலாற்றில் தொடக்கம் முதல் ஆண்டு வந்த மன்னர்களின் எந்த மாடமாளிகை இன்று வரை இருக்கிறது?  என்ன சாஸ்திர கோளாறு?  அத்தனை சாஸ்திரங்களை சாப்பாடு போல் வாழ்ந்தவர்கள் என்ன தவறு செய்த காரணத்தினால் நிலைக்கச் செய்யமுடியவில்லை?  அத்தனை ஆன்மிகத்தையும் இந்த ஆலயத்திற்குள் வந்து பருகி அருள் பெற்று மெய்ஞானம் பெற்று விடுங்கள் என்று கட்டி எழுப்பி அத்தனை கோவில்களும் இருக்கிறதா?  ஏன்?

மக்கள் நலத்திற்காக கட்டிய அணைகள் இன்றுவரையிலும் உயிர்ப்புடன் இருக்கிறதே ஏன்?  மனதை வெல்ல முடியாமல், நிஜத்தை விழுங்க பயந்து, நிதர்சனம் எது என்பதை புரியவைக்காமல் அவர்களும் போய்ச் சேர்ந்தார்கள்.  தொடர்ந்தவர்களும் போய்ச் சேர்ந்தார்கள். ஆனால் இன்று மொத்த தமிழர்கள், தமிழினம் உணர்வு இல்லாமல் மொத்த உணர்ச்சிகள் மட்டும் நிரம்பிய கூட்டமாக வாழ்வதன் அவலம் தான் உங்கள் முன்னால் பரிதாபமாக?

பெரும்பான்மை மக்களின் ஏழையை மறைக்க அன்றும் இன்றும் என்றும் வசதிபடைத்தவர்கள், ஆளுமையில் இருப்பவர்கள் கடைபிடிக்கும் ஒரே பழக்கம் ஈகை.

ஆமாம்.  தானம் வழங்குதல்.  அன்று மன்னரின் புகழ் பாட உதவியது.  இன்று நலத்திட்டம் என்ற பெயரில்.  யானைப்பசிக்கு சோளப்பொறி.

ஓன்று நீயே மறந்து விட வேண்டும்.  அல்லது மறக்கச் செய்ய அத்தனையும் செய்யப்படும்.  அன்று முதல் இன்று வரையிலும் எல்லாவற்றுக்கும் காரணம் வைத்து இருப்பவர்கள் தமிழர்கள்.

புதிய முயற்சிகளில் ஈடுபட விரும்பாமை, ஈடுபடுபவர்களை அவர்களின் துணிச்சலை குலைத்தல், எல்லாவற்றுக்கும் ஜென்ம பலன், அடிமையாக இருந்தால் எளிதான வாழ்க்கை, புதிய சிந்தனைகளை புழுவுக்குச் சமமாக பார்ப்பது, வசதி இல்லாத வாழ்க்கையை வழுக்குப்பாறைக்குச் சமமாக பார்ப்பது, திட்டமிட்டு செலவழிக்க மறுப்பது, காசு இல்லாவிட்டால் கூட கடன் வாங்க தயக்கமில்லாமல் ஆடம்பரத்தில் நாட்டம், மதுவுக்கு பரிசு சீட்டுக்கு முந்திக்கொண்டு வரிசையில் நிற்பது.
மொத்தத்தில் எல்லாவற்றுக்கும் "தலைவிதி"  என்று ஒரு வசதியான வார்த்தையைக் கொண்டு தனது வாழ்க்கை வதையாக மாற்றிக்கொள்ளுதல்.


"திரை கடல் ஓடியும், திரவியம் தேடு" என்ற பழமொழி மட்டும் தான் நம்முடையது.  ஆனால் நொடித்துப்போன பல மேலைநாடுகள் அத்தனையையும் காரண காரியங்களையும் ஆராய்ந்து பல நாடுகளை கைப்பற்றினர்.  இறுதியில் வெற்றியும் பெற்றனர்.  இன்று வரையிலும் அடிப்படை வசதியான வாழ்வாதாரத்தில் வாழ்ந்து கொண்டுருக்கின்றனர்.

வறுமையின் கோரத்தாண்டவம் தந்த பரிசு தான் பல மேலை நாடுகளில் உருவான புரட்சிகள்.  அதுவே இறுதியில் ஏழைகள் இல்லாத பொது உடைமையும், முதலாளித்துவ கோட்பாடுகளையும் உருவாக்கியது.

இன்றைய வரைக்கும் ஓடுக்கப்பட்டவர்கள் "ஆலய வழிபாட்டு பிரவேசம்" என்று அரசாங்கம் முன்நின்று நடத்திக்கொண்டுருப்பதை வளர்ந்த நாகரிகம் என்று கணக்கில் கொள்ள முடியுமா?

மேலைநாடுகளில் உருக்குலைந்த சமூக அமைப்பை அவ்வப்போது வந்த தலைவர்கள், கொள்கைகளால், தன்னுடைய தனிப்பட்ட ஆளுமை திறன்களால் முன்னெடுத்துச் சென்றனர்.  ஆனால் நம்முடைய மன்னர்கள் முதல் இன்றைய ஆட்சியாளர்கள் வரையிலும் வெறும் வார்த்தைகளால் நம்மை மயக்கி வைத்திருப்பது என்ன தெரியுமா?
"யாதும் ஊரே யாவரும் கேளீர்".

கடுமையான பஞ்சம் என்றாலும் நமக்கு ஒரு களி உருண்டையின் மூலம் வாழ்ந்து விட முடியும்.  எத்தனை வெள்ளம், புயல் என்றாலும் இயல்பு நிலைமைக்கு நாமே திரும்பி விட முடியும்.  திரும்பித்தான் ஆக வேண்டும்?
அன்று புலவர்கள் புகழ்ந்து பாடி வெகுமதி என்ற பெயரில் தன்னையும் தொலைத்து தமிழையும் தொல்லைபடுத்திக்கொண்டுருந்தார்கள். அதுவே இன்று "வருங்காலமே, வாழ்விக்க வந்தவனே"   என்று புகழ்ந்து  ஒவ்வொரு ஊரின் வாழ்க்கை வசதிகளும் நம்மை விட்டு போய்க்கொண்டுருப்பதை வெறும் வேடிக்கையாளனாக பார்த்துக்கொண்டுருக்கிறோம்.

ஒதுங்கியிருக்கும் ஒரு ஊரிலே உள்ள கிராமத்தின் குறைந்த வாழ்வாதாரம் உங்கள் ஊரை உங்கள் வழித்தோன்றலை பாதிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

தமிழனின் வாழ்வியல் தடங்கள் மூலத்தில் இருந்து இன்று நிர்மூலமாகி முள்கம்பிகளுக்கு பின்னால் வரைக்கும் ஒரு சிந்தனை தொடர் ஓட்டம் இது.....

நீங்கள் வந்த வருகையில் புரட்டப்படும் பக்கங்கள் உருவாகும் சிந்தனை சரியென்றால் ஓட்டு பட்டையில் நீங்கள் அளிக்கும் ஓட்டு மூலம் இந்த முயற்சியை முன்னெடுத்துச்செல்லுங்கள்.

தீர்ப்புகள் திருத்தப்படவேண்டும் என்றால் விமர்சியுங்கள்.


13 comments:

geethappriyan said...

அருமை ஜோதிஜி,
மிக அற்புதமாக ஆதி முதல் அந்தம் வரை புட்டு வைத்துளீர்கள்.ஆகா உங்கள் வாசிப்பு எங்களை மலைக்க வைக்கிறது. இதைக்கண்டே சிலர் இவரிடம் எப்படி பேசுவது? என அஞ்சுவர் போல.
நீங்கள் பழகுவதற்கு இனியவர் என அமீரக நண்பர்கள் சொல்லி கேட்டுள்ளேன்.

//ஓன்று நீயே மறந்து விட வேண்டும். அல்லது மறக்கச் செய்ய அத்தனையும் செய்யப்படும். //

ஆமாம் சார் இப்படித்தான் எல்லாவற்ரையுமே நாம் மறந்து விடுகின்றோம்.

பொது நலனுக்காக உங்கள் பொன்னான நேரத்தை செலவிட்டு படைக்கும் இந்த இடுகைகள் எல்லோரையும் சென்று சேரட்டும்.

ஷண்முகப்ப்ரியன் ஐயா அவர்கள் உங்களின் பாராட்டு மடல் கண்டு மிகவும் மகிழ்ந்தார்.
மிக்க நன்றிகள் உங்களுக்கு.

ஓட்டுக்கள் போட்டாச்சு,

யாசவி said...

proceed pls so nice

make more faster

தீப்பெட்டி said...

:(

Jerry Eshananda said...

என்று தனியும் இந்த சுதந்திர தாகம். ஐயா, நீங்கள் செய்வது மானிட சேவை.தொடர்கிறோம்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஜோதிஜி.. மிக அருமையாக நம்மைப் பற்றிக் கூறியுள்ளீர்கள்.

நமது சங்கப் பாடல்கள் எல்லாம் வரலாற்று ஆவனமாகக் கருதுவதில் ஒரு சிக்கல் உள்ளது. அதை எழுதிய புலவர்கள் மன்னரின் பாராட்டைப் பெறுவதற்காக எழுதியதாகக் கூட இருக்கலாம். ஆகவே எளியோரின் வாழ்வியலைப் பற்றி பெரிதாக பாடியிருக்க வாய்ப்பில்லை.

க.பாலாசி said...

ஆதிகாலம் தொட்டு தமிழன் ஒரே இடத்தில் நில்லாமல் காலமாற்றங்கள் மற்றும் இன்னபிற காரணங்களினால் ஓரிடம் விட்டு நகர்ந்து அங்கேயே தனக்கேற்ப வாழ்க்கைமுறையினையும் உண்டாக்கி சந்ததிகளையும் அதே சூழ்நிலையோடு ஒத்துப்போக செய்துள்ளான். அதே நிலையில் உருவானவர்கள்தான் ஈழததமிழர்களும் என்று இப்போது காண்கிறோம். எப்படியாயினும் அவர்களும் நமது சகோதரர்களே என்ற உணர்வு எப்போதும் நமக்கு இருக்கவேண்டும்...இருக்கும் என்றே நம்புகிறேன்.

உங்களின் இடுகையின் மூலம் அதன் தொடக்கம் முதல் இப்போதைய நிலைவரை விளக்கியுள்ள விதம் உண்மையில் வியக்கவைக்கிறது.

அது ஒரு கனாக் காலம் said...

இது வரை நீங்கள் எழுதியதில், இதில் அதிகம் வீர்யம் உள்ளது ( ரொவ்த்ரம் பழகு ) ... இந்த போராட்டம் எப்போதும் மனதில் நடக்கும் ஒரு முடிவில்லா போர், ஓடி ஓடி உழைத்து , எங்கு போக வேண்டும், மன நிம்மதி போறாதா ???!!!!!

மற்ற முன்னேறிய (?) நாட்டை பார்க்கும் பொழுது உண்மையோ என நினைக்க தோன்றுகிறது ????!!! ( எத்தனை எத்தனை வியாதிகள், மன நோய்கள் ...)

இந்த மாதிரி நினைப்பு ( போதும் என்ற மனமே ....) எல்லாமே கொஞ்சம் ( செல்வம்) சேர்ந்ததற்கு பின் தான் தோன்றும்

Anonymous said...

ஊழல் பேர்வழிகளின் முகத்திரையை கிழிக்கும் ஓர் பதிவு .


http://no-bribe.blogspot.com

நிகழ்காலத்தில்... said...

\\பசிக்கு ஒரு வாழ்க்கை. ருசிக்கு ஒரு கொள்கை. எந்த நாட்டுக்குள் வாழ்ந்தாலும் அவர்களின் மரபு என்பது தமிழ் பரம்பரையின் மூலக்கூறு தானே? என்ன பெரிதான மாறுதல் வந்து விடபோகிறது.

மொத்தத்தில் போதும் என்ற பரம திருப்தி. அதற்கு மேலும் அருகில் உடனடியாக தோற்றுவிக்கப்படும் ஆலயம். போதாதா? அழுது புலம்புவதற்கும், அரற்றி பாடுவதற்கும் அன்றைய தினம் கழிந்து விடும். அடுத்த நாள் என்பது விதியின் கட்டளை.

காரணம் தொலை நோக்கு பார்வை என்பதை எப்போதுமே நம்முடைய தமிழர்கள் தொல்லை நோக்கு பார்வை என்று கருதிக் கொள்வதால் இன்று வரையிலும் உலக தமிழினத்தில் எந்த மாற்றமும் இல்லை.\\

தமிழனாக நெற்றியில் அடித்துக் கொள்ள வேண்டிய உண்மை,

தொடரட்டும் நண்பரே...

ஜோதிஜி said...

விமர்சனம் என்பதை ஒரு புதிய தளத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இன்று வந்து பகிர்ந்து கொண்ட அத்தனை பேர்களும் மிகச் சிறப்பாக உள்வாங்கி உணர்ந்ததை வெளிப்படுத்திய மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது.

இன்று திரு.சண்முகப்பிரியன் இடுகையில் ஒரு வார்த்தை பார்த்தேன். வசதியான இடத்தில் இருந்துகொண்டு நாம் யோசிக்கும் இலங்கை பிரச்சனை என்பதாக சொல்லியிருந்தார். நூறு சதவிகிதம் உண்மையிருந்தாலும், 3000 ஆண்டு கால தமிழனின் வாழ்வியலில் எத்தனை சோகம், வெறுப்பு இருந்தாலும் எங்கும் இல்லாத கிடைக்காத எண்ணங்களை வலிமையாக்குதலை நமது ஞானிகள், ரிசிகள், தத்துவ மேதைகள் அத்தனை பேரும் நமக்கு வழங்கி பெரிய உதவி செய்து உள்ளார்கள்.

நீங்கள் விஞ்ஞானம் விரும்பக்கூடியவர்களாக இருந்தாலும் மெய்ஞான வழியாக இருந்தாலும் மொத்த நாகரிகத்தின் முன்னோடியாக இருந்தவர்கள் நம் தமிழர்கள்.

இன்றைய ஆழ்மன ஆதிக்கம் என்பதும்,எண்ண அலைவரிசையினால் எவையெல்லாம் சாதிக்கமுடியும் என்பதற்கு அத்தனை சான்றுகள் உள்ளது.

வலிமையான பலருடைய எண்ணங்கள் முதல் வெற்றி என்ன தெரியுமா? போருக்கு ஆபூவர்வ சகோதர்களுக்கு உதவியாய் முதன்மையாய் இருந்தவர்க்கு உருவாகி உள்ள அதிகார போட்டியும், சிங்கப்பூர் ரகசிய சந்திப்பும். இது தொடக்கப்புள்ளி, முடிவு தெரியும் போது இன்று முக்கியப் புள்ளியாக இருப்பவர்கள், ஒருஇனத்தின் சாம்பல் மேட்டில் இருந்து கொண்டு வெற்றிக்கொடி நாட்டி வீர வசனம் பேசியவர்களின் நிர்மூலம் உங்களுக்கு புரியும் நாள் வெகுதொலைவில் இல்லை.

நமது மூதாதைகள் தந்த எண்ணங்களின் வலிமை அது. நம்மால் முடிந்த அதை கூட யோசிக்க விரும்பாத அதிகார பேய்களுக்கு நாம் பரவாயில்லை தானே?

பின்னோக்கி said...

மிகவும் ஆராய்ந்து எழுதப்பட்ட பதிவு. இதற்கு பின்னால் உள்ள உங்களின் உழைப்பு பிரம்மிக்கத்தக்கது.

அமர்ஹிதூர் said...

தமிழன் தன் கலாச்சாரத்தை இழந்து பல வருடங்களாகிவிட்டது. இப்போது உள்ள தமிழன் தன் கலாச்சாரத்தை இழந்து, உலகத்தில் உள்ள மற்ற இனங்களால் குப்பை என வீசிஎறியப்பட்ட கலாச்சாரத்தை தன் தலை மேல் வைத்து ஆடிக்கொண்டுள்ளான். திருக்குறள் பல பள்ளிகளில் கிடையாது.எனவே தற்போதைய தமிழன் மற்ற இனங்களுடன் கலந்து தமிழன் என்ற இனமே உலகத்தில் இல்லாமல் செய்து சாவதே மேல்.

ஜோதிஜி said...

நன்றி குமார். பாகற்காய்.