Wednesday, October 07, 2009

100.வீரம் விளைஞ்ச மண்ணு



புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (44)

மகாத்மா காந்தி வாழ்க்கை.- கொள்கை.- இறப்பு.- சில உண்மைகள் (1)

காந்திஜியின் கொலைக்கான திட்டங்கள் பம்பாயிலிருந்து 190 கிலோ மீட்டர்களுக்கு அப்பாலிருக்கும் பூனா நகரில் இறுதி வடிவம் பெற்றது. பூனா நகரம் இந்து மத கொள்கையாளர்களின் கோட்டையாக விளங்கியதில் எந்த ஆச்சரியமும் இல்லை.


பூனாவின் உட்பகுதியில் உள்ள மலைபிரதேசங்களிலிருந்து, இந்து சாம்ராஜ்யம் அமைக்கப் பாடுபட்டவரும், சக்கரவர்த்தி ஓளரங்கசீப்புக்கு எதிராக கொரில்லாப் போர்கள் நடத்தி அவரைக் கலங்க அடித்தவருமான சத்ரபதி சிவாஜி தோன்றிய மண் அது.

அவரது வாரிசுகளாகக் கருதப்பட்ட பேஷ்வாக்கள் 1817 ஆம் ஆண்டு வரையில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டார்கள். பாலகங்காதர திலகரும் இங்கிருந்து வந்தவர்தான். பிராமணர்களிலேயே மிக உயர்ந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் சித்பவான் பிராமணர்கள் பழைய பேஷ்வாக்களைத் தொடர்ந்து ஒரு கட்டுக் கோப்பான அகண்ட இந்த சாம்ராஜ்யத்தை அமைக்க வேண்டும் என்று உறுதி கொண்டிருந்தார்கள். அவர்கள் தலைமையில் ஏற்பட்டதுதான் ஹிந்து மகாசபை. ஆரம்பத்திலிருந்து இன்று வரை, தலைவராக இருந்த பாளாசாஹிப் தியோரஸ் முதல் இன்று இருக்கும் தலைவர் வரை அத்தனை பேர்களும் சித்பவான் பிராமணர்களே. ஆர்.எஸ்.எஸ் என்கிற ராஷ்ட்ரிய சுயம் சேவக சங்கம் என்பது இதன் செயலாற்றும் பிரிவு. ஆர்.எஸ்.எஸ் இன் அதி ரகசிய உட்பிரிவுக்கு "இந்து ராஷ்டிர தளம்" என்று பெயர்.

அகண்ட இந்து சாம்ராஜ்யக் கனவு கண்டு கொண்டுருந்தவர்களுக்கு அப்போது ஒரு புதிய தலைவர் தோன்றினார். மகாராஷ்டிராவின் சர்ச்சில் என்று புகழப்பெற்ற இந்த தலைவரின் பேச்சுகள் வேதவாக்காக் கருதப்பட்டது. அவரது ஒவ்வொரு அறிக்கைகளும் கால் புள்ளி, அரைப்புள்ளி என்பது கூட விட்டுப்போகாமல் மிக கவனமாக, பக்தியோடு படிக்கப்பட்டு அவரது தொண்டர்களால் மனப்பாடம் செய்யப்பட்டது.

விநாயக தாமோதர வீர் சாவர்க்கர் என்பது அவரது முழுப் பெயர்.

சத்ரபதி சிவாஜியின் நேரடிடையான வாரிசுகள் என்று கருதப்பட்ட இவர் அன்றைய காலகட்டத்தில் மகாராஷ்ட்ரா, பூனா நகரில் மிக அதிகமான செல்வாக்குடன் திகழ்ந்தார். இன்னும் வௌிப்படையாக சொல்லப்போனால் இந்த இடங்களில் மகாத்மா காந்தி, நேரு அவர்களெல்லாம் மூன்றாம் நான்காம் இடங்கள் தான். இவருடைய செல்வாக்கு, சொல்வாக்கு அத்தனை பிரபல்யம். கேள்வியே இல்லை. கேள்விக்கு அப்பாற்பட்ட தெய்வத்துக்கு சமமானவராக கருதப்பட்டவர்.

இவர் மட்டும் காங்கிரஸில் இணைந்து இருந்தால் மகாத்மா காந்தி, நேதாஜிக்கு இணையாக மதிக்கப்பட்டு இருக்கக்கூடும். வீரமும், விவேகமும் ஒருங்கே பெற்ற தேசபக்தர். ஒரே ஒரு குறை. பல்வேறு கலாச்சார சீரழிவுகளை தந்து கொண்டுருக்கும் முஸ்லீம்கள் வாழக்கூடிய பூமி இந்த பூமி அல்ல என்பதில் அத்தனை உறுதியாக இறுதிவரையில் இருந்தவர். ஆனால் அவர்கள் எங்கே போகமுடியும்? என்று அவரை கேட்டவரும் இல்லை. அதற்கான பதிலும் எவரிடமும் இல்லை.

காந்தி, நேரு, படேல்,ஜின்னா இவர்களைப் போலவே இவரும் லண்டனில் சட்டம் படித்து அத்தனை மேலிட பிரிட்டிஷ் மக்களிடம் பழகியவர் தான். ஆனால் இங்கிலாந்தில் இருந்த படித்த எந்த சட்டமும் இவருக்கு உடன்பாடில்லை. அவருக்கென்று தனி சட்டங்கள், நியதிகள், கொள்கைகள், கோட்பாடுகள். அவை அத்தனையும் இந்தியாவுக்கு, இந்து மக்களுக்கு, குறிப்பாக இந்து சாம்ராஜ்யத்துக்குப் பொருந்தும் சட்டங்கள்.

சாவர்க்கர் தீவிரமான தேசபக்தர் என்பதில் எந்த தலைவருக்கும் சந்தேகம் இல்லை. பல தேசிய தலைவர்களுக்கு அவர் மேல் மரியாதையை விட பயம் தான் அதிகமாக இருந்தது. கடைசி வரையிலும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களையும், முஸ்லீம்களை ஒரே மாதிரியாகத் தான் கருதினார், வெறுத்தார்.

கண் முன்னே அக்கிரமம் என்றால் அடுத்த நொடியே அதன் முடிவு தெரிந்து விட வேண்டும். லண்டனில் படித்துக்கொண்டுருந்த போது டெல்லியில் வரம்பு மீறி பல அக்கிரமங்களுக்கு துணை போய்க்கொண்டுருந்த வௌ்ளை அதிகாரியை அங்கிருந்தபடியே தூக்கியவர்.


அவர் மூலம் தண்டிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள் பலர். ஆனால் அத்தனை பேர்களும் அழிக்கப்படவேண்டியவர்கள் என்ற வரிசையில் மக்களால் சுட்டிக்காட்டப்பட்டவர்கள்.

காந்தி, நேரு, பட்டேல், சுபாஷ் சந்திர போஸ், ஜின்னா சாகிப் இவர்களின் இந்திய அரசியல் பிரவேசித்திற்கு முன் (1910) பிரிட்டிஷ் அதிகாரியை படுகொலை செய்யப்படுவதற்கு சதி திட்டம் தீட்டியவர் என்று அவர் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டார். அவரை ஏற்றிக்கொண்டு வந்த பிரிட்டிஷ் கப்பலில் இருந்து ஒரு கண்காணிப்பு துவாரம் வழியாக தப்பி வந்த அவரை பிரான்ஸ் அரசு கைது செய்து பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு அந்தமான சிறையில் வைக்கப்பட்டார்.

முதலாம் உலக யுத்தத்தின் முடிவில் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தின் அடிப்படையில் அவருக்கு விடுதலை கிடைத்தது.

காந்தியையும், காங்கிரஸையும் வெறுத்த சாவர்க்கர் குமரி முதல் இமயம் வரையிலும் அப்பாற்பட்டும் இந்து அகண்ட சாம்ராஜ்யம் அமைய வேண்டும் என்பதில் அத்தனை உறுதியாய் இருந்தார். இந்து மகா சபை, ஆர்.எஸ்.எஸ். மற்ற உட்பிரிவுகள் அத்தனையிலும் கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரியாக விளங்கினார்.

வீர் சாவகர்க்கர் மேடை பிரசங்கம் என்பதும் அறிக்கைகள் என்பதும் கேட்பவர்களை மூளைச் சலவை செய்வதற்கு சமமாக இருக்கும். நெருப்பை உமிழ்வது போன்ற பேச்சில் வீரம் இல்லாதவனுக்கும் வீரம் அந்த நிமிடமே வந்து விடும். அத்தனை தூரம் கவர்ந்து இழுக்கும்.

காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் விநாயக கோட்சேயும், உதவியாய் இருந்த விஷ்ணு கார்க்கரே போன்ற இந்து அபிமானிகள் அத்தனை பேர்களுமே சித்பவான் பிராமணர்களே?

முகத்தில் தோன்றினோம். முகவரியை மாற்ற முனைந்தோம். முக்கலும் முனங்கலும் வந்தால் என்ன? முடிவு இல்லாமலா போய்விடும்?

10 comments:

பிரபாகர் said...

வீர் சாவகர்க்கர் பற்றி கேள்விப்பட்டும் படித்திருக்கிறேன் இருந்தும் சில புதிய தகவல்கள். நன்றாக சொல்கிறீர்கள் சார்.

பிரபாகர்.

ஜோதிஜி said...

PRABHAKAR// இன்று குஜராத் முதல் அமைச்சரை மதம் என்ற விஷயத்தில் அத்தனையும் பார்த்து அந்த மாநிலத்தில் இன்னும் 20 வருடங்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் பெற்ற ஆளுமைத்திறன் போன்ற நிர்வாகத்தை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அதே போல இந்த தலைவர் போன்ற ஆட்கள் இன்று ஆட்சியில் இருந்தால் 2020 அல்லது 2050 என்ற கனவு எல்லாமே ஏற்கனவே நாம் பெற்று இருப்போமோ என்று தோன்றுகிறது. இவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தை வெறுத்தவர்கள் மட்டும் (அதனால் தான் முழுமையாக இவரைப்பற்றி இது போன்ற பதிவுகளில் விலாவாரியாக எழுத முடியவில்லை) என்பதை தவிர எந்த குறைகளையும் கண்டு பிடிக்க முடியாது. சுய ஓழுக்கத்தில் இருந்து நிர்வாகத்திறமை வரைக்கும்.




TAMIL 10//நன்றி யாழினி.

பின்னோக்கி said...

புதிய தகவல்கள். இந்த காலத்திற்கு ஏற்ற செய்திகள். வரலாற்றின் சில நாட்கள், நாட்டின் தலையெழுத்தை மாற்றக் கூடிய சக்தி படைத்தது.


//இவருடைய செல்வாக்கு, சொல்வாக்கு

வார்த்தைப் பிரயோகம் அருமை

ஜோதிஜி said...

உங்கள் பெயர் தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். உங்கள் பின்னோக்கியின் பின்னால் தொடர்ந்து வர ஆசைப்படுகின்றேன். உங்கள் இடுகையில் மின் அஞ்சல் வசதியை ஏற்படுத்துங்களேன் நண்பரே.

பின்னோக்கி said...

எனக்கு எப்படி மின் அஞ்சல் வசதி செய்ய வேண்டும் என தெரியவில்லை. அதை படித்து வருகிறேன். விரைவில் அந்த வசதியை செய்து விடுகிறேன்.

உங்களில் பதிவுகளை மின் அஞ்சல் மூலம் படிக்க நினைத்த போது, கீழே கண்ட பிரச்சினை வந்தது. பார்க்கவும்.
The feed does not have subscriptions by email enabled

yegalaivan said...

இந்த வீர (?) சாவர்க்கருக்கு ஆரம்ப காலத்தில் கொஞ்சம் வீரம் இருந்திருக்கும் போலதான் தெரிகிறது.ஆனால் பின்னாளில் பிரிட்டிஷாரின் பாதங்களை தன் கண்ணீரால் கழுவி அந்தமான் சிறையிலிருந்து ரிலீஸ் ஆனது கைப்புள்ள வடிவேலு காமெடி.பிரிட்டிஷாரின் பிரித்தாலும் சூழ்ச்சி பிரசித்தமானது.ஹிந்து முஸ்லீம்களுக்கிடையே நிரந்தர பிளவை தன் விஷம் கக்கும் பேச்சுக்களால் உருவாக்கவேண்டும் என்பதுதான் பிரிட்டிஷார் இந்த தேசபக்தருக்கு கொடுத்த அசைன்மென்ட்.சும்மா சொல்ல கூடாது,அத நல்லாவே பண்ணாரு இந்த தேசபக்த திலகம்.

yegalaivan said...

வீர சாவர்க்கர் கக்குன வெசத்த உங்க எழுத்து அமிர்தமாக்கிடும் போலிருக்கே.
நீங்க உங்களோட கட்டுரைகள்ல எழுதியிருக்கற விஷயங்கள் எல்லாமே பிரிவினை நேரத்தில் இரு தரப்பும் செய்த காலித்தனம்.ஆனா இப்ப குஜராத்துல பாரத மாதாவின் உத்தம புதல்வர்கள் முஸ்லீம் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த சிசுவை கிழித்து வெளியே எடுத்து,எரித்து ஆனந்த கூத்தாடினார்களே அதைப்பற்றியும் எழுவீர்களா ஐயா தேசபக்தரே.

ஜோதிஜி said...

நன்றி நண்பரே. நல்ல விமர்சனம். பட்டியலில் முதல் நபராக தொடங்கி வைத்துள்ளீர்கள். நாம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது? என்று உங்கள் இடுகைக்கு நுழைந்தேன். எந்த படைப்பும் அதில் இல்லாமல் வெற்றிடமாக தெரிகிறதே?

ஜோதிஜி said...

பட்டமெல்லாம் வேண்டாம் துரோணாச்சாரியரே? விஷம் என்று உங்களும் தெரிகிறது எனக்கும் புரிகிறது. அதில் அத்தனைக்கும் பின்னால் உள்ள விஷமங்கள் நமக்குத் தேவையா? நீங்களே சொல்லிவிட்டீர்கள் இரண்டு பக்கமும் உள்ள தனம் என்று. கடைசிவரைக்கும் இன்று வரைக்கும் அத்தனையும் தனதாக்கி கொண்டவர்களாக வாழ்ந்து கொண்டுருப்பவர்கள் நீங்களும் நானும் தானே? மாற்ற முடியாது என்பதால் எதையுமே யோசிக்கவோ நினைக்கவோ எழுதவோ கூடாதா?

சமீபத்தில் தோழர் நல்லகண்ணு அவர்கள் சொல்லியது இந்த நேரத்தில் சிறப்பு. " அரசியல் எத்தனை தூரம் உச்சத்திற்கு கொண்டு செல்கிறதோ அத்தனை தூரம் துச்சமாகவும் மாற்றிவிடும் ". பொறுத்திருந்த பார்க்க நாம் இருவருக்கும் பொறுமையும் ஆயுளும் வேண்டும்.

ஜோதிஜி said...

பின்னோக்கி //


தட்டெழுத்து மூலமாக விண்டோஸ் விஸ்டா என்ற பிரசவ வலி(ழி)யில் பிறக்கும் குழந்தைகள் இது போன்ற அவஸ்த்தைகளை தந்து கொண்டுருப்பதை தன்னுடைய காசான நேரத்தை முகம் பார்க்காமலே எனக்கு முகவரி தந்து கொண்டுருப்பவர் ,உருவாக்கிக்கொண்டுருப்பவர் சரி செய்யப்பட்டு விட்டது என்று சொல்லியிருக்கிறார்கள்.

இரண்டு மூன்று முறை முயற்சித்துப்பாருங்களேன். நான் பல தளங்களில் பல்வேறு போராட்டத்திற்குப்பிறகு என்னைத் தேடி வந்து கொண்டுருக்கிறது. குறிப்பாக பிகேபி இன் படித்துப்பாருங்கள். விஞ்ஞானம் மெய்ஞானம் ஒரே பார்வையில்.