Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Wednesday, November 13, 2019

KINDLE amazon ஐந்து முதலாளிகளின் கதை


Kovai Neram
51 mins · 

12/11/2019
KINDLE unlimited

ஐந்து முதலாளிகளின் கதை.

இந்த டிஜிட்டல் லைப்ரரியில் முதன் முதலாய் வாசித்த புத்தகம் ஐந்து முதலாளிகளின் கதை.நம்ம பக்கத்து ஊரான திருப்பூரை சேர்ந்த எழுத்தாளரும், தொழிலதிபருமான திரு ஜோதிஜி திருப்பூர் அவர்கள் எழுதிய ஒரு சுய முன்னேற்ற நூல் என்றும் கூட சொல்லலாம்.தம் வாழ்வில் கண்டுணர்ந்த அனுபவங்களை அழகாய் பதிய வைத்துள்ளார்.புத்தகம் எந்த ஒரு வர்ணனைகளும் இல்லாமல் மிக மிக சுவராஸ்யமாக செல்கிறது.எந்த சாயமும் பூசாத எதார்த்த வரிகளுடன் கொஞ்சம் வேகமாகவே செல்கிறது.



Tuesday, November 12, 2019

கிண்டில் (ஆச்சரியமான) சில குறிப்புகள்



KINDLE  (சில ஆச்சரியமான) குறிப்புகள்.

நான் அமேசான் போட்டிக்காக என் 5 முதலாளிகளின் கதையை வெளியிட்டு பத்து நாட்கள் முடியப் போகின்றது. என் முக்கிய நோக்கம் பலரையும் கிண்டில் பக்கம் திருப்ப வேண்டும் என்பதே.

ஆனால் எதார்த்தம் எப்படி உள்ளது?

1. பத்து நாட்களில் மொத்தம் இதுவரையிலும் 9500 பேர்கள் வாசித்து உள்ளனர். 90 சதவிகிதம் கிண்டில் அன்லிமிட் மூலமாக வாசித்து உள்ளனர். மீதி விலை கொடுத்து வாங்கி உள்ளனர்.

2. மிக உயர்ந்த பதவியில் உள்ளவர்கள், பெரும் படிப்பு படித்தவர்கள், நாற்பது ஆயிரம் மதிப்புள்ள அலைபேசி வைத்திருப்பவர்கள் என்று என் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு கிண்டில் குறித்து அறிமுகம் இல்லை. ஆச்சரியமாகக் கேட்கின்றார்கள்.


Tuesday, January 24, 2017

குப்பைகள் வாழ்வளிக்கும்

அன்றாட வாழ்வில் நமக்குத் தேவையற்றது என்ற வகையில் பலவற்றைக் குப்பையில் கொண்டு போய் கொட்டுகிறோம். அதிலும் சூழலியல் ஆர்வலர்கள் மக்கும் பொருட்களைத் தனியாக, நெகிழி பொருட்களைத் தனியாகப் போடுங்கள் எனப் பல பிரச்சாரங்கள் மேற்கொண்டாலும் அனைத்தையும் ஒன்றாகவே கொட்டுகிறோம். அத்தகைய குப்பைகளிலிருந்து நெகிழி பொருட்களை, உலோகச் சிதிலங்களை, பாட்டில்களை எனப் பொருட்களைப் பொறுக்கிச் சென்று காசாக்குகின்றனர். ஆகக் குப்பை கூடப் பலருக்கு வாழ்வளிக்கிறது. 

ஆனால் அனுபவ பாடங்களைத் தொகுப்பாகப் பழைய குப்பைகள் என நண்பர் ஜோதிஜி ஏன் வகைப்படுத்தினார் என்று புரியவில்லை. அந்தக் குப்பைகளைப் புரட்டிப் பார்க்கிறபோது பல ரத்தினங்கள், மதிப்புமிக்க ஆலோசனைகள், வாழ்வியல் கருத்துக்கள் ஏராளமாக இருப்பதாகத்தான் நான் பார்க்கிறேன். 

ஏறக்குறைய 7 ஆண்டுகளில் 700 பதிவுகளைக் கடந்து நிற்கின்றார் நண்பர். முன்னுரையிலும் முதல் அத்தியாயத்திலும் ஒரு மாய எண்ணைக் குறிப்பிடுகின்றார். 

அரசியல் அரங்கில் அனைவராலும் மறக்க முடியாத எண் அது. 1,70,000 + பார்வையாளர்களை மின்னூல் வாயிலாகத் தனது கருத்துக்கள் சென்றடைந்துள்ளது என்பதைப் பதிவு செய்துள்ளார். நிச்சயமாக இந்த எண் சாதனையின் உச்சம் என்பதில் ஐயமில்லை. 

யார் ஒருவர் தனது குடும்பத்தை, உறவுகளை நேசிக்கிறாரோ அவர் வாழ்வில் வரும் சங்கடங்கள், சோதனைகள் இதுவும் கடந்து போம் என்ற வகையில் பறந்துவிடும் என்பது நிதர்சனமான உண்மை. 

3 பெண் குழந்தைகளுக்குத் தந்தை நண்பர் ஜோதிஜி, அந்தத் தேவியரோடு இல்லத்துணையையும் சேர்த்து தேவியர் இல்லம் எனத் தனது வலைத்தளத்திற்குப் பெயரிட்டுப் பதிவுகள் மேற்கொண்டு வருபவர். 

செட்டிநாட்டு நகரமாம் காரைக்குடிக்கு அருகிலிருந்து விரைவு நகரமாம் திருப்பூருக்குப் புலம் பெயர்ந்தது, 

அந்தச் சூழலோடு ஒட்டியும், ஒட்டாமலும் வந்து சென்ற தாய், தந்தை அவர்களின் அருமை பெருமைகள், 

படிக்கப் படிக்கத் தேடல் விரிவடைந்தது, 

தாய் தமிழ்ப் பள்ளி, புதுக்கோட்டை ஞானாலயா புத்தகச் சுரங்கம், 

வலைச்சர ஆசிரியராய் பணியாற்றிய வாரத்தில் அறிமுகப்படுத்திய தளங்கள், 

வலைச்சரம் வாயிலாக விரிவடைந்த நட்பெல்லை, 
வந்த வேகத்தில் காணாமல் போகும் வலைப்பதிவர்கள், 
ஒழுக்கம், நேர்மை, பிறர் பொருளுக்கு ஆசைப்படாமை, 
பள்ளி ஆசிரியர்கள், படித்த ஊர், வாழும் ஊரில் உள்ள நட்புகள் 

இப்படி ஏராளமான செய்திகளை நேர்த்தியாகத் தொடுத்த பூச்சரம் போல் சொல்லிக் கொண்டு போகிறார். மாமனாரைப் பாராட்ட ஒரு மனது வேண்டும். அந்த வகையிலும் நண்பர் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு உயர்ந்து நிற்கிறார். 

தந்தைக்கும் மகன்களுக்கும் இடையில் ஒரு சீனப் பெருஞ்சுவர் போல் ஒரு தடுப்பு இருப்பதாகவும், சற்று விலகியிருத்தல்தான் பெரும்பாலான இடங்களில் நிகழ்கிறது என்ற வகையில் ஒரு கருத்தைச் சொல்லியிருப்பார். அந்த இடத்தில் மட்டும்தான் நான் சற்று மாறுபடுகிறேன். தந்தை மகன் உறவில் பலர் மிக நெருக்கமாகவும், உள்ளுக்குள் நூறு கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் வெளியில் ஒருவரைப் பற்றி மற்றவர் உயர்வாகப் பேசுவதைத்தான் பெரும்பாலும் காண்கிறோம். 

ஜோதியும் தன் தந்தையைப் பற்றி எந்த வரியிலும் குறைத்து மதிப்பிடவில்லை, மாறாக இன்னும் சற்று நெருக்கமாக இருந்திருக்கலாமோ என்கிற ஏக்கமாகத்தான் அதை உணர முடிகிறது. 

நிச்சயமாக இந்தப் புத்தகத்தைப் பழைய குப்பைகள் என ஒதுக்கிவிட முடியாது. அவரவருக்குத் தேவையான பல செய்திகள், அனுபவங்கள் அதிலே பொதிந்து கிடக்கிறது. நண்பருக்கு விரையில் தனது தொழில் சார்ந்து அயல்நாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும் என எண்ணுகிறேன். அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால், நிச்சயமாக நம்மைப் போன்ற வாசகர்களுக்கு அருமையான ஒரு பயணச் சரிதம் மின்னூலாகக் கிடைக்கும். மேலும் மேலும் சிகரங்கள் தொட உளம்கனிந்த வாழ்த்துக்கள்.

தோழமையுடன் 
ஸம்பத் ஸ்ரீனிவாசன் 
மதுரை



Sunday, February 15, 2015

வலைத்தமிழ்

"ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" தொடர் வலைத்தமிழ் இணையதளத்திற்கு முதல் தொடர் என்கிற ரீதியில் எங்களுக்கு இது முதல் அனுபவம். சில வாரங்களுக்கு முன்புதான் ஆரம்பித்ததுபோல் தோன்றினாலும் இருபது வாரங்களைக் கடந்து வாசகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் தொடராக வெற்றிகரமாக வெளிவருவதற்கு முழுமுதல் காரணம் திருப்பூர் ஜோதிஜியின் எழுத்து நடை மற்றும் தொடருக்கு ஏற்ற வண்ண வண்ண படங்கள் ஆகியவையே என்று கருதுகிறேன். 

ஒரு தொழிற்சாலை குறித்து எழுதப்பட்ட இந்தத் தொடருக்கும் வாசகர்களிடம் கிடைத்த ஆதரவும், அவர்கள் வழங்கிய கருத்துரையும் எங்கள் தளத்திற்குச் சிறப்பான அங்கீகாரத்தைத் தந்தது என்றால் அது முற்றிலும் உண்மையாகும். எந்தத் துறையைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் வாசகர்கள் படிக்க விரும்பும் நடையில், எளிய மொழியில் எழுதினால் அது வெற்றியைப் பெறும் என்பதற்கு இந்தத் தொடர் முக்கிய உதாரணமாகும். 

இந்தத் தொடர் ஆரம்பித்தது முதல் இன்று வரை பல்வேறு ஆலோசனைகளை, வாசகர்களின் மன ஓட்டங்களை அறிந்து, தன் அனுபவங்களைப் பகிந்துகொண்டு வலைத்தமிழ் ஆசிரியர் குழுவினருடன் கைகோர்த்துப் பயணித்தது எங்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம். 

ஜோதிதியின் ஆலோசனையின்பேரில் பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களைத் தளத்தில் செய்தோம், இன்னும் ஒருசில மாற்றங்கள் விரைவில் முடிய இருக்கிறது. இது வலைத்தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். 

"ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" தொடர் மாடசாமி, ரம்யா, ராஜா போன்ற பாத்திரங்கள் வழியே தங்களின் வலியை, வாழ்க்கையை மிக நேர்த்தியாகப் பதிவு செய்து இன்றைய எதார்த்த நிலையை ஆசிரியர் ஜோதிஜி படம்பிடித்துக் காட்டியுள்ளார். 

ஒவ்வொரு தொழிலும் உழைப்பவர்கள் மட்டும் ஒரு பக்கமும், உழைப்பை உறிஞ்சு வாழ்பவர்கள் மறுபக்கமும் இருப்பது இயல்பு தானே? இதைத்தான் இந்தப் பாத்திரங்கள் வழியே ஜோதிஜி படம் போட்டுக் காட்டியுள்ளார். 

இடையிடையே ஆயத்த ஆடைத்துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் வாழ்க்கை சார்ந்த பல்வேறு குறிப்புகள், முதலாளிகளின் மனோபாவம், தான் சந்தித்த அனுபவங்கள் வழியே உணர்ந்து எழுதிய மேற்கோள்கள் போன்றவற்றை மிக நேர்த்தியாக எழுதியுள்ளார். 

ஒவ்வொரு தொழிலும் பணத்தைத்தான் முதன்மை படுத்துகின்றது. பணம் தங்கள் வாழ்க்கையைச் சிறப்படைய வைக்கும் என்று நம்புகின்றார்கள். ஆனால் எத்தனை பணம் சேர்ந்தாலும் எவரும் நிம்மதியாக இருப்பதில்லை. அதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? என்பதனை தனக்குரிய பாணியில் தான் பார்த்த தொழில் சமூகத்தை வைத்து பலவித கருத்துக்களைச் செறிவாக வழங்கியுள்ளார். 

எல்லா உழைப்புக்குப் பின்னாலும் வெற்றி கிடைத்து விடுவதில்லை. குறிப்பிட்ட உழைப்பைத் தவிர வேறு எதற்கும் இங்கே எளிதில் அங்கீகாரம் கிடைத்து விடுவதில்லை. ஏன்? அதற்கான காரணங்கள் என்ன? என்பதனை தன்னை உதாரணமாகக் கொண்டு தான் பெற்ற தோல்வியை வெட்கப்படாமல் எடுத்துரைத்து அதன் வழியே புதிய கருத்துக்களை வழங்கியுள்ளார். இவர் இந்தத் தொடரில் எழுதியுள்ள பல நிகழ்வுகளில் நேர நிர்வாகம் குறித்து எழுதப்பட்ட பல சம்பவங்கள் அனைவருக்கும் பயன்தரக்கூடியது. 

மொத்தத்தில் "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" ஆயத்த ஆடைத்துறையை மட்டும் விவரித்துச் செல்லாமல் இதன் மூலம் அனைவருக்கும் பயன்படும் வகையில் ஒரு தொழிற்சாலையைத் தாண்டிய கருத்துக்களாக விளங்குகிறது. 

ஒவ்வொரு வாரமும் பதியப்படும் வாசகர்களின் கருத்துக்கள் இந்தத் தொடரின் வெற்றியை உறுதிசெய்தது. இந்தத் தொடரைப் தொடர்ந்து படித்துவிட்டு அமெரிக்காவில் பணிபுரியும் பேராசிரியர் ஒருவர் அழைத்து ஜோதிஜியின் "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" போல், தமிழகக் கண்டுபிடிப்புகள், குறிப்பாக ஜி.டி.நாயுடு குறித்துத் தான் ஒரு தொடர் எழுத வலைத்தமிழில் வாய்ப்பிருக்குமா? என்று எங்கள் குழுவினரிடம் கேட்டார். 

மேலும் ஜோதிஜியின் "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" என்னை வெகுவாகக் கவர்ந்தது என்று குறிப்பிட்டார்.. இதுபோல் இங்கே இந்தத் தொடர் வெளியானது முதல் எங்களுக்குப் பலதரப்பட்ட இடங்களில் இருந்தும், பல உயர்பதவிகளில் வகிப்பவர்களிடமிருந்து ஆக்கப்பூர்வமான உற்சாகமான பாராட்டுக்கள் வந்து கொண்டே இருந்தன. 

ஜோதிஜி கடந்த 2009 முதல் 'தேவியர் இல்லம்' என்ற வலைபதிவின் மூலம் பலதரப்பட்ட விசயங்களைக் குறிப்பாகத் தற்காலச் சமூகம் குறித்து, தான் கடந்து வந்த வாழ்க்கை குறித்து எழுதி வருகின்றார். 

தன் அனுபவங்களை எவ்வித பாசாங்கு இல்லாத நடையில் பட்டவர்த்தனமாக எழுதுவது இவரின் சிறப்பாகும். தான் பணிபுரியும் ஆயத்த ஆடைத்துறையில் உள்ள அக்கிரம நிகழ்வாகட்டும், ஈழம் சார்ந்த நாம் அறியாத தகவலாகட்டும் எதையும் மேம்போக்காக எழுதாமல் தான் உணர்ந்தவற்றை, தன் மொழியில் எழுதிவிட்டு நகர்வது இவரின் சிறப்பு. 

தான் எது எழுதினாலும் அதில் ஒரு சமூக நேர்மை, அன்றாட வாழ்வியலில் இன்றைய நெருக்கடிகள் குறித்துப் பதிவு செய்துவரும் ஜோதிஜி, இதில் தமிழகத்தின் இன்றைய சூழலில் இயங்கும் ஒரு தொழிற்சாலையின் நிலை, அதன் உட்கட்டமைப்பு மற்றும் சவால்கள், தொழிற்சாலையை நடத்தும் முதலாளிகளின் நிலை, தொழிலாளர்களின் நிலை, அரசு மற்றும் போட்டியாளர்களின் சவால்கள் என்று பல்வேறு கோணத்தில் இந்தத் தொடரை செதுக்கியுள்ளார். 

இவர் இதற்கு முன்னால் "டாலர் நகரம்" என்றொரு புத்தகத்தின் வாயிலாகத் திருப்பூர் குறித்துப் பொதுவான பார்வையைப் பதிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து வலைத்தமிழ் இணைய இதழில் திருப்பூருக்குள் உள்ள தொழிற்சாலையைக் குறித்து எழுதியிருப்பது மிகவும் பொருத்தமான ஒன்ற. பாகம் ஒன்று பாகம் இரண்டு என்பதாக எடுத்துக் கொள்ளலாம். 

இது தொழிற்சாலைகள் குறித்த ஆவணம், குறிப்பாகத் திருப்பூர் ஆடைத் தொழில் குறித்த முழுமையான ஆவணம். இது ஒரு நூலாக வெளிவரும்போது இந்தத் துறையில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள், தொழில் ஈடுபட்டு வரும் தொழில்முனைவோர் என்று பலருக்கும் பயனளிக்கும். 

இதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பது தமிழ் தாண்டி அனுபவங்கள் சென்று சேர வழிவகுக்கும். இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விரைவில் வெளியிட வாலைத்தமிழ் குழு இசைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.. 

தொடர் நிறைவடையும் இந்தத் தருணத்தில் இந்த முதல் தொடரை எழுதிய ஜோதிஜிக்கு வலைத்தமிழ் ஆசிரியர் குழு சார்பாக எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

இதன்மூலம் வலைத்தமிழ் ஆசிரியர் குழுவிற்குக் கிடைத்த அனுபவமும், ஜோதிஜியின் எழுத்துக்களைத் தொடர்ந்து படித்து வரும் இணைய நண்பர்களின் ஒத்துழைப்பும், இத்தொடர் மூலம் தானும் தன் அனுபவங்களைப் பகிர வாய்ப்பிருக்குமா என்று கேட்டுவரும் எழுத்தாளர்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.. 
நன்றி.. 

ஆசிரியர் குழு சார்பாக 

ச.பார்த்தசாரதி 
U.S.A


தொடர்புடைய பதிவுகள்

Monday, February 09, 2015

உணர்வுகளை வாசித்து, வெற்றிக்கு வழிகாட்டும் ஆவணம்

திருப்பூர் பனியன் தொழிலில் தான் நுழைந்தது முதல் சந்தித்து வரும் பல்வேறு நிகழ்வுகளை, அந்த நகரம் பிறமாவட்டங்களிலிருந்து புலம் பெயர்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை உள்வாங்கிக் கொண்டு வாழவைப்பதை, வாழ்ந்தவர்கள் வீழ்ந்ததை, ஏற்றுமதி மிகுதியினால் அந்நிய செலாவணி மிகுந்திருப்பதைத் தனது டாலர் நகரம் புத்தகத்தில் எழுதியிருந்தார்.

வலைதமிழ் என்ற இணைய இதழில் தொடராக எழுதி வந்து தற்போது மின்நூலாக வந்திருக்கும் ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் அதன் இரண்டாம் பாகம் என்றும் சொல்லலாம், 

பின்னலாடை தொழிலோடு இணைந்து அதில் உழலும் முதலாளிகள் முதல் அடிமட்ட தொழிலாளி வரை உள்ள மனிதர்களை வாசித்த வரலாறு என்றும் சொல்லலாம். 

திருப்பூர் எனது சொந்த ஊர். நான் 4 வகுப்பு வரை அங்குக் கொங்கு நகர் நகராட்சி பள்ளியில் படித்துவிட்டு, பின்னர்த் திண்டுக்கல்லில் பள்ளிக் கல்வியைத் தொடர்ந்தாலும், வருடந்தோறும் விடுப்பிற்குத் திருப்பூர் வந்து கொங்குநகர், பன்சிலால், தனலட்சுமி மில் ரோடு, யூனியன் மில் ரோடு, கஜலெட்சுமி தியேட்டர், டைமண்ட் தியேட்டர் பகுதி, ராயபுரம், ஏற்றுமதியில் நிராகரிக்கப்பட்டு 2ம் தரம் (செகண்ட்ஸ்) உலாவரும் காதர்பேட்டை எனச் சுற்றிச் சுற்றி வந்தது, முன்சீப் சீனிவாசபுரம் (தற்போதைய திருப்பூர் திருப்பதி கோவில் தெரு) ல் உள்ள பஞ்சாலை தொழிலாளர் சங்க தலைவர்களின் நடவடிக்கைகளைப் பள்ளிப்பருவத்திலிருந்தே கண்காணித்து வந்தது போன்ற வற்றால், நண்பர் ஜோதிஜியின் தொடரின் ஒவ்வொரு அத்தியாயம் வெளி வந்த போதும் நுனிப்புல் மேய்வது போல் சில வரிகளை மட்டும் படித்துவிட்டு அறிவாளி திரைப்படத்தில் எஸ்.வரலட்சுமி நடிகைக்குச் சப்பாத்தி செய்யத் தங்கவேலு சொல்லிக் கொடுக்கும் போது ஒவ்வொரு நிலையிலும் அதுதான் எனக்குத் தெரியுமே என்பது போல் நான் அருகில் இருந்து சுவாசித்த பனியன் தொழிலின் சில விபரங்களை அதுதான் எனக்குத் தெரியுமே என்று நகர்ந்திருக்கிறேன். 

ஆனால் முழுத் தொடரும் முடிந்து நண்பர் மின்நூல் வடிவில் பதிவேற்றியபிறகு பதிவிறக்கம் செய்து ஒரு விடுப்பு நாளில் தொடர்ந்து படித்த போது விறுவிறுப்பும், சுவாரசியமும் தொற்றிக் கொண்டது என்றால் அது மிகையல்ல. 

தனியார் தொழிலில் ஒரு நிறுவனத்தை விட்டு மற்றொரு நிறுவனத்திற்குத் தொழிலாளிகள் மாறுவது என்பது யதார்த்தமாக நிகழக் கூடிய ஒன்றே. அந்த வகையில் ஒரு நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவில் பணியாற்றி வந்த ஜோதி கணேசன் மனித வள மேம்பாடு மற்றும் நிர்வாகத்திறன் இணைந்த ஒரு பொறுப்பில் புதிய நிறுவனம் ஒன்றில் உள் நுழைந்தது முதல் அங்குள்ள பிரச்சனைகளை ஆழ்ந்து உணர்ந்து படிப்படியாக அவற்றைக் களைந்து வெற்றி கண்ட கதையைத் தொடர் அருமையாகப் படம் பிடித்துக் காண்பிக்கிறது. 

பொதுவாக ஒரு தொடரை, அல்லது அது தொகுப்பாகப் புத்தகமாக வெளிவருகையில் அதை வெளியிடும் நிறுவனத்தைச் சார்ந்தவர் தன்னுடைய வணிகமும் அதில் இணைந்துள்ளது என்கிற சுயநலத்தில் அந்தத் தொடரைப் பற்றி, புத்தகத்தைப் பற்றி உயர்வாக ஒன்றிரண்டு பக்கங்கள் பதிப்புரை எழுதுவது இயல்பு. 

ஆனால் வலைதமிழ் இணைய நிறுவனத்தினர் நண்பர் ஜோதி கணேசனின் தொடருக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பினை கண்டு திக்கு முக்காடி, மின்நூலுக்கு எழுதியிருக்கிற நெடிய பதிப்புரையிலிருந்தே தொடரின் வெற்றியை நாம் உணர முடிகிறது. 

என் தம்பி ஒருவன் இன்று மிகப்பெரும் நிறுவனமாக வளர்ந்து நிற்கின்ற ஒரு பனியன் நிறுவனத்தில் படிப்படியாக வளர்ந்து பொதுமேலாளராக அந்த நிறுவனத்தில் ஒரு அங்கமாக வளர்ந்து ஏறக்குறைய ஒரு நாளைக்கு 14 முதல் 16 மணி நேரம் அந்த நிறுவனமே கதியென்று இருக்கிறான். அவனது முதல் மனைவி அந்த நிறுவனம், 2 வது மனைவிதான் இல்லற வாழ்விற்குத் தேர்வுசெய்து மணம் முடித்துக் கொண்ட மனைவியும், குழந்தைகளும். அத்தகைய dedicated அர்ப்பணிப்பான உழைப்புத்தான் இந்த உயரத்திற்கு அவனைக் கொண்டு வந்திருக்கிறது. 

அது போல திருப்பூர் பின்னலாடை தொழிலோடு ஐக்கியமாகிவிட்ட ஜோதிஜியின் அர்ப்பணிப்பை அவருடைய விவரிப்புகளிலிருந்து உணர முடிகிறது. அன்றாடம் வேலை தேடி வருபவர்கள், வேலையின் உள் நுழைந்து சூட்சுமங்களைப் புரிந்து கொண்டு காலூன்றி வெற்றி பெறுபவர்கள், சோம்பேறித்தனத்தால் பாதியில் விட்டு விட்டுத் தோற்பவர்கள், சம்பாதிப்பதில் பெரும்பகுதியை டாஸ்மாக் கில் இறைப்பவர்கள், நிறுவனத்தில் பணியில் இருந்து கொண்டே நிறுவனத்திற்குத் துரோகம் இழைப்பவர்கள் இப்படிப் பலரைப்பற்றி விவரித்துச் செல்கிறது தொடர். 

பஞ்சிலிருந்து நூலாகி, நூல் துணியாகி, துணி வெள்ளைக்கப்பட்டு, அதில் கலர்கள் சேர்க்கப்பட்டு, பல வடிவங்களில் வெட்டப்பட்டு, ஓரிடத்தில் தைக்கப்பட்டு, ஓரிடத்தில் தரம் பிரிக்கப்பட்டு, ஒரிடத்தில் பெட்டியில் அடுக்கப்பட்டு வணிக மையத்திற்குச் செல்லும் வரை பல உப தொழில்கள் அதைச் சார்ந்துள்ளது. அந்த விபரங்களைப் புரிந்து கொண்ட பல சாதாரணத் தொழிலாளிகள், சில வருடங்கள் தொழில் பழகிவிட்டு, தனக்குத் தெரிந்த மேற்சொன்னவற்றில் ஏதேனும் ஒன்றை உப தொழிலாகத் துவங்கிக் கொண்டு, தான் முன்னர்ப் பணி புரிந்த நிறுவனத்திலிருந்தே ஆர்டர்கள் பெற்று வெற்றிப் படியை தொட்டவர்கள் ஏராளம். 

தொழில் சார்ந்த நிர்வாகவியலில் நண்பரின் தொடரை ஒரு பாடமாகவே வைக்கலாம். அத்தனை நெளிவு, சுளிவுகளை விவரித்துள்ளார். ஏற்றுமதி தொடர்பாகப் பையர் என்று சொல்லப்படுகிற வெளிநாட்டுப் பிரதிநிதிகள், அல்லது அவர்களின் முகவர்கள் வந்து பார்த்து, (சாம்பிள்) மாதிரி வாங்கி அனுப்பி, ஆர்டர் ஏற்கப்பட்டு மிகுந்த எதிர்பார்ப்போடு பலரின் கடுமையான உழைப்பை செலுத்தி தயார் செய்து இறுதிநிலை வருவதற்குள் நெய்தலில், சாயமேற்றுவதில், ஆடை வடிவமைப்பில், பட்டன் அமைப்பதில், ஜிப் அமைப்பதில், அளவில் இப்படி ஏதேனும் ஒரு விஷ‌யத்தினால் சிறு தவறு நேர்ந்தாலும் ஒட்டு மொத்த ஆர்டரும் ரத்தாகி அடிமாட்டு விலையில் காதர்பேட்டையை வந்தடைந்துவிடும். 

அந்த ஆர்டருக்காக உழைத்த முதலாளி எழுந்து நிற்க பல வருடங்களாகிவிடும் என்பதை அருமையாகச் சொல்லியிருக்கிறார் தொடரின் ஆசிரியர். 

காரைக்குடி நகரில் படிப்பை முடித்துப் பிழைப்பிற்காகத் திருப்பூர் புலம் பெயர்ந்து, நுழைந்ததிலிருந்து இது தான் தனது பிழைப்பிற்கான ஊன்றுகோல் என்று பின்னலாடை தொழிலை நேசித்து, அதன் ஒவ்வொரு அணுவையும் சுவாசித்து, வெற்றியடைந்ததை, இடையில் 30 ஆண்டுகளாகச் சந்தித்த இடைஞ்சல்களை, காயங்களை, அதிலிருந்து மீண்டு எழுந்து நின்றதை மிகச் சரியாக ஆவணப்படுத்தியிருக்கிறார் நண்பர் ஜோதி கணேசன். 

ஒரு தொழிற்சங்க நிர்வாகியான எனக்கு ஒரே ஒரு நெருடல், குழந்தை தொழிலாளர்- உழைப்புச் சுரண்டல், தொழிலாளர் நலச்சட்டங்களைப் பல நிறுவனங்கள் பின்பற்றாமலிருப்பது, உரிமைகள் கோர ஒன்றிரண்டு பேர் ஒன்றிணைந்தால் அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்வதைக் காட்டிலும் அவரை உடனே வெளியேற்றுவது என்கிற முதலாளித்துவம் ஆகியவையும் இந்த நகர் முழுவதும் நிறைந்திருப்பதை விரிவாகச் சொல்லியிருக்கலாம் என்று எண்ணினேன். 

மற்றபடி இந்தத் தொடருக்கு விமர்சனம் எழுதிய அனைவரும் பல விபரங்களைச் சுட்டிக் காண்பித்தாலும், இறுதியில் இது தொழிலாளியாக, முதலாளியாக, நிர்வாகியாக எவ்வாறாகிலும் இந்தப் பின்னலாடை தொழிலில் நுழைபவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்று சொல்லியிருப்பதோடு நானும் உடன்படுகிறேன். 

நிச்சயமாக அவரின் தொழிலில் உள்ள stress, tension ஆகியவற்றிலிருந்து விடுபட நிச்சயம் அவரின் எழுத்து அவருக்கு உதவியாக உடனிருக்கும். ஜோதிஜி இன்னும் பல வெற்றிப்படிகளைக் கடக்க வாழ்த்துக்களுடன் 

தோழமையுடன் 
எஸ்.சம்பத். மதுரை.




தொடர்புடைய பதிவுகள்






Wednesday, February 04, 2015

கதை போல எழுத முடியுமா?

தமிழ் வலையுலகில் பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைப் பற்றி எழுதுபவர்களே. ஆனால் தனக்கென்று ஒரு களத்தை ஏற்படுத்திக் கொண்டு தான் சார்ந்த  துறையை சமூகப் பார்வையுடன் எழுதுபவர்கள் மிகச் சிலரே. அவர்களில் தனி முத்திரை பதித்தவர் தேவியர் இல்லம் என்ற வலைப்பூவில் எழுதிவரும் அன்பிற்குரிய ஜோதிஜி அவர்கள்.  

2013ஆம் ஆண்டு  வெளிவந்து வெற்றி பெற்ற "டாலர் நகரம்" என்ற புத்தகத்தின் வாயிலாக  திருப்பூரை படம் பிடித்துக் காட்டிய ஜோதிஜி "ஈழம் -வந்தார்கள் வென்றார்கள்" "வெள்ளை அடிமைகள்"  "கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு" போன்ற மின்நூல்களின் மூலமாக இணையத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நன்கு அறிமுகமானவர். 

இந்த நூல்கள் 50000 முறைக்கு மேல் பதிவிறக்கம்  செயப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது 

சமீபத்தில் வலைத்தமிழ் இணைய இதழுக்கு "ஒரு தொழிற்சாலைக் குறிப்புகள் "என்ற தொடரை இருபது வாரங்களாக எழுதி  வந்தார். ஆயத்த ஆடைத்  தொழிலின் பின்னணியை விரிவாக   சொன்ன  இதுபோன்ற ஒரு நூலை இதுவரை படித்ததில்லை. ஒரு குறிப்பிட்ட தொழிற்சார்ந்தவற்றை எந்தக் கல்லூரியிலும் கற்றுத் தரமுடியாத நுணுக்கங்களை   சுவாரசியமான நாவல் போல 20 அத்தியாயங்களாகப் படைத்தளித்துள்ளார். 

இத்தொடரை வாசித்தவர்களிடம்  இருந்துவந்துள்ள விமர்சனங்களை வைத்தே இத் தொடரின் கருத்தாழத்தை அறிந்து கொள்ள முடிகிறது. படிப்பவர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதே ஒரு படைப்பின் சிறப்பு. அந்த வகையில் இத் தொடர் பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்பதில் ஐயமில்லை 

ஆயத்த ஆடைகளே தற்போது அதிகமாக விரும்பப் பட்டு வருகின்றன . அதன் ரிஷிமூலம் என்ன என்பதை  இத் தொடர் எடுத்துரைக்கிறது.ஒரு ஆறு மலையில் உற்பத்தியாகி  நிலத்தில் வீழ்ந்து காடு மேடுகளை கடந்து, கற்களை உடைத்து  சமவெளிகளில் சஞ்சரித்து  பின்னர் கடலை அடைகிறது. அது போலவே ஆடைகளும் பருத்தியாய் விளைந்து நூலாய் மாறி இயந்திரங்களாலும் மனிதர்களின் வியர்வை சிந்தும் உழைப்பாலும் ஆடையாக  உருப்பெற்று  அங்காடிக் கண்ணாடிகளில் அழகாய் தவம் இருந்து நம் உடலை அடையும் வரை, நாம்  அறியாத ஒவ்வொரு பகுதியையும்  நம் கண் கொண்டு வந்து நிறுத்தி பிரமிப்பூட்டுகிறார்.

இத் தொடரில் முதலாளிகளின் சுயநலத்தை  தோலுரித்திக் காட்டுவதோடு, தன்னால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டாலும் ஏன் தானே பாதிப்படைந்தாலும் வறட்டு கெளரவங்கள் ஆடம்பரங்கள் இவற்றை விடாது பிடித்துக் கொண்டிருக்கும் அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளை சாட சிறிதும் தயங்கவில்லை  ஜோதிஜி  

அவர் பணியாற்றிய நிறுவனங்களின் செயல்பாடுகள் தவறாக இருந்தபோது அவற்றை ஆணவம் மிக்க முதலாளிகளுக்கு அஞ்சாமல் சுட்டிக் காட்டியது  ஜோதிஜியின்  தன்னம்பிக்கையும் உறுதியையும்  நேர்மையையும் வெளிப்படுத்துகிறது. முதலாளிகளின் பலவீனங்களை போட்டு உடைத்திருக்கும் அதே வேளையில்  அனைத்தையும் வெளிப்படையாக  சொல்ல முடியாது என்பதால்  அவற்றை தொடர்வதை சில இடங்களில் சாமார்த்தியமாக தவிர்த்திருக்கிறார். 

இத் தொடரில் குறிப்பிடப் பட்டிருப்பவை  அனைத்தும் அவரது சொந்த அனுபவங்கள். நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மட்டுமல்லாது  எப்படி இருக்கக் கூடாது என்பதற்கும் உதாரணங்கள் நிறைந்திருக்கின்றன இக் குறிப்புகளில்  இந்தத் தொடரை ஒரு  நிர்வாகப் பாடமாகக் கொள்ளலாம். இங்கு வாழ்ந்தவர்களும் உண்டு. வீழ்ந்தவர்களும் உண்டு. துரோகிகள் வஞ்சகர்கள், மாடாய் உழைத்துத்  தேயும்  உழைப்பாளிகள் ,சோம்பேறிகள் என அனைத்து தரப்பினரைப் பற்றியும் முதலாளி அறிந்திருக்கிறாரோ இல்லையோ நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும்  என்ற  அனுபவ நிர்வாகப் பாடம் பலருக்கும் பயனளிக்கக் கூடியது .

ஆயத்த ஆடைத் தொழிலில் ,  அயன் செய்தல், பிசிறு நீக்குதல் உட்பட சிறுசிறு பணிகள் கூட எவ்வளவு முக்கியமானவை  என்பதையும் விடாமல் கூறி இருக்கிறார். எதற்கு அதிக கவனம் கொடுக்கப் படவேண்டும் என்பதும் விவரிக்கப் பட்டிருகிறது . இவ்வளவு விஷயங்கள் இதில் உள்ளதா என ஆச்சர்யப் பட வைக்கிறது  ஜோதிஜியின் எழுத்துக்கள்  

அவர் அதிகாரப் பதவியில் இருந்தபோதும் தொழிலாளர்களின் சுக துக்கங்களை அருகில் இருந்து உணர்ந்தவர்  என்பதும்  அவரது எழுத்து உணர்த்துகிறது. தொழிலாளர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டியது தவறாமல் கிடைக்கவேண்டும் என்பதை முதலாளிகளிடம் வற்புறுத்தத் தயங்காத  மனிதாபிமானம் மிக்க நிர்வாகியாக இருந்ததுமே அவரது வெற்றிக்குக் காரணமாக அமைந்திருக்கும் என்பதை உணரமுடிகிறது.

 பெரிய நிறுவனங்கள் அதனை சார்ந்து இருக்கும் சிறிய நிறுவனங்கள் இவற்றின் பணி என்ன? என்பதையும் இவற்றின் வளர்ச்சி வீழ்ச்சி பற்றியும் ஒரு ஆய்வே நடத்தி இருக்கிறார் ஜோதிஜி .
   
இந்த தொழிற்சாலைக் குறிப்புகள் மூல நான் அறிந்து  கொண்ட ஒன்று தொழிலாளிகள்  நிர்வாகிகள் முதலாளிகள் என்ற மூன்று தரப்பினரும் முறையான ஒருங்கிணைப்பின்றி வெவ்வேறு  நிலைகளில்   செயல்படுகின்றனர்.  ஒருவரை பற்றி ஒருவர் கவலைப் படுவதில்லை. ஓருவரின் மகிழ்ச்சியும் துன்பமும் வளர்ச்சியும் வீழ்ச்சியும்    இன்னொருவரிடத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மனிதாபிமானத்திற்கு இங்கு அவ்வளவாக இடம் இல்லை என்ற உண்மையை ஓங்கி உரைக்கிறது இத் தொடர். திறமையான ஒருவர் வெளியே போனாலும் அதை யாரும் பொருட்படுத்துவதில்லை.

காலத்திகேற்ப இத் தொழிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதையும் சுட்டிக் காட்டுகிறார் ஜோதிஜி.. விஞ்ஞான தொழில்  நுட்ப வளர்ச்சி காரணமாக ஏராளமான இயந்திரங்கள் பயன்படுத்தப் பட்டாலும் மனித உழைப்பின் தேவையும் இருந்தே கொண்டேதான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக  இயந்திரங்கள் வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன 

இவற்றின் தேவையும் அதிகரித்துள்ள நிலையில் உள்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக் கணக்கான பொறியாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் ஆனால் இவற்றில் அவர்களின் பங்கு சிறிதும் இல்லை என்ற ஆதங்கத்தின் மூலம்  கல்வி முறைக்கு ஒரு குட்டு வைக்கிறார் ஜோதிஜி  இடை இடையே சமுதாய  நிலையை கூறவும் தவறவில்லை..

ஒரு முறையற்ற தொழில் நகரமாக திருப்பூர் விளங்குகிறது என்பதை தெளிவாக உணர்த்துகிறார். திருப்பூருக்கு வந்தால் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு வருபவர்களை வரவேற்று வாழ வைக்கும்  இந்நகரம் தொழில்சார்ந்து  முறைப்படுத்தப் படவேண்டும் என்ற விருப்பம் இவரது எழுத்த்துகளில்  புலப்படுகிறது  

இந்தத் தொடர் முழுதும் தொழிற்சாலையில் பணிபுரியும்  மனிதர்களை உளவியல் ரீதியாக விவரித்துக் கொண்டே போகிறார் . இந்த தொடரில் தொழிற்சங்கங்கள் பற்றி எந்தக் குறிப்பும் காணப் படவில்லை என்று நினைக்கறேன். இருபது பகுதிகளைக் கொண்ட இத் தொழிற்சாலைக் குறிப்புகளின் ஒவ்வொரு பகுதியும் சற்று நீளமாக உள்ளது என்பதைத் தவிர பெரிய குறைகள் ஏதும் புலப்படவில்லை

திருப்பூர் ஆயத்த ஆடைத்  தொழிலின் பின்னணியை ஒரு ஆவணப் படம் போல கண்முன் கொண்டு வந்து நிறுத்தியதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தத் தொடர் படிக்கும் சமயங்களில் சென்னை ரங்கநாதன் தெருவுக்கு செல்ல நேர்ந்தது .  பெரிய அங்காடிகளில் தொங்க விடப் பட்டுள்ள ஆயிரக் கணக்கான ஆயத்த  ஆடைகளை பார்க்கும்போது  ஒவ்வொன்றும் ஒரு முகம் காட்டுவது போல் தோன்றியது .  வறுமை, வெறுமை, கோபம் உழைப்பு  உயர்வு,ஏற்றம், இறக்கம், எதிர்பார்ப்புகள்  ஏமாற்றம் அனைத்தும் இணைக்கப்பட்டு ஆடை  வடிவம் கொண்டு தொங்கிக் கொண்டிருப்பதாக  உணர்ந்தேன்.

ஒரு வேளை நான் திருப்பூர் செல்ல நேர்ந்தால் திருப்பூர் மீதான பார்வை இதன் அடிப்படையிலேயே அமையும் வகையில் ஒரு தாக்கத்தை இத் தொடர் ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை 

இத் தொடரில் விவரிக்கப் பட்டுள்ள ஆயத்த ஆடையின் பல்வேறு தொழில்சார் தகவல்களையும் நடைமுறைகளையும், தொழிலாளர் முதலாளி நிர்வாகிகளின்   வலிகள், வேதனைகள், வஞ்சகங்கள்  சிக்கல்கள்,வெற்றி தோல்விகள் இவற்றை   அடிப்படையாகக் கொண்டு  ஒரு நாவல் படைக்கப் பட்டால்   ஜோடி. குரூஸ் அவர்களின் "கொற்கை" நாவல் போல பேசப்படும் ஒன்றாக அமையும்  என்று நம்புகிறேன்.

ஒரு பயனுள்ள தொடரை வெளியிட்ட வலைத் தமிழ் இணைய தளத்திற்கும் படைத்தளித்த ஜோதிஜி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 



தொடர்புடைய பதிவுகள்

Monday, February 02, 2015

உன்னாலும் முடியும் தம்பி

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்..

”திருப்பூர் டைரி குறிப்புகளாக..”   ஆகஸ்ட் 1ல் துவங்கிய ஜோதிஜியின் உள்மன பயணம் டிசம்பர் 12ல் வெகு அற்புதமாக நிறைவடைந்து விட்டது .

இங்கு தோற்றவர்கள் , தவறாக ஜெயித்து விட்டு அதை தக்க வைத்துகொள்ள தெரியாமல் ,பேராசையால் அகலகால் வைத்து காலத்தின் நீண்ட எல்லைக்குள் அடையாளம் தெரியாமல் கரைந்து போனவர்கள் கடின உழைப்புக்கு மதிப்பு பெறாமல் விரக்த்தியில் நஷ்டபடுத்துபவர்கள் போன்ற பலரையும் பற்றி தன் பார்வையில் எடை போடும் களமாக இந்த தொடரை செதுக்கி இருக்கிறார் ஜோதிஜி

முதல் போட்ட முதலாளிகள் மனோபாவத்தில் தொடங்கி ஒவ்வொறு  துறையின் பணி, அதன் பணிச்சுமை ,அதில் பணிபுரியும் தொழிலாளிகளின் மனோ நிலை அவர்களை அணுகும் முறை மேலும் திருப்பூர் பற்றி சிறிதும் அறியாதவகள் அல்லது திருப்பூரில் பணிபுரிய வேண்டும் என்ற கனவுகளை சுமந்து கொண்டு இருபவர்களாக்கான  ஒரு ஆயத்த ஆடை நிறுவனத்திர்க்கான ”கையேடு”  போல  வெகு அற்புதமான தனது எழுத்து நடை அளுமைதிறத்தால் சொல்லி இருக்கிறார். தொடருக்கு  சுவாரசியம் சேர்க்க ஓர் கதைக்கு, திரைகதை முக்கியம் என்பதை போல சில உண்மை பாத்திரங்களை எடுத்து அழகாக தொடரை நகர்த்தி இருக்கிறார் .

தனது கடந்த 22 வருட அனுபவ பாதையில் கற்றதும் பெற்றதுமாக இந்த துறையில் தனது கடின உழைப்பை உரமாக்கி இதுதான் திருப்பூர் என்ற இங்குள்ள தொழில் அமைப்பை கூர்ந்து கவனித்து அதோடு சளைக்காமல் ஓயாமல் ஓடி , அதன் ஆழத்தை தொட்டு அதில் கண்டெடுத்த தனது அனுபவ முத்துக்களை சரமாக்கி வருங்காலதை திருப்பூரில் வளமாக்கிக் கொள்ள  விரும்புபவ்ர்களுக்கு நம்பிக்கை இருந்தால் ஜெயிக்கலாம் என்று தனது வாழ்வையே பணயமாக்கி சொல்லியிருக்கிறார் ’உன்னால் முடியும் தம்பி’ என்பது எம் எஸ் உதயமூர்த்தி வாக்கு.

ஆனால் ஜோதிஜியின் வாக்கியம் ”உன்னாலும் முடியும் தம்பி “ என்பதுதான் அது என்பதாக தந்து இருக்கிறார் .பொதுவாக ஆன்மீகத்தில் மட்டுமல்ல பல இடத்திலும் சொல்லு ஒரு வழக்கு உண்டு அது ”கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்”ஆனால் இவர் தான் கண்ட நியாய அநியாயங்களை முடிச்சுகளை த்னது நம்பிக்கை அறிவால் அவிழ்த்து ,அதன் பலனையும் விளைவையும் விவரித்து  சொல்லி இருகிறார் . 

இங்கு பல கம்பெனிகளில் பணிபுரிபவர்களுக்கு சில வெளிநாட்டிலிருந்து ஆர்டர்  கொடுக்கும் கம்பெனிகளில் வார மற்றும் மாதாந்திர தொழிலாளர் சட்ட உரிமைகளாவது இருக்கிறது ஆனால் அந்த கம்பெனியில் பணிபுரியும் அழுவலக (Staffs) பணியாளர்கள் நிலைமை முற்றிலும் அடிமையானது .மனித உரிமைகள் இங்கு காசுக்காக பிழியப் படுவது பற்றி அவர் ஏனோ மிக குறைவாகவே சொல்லி இருக்கிறார் என்பது ஆதங்கம் .

பதினைந்து வருடமாக இந்த ஊரின் அலை வேகத்தோடு பயணித்து கொண்டு இருக்கும் நான் இந்த பதிவுகளை பற்றி சொல்வது மிக பெரிய விசயமாக இருக்காது. 

ஆனால் திருப்பூருக்கு சம்பந்தமில்லாமல் இந்த பதிவுகள் மூல மட்டுமே 20 வாரங்கள் வலைத்தமிழ் மூலம் படித்து பயணித்தவர்கள் சொல்லும் கருத்தே இங்கு ஆசிரியர் இந்த பதிவுக்களுக்காக எடுத்துக் கொண்ட முயற்சியின் வெற்றியின் எல்லைக் கோடாக இருக்கும் .   

Saturday, January 31, 2015

வளர நினைக்கும் இளைஞர்களின் கையேடு

எப்பேர்ப்பட்ட மோசமான குணாதிசயங்கள் கொண்டவருடன் பழகினாலும் தன் சுயபுத்தியை இழக்காமல் தன் நிலையை எந்தசூழ்நிலையிலும் கடைசி வரை மாற்றிக் கொள்ளாமல் அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் இருக்கும் 22 வருட கடின உழைப்புடன் கூடிய அனுபவம் கொண்ட ஜோதிஜி எழுதியிருக்கும் “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்” என்ற தொடரை ஒரு அத்தியாயம் கூட விடாமல் கவனமாக வாசித்தேன். 

நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை, நான் சந்திக்கும் மனிதர்கள், நான் சார்ந்திருக்கும் தொழில் என்பதனை இந்த தொடர் மூலம் என்னால் மீள் ஆய்வு செய்து கொள்ள முடிந்தது.  இந்தத் தொடர் மூலம் தனிப்பட்ட முறையில் நான் கற்றதும் பெற்றதும் ஏராளம். என் பார்வையில் சில விமர்சனக் கருத்துக்களை மட்டும் இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன்.

1. ஒரு தொழிற்சாலை நிர்வாகியின் அனுபவத்தொடர் என்பதா?  

2. ஒரு தொழிற்சாலை நிர்வாகியின் மனிதவளம் தொடர்பான அனுபவங்கள் மற்றும் ஆலோசனைகள் ;தொடர் என்பதா? 

3. மனிதர்களையும் அவர்களின் குணாதிசயங்களையும் அலசி ஆராயும் ஒரு சக மனிதரின் அனுபவக்குறிப்புகள் என்பதா? 

4. 22 வருடங்களுக்கும் மேலாக இருந்துவரும் தொழிலில் தான் கண்ட மனிதர்களின் ஏற்றஇறக்கங்களை பதிவு செய்யும் தொடர் என்பதா? 

5. ஆயத்த ஆடைத்தொழிலின் தலைநகரம் திருப்பூரைப் பிடித்துப் பார்த்த நாடித் தொடர் என்பதா? 

6. தான் கடந்து வந்த 22வருட திருப்பூர் வாழ்க்கையின் வாழ்வியல் தொடர் என்பதா? அல்லது

7. திருப்பூர் தொழிலதிபர்களின் வாழ்ந்த வீழ்ந்த கதையை சொல்லும் தொடர் என்பதா? 

8. வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களைச் சொல்லி வாழ்க்கையை புரிந்துகொள்ளச் சொல்லும் வாழ்வியல் நன்னெறித் தொடர் என்பதா? 

9. எல்லாம் கலந்து கட்டிய சரம் என்பதா? 

என்று சத்தியமாக நம்மால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அந்த அளவிற்கு வார்த்தைகளை வைத்து ஜோதிஜி விளையாடி இருக்கிறார்.

எழுதச்செல்லும் முன்பு எழுத வேண்டிய விசயத்தை மனதில் ஆழ்ந்து உள்வாங்கி அத்துடன் தனது கருத்துக்களையும் சரியான முறையில் எழுதியதால் இத்தொடர் ஒரு நாட்குறிப்பு போலவோ அல்லது ஒரு கட்டுரை போலவோ இல்லாமல் ஒவ்வொரு வார்த்தையையும் கவனத்துடன் படித்துச்செல்லும் அளவிற்கு அவரது எழுத்து நடை அமைந்திருப்பது மிகச்சிறப்பு. 

“வாழ்க்கை என்பதை புரிந்து வாழ்பவர்களுக்கு கொள்கையில் சமரசம் என்பதே இருக்காது. வாழ்க்கையின் மிகப்பெரிய சவால் என்பது தங்களுக்கான திறமையை அடையாளம் கண்டு கொள்வதே ஆகும். உங்களுக்கு உண்டான நேர்மை குறித்து உங்களுக்கே அக்கறை இல்லை என்றால் அது என்றாவது ஒரு நாள் மானங்கெட்ட மனிதர்களின் பட்டியலில் சேர்த்துவிடும் என்பதை நினைவில் வைத்திருக்கவும்” என்று வாழ்வியலை பதிவு செய்திருக்கும் விதம் அருமை.

“தர்மம் நியாயம் அறம் என்பதெல்லாம் அன்றும் இன்றும் பலரின் வாழ்க்கையில் வெறும் வார்த்தைகள் மட்டுமே. பணம் என்ற காகிதத்திற்காக இதன் சுகம் என்ற குறுகிய வட்டத்திற்காக எந்த எல்லைக்கும் போகலாம் என்பதாகத்தான் இங்கே பலரின் கொள்கைகளும் உள்ளது” என்று மனித மனங்களை வெளிப்படுத்தியிருக்கும் விதம் அருமை.

“ஓரு நிர்வாகத்தின் வெற்றி என்பது தனி மனித உழைப்பை மட்டும் சார்ந்தது அல்ல. அது பலருக்கு கொடுக்கப்படுகின்ற பயிற்சியினால் உருவாக்கப்படுகின்ற கூட்டுக்கலவை. அதன் மூலம் கிடைப்பதே மொத்த வெற்றி. ஒரு நிர்வாகத்தின் வளர்ச்சி வீழ்ச்சியடைய பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முக்கியமான முதன்மையான காரணமாக இருப்பது மனித மனங்களை கையாளத் தெரியாத பட்சத்தில் வீழ்ச்சி விரைவாகும்”.

“அரசியலில் அவ்வப்போது பலியாடுகள் தேவைப்படுவதைப் போல நிர்வாகத்திலும் பலி கொடுத்தால் தான் நிர்வாகம் அடுத்த நிலைக்கு நகரும் என்றால் கொடுத்தே ஆக வேண்டும்.இது வெளியே சொல்லமுடியாத நிர்வாக விதிமுறை.ஒரு சிறந்த நிர்வாகி என்பவருக்கு முதல் தகுதியே நெருக்கடியான சூழ்நிலையில் உருவாகும் பிரச்சனைகளை எப்படிக் கையாள்கின்றார் என்பதை வைத்தே முதலாளி அவரைப்பற்றி முடிவுக்கு வருகின்றார்“ என்று நிர்வாகவியலை விளக்கியிருக்கும் விதம் அருமையிலும் அருமை..

“ஒருவர் வாழ்வில் தென்படும் சிறிய வெளிச்சம் தான் மிகப் பெரிய பாதையைக் காட்டுகின்றது. தன்னம்பிக்கையோடு உழைக்கத் தயாராக இருப்பவனுக்கு இங்கு ஏதோவொரு சமயத்தில் வழி கிடைக்கத்தான் செய்கின்றது” என்று நம்பிக்கையூட்டுகிறார்.

“நாம் எந்தப் பதவியில் இருந்தாலும் எந்த இடத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் நாம் இயல்பான மனிதராகக் கற்பனை செய்து கொண்டு வாழ்ந்தால் மட்டுமே நம் வாழ்க்கையை பதவியை நம்மால் காப்பாற்றிக் கொள்ள முடியும். சிறப்பான அங்கீகாரம் கிடைத்து விட்டது என்று இறுமாப்பில் நாம் நம்மை மாற்றிக் கொண்டால் அடுத்து ஒரு ஆப்புக் காத்திருக்கின்றது என்று அர்த்தம். இது தவிர ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் ஒவ்வொரு இடத்திலும் உள்ள மனிதர்களுடன் பேசினால் மட்டுமே அவர்களைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியும். நம் பதவி சார்ந்து ஒரு இறுக்கத்தை நாமே உருவாக்கிக் கொண்டே இருந்தால் அது பலவிதங்களில் நம்மைப் பல மனிதர்களிடத்தில் இருந்து அந்நியமாக வைத்து விடும் ஆபத்துள்ளது” என்று எச்சரிக்கவும் செய்கிறார்.

“ஒருவரின் தனிப்பட்ட பழக்கவழக்கம் மாறும் போது அவரால் எடுக்கப்படும் முடிவுகளும் மாறுகின்றது.'ஒழுக்கம் உயிரை விட மேலானது' என்று வள்ளுவர் சொன்னதன் காரணத்தை எவரும் யோசிப்பதே இல்லை.ஆனால் ஒரு மனிதனின் அனைத்து தோல்விகளும் அவனின் ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கை தொடங்கி வைக்கின்றது. அவனுடைய ஆசைகள் அதனை விரைவு படுத்துகின்றது. இது தான் சரியென்று அவனது பேராசை உறுதிப்படுத்துகின்றது. இதன் வழியே சென்று அழிந்தவர்கள் தான் இங்கே முக்கால்வாசி பேர்கள் உள்ளனர்”.

இவ்வளவுதான் திருப்பூர் என்று எளிமையாக புரிய வைத்துவிட்டீர்கள் ஜோதிஜி.

தொழிலையும் விளக்கி அதிலிருக்கும் மனித மனங்களையும் விளக்கி திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்கள் சார்ந்த செயல்பாடுகளை எழுதியுள்ள ஜோதிஜியின் “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்” என்பது வளர நினைக்கும் ஒவ்வொரு இளைஞரின் கைகளிலும் வைத்திருக்க வேண்டிய கையேடு ஆகும்.

தான் சாப்பிட்ட இட்லி சட்னி சாம்பாரையும் தான் பார்த்த சினிமாவையும் ரசித்து எழுதும் வலையுலகத்தில் வித்தியாசமாக ஒரு கனமான விசயத்தை இவ்வளவு அருமையாக எழுத முடியும் என்று எழுதிக்காட்டிய அன்புச்சகோதரர் ஜோதிஜி உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

“ஒரு நிறுவனத்தை விட்டு வெளியே வந்தவுடன் அவர்கள் பலமுறை மீண்டும் அழைத்தும் அந்தப்பக்கம் திரும்பிப் பார்ப்பதும் இல்லை என்ற கொள்கையைத் தொடக்கம் முதல் கடைபிடித்து வருகின்றேன்.ஒரு நிறுவனத்தை விட்டு நகர்ந்து வந்த பிறகு ஏதோவொரு இடத்தில் அடையாளம் தெரியாத தொழிலாளர் உண்மையான அக்கறையோடு என்னைப் பற்றி எங்கள் குடும்பத்தைப் பற்றி அக்கறையோடு விசாரிக்கின்றார்கள். "நீங்க இருந்த வரைக்கும் நாங்க நன்றாக இருந்தோம்" என்று சொல்கின்ற அவர்களின் அந்த வார்த்தைகள் தான் இன்னமும் என்னை இந்தத் துறையில் இயங்க வைத்துக் கொண்டேயிருக்கின்றது”. 

“கோடி கோடியாய் சேர்த்தவனும் இறுதியில் திருப்பூரில் மின் மயானத்திற்குத்தான் செல்லப் போகின்றான்.நானும் அங்கே தான் செல்லப் போகின்றேன்.கோடிகளைச் சேர்த்து வைத்தவனின் வாரிசு அவனை எளிதில் மறந்து விடக்கூடும்.ஆனால் என் கொள்கைகள் என் வாரிசுகளை வழி நடத்தும்.அவர்களும் பலரின் வாழ்க்கைக்கு உதவக் கூடியவர்களாக இந்தச் சமூகத்தில் எதிர்காலத்தில் செயலாற்றுவார்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை எனக்குள் உண்டு”

அன்புச்சகோதரர் ஜோதிஜி இதுதான் உங்களது 22 ஆண்டு கால உழைப்பிற்கான சம்பளம்.

ஆம். நம்பிக்கை தானே வாழ்க்கை. 

உங்கள் நல்ல எண்ணங்கள் எந்த அளவுக்கு நீங்கள் சார்ந்திருந்த தொழிலாளர்களுக்கு உதவியாய் இருந்துருக்கும் என்பதனை உங்கள் சத்தியமான வார்த்தைகள் மூலம் உணர்ந்து கொண்டேன். வாசிக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு நீங்கள் கடத்திய உணர்வுகள் என்பது இன்னும் சில மாதங்கள் அதன் தாக்கம் எனக்குள் இருப்பதைப் போல உங்களால் பலன் அடைந்தவர்களின் ஆசிர்வாதம் நிச்சயம் உங்கள் தலைமுறைகளை வாழ வைக்கும் என்று உறுதியாய் நானும் நம்புகின்றேன்.

நன்றி ஜோதிஜி

மாரியப்பன் ரவீந்திரன். மதுரை.

அலைபேசி எண் 944 27 38 002


தொடர்புடைய பதிவுகள்


பேசா பொருளை பேசு

இது மனிதர்களின் கதை

குறிப்புகளின் குறிப்புகள்

Wednesday, January 28, 2015

குறிப்புகளின் குறிப்புகள்


ஒருபுறம் பலகோடி ரூபாய்கள் புரளும் போட்டியும் சவாலும் நிறைந்த துறையில் மிக முக்கியப் பதவி, மறுபுறம் குடும்பத்தோடு போதிய நேரம் அளிக்கும் பொறுப்பான குடும்பத்தலைவன். மீதி இருக்கும் நேரத்தில் கடினமான பல விசயங்களை இணையத்தில் பகிர்ந்து கொள்ளும் ஒரு தீவிரமான பதிவர். இப்படிப் பல அவதாரம் எடுக்கும் நண்பர் ஜோதிஜியின் அடுத்த படைப்பு "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" என்ற மின்னூல்.

ஜோதிஜி பொழுதுபோக்காக எழுதுவது இல்லை, அப்படிப் படிப்பவர்களுக்காக அவர் எழுதுவதும் இல்லை. அவர் எழுதுவது எல்லாம் மிகுந்த ஆராய்ச்சியும், கடுமையான உழைப்பையும் கேட்கின்ற களங்கள்.

அவருக்கு மிகவும் பழக்கப்பட்ட களம்தான் - திருப்பூரும், ஆயத்த ஆடைகள் சார்ந்த உலகமும். டாலர் நகரத்தின் தொடர்ச்சி என்றே இந்த நூலை எடுத்துக் கொள்ளலாம். குடிசைத் தொழில் போல ஆரம்பித்து, இன்று பல்லாயிரம் கோடி புழங்கும் அளவிற்கு வளந்த தொழில், அதோடு வளர்ந்த நகரம், பணப் பரிமாற்றம் நடக்கும் போது மாறும் மனித மனம், அதில் நடக்கும் நாடகங்கள் என்ற பலவிதப் பரிணாமங்களைக் காட்டிச் செல்கிறார் ஜோதிஜி.

அளவுக்கு மீறிய பணம் புழங்கும்போது, ஏற்படும் கலாசார அதிர்வுகள், வாழ்க்கைமுறையின் மாற்றங்கள், அதனால் ஏற்படும் உறவுச் சிக்கல்கள் இவை எல்லா இடத்திற்கும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவான பாதிப்பு. வளரும் பருவத்தில் சரியான முறையில் வளர்க்கப்படுபவர்கள் இந்தச் சிக்கல்களை எளிதாக எதிர்கொண்டு வென்று விடுகின்றனர். ஆனால் பலர் இந்தச் சூழலில் சிக்கி வரைமுறை இல்லாது மாட்டி சீரழிந்து சின்னாப்பின்னம் ஆகிவிடுகின்றனர்.

எத்தனை எத்தனை மனிதர்கள், அதில் அவர்கள் காட்டும் முகங்கள் - எல்லாப் பெருமையையும் தனக்கென ஆக்கி, எல்லாத் தோல்விக்கும் அடுத்தவர்களைப் பலிஆடாக்கும் மனிதர்கள், கிடைக்கும் இடத்தில எல்லாம் வழிமுறை பற்றிய சிந்தனையே இல்லாது பணத்தை மட்டுமே துரத்தும் ஆட்கள், எப்போதோ அடைந்த வெற்றியின் வரலாற்றில் வாழும் மனிதர்கள் - அநேகமாக நாம் தினம் தினம் காணும் மனிதர்கள் தான். இவர்களை ஆவணப் படுத்தும் முயற்சியில் வெற்றி அடைந்து இருக்கிறார் நூலாசிரியர்.

நான் அறிந்து தொழில் சாம்ராஜ்யங்களின் வரலாறு எழுதப்பட்டு இருக்கிறது. வெற்றி பெற்ற தொழிலதிபர்கள் வரலாறும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு தொழில்நகரின் வரலாறு என்று பார்த்தால் அநேகமாக அதன் முதல் பெயராக ஜோதிஜியின் பெயர்தான் இருக்கும் போல.

வாழ்த்துகள் ஜோதிஜி

ramachandranwrites (பிகேஆர்)

Tuesday, January 27, 2015

எதிர்கால விருப்பம்

வணக்கம், 

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஆயத்த ஆடை சமூகத்தின் சிக்கல்களுக்கு விடை காண விழையும் தேடல் தாகத்துடன் இருக்கும்  தனிமனிதர்களின் பிரதிநிதியாக உங்கள் பதிவுகள் இருக்கின்றன.  இந்த சமூகத்தில்  பொருளாதார அடிப்படயிலாலான காரண காரிய உறவுகள் நிரந்தர வெற்றிக்கு வழிகோலுவதில்லை.

தேவைப்பட்ட மனிதர்களுக்கு பயனற்றவர்களாகி  வேரோடு பிடுங்கி எறியப்பட்ட மரண வலியினை உணர முடிகிறது. இங்கு அனைத்து சிக்கல்களுக்கும் தற்காலிகமாக நிவர்த்திக்கப்பட்டு புதிய பிரட்சினைகளுக்கு அடியெடுத்துக் கொடுத்துகொண்டிருக்கின்றன. இந்தத் தற்காலிக நிவாரணம் எச்சரிக்கை மணியை அனைத்து வைப்பது போலத்தான். 

இங்கு பெரும்பாலான முதலாளிகளும்  உழைப்பாளிகளும்  முடிவுகள் எடுப்பதில் கடந்த கால அனுபவ அறிவை மட்டும் நம்பிக்கொண்டு புதியனவற்றை ஏற்றுக்கொள்ளாத சமூகமாகத்தான் இன்னும் இருந்துகொண்டிருக்கின்றது. பழக்கத்தில் இருக்கக் கூடாதவற்றைப் பின்பற்றுவதால் தொழில் ரீதியான விபத்துகள் இழப்புகளை அதிகம் ஏற்படுத்துகின்றன. உற்பத்தி முறைகள் மரபு மாரதவைகளாக இன்னமும் இருக்கின்றன. இதனால் தொழில் மட்டும் வளர்ச்சி அடைந்திருக்கிறது தொழிற்சாலைகள் நீண்ட காலம் வாழ்வது இல்லை. 

சிறிய வேர்களை வைத்துகொண்டு பெரிய மரங்கள் வளர முடியாது. வலுவில்லாத வேர்கள் பெரிய மரங்களைச் சுமக்க முடிவதில்லை. நபர்களைச் சார்ந்து நிற்பதை தவிர்க்கமுடிவதில்லை. நபர்களைச்  சார்ந்த தொழிற்சாலைகளின் வளர்ச்சி பாகுபாடின்றி பரஸ்பர துரோகத்தில் வீழ்ந்து விடுகின்றன.

தொன்று தொட்டு ஒரு குறிப்பிட்ட விஞ்ஞானத்தில்  வரப்போகிற தலைமுறை முந்தைய தலைமுறையின் (கற்பித்தல் மூலமாக இல்லாமல்) அனுபவத்தினை  புலப்படாத தொடர்பில் பெற்றுக்கொண்டிருக்கிறது.  அந்த விஞ்ஞானம் முதிர்ச்சியடையாத ஒன்று. எதுவும் ஒரு குறிப்பிட்ட ஊருக்குச் சொந்தமானதல்ல. 

வானம் பார்த்த பூமியாக கார்காலத்தில் பருத்தி, எள், சோளம் கம்பு ராகி போன்ற பயிர்களை விதைத்து விவசாயத்தைத்  தொழிலாகக் கொண்டு சிரமப்பட்டு வாழ்ந்தது வந்த  மூதாதையர்களின் மண்தான்  திருப்பூரும்.  காவிரியும் தாமிரபரணியும் முல்லைபெரியாரும்  பாயும் ஊரில் வயலில் நடவு செய்துவிட்டு காலாற  இருந்தவர்கள்  அல்ல திருப்பூர் மக்கள். பஞ்சாலைகளில் இராப்பகலாக உழைத்தவர்களின் வாரிசுகள்தான் பெரும்பாலான பழைய முதலாளிகள். ஒவ்வொரு முதலாளியின் பின்னாலும் சிறந்த உழைப்பாளியின் அனுபவக் கதை இருக்கும்.  ஒவ்வொருவரும் உழைப்பாளியாகச் சுரண்டப்பட்டுத்தான் முதலாளியானார்கள். அவர்களுடைய உழைப்புதான் இங்கு வந்தாரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. 

நபர்களைச் சாராத  தொழில் நுட்பம் சார்ந்த புதிய அணுகுமுறை பின்பற்றப் பட வேண்டும். இந்த சமூகத்தில் தற்காலிக வெற்றியாளர்களின், புத்திசாலிகளின் அவநம்பிக்கை விஞ்யான ரீதியான அணுகுமுறைகளைத் தடைசெய்கிறது. பாரம்பரியமாக வந்த பல வற்றை நாம் மறு பசிசீலனை செய்ய வேண்டும். அனுபவத்திற்கும் புதுமைக்கும் எல்லை பிரிக்கப்பட வேண்டும். 

அனுபவத்தை ஆதரிக்கும் அதே வேளையில் பாரம்பரியத்தை துடைத்துப் போட்டு சுத்தப்படுத்தி காலத்திற்கு ஏற்ப புதுமையைப் புகுத்திக்கொண்டே இருக்கவேண்டும். 

இந்த சுழற்சி நடைபெறாத நிறுவனங்கள் சிறிய வேர்களைகொண்டு வளரும் மரங்கள் போன்றதுதான். 

தான் யாரென்று தெரியாமல் யாரைப் போலவோ எதுவாகவோ ஆகவேண்டும் என்று இலக்கு மட்டும் வைத்தவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் தோல்வியில் தான் முடிந்திருக்கிறார்கள். நமது இருப்பைத் தெரிவதுதான் இந்த மாற்றத்தின் துவக்கம்.பல்வேறு நிறுவனங்களின் வெற்றி தோல்வி குறித்த பல்வேறு ஆதாரங்களை, தகவல்களைத் திரட்டி அது குறித்து ஆய்வுகள் செய்ய வேண்டும். உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஆயத்த ஆடை உற்பத்தி முறையை ஒருங்கிணைத்து முற்றிலும் புதிய அணுகுமுறையைக் கொண்டுவரவேண்டும்.

அதை நோக்கிய பதிவுகள் எதிர்காலத்தில் உங்களிடம் இருந்து வரவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.

கடந்த காலஅனுபவங்களைச்  சுவாரசியமாகச்  சொல்வது போல் இதனையும் முயற்சி செய்தால்  உங்களால் திருப்பூரின் வருங்காலச் சந்ததி மேலும் பயன்பெறும்.

நன்றி, 

இப்படிக்கு 

சமகால திருப்பூர் பயணி





கம்யுனிச சித்தாந்தம் குறித்த மேலோட்டமான பார்வை கூட இல்லாமல் திரு. ராஜா அவர்கள் விமர்சனம் செய்துள்ளார் என்று படுகிறது. மிக சுருக்கமாக, கம்யுனிசம் என்பது உடல் உழைப்புக்கும் முளை உழைப்பிற்கும் சமமான பிரதிபலன் கிடைக்கச் செய்வது. ஏற்றத்தாழ்வுகள் இல்லாத மனித சமுதயத்தை உருவாக்குவது. திரு ஜோதிஜி எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு கம்யுனிசத்தை குறை கூறுவது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுபோட முனைவது போன்றது. 

திருப்பூரின் இன்றைய வளர்ச்சிக்கு கம்யுனிஸ்டுகள் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள் வகித்துக்கொண்டு இருக்கிறார்கள். திருப்பூரின் துவக்ககால தொழில் வளர்ச்சியின் பொழுது தொழிலாளர்களின் உரிமைக்காக பல போராட்டங்களைச் செய்து ஊதிய உயர்வு உள்ளிட்ட பல சலுகைகளை பெற்றுத் தந்து இருக்கிறார்கள். 

ஒருகாலத்தில் உள்ளூர் மக்களால் மட்டுமே செய்துவந்த இந்தத் தொழில் பல மாவட்டத்தினரையும் ஏன் பல மாநிலத்தவரையும் இங்கு வந்து பிழைப்பதற்கு நம்பிக்கை ஏற்படக் காரணமாய் இருந்தவர்கள் திருப்பூர் கம்யுனிஸ்டுகள். பல்வேறு ஊர் மக்கள் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததன் விழைவு அவர்கள் இயக்க வளர்ச்சிக்குப் பாதகமாக ஆனது வேறு நிகழ்வு. 

கம்யுனிஸ்டுகள் அன்று விதைத்த விதை மரமாக வளராமல் பயிராக வளர்ந்து சுழற்சிமுறையில் இன்றும் வெவ்வேறு உருவங்களில் இன்று லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் அவர்கள் பிழைப்பிற்கு பயனளித்துக் கொண்டுதான் இருக்கின்றது. 

கம்யுனிசம் சிறு சிறு குழுக்களாக தொழிலாளர்கள் மத்தியில் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. இன்று அவரவர்கள் அவர்களது உழைப்பிற்கான ஊதியத்தை அந்தந்த சிறு குறு நிறுவனங்களில் தாமாகவே போராடிப் பெற்றுக்கொண்டு கொண்டு இருப்பதற்கு கம்யுனிஸ்டுகள் விதைத்த போராடும் குணம், மன உறுதிதான் இதற்குக் காரணம். திரைப்படங்களில் வருவது போன்று ஒரே பாட்டில் வந்தது அல்ல. 

இயற்கையின் பரிணாமத்தில் வந்தது. நிச்சயமாக இது மீண்டும் ஒரு பேரியக்கமாக வளர்ந்து ஏற்றத்தாழ்வுகள் அற்ற மனித சமுதாயம் உருவாக காரணமாக இயற்கையின் தேர்வில் அமையும். 

தொழிலாளர்களை மதிக்காத அவர்களது உழைப்பை மட்டும் உறிஞ்சும் எந்த நிறுவனமும் நீண்டகாலம் வாழாது. 

ஜோதிஜி அவர்களின் கேள்விக்கு விடையை கம்யுனிசத்தை குறை கூறுவதை விட்டுவிட்டு உரிய இடத்தில் தேடுவது பொருத்தமாக இருக்கும்.



Monday, January 26, 2015

பேசா பொருளை பேசு

தொழிற்சாலையின் குறிப்புகளில் ஜோதிஜி எழுப்பியிருக்கும் முக்கியமான கேள்விகளை பார்ப்போம்.  

1. பஞ்சே ஆதாரம் என்றால் பஞ்சு உற்பத்திக்கும் விவசாயத்திற்கும் அரசு எந்த முனைப்பும் காட்டவில்லை

2. திருப்பூருக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை. உதவி செய்வதாக கூறி ஆட்டைய போட்டது தான் மிச்சம்

3.திருப்பூர் தொழிற்சாலைகள் ஒழுங்காக அமைப்புரீதியாக செயல்படுவதில்லை. சுரண்டல் ஏமாற்றல் அதிகம். 

4. இங்கே இயந்திரங்கள் பெரிதாக ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை, எல்லாமே இறக்குமதி தான்.  

இந்த நான்குமே அவரின் குறிப்புகளின் அடிநாதம். 

இவை ஏன் இருக்கின்றன என நண்பர் ஆராயவில்லை எனவே என்னுடைய கருத்துக்களை வைக்கலாம் என.  

இந்த நான்கிற்கும் அடிப்படையான காரணம் நம்மூரின் கம்யூனிச சோசிலிச சிந்தனை தான். அதுவும் ஒருவன் பணம் சம்பாதிக்கிறான் என்றாலே அவன் யாரையேனும் சுரண்டி ஏமாற்றியே சம்பாதிக்கிறான் எனும் கம்யூனிசத்தின் அடிப்படை கொள்கையே காரணம். அவை நம்மூரின் படித்தவர்கள், பல்கலைகழகங்கள், அரசியல்வாதிகள் என எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் போது அவர்கள் எப்படி ஒரு தொழில் முனைவோருக்கு உதவுவார்கள்?  

கம்யூனிஸ்டுகளை பொறுத்தவரையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே இலக்கு, மக்களை முன்னேற்றுவதோ அல்லது நல்ல விஷயங்களை செய்வதோ அல்ல. அவர்களை பொறுத்தவரை பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே எவ்வளவு சீக்கிரம் சண்டை வருகிறதோ அவ்வளவு சீக்கிரம் நல்லது. அப்படியிருக்க எப்படி தொழிலை முன்னேற்ற உதவ முடியும். 

மேலை நாடுகளில் கல்லூரிகள், பல்கலைகழங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் இடையே நல்ல ஒத்துழைப்பு உண்டு. தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழில்நுட்பம், நிர்வாக வசதிகள் போன்றவற்றை கல்லூரிகள் ஆராய்ச்சி செய்து தருவதும் அதற்கு தொழிற்சாலைகளே பணம் கொடுத்து செய்ய சொல்வதும், பேராசிரியர்களை நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் வைத்திருப்பதும் சாதாரணமான விஷயம். 

அவர்கள் பகுதி நேரவேலையாக தொழிற்சாலைகளிலும் கல்லூரிகளிலும் வேலை செய்வார்கள். இப்படி இருப்பவர்களுக்கே மதிப்பு அதிகம் என்பதும் கவனிக்கவேண்டிய விஷயம். இப்போதைய ரிசர்வ் பேங்க் கவர்னர் ரகுராம் ராஜன் அமெரிக்க பல்கலைகழத்தில் இருந்து விடுப்பில் தான் இங்கே பணிபுரிகிறார் என்பதை பாருங்கள்.  

விவசாயத்திற்கும் இதே போல் கண்டுபிடிப்புகள், சந்தைப்படுத்தல் போன்றவற்றில் புதுமையை புகுத்துதல் என்பவற்றை பேராசிரியர்களும் மாணவர்களும் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள். இவர்களிடமே அரசுக்கு நெருக்கடிகளும் புதிய திட்டங்களும் போகும்.  

ஆனால் இங்கே அப்ப்டி ஏதும் உள்ளதா என்றால் கிடையாது. ஆர் ஏ மாஷால்கர் என்பவர் இந்திய விஞ்ஞான ஆராச்சி கழகத்தின் தலைவராக இருந்த பொழுது அவர் இப்படி கொண்டு வரமுயன்றதற்கே பெரும் எதிர்ப்பு கிளம்பியது. 

ஒரு மூத்த விஞ்ஞானி இதை விஞ்ஞானிகளை நடத்தை கெட்ட செயல்களை செய்ய சொல்வதற்கு சமானம் என்றார். 

அடுத்து பல்கலைகழங்களில் அறிவியல்துறைகள் அதிகாரம் ஏதுமில்லாத துறைகளாகவே இருக்கின்றன. இந்த கதை கட்டுரை எழுதுதல், கவிதை எழுதுதல் போன்ற துறைகளே அதிகாரம் பெற்றவையாக இருக்கின்றன. அப்புறம் நடிகர்களும் புனவு எழுத்தாளர்களுமே அறிவாளிகளாய் கொண்டாடப்படும் நாட்டில் வேறு எப்படி இருக்கும்?  

இங்கே இயந்திரங்கள் கண்டுபிடிக்க ஆள்கள் இருக்கிறார்கள் ஆனால் அதை நிர்வாகம், அரசு கண்டுகொள்ளுமா என்பது தான் கேள்வி. இங்கே இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்களை வடிவமைத்தவர்கள் யாரென தேடுங்கள் கண்டிப்பாக ஒரு இந்தியனாவது அல்லது தமிழனாவது இருப்பார்கள். 

இது அடிப்படை சிந்தனையிலேயே ஆகவேண்டிய மாற்றம்.. சும்மா  அரசை குறை சொல்வது அரசியல்வாதிகளை குறை சொல்வது என்பதெல்லாம் தீர்வை தராது.  

இதை நண்பர் ஜோதிஜி எழுதியிருப்பதே ஒரு முக்கியமான மைல்கல்லாக நாம் பார்க்கவேண்டி உள்ளது. எனக்கு தெரிந்த வரையில் இதுவே இப்படி பட்ட விஷயங்களில் முதலாவதாகவும் இருக்கக்கூடும்.  

பேசாப்பொருளை பேசிய நண்பருக்கு பாராட்டுகள். இதன் மூலமாகவேனும் தமிழ்நாட்டில் ஒருமாற்றம் வருமாயின் அதை ஆரம்பித்து வைத்த பெருமை ஜோதிஜியையே சாரும்.  

இதை இன்னும் விரிவாக எழுதினால் குருசரண் தாஸ் எழுதிய India Unbound எனும் புத்தகம் போல் வரும். நண்பர் செய்வாராயின் அதற்கு உதவவும் தயாராக இருக்கிறேன்.


(நண்பர் ராஜா சங்கர் எழுதியுள்ள இந்த விமர்சனத்திற்கு திருப்பூர் நண்பர் விஸ்வநாதன் எழுதிய விமர்சனத்திற்கு விமர்சனத்தை அவர் முகநூலில் நான் சற்று தாமதமாகத்தான் பார்க்க நேர்ந்தது. அடுத்த பதிவில் விஸ்வநாதன் அவர்களின் விமர்சனமும், விமர்சனத்திற்கு விமர்சனமும் வருகின்றது)

Sunday, January 25, 2015

இது மனிதர்களின் கதை

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் – ஒரு அலசல் 

ஜோதிஜியின் திருப்பூர் பற்றிய மற்றுமொரு தொடர். இரண்டு தொழிற்சாலைகளில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கு தனது பாணியில் வழங்கியிருக்கிறார். எழுத்து என்பதை மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டிருப்பவர் திரு ஜோதிஜி என்பது அவரது எழுத்தை தொடர்ந்து வாசிக்கும் அனைவருக்கும் தெரிந்த விஷயம். 

அதனால் அவரது எழுத்துக்களை வாசிக்க வரும்போது அவரது எழுத்துக்களை உள்வாங்கிக் கொள்ள தயாராக வர வேண்டும். மேலோட்டமாக வாசிப்பது என்பது இங்கு நடக்காத விஷயம். கவனச் சிதறல் இங்கு மன்னிக்க முடியாத ஒன்று.

இவரது முதல் அச்சுப் புத்தகம் டாலர் நகரம் என்னை மிகவும் கவர்ந்தது. அந்த புத்தகத்தைப் படித்த போது நாம் உடுத்தும் ஒவ்வொரு ஆடையின் பின்னாலும் எத்தனை சோகக்கதைகள்! அங்கு நாம் ஊகித்த கதைகளின் உண்மை மாந்தர்களை இந்த தொடரில் தோலுரித்துக் காட்டுகிறார், ஜோதிஜி. 

‘ஒரு தொழிற்சாலையின் குறிப்புகளு’க்குள் நுழைவோம், வாருங்கள்.

‘நீங்கள் உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் நீங்கள் விரும்புவது பிராண்ட் வகையான ஆடைகள் என்ற போதிலும் ஒவ்வொரு ஆடைகள் உருவாக்கத்திற்குப் பின்னாலும் ஓராயிரம் விசும்பல் மொழி மறைந்துள்ளது என்பதை உணர்ந்து இருப்பீர்களா? வெள்ளை ஆடைகள் என்றாலும், நீங்கள் விரும்பம் வண்ணம் என்ற போதிலும் ஒவ்வொரு ஆடை உருவாக்கத்திற்குப் பின்னாலும் வடியும் இரத்தக் கறையை நாம் பார்க்கப் போகின்றோம்’

முதல் அத்தியாயத்திலேயே இவ்விதம் எழுதி திருப்பூரின் ஆடைத்தொழிற்சாலையின் உள்ளே வாழும் மனிதர்களிடையே நடக்கும் ஒரு நிழல் யுத்தத்திற்கு நம்மை தயார் செய்வதுடன், இந்த குறிப்புகளில் நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்று ஒரு ‘டீசர்’ கொடுத்து விடுகிறார் ஜோதிஜி. அதனால் நாம் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு அடுத்தடுத்த அத்தியாயங்களை வாசிக்கத் தயாராகிறோம். ஜோதிஜியின் எழுத்துக்களை படிக்க நீங்கள் மனதளவில் தயாராவது மிகவும் முக்கியம். 

இந்தக் குறிப்புகளில் அவரே நம்மை முதலிலேயே இப்படித் தயார் செய்துவிடுகிறார். ஒவ்வொரு துறையிலும் நடக்கும் கண்ணுக்குத் தெரியாத இந்த நிழல் யுத்தத்தில் பங்குபெறும் மாந்தர்களின் நடவடிக்கைகளில் ஒன்றிப் போய்விடுகிறோம்.  வெள்ளைத் துணிகளில் மட்டுமா சாயம் ஏற்றப்படுகிறது, இங்கே? மனிதர்களும் சமயத்திற்குத் தகுந்தாற்போல நிறம் மாறுவதை இந்தக் குறிப்புகளில் பார்க்க முடிகிறது.

முதலில் தனது முதலாளிகளாகிய ‘பஞ்ச பாண்டவர்களையும், அவர்களை தான் கையாண்ட விதத்தையும் சொல்லும் வேளையில், இந்த நிறுவனத்துக்குள் தாம் அடியெடுத்து வைத்த நிகழ்வையும் சொல்லுகிறார். அந்த நிறுவனத்தின் நிலைமையையும் சொல்லி, தான் அவற்றை மாற்ற எடுத்த முயற்சிகளையும் சொல்ல ஆரம்பிக்கிறார். அதற்கு அவர் பட்டபாடு எதிர்கொண்ட எதிர்ப்புகள் எல்லாமே விறுவிறுப்பான ஒரு நாவல் படிக்கும் அனுபவத்தை நமக்குக் கொடுக்கின்றன.

இங்கு நமக்கு ஒரு புதிய ஜோதிஜி அறிமுகமாகிறார். 

டாலர் நகரத்தில் நாம் சந்தித்த அந்த ‘ஒன்றும் தெரியாத அப்பாவி’ ஜோதிஜி இங்கு இல்லை என்பது இந்தக் குறிப்புகளைப் படிக்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது. இந்தத் தொழிலில் நீண்ட நாட்கள் பட்ட அனுபவத்தில் புடம் போடப்பட்ட ஜோதிஜியை சந்திக்கிறோம்.

தனது அனுபவம் பற்றி ஜோதிஜியின் வார்த்தைகளில்:

தன் சுய விருப்பு வெறுப்புக்காக நிறுவனங்களை கவிழ்த்தவர்கள்,  குறுகிய காலத்திற்குள் நிறுவன வளர்ச்சியை விட தங்களது பொருளாதார வளர்ச்சியை பெருக்கிக் கொண்டவர்கள், உண்மையான உழைப்பாளிகளை உதாசீனப்படுத்தியவர்கள்,  

தங்களது பலவீனங்களுக்காக வளர்ந்து கொண்டிருந்த நிறுவனத்தை வேரோடு வெட்டி சாய்த்தவர்கள் என்று பலவற்றையும் பார்த்த காரணத்தால் எல்லா நிகழ்வுகளுமே இயல்பான தொழில் வாழ்க்கையின் ஒரு அங்கமாக எனக்குத் தெரிய தொடங்கியது. 

அவர் கற்றது மட்டுமல்ல நமக்கும் பலவற்றையும் சொல்லிக் கொண்டு போகிறார். அந்தத் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் பல்வேறு விதமான மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் மாடசாமியிலிருந்து தொடங்கி ராஜா வரை. ‘அவள் பெயர் ரம்யா’ என்ற தலைப்பில் ஜோதிஜி எழுதிய ஒவ்வொன்றும் மணிமணியானவை. ஒருவரிடம் இருக்கும் திறமையை எப்படி அவரை பயிற்று வைப்பதன் மூலம் வெளிக்கொணரலாம் என்று இங்கு சொல்லுகிறார். ஆனால் அதுவே அவரை இக்கட்டில் மாட்டி வைத்ததையும் சொல்லிப் போகிறார். சுவாரஸ்யமான அத்தியாயம்.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் தான் கண்டது, கேட்டது அனுபவித்தது என்று தனது ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு’ என்கிற எழுத்துப்பாணியில் விவரிக்கிறார். நீங்கள் திருப்பூரிலோ அல்லது வேறு ஏதாவது ஆடைகள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்பவராக இருந்தால் தான் இந்த ‘ஒரு தொழிற்சாலையின் குறிப்பு’களை ரசிக்க முடியும் என்றில்லை. யாராக இருந்தாலும், என்னைப்போன்ற இல்லத்தரசி ஆனாலும் ரசிக்கலாம். அதேபோல ஜோதிஜி இங்கு சொல்லியிருக்கும் மனிதர்களைப் போல நாம் வெளியிலும் பலரைப் பார்க்கிறோமே. 

அதனால் மனிதர்களை எடை போடவும் இந்தக் குறிப்புகள் நிச்சயம் உதவும்.

ஒரு சின்ன குறை: ஒவ்வொரு அத்தியாயமும் மிகவும் நீண்டுகொண்டே போகிறது. சிலசமயம் வேண்டுமென்றே வளர்க்கிறாரோ என்று கூடத் தோன்றுகிறது. அத்தியாயங்களின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். அல்லது இன்னும் இரண்டு மூன்று அத்தியாங்களாக கூட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது. 

‘ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்’ என்பதை ‘வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களைப் பற்றிய குறிப்புகள்’ என்று கூடக் கொள்ளலாம். 


வலைபதிவர், எழுத்தாளர்,



Monday, February 25, 2013

வெற்றிகொண்டான் விமர்சனம்

இவரை திமுக உடன்பிறப்புகள் இணைய தள (திமுக) வெற்றி கொண்டான் என்று அழைக்கின்றார்கள். 

இவர் திட்டாத ஆட்கள் இல்லை. இவரை திடுக்கிடும் அளவுக்கு திட்டித் தீர்க்காத ஆளுமில்லை. 

இரண்டு பக்கமும் கிராமத்து மஞ்சுவிரட்டு நடக்கும். சில சமயம் வார்த்தைகளின் எல்லைகள் மீறப்படும். வெற்றி கொண்டான் தனது பாணியை மாற்றிக் கொள்வதில்லை. பரஸ்பரம் வறுகடலை போல பொரியல், அவியல், துவையல் என்று கூகுள் ப்ளஸ் ல் களைகட்டும்.  

இரவு நேரம் என்றதும் இவருடைய மூளையில் உள்ள ந்யூரான்களுக்கு சிறப்பான தகுதி வந்து விடும் போல.  விசைப்பலகையில் அவர் அடிக்கும் வார்த்தைகளில் கவுச்சி வாடை எட்டிப்பார்க்கும். நீ ரத்தத்தை பரிசாக தந்தால் நான் என்ன தக்காளி சட்னியா தர முடியும் என்று பரஸ்பரம் வெட்டு குத்து என்று நடப்பதை படிப்பவர்கள் பயத்தோடு பார்க்க வேண்டும். 

என்னை விருமாண்டி கமல் என்று நினைத்துக் கொள்ளாதீர் என்று அவரே எனக்கு சொல்லியுள்ளார். .  

என்னுடைய டாலர் நகரம் புத்தகத்திற்கு இவர் தனது கூகுள் ப்ளஸ் எப்போதும் போல கலாய்த்து, கவனித்து, அக்கறையோடு தனது பாணியில் விமர்சனம் எழுதியுள்ளார். அடிப்படையில் நல்ல ஆத்மா. 

ஆனால் இவரை கோபப்படுத்த வேண்டுமென்றால் கலைஞர் குறித்து உங்கள் மனதில் தோன்றியதை எழுதி இவர் பெயருக்கு டேக் செய்து விட்டு  சற்று ஒதுங்கி நின்று வேடிக்கைப் பாருங்கள். ருத்ரதாண்டவம் என்பதை படங்களில் பார்த்து இருப்பீர்கள். வார்த்தைகளில் பார்க்க வேண்டுமென்றால் அபி அப்பா கூகுள் ப்ளஸ்க்கு வாங்க. 

இவர் விமர்சனத்தின் மூலம் பாய்ந்து பிராண்டும் நண்பர்களும் எனக்கு நெருங்கிய நண்பர்களே. இவரும் நல்லநண்பரே.  ஆனாலும் என்னையும் பல தடவை குத்திக்காட்டியிருக்கின்றார், ஆனாலும் நம் மீசையில் மண் ஒட்டாத மாதிரி மல்லுக்கட்டி போராடி பார்த்து ஒதுங்கி விடுவேன். ஒரு கட்சியின் உண்மையான தொண்டன் என்றால் எனக்குத் தெரிந்து இவர் தான். கலைஞரின் குடும்ப வாரிசுகள் கூட கலைஞர் மேல் இந்த அளவுக்கு பற்று வைத்திருப்பாரா என்று சந்தேகமே.

நல்ல எழுத்தாற்றல், கவனிப்பு மிக்க இவர் திறமை இவர் மண்டை முழுக்க நிறைந்திருக்கும் திமுக என்ற எழுத்திற்காகவே காணாமல்  போய் விடுகின்றது.  மற்றொரு உடன்பிறப்பிடம் இவரைப் பற்றி சொன்ன போது இவர் உங்கள் புத்தகத்திறகு விமர்சனம் கொடுத்தால் அது நேர்மையாக இருக்கும் என்றார். திமுக தொண்டராக இவர் கலைஞரைப் பற்றி சிலாகித்து எழுதுவதைப் படிக்கும் போது நான் சிரித்துக் கொண்டே நகர்ந்து விடுவதுண்டு. இந்த வார்த்தைகளை படிக்கும்போது கூட அவர் விரல்கள் விசைப்பலகையில் ருத்ரதாண்டவம் ஆடப்போகின்றது

ஒவ்வொருவரின் விமர்சனத்தை மட்டுமே இங்கே வெளியிட்டுக் கொண்டு வரும் எனக்கு இவரை கலாய்க்க வேறு இடம் கிடைக்கவில்லை. 

ஏறக்குறைய இருவருக்கும் சமவயது என்பதால் நன்றி தொல்ஸ்.  


அபி அப்பா டாலர் நகரம் புத்தகத்தின் விமர்சனப் பார்வை

ஜோதிஜி! முழுவதும் படித்து முடித்து விட்டேன். நல்லா இருக்கு புத்தகம். திருப்பூர் பத்தி முழுமையாக புரிஞ்சுக்க உதவும் புத்தகம் என்பதோடு, அங்கே அந்த தொழிலின் வளர்ச்சி, வீழ்ச்சி என இருபக்கமும் புரிந்தது. . 

மேலும் மஞ்சள் பையுடன் ஒருவர் தன் சொந்த ஊரில் இருந்து போனா கூட மூளை இருந்தா, நல்ல குணாதிசயங்கள் இருந்தா பிழைச்சுக்க இயலும் என்றும் அதற்கு சரியான உதாரணம் நீங்கன்னு தெரிஞ்சுது. 

எழுத்துப்பிழைகள், கோர்வையாக இல்லாமை, சில மிகச்சில  பிழைகள் ... 

உதாரணமாக செயற்கை உரங்கள் என உங்க வயலில் எப்போதும் இருக்கும் யூரியா, பாலிடால், பாக்டம்பாஸ்ன்னு சொல்லியிருக்கீங்களே, அதிலே பாலிடால் உரம் அல்ல பூச்சிக்கொல்லி மருந்து.... இது போன்ற சின்ன சின்ன தவறுகள்.... இதை தவிர்த்து ரொம்ப நல்லா இருக்கு புத்தகம். 

எழுத்துப்பிழை என்பது உங்கள் குத்தம் இல்லை. மீதியெல்லாம் அடுத்தடுத்த புத்தகம் போடும் போது சரியாகிடும்

அது போல புத்தகம் படித்து முடிக்கும் போது "அந்த"தனலெஷ்மி" தியேட்டர் கிட்டே முதன் முதலில் நீங்க குடிவந்த போது புத்தகமும் கையுமா குடோன்ல இருக்கும் போது ஒரு பொண்ணு வந்து பேச்சு கொடுத்ததே... அது தான் நீங்க லவ் பண்ண போகும் பெண் என்று கதை படிக்கும் எல்லாரும் நினைப்பாங்க. சுஜாதா ஒரு முறை சொன்னார். 

கதையில் அல்லது அதை விஷூவலா சொல்லும் போதோ சுவற்றில் இரு கடிகாரத்தை சூம் பண்ணினா அது சம்மந்தமா கதையிலே வரனும். கண்டிப்பா வரனும். சும்மால்லாம் காமிக்க கூடாது. காமிச்சு வாசகனை அது பத்தியே குழம்ப வச்சா கதைல நீங்க சொல்லும் மத்த பாயிண்ட் முக்கியமான இடத்திலே வாசகன் அந்த கடிகாரத்தை பத்தி தான் நினைச்சுகிட்டு இதை கோட்டை விட்டுடுவான், என்றார். 

அது போல அந்த பெண் பாத்திரம் தேவையில்லை என்பது என் கருத்து

அடுத்து ஒரு முக்கால்வாசிக்கு பின்னே நீங்க மிளகாய் மூட்டை மேல் உடகாந்து எழுதினது போல ஒரு காரம். 

காங்கிரசை உங்களுக்கு பிடிக்கலை. அது போல கருணாநிதியை பிடிக்கலை.... ஜெயாவை பிடிக்குது... ஓக்கே... 

அதை நீங்க எழுதும் ஒரு ஆவண பதிப்பில் திணிச்ச மாதிரி இருக்கு. 

ஏன்னா 2 மணி நேர மின்வெட்டால் சாயத்தொழில் எல்லாம் சாகடிக்கப்பட்டது போன ஆட்சியில்ன்னு சொன்ன நீங்க... அடுத்து "ஆட்சி மாற்றம் பின்னரும் அது தொடருது"னு பாலீஷ் போட்டீங்க பாருங்க... அங்க தான் நிக்குறீங்க. 

2 மணி நேர மின்வெட்டு 3 மணி நேரமா ஆகியிருந்துச்சு அல்லது 4 மணி நேரமா ஆச்சுதுன்னா நீங்க இபப்டி பாலீஷ் போட்டது ஓக்கே. ஆனா 18 மணி நேர மின்வெட்டு எப்படில்லா அந்த தொழிலை பாதிச்சுதுன்னு விலாவாரியா ஒரு 4 பக்கம் சொல்லியிருக்க வேண்டாமா? 

ஏன் சொல்லலை? பாசம்.... 

அது போல சிதம்பரம், மன்மோகன்னு பெயரை குறிப்பிட்டு விளாசி தள்ளிய நீங்க ஜெயா அம்மையாரை பத்தி மட்டும் மயிலிறகால் வருடி விட்டுட்டீங்க:-))

அது போல "all under one roof" பாலிசி சரியா தப்பான்னு சரியா நெத்தியடியா சொல்லியிருக்கனும். 

சாலமன் பாப்பையா மாதிரி இவுக இப்படி பாதிக்கப்பட்டாக, அவுக அப்படி பாதிக்கப்பட்டாகன்னு ரெண்டு பக்கமும் பேசிட்டு இருந்தீங்க. காரணம் நீங்க முதலாளியா அல்லது தொழிலாளியா அல்லது இருவருக்குமான பாலமா என உங்களால் உங்களை கணிக்க முடியலை. 

இதான் நீங்க மழுப்பினதுக்கு காரணம்ன்னு  நினைக்கிறேன்

ஒரு ஒரு தோல்விக்கும் அடுத்து உங்களை காப்பது உங்க கண்ணியமான குணாதிசயம் என்பது கண்கூடா தெரியுது. அதை எப்போதும் கைவிட வேண்டாம். நல்லதே நடக்கும். 

முதல் இன்னிங்ஸ் திருப்பூர்ல முடிஞ்சு ஊருக்கு போய் பாட்டி வீடு வித்த காசிலே வெளிநாடு ஓடிப்போய் மீண்டும் அதே மஞ்சள் பையும் கட்டிய வேட்டியுமாய் ஊருக்கு திரும்ப வந்து மீண்டும் திருப்பூர்... 

ஊஃப்ப்ப்... வெல்டன் ஜோதிஜி... 

என் வாழ்க்கைக்கதை படிச்ச மாதிரி ஒரு உணர்வு.

புத்தக விமர்சனங்கள்