Sunday, February 15, 2015

வலைத்தமிழ்

"ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" தொடர் வலைத்தமிழ் இணையதளத்திற்கு முதல் தொடர் என்கிற ரீதியில் எங்களுக்கு இது முதல் அனுபவம். சில வாரங்களுக்கு முன்புதான் ஆரம்பித்ததுபோல் தோன்றினாலும் இருபது வாரங்களைக் கடந்து வாசகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் தொடராக வெற்றிகரமாக வெளிவருவதற்கு முழுமுதல் காரணம் திருப்பூர் ஜோதிஜியின் எழுத்து நடை மற்றும் தொடருக்கு ஏற்ற வண்ண வண்ண படங்கள் ஆகியவையே என்று கருதுகிறேன். 

ஒரு தொழிற்சாலை குறித்து எழுதப்பட்ட இந்தத் தொடருக்கும் வாசகர்களிடம் கிடைத்த ஆதரவும், அவர்கள் வழங்கிய கருத்துரையும் எங்கள் தளத்திற்குச் சிறப்பான அங்கீகாரத்தைத் தந்தது என்றால் அது முற்றிலும் உண்மையாகும். எந்தத் துறையைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் வாசகர்கள் படிக்க விரும்பும் நடையில், எளிய மொழியில் எழுதினால் அது வெற்றியைப் பெறும் என்பதற்கு இந்தத் தொடர் முக்கிய உதாரணமாகும். 

இந்தத் தொடர் ஆரம்பித்தது முதல் இன்று வரை பல்வேறு ஆலோசனைகளை, வாசகர்களின் மன ஓட்டங்களை அறிந்து, தன் அனுபவங்களைப் பகிந்துகொண்டு வலைத்தமிழ் ஆசிரியர் குழுவினருடன் கைகோர்த்துப் பயணித்தது எங்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம். 

ஜோதிதியின் ஆலோசனையின்பேரில் பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களைத் தளத்தில் செய்தோம், இன்னும் ஒருசில மாற்றங்கள் விரைவில் முடிய இருக்கிறது. இது வலைத்தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். 

"ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" தொடர் மாடசாமி, ரம்யா, ராஜா போன்ற பாத்திரங்கள் வழியே தங்களின் வலியை, வாழ்க்கையை மிக நேர்த்தியாகப் பதிவு செய்து இன்றைய எதார்த்த நிலையை ஆசிரியர் ஜோதிஜி படம்பிடித்துக் காட்டியுள்ளார். 

ஒவ்வொரு தொழிலும் உழைப்பவர்கள் மட்டும் ஒரு பக்கமும், உழைப்பை உறிஞ்சு வாழ்பவர்கள் மறுபக்கமும் இருப்பது இயல்பு தானே? இதைத்தான் இந்தப் பாத்திரங்கள் வழியே ஜோதிஜி படம் போட்டுக் காட்டியுள்ளார். 

இடையிடையே ஆயத்த ஆடைத்துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் வாழ்க்கை சார்ந்த பல்வேறு குறிப்புகள், முதலாளிகளின் மனோபாவம், தான் சந்தித்த அனுபவங்கள் வழியே உணர்ந்து எழுதிய மேற்கோள்கள் போன்றவற்றை மிக நேர்த்தியாக எழுதியுள்ளார். 

ஒவ்வொரு தொழிலும் பணத்தைத்தான் முதன்மை படுத்துகின்றது. பணம் தங்கள் வாழ்க்கையைச் சிறப்படைய வைக்கும் என்று நம்புகின்றார்கள். ஆனால் எத்தனை பணம் சேர்ந்தாலும் எவரும் நிம்மதியாக இருப்பதில்லை. அதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? என்பதனை தனக்குரிய பாணியில் தான் பார்த்த தொழில் சமூகத்தை வைத்து பலவித கருத்துக்களைச் செறிவாக வழங்கியுள்ளார். 

எல்லா உழைப்புக்குப் பின்னாலும் வெற்றி கிடைத்து விடுவதில்லை. குறிப்பிட்ட உழைப்பைத் தவிர வேறு எதற்கும் இங்கே எளிதில் அங்கீகாரம் கிடைத்து விடுவதில்லை. ஏன்? அதற்கான காரணங்கள் என்ன? என்பதனை தன்னை உதாரணமாகக் கொண்டு தான் பெற்ற தோல்வியை வெட்கப்படாமல் எடுத்துரைத்து அதன் வழியே புதிய கருத்துக்களை வழங்கியுள்ளார். இவர் இந்தத் தொடரில் எழுதியுள்ள பல நிகழ்வுகளில் நேர நிர்வாகம் குறித்து எழுதப்பட்ட பல சம்பவங்கள் அனைவருக்கும் பயன்தரக்கூடியது. 

மொத்தத்தில் "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" ஆயத்த ஆடைத்துறையை மட்டும் விவரித்துச் செல்லாமல் இதன் மூலம் அனைவருக்கும் பயன்படும் வகையில் ஒரு தொழிற்சாலையைத் தாண்டிய கருத்துக்களாக விளங்குகிறது. 

ஒவ்வொரு வாரமும் பதியப்படும் வாசகர்களின் கருத்துக்கள் இந்தத் தொடரின் வெற்றியை உறுதிசெய்தது. இந்தத் தொடரைப் தொடர்ந்து படித்துவிட்டு அமெரிக்காவில் பணிபுரியும் பேராசிரியர் ஒருவர் அழைத்து ஜோதிஜியின் "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" போல், தமிழகக் கண்டுபிடிப்புகள், குறிப்பாக ஜி.டி.நாயுடு குறித்துத் தான் ஒரு தொடர் எழுத வலைத்தமிழில் வாய்ப்பிருக்குமா? என்று எங்கள் குழுவினரிடம் கேட்டார். 

மேலும் ஜோதிஜியின் "ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்" என்னை வெகுவாகக் கவர்ந்தது என்று குறிப்பிட்டார்.. இதுபோல் இங்கே இந்தத் தொடர் வெளியானது முதல் எங்களுக்குப் பலதரப்பட்ட இடங்களில் இருந்தும், பல உயர்பதவிகளில் வகிப்பவர்களிடமிருந்து ஆக்கப்பூர்வமான உற்சாகமான பாராட்டுக்கள் வந்து கொண்டே இருந்தன. 

ஜோதிஜி கடந்த 2009 முதல் 'தேவியர் இல்லம்' என்ற வலைபதிவின் மூலம் பலதரப்பட்ட விசயங்களைக் குறிப்பாகத் தற்காலச் சமூகம் குறித்து, தான் கடந்து வந்த வாழ்க்கை குறித்து எழுதி வருகின்றார். 

தன் அனுபவங்களை எவ்வித பாசாங்கு இல்லாத நடையில் பட்டவர்த்தனமாக எழுதுவது இவரின் சிறப்பாகும். தான் பணிபுரியும் ஆயத்த ஆடைத்துறையில் உள்ள அக்கிரம நிகழ்வாகட்டும், ஈழம் சார்ந்த நாம் அறியாத தகவலாகட்டும் எதையும் மேம்போக்காக எழுதாமல் தான் உணர்ந்தவற்றை, தன் மொழியில் எழுதிவிட்டு நகர்வது இவரின் சிறப்பு. 

தான் எது எழுதினாலும் அதில் ஒரு சமூக நேர்மை, அன்றாட வாழ்வியலில் இன்றைய நெருக்கடிகள் குறித்துப் பதிவு செய்துவரும் ஜோதிஜி, இதில் தமிழகத்தின் இன்றைய சூழலில் இயங்கும் ஒரு தொழிற்சாலையின் நிலை, அதன் உட்கட்டமைப்பு மற்றும் சவால்கள், தொழிற்சாலையை நடத்தும் முதலாளிகளின் நிலை, தொழிலாளர்களின் நிலை, அரசு மற்றும் போட்டியாளர்களின் சவால்கள் என்று பல்வேறு கோணத்தில் இந்தத் தொடரை செதுக்கியுள்ளார். 

இவர் இதற்கு முன்னால் "டாலர் நகரம்" என்றொரு புத்தகத்தின் வாயிலாகத் திருப்பூர் குறித்துப் பொதுவான பார்வையைப் பதிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து வலைத்தமிழ் இணைய இதழில் திருப்பூருக்குள் உள்ள தொழிற்சாலையைக் குறித்து எழுதியிருப்பது மிகவும் பொருத்தமான ஒன்ற. பாகம் ஒன்று பாகம் இரண்டு என்பதாக எடுத்துக் கொள்ளலாம். 

இது தொழிற்சாலைகள் குறித்த ஆவணம், குறிப்பாகத் திருப்பூர் ஆடைத் தொழில் குறித்த முழுமையான ஆவணம். இது ஒரு நூலாக வெளிவரும்போது இந்தத் துறையில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள், தொழில் ஈடுபட்டு வரும் தொழில்முனைவோர் என்று பலருக்கும் பயனளிக்கும். 

இதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பது தமிழ் தாண்டி அனுபவங்கள் சென்று சேர வழிவகுக்கும். இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விரைவில் வெளியிட வாலைத்தமிழ் குழு இசைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.. 

தொடர் நிறைவடையும் இந்தத் தருணத்தில் இந்த முதல் தொடரை எழுதிய ஜோதிஜிக்கு வலைத்தமிழ் ஆசிரியர் குழு சார்பாக எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

இதன்மூலம் வலைத்தமிழ் ஆசிரியர் குழுவிற்குக் கிடைத்த அனுபவமும், ஜோதிஜியின் எழுத்துக்களைத் தொடர்ந்து படித்து வரும் இணைய நண்பர்களின் ஒத்துழைப்பும், இத்தொடர் மூலம் தானும் தன் அனுபவங்களைப் பகிர வாய்ப்பிருக்குமா என்று கேட்டுவரும் எழுத்தாளர்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.. 
நன்றி.. 

ஆசிரியர் குழு சார்பாக 

ச.பார்த்தசாரதி 
U.S.A


தொடர்புடைய பதிவுகள்

13 comments:

Amudhavan said...

ச.பார்த்தசாரதி
\\இதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பது தமிழ் தாண்டி அனுபவங்கள் சென்று சேர வழிவகுக்கும். இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விரைவில் வெளியிட வாலைத்தமிழ் குழு இசைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..\\
ஜோதிஜியின் அர்ப்பணிப்பிற்கும் அவருடைய தமிழ்த்திறமைக்கும் கிடைத்த மிகச்சரியான அங்கீரமாக இதனை நினைக்கின்றேன். நல்லவர்கள் ஒன்று சேர்ந்தால் நிறைய நல்லவைதானே நடக்கும் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு. மகிழ்ச்சி. பாராட்டுக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

// ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து... //

ஜோதி (ஜி) பரவட்டும்...

வாழ்த்துக்கள்...

Unknown said...

வலைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை என்று சகோ .(ஏனென்றால் ,அவரின் பின்னால் ஏற்கனவே ஜி இருப்பதால் ,இன்னொரு ஜி யை நான் சேர்க்க முடியலே )ஜோதிஜி அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன் :)

தனிமரம் said...

நல்ல பகிர்வு ஜோதி ஜீயின் அனுபவம்கள்

Neechalkaran said...

தொடர்ந்து வாசிக்க முடியாவிட்டாலும் அவ்வப்போது வாசிப்பதுண்டு அதில் சமூகப் பொறுப்புணர்வையும், ஆளுமைத்திறனும் கற்றுக்கொள்கிறேன். நன்றி வாழ்த்துக்கள்

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

மிக அற்புதமான வேலை .ஆங்கிலம் மொழி பெயர்ப்பு என்பது .அவரின் பதவிக்கும் , அவரின் பணியாளர்களுக்கு இன்னும் செய்ய வேண்டிய உதவிக்கு இந்த மொழி பெயர்ப்பு இன்னும் ஆழமான இடங்களை சென்று சேருவதன் மூலம் அவர் இன்னும் பல முக்கிய இந்திய மற்றூம் உலக அளவில் நடைபெற இருக்கும் கருதரங்கங்களுக்கு சென்று தனது கருத்தை முன்னெடுத்து செல்ல வழிவகுக்கும் என்பது இதன் மூலம் நடக்கும் என்பதாக மிக நம்பிக்கையுடன் வரவேற்கிறேன் .அவர் உயரம் இன்னும் முக்கியத்துவம் பெற அவரின் குடும்ப அன்பும் ,பணியாளர்களின் ஆதங்கங்களும் ,மனித நேயத்தின் பிரார்த்தனையும் ,வெளிநாட்டில் இந்தியாவை பற்றிய அபிமானமும் ,உலகில் மனிததுவத்தின் ஆழமான வேர்களும் இதை செய்ய எல்லம் வல்ல இறையாற்றல் அசீர்வதிக்கும் .

'பரிவை' சே.குமார் said...

அண்ணாவின் ஆழமான எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரம் இது...
அருமையான எழுத்துக்கு சொந்தக்காரரான அண்ணாவின் எழுத்துக்கு மணிமகுடம்..

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
இத்தொடர் ஆங்கிலத்திலும் செல்ல இருக்கிறதா
வாழ்த்துக்கள் ஐயா

எம்.ஞானசேகரன் said...

ஆங்கிலத்திலுமா? அப்படி போடு அறுவாள! வாழ்த்துக்கள் ஜோதிஜி. வலைத்தமிழ் புகழ் வையகமெங்கும் பரவட்டும்.

Unknown said...

ஆங்கிலத்திலும் உங்கள் புகழ் வளர என்னுடைய வாழ்த்துக்கள்...

மலர்

Thulasidharan V Thillaiakathu said...

ஆம்! எந்தவிதப் பாசாங்கும் இல்லாத, நேர்மையான எழுத்து நண்பர் ஜோதிஜியின் எழுத்து! மிக மிக நுண்ணிய ஆழாமான எழுத்து ! வாழ்த்துக்கள் நண்பரே! ஆங்கிலத்திலும் வர இருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி! ஆம் வர வேண்டும். அப்போதுதான் பலரையும் சென்றடையும்.!!தங்கள் புகழ் இவ்வுலகம் முழுக்க வளர வாத்துக்கள்!

Thulasidharan V Thillaiakathu said...

வலைத்தமிழ் வாழ்க!

msuzhi said...

உங்கள் இயல்பை அப்படியே பிட்டு வைத்திருக்கிறார் பாரத்தசாரதி. (அல்லது அவரும் என்னைப் போல் பார்க்காத சாரதியா? ;-)

விட்டு விட்டு படித்த தொடர். உங்கள் உழைப்புக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

உங்கள் தயவால் வலைத்தமிழ் தளம் இருப்பதும் அறிந்தேன்.