Showing posts with label தமிழ்மணம். Show all posts
Showing posts with label தமிழ்மணம். Show all posts

Friday, November 22, 2013

நம் கனவுகளின் நாயகன்


இன்று வரையிலும் பலரும் புலம்பிக் கொண்டுதான் இருக்கின்றனர். "என் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை" என்று. 

சிலரோ "நான் தமிழ் மணம் பக்கம் சென்று மாதங்களாகி விட்டது" என்கிறனர்.

இன்னும் சிலரோ "ஃபேஸ்புக் வந்தவுடன் வலைபதிவுகளுக்கு இருந்த மவுசு போய் விட்டது" என்கின்றனர்.

நீண்ட கட்டுரைகளைப் படிக்கத் தற்போது எவரும் விரும்புவதில்லை போன்ற அத்தனை புலம்பல்களையும் மீறி நாள்தோறும் புதியவர்கள் தனக்கென்று வலைபதிவுகளை உருவாக்கி தமிழிலில் எழுத முயற்சிப்பதும் நடந்து கொண்டேதானிருக்கின்றது. 

உண்மையான பொறியை அடைகாத்து வைத்திருந்தவர்களுக்கு வலைபதிவு என்பது மகத்தான வரமே. அத்தகைய பொறி இல்லாதவர்களுக்கு எப்போதும் போல பொழுது போக்கில் ஒன்று. 

தமிழ் வலைபதிவுகளில் த ம முன் அல்லது த ம பின் என்று தான் பார்க்க வேண்டியுள்ளது.இப்போது பயன்பாட்டில் உள்ள ஓட்டரசியலுக்குப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் த ம 7 அல்ல என்பதை நினைவில் வைத்திருக்கவும். 

ஒவ்வொரு திரட்டிக்கும் உண்டான மரியாதையென்பது இன்றுவரையிலும் தனித்துவமாகத்தான் உள்ளது. இத்தனை களேபரத்திற்கிடையே தமிழ்மணம் திரட்டிக்கான ஆதரவென்பது புழுதியும் சகதிகளுக்கிடையே புதுச்செடி போலத்தான் வளர்ந்து கொண்டேயிருக்கின்றது. 

தமிழ்மணம் உருவாகி பத்து வருடங்களுக்கு அருகே வந்து விட்டது. 

என்னைப் போலக் கணினியுடன் நாள் முழுக்க வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தவர்களுக்கே இப்படி ஒரு உலகம் இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளத் தெரியாமல் இருந்த கொடுமையைப் போல இன்னமும் பெரும்பான்மையான மக்களுக்குத் தமிழிலில் மின் அஞ்சல் அனுப்ப முடியும் என்பது கூடத் தெரியாத அளவுக்குத் தான் கற்றறிந்த கூட்டம் நாள் தோறும் இணையத்தில் புழங்கிக் கொண்டிருக்கின்றனர். 

நான் எழுதத் தொடங்கியது முதல் இன்று வரையிலும் திரட்டிகளில் இணைப்பதென்பது பெரிய சவாலாகத் தெரிந்ததில்லை. வேறெந்த பிரச்சனைகளும் உருவானதும் இல்லை. திரட்டி சார்ந்த அதீத மயக்கமும் உருவாகவில்லை. 

இன்று வரையிலும் என் மேல் தனிப்பட்ட அக்கறை கொண்ட தமிழ்வெளி குழலி, சர்ச்சையில் சிக்காத இன்ட்லி, தொடக்கம் முதல் இன்று வரையிலும் சர்ச்சைகளுடனே பயணப்பட்டு வரும் தமிழ்மணம். என என் எழுத்துக்களைப் பலரின் பார்வைக்குப் பட வைத்துக் கொண்டிருக்கும் மூன்று திரட்டிகளுக்கும் எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். 

திரட்டிகள் மட்டுமே நம்மை அடையாளம் காட்டும் என்கிற நிலை இன்று மாறிவிட்டது. ஏனைய பிற சமூக வலைதளங்கள் ஏராளமாக உள்ளது. ஏதோவொரு வழியின் மூலம் இன்று உங்கள் தளத்திற்கு ஒருவரை வரவழைத்து விட முடியும். ஆனால் வந்தவர்களை நிரந்தரமாகத் தக்க வைப்பதில் தான் உங்களின் தனித்திறமை இருக்கின்றது. இந்தத் திறமை இருப்பவர்களுக்குத் திரட்டிகள் தேவையில்லை என்கிற ரீதியிலும் இருக்கின்றார்கள். "ஆற்றில் பாதி சேற்றில் பாதி" என்பவர்களும் இருக்கின்றார்கள். 

ஆனாலும் இணைய வாசிப்பை விட அச்சு ஊடகத்தைத்தான் நான் இன்று வரையிலும் விரும்புகின்றேன். 

அச்சு ஊடகத்திற்கு இன்று மிகப் பெரிய சவாலாக இணைய வாசிப்பு உருவாகிக் கொண்டிருக்கின்றது என்ற புலம்பலைத் தாண்டியும் இன்று வரையிலும் வெகு ஜன இதழ்களின் வாசிப்பாளர்களின் ஆதரவு குறைந்துள்ளதே தவிர நின்றுவிட வில்லை. குறைவு என்பதற்கான காரணம் இணையம் அல்ல. நீக்கமற ஊடுருவிய தொலைக்காட்சியே.

இந்த இடத்தில் தான் இணைய வாசிப்பின் சூட்சமத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். 

தொழில் ரீதியாகக் கணினியுடன் நாள்தோறும் உறவாடிக் கொண்டு இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த இணைய வாசிப்பு சாத்தியம். அதுவே அவர்களின் சூழ்நிலைகள் மாற இணைய வாசிப்பென்பது கடினமே. ஒரு பத்திரிக்கையை கடந்த ஐந்தாண்டுகளாக ஒருவர் படித்துக் கொண்டிருப்பது சாத்தியமே. தமிழ்நாட்டிற்குள் எங்குச் சென்றாலும் அவரால் வாங்கி விட முடியும். வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் வளராத தொழில் நுட்பத்தில் இங்கே பலதும் சாத்தியமில்லை. 

கணினி மையத்தில் சென்று இவர் எழுதியதைப்படித்தால் தான் எனக்கு வேலையே ஓடும்  என்கிற நிலையில் தானா நம்மவர்கள் வாசிப்பு புலியாக இருக்கின்றார்கள்? 

இங்கே "நிரந்தர வாசகர்" என்பது வெறுமனே பொம்மலாட்டம். 

வந்து போய்க் கொண்டிருப்பவர்களை வைத்து தான் இணையம் வளர்நது கொண்டிருக்கின்றது. மற்றபடி வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களுக்கு தமிழ் இணையம் என்பது மிகப் பெரிய வரப்பிரசாதமே. அதுவும் கூட தமிழர்களுக்கு பொழுதுபோக்கிற்கு மட்டுமே பயன் பட்டுக் கொண்டிருக்கிறது.

பலசமயம் நாம் இதற்குள் வருவதற்கு முன் எவரெல்லாம் இங்கு இருந்தனர்? எப்படியெல்லாம் இந்தத் தமிழ் இணையம் வளர்ந்தது என்பதைப் பல சமயம் ஆராய்ந்து பார்ப்பதுண்டு. 

திரட்டி என்ற வடிவம் அறிமுகமாவதற்கு முன் எழுதிக் கொண்டிருந்தவர்கள், குழும மின் அஞ்சலில் கும்மியடித்தவர்கள், உரையாடிக் கொண்டிருந்தவர்கள், வம்பு உருவாக்குவதை மட்டுமே கொள்கையாக வைத்திருந்தவர்கள், இலக்கிய ஆசான்கள், லேகிய மேதைகள், தாதாக்கள், என்று இணையத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தவர்கள் எவரும் இன்று காணாமல் போய்விட்டார்கள். அல்லது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். 

வயதானவர்களுக்கும் இளைஞர்களும் ஒரு பெரிய இடைவெளி உருவாகுமே? இதைப் போலத்தான் இணையத்திலும் ஒவ்வொரு வருடத்திலும் மாறுதல்கள் உருவாகிக் கொண்டேயிருக்கின்றது. 

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவரின் தனிப்பட்ட கருத்து ரீதியான கொள்கைகள் காலாவதியாகிப் போகின்றது. சூடம் போலக் கரைய வைத்து விடுவதால் எண்ணங்களும் மாறிவிடுகின்றது. பொருளாதார நிர்ப்பந்தங்கள் அவரின் மூர்க்கத்தனத்தைக் குறைந்து விடுகின்றது. 

"பழையன கழிதலும் புதியன புகுதலும்" என உள்ளே வருவதும் போவதும் இடையூறாத சுழற்சியில் வருகின்றார்கள். சிலர் நிலைக்கின்றார்கள். 

பலரோ காணாமல் போய் லைக் பட்டனில் அடைக்கலமாகி விடுகின்றார்கள். சிலர் குறிப்பிட்ட சிலரின் பின்னூட்டத்தில் பதில் கொடுத்து "நாங்களும் இருக்கின்றோம்" என்று காட்டிக் கொள்கின்றார்கள். சிலரோ "உங்கள் காலம் பொற்காலம்" என்று கூலி வாங்காமல் கூவிக் கொண்டிருப்பவர்களின் வார்த்தைகளில் திருப்தி பட்டுக் கொண்டு விடுகின்றார்கள்.

இவரை நம்மால் சந்திக்க முடியுமா? என்ற காலங்கள் போய்விடடது. அத்தனை பேர்களும் ஃபேஸ்புக்கில் வந்து அடைக்கலமாகி விட்டதால் கொஞ்சலாம், திட்டலாம், நடிக்கலாம். தற்போது புகழ் என்பது பொது மேடை. காரணம் நவீன தொழில் நுட்பம் தந்த வளர்ச்சி இது.

ஆனால் இன்று வரையிலும் தமிழ்மணத் திரட்டியை திட்டிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை. இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் எவரொல்லாம் தமிழ்மணத்தின் மூலம் பலருக்கும் தெரியக்கூடியவராக அறிமுகமானார்களோ அவர்கள் தான் இன்று "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்கிறார்கள். 

இன்று தினந்தோறும் உறவே எங்கள் திரட்டியில் இணைந்து பயன்படுத்துங்கள் என்கிற விளம்பர வாசகத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் இந்தத் திரட்டி என்ற வடிவத்தைத் தமிழிலில் முதல் முறையாக உருவாக்கியவரின் முகத்தை நான் நினைத்துக் கொள்வதுண்டு. 

அவரைச் சமீபத்தில் சந்தித்தேன். 

கிராமங்களில் வாழ்ந்தவர்கள் சிம்னி விளக்கு, அரிக்கேன் விளக்கு போன்றவற்றை இன்றும் மறந்திருக்க வாய்ப்பில்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன் மின்சாரத் தெருவிளக்கில் படித்தவர்களும் அதிகமே. 1879 ஆம் ஆண்டுத் தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த மின்சாரம் நமக்கு இயல்பாக இன்று இருப்பதைப் போல உள்ளடங்கிய கிராமங்கள் வரைக்கும் பயன்பாட்டுக்கு வர நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆனது. 84 வயது வரை வாழ்ந்து எடிசன் இன்று மறைந்து 72 ஆண்டுகள் முடிந்து விட்டது. 

இன்று நாம் மின்சாரத்தைப் பயன்படுத்தும் போது எடிசனை நினைத்துக் கொள்கின்றோமோ? 

இன்று தமிழ்நாட்டில் நிலவி கொண்டிருக்கும் மின்தடையை நினைத்து தான் நம் எரிச்சலை காட்டிக் கொண்டிருக்கின்றோம். 

ஒரு கண்டுபிடிப்பின் பரிணாமம் வளர வளர கண்டுபிடித்தவர் அஸ்திவாரம் என்ற நிலையில் மறந்து போய்ப் பயன்பாட்டில் உள்ள நவீனம் மட்டுமே தான் பேசப்படும். இது தான் நவீன தொழில் நுட்பம் உணர்த்தும் பாடம். மற்றக் கண்டுபிடிப்புகளை விட மின்சாரம் என்பதை கண்டுபிடிக்காத பட்சத்தில் உலகம் எப்படியிருக்கும் என்பதை எப்பொழுதாவது யோசித்திருப்பீர்களா? 

இதைப் போல இன்றைய வலைபதிவுகளின் வளர்ச்சியென்பது திரட்டி இல்லாதபட்சத்தில் எப்படியிருக்கும் என்பதை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடியும். 

நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் எந்த நவீன தொழில் நுட்பமும் நமக்குச் சுகம் தரும் வரையிலும் "இனியெல்லாம் சுகமே " என்று குதுகலிக்கின்றோம். ஒரு மணி நேரம் மின் தடை உருவாக ஆட்சியாளர்களின் மேல் நாம் எரிச்சலை காட்டுவதைப் போலத்தான் நம் பதிவு பலரின் பார்வைக்குப் படாமல் இருக்கின்றதே என்று வலைபதிவுகளைத் திரட்டும் திரட்டிகளைத் திட்டத் தொடங்கி விடுகின்றோம். 

தமிழ் எழுத்துரு பயன்பாட்டுக்கு வந்த பிறகு, குழும மின் அஞ்சலில் தங்களின் கருத்துக்களைப் பறிமாறிக் கொண்டிருந்தவர்கள் அடுத்தக் கட்டமாகத் தாங்கள் உருவாக்கிய வலைபதிவுகளில் தங்களின் கருத்துக்களை எழுதத் தொடங்கினர். மேலைநாட்டினர் உருவாக்கிய வலைபதிவின் தன்மையும் படிப்படியாக மாறிக் கொண்டேயிருந்தது. 

ஆங்கிலத்தில் தொடங்கியவர்களின் பயணம் படிப்படியாகத் தமிழுக்கு நகர்ந்தது. ஒவ்வொருவரும் தங்களுக்கென்று ஒரு வலைபதிவுகளை உருவாக்கிக் கொண்டு தமிழிலில் எழுதத் தொடங்கினர். 

ஆனால் அது அங்கங்கே சிதறிக்கிடந்த எவருக்கும் பயன்படாத சில்லுகள் போலவே இருந்தது. குறிப்பிட்ட சிலரின் பார்வையில் மட்டும் பட எழுதியவர்களுக்கும் சோர்வு வர இந்தச் சமயத்தில் தான் இந்திய மொழிகளில் முதன் முதலாகத் தமிழுக்கென்று ஒரு திரட்டி இருந்தால் நன்றாக இருக்குமே? என்ற யோசனை ஒருவரின் மனதில் உருவானது. 

அவர் கற்ற எந்திரவியலுக்கும் கணினி சார்ந்த நிரலி மொழிகளுக்கும் எட்டு காத தூரம். ஆர்வமே வழிகாட்டி. அந்த ஆர்வமே அவரை ஓய்வு நேரத்தில் உழைக்க வைத்து இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் திரட்டியின் அஸ்திவாரம் உருவானது. 

தமிழிலில் எழுதிக் கொண்டிருப்பவர்களை ஒருங்கிணைக்க ஒரு திரட்டி இருந்தால் எப்படியிருக்கும் என்ற யோசித்தவரைப் பற்றி நமக்கு எத்தனை பேர்களுக்குத் தெரியும்? 

டாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ் வலைபதிவுகளின் தோற்றம், வளர்ச்சி குறித்து ஒரு மலர் வெளியிட வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. இதற்கான காரணம் என் தொடர்பில் இருப்பவர்கள் ஒரு நாளின் பெரும்பான்மையான நேரத்தை கணினியுடன் கழிப்பவர்களிடம் புத்தக விழா குறித்துத் தெரிவித்த போது வலைபதிவுகள் என்றொரு உலகத்தை எவருமே அறிந்தவர்களாக இல்லை. 

விழா மலர் என்பது செலவு பிடித்த சமாச்சாரமாக இருந்தாலும் நம்மால் முடிந்த ஒன்று என்கிற ரீதியில் இந்த ஆர்வம் மேலோங்க ஆய்த்த பணியைத் தொடங்கினேன். 

என்னுடைய பணிச்சூழல், நண்பர்களின் செயல்பட முடியாத நிலையில் நெருக்கடி உருவானது. ஒரு நள்ளிரவில் கூகுளில் தேடிய போது தான் இந்த வலைபதிவு முதன் முதலாக என் கண்ணில் பட ஆச்சரியமாகி, நாம் எதிர்பார்த்த அத்தனை விசயங்களையும் இவர் எழுதியுள்ளாரே என்று அப்படியே சேமித்து, அவரின் அனுமதி பெற அவரை அழைத்த போது தான் முதன் முறையாக அவரின் அறிமுகம் கிடைத்தது. 

சேமித்த கட்டுரைகளை அச்சில் கொண்டு வர முடியாத அளவுக்கு அதில் உள்ள எழுத்துரு அமைப்புச் சிக்கலில் கொண்டு வந்து நிறுத்திய போது நண்பர் காட்டிய அசாத்திய உழைப்பால் விழாவில் மலராக வந்தது. இந்தத் தளத்தில் பக்கவாட்டில் நிரந்தரமாக வைத்தேன். 

என்றாவது ஒரு நாள் இவரைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். 

அமெரிக்காவில் இவர் பணிபுரிந்த சமயத்தில் உருவாக்கிய தமிழ்மணம் 2003 இறுதியில் தொடங்கிய உழைப்பின் பலன் 2004 இறுதியில் வடிவம் பெற்றது. இன்று இதன் பரிணாம வளர்ச்சியில் சூடான இடுகையில் நாம் வந்து விட முடியுமா? என்ற ஏக்கத்தையும் உருவாக்கியுள்ளது. முதல் இருபதுக்குள் நாம் இல்லையா? என்று துக்கத்தையும் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. 

தற்போது கோவையில் வாழ்ந்து கொண்டிருப்பவர் உறவினர்களின் விசேடங்களுக்குத் திருப்பூர் வந்து போய்க் கொண்டிருப்பது தெரிந்த போதிலும் நான் உங்களைச் சந்திக்க ஆவலாய் உள்ளேன் என்று தகவல் மட்டும் சொல்லியிருந்தேன். 

அவர் ஒவ்வொருமுறையும் வந்து போய்க் கொண்டேயிருந்தார். தரிசனம் மட்டும் கிடைத்தபாடில்லை. சில சமயம் அவர் இங்கு வந்திருந்த போது அவர் அழைப்பு விடுத்தும் என்னால் சந்திக்க முடியாத சூழ்நிலை. சில வாரங்களுக்கு முன் சந்தர்ப்பம் சரியாக அமைந்தது. அப்போது தான் நீண்ட நாட்களாக என் மனதில் இருந்த தொழில்நுட்பம் சார்ந்த பல விசயங்களைக் கேட்டேன். 

பத்தாண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்வுகள் சார்ந்த பல பதிவுகள் என் கண்ணில் காட்டினார். 

அவரைச் சந்தித்த போது குறிப்பாகத் தமிழ்மண தொடக்கக் கால வளர்ச்சி, சந்தித்த சவால்கள், கிடைத்த ஆதரவு போன்றவற்றைத் தான் அதிகம் கேட்டேன். அப்போது தான் கீழ்க்கண்ட இணைப்புகளை என் பார்வைக்குத் தந்தார். 

இது குறித்து முழுமையாக எழுதுவதை விட ஒவ்வொரு பகுதியிலும் வந்துள்ள பின்னூட்டங்களில் உள்ள வார்த்தைகளைப் படிக்கும் பொழுதே இவரின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது. 

வலைபதிவில் எழுதி, ஓட்டு வாங்கி, பலரின் பார்வையில் பட்டு, ஹிட்ஸ் என்ற வார்த்தையோடு சிநேகம் கொண்டாடி, விளம்பரங்கள் மூலம் சம்பாரிக்க முடியுமா? என்று யோசிப்பவர்களுக்கும் 

எழுதக் கற்றுக் கொண்டதும் எழுத்தாளர் ஆசை உருவாகி நம் படைப்புகள் வெகுஜன இதழ்களில் வந்து விட முயற்சிகள் செய்பவர்களுக்கும், 

வலைபதிவில் எழுதியதை புத்தகமாக்கி நானும் எழுத்தாளர் தான் என்று சொல்லிக் கொள்பவர்களும்

ஏதோவொரு வகையில் இவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள்.  

இவர் மட்டும் எவரின் நன்றியையும் எதிர்பார்க்காமல் என்னுடைய தொழில் மூலம் உருவாகும் பிரச்சனைகளைக் சமாளிக்க ஏழெட்டு கணினி மொழிகளைக் கற்று வைத்துள்ளேன் என்று எதார்த்தமாக சொல்லிக் கொண்டு எது குறித்த ஆசையுமில்லாத மனிதராக நகர்ந்து சென்றவரை வினோதமாகப் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்தேன்

தமிழ்மணம் உருவானது தொடர்பான இவரின் முழுமையான அனுபவங்கள் குறித்து அறிந்து கொள்ள



வலைப்பதிவுகளுக்காக ஒரு மேடைத்தளம்

துல்லியமான தமிழாக்கம்

தமிழ்மணம் தளத்துக்கு தொடுப்புக் கொடுங்கள்

தமிழ்மணத்தின் முதல் 100 நாட்கள்

தமிழோவியத்துக்காக ஒரு பேட்டி


வாசிக்க

தமிழ்மணம் நட்சத்திரம் அறிமுகம்




Sunday, April 24, 2011

மெல்லச் சுழலுது காலம் - (தமிழ்மணம் இரா.செல்வராசு) புத்தக விமர்சனம்

எப்போது நாமும் இந்த சமூகத்தில் நல்ல மனிதராக வாழ வேண்டும் என்று தோன்றக்கூடும்? 

நல்ல மனிதர் என்ற வார்த்தையில் அவரவருக்கு உண்டான புரிதல்களை இட்டு நிரப்பிக் கொள்ளலாம். பெற்றோர்க்கு, மனைவிக்கு, குழந்தைகளுக்கு, பக்கத்து வீட்டுகாரர்களுக்கு, பணிபுரியும் அலுவலகத்தில் என்று பல பாத்திரங்களில் நம்மை இட்டு நிரப்பிக் கொண்டாலும் நமக்கு பூரண திருப்தி வந்து விடுமா? என்னளவில் எனக்குத் தெரிந்தவரையில் என் வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்று சொல்பவர்களால் அதை எழுத்தாக கொண்டு வரமுடியுமா?  

முடியும் என்று சொல்லி சாதித்து உள்ளார் இரா,செல்வராசு.


ஒரு முறை செல்வராசு எழுதியுள்ள மெல்லச் சுழலுது காலம் புத்தகத்தை படித்துப் பாருங்களேன். இந்த புத்தகம் வெளிவந்த போது செல்வநாயகி ஒரு பதிவாக வெளியிட்டு இருந்தார். பதிவுலகில் கொஞ்சமாக எழுதும் செல்வநாயகி முன்னுரையில் ஒரு கதக்களி ஆட்டத்தையே ஆடிக்காட்டி ஆச்சரியப்படுத்தியுள்ளார். இது தான் செல்வநாயகி வாழ்வின் மொழியும் கூட.

வாழ்க்கை என்பது எவ்வளவு தூரம் ரசித்து வாழவேண்டியதன் அவஸ்யத்தை அயலகத் தமிழனின் அனுபவக் குறிப்புகள் என்ற இந்த புத்தகம் உங்களுக்கு உணர்த்தக்கூடும். இவரின் வலைதளத்தை விரும்பி படித்தவன் என்ற முறையில் இந்த புத்தகத்தை தேடி, துரத்தியும் சிக்காத இந்த புத்தகம் எனக்கு நான் வாங்கிய தமிழ்மண விருதின் மூலம் என்னை வந்து சேர்ந்தது. 

ஆத்தாவும் தொலைபேசியும் என்று முதல் தலைப்பில் தொடங்கி 51 ஆவது தலைப்பாக வசந்தம் என்பதோடு முடித்துள்ளார்.  

வாசித்து முடிக்கும் போது நமக்குள்ளும் நாம் வாழ்ந்த வசந்த நினைவுகள் நமக்குள் சுற்றி சுழலத்தான் செய்கின்றது. இவர் வாழ்ந்த ஊர் ஈரோடு அருகே என்ற போதிலும் கூட தமிழ்நாட்டிலுள்ள மற்ற கிராம மனிதர்களின் வாழ்க்கை என்பதும் ஒரே மாதிரி தானே? 

இவர் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அமெரிக்கா வாழ்க்கையை விஸ்தாரமாக விவரிக்காமல் அதன் மூலம் கிடைத்த அனுபவங்களைத் தான் எழுத்தின் மூலம் படமாக காட்டுகிறார். ஆசிரியர் தனது குழந்தைகளுக்கு கொடுத்துள்ள சுதந்திரத்தையும் வாசிக்கும் போது சற்று வியப்பாக உள்ளது. குழந்தை தனது மரணத்தைப் பற்றி இயல்பாக உரையாட முடிகின்றது. வேலை நிமித்தமாக வேறு ஊருக்குச் சென்று வரும் போது உண்டான பிரிவுகளை குழந்தைகளுக்கு உணர்த்தும் விதமும், மகள், நானும் உங்களுடன் மடியில் உட்கார்ந்து கொண்டு வந்தால் டிக்கெட் பிரச்சனையில்லை தானே? என்று திருப்பி கேட்டு திக்குமுக்காட வைப்பதும் என்று அங்கங்கே சின்னச் சினன சிருங்கார சிதறல்கள். கட்டுப்படுத்தாத சுதந்திர எல்லைகளை இவர் தனது குழந்தைகளுடன் உரையாடும் உரையாடல்கள் மூலம் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

ஒரு தலைப்புக்கும் அடுத்த தலைப்புக்கும் தொடர்ச்சி இல்லாவிட்டாலும் கூட இவர் கடந்து வந்த பாதையை, இளமைப் பருவ தாக்கத்தை, ஒவ்வொரு முறையும் அமெரிக்காவிலிருந்து இங்கே வந்து திரும்பி செல்லும் போது, என்று ஒவ்வொரு நிகழ்வுகளில் உள்ள விசயங்களை வியப்புக்குறிகளோடு நம்மை இழுத்துக் கொண்டு செல்கிறார். மொத்தத்தில் சுயசரிதம் என்பது போலில்லாமல், சொறிய கிடைத்த வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொள்ளாமல் வயலும் வாழ்க்கையும் போல ஒவ்வொரு தலைப்புக்குள்ளும் கொஞ்சம் கவிதை, சிறிது சுவராஸ்யம், மேலான நகைச்சுவை என்று கலந்து கட்டி ஒவ்வொரு கட்டுரையும் பொங்கல் சோறாக இருககிறது. . 

ஒவ்வொரு தலைப்பிலும் உள்ள விசயங்களை நம்மால் பல இடங்களில் பொருத்திக் கொள்ள முடிகின்றது. நான் வெளிநாட்டு வாழ்க்கையை பார்த்தவன் என்ற முறையிலும் வெளியுலகமே தெரியாத கிராமத்து மனிதர்களின் அப்பாவிகளுடன் பழகிக் கொண்டிருப்பவன் என்ற முறையிலும் இரண்டு எதிர் துருவங்களையும் இயல்பாக ஒரே அச்சில் இவர் எழுத்தின் மூலம் எளிதாக பார்க்க முடிகின்றது. இரண்டுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை சுவையாய் ஆசிரியர் ரசித்து எழுதிய வாசகங்கள் வாசிப்பவனுக்கு தன்னிலை மறக்கச் செய்யும். அவரவர் வாழும் வாழ்க்கையை வாசிப்பவர்களுக்கு கொண்டு வந்து நிறுத்துகிறது. 

சமகாலத்தில் ஆங்கில வார்த்தை கலக்காமல் எழுதுவது ஒரு சவாலாக கருதுபவர்கள், இவரின் பாசாங்கு இல்லாத மொழிநடையை வாசிக்கும் போது  ஆச்சரியப்படக்கூடும். ஒவ்வொரு கட்டுரைகளும் கிறங்கடிக்கும்.துள்ளல் நடையில் அமைந்துள்ளது மெலிதான நகைச்சுவை என்று எல்லா நிலையிலும் அனுபவமிக்க முழு நேர எழுத்தாளர் போலவே நகர்த்தியுள்ளார். ஆனால் அறிமுகத்தில் அவையடக்கமாய் இவர் கூறுவதை நம்ப முடியவில்லை. 

ஒரு தனி மனிதரின் டைரிக்குறிப்புகளை உரிமையோடு அனுமதியோடு படிக்கும் மகிழ்ச்சியை இந்த புத்தகம் தருகின்றது. இது கடந்த 20 ஆண்டுகளாக செல்வராசு எழுதியுள்ள வலையில் எழுதிய அனுபவ பகிர்வுகள். இவரின் எழுத்தின் பிரதிபலிப்பு உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டும். இதன் மூலம் எழுதுபவரின் தனிப்பட்ட வாழ்க்கையை உணர்ந்து கொள்ள முடியும். உங்கள் குழந்தைகள் மீது நீங்கள் அதிக அக்கறை காட்டுபவர் என்றால் அவஸ்யம் இவர் கொடுத்துள்ள பரிந்துரைகளை முரடாய் மிரட்டாதே என்ற தலைப்பில் உள்ள விசயங்களை படித்துப் பாருங்கள்.

கிராமத்து கோவில் திருவிழாக்களின் முஸ்தீபுகள், குழந்தைகளை வளர்க்க முதலில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய உன்னை நீ நம்பு என்ற ஆதார வாக்கியம், கவிதை துணை கொண்டு எழுத்தில் வடித்த வறண்ட குளத்து வாத்துக்கள், உறங்கா நிலவு என்று ஒவ்வொரு கட்டுரையிலும் புதிய நடையில் படைத்துள்ளார். தன் எழுத்தில் எத்தனை விதமாக எழுதிப் பார்க்கமுடியுமோ அத்தனை விதமாகவும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

தான் வாழ்ந்த மணணின் மணத்தை, கிராமத்தை, பெற்றோரை, அவர்களின் சிந்தனைகளை சரம் போல் கோர்த்து மாலையாக மாற்றியுள்ளார். எதையும் விட்டு வைக்கவில்லை. இவர் அம்மா வீட்டு குடிசையில் சொருகி வைத்த கடிதம் முதல் ரயில் நிலையத்தில் அப்பாவுடன் உரையாடும் உரையாடல் வரைக்கும் ஒவ்வொன்றுக்குள்ளும் ஓராயிரம் அர்த்தங்கள்.  உணர்ந்தவர்களுக்கு பொக்கிஷம். 

குறிப்பாக கிராமத்து வாழ்க்கையை அனுபவித்துவிட்டு புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் அடி மனதில் நீக்க முடியாமல் இருக்கும் பொக்கிஷ நினைவுகளை இந்த புத்தகம் சுருதி லயம் மாறாமல் மீட்டெடுக்கின்றது. குறை என்று சொல்ல வேண்டும் என்பதற்காகவே சில இடங்களில் அச்சுக் கோர்ப்பு எழுத்துப் பிழைகளும், புத்தக அட்டை வடிவமைப்பு என்று எரிச்சல் வரவைக்கின்றது. இப்போதுள்ள நவீன (லே அவுட்) அட்டைவடிவ முன்னேற்றத்தில் பதிப்பக மக்கள் செய்துள்ள வடிவமைப்பு மட்டும் தூங்கி வழிவது போல் இருக்கின்றது. பின் அட்டையில் உள்ள ஆசிரியரின் உருவ இளமையைப் போலவே படித்து முடிக்கும் போது நமக்குள்ளும் ஒரு இளமை பரவக்கூடும். 

இளமையாய் உங்கள் நினைவுகள் மாறக்கூடும். 

உண்மையான உழைப்பும், உறுதியான கல்வியும் கொண்டவர்களின் வாழ்க்கை எப்போதும் தோற்றுப் போனதில்லை. இந்த புத்தகத்தை படிக்கும் போது செல்வராசு உணர்த்துவதும் இதே தான்.  என்னவொன்று உங்கள் கல்வியினால்  நீங்கள் பெற்ற உயர்பதவிகளும், கிடைக்கும் செல்வங்களையும் இயல்பாக எடுத்துக் கொண்டால் உங்களால் கூட உங்கள் பழைய நினைவுகளை இது போல எழுத முடியும்.

புத்தகத்தின் பெயர் -  மெல்லச் சுழலுது காலம் 
(அயலகத் தமிழினின் அனுபவக்குறிப்புகள்)
ஆசிரியர் இரா. செல்வராசு

பக்கங்கள் 208
விலை .:  160.00

54./ 13 10 வது தெரு
டிரஸ்டுபுரம், கோடம்பாக்கம்,
சென்னை 24
தொலைபேசி 044 43 54 03 58
மின் அஞ்சல் sales.vadali.gmail.com

பின்குறிப்பு புத்தக ஆசிரியர் தற்போது அமெரிக்காவில் வாசிங்டன் டிசி அருகே வர்ஜீனியாவில் உள்ள ஃபேர்ஃபேக்சு நகரில் தற்போது மனைவி, இரு மகள்களுடன் வசித்து வருகிறார். ஒரு பன்னாட்டுப் பாறைநெய் நிறுவனத்தின் நடுவண் ஆய்வு மற்றும் பொறியியல் பிரிவில் வேதிப் பொறிஞராகப் பணிபுரிந்து வருகின்றார். 

Saturday, January 15, 2011

தமிழ்மணம் விருதுகள் 2010 வெளியேறும் நேரமிது.

சென்ற ஆண்டு (2009) தமிழ்மணம் அறிவித்த விருதுகளுக்காக என்னை நண்பர் அழைத்து எனக்கு இதை புரியவைத்தார். எப்போதும் போல அவர் சொன்னபடியே சேர்த்துவிட்டு மறந்து போய்விட்டேன். ஆனால் தேர்வு நிலைக்கு வரவில்லை. அப்போது உள்ளடி வேலைகளும் இருந்தது என்பதை அதன் பிறகு பலரும் புரியவைத்தார்கள்.  ஆனால் இந்த முறை தமிழ்மணம் பெரும்பாலும் அது போன்ற உள்ளடி வேலைகளை அடக்கி ஒடுக்கியதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் உண்மைத்தமிழன் போட்ட கூப்பாட்டில் தமிழ்மணத்தில் ஓட்டுப் போட நினைக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையும் கதவைத் தட்டி உள்ளே வரலாமா? என்கிற நிலை வரைக்கும் கொண்டு வந்துள்ளது.

இந்த முறை இதில் நிச்சயம் ஜெயிக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் யோசித்த போது என் மனதில் வந்து போனவர்கள் ஐந்து பேர்கள்.  வலைபதிவில் வெவ்வேறு பரிணாமத்தில் தங்கள் பங்களிப்பைச் செய்து கொண்டுருப்பவர்கள்.  

எனக்கு இடுகையில் உள்ள தொழில் நுட்ப அறிவு குறித்து எப்போதும் ஆர்வம் இருப்பதில்லை. இன்றைய தினத்தில் ஓரளவிற்கு இதன் தொழில் நுட்பத்தை உருண்டு புரண்டு கற்றுக் கொண்டாலும் பலரின் தளங்களைப் பார்க்கும் போது எனக்கு வியப்பாகவே இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓய்வு நேரங்களில் எழுதுவதைத் தவிர வேறெதிலும் நான் கவனம் செலுத்துவதில்லை. 

காரணம் "நம்மால் எது முடியுமோ அதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்"  என்பதை நான் இருக்கும் ஏற்றுமதி தொழில் வாழ்க்கையைப் போலவே இந்த வலையுலகத்திலும் கொள்கையாகவே வைத்துள்ளேன். இங்கு மற்றொரு பிரச்சனையும் உண்டு.

அதிவேக இணைப்பை சமீபத்தில் பிஎஸ்என்எல் ல் கேட்டு வாங்கிய போதும் கூட வீட்டில் உள்ள இணையத்தொடர்புக்கு அடிக்கடி சளி காய்ச்சல் இருமல் தொந்தரவு இயல்பாக வந்து விடுகின்றது. ஏர்டெல் போன்ற கொள்ளை கொலைகார கூட்டத்திடம் போய் மாட்டிக் கொள்வதை விட அரசாங்கம் எவ்வளவோ பரவாயில்லை. இதன் காரணமாகவே எனக்கு வலையுலக நகர்வலம் குறைவாகவே இருக்கிறது.

இந்த போட்டிக்கு எப்படி கலந்து கொள்ள வேண்டும்?  என்பதை நான் தேர்ந்தெடுத்த ஐந்து பேர்களிடமும் கேட்ட போது மூன்று பேர்கள் தங்கள் அறிவுரையைச் சொன்னார்கள்.  ஒருவர் வீடுவரை வந்து ஒரு விருதைக் கொடுத்து விட்டு வேறெதும் என்னிடம் கேட்காதே!!!!! என்பது போல் நகர்ந்து போய்விட்டார். ஒருவர் இப்போது பின்னூட்டம் கூட அதிகம் போடுவதில்லை. காரணம் அவரின் வேலைப்பளூவை நான் புரிந்தே வைத்திருக்கின்றேன். ஆனாலும் அவரும் சில புரிந்துணர்வுகளை தெரியப்படுத்தினார். 

கூட்டிக் கழித்துப் பார்த்தபோது கடைசியாக ஒருவர் கொடுத்த அறிவுரையை கரம் சிரம் புறம் பார்க்காமல் அவர் சொன்னபடியே மூன்று தலைப்புகளையும் சேர்த்துவிட்டு ஒதுங்கி விட்டேன்.  காரணம் அவரின் ஆளுமையை நான் அறிந்ததே. இப்போது வெற்றியும் கிடைத்துள்ளது.



இரண்டு தலைப்புகளுக்கும் இரண்டாவது பரிசு கிடைத்துள்ளது. இதில் ஒரு ஆச்சரியம்?  

எங்க ஊரு காரவுக சுடுதண்ணி. ஒன்னுமன்னா பழகிறவுக நம்ம செந்திலாண்டவர். (அவருக்கு இந்த வார்த்தை பிடிக்காது?)  இரண்டு பேருக்கிட்டத் தான் தோத்துருக்கேன். சுடுதண்ணி திடீர்ன்னு வருவாக. ஒரு சுனாமிய உருவாக்கிட்டு போயிடுவாக.  ஆனா நம்ம செந்திலாண்டவரை நான் சக போட்டியாளராக மனதில் வைத்துக் கொண்டு வேறொரு சமயத்தில் அவரை முந்த வேண்டும் என்று சமயத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டுருக்கின்றேன்.  அதற்கான வாய்ப்பு விரைவில் வரும் போல தெரியுது. தமிழ் வலையுலகத்தில் சிறப்பான வீச்சை உருவாக்கிய செந்திலின் "எங்கே செல்லும் பாதை"  தளம் குறித்து எப்போதும் எனக்கொரு கர்வமான பொறாமை மற்றும் பெருமையுண்டு.

உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றவர்களுக்கும், வாழ்த்துரைத்தவர்களுக்கும், இந்த தலைப்பை வழிமொழிந்தவர்களுக்கும், மின் அஞ்சல் வாயிலாக என்னுடன் முன்பின் அறிமுகம் இல்லாத போதும் ஒவ்வொரு சமயத்திலும் இது குறித்து தெரிவித்த நல் இதயங்களுக்கும் தேவியர் இல்லத்தின் நன்றி. 

நான் கவனித்த வரையிலும் விதி ராஜீவ் மதி பிரபாகரன் என்ற தலைப்பு தினந்தோறும் எவரோ சிலர் வந்து படித்துக் கொண்டுருந்தார்கள். சற்று நம்பிக்கை இருந்தது.  இந்த சமயத்தில் இந்த விசயங்களை எழுத உதவிய முன்னாள் புலனாய்வு அதிகாரி டி.ஆர்.கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி என்ற வார்த்தையை எழுதி வைக்கின்றேன்.  அவர் எழுதிய புத்தக அறிவை வைத்துக் கொண்டு வெகு ஜன ஊடகத்தில் வந்த தகவல்களை திரட்டி மொத்தமாக எழுதிப் பார்த்த (தொடர்) தலைப்பு இது. 

திருப்பூர் குறித்து நான் எழுதிய விசயங்கள் அத்தனையும் இன்று உண்மையாக நடந்து கொண்டுருக்கிறது.  ஆனால் இன்னமும் எவரும் இதன் விபரீதத்தை உணராமல் ஆட்சியாளர்களின் அயோக்கியதனத்தை எவரும் எதிர்க்கத் தயாராக இல்லை என்பது தான் இன்றைய எதார்த்த உண்மை.

இதுவொரு வெற்றி என்று கருத முடியவில்லை. ஒரு அங்கீகாரம் அல்லது என்னை சரியான முறையில் மற்றவர்களுக்கு உணர்த்தியுள்ளேன் என்பதாக எடுத்துக் கொள்கின்றேன். 

எழுதுபவனுக்கு தன் எழுத்துக்களை கொண்டு சேர்ப்பதும் முக்கியம். அதற்காக எந்த லாபி வட்டத்தையும் நான் உருவாக்கவில்லை.  உருவாக்கவிரும்புவதும் இல்லை. உணர்ச்சி, உணர்வு இந்த இரண்டு வார்த்தைகளிலும் உணர்ச்சிக்குத் தான் இந்த வலையுலகத்தில் அதிக முக்கியத்துவம் விரைவில் கிடைக்கின்றது. 

நீடிக்குமா? என்பதை நீங்கள் தான் புரிந்து கொள்ளவேண்டும். 

இந்த முறை போட்டியில் கலந்து கொண்ட பலரின் தலைப்புகளையும் பார்க்கும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக மிக அற்புதமாக எழுதியவர்களை சுட்டி கொடுத்து சுட்டித்தனமாக பாராட்டமுடியும். ஆனால் என்னைத் தெரிந்தவர்கள், என் எழுத்தைப் படிப்பவர்கள், என் நலம் விரும்பிகள் என்ற இந்த மூன்று வட்டத்திற்குள் ஏதோவொரு வட்டத்தில் பலருக்கும் நான் பிடித்தமானவனாக இருப்பதை உணர்ந்து கொண்டேன்.  இது போக இந்த தலைப்புகள் இறுதிப்பார்வைக்கு சென்ற போது இந்த தலைப்புக்குப் பின்னால் உள்ள உழைப்பை உணர்ந்து இருக்கக்கூடும். 

என் நெருங்கிய நண்பர் நிகழ்காலத்தில் சிவா கொடுத்துள்ள சுட்டியைப் படித்துப் பாருங்கள்.  இத்தனை பேர்களையும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அணைவரும் படித்திருக்க முடியுமா?

மற்றொரு ஆச்சரியம்?? 

நானும் இந்த முறை தமிழ்மணம் நடுவர் குழுவில் ஒருவனாக தேர்வாகியிருந்தேன்.  ஆனால் தமிழ்மணம் நிர்வாக குழுவினர் என்னை தேர்ந்தெடுக்க காரணம் எதுவாக இருந்தாலும் தொடக்கத்தில் என் தளத்தின் சுட்டியை இந்த தமிழ்மணத்தில் இணைக்க முடியாத ஒரு சூழ்நிலையும் உருவானது. நான் ஏற்கனவே எழுதிக் கொண்டுருந்த வேர்ட்ப்ரஸ் சுட்டி என்னிடம் வந்து சேர்ந்த போது நிச்சயம் நாம் கலந்து கொள்ள முடியாது என்றே முடிவு செய்து விட்டேன். ஆனால் தமிழ்மண நிர்வாக குழுவின் சட்டதிட்டங்கள் உடைப்பது சாதாரணமானதல்ல என்பதை நான்கு நாட்கள் நான் தொடர்ந்து கொடுத்த மின் அஞ்சல் புரிய வைத்தது. 

காரணம் தமிழ்மணத்தின் தானியங்கி திரட்டி அதன் போக்கில் மட்டுமே செயல்படும்.    உள்ளே புகுந்து உழப்ப முடியாது போல.    அதன் பிறகே இந்த இடுகைக்கான சுட்டி வரவேண்டிய நேரத்தில் வந்து சேர்ந்தது. அந்த நாட்கள் மனம் பெற்ற உளைச்சலின் மூலம் புதிய நோக்கம் உருவானது.  

ஒருவேளை இந்த முறை ஏதோவொரு தலைப்புக்கு அங்கீகாரம் கிடைத்தாலும் அடுத்த முறை தமிழ்மணம் விருதுகளில் கலந்து கொள்ள வேண்டியதில்லை என்பதை முடிவாக வைத்திருந்தேன்.. எத்தனையோ புதியவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்ள நாம் தமிழ்மணம் விருதுகளில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று யோசித்ததை இப்போது இதன் மூலம் உறுதிப்படுத்துகின்றேன். 

வினவு மற்றும் கோவிகண்ணன் இந்த வருடம் உருவாக்கிய பாதையிது.   அடுத்த ஆண்டு தமிழ்மணம் 2011 போட்டிகளில் கலந்து கொள்ளப் போகும் புதிய இணைய எழுத்தாளர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். 

இந்த முறை வெற்றி பெற்ற சக தோழமைகளுக்கு என் வாழ்த்துகள்.

முகிலன் கூகுள் பஸ்ஸில் தமிழ்மணம் போட்டியில் நடுவர்களாக இருந்தவர்களின் தேர்வான இடுகையைப்பற்றி குறிப்பிட்டு இருந்தார். இந்த சமயத்தில் இது குறித்து சில வார்த்தைகள்.

இரண்டு பிரிவுக்கான தலைப்பு எனக்கு வநது சேர்ந்தது.  அதில் உள்ள இடுகைகளை என் பார்வையில் விமர்சித்து சாதக பாதகத்தை பட்டியலிட்டு அதற்கு தனியாக மதிப்பெண்கள் கொடுத்து அனுப்பி இருந்தேன்.  ஆனால் நான் தேர்ந்தெடுத்த தலைப்பில் ஒன்று மட்டும் வந்துள்ளது.  ஆக மொத்தம் நான் தேர்ந்தெடுத்த தலைப்பு இந்த குழுவில் இருந்த மற்ற எவருக்கோ போய் இருக்கக்கூடும்.  இன்னும் சிலருக்குக்கூட போயிருக்கலாம்.  அவர்களின்  மதிப்பெண்கள் என்னுடைய மதிப்பெண்கள் இரண்டும் சேர்ந்து பொது மதிப்பெண்கள் கிடைத்து இருக்கும். 

இதற்கு மேலே தமிழ்மணம் நிர்வாக ஒருங்கிணைப்பு குழு உருவாக்கும் தராசுப் பார்வை.  ஆக மொத்தம் ஓட்டை உடைசல் இல்லாத பாத்திரம் போன்ற இந்த முறை தமிழ்மணம் நிர்வாகத்தினரால் உருவாக்கப்பட்டுள்ளது என்றே கருதுகின்றேன்.

மற்றொரு ஆச்சரியம் ஆன்லைனில் வந்த அந்த பயபுள்ள கூட மூச்சு கூட விடாமல் அப்படியோ......... அப்படியா........ என்னங்க சொல்றீங்க......... என்று நழுவிப்போன போது ஆச்சரியமாக இருந்தது. இந்த சமயத்தில் புத்தக கண்காட்சியில் சூப்பர் ஸ்டார் போல பட்டையைக் கிளப்பிய என்னை பட்டை தீட்டிக் கொண்டுருக்கும் துளசி கோபால் கூட முச்சு விடவில்லை.. 


என்னடா இவங்கள எல்லாம் தமிழ்மணம் நடுவர் குழுவில் தேர்ந்தெடுக்காமல் நம்மள கொண்டு போய் வடிவேல் வலியக்க ஜீப்ல ஏறிப்போன மாதிரி ஏத்தியிருக்காங்களேன்னு யோசிச்சேன்.  

ஆனால் இந்த நடுவர் குழு பட்டியலைப் பார்த்த போது தான் புரிந்து கொண்டேன். ஆக மொத்தம் நடுவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தமிழ்மணம் எந்த மாதிரியான திண்டுக்கல் பூட்டை  போட்டுள்ளது என்பதை உணர்ந்து கொண்டேன். .

தேவியர் இல்லத்துக்கு இரண்டு தளங்கள்.  வீட்டில் இரட்டை குழந்தைகள் கிடைத்ததும் இரண்டு பரிசுகள்.  ஏன் செந்திலு ஒன்னு பெரிசா ரெண்டு பெருசா?

போதும் மக்களே. 

உங்கள் ஆதரவுக்கும், அக்கறைக்கும் தமிழ்மணத்திற்கும் என் நன்றி. 

இந்த பொங்கல் திருநாளை முன்னிட்டு மூன்று நாட்கள் எதற்கும் அவசரப்பட வேண்டிய அவஸ்யமில்லாத விடுமுறை கிடைத்துள்ளது.  கடந்து போன பல நாட்கள் தூங்கும் போது சொல்லமுடியாத மந்திரக்கதைகளை இனிமேல் இந்த விடுமுறை நாளில் சொல்லவேண்டும் என்ற உத்தரவு மகாராணிகளிடம் இருந்து வந்துள்ளது. 

அப்புறம் மறக்காம நம்ம இராமநாதபுரம் பக்கம் வந்து பாண்டியனின் ராஜ்யத்தில் உய்யலாலா என்று வந்து பாடிட்டு போங்க.