Showing posts with label புலம் பெயர்ந்தோர். Show all posts
Showing posts with label புலம் பெயர்ந்தோர். Show all posts

Sunday, April 24, 2011

மெல்லச் சுழலுது காலம் - (தமிழ்மணம் இரா.செல்வராசு) புத்தக விமர்சனம்

எப்போது நாமும் இந்த சமூகத்தில் நல்ல மனிதராக வாழ வேண்டும் என்று தோன்றக்கூடும்? 

நல்ல மனிதர் என்ற வார்த்தையில் அவரவருக்கு உண்டான புரிதல்களை இட்டு நிரப்பிக் கொள்ளலாம். பெற்றோர்க்கு, மனைவிக்கு, குழந்தைகளுக்கு, பக்கத்து வீட்டுகாரர்களுக்கு, பணிபுரியும் அலுவலகத்தில் என்று பல பாத்திரங்களில் நம்மை இட்டு நிரப்பிக் கொண்டாலும் நமக்கு பூரண திருப்தி வந்து விடுமா? என்னளவில் எனக்குத் தெரிந்தவரையில் என் வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்று சொல்பவர்களால் அதை எழுத்தாக கொண்டு வரமுடியுமா?  

முடியும் என்று சொல்லி சாதித்து உள்ளார் இரா,செல்வராசு.


ஒரு முறை செல்வராசு எழுதியுள்ள மெல்லச் சுழலுது காலம் புத்தகத்தை படித்துப் பாருங்களேன். இந்த புத்தகம் வெளிவந்த போது செல்வநாயகி ஒரு பதிவாக வெளியிட்டு இருந்தார். பதிவுலகில் கொஞ்சமாக எழுதும் செல்வநாயகி முன்னுரையில் ஒரு கதக்களி ஆட்டத்தையே ஆடிக்காட்டி ஆச்சரியப்படுத்தியுள்ளார். இது தான் செல்வநாயகி வாழ்வின் மொழியும் கூட.

வாழ்க்கை என்பது எவ்வளவு தூரம் ரசித்து வாழவேண்டியதன் அவஸ்யத்தை அயலகத் தமிழனின் அனுபவக் குறிப்புகள் என்ற இந்த புத்தகம் உங்களுக்கு உணர்த்தக்கூடும். இவரின் வலைதளத்தை விரும்பி படித்தவன் என்ற முறையில் இந்த புத்தகத்தை தேடி, துரத்தியும் சிக்காத இந்த புத்தகம் எனக்கு நான் வாங்கிய தமிழ்மண விருதின் மூலம் என்னை வந்து சேர்ந்தது. 

ஆத்தாவும் தொலைபேசியும் என்று முதல் தலைப்பில் தொடங்கி 51 ஆவது தலைப்பாக வசந்தம் என்பதோடு முடித்துள்ளார்.  

வாசித்து முடிக்கும் போது நமக்குள்ளும் நாம் வாழ்ந்த வசந்த நினைவுகள் நமக்குள் சுற்றி சுழலத்தான் செய்கின்றது. இவர் வாழ்ந்த ஊர் ஈரோடு அருகே என்ற போதிலும் கூட தமிழ்நாட்டிலுள்ள மற்ற கிராம மனிதர்களின் வாழ்க்கை என்பதும் ஒரே மாதிரி தானே? 

இவர் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அமெரிக்கா வாழ்க்கையை விஸ்தாரமாக விவரிக்காமல் அதன் மூலம் கிடைத்த அனுபவங்களைத் தான் எழுத்தின் மூலம் படமாக காட்டுகிறார். ஆசிரியர் தனது குழந்தைகளுக்கு கொடுத்துள்ள சுதந்திரத்தையும் வாசிக்கும் போது சற்று வியப்பாக உள்ளது. குழந்தை தனது மரணத்தைப் பற்றி இயல்பாக உரையாட முடிகின்றது. வேலை நிமித்தமாக வேறு ஊருக்குச் சென்று வரும் போது உண்டான பிரிவுகளை குழந்தைகளுக்கு உணர்த்தும் விதமும், மகள், நானும் உங்களுடன் மடியில் உட்கார்ந்து கொண்டு வந்தால் டிக்கெட் பிரச்சனையில்லை தானே? என்று திருப்பி கேட்டு திக்குமுக்காட வைப்பதும் என்று அங்கங்கே சின்னச் சினன சிருங்கார சிதறல்கள். கட்டுப்படுத்தாத சுதந்திர எல்லைகளை இவர் தனது குழந்தைகளுடன் உரையாடும் உரையாடல்கள் மூலம் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

ஒரு தலைப்புக்கும் அடுத்த தலைப்புக்கும் தொடர்ச்சி இல்லாவிட்டாலும் கூட இவர் கடந்து வந்த பாதையை, இளமைப் பருவ தாக்கத்தை, ஒவ்வொரு முறையும் அமெரிக்காவிலிருந்து இங்கே வந்து திரும்பி செல்லும் போது, என்று ஒவ்வொரு நிகழ்வுகளில் உள்ள விசயங்களை வியப்புக்குறிகளோடு நம்மை இழுத்துக் கொண்டு செல்கிறார். மொத்தத்தில் சுயசரிதம் என்பது போலில்லாமல், சொறிய கிடைத்த வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொள்ளாமல் வயலும் வாழ்க்கையும் போல ஒவ்வொரு தலைப்புக்குள்ளும் கொஞ்சம் கவிதை, சிறிது சுவராஸ்யம், மேலான நகைச்சுவை என்று கலந்து கட்டி ஒவ்வொரு கட்டுரையும் பொங்கல் சோறாக இருககிறது. . 

ஒவ்வொரு தலைப்பிலும் உள்ள விசயங்களை நம்மால் பல இடங்களில் பொருத்திக் கொள்ள முடிகின்றது. நான் வெளிநாட்டு வாழ்க்கையை பார்த்தவன் என்ற முறையிலும் வெளியுலகமே தெரியாத கிராமத்து மனிதர்களின் அப்பாவிகளுடன் பழகிக் கொண்டிருப்பவன் என்ற முறையிலும் இரண்டு எதிர் துருவங்களையும் இயல்பாக ஒரே அச்சில் இவர் எழுத்தின் மூலம் எளிதாக பார்க்க முடிகின்றது. இரண்டுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை சுவையாய் ஆசிரியர் ரசித்து எழுதிய வாசகங்கள் வாசிப்பவனுக்கு தன்னிலை மறக்கச் செய்யும். அவரவர் வாழும் வாழ்க்கையை வாசிப்பவர்களுக்கு கொண்டு வந்து நிறுத்துகிறது. 

சமகாலத்தில் ஆங்கில வார்த்தை கலக்காமல் எழுதுவது ஒரு சவாலாக கருதுபவர்கள், இவரின் பாசாங்கு இல்லாத மொழிநடையை வாசிக்கும் போது  ஆச்சரியப்படக்கூடும். ஒவ்வொரு கட்டுரைகளும் கிறங்கடிக்கும்.துள்ளல் நடையில் அமைந்துள்ளது மெலிதான நகைச்சுவை என்று எல்லா நிலையிலும் அனுபவமிக்க முழு நேர எழுத்தாளர் போலவே நகர்த்தியுள்ளார். ஆனால் அறிமுகத்தில் அவையடக்கமாய் இவர் கூறுவதை நம்ப முடியவில்லை. 

ஒரு தனி மனிதரின் டைரிக்குறிப்புகளை உரிமையோடு அனுமதியோடு படிக்கும் மகிழ்ச்சியை இந்த புத்தகம் தருகின்றது. இது கடந்த 20 ஆண்டுகளாக செல்வராசு எழுதியுள்ள வலையில் எழுதிய அனுபவ பகிர்வுகள். இவரின் எழுத்தின் பிரதிபலிப்பு உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டும். இதன் மூலம் எழுதுபவரின் தனிப்பட்ட வாழ்க்கையை உணர்ந்து கொள்ள முடியும். உங்கள் குழந்தைகள் மீது நீங்கள் அதிக அக்கறை காட்டுபவர் என்றால் அவஸ்யம் இவர் கொடுத்துள்ள பரிந்துரைகளை முரடாய் மிரட்டாதே என்ற தலைப்பில் உள்ள விசயங்களை படித்துப் பாருங்கள்.

கிராமத்து கோவில் திருவிழாக்களின் முஸ்தீபுகள், குழந்தைகளை வளர்க்க முதலில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய உன்னை நீ நம்பு என்ற ஆதார வாக்கியம், கவிதை துணை கொண்டு எழுத்தில் வடித்த வறண்ட குளத்து வாத்துக்கள், உறங்கா நிலவு என்று ஒவ்வொரு கட்டுரையிலும் புதிய நடையில் படைத்துள்ளார். தன் எழுத்தில் எத்தனை விதமாக எழுதிப் பார்க்கமுடியுமோ அத்தனை விதமாகவும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

தான் வாழ்ந்த மணணின் மணத்தை, கிராமத்தை, பெற்றோரை, அவர்களின் சிந்தனைகளை சரம் போல் கோர்த்து மாலையாக மாற்றியுள்ளார். எதையும் விட்டு வைக்கவில்லை. இவர் அம்மா வீட்டு குடிசையில் சொருகி வைத்த கடிதம் முதல் ரயில் நிலையத்தில் அப்பாவுடன் உரையாடும் உரையாடல் வரைக்கும் ஒவ்வொன்றுக்குள்ளும் ஓராயிரம் அர்த்தங்கள்.  உணர்ந்தவர்களுக்கு பொக்கிஷம். 

குறிப்பாக கிராமத்து வாழ்க்கையை அனுபவித்துவிட்டு புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் அடி மனதில் நீக்க முடியாமல் இருக்கும் பொக்கிஷ நினைவுகளை இந்த புத்தகம் சுருதி லயம் மாறாமல் மீட்டெடுக்கின்றது. குறை என்று சொல்ல வேண்டும் என்பதற்காகவே சில இடங்களில் அச்சுக் கோர்ப்பு எழுத்துப் பிழைகளும், புத்தக அட்டை வடிவமைப்பு என்று எரிச்சல் வரவைக்கின்றது. இப்போதுள்ள நவீன (லே அவுட்) அட்டைவடிவ முன்னேற்றத்தில் பதிப்பக மக்கள் செய்துள்ள வடிவமைப்பு மட்டும் தூங்கி வழிவது போல் இருக்கின்றது. பின் அட்டையில் உள்ள ஆசிரியரின் உருவ இளமையைப் போலவே படித்து முடிக்கும் போது நமக்குள்ளும் ஒரு இளமை பரவக்கூடும். 

இளமையாய் உங்கள் நினைவுகள் மாறக்கூடும். 

உண்மையான உழைப்பும், உறுதியான கல்வியும் கொண்டவர்களின் வாழ்க்கை எப்போதும் தோற்றுப் போனதில்லை. இந்த புத்தகத்தை படிக்கும் போது செல்வராசு உணர்த்துவதும் இதே தான்.  என்னவொன்று உங்கள் கல்வியினால்  நீங்கள் பெற்ற உயர்பதவிகளும், கிடைக்கும் செல்வங்களையும் இயல்பாக எடுத்துக் கொண்டால் உங்களால் கூட உங்கள் பழைய நினைவுகளை இது போல எழுத முடியும்.

புத்தகத்தின் பெயர் -  மெல்லச் சுழலுது காலம் 
(அயலகத் தமிழினின் அனுபவக்குறிப்புகள்)
ஆசிரியர் இரா. செல்வராசு

பக்கங்கள் 208
விலை .:  160.00

54./ 13 10 வது தெரு
டிரஸ்டுபுரம், கோடம்பாக்கம்,
சென்னை 24
தொலைபேசி 044 43 54 03 58
மின் அஞ்சல் sales.vadali.gmail.com

பின்குறிப்பு புத்தக ஆசிரியர் தற்போது அமெரிக்காவில் வாசிங்டன் டிசி அருகே வர்ஜீனியாவில் உள்ள ஃபேர்ஃபேக்சு நகரில் தற்போது மனைவி, இரு மகள்களுடன் வசித்து வருகிறார். ஒரு பன்னாட்டுப் பாறைநெய் நிறுவனத்தின் நடுவண் ஆய்வு மற்றும் பொறியியல் பிரிவில் வேதிப் பொறிஞராகப் பணிபுரிந்து வருகின்றார். 

Sunday, August 29, 2010

துளசி கோபால் நியூசிலாந்து புத்தக விமர்சனம்

நடன இயக்குநர் பிருந்தா ஒரு வெகுஜன ஊடகத்தில் நியூசிலாந்து குறித்து பேட்டி கொடுத்து இருந்தார்.  படித்து முடித்து சிரித்துக் கொண்டு அடுத்த செய்திக்கு தாவி விட்டேன்.  அவர் சொன்னபடி பார்த்தால் இந்தியாவில் வாழ்வதற்கே லாயக்கில்லை என்பது போல் இருந்தது. 

அடுத்த விமானம் பிடித்து நியூசிலாந்து சென்று விட்டால் அங்கே ஓடிக் கொண்டு இருக்கும் பாலையும் தேனையும் அள்ளிக் கொண்டு வரலாம் போல் அளந்து விட்டுருந்தார். அதிகபட்சம் பத்து நாள் பயணத் திட்டத்தில் பாடல் காட்சிகள் எடுத்த பிறகு கிடைத்த இடைவெளியில் அங்கங்கே தயாரிப்பாளர் செலவில் சுற்றி ஒவ்வொரு மக்களும் இப்படித்தான் இன்று வரை திரைப்பட மக்கள் ஊதி தள்ளிக் கொண்டு இருக்கிறார்கள். 

பயணித்த நாடுகள் சில என்ற போதிலும் இன்று வரையிலும் இந்த ஐரோப்பா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கண்டத்துக்குள் செல்ல ஏதோ ஒரு கண்டம் என்னை தடுத்துக் கொண்டே இருக்கிறது.  துளசி கோபால் எழுதியுள்ள நியூசிலாந்து என்ற புத்தகத்தை வாசித்து முடித்த போது அங்கேயே கால் நூற்றாண்டு காலம் வாழ்ந்தது போலவே ஒரு எண்ணத்தை உருவாக்கியது.

அரு. நாகப்பன், சோலெ, இதயம் பேசுகிறது மணியன், லேனா தமிழ்வாணன் போன்றவர்களின் பல பயணக் கட்டுரைத் தொடர்களை படித்து இருந்தாலும் இவரின் எழுத்துக்கள் ஒரு வித்யாச அனுபவத்தை தந்தென்னவோ உண்மை. போகிற போக்கில் ஒவ்வொருவரும் பார்த்த பார்வைக்கும், உள்ளேயே வாழ்ந்து அந்த நாட்டைப் பற்றி எழுதும் போது படிப்பவருக்கு நம்பகத்தன்மை யை மேலும் அதிகப்படுத்துகிறது.  அதைத்தான் துளசி கோபால் தான் வாழ்ந்த நியூசிலாந்து நாட்டைப பற்றி முழுமையாக புரிய வைத்து வெற்றி பெற்று உள்ளார். 

ஏற்றுமதி நிறுவனங்களின் முதலாளிகள் வெளிநாடுகள் செல்லும் போது ஒரு மாதத்திற்கு முன்பு அந்த நாடுகள் குறித்து தகவல்களை திரட்டி, அங்கிருந்து மற்றொரு நாட்டுக்குச் செல்லும் வழித்தடங்கள் முதல் தங்குமிடம் வரைக்கும் வலையில் திரட்டிக் கொடுக்கும் வாய்ப்புக்கு பிறகு இப்போது தான் முழுமை யாக ஒரு நாட்டைப் பற்றி புரிந்து படிக்க முடிந்தது, வெறுமே இந்த புத்தக விமர்சனம் என்று ஒரே பார்வையாய் பார்ப்பதை விட சற்று விபரமாக பார்க்க லாம் 

மொத்தம் நான்கு பகுதிகளாக பிரித்துள்ளார். நியூசிலாந்து மண்ணின் மைந்தர்களைப் பற்றி, ஆங்கிலேயர்கள் படிப்படியாக நாட்டை ஆக்ரமித்தது என்ற இரண்டு பகுதிகளுக்குள் நீங்கள் பயணிக்கும் போது சற்று கடினமாக இருக்கலாம்.  ஆனால் நியூசிலாந்து நாட்டில் வாழ்பவர்களுக்கே இத்தனை விபரங்கள் தெரிந்து இருப்பார்களா? என்பது ஆச்சரியம்.  நம்மில் எத்தனை பேர்களுக்கு இந்தியாவின் முழுமையான சரித்திரம் தெரியும்?

இவருக்கென்று ஒரு நடை உள்ளது.  அதைத்தான் எழுத்தாளருக்கென்ற இருக்கும் நடையை உடைத்தெறிந்து எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்.  படிப்பவருக்கு புரிந்தால் சரி என்கிறார். அதைத்தான் இந்த புத்தகம் முழுக்க பாயச முந்திரிப்பருப்பு போல தூவிக்கொண்டே செல்கிறார்.

பார்த்த கேட்ட படித்த அத்தனையும் கலந்து அதன் மேல் நகைச்சுவைப் பொடியைத் தூவி நியூசிலாந்து என்ற சர்க்கரைப் பொங்கலைத் தந்துள்ளார். உண்மையிலேயே நியூசிலாந்து என்ற நாடு சர்க்கரை பொங்கல் தான். பொறாமையா இருக்கு.  யாருக்குத் தான் பிடிக்காது?

90 சதவிகிதம் அரசாங்க பள்ளிகள் மட்டுமே. மனப்பாடமா?  நோ, நோ,  சும்மா விளையாட்டு போல அப்படியே ஜாலியா..........நீங்கள் ஏழ்மை என்றால் உதவித்தொகை அரசாங்கமே கொடுத்து விடும்.  நம்ம மக்கள் அதிலும் மிச்சப் படுத்தி வந்து போகும் செலவிற்கு வைத்துக் கொள்ள முடியும் என்றால் தொகையின் அளவை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகின்றேன். ஆனால் இதையெல்லாம் விட ஒரு ஆச்சரியம்.  மக்கள் தொகையே 40 லட்சம்.  ஆனால் வளர்ப்பு ஆடுகளின் எண்ணிக்கை 480 லட்சம்.  எப்பூடி?
சிங்கப்பூர் மாதிரியே புள்ள குட்டிய பெத்துக்கிங்கன்னு அரசாங்கம் கெஞ்சாத குறை தான். அதுவும் எப்படி?  வயித்துப்புள்ள காரின்னா அரசாங்கம் கொடுக்கற ராஜமரியாதை ரொம்பவே அதிகம்.  உச்சகட்டமாய் புள்ளைக்கு ஆய் போனா கழுவி துடைச்சு விடுற வரைக்கும் அநியாயத்திற்கு வயித்தெரிச்சல் வர வழைக்கிற அரசாங்க அமைப்பு.

ஆனால் புருஷன் பொண்டாட்டிங்றதெல்லாம் கெட்ட வார்த்தை.  எல்லாமே பார்ட்னர் தான். நம்ம ஊரு கவுன்சிலருக்கு கட்டிங் வசூலிக்கிறது ஒரு தலையாய கடமை போல அங்குள்ள நகர கவுன்சிலுக்கு மண்டையிடி சமாச்சாரங்றது குளிர்காலத்துல உஷ்ணத்துக்காக கட்டைகளை எரிக்கும் போது வர்ற புகையை போக்க நடவடிக்கை எடுப்பது தான். 

விமான போக்குவரத்துக்கு இடைஞ்சலா இருக்க இப்பொழுதெல்லாம் ஹீட்டர் அந்த பிரச்சனையை போக்கிவிட்டது.  அந்த கவுன்சிலர் நிச்சயம் கூட ரெண்டு பெக் போட்டு ஓய்வு எடுத்துக்கிட்டு இருக்கக்கூடும்.

சிங்கப்பூர் மக்களின் ஆங்கில உச்சரிப்பு போல இங்கும் ஒரு வினோத ஆங்கிலம் புழங்குகிறது.   காரணம் பக்கத்தில் ஆஸ்திரேலியா. குளிர் காலத்துல உங்களுக்கு போற வாய்ப்பு இருந்தால் படங்களில் கதாநாயகன் பொறாமைபடுத்திய பனிச்சறுக்கு விளையாட்டு விளையாடிப் பார்க்க வாய்ப்புண்டு. என்னவொன்று அந்த குளிருக்கு தாக்குப்பிடிக்க வேண்டும்.  ச்சும்மா அதிகமில்லை.  மைனஸ் கீழே போய் நிற்கும்.  வெடவெடன்னு குளிரத்தாங்குவீங்களா இல்லை குளிர போக்க வைக்க பார்ட்டனர தேடுவீங்களா? 

மற்றொரு கொடுமை இந்த நாட்டில் உண்டு.  நம்மூரு காவல் நிலையத்திற்குள் உள்ளே நுழைந்தால் ஒரு வாசகம் உங்களை வரவேற்கும். " உங்கள் நண்பன் காவல் துறை" ,  உள்ளே போனா என்ன மரியாதை கிடைக்கும்ங்றது  உங்களுக்கேத் தெரியும்.  உண்மையிலே இங்குள்ள காவல் துறை அத்தனை பேர்களும் அரிச்சந்திர பரம்பரைபோலவே இருக்கிறார்கள். எழுதிய ஆசிரியர் தான் கண்டுபிடித்த மற்றொருவருடைய கடவுச்சீட்டை கொண்டு போய்ச் சேர்த்த ஒரு நகைச்சுவையை படித்தால் ஒன்று நீங்க நம்பமாட்டீங்க.  அல்லது பூகோள சொர்க்கம்ன்னு சொல்லத் தோன்றும்.

எந்த வாகனமும் பெரும்பாலும் ஹாரன் சப்தம் அடித்து காது சவ்வை கிழிப்ப தில்லை. சாலை விதிகளை மீறி நீங்கள் ஏதாவது டகால்டி வேலை செய்ய நினைத்தால் உங்கள் முகம் ஏதோ ஒரு புகைப்பட கருவியில் தெரிந்து உங்கள் கூலியை கொண்டு போய் கொட்ட வேண்டியது தான். சட்டம் தன் கடமையைச் செய்யத் தொடங்க எந்த வட்டம் சதுரமும் வந்து பரிந்து பேச முடியாது.   காரணம் அரசியல்வாதிகள் கூட கடைத் தெருவில் வந்து காய்கறி முதல் சாமான்கள் வாங்குவது வரை சர்வசாதரணம்.  உங்களுக்கு இந்திய சமையல் நன்றாகத் தெரியுமா?  அப்படியே விசாரித்து மெல்ல கிளம்பி விடுங்க.  அங்கே போய் கடைதிறக்க வாய்ப்பு இருந்தால் துட்ட அள்ளி குவித்து விடலாம்.  அந்த அளவிற்கு இந்திய உணவகங்கள் அட்டகாசமா பெருகிகிட்டுருக்கு.

ஆனால் குடும்பத்தோடு நீங்க வசிக்கனும்ன்னு நினைத்து போனா உங்க புள்ளையங்களை நீங்க மட்டுமல்ல சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் கூட அடிக்க முடியாது.  பயபுள்ளைங்க ஊரக்கூட்டி சட்டத்துக்கு முன்னால நிறுத்தி விடுவாங்க.  பசங்க ஆறடி இருக்க வாத்தியார் என்ன செய்து விட முடியும்?  எட்டி எட்டி பார்த்து விட்டு எட்டிப் போய்விட வேண்டியதுதான். 16. 17 வயதில் தொலைக்காட்சியிலும் பசங்க மத்தியிலும் சூடான விவாதம் என்ன தெரியுமா?  பாதுகாப்பான உடலுறவு.  நாம மாத்ருபூதம் பேசிய போது அவர் சொல்ல வந்ததை விட்டுட்டு வேறு ஏதும் சொல்வாரான்னு பார்த்த நாம் இன்னும் போக வேண்டிய தூரம் ரொம்ப இருக்கு.
இதெல்லாம் விட ஆச்சரியம் துளசிகோபால் குடியிருந்த பகுதியில் குடியேறிய முதல் தமிழ் குடும்பமே இவங்க தான்.

தொடர்ந்து பயணிப்போம்.....................

வெளியீட்டாளர்கள் 

சந்தியா பதிப்பகம்
ப,எண் 57 53வது தெரு,
9 வது அவென்யூ,
அசோக் நகர்,
சென்னை 600 083
தொலைபேசி 044 24 89 69 79
விலை 200 ரூபாய்.
பக்கங்கள் 352

ஆசிரியர் வலைதள முகவரி