சென்ற ஆண்டு (2009) தமிழ்மணம் அறிவித்த விருதுகளுக்காக என்னை நண்பர் அழைத்து எனக்கு இதை புரியவைத்தார். எப்போதும் போல அவர் சொன்னபடியே சேர்த்துவிட்டு மறந்து போய்விட்டேன். ஆனால் தேர்வு நிலைக்கு வரவில்லை. அப்போது உள்ளடி வேலைகளும் இருந்தது என்பதை அதன் பிறகு பலரும் புரியவைத்தார்கள். ஆனால் இந்த முறை தமிழ்மணம் பெரும்பாலும் அது போன்ற உள்ளடி வேலைகளை அடக்கி ஒடுக்கியதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் உண்மைத்தமிழன் போட்ட கூப்பாட்டில் தமிழ்மணத்தில் ஓட்டுப் போட நினைக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையும் கதவைத் தட்டி உள்ளே வரலாமா? என்கிற நிலை வரைக்கும் கொண்டு வந்துள்ளது.
இந்த முறை இதில் நிச்சயம் ஜெயிக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் யோசித்த போது என் மனதில் வந்து போனவர்கள் ஐந்து பேர்கள். வலைபதிவில் வெவ்வேறு பரிணாமத்தில் தங்கள் பங்களிப்பைச் செய்து கொண்டுருப்பவர்கள்.
எனக்கு இடுகையில் உள்ள தொழில் நுட்ப அறிவு குறித்து எப்போதும் ஆர்வம் இருப்பதில்லை. இன்றைய தினத்தில் ஓரளவிற்கு இதன் தொழில் நுட்பத்தை உருண்டு புரண்டு கற்றுக் கொண்டாலும் பலரின் தளங்களைப் பார்க்கும் போது எனக்கு வியப்பாகவே இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓய்வு நேரங்களில் எழுதுவதைத் தவிர வேறெதிலும் நான் கவனம் செலுத்துவதில்லை.
காரணம் "நம்மால் எது முடியுமோ அதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்" என்பதை நான் இருக்கும் ஏற்றுமதி தொழில் வாழ்க்கையைப் போலவே இந்த வலையுலகத்திலும் கொள்கையாகவே வைத்துள்ளேன். இங்கு மற்றொரு பிரச்சனையும் உண்டு.
அதிவேக இணைப்பை சமீபத்தில் பிஎஸ்என்எல் ல் கேட்டு வாங்கிய போதும் கூட வீட்டில் உள்ள இணையத்தொடர்புக்கு அடிக்கடி சளி காய்ச்சல் இருமல் தொந்தரவு இயல்பாக வந்து விடுகின்றது. ஏர்டெல் போன்ற கொள்ளை கொலைகார கூட்டத்திடம் போய் மாட்டிக் கொள்வதை விட அரசாங்கம் எவ்வளவோ பரவாயில்லை. இதன் காரணமாகவே எனக்கு வலையுலக நகர்வலம் குறைவாகவே இருக்கிறது.
இந்த போட்டிக்கு எப்படி கலந்து கொள்ள வேண்டும்? என்பதை நான் தேர்ந்தெடுத்த ஐந்து பேர்களிடமும் கேட்ட போது மூன்று பேர்கள் தங்கள் அறிவுரையைச் சொன்னார்கள். ஒருவர் வீடுவரை வந்து ஒரு விருதைக் கொடுத்து விட்டு வேறெதும் என்னிடம் கேட்காதே!!!!! என்பது போல் நகர்ந்து போய்விட்டார். ஒருவர் இப்போது பின்னூட்டம் கூட அதிகம் போடுவதில்லை. காரணம் அவரின் வேலைப்பளூவை நான் புரிந்தே வைத்திருக்கின்றேன். ஆனாலும் அவரும் சில புரிந்துணர்வுகளை தெரியப்படுத்தினார்.
கூட்டிக் கழித்துப் பார்த்தபோது கடைசியாக ஒருவர் கொடுத்த அறிவுரையை கரம் சிரம் புறம் பார்க்காமல் அவர் சொன்னபடியே மூன்று தலைப்புகளையும் சேர்த்துவிட்டு ஒதுங்கி விட்டேன். காரணம் அவரின் ஆளுமையை நான் அறிந்ததே. இப்போது வெற்றியும் கிடைத்துள்ளது.
இரண்டு தலைப்புகளுக்கும் இரண்டாவது பரிசு கிடைத்துள்ளது. இதில் ஒரு ஆச்சரியம்?
எங்க ஊரு காரவுக சுடுதண்ணி. ஒன்னுமன்னா பழகிறவுக நம்ம செந்திலாண்டவர். (அவருக்கு இந்த வார்த்தை பிடிக்காது?) இரண்டு பேருக்கிட்டத் தான் தோத்துருக்கேன். சுடுதண்ணி திடீர்ன்னு வருவாக. ஒரு சுனாமிய உருவாக்கிட்டு போயிடுவாக. ஆனா நம்ம செந்திலாண்டவரை நான் சக போட்டியாளராக மனதில் வைத்துக் கொண்டு வேறொரு சமயத்தில் அவரை முந்த வேண்டும் என்று சமயத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டுருக்கின்றேன். அதற்கான வாய்ப்பு விரைவில் வரும் போல தெரியுது. தமிழ் வலையுலகத்தில் சிறப்பான வீச்சை உருவாக்கிய செந்திலின் "எங்கே செல்லும் பாதை" தளம் குறித்து எப்போதும் எனக்கொரு கர்வமான பொறாமை மற்றும் பெருமையுண்டு.
உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றவர்களுக்கும், வாழ்த்துரைத்தவர்களுக்கும், இந்த தலைப்பை வழிமொழிந்தவர்களுக்கும், மின் அஞ்சல் வாயிலாக என்னுடன் முன்பின் அறிமுகம் இல்லாத போதும் ஒவ்வொரு சமயத்திலும் இது குறித்து தெரிவித்த நல் இதயங்களுக்கும் தேவியர் இல்லத்தின் நன்றி.
நான் கவனித்த வரையிலும் விதி ராஜீவ் மதி பிரபாகரன் என்ற தலைப்பு தினந்தோறும் எவரோ சிலர் வந்து படித்துக் கொண்டுருந்தார்கள். சற்று நம்பிக்கை இருந்தது. இந்த சமயத்தில் இந்த விசயங்களை எழுத உதவிய முன்னாள் புலனாய்வு அதிகாரி டி.ஆர்.கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி என்ற வார்த்தையை எழுதி வைக்கின்றேன். அவர் எழுதிய புத்தக அறிவை வைத்துக் கொண்டு வெகு ஜன ஊடகத்தில் வந்த தகவல்களை திரட்டி மொத்தமாக எழுதிப் பார்த்த (தொடர்) தலைப்பு இது.
திருப்பூர் குறித்து நான் எழுதிய விசயங்கள் அத்தனையும் இன்று உண்மையாக நடந்து கொண்டுருக்கிறது. ஆனால் இன்னமும் எவரும் இதன் விபரீதத்தை உணராமல் ஆட்சியாளர்களின் அயோக்கியதனத்தை எவரும் எதிர்க்கத் தயாராக இல்லை என்பது தான் இன்றைய எதார்த்த உண்மை.
இதுவொரு வெற்றி என்று கருத முடியவில்லை. ஒரு அங்கீகாரம் அல்லது என்னை சரியான முறையில் மற்றவர்களுக்கு உணர்த்தியுள்ளேன் என்பதாக எடுத்துக் கொள்கின்றேன்.
எழுதுபவனுக்கு தன் எழுத்துக்களை கொண்டு சேர்ப்பதும் முக்கியம். அதற்காக எந்த லாபி வட்டத்தையும் நான் உருவாக்கவில்லை. உருவாக்கவிரும்புவதும் இல்லை. உணர்ச்சி, உணர்வு இந்த இரண்டு வார்த்தைகளிலும் உணர்ச்சிக்குத் தான் இந்த வலையுலகத்தில் அதிக முக்கியத்துவம் விரைவில் கிடைக்கின்றது.
நீடிக்குமா? என்பதை நீங்கள் தான் புரிந்து கொள்ளவேண்டும்.
இந்த முறை போட்டியில் கலந்து கொண்ட பலரின் தலைப்புகளையும் பார்க்கும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக மிக அற்புதமாக எழுதியவர்களை சுட்டி கொடுத்து சுட்டித்தனமாக பாராட்டமுடியும். ஆனால் என்னைத் தெரிந்தவர்கள், என் எழுத்தைப் படிப்பவர்கள், என் நலம் விரும்பிகள் என்ற இந்த மூன்று வட்டத்திற்குள் ஏதோவொரு வட்டத்தில் பலருக்கும் நான் பிடித்தமானவனாக இருப்பதை உணர்ந்து கொண்டேன். இது போக இந்த தலைப்புகள் இறுதிப்பார்வைக்கு சென்ற போது இந்த தலைப்புக்குப் பின்னால் உள்ள உழைப்பை உணர்ந்து இருக்கக்கூடும்.
என் நெருங்கிய நண்பர் நிகழ்காலத்தில் சிவா கொடுத்துள்ள சுட்டியைப் படித்துப் பாருங்கள். இத்தனை பேர்களையும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அணைவரும் படித்திருக்க முடியுமா?
மற்றொரு ஆச்சரியம்??
நானும் இந்த முறை தமிழ்மணம் நடுவர் குழுவில் ஒருவனாக தேர்வாகியிருந்தேன். ஆனால் தமிழ்மணம் நிர்வாக குழுவினர் என்னை தேர்ந்தெடுக்க காரணம் எதுவாக இருந்தாலும் தொடக்கத்தில் என் தளத்தின் சுட்டியை இந்த தமிழ்மணத்தில் இணைக்க முடியாத ஒரு சூழ்நிலையும் உருவானது. நான் ஏற்கனவே எழுதிக் கொண்டுருந்த வேர்ட்ப்ரஸ் சுட்டி என்னிடம் வந்து சேர்ந்த போது நிச்சயம் நாம் கலந்து கொள்ள முடியாது என்றே முடிவு செய்து விட்டேன். ஆனால் தமிழ்மண நிர்வாக குழுவின் சட்டதிட்டங்கள் உடைப்பது சாதாரணமானதல்ல என்பதை நான்கு நாட்கள் நான் தொடர்ந்து கொடுத்த மின் அஞ்சல் புரிய வைத்தது.
காரணம் தமிழ்மணத்தின் தானியங்கி திரட்டி அதன் போக்கில் மட்டுமே செயல்படும். உள்ளே புகுந்து உழப்ப முடியாது போல. அதன் பிறகே இந்த இடுகைக்கான சுட்டி வரவேண்டிய நேரத்தில் வந்து சேர்ந்தது. அந்த நாட்கள் மனம் பெற்ற உளைச்சலின் மூலம் புதிய நோக்கம் உருவானது.
ஒருவேளை இந்த முறை ஏதோவொரு தலைப்புக்கு அங்கீகாரம் கிடைத்தாலும் அடுத்த முறை தமிழ்மணம் விருதுகளில் கலந்து கொள்ள வேண்டியதில்லை என்பதை முடிவாக வைத்திருந்தேன்.. எத்தனையோ புதியவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்ள நாம் தமிழ்மணம் விருதுகளில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று யோசித்ததை இப்போது இதன் மூலம் உறுதிப்படுத்துகின்றேன்.
வினவு மற்றும் கோவிகண்ணன் இந்த வருடம் உருவாக்கிய பாதையிது. அடுத்த ஆண்டு தமிழ்மணம் 2011 போட்டிகளில் கலந்து கொள்ளப் போகும் புதிய இணைய எழுத்தாளர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
இந்த முறை வெற்றி பெற்ற சக தோழமைகளுக்கு என் வாழ்த்துகள்.
முகிலன் கூகுள் பஸ்ஸில் தமிழ்மணம் போட்டியில் நடுவர்களாக இருந்தவர்களின் தேர்வான இடுகையைப்பற்றி குறிப்பிட்டு இருந்தார். இந்த சமயத்தில் இது குறித்து சில வார்த்தைகள்.
இரண்டு பிரிவுக்கான தலைப்பு எனக்கு வநது சேர்ந்தது. அதில் உள்ள இடுகைகளை என் பார்வையில் விமர்சித்து சாதக பாதகத்தை பட்டியலிட்டு அதற்கு தனியாக மதிப்பெண்கள் கொடுத்து அனுப்பி இருந்தேன். ஆனால் நான் தேர்ந்தெடுத்த தலைப்பில் ஒன்று மட்டும் வந்துள்ளது. ஆக மொத்தம் நான் தேர்ந்தெடுத்த தலைப்பு இந்த குழுவில் இருந்த மற்ற எவருக்கோ போய் இருக்கக்கூடும். இன்னும் சிலருக்குக்கூட போயிருக்கலாம். அவர்களின் மதிப்பெண்கள் என்னுடைய மதிப்பெண்கள் இரண்டும் சேர்ந்து பொது மதிப்பெண்கள் கிடைத்து இருக்கும்.
இதற்கு மேலே தமிழ்மணம் நிர்வாக ஒருங்கிணைப்பு குழு உருவாக்கும் தராசுப் பார்வை. ஆக மொத்தம் ஓட்டை உடைசல் இல்லாத பாத்திரம் போன்ற இந்த முறை தமிழ்மணம் நிர்வாகத்தினரால் உருவாக்கப்பட்டுள்ளது என்றே கருதுகின்றேன்.
மற்றொரு ஆச்சரியம் ஆன்லைனில் வந்த அந்த பயபுள்ள கூட மூச்சு கூட விடாமல் அப்படியோ......... அப்படியா........ என்னங்க சொல்றீங்க......... என்று நழுவிப்போன போது ஆச்சரியமாக இருந்தது. இந்த சமயத்தில் புத்தக கண்காட்சியில் சூப்பர் ஸ்டார் போல பட்டையைக் கிளப்பிய என்னை பட்டை தீட்டிக் கொண்டுருக்கும் துளசி கோபால் கூட முச்சு விடவில்லை..
என்னடா இவங்கள எல்லாம் தமிழ்மணம் நடுவர் குழுவில் தேர்ந்தெடுக்காமல் நம்மள கொண்டு போய் வடிவேல் வலியக்க ஜீப்ல ஏறிப்போன மாதிரி ஏத்தியிருக்காங்களேன்னு யோசிச்சேன்.
ஆனால் இந்த நடுவர் குழு பட்டியலைப் பார்த்த போது தான் புரிந்து கொண்டேன். ஆக மொத்தம் நடுவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தமிழ்மணம் எந்த மாதிரியான திண்டுக்கல் பூட்டை போட்டுள்ளது என்பதை உணர்ந்து கொண்டேன். .
தேவியர் இல்லத்துக்கு இரண்டு தளங்கள். வீட்டில் இரட்டை குழந்தைகள் கிடைத்ததும் இரண்டு பரிசுகள். ஏன் செந்திலு ஒன்னு பெரிசா ரெண்டு பெருசா?
போதும் மக்களே.
உங்கள் ஆதரவுக்கும், அக்கறைக்கும் தமிழ்மணத்திற்கும் என் நன்றி.
இந்த பொங்கல் திருநாளை முன்னிட்டு மூன்று நாட்கள் எதற்கும் அவசரப்பட வேண்டிய அவஸ்யமில்லாத விடுமுறை கிடைத்துள்ளது. கடந்து போன பல நாட்கள் தூங்கும் போது சொல்லமுடியாத மந்திரக்கதைகளை இனிமேல் இந்த விடுமுறை நாளில் சொல்லவேண்டும் என்ற உத்தரவு மகாராணிகளிடம் இருந்து வந்துள்ளது.
அப்புறம் மறக்காம நம்ம இராமநாதபுரம் பக்கம் வந்து பாண்டியனின் ராஜ்யத்தில் உய்யலாலா என்று வந்து பாடிட்டு போங்க.
