Wednesday, August 08, 2018

மு.க. - வாழ்வும் மரணமும்

அன்றுதான் கருணாநிதி முதன்முறையாகப் பேசப் போகிறார்.

``என்ன கலைஞரே! இன்று என்ன பேசப்போகிறீர்கள்?” என்று கேட்கிறார் நெடுஞ்செழியன். ‘`நங்கவரம் விவசாயிகள் பிரச்னை பற்றிப் பேசப் போகிறேன். ‘நாடு பாதி; நங்கவரம் பாதி’ என்று நிலம் வைத்துள்ளார் அந்த நிலச்சுவான்தார். உள்ளூர் மக்களுக்குக் கூலி அதிகம் கொடுக்க வேண்டும் என்று வெளியூர் ஆட்களை வைத்து வேலை வாங்குகிறார். அவர்களுக்கும் ஒழுங்கான கூலி இல்லை. இதை இந்த அரசின் கவனத்துக்குக் கொண்டுவரப் போகிறேன்” என்றார் கருணாநிதி. கையேர் வாரம், மாட்டேர் வாரம் என்ற கூலி முறை பற்றியும், இவர்களுக்காகப் போராடிய கவுண்டம்பட்டி முத்து என்ற விவசாயி பற்றியும் விலாவாரியாகச் சொன்னார்.

சாப்பிட்டு முடித்ததும் வெற்றிலை போட்டுக் கொண்டே தன் அருகில் இருந்த ஏ.வி.பி. ஆசைத்தம்பியிடம் அண்ணா சொன்னார்: ‘`நாவலருக்குக் கருணாநிதி விளக்கம் அளித்தான் என்றா நினைக்கிறாய். கருணாநிதி இன்று சட்டசபையில் பேசப் போகிறான். அதற்காக ஒத்திகை பார்க்கிறான்” என்றார். மொத்தப் பேரும் சிரித்துவிட்டார்கள். ‘`இல்லைண்ணா’’ என்று நெளிந்தார் கருணாநிதி. வாயில் வழிந்த எச்சிலைத் துடைத்தபடி, ‘`சட்டசபையில் பேச இவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். தயார் நிலையில் இருந்து பேசும் பேச்சே தரமான பேச்சாக இருக்க முடியும்” என்றார் அண்ணா. புறப்பட்டார் கருணாநிதி.

“கவர்னர் உரையை நான் போற்றவும் வரவில்லை. தூற்றவும் வரவில்லை. என் கருத்துரையை ஆற்றவே வந்துள்ளேன்” என்று ஆரம்பித்து நங்கவரம் விவசாயிகள் பிரச்னைக்கு வந்து... தனது பேச்சை முடித்தார். முடித்ததும் தான் பேரவைத்தலைவர் கிருஷ்ணாராவ் அந்தத் துண்டுச் சீட்டை அனுப்பினார். அது காங்கிரஸ் ஆட்சிக் காலம். காமராஜர் முதலமைச்சர். ‘`நான் கருணாநிதி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அன்று பார்த்து வியந்தேன்” என்று அன்றைய அமைச்சரும், பின்னர் முதலமைச்சராகவும் ஆன பக்தவத்சலம் சொன்னார். முதன்முறை பேசும் போது எப்படி ஒத்திகை பார்த்துப் போனாரோ, அப்படித்தான் ஒவ்வொரு நாளும் போனார்.

“சட்டசபைக்குப் போகும்போது கற்றுக்கொள்ளும் மாணவனாகவும் கற்பிக்கும் ஆசிரியனாகவும் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்” என்றார் கருணாநிதி. அப்படித்தான் இருந்தார் மாணவனாக, ஆசிரியனாக. கருணாநிதி ஒரு சுயம்பு. அதனால்தான் ஒரே நேரத்தில் இரண்டுமாக அவரால் இருக்க முடிந்தது.
மணிக்கணக்கில் பொதுக்கூட்ட மேடையில் பேசலாம். 

ஆனால், சட்டசபையில் வண்டி ஸ்டார்ட் ஆகாது. அது வேறு களம். இரண்டிலும் வென்றவர்கள் ஒரு சிலர்தான். அதில் ஒருவர் கருணாநிதி. கேள்வியை முடிக்கும் முன் பதில் சொல்வதும், பதில் சொன்னதும் எதிர்க் கேள்வி தொடுப்பதும் கருணாநிதி பாணி.

“வெளிநாட்டிலிருந்து வருபவர்கள், எங்களைப் பார்த்து ‘சிறப்பான ஆளுங்கட்சி’ என்று பெருமைப்படுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களைப் பார்த்துக் கேவலமாக நினைக்கிறார்கள்” என்று முதலமைச்சர் பக்தவத்சலம் சொன்னதுமே, ‘`இவ்வளவு கேவலமானவர்களை வென்றது உங்களுக்குப் பெருமையா?” என்று திருப்பி அடித்தார் கருணாநிதி. “தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே” என்று பேசிக்கொண்டிருந்த கருணாநிதியைப் பார்த்து, “கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றி எதற்குக் கவலை?” என்றார் டி.என்.அனந்தநாயகி. “கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்?” என்று துடுப்பைப் போட்டார் கருணாநிதி.

“அடைந்தால் திராவிட நாடு; இல்லையென்றால் சுடுகாடு... என்றீர்களே! இப்போது சுடுகாட்டிலா உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார் கருத்திருமன். அவர் உட்காருவதற்குள் கருணாநிதி பதில் சொன்னார்: ‘`இல்லை. உங்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறோம்!”

அன்றைய தினம் வெளியான இதழ் ஒன்றில் கருணாநிதியைக் கிண்டல் செய்து கவிதை ஒன்று வெளியானது.

“தமிழ் எனும் தங்கச் சீப்பு உங்கள் கையில்
இருந்தும் என்ன பயன்?
நீங்கள்தான் ஏற்கெனவே
தமிழர்களை மொட்டையடித்து விட்டீர்களே!” -

இந்தக் கவிதையை தமிழகச் சட்டமன்றத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்போது காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் சொன்னார். உடனே எழுந்த கருணாநிதி, ‘`தம்பி! என் கையில் இருப்பது உன்னைப் போன்ற சுருள் முடிக்காரர்களுக்கு சீவி விட” என்று ஐஸ் வைத்தார். பீட்டருக்கு நாக்கு எழுமா அதன் பிறகு? கேள்விக்கு உள்ளே இருந்தே பதிலைச் சொல்வதும், பதிலுக்குள் இருந்து அடுத்த கேள்வியைத் தோண்டுவதும் கருணாநிதிக்குக் கைவந்த கலை.

அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை எழுத்துக்கு எழுத்து கவனிக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியின் கடைசி சட்டமன்றக் கூட்டத் தொடர் அது. பக்தவத்சலம் முதலமைச்சர். இன்னும் சில மாதங்களில் நடக்கப்போகும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வரப் போகிறது என்ற நிலைமை. கருணாநிதி பேசும்போது, ‘`ஆண்டவன் என்ற ஒருவன் இருந்து நான் அவனைச் சந்தித்தால் அவனைப் பார்த்து, ‘முதலமைச்சரைப் போன்று சுறுசுறுப்பைக் கொடு’ என்றுதான் வரம் கேட்பேன். அவர் முதலமைச்சராக இருந்து ஓர் ஆளுங்கட்சித் தலைவர் எப்படிச் செயல்பட வேண்டும் என்று எங்களுக்கு இதுவரை கற்றுக்கொடுத்தார்” என்றார். காங்கிரஸ் உறுப்பினர்களே மகிழ்ச்சி அடைந்தார்கள். 

கருணாநிதி ரிவர்ஸ் கியர் போட்டார். “அதுபோல் அடுத்த தடவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து ஓர் எதிர்க்கட்சித் தலைவர் எப்படிப் பணியாற்ற வேண்டும் என்பதை அவர் எங்களுக்குச் சொல்லித் தர வேண்டும்” என்றார். தி.மு.க-வினர் மகிழ்ச்சியில் குதித்தார்கள். சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு முன்பே கதை- வசனகர்த்தாவாக இருந்ததால், கருணாநிதிக்கு வாதம் - எதிர்வாதம் இரண்டும் கைவந்த கலையானது.

கருணாநிதியின் அரசியல் மிகக் கடுமையான விமர்சனத்துக்குரியது.அவரது பொதுவாழ்க்கையில் களங்கம் உண்டு. ஆனால் சட்டமன்றத்தில் ஒரு முதலமைச்சர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக அனைவரும் படிக்க வேண்டிய பாடப் புத்தகமாக, 1997-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கைக்கு அவர் அளித்த பதிலுரை இருந்தது. தனக்கு முன்னால் பேசிய 40 பேருக்கும் பதில் சொல்லி இரண்டு மணி நேரத்துக்கு மேல் அவர் அளித்த பதில் தான், சட்டமன்ற விவாதத்தை ஒருவர் எப்படி கவனிக்க வேண்டும், மதிப்பளிக்க வேண்டும் என்பதைக் கற்றுத்தந்தது. அதேபோல், ஓர் எதிர்க்கட்சித் தலைவர் எப்படிப் பேச வேண்டும் என்பதை எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது கருணாநிதி பேசிய பேச்சு உணர்த்தும். பூம்புகார் நிறுவனத்துக்காக பல்கேரியா பால்டிகா கப்பல் வாங்குவதில் என்னென்ன விதி மீறல் என்பதை 20-க்கும் மேற்பட்ட ஆதாரங்களுடன் ஒவ்வொன்றாக அடுக்குவார் கருணாநிதி. இந்தப் பேச்சுக்குப் பிறகுதான் கப்பல் வாங்குவதை நிறுத்தினார் எம்.ஜி.ஆர்.

1996-2001 அவரது முதலமைச்சர் காலமும், 1980-84 அவரது எதிர்க்கட்சித் தலைவர் காலமும் தி.மு.க-வினருக்கு மட்டுமல்ல; அரசியல் ஆர்வமுள்ள அனைவருக்குமான சட்டசபைப் பாடம். நேர்மறை, எதிர்மறை என எல்லா பாடங்களையும் நடத்திவிட்டு பழுத்த இலையாய்ப் படுத்திருக்கிறார் கலைஞர்.

-ப.திருமாவேலன்
















Tuesday, July 31, 2018

நாட்டு நடப்பு - ஆரோக்கிய குறிப்புகள் - 16

ஊரில் நடக்கு விசேடங்களில் கலந்து கொள்ளும் போது உள்ளே நுழைந்ததும் முக்கியமான நபர்களிடம் முகத்தைக் காட்டி விட்டு சமையல் நடக்கும் இடத்திற்குச் சென்று விடுவதுண்டு. என்னைத் தேடிக் கொண்டு வருபவர்களிடம் எப்போதும் அம்மையார் சமையல்கட்டு எங்கே இருக்கோ? அங்கே போய்ப் பாருங்கள்? என்பார். 

காரணம் உள்ளே நடக்கும் விவாதங்கள், வாக்குவாதங்கள், சடங்கு, சம்பிரதாயங்கள், விட முடியாத கொள்கை கொண்டவர்கள், மாற விரும்பாத மனிதர்கள், இன்னமும் 1947 க்கு முன்னால் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் எவரையும் புண்படுத்த வேண்டிய அவசியமிருக்காது. 

ஆனால் இந்த முறை வரவேற்பு மேஜையின் முன்பே கட்டாயப்படுத்தி அமர வைத்து விட்டார்கள். தட்டில் இருந்த பாதிக் கல்கண்டு, பழங்கள், காணாமல் போவதைப் பார்த்து மகள் நீங்க உள்ளே போயிடுங்க. இந்தப் பக்கமே வராதீங்க என்று புகைப்படம் எடுத்து என்னை அனுப்பி வைத்து விட்டார். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தனிப்பட்ட நபர்கள் சமையில் கலக்கோ கலக்கு என்று தூள் கிளம்புகின்றார்கள். 

அறந்தாங்கி தாண்டி கீரமங்கலம் பட்டுக்கோட்டை வரைக்கும் மட்டன் சாப்பாட்டுக்கு சொத்தே எழுதி வைத்து விடலாம் போலிருக்கும். அதே போலப் பேரையூர், நச்சாந்துபட்டி பக்கம் சின்னவெங்காயம் முருங்கைக்காய் போட்டு பொங்கலுக்குச் சம்பார் வைத்திருந்தார்கள். யார் என்று கேட்டு சமையல் கட்டுப் பக்கம் சென்றேன். சமையல் செய்பவர்கள் அனைவரும் 25 வயதுக்குள் இருந்தார்கள். ஆச்சரியமாக இருந்தது. யார் சம்பார் வைத்தது என்று கேட்டு அவருக்குக் கைகுலுக்கி நூறு ரூபாய் தாளை வைத்துக் கொள் என்றேன். 

மிரண்டு போய்விட்டான். 

உங்க வார்த்தையே போதும் அண்ணே என்றான்.

•••••••••••••••••••••••••••

2009 ஆம் ஆண்டு ஜுலை மாதத்தின் தொடக்கத்தில் முதல் முறையாக வேர்ட்ப்ரஸ் தளத்தில் எழுதத் தொடங்கினேன். என் எழுத்துப் பயணத்திற்கு 10 வது ஆண்டு தொடங்குகின்றது. 800 பதிவுகளை கடந்து வந்துள்ளேன்.  

முதல் பதிவில் விமர்சனம் செய்த சுந்தர் நேற்று வரைக்கும் என் எழுத்தை படித்துக் கொண்டிருக்கின்றார் என்பதே எனக்குப் பெருமையாக உள்ளது.  இருவரும் கருத்து ரீதியாக எதிரெதிர் துருவமாக இருந்தாலும் கூட. நன்றி சுந்தர்ராமன்.

மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மின் நூலுக்கான வாசகர்களும், பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவுகளுக்கான வாசிப்பாளர்களும் அறிமுகம் ஆகி உள்ளனர்.  

எழுதத் தொங்கியது முதல் இன்று வரைக்கும் யார் யாரோ வந்தார்கள்.... சென்றார்கள். நெருங்கிய தொடர்பிலும் இருக்கின்றார்கள். முதல் பதிவு முதல் இன்று வரையிலும் வாசிக்கும் நண்பர்களும் உள்ளனர். 

விமர்சனப் பெட்டியை இன்று வரையிலும் பூட்டி வைத்தது இல்லை.

சமூகத்தைப் பாதிக்கும் மனிதர்களின் உண்மையான குணங்களை எப்போதும் விமர்சிக்க தவறியதே இல்லை. 

ஊருக்கு ஒவ்வொருமுறையும் செல்லும் போது நான் சந்திக்கும் உறவினர்களின் ஆரோக்கியம் அதிக கேள்விகளை எழுப்பியுள்ளது, என்னுடன் பணிபுரிபவர்கள், உடன் பழகும் மனிதர்களின் ஆரோக்கியத்தைப் பார்க்கும் போதும் நான் இன்றும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் வாழ்வதற்கும் காரணம் என் எழுத்துப் பயணம் மட்டுமே என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. மனதில் உளைச்சல் இல்லாத போது உடலெங்கும் ஆரோக்கியம் நீடிக்கும் என்பது நான் கண்ட உண்மையாகும்.

இன்று வரையிலும் என் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் என் நண்பர் இராஜராஜன் அவர்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

தொடர்பில் தொடர்ந்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.


(முற்றும்)

நாட்டு நடப்பு மற்ற பதிவுகள்

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் தற்போதைய அவல நிலை

நீட் என்பது உருவாக்கிய வணிக கொள்ளை

தமிழக கல்வியில் உருவான பாடத்திட்ட மாற்றங்கள்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் வானளாவிய அதிகாரங்கள்

ப.சிதம்பரம் என்றொரு அதிபுத்திசாலி

காலா திரைப்பட விமர்சனம்

தந்தை பெரியார் என்றும் தேவைப்படுவார்?

வைகோ உணர்ச்சிமயமானவர்

ரஜினி என்ற ஆபத்து

தமிழகம் எதிர்நோக்கும் சுற்றுச்சூழல் போர்

மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன்

சவுக்கு சங்கர் எழுதிய ஊழல் உளவு அரசியல் புத்தக விமர்சனம்

நீதியரசர் மைக்கேல் டி குன்ஹா

திமுக அதிமுக அடிப்படை வித்தியாசங்கள்

பிஎஸ்என்எல் அழிக்கப்பட்ட வரலாறு









Saturday, July 28, 2018

நாட்டு நடப்பு - தொல்லை தொடர்பு குறிப்புகள் - 15




சில மாதங்களுக்கு முன் நான் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மோடம் பழுதாகி விட்டது. அப்போது தொடர்ந்து ஒரு வாரம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்திற்குச் சென்ற போது கற்றதும் பெற்றதும்.

ரிசையில் காத்திருந்து, மீண்டும் மீண்டும் அலைந்து, தவமாய் தவமிருந்து என்று சொல்லக்கூடிய வகையில் பெற்ற பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பைப் பெற்ற அந்த நாள் இன்றும் என் நினைவில் உள்ளது. இன்று வரையிலும் இதே அரசாங்கச் சேவையைத்தான் வீட்டில் பயன்படுத்தி வருகின்றேன். வீடுகள் மாறும் போது கதறடிப்பார்கள். ஆனாலும் விட்டுவிடவில்லை. கடந்த பத்தாண்டுகளில் தனியார் நிறுவனங்கள் அலைஅலையாக உள்ளே வந்தது. ஆனாலும் என் பார்வை வேறு பக்கம் திரும்பவில்லை. அலைபேசி சேவை வந்தது. பல ஆண்டுகளாகத் தான் இன்று வரையிலும் செல்ஒன் சேவையைத்தான் பயன்படுத்தி வருகின்றேன்.

காரணம் நம்பகத்தன்மை. ஆனால் லாபம் கொழிக்கக்கூடிய ஒரு பொதுத்துறை நிறுவனத்தை எந்த அளவுக்கு அரசியல்வாதிகளால் தங்களின் சுயநல லாபத்திற்கு சீரழிக்க முடியும் என்பதற்கு பிஎஸ்என்எல் மிகச் சிறந்த உதாரணமாக உள்ளது.

மாதக்கட்டணம் கட்டுவதற்காக நீண்டடட வரிசையில் காத்திருக்க வேண்டும். ஏதோவொரு சூழலில் பழுதாகிவிட்டது என்ற நிலையிலும் நம் உயிர் போய் உயிர் திரும்பி வரும் அளவிற்கு சாகடிப்பார்கள். உள்ளே பணிபுரிபவர்களிடம் சென்று நம் அவசரத்திற்குச் சென்று பேச முடியாது. ராஜபுத்திர வம்ச மன்னர்கள் போல செயல்படுவார்கள். பொறுத்துக் கொள்ள வேண்டும். பிடிவாதமாக வெளியேறாமல் இருந்த சூழல் இப்போது படிப்படியாக மாறிக் கொண்டே வருகின்றது. பிஎஸ்என்எல் சேவையை மற்றும் செல் ஒன் சேவைகளை பயன்படுத்திக் கொண்டு வரும் வாடிக்கையாளர்களை நீங்களாகவே வெளியே சென்று விடுங்கள்? என்கிற அளவிற்குத் தான் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்வும் எனக்கு உணர்த்துகின்றது.

ன்றைய சூழலில் பிஎஸ்என்எல் நாளுக்கு நாள் மக்களுக்கு உதவும் வண்ணம் நிறையச் சேவைகளை அறிமுகம் செய்து கொண்டே இருக்கின்றார்கள். பல அற்புதமான திட்டங்கள் பொது மக்களின் பார்வைக்குச் செல்வதே இல்லை. தனியார் நிறுவனங்கள் போல மறைமுக கட்டணம் ஏதுமில்லை. தற்போது ஜிஎஸ்டி அறிமுகமான பின்பு அந்தத் தொகை மட்டும் தான் அதிக அளவு வருகின்றது. மற்றபடி நாம் பயன்படுத்தும் கட்டணம் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே உள்ளது. ஆனால் கட்டமைப்பை சரியாக நாளுக்கு நாள் மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மொத்த நிர்வாகமும் உள்ளது. ஆனால் மத்திய அரசாங்கம் எப்படியாவது தனியார் கைக்குக் கொடுத்து விட வேண்டும் என்பதில் தான் உறுதியாக உள்ளது?

ளர்ந்து கொண்டேயிருக்கும் தொழில் நுட்ப வசதிகளைத் தனியார் துறை நிறுவனங்கள் அவ்வப்போது பயன்படுத்திக் கொண்டு அடுத்தகட்டத்திற்கு வளர்ந்து கொண்டேயிருக்கின்றார்கள். ஆனால் இந்தத்துறையில் எந்த நவீன வசதிகளும் வாடிக்கையாளர்களுக்கு வந்து சேர்வதே இல்லை. எல்லாமே அறிக்கைகளாகவே உள்ளது.

ணிபுரியும் ஊழியர் சொன்ன வார்த்தைகள் இது. "தனியார் நிறுவனங்கள் வியாபாரம் செய்கின்றார்கள். நாங்கள் மக்களுக்குச் சேவை செய்கின்றோம். நீங்கள் அவர்களிடம் போய் சேவையை எதிர்பார்த்தால் அது உங்களின் தவறு " என்றார். எதார்த்தமான உண்மை.


பிஎஸ்என்எல் பயன்படுத்தும் பெரும்பாலான மிண்ணணு உபகரணங்கள் சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றது. தரம் என்பது குப்பையாக இருந்தாலும் யாரோ ஒரு அதிகாரி அல்லது அந்த லாபி வட்டத்திற்கு பெரும் லாபமாக உள்ளது. இதன் மூலம் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் அடிமட்ட ஊழியர்கள் செய்த வேலைகளையே திரும்பத் திரும்பச் செய்ய வேண்டியதாக உள்ளது என்று புலம்புகின்றார்கள். இன்றைய சூழலில் சீனா இல்லாவிட்டால் இந்தியா என்பது இல்லாமல் போய்விடுமோ? என்கிற அளவுக்குத்தான் இங்கே உள்ள ஒவ்வொரு துறையும் உள்ளது என்பது தான் உண்மை. கணவன் மனைவியின் அந்தரங்க செயல்பாட்டினைத் தவிர்த்த மற்ற அன்றாட செயல்பாட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் சீனப் பொருட்களே உள்ளது.  இது தான் வல்லரசு இந்தியா.

ந்தத் துறையில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்கள் அரசாங்கத்தின் மேல் அதிக அளவு ஆத்திரமாக இருக்கின்றார்கள். எங்கள் நிறுவனத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அரசாங்கம் நடத்துகின்றது. பல ஆண்டுகளாக ஆட்கள் நியமிக்கப்படவில்லை என்பதே முதன்மையான குற்றச்சாட்டு. ஆள் பற்றாக்குறை ஒரு பக்கம். தனியார் நிறுவனங்களுக்குத் துணை போகும் பெரிய அதிகாரிகளின் அட்டகாசங்கள் மறுபக்கம்.

னியார் நிறுவனங்கள் இன்று வரை 4ஜி என்று விளம்பரம் கொடுத்து வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டேயிருக்கின்றார்கள். ஆனால் இன்று வரையிலும் பிஎஸ்என்எல் க்கு 4ஜி கொடுக்கப்படவே இல்லை. ஏலத்தில் கலந்து கொள்ளும் அளவிற்கு நிதி ஒதுக்கப்படவே இல்லை.

காங்கிரஸ் ஆண்டபோது இந்தத் துறைக்கு வந்தமர்ந்த அமைச்சர்கள் குறிப்பாக தயாநிதி மாறன் தொடங்கி ஒவ்வொருவரும் தங்களின் சுயலாபத்திற்காக மொத்த சேவையின் சீரழிவைத் தொடங்கி வைக்க இன்று உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

டிப்படியாக ஒவ்வொரு காலகட்டத்திலும் பிஎஸ்என்எல் தங்களின் அடித்தளத்தை அதன் கட்டுமானத்தை உருவாக்கி வளர்த்து இந்தியா முழுக்க எந்த இடத்திற்குச் சென்றாலும் பேச முடியும் என்ற சூழலை உருவாக்கி வைத்திருந்தது. ஆனால் இவர்கள் உருவாக்கி கோபுரங்களை இன்று தனியார் நிறுவனங்கள் வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தும் அவலச் சூழல் காரணமாக பிஎஸ்என்எல் சேவை என்பது சந்துக்குள் சிக்கிய பூனை போல கதறிக் கொண்டு இருக்கின்றது.

ரசாங்கம் வியாபாரத்தில் இருக்கக்கூடாது. வியாபாரம் என்பது தனியார் கைகளில் தான் இருக்க வேண்டும் என்பது புத்திசாலி முதலீட்டாளர்கள் நமக்குப் பாடம் நடத்துகின்றார்கள். இதனால் சேவை என்பது மாறி கொள்ளை என்ற வார்த்தை கடந்த பத்தாண்டுகளில் தனியார் அலைபேசி வாடிகைக்கையார்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் உண்மையாகும்.

பிஎஸ்என்எல் ல் பணியாற்றும் ஒரு பெண் ஊழியர் வருத்தமுடன் பலவற்றை பகிர்ந்து கொண்டார். "இப்பொழுதே பாதி நிர்வாகம் ரிலையன்ஸ் கைக்குப் போய்விட்டது. அடுத்தமுறை பிஜேபி ஆட்சிக்கு வந்தால் முதல் வேளையாக இந்தத் துறையை அவர்களிடம் கொடுத்து விடுவார்கள். எனக்குப் பணி ஓய்வு பெற இன்னமும் 10 ஆண்டுகள் உள்ளது. நான் என்ன செய்யப் போகிறேன்? அவர்கள் வந்தால் என்னை வைத்திருப்பார்களா? என்று தெரியவில்லை" என்று சொன்னார்.

நான் அந்தப் பெண்மணி சொன்னதை முழுமையாக நம்பவில்லை. ஆனால் கடந்த பத்து நாட்களில் நடந்த சில நிகழ்வுகள் அது உண்மைதான் என்று எனக்கு உணர்த்தியது.

நண்பர் ஒருவருக்கு அழைத்து இருந்தேன். அவர் ரிங்டோனாக ஒரு பாடலை வைத்திருந்தார். அவர் நான் அழைத்த போது என் அழைப்பை எடுக்கவில்லை. நானும் அடுத்து இடைவெளி விட்டு அழைக்கலாம் என்று விட்டு விட்டேன். அப்போது எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. நீங்க கேட்ட பாடலை நீங்கள் தேர்ந்தெடுத்த காரணத்தால் உங்கள் ரிங்டோனாக மாற்றி உள்ளோம் என்று நான் தேர்ந்தெடுக்காமல் என் அனுமதி இல்லாமல் என் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு விட்டார்கள்.

நாம் அது தேவையில்லை என்று குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்க முயற்சித்த போது அடுத்தடுத்து வேறு எந்தநத பாடல்கள் வேண்டும் என்று ரிலையன்ஸ் வாடிக்கையார் சேவை மையத்தில் இருந்து வந்து விழுந்து கொண்டேயிருக்கின்றது. சிரிப்பதா? அழுவதா? என்று தெரியவில்லை.

ன்றாக சோதித்துப் பாருங்கள். தற்போதைய சூழலில் நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அரசாங்க சேவை சார்ந்த வாடிக்கையாளர் இலவச தொலைப்பேசிக்கு அழைத்துப் பாருங்கள். தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் என்று சொல்லும் போதே அது இயல்பாகவே துண்டிக்கப்பட்டு விடும். அதே போல வாடிக்கையாளர் பேச ஊழியருடன் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்குப் பல கோல்மால்கள் செய்து வைத்து உள்ளார்கள்.

அதாவது உன்னிடமிருந்து உன் கண் எதிரே நாங்கள் திருடத்தான் செய்வோம். சேவை என்பதனை எல்லாம் எதிர்பார்க்காதே. நீ குறிப்பிட்ட சேவைகளை பயன்படுத்தாமல் இருந்தால் கூட நாங்கள் அதற்கான பணத்தை எடுத்துக் கொள்வோம். இப்படித்தான் ஒவ்வொரு துறையும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதில் வங்கி குறித்து நான் பெற்ற அனுபவங்களைத் தனியாக எழுதுகிறேன்.

மீபத்தில் ஏர்செல் மூடப்பட்டபின்பு அதில் இருந்த வாடிக்கையாளர்களில் குறிப்பிட்ட சதவிகித மக்கள் செல்ஒன் மற்றும் பிஎஸ்என்எல் சேவைக்கு வந்து சேர்ந்து விட ஏற்கனவே நெருக்கிக்கொண்டு நிற்கும் சேவை தற்போது கூட்ட நெரிசலில் தள்ளாடிக் கொண்டு இருக்கின்றது. இப்போது வீட்டுக்குள் இருந்தால் கூட நாட் ரீச்சபிள் என்று தான் வருகின்றது. யாராவது அழைத்தால் வெட்ட வெளியில் வந்து நின்று அல்லோ அல்லோ என்று அல்லோலியா கோஷ்டி போல கத்த வேண்டியுள்ளது.

காரணம் தனியார் நிறுவனங்களுக்கு வங்கிக் கடனும் கொடுத்தும், பிஎஸ்என்ல் உருவாக்கி வைத்துள்ள கட்டமைப்பையும் தாரை வார்த்து அமைச்சர்களும் அதிகாரிகளும் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆனாலும் தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய கட்டணத் தொகை வருடந்தோறும் நிலுவையாகவே காட்டப்படுகின்றது. எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற வார்த்தை இப்போதைக்கு நம் நாட்டின் தொலை தொடர்பு சேவைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.

காலையில் நம் அவசரத்தின் பொருட்டு ஒன்பது மணிக்கு பிஎஸ்என்எல் அலுவகத்திற்குச் சென்றாலும் ஒவ்வொரு ஊழியரும் பத்து மணிக்கு உள்ளே வருகின்றார்கள். பலர் பத்தரை மணிக்குத்தான் உள்ளே வருகின்றார்கள். சரியாக மாலை நாலரை மணி சமயத்தில் வீட்டுக்குக் கிளம்பி விடுகின்றார்கள். இதற்கிடையே தேநீர், சாப்பாடு, புகைப்பது என்று கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் முழுமையாக மூன்று மணி நேரங்கள் தங்கள் பணியைச் செய்வார்களா? என்று சந்தேகமாக உள்ளது.

குறிப்பிட்ட பதவியில் உள்ளவர்கள் சங்க செயல்பாட்டின் அடிப்படையில் தாதாவாக உள்ளே இருக்கின்றார்கள். பெரிய அதிகாரிகள் கூட அவர்களை வேலை வாங்க முடியாது என்பது தான் உண்மை. ஒவ்வொரு துறையில் உள்ளவர்கள் சரியாக பணி புரியாவிட்டாலும் கூடச் சங்கத்தின் மூலம் தான் பேசிக் கொள்கின்றார்கள். நேரிடையாக திட்ட முடியாதாம். அப்புறம் அதுவே பெரிய பஞ்சாயத்தாக மாறிவிடுமாம்.

ரசாங்கத்தின் கொள்கை திட்டங்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் கொள்ளை, பணிபுரியும் ஊழியர்களின் தான்தோன்றித்தனம் என்று நான்கு புறமும் சூறாவளி போல இந்தத்துறையைச் சூழ்ந்து தாக்கிக் கொண்டிருந்தாலும் மக்கள் இந்தச் சேவையைத்தான் பயன்படுத்துவேன் என்று பிடிவாதமாக இருப்பது தான் இப்போது அரசாங்கத்திற்குச் சவாலாக உள்ளது.

வட இந்தியாவில் பல இடங்களில் தனியார் நிறுவனங்களின் சேவை இருக்காது. ஆனால் உத்தரகாண்ட் சென்ற போதும் அங்கிருந்து நண்பர் என்னை அழைத்துப் பேசி இருக்கின்றார்.

ப்போது ஒவ்வொருவர் வீட்டிலும் ஏழெட்டுச் சிம் கார்டு வைத்து இருக்கின்றார்கள். தனியார் அலைபேசி சேவை என்றாலும் ஒவ்வொன்றிலும் இரண்டு வைத்து உள்ளனர். சில உறவினர்களின் எண்கள் என்று குறைந்தது பத்து என்கிற அளவிற்கு அலைபேசியில் சேமித்து வைக்க வேண்டியதாக உள்ளது. புதிய எண்ணில் இருந்து அழைக்கும் போது நாம் எடுக்காவிட்டால் அது புதுப் பஞ்சாயத்தை உருவாக்கி விடுகின்றது. மக்களுக்குத் தேவை என்பதற்கும் ஆடம்பரம் என்பதற்கும் உண்டானதற்கும் வித்தியாசம் புரிபடுவதே இல்லை.


டிஜிட்டல் இண்டியா, கேஷ்லெஸ் இண்டியா விரும்பிய பிரதமருக்கு இவையெல்லாம் கண்களுக்குத் தெரியாதா? என்று நண்பரிடம் கேட்டேன்.

ஒரு கடிதம் வாயிலாக மோடிக்குத் தெரியப்படுத்துங்கள் என்கிறார்.

எந்த மொழியில் அவருக்கு எழுதுவது? எப்போது அவர் இந்தியாவில் இருப்பார்? என்பதே குழப்பமாக இருப்பதால் எழுதுவதைத் தள்ளிப் போட்டிருக்கின்றேன்.