Monday, January 10, 2022

நீட் மசோதா -கவர்னர் காலம் தாழ்த்துவது ஏன்?

தந்தி தொலைக்காட்சியில் நேற்று அண்ணாமலை அவர்கள் அளித்த பேட்டியைப் பார்த்தேன். அது குறித்த என் கருத்தைத் தனியாக எழுதுகிறேன். ஆனால் பேட்டி எடுத்த பாப்பா கட்டக் கடைசியாக கேட்ட கேள்வி என்னை மிகவும் யோசிக்க வைத்தது. 

கேள்வி (அண்ணாமலைக்குத் தமிழகப் பத்திரிக்கையாளர்கள் மேல் ஏன் இவ்வளவு கோபம்?) 

அண்ணாமலை அவர்கள் நாகரிகமாக பதில் அளித்து அடுத்த கேள்விக்குக் கடந்து சென்றுவிட்டார். இவர் எப்போதும் இப்படித்தான். மேலே குத்திய அம்புகளை எடுத்து அடுத்த அம்புக்காகக் காத்திருக்கக்கூடியவர். 

ஆனால் இந்தச் சமயத்தில் நான் சிலவற்றை அப்பட்டமாகவே எழுத விரும்புகின்றேன். 

1. அச்சு ஊடகம் (தினசரி மற்றும் வார மாத இதழ்கள்)/செய்தி ஊடகம் (மக்கள் ஆதரவு பெற்ற பிரபல்யமான செய்தி சேனல் மற்றும் இணையம் வழியே செயல்படும் பெரிய சிறிய யூ டியூப் சேனல்). இது தவிர சமுக வலைதளங்களில் மட்டுமே செயல்படும் பல்வேறு விதமான எழுத்தாளர்கள் அல்லது ஓரளவுக்கு எழுதத் தெரிந்தவர்கள். 

2. இதில் அரசு மற்றும் மக்கள் அங்கீகாரம் பெற்ற அச்சு மட்டும் செய்தி ஊடகங்களை மட்டும் எடுத்துக் கொள்வோம். இந்த இரண்டு துறைகளிலும் 100 பேர்கள் பணியாற்றுகின்றார்கள் என்றால் அதில் பத்து பேர்கள் மட்டுமே 40 வயதைக் கடந்தவர்கள். மற்ற அத்தனை பேர்களும் 23 முதல் படிப்படியான வயதைக் கொண்டவர்கள். அதாவது படித்தது ஆங்கில வழிக் கல்வி. தமிழ் முழுமையாக எழுதப் படிக்க தெரியுமா? என்றால் சந்தேகம். 

தமிழக அரசியல் வரலாறு, சமூக, நிலவியல், புவியியல், பூகோள வரலாறு என்று கோர்வையாக ஏதாவது தெரியுமா? என்றால் உறுதியாகச் சொல்வேன். நிச்சயம் தெரியாது. 

காரணம் பணியாற்றும் நிர்வாகம் வழங்கும் 14000 முதல் 25000 வரைக்கும் உள்ள சம்பளத்தில் இங்கே இதழியல் படித்து முடித்து விட்டு வேலைக்கு வரக்கூடியவர்கள் எப்படி இருப்பார்கள்? 

3. பத்திரிக்கைத் துறையில் ஏன் சேர்ந்தாய் என்று கேட்டுப் பாருங்கள்? இயக்குநர் ஆக வேண்டும் என்று சொல்பவர்கள் 70 சதவிகிதம். மீதி நடிகர் முதல் மற்ற துறைகள் வரைக்கும். 

அதாவது கல்லூரியில் எதார்த்தத்தைப் படிக்கவில்லை. பணிபுரியும் இடங்களில் இயல்பான நிஜ விசயங்களில் கவனம் செலுத்த வழியில்லை. கண்டதே காட்சி. கொண்டதே கோலம். 

4. இவர்களைப் போன்றவர்களை எளிதாக மடை மாற்ற முடியும். இது தான் சரி என்று நம்ப வைக்க முடியும். பணத்திற்காக மதம் மட்டுமல்ல மற்ற விசயங்களைப் பரிமாறிக் கொள்ள தூண்ட முடியும். இப்படித்தானே இங்கு நடந்து கொண்டு இருக்கின்றது. இதை தலைவர் அண்ணாமலை அவர்கள் வெளிப்படையாக அந்த அம்மிணியிடம் சொல்ல முடியுமா?. 

பேட்டி எடுத்த பாப்பாவுக்கு நன்றாகவே தெரியும். 

தன்னைக் காப்பாற்றிக் கொள்வதே இங்கே பெரும்பாடு என்று நிச்சயம் தெரியும் தானே? 

வரலாறு தெரிந்தால் தான் ஊழல் உருவாக்கிய ஓட்டைகள் பற்றிப் புரியும். ஓட்டைகள் தெரிந்தால் நிர்வாகத்தில் யார் இருக்க வேண்டும்? என்பது தெரியும். 

இவையெல்லாம் அண்ணாமலை முதல்வராக வரும் சமயத்தில் மாறும். 

எனக்கு முழுமையாக நம்பிக்கையுண்டு.