Thursday, April 28, 2011

கைப்புள்ள பான் கீ மூன் கதறடிக்கும் ராஜபக்ஷே

வருகின்ற 2011 மே மாதம் விடுதலைபுலிகளுடன் இலங்கை ராணுவத்தினர் போரிட்டு வென்ற இரண்டாவது ஆண்டு முடிவுக்கு வரப்போகின்றது.  மூன்றாவது படியில் ஏறும் போது பாதிக்கப்பட ஈழத்தமிழர்களுக்கு ஒரு முன்னேற்றப் படி என்று இலங்கையின் போர்க்குற்ற அறிக்கை குறித்து பலருக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 

ஆனால் இதைப் போன்ற பல படங்கள் கடந்த இரண்டு வருடத்தில் வந்து போய் இருக்கின்றது.  இப்போது வந்துள்ள இந்த அறிக்கை கோப்பு என்பது சற்று மேம்பட்ட கோர்வையான படம்.  வேறொன்றும் புதிதில்லை. இதைக் கொண்டு தொடர்ந்து கொண்டிருக்கும் சிங்கள இனவாதத்தை நிறுத்திவிட முடியுமா? 

இவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்று விடுதலைப்புலிகளை குதற காத்துக் கொண்டிருந்தது சிங்கள இனவாதம் மட்டுமல்ல. காத்திருந்த இந்தியாவும் கூட.

ஓராயிரம் காரணங்கள்?. 

விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள். பழைய கடனுக்கு பழி தீர்க்கப்பட வேண்டியவர்கள். இந்தியாவிற்கு எப்போதும் இவர்களால் ஆபத்து. எதிர்காலத்தில் தமிழ்நாட்டையும் கன்னிவெடி பூமியாக மாற்றி விடுவார்கள். 

ஆனால் அழிக்கப்பட வேண்டும் என்று நினைத்தவர்களால் அப்பாவிகளை காப்பாற்ற முடியவில்லை. அதற்கும் இன்னும் காரணங்களை தேடித் தேடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

அப்பாவிகளை விடுதலைப்புலிகளை கேடயமாக பயன்படுத்தியதால் தான் இந்த பேரழிவு என்று அவரவர் புத்திசாலி தனத்தை காட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். 

காரணங்கள் எத்தனையோ? 

மொத்தத்தில் போரின் முடிவில் வெந்து தணிந்தது வன்னி. ஆனால் அப்பாவிகளுக்கு அவலவாழ்க்கை பரிசாக தந்தவர்களுக்கு இன்னமும் கூட நல்ல வாழ்க்கை வழங்க மனமில்லை. அதைக் கேட்க கூட இங்குள்ள புத்திசாலிகளுக்கு அறிவில்லை. மரத்துப் போன மனங்களில் ஈரமென்பது எப்போதும் சுரக்காது. எதிர்பார்ப்பதும் நியாமில்லை தானே?

இந்தியாவால் போருக்குப் பின்னால் ஈழத்தில் கொண்டு போய் கொட்டப்பட்ட கோடிகள் கூட தெருக்கோடிகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவில்லை. மொத்ததில் இப்போது பிரபாகரன் இல்லை. எங்கள் ஆர்வமும் அக்கறையும் முடிவுக்கு வந்து விட்டது என்ற இந்தியாவின் தான்தோன்றித்தனம். 

போரின் போது அமைதியாக இருந்த ஐ.நா இப்போது தனது அதிசிய கண்டுபிடிப்பான இலங்கையின் நடத்தப்பட்ட போர்க்குற்றத்தை அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறது. கிசுகிசு பாணியில் அறைகுறையாக பரவி இன்னும் சில நாட்களில் முழுமையாக வந்துவிடுமாம். நல்லவேளை வீட்டோ அதிகாரம் படைத்த ரஷ்யா, சீனாவை மீறி தன்னுடைய பதவியின் இறுதிக் காலத்தில் ஏனிந்த முடிவுக்கு பான் கீ மூன் தள்ளப்பட்டு இருக்கிறார் என்பதற்கு பின்னால் உள்ள விசயங்கள் என்பது சர்வதேச அரசியல் போக்கு தெரிந்தவர்களுக்கு இது ச்சும்மா என்பது புரிய வைக்கும்.  

காரணம் குற்றவாளியை விட குற்றவாளிக்கு முக்கிய கூட்டாளியாக இருந்த இந்தியாவைக் கொண்டு எங்கே நிறுத்தமுடியம்.  நிறுத்தத்தான் முடியுமா? 

பான் கீ மூன் இந்த பதவிக்கு வருவதற்கு சீன உளவுத்துறை எந்த அளவிற்கு உதவியதோ அதற்கு கைமாறாக பான் கீ மூன் விமானத்தில் சென்று ஈழ அவலத்தை பார்த்து முடித்து விட்டு வந்து விட்டார்.  இப்போதும் கூட ஈழத்திற்குள் நுழையாமல், பாதித்த மக்களையும் கேட்க முடியாமல் கிடைத்த தகவல்களை வைத்தே அறிக்கையும் தயார் செய்தாகி விட்டது.  எவ்வளவு அடித்தாலும் தாங்கும் கைப்புள்ள வடிவேலுக்கும் நம்ம பான் கீ மூனுக்கும் என்ன பெரிதான வித்யாசம்?

ஐ.நா. சபை இலங்கையிடம் பவ்யமாக " நீங்களே இது குறித்து முடிவு எடுத்து எங்களிடம் சொல்லுங்க" என்று கேட்ட போதும் கூட ராஜபக்ஷே சகோதரர்கள் மனமிறங்கவில்லை. "எவனாவது விசாரனைன்னு உள்ளே வந்தா கீச்சு புடுவேன் கீசி"என்று சொல்லாத குறை தான். சும்மா சொல்லக்கூடாது.  ராஜபக்ஷே பான் கீ மூன் கண்ணில் மட்டுமல்ல கண்ட இடங்களிலும் கைவிட்டு கைமா பண்ணிக் கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் ஈழத்திற்குள் ஐ. நா. சபைக்கு எதிராக அணைத்து தரப்பினரின் கையெழுத்து வேட்டை நடந்து கொண்டிருக்கிறது.. மற்றொரு புறம் உள்ளுர் அரசியல் தாதாக்களின் அநாகரிக நடவடிக்கைகள். மாமன்னர் ராஜபக்ஷே சிங்களர்களுக்கு மட்டுமல்ல தலைவர். உலகில் உள்ள ஒவ்வொரு எதிர்கால அரசியல்வாதிகளுக்குமே குருவானவர். எதை? எப்போது? எப்படி? எவரை வைத்து? செய்து காட்ட வேண்டும் என்று நடத்திக் காட்டிய கில்லாடி. இவரால் உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் ஐ.நா. வரலாற்று நிகழ்வுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டிய பட்டயம்.  

ஈழ அரசியல் இனி எப்போதும் தன்னைச்சுற்றியே சுழல வேண்டும் என்று நம்பியிருக்கும் ராஜபக்ஷே காட்டில் இப்போது அடைமழை தான். 

விடுதலைப்புலிகளை அழித்த போது புகழ்.  நான் தான் காரணம் என்று பங்கு கேட்டு வந்தவரை அடக்கி ஒடுக்கி உள்ளே தள்ளிய போதும் புகழ்.  ஏன் இவர்களை அழித்தார்? என்பதை விவரிக்கும் போது புகழ் என்று நகர்ந்து இன்று ஐ.நா. சபையின் செயல்பாடுகளை எதிர்க்கும் போது கூட மாமன்னர் ராஜபக்ஷேவுக்கு புகழாகத்தான் சேர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஐ.நா சபை விடுவதாய் இல்லை. இலங்கையின் ஒத்துழைப்பு இல்லாமலேயே தாங்கள் கண்டு பிடித்த போர்க்குற்ற ஆதாரங்களை தொகுத்து கொடுத்துள்ளார்கள். சேட்டிலைட் தொழில் நுட்பத்தில் கண்டுபிடித்த படங்களையும் சேர்த்து எதிர்கால தமிழின மககளுக்கு போய்ச் சேரக்கூடிய கோப்பை பரிசாக தந்துள்ளது. 

அடுத்த நாட்டு இறையாண்மையில் தலையிடக்கூடாது என்று சொல்லும் நல்லவர்கள் தங்கள் வீட்டில் வைத்திருக்க வேண்டிய முக்கிய ஆவணம் இது.  இனி வேறென்ன வேண்டும்?

வேலுப்பிள்ளை பிரபாகரன் இல்லாத ஈழத்தில் இப்போது தமிழர்களின் வாழ்க்கையில் பாலும் தேனும் ஓடுகின்றது. முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள உயிர் பிழைத்த மீதமுள்ள தமிழர்களுக்கும் சம உரிமை கொடுக்கப்பட்டாகிவிட்டது. கன்னிவெடி பூமி இப்போது தமிழர்களின் காதல் பூமியாகி விட்டது. சிங்கள இனவாதம் போய் தமிழர்களின் வாழ்க்கையில் சிரிப்பும் கும்மாளமாக மாறிவிட்டது. இப்போதுள்ள சிங்கள அரசியல் மூலம் அங்கு வாழும் தமிழர்களுக்கு சிக்கலில்லாத வாழ்க்கையை அறிமுகபடுத்தியாகி விட்டது. இனியேனும் சொல்லுங்கள் தமிழர்களே? 

இனி ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கென்று வேறென்ன வேண்டும்? 

இம் என்றால் சிறைவாசம்?  ஏன் என்றால் நரகலோகம்.  சிங்கள பத்திரிக்கையாளர்களுக்கே டவுசர் கழடும் போது தமிழர்கள் கட்டியிருக்கும் கோவணம் என்ன ஆகும்?  தெரிந்தவர்கள் தமிழர்கள். அமைதியாய் இருந்து விடுவ்து உத்தமம்.  

தமிழர்கள் எப்போதும் அடிமையாய் வாழ்ந்துவிடுவது மொத்ததிலும் சிறப்பு.

ஆனால் நடந்த போரில் லட்சக்கணக்கான அப்பாவி மக்களின் ரத்தத்தை குடித்த கோமகன்கள் கொண்டாடிய வெற்றி விருந்தில் குடித்த மதுபானம் நிச்சயம் கசந்திருக்க வாய்ப்பு இருந்துருக்காது?. போரை நடத்திய ராஜபக்ஷேவுக்கு உயிர்பயம். இவருக்கு மட்டுமல்ல. இவருக்கு முன்னால் வந்த அத்தனை சிங்கள அரசியல்வாதிகளுக்கும் இதே தான். விடுதலைப்புலிகளை அழிக்காத பட்சத்தில் அதன் எதிர்விளைவுகளை ராஜபக்ஷே சொன்ன மாதிரி ஆறடி பெட்டிக்குள் அவரை அடைக்கலப்படுத்தியிருக்ககூடும். 

ஆனால் இன்று வரையிலும் எந்த கூச்சநாச்சமும் இல்லாமல் தமிழ்நாட்டில் ஈழத்தை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் இங்கிருப்பவர்களை பார்க்கும் போது ராஜபக்ஷே பரவாயில்லையோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது. 

போரினால் ஓரே சமயத்தில் பிணமாய் மாறிப் போனவர்களுக்கு அடுத்த பிரச்சனைகள் எதுவுமில்லை. ஆனால் உயிரோடு இருக்கும் நடைபிணங்களை வைத்து நம்மவர்கள் நடத்திக் கொண்டிருக்கும் கூத்துக்களைப் பார்க்கும் போது இவர்களிடம் மனிதர்களுக்குரிய பகுத்தறிவும், மனசாட்சியும் இருக்கிறதா? என்று எண்ணத் தோன்றுகின்றது.  

மனிதர்களில் இத்தனை நிறங்களா?

கலைஞர் தனது மகள் கனிமொழிக்காக கூட்டப்பட்ட உயர்நிலை கூட்டத்தில் போனால் போகிறதென்று ஈழத்திற்கென்று ஒரு தீர்மானத்தையும் சேர்த்து நிறைவேற்றியுள்ளார். 

"தனி ஈழம் தான் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு என்பதை நான் சொல்லவில்லை.  தந்தை செல்வா சொன்னது" என்று அசராமல் தன் கேள்வி பதில் பாணியில் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார். பாவம் ராசா. இது போன்ற கலைஞரின்  நிலைப்பாடுகளை கண்டு கொள்ள அவஸ்யமில்லாமல் நிம்மதியாக உள்ளேயிருந்து கொண்டு கலைஞரின் "நெஞ்சுக்கு நீதி"யை படித்துக் கொண்டிருக்கக்கூடும்.

"இந்தியா இனியும் மவுனம் சாதிக்கக் கூடாது" என்று ஜெயலலிதா சொன்னதோடு மற்றொரு அன்புப் பரிசையும் கொடுத்துள்ளார். "இலங்கையில் உள்ள மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்" என்று திருவாய் மலர்ந்துள்ளார். 

அய்யா கீ.வீரமணி அடுத்த பெரிய கொய்யாவை கொடுத்துள்ளார். 

"இனி ஈழப் போராட்டங்களை முன்னெடுத்து போர்க்குற்றவாளி ராஜபக்ஷேவை பன்னாட்டு நீதி மன்றத்தில் நிறுத்தாமல் விடப்போவதில்லை" என்று சூளுரைத்துள்ளார். இதற்குப் பின்னால் ஸ்பெக்ட்ரம் என்ற பூதம் இருக்கிறது என்பதை நாம் மறந்து விடுவோம். காரணம் தமிழ்நாட்டு தமிழர்களுக்கு புதிது புதிதாக செய்திகள் கொடுத்தால் தான் ஒன்றை மறந்து விட்டு அடுத்த விசயத்திற்கு வருவார்கள். அடுத்து மருத்துவர் ராமதாஸ் வெகுண்டு எழுந்து விட்டார். அவரின் செலக்ட்டிவ் அம்னீசியாவை அவர் மகன் வெகு விரைவில் குணப்படுத்தக்கூடும்.   திருமா ஒருவேளை அடுத்து ஈழம் குறித்து தான் எழுதப் போகும் பத்திரிக்கை தொடருக்காகவோ அல்லது நடித்து பயமுறுத்தப் போகும் திரைப்படத்திற்க்கான முக்கிய வேலையில் இருக்கக்கூடும். 

இரண்டு வருடமாக மறந்துபோன் இந்த தலைகளுக்கு இப்போது ஒரு வாய்ப்பு.
மொத்தத்தில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் வாயில் இப்போது அதிகமாக முணுமுணுக்கும் வார்த்தை போர்க்குற்றவாளி ராஜபக்ஷே.

அன்றாடம் மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற ஆயிரத்தெட்டு அக்கப் போர்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ்நாட்டில் எவ்ர் இந்த ஈழப் போரைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள்?  கொஞ்சம் விவரமாக பேசினாலே பின்னங்கால் பிடறி தெரிந்து ஓடும் தமிழர்களுக்கு இந்த அட்டைக்கத்தி வீரர்கள் இன்னும் சில நாட்களுக்கு செய்திகளில் நிரம்பி வழியப் போகிறார்கள். 

தினந்தோறும் இவர்களின் பேச்சு குறிப்பிட்ட செய்திதாள்களில் ஏதோவொரு மூலையில் துணுக்கு செய்திகளாக வந்து கொண்டிருக்கும். லஞ்சம், ஊழலைத் தவிர எங்களுக்கு வேறொன்றும் தெரியாது என்று கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் இந்த பிசாசுகளால் கொஞ்சம் கொஞ்சமாக பாடையில் போய்க் கொண்டிருக்கும் இந்த தமிழ்நாட்டு தமிழர்களில் எத்தனை பேர்களுக்கு பன்னாட்டு நீதிமன்றத்தை தெரியப் போகின்றது? போங்கடா பன்னாடைகளா? என்று நகர்ந்து போய் அடுத்த இலவச அறிவிப்பு எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்.

ஆனால் துண்டு துணுக்கு கூட இல்லாமல் முழுமையாக எரிக்கப்படாமலும், அறைகுறை உயிரோடு அள்ளிக் கொண்டு சேர்த்த உடல்களும், எரியாமலும், புதைக்க முடியாமலும் கொத்து கொத்தாக அள்ளிக் கொண்டு போய் தள்ளிய எண்ணிக்கையில் அடங்காத இறந்த அந்த ஈழ மக்களின் ஆத்மாக்கள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை மன்னித்து விடுமென்று நாம் நம்புவோம். 

நம்பிக்கை தானே வாழ்க்கை.


இந்திய இறையாண்மைக்கு கட்டுபட்டவன் ரசித்த பேரூந்து நிகழ்வு.  நன்றி அத்திவெட்டி ஜோதிபாரதி.


மன்மோகன் சிங் என்பவர் யார்?

அ) பொருளாதார நிபுணர்

ஆ) இந்தியப்பிரதமர்

இ) சோனியா காந்தியின் அடிமை

ஈ) காவலாளியா(சோளக்கொல்லை பொம்மையா) இருந்துக்கிட்டு திருட்டுக்கு நான் பொறுப்பல்ல என்று தப்பித்துக்கொள்ளும் ஆசாமி

உ) அவர் நல்லமனுசன், பதவிக்காலம் முழுக்க மூக்கபிடிச்சுக்கிட்டு அதுமேலயே உக்காந்திருப்பவர்.

ஊ) அமெரிக்காவின் கூலி ஆள்

எ) இலங்கைக்கு எடுபிடி வேலை செய்ய சோனியாவால் நியமிக்கப்பட்ட அல்லக்கை

ஏ) தான் யார் என்பதையே அடிக்கடி சோனியாவிடம் கேட்டு ஞாபகம் வைத்துக்கொள்ளும் அப்பிராணி.

ஐ) மேலே உள்ள அனைத்தும்

Sunday, April 24, 2011

மெல்லச் சுழலுது காலம் - (தமிழ்மணம் இரா.செல்வராசு) புத்தக விமர்சனம்

எப்போது நாமும் இந்த சமூகத்தில் நல்ல மனிதராக வாழ வேண்டும் என்று தோன்றக்கூடும்? 

நல்ல மனிதர் என்ற வார்த்தையில் அவரவருக்கு உண்டான புரிதல்களை இட்டு நிரப்பிக் கொள்ளலாம். பெற்றோர்க்கு, மனைவிக்கு, குழந்தைகளுக்கு, பக்கத்து வீட்டுகாரர்களுக்கு, பணிபுரியும் அலுவலகத்தில் என்று பல பாத்திரங்களில் நம்மை இட்டு நிரப்பிக் கொண்டாலும் நமக்கு பூரண திருப்தி வந்து விடுமா? என்னளவில் எனக்குத் தெரிந்தவரையில் என் வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்று சொல்பவர்களால் அதை எழுத்தாக கொண்டு வரமுடியுமா?  

முடியும் என்று சொல்லி சாதித்து உள்ளார் இரா,செல்வராசு.


ஒரு முறை செல்வராசு எழுதியுள்ள மெல்லச் சுழலுது காலம் புத்தகத்தை படித்துப் பாருங்களேன். இந்த புத்தகம் வெளிவந்த போது செல்வநாயகி ஒரு பதிவாக வெளியிட்டு இருந்தார். பதிவுலகில் கொஞ்சமாக எழுதும் செல்வநாயகி முன்னுரையில் ஒரு கதக்களி ஆட்டத்தையே ஆடிக்காட்டி ஆச்சரியப்படுத்தியுள்ளார். இது தான் செல்வநாயகி வாழ்வின் மொழியும் கூட.

வாழ்க்கை என்பது எவ்வளவு தூரம் ரசித்து வாழவேண்டியதன் அவஸ்யத்தை அயலகத் தமிழனின் அனுபவக் குறிப்புகள் என்ற இந்த புத்தகம் உங்களுக்கு உணர்த்தக்கூடும். இவரின் வலைதளத்தை விரும்பி படித்தவன் என்ற முறையில் இந்த புத்தகத்தை தேடி, துரத்தியும் சிக்காத இந்த புத்தகம் எனக்கு நான் வாங்கிய தமிழ்மண விருதின் மூலம் என்னை வந்து சேர்ந்தது. 

ஆத்தாவும் தொலைபேசியும் என்று முதல் தலைப்பில் தொடங்கி 51 ஆவது தலைப்பாக வசந்தம் என்பதோடு முடித்துள்ளார்.  

வாசித்து முடிக்கும் போது நமக்குள்ளும் நாம் வாழ்ந்த வசந்த நினைவுகள் நமக்குள் சுற்றி சுழலத்தான் செய்கின்றது. இவர் வாழ்ந்த ஊர் ஈரோடு அருகே என்ற போதிலும் கூட தமிழ்நாட்டிலுள்ள மற்ற கிராம மனிதர்களின் வாழ்க்கை என்பதும் ஒரே மாதிரி தானே? 

இவர் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அமெரிக்கா வாழ்க்கையை விஸ்தாரமாக விவரிக்காமல் அதன் மூலம் கிடைத்த அனுபவங்களைத் தான் எழுத்தின் மூலம் படமாக காட்டுகிறார். ஆசிரியர் தனது குழந்தைகளுக்கு கொடுத்துள்ள சுதந்திரத்தையும் வாசிக்கும் போது சற்று வியப்பாக உள்ளது. குழந்தை தனது மரணத்தைப் பற்றி இயல்பாக உரையாட முடிகின்றது. வேலை நிமித்தமாக வேறு ஊருக்குச் சென்று வரும் போது உண்டான பிரிவுகளை குழந்தைகளுக்கு உணர்த்தும் விதமும், மகள், நானும் உங்களுடன் மடியில் உட்கார்ந்து கொண்டு வந்தால் டிக்கெட் பிரச்சனையில்லை தானே? என்று திருப்பி கேட்டு திக்குமுக்காட வைப்பதும் என்று அங்கங்கே சின்னச் சினன சிருங்கார சிதறல்கள். கட்டுப்படுத்தாத சுதந்திர எல்லைகளை இவர் தனது குழந்தைகளுடன் உரையாடும் உரையாடல்கள் மூலம் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

ஒரு தலைப்புக்கும் அடுத்த தலைப்புக்கும் தொடர்ச்சி இல்லாவிட்டாலும் கூட இவர் கடந்து வந்த பாதையை, இளமைப் பருவ தாக்கத்தை, ஒவ்வொரு முறையும் அமெரிக்காவிலிருந்து இங்கே வந்து திரும்பி செல்லும் போது, என்று ஒவ்வொரு நிகழ்வுகளில் உள்ள விசயங்களை வியப்புக்குறிகளோடு நம்மை இழுத்துக் கொண்டு செல்கிறார். மொத்தத்தில் சுயசரிதம் என்பது போலில்லாமல், சொறிய கிடைத்த வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொள்ளாமல் வயலும் வாழ்க்கையும் போல ஒவ்வொரு தலைப்புக்குள்ளும் கொஞ்சம் கவிதை, சிறிது சுவராஸ்யம், மேலான நகைச்சுவை என்று கலந்து கட்டி ஒவ்வொரு கட்டுரையும் பொங்கல் சோறாக இருககிறது. . 

ஒவ்வொரு தலைப்பிலும் உள்ள விசயங்களை நம்மால் பல இடங்களில் பொருத்திக் கொள்ள முடிகின்றது. நான் வெளிநாட்டு வாழ்க்கையை பார்த்தவன் என்ற முறையிலும் வெளியுலகமே தெரியாத கிராமத்து மனிதர்களின் அப்பாவிகளுடன் பழகிக் கொண்டிருப்பவன் என்ற முறையிலும் இரண்டு எதிர் துருவங்களையும் இயல்பாக ஒரே அச்சில் இவர் எழுத்தின் மூலம் எளிதாக பார்க்க முடிகின்றது. இரண்டுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை சுவையாய் ஆசிரியர் ரசித்து எழுதிய வாசகங்கள் வாசிப்பவனுக்கு தன்னிலை மறக்கச் செய்யும். அவரவர் வாழும் வாழ்க்கையை வாசிப்பவர்களுக்கு கொண்டு வந்து நிறுத்துகிறது. 

சமகாலத்தில் ஆங்கில வார்த்தை கலக்காமல் எழுதுவது ஒரு சவாலாக கருதுபவர்கள், இவரின் பாசாங்கு இல்லாத மொழிநடையை வாசிக்கும் போது  ஆச்சரியப்படக்கூடும். ஒவ்வொரு கட்டுரைகளும் கிறங்கடிக்கும்.துள்ளல் நடையில் அமைந்துள்ளது மெலிதான நகைச்சுவை என்று எல்லா நிலையிலும் அனுபவமிக்க முழு நேர எழுத்தாளர் போலவே நகர்த்தியுள்ளார். ஆனால் அறிமுகத்தில் அவையடக்கமாய் இவர் கூறுவதை நம்ப முடியவில்லை. 

ஒரு தனி மனிதரின் டைரிக்குறிப்புகளை உரிமையோடு அனுமதியோடு படிக்கும் மகிழ்ச்சியை இந்த புத்தகம் தருகின்றது. இது கடந்த 20 ஆண்டுகளாக செல்வராசு எழுதியுள்ள வலையில் எழுதிய அனுபவ பகிர்வுகள். இவரின் எழுத்தின் பிரதிபலிப்பு உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டும். இதன் மூலம் எழுதுபவரின் தனிப்பட்ட வாழ்க்கையை உணர்ந்து கொள்ள முடியும். உங்கள் குழந்தைகள் மீது நீங்கள் அதிக அக்கறை காட்டுபவர் என்றால் அவஸ்யம் இவர் கொடுத்துள்ள பரிந்துரைகளை முரடாய் மிரட்டாதே என்ற தலைப்பில் உள்ள விசயங்களை படித்துப் பாருங்கள்.

கிராமத்து கோவில் திருவிழாக்களின் முஸ்தீபுகள், குழந்தைகளை வளர்க்க முதலில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய உன்னை நீ நம்பு என்ற ஆதார வாக்கியம், கவிதை துணை கொண்டு எழுத்தில் வடித்த வறண்ட குளத்து வாத்துக்கள், உறங்கா நிலவு என்று ஒவ்வொரு கட்டுரையிலும் புதிய நடையில் படைத்துள்ளார். தன் எழுத்தில் எத்தனை விதமாக எழுதிப் பார்க்கமுடியுமோ அத்தனை விதமாகவும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

தான் வாழ்ந்த மணணின் மணத்தை, கிராமத்தை, பெற்றோரை, அவர்களின் சிந்தனைகளை சரம் போல் கோர்த்து மாலையாக மாற்றியுள்ளார். எதையும் விட்டு வைக்கவில்லை. இவர் அம்மா வீட்டு குடிசையில் சொருகி வைத்த கடிதம் முதல் ரயில் நிலையத்தில் அப்பாவுடன் உரையாடும் உரையாடல் வரைக்கும் ஒவ்வொன்றுக்குள்ளும் ஓராயிரம் அர்த்தங்கள்.  உணர்ந்தவர்களுக்கு பொக்கிஷம். 

குறிப்பாக கிராமத்து வாழ்க்கையை அனுபவித்துவிட்டு புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் அடி மனதில் நீக்க முடியாமல் இருக்கும் பொக்கிஷ நினைவுகளை இந்த புத்தகம் சுருதி லயம் மாறாமல் மீட்டெடுக்கின்றது. குறை என்று சொல்ல வேண்டும் என்பதற்காகவே சில இடங்களில் அச்சுக் கோர்ப்பு எழுத்துப் பிழைகளும், புத்தக அட்டை வடிவமைப்பு என்று எரிச்சல் வரவைக்கின்றது. இப்போதுள்ள நவீன (லே அவுட்) அட்டைவடிவ முன்னேற்றத்தில் பதிப்பக மக்கள் செய்துள்ள வடிவமைப்பு மட்டும் தூங்கி வழிவது போல் இருக்கின்றது. பின் அட்டையில் உள்ள ஆசிரியரின் உருவ இளமையைப் போலவே படித்து முடிக்கும் போது நமக்குள்ளும் ஒரு இளமை பரவக்கூடும். 

இளமையாய் உங்கள் நினைவுகள் மாறக்கூடும். 

உண்மையான உழைப்பும், உறுதியான கல்வியும் கொண்டவர்களின் வாழ்க்கை எப்போதும் தோற்றுப் போனதில்லை. இந்த புத்தகத்தை படிக்கும் போது செல்வராசு உணர்த்துவதும் இதே தான்.  என்னவொன்று உங்கள் கல்வியினால்  நீங்கள் பெற்ற உயர்பதவிகளும், கிடைக்கும் செல்வங்களையும் இயல்பாக எடுத்துக் கொண்டால் உங்களால் கூட உங்கள் பழைய நினைவுகளை இது போல எழுத முடியும்.

புத்தகத்தின் பெயர் -  மெல்லச் சுழலுது காலம் 
(அயலகத் தமிழினின் அனுபவக்குறிப்புகள்)
ஆசிரியர் இரா. செல்வராசு

பக்கங்கள் 208
விலை .:  160.00

54./ 13 10 வது தெரு
டிரஸ்டுபுரம், கோடம்பாக்கம்,
சென்னை 24
தொலைபேசி 044 43 54 03 58
மின் அஞ்சல் sales.vadali.gmail.com

பின்குறிப்பு புத்தக ஆசிரியர் தற்போது அமெரிக்காவில் வாசிங்டன் டிசி அருகே வர்ஜீனியாவில் உள்ள ஃபேர்ஃபேக்சு நகரில் தற்போது மனைவி, இரு மகள்களுடன் வசித்து வருகிறார். ஒரு பன்னாட்டுப் பாறைநெய் நிறுவனத்தின் நடுவண் ஆய்வு மற்றும் பொறியியல் பிரிவில் வேதிப் பொறிஞராகப் பணிபுரிந்து வருகின்றார். 

Wednesday, April 20, 2011

வெறி தீர்த்த ராஜபக்ஷே உள்ளே சிக்குவாரா?

புது மாப்பிள்ளைபோல உலக நாடுகளை வலம் வந்த இலங்கை அதிபர்

ராஜபக்ஷே, இப்போது மன உளைச்சலில் சிக்கித் தவிக்கிறார்! ஈழத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான 'ஐ.நா. பொதுச் செயலாளர் குழு’ வெளியிட்டுள்ள அறிக்கைதான் இதற்குக் காரணம்! 
ஈழப் போரின் கடைசிக் காலம் பற்றி விசாரித்து, தனக்கு ஆலோசனை சொல்ல கடந்த ஆண்டு ஜூன் 22-ல்  ஒரு குழுவை அமைத்தார்,

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன். வட கொரியாவுக்கான ஐ.நா-வின் சிறப்புத் தூதரான இந்தோனேஷியாவின் மர்சுகி தருஸ்மன், தென் ஆப்பிரிக்க மனித உரிமை ஆர்வலரான யாஸ்மின் சூக்கா, அமெரிக்காவைச் சேர்ந்த சட்ட நிபுணர் ஸ்டீவன் ராட்னர் ஆகியோர் குழுவில் நியமிக்கப்பட்டனர்.

இந்த குழுவின் நியமனத்தையே கடுமையாக எதிர்த்தது இலங்கை அரசு. ''அந்த மூவர் குழு நாட்டுக்குள் வந்தால், அவர்களை அனுமதிக்க மாட்டோம்!'' எனப் பகிரங்கமாகவே சொன்னார் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்.
இந்த மிரட்டலுக்கு ஐ.நா. தரப்பில் குறிப்பிடும்படியான பதில் எதுவும் தரப்படவில்லை. இலங்கைக்குள் போகாம​லேயே விசாரணையை முடித்தது மூவர் குழு!

கடந்த 12-ம் தேதி பான் கி மூனிடம் அறிக்கையைச் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையைப் பகிரங்கமாக வெளியிடு​வதற்கு முன்பே, இலங்கை அரசுக்கு அனுப்பிவைத்​தார் பான் கி மூன். முறைப்படி அறிவிக்கப்படும் முன்பே, கொழும்பு பத்திரிகை மூலம் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வெளியானது.

''இலங்கை ராணுவம் செய்தது போர்க் குற்றம்தான்!'' என அடித்துச் சொல்லும் இந்த அறிக்கை, ''2008 செப்​டம்பர் முதல் 2009 மே 19 வரை வன்னிப் பகுதியில் இலங்கை ராணுவம் பெரிய அளவிலான குண்டு வீச்சுகளை நடத்தியதில், ஏராளமான பொது மக்களைக் கொன்று குவித்துள்ளது. வன்னியின் 3.3 லட்சம் மக்களை​யும் போரினால் சுருங்கிய குறுகிய பிரதேசத்தில் மொத்தமாக ஒதுங்கச் செய்தனர்.

'தாக்குதலற்ற பகுதி இது’ என்று அறிவித்துவிட்டு, ஒட்டுமொத்தமாக அங்கு குவிந்த மக்கள் மீது கனரக ஆயுதங்களைக்கொண்டு தாக்கினர். 

மருத்துவமனைகள் எனத் தெரிந்தும் அரச படைகள் அவற்றின் மீது குறிவைத்து, எறிகணைகள், மோர்ட்டர்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஐ.நா. அவையின் உணவு, உதவி முகாம்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்க வாகனங்கள், உதவிக் கப்பல்களும் அரசப் படைகளின் குண்டுவீச்சுகளுக்குத் தப்பவில்லை. சில மருத்துவமனைகள் மீது பல முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதலால் படுகாயம் அடைந்த மக்களுக்கு உயிர்த் தேவையான அடிப்படை சிகிச்சைகூடக் கிடைக்கவிடாமல், மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தியது இலங்கை அரசு.

2009 ஜனவரி முதல் மே வரை மட்டுமே பத்தாயிரக்​கணக்கில் மக்கள் இப்படி அடையாளம் தெரியாமல் செத்துப்போனார்கள். சண்டைப் பிரதேசத்தில் இருந்து தப்பியவர்​களிடம், அரசுத் தரப்பு மிக மோசமாக நடந்துகொண்டது. விடுதலைப் புலிகள் என சந்தேகப்​பட்டவர்களை எல்லாம் ரகசியமாகக் கொண்டு​போய், கணிசமானவர்களைக் கொன்றுபோட்டது ராணுவம். அவர்களில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாகத் தெரிகிறது. 

தப்பியவர்கள் அனைவரும் முகாம்களில் நெருக்கடியாக அடைக்கப்பட்டனர். விசாரணைக்கு ஆளா​னவர்கள், கடுமையாக சித்ரவதை செய்யப்​பட்டனர். புலி என சந்தேகிக்கப்​பட்டவர்கள் வெளியுலகுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவாறு சொல்லவொண்​ணாத சித்ர​வதைத் துன்பங்களுக்கு ஆளாக்கப்​பட்டனர்!'' எனக் குற்றம் சாட்டும் ஐ.நா. நிபுணர்கள், புலிகள் மீதும் போர்க் குற்றம் சுமத்தியுள்ளனர்.

''போர்ப் பிரதேசத்தில் பொது மக்களைக் கேடயங்களாகப் பிடித்து​வைத்து, விடுதலைப் புலிகள் அங்கிருந்து நகரவிடாமல் செய்தனர். 14 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களையும் அவர்கள் கட்டாய​மாகப் படையில் சேர்த்தனர். பிப்ரவரி மாத காலத்தில் தப்பிச் செல்லும் பொது மக்களையும் அவர்கள் தாக்கினர்'' என்றும் ஐ.நா. நிபுணர் குழு குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமைக் குற்றச்சாட்டுகளை அடுத்து, நல்லிணக்க ஆணைக் குழு என்ற ஒன்றை இலங்கை அரசு அமைத்தது. சண்டை நிறுத்தம் தொடங்கிய 2002 முதல் 2009 மே வரையிலான இனப் பிரச்னை குறித்து விசாரிப்பதாக அறிவிக்கப்பட்ட இந்தக் குழுவைப்பற்றியும், ஐ.நா. நிபுணர்கள் காட்டமாக விமர்சித்து இருக்கின்றனர். 

''இலங்கை அரசு அமைத்த நல்லிணக்க ஆணைக் குழு, சர்வதேச மனித உரிமைச் சட்ட விதிகளின்படி அமைக்கப்படவில்லை. இறுதிக் கட்டப் போரில் உண்மையில் என்ன நடந்தது என்பதுபற்றி நேர்மையாக விசாரிக்கவும் இல்லை. பாதிக்கப்பட்ட துயரத்தில் இருப்பவர்களை மரியாதையாக நடத்தாததுடன், சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பையும் வழங்கவில்லை. ஏற்கெனவே, பான் கி மூனும் ராஜபக்ஷேவும் கூட்டறிக்கையில் ஒப்புக்கொண்டதற்கு மாறாக, இந்த நல்லிணக்க ஆணைக் குழு பெரும் தவறைச் செய்துவிட்டது!'' என்றும் நிபுணர் குழுவினர் குற்றம் சாட்டினர்.
ஆனால், வேதனை என்ன தெரியுமா? போர்க் குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கை அரசே, மனித உரிமை மீறல்கள், மனிதகுல விரோத அத்துமீறல்கள் குறித்து நேர்மையாக விசாரணையைத் தொடங்க வேண்டும். 

இந்த விசாரணையைக் கண்காணிப்பதற்கான சர்வதேச முறை ஒன்றை பான் கி மூன் ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது அறிக்கை.
மேலும், ''இலங்கை அரசு மற்றும் அதனுடன் சேர்ந்து இயங்கும் ஆயுதக் குழுக்களின் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் நிலைமை தொடர்பாக உடனடியாக அரசுத் தரப்பு புலன்விசாரணையை நடத்த வேண்டும். புலி என சந்தேகிக்கப்படுவோர் உள்பட பிடித்துவைக்கப்பட்டு உள்ள அனைவரின் பெயர்களையும் அறிவிக்க வேண்டும். அவர்களின் குடும்பத்தினருடனும், வழக்கறிஞர்​களுடனும் தொடர்புகொள்ள அனுமதிக்க வேண்டும். பிடித்துவைக்கப்​பட்டதை எதிர்த்து சட்ட ரீதியாக வாதாடவும் அனுமதிக்க வேண்டும். 

மக்களைப் பய பீதியில் ஆழ்த்தி, சுதந்திரத்தைத் தடுக்கும் அனைத்து வித அரச வன்முறைகளையும் நிறுத்த வேண்டும். கடைசிக் கட்டப் போரின்போது ஏராளமான மக்கள் படுகொலை செய்யப்பட்டதில் அரசின் பங்குபற்றி பகிரங்கமாக விளக்கம் ஒன்றை வெளியிட வேண்டும். இந்த அறிக்கையின் அடிப்படையில், இலங்கை அரசின் மீதான மனித உரிமை மீறல் தீர்மானத்தை, ஐ.நா. மனித உரிமை ஆணையம் மறு பரிசீலனை செய்யவேண்டும். போரின்போதும், அதன் பின்பும், இலங்கையில் ஐ.நா. அமைப்புகளின் செயல்பாடுகள்பற்றி ஐ.நா. பொதுச் செயலாளர் ஆய்வு செய்ய வேண்டும்!'' என்றும் மூவர் குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

தமிழ் மக்களைப் படுகொலை செய்து சிங்களப் படை செய்த போர்க் குற்றத்தை, ஐ.நா. நிபுணர் குழுவினர் ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து, ''சர்வதேச விசாரணைக் குழுவை பான் கி மூன் அமைத்து, போர்க் குற்றவாளிகளைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

இதைக் கேட்டு ஆவேசமடைந்த ராஜபக்ஷே, ''ஐ.நா-வுக்கு எதிராகப் போராட்டம் நடத்துங்கள்!'' என்று சிங்கள மக்களைத் தூண்டிவிட்டுள்ளார். ''உறுப்பு நாடு என்கிற முறையில் இலங்கையை ஐ.நா. காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால், ஐ.நா. பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகார​முள்ள சீனா, ரஷ்யாவின் உதவியை நாடுவோம்!'' என மிரட்டும் தொனியில் பேசியுள்ளார் ராஜபக்ஷேவின் தம்பி கோத்தபய ராஜபக்ஷே.

புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் அமைப்புகளோ, ''முக்கியமான சில உண்மைகளை இந்தக் குழு ஒப்புக்​கொண்டுள்ளது. போர்க் குற்றத்தை வேடிக்கை பார்த்த ஐ.நா. அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுபற்றி இதில் எந்தக் குறிப்பும் இல்லையே! எமது மக்களைத் துடிக்கத் துடிக்க சிங்களப் படை கொன்று குவித்தபோது, தடுத்திருக்க வேண்டிய ஐ.நா., இனி மேல் நீதியைத் தரும் என்று நம்பிவிட முடியாது!'' என்று பரவலாகக் கருத்துகளைத் தெரிவித்து உள்ளன.

வெள்ளைக் கொடி ஏந்திச் சென்ற நடேசன் குழுவினரைப் படுகொலை செய்தது தொடர்பாக, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஐ.நா-வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியான பாலித கோகன்ன மீது வழக்கு தொடுத்துள்ளது, சுவிஸ் ஈழத் தமிழர் அவை. அவையின் சட்ட ஆலோசகரும் இந்த வழக்கைத் தொடர்ந்தவர்களில் ஒருவருமான லதான் சுந்தரலிங்கத்திடம் இந்த அறிக்கைபற்றிக் கேட்டபோது, சட்ட நுணுக்கங்களை விவரித்தவர், ''சிங்களப் படை செய்த போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்கள் எம்மிடம் ஏராளமாக உள்ளன. இதைவைத்து, இலங்கை அரசுத் தரப்பை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி சர்வதேச சட்டங்களின் மூலம் நாமே தண்டனை பெற்றுத் தருவதுதான் சிறந்த வழி. கட்டாயம் நம்மால் இதைச் சாதிக்க முடியும். உலகின் எந்த சக்தியாலும் இதைத் தடுத்துவிட முடியாது!'' என்றார் உறுதியுடன்.

அவர்கள் சரி, தாய்த் தமிழகம் இதில் என்ன செய்யப்போகிறது?! 

 நன்றி- இரா.தமிழ்க்கனல்-