கொரானாவின் நான்காவது ஊரடங்கின் போது தமிழகத்தில் ஒரு அதிசயம் நடந்தது. தமிழகத்திலிருந்து வெளிவரும் அச்சு ஊடக முதலாளிகள் ஒன்று சேர்ந்து பாரபட்சமின்றி தமிழகத்தில் உள்ள ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளைச் சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். மேலும் சில முதலாளிகள் அதில் கையெழுத்துப் போட்டு இருந்தார்கள். ஒரு நூற்றாண்டுக் காலப் பாரம்பரியம் கொண்டு மக்கள் விருப்பத்தில் முன்னிலையில் இருக்கும் தினசரி பத்திரிக்கைகள் முதல் வாரம் தோறும் சில லட்சம் பிரதிகள் விற்கும் வார இதழ்கள் வரைக்கும் கடந்த பத்து வாரத்தில் மிகப் பெரிய பொருளாதார இழப்பைச் சந்தித்து விட்டன.
அச்சடித்த பத்திரிக்கைகளும், இதழ்களும் அச்சகத்திலேயே இருக்கும் சூழல் உருவானது. தடைகளைத் தாண்டி தமிழகம் எங்கும் வந்த போதிலும் கொரானா பயத்தால் விநியோகிப்பவர் யாருமில்லாமல் பத்திரிக்கைகள் அங்கங்கே விநியோகிக்காமல் தேங்கிப் போயின. பல முதலாளிகள் அழாத குறையாகப் பேட்டி கொடுத்தனர்.


