Tuesday, May 09, 2023

ஏண்டா முப்பதாயிரம் கோடியை உங்கள் பிணத்தோடு வைத்துக் கூடப் புதைக்க மாட்டார்களே?

சென்ற வருடமும் இந்த வருடமும் அரசு பள்ளிக்கூடம் மற்றும் அரசு கலைக் கல்லூரிகளை அதன் நிர்வாக அமைப்பு, ஆசிரியர்கள், பேராசிரியர்கள், இயங்கும் விதம் மிக நுணுக்கமாகக் கவனித்து வருகிறேன். காரணம் ஒரு தலைமுறை (30 வருடங்கள்) இடைவெளியில் நடந்த மாற்றங்கள் என்னைத் திகைக்க வைத்துக் கொண்டு இருக்கின்றது.




கூடவே சென்ற வருடம் மற்றும் இந்த வருடத்துடன் சேர்த்து நீட் தேர்வு, பயிற்சி, மாணவர்களின் மனோநிலை, அவர்களின் உண்மையான ஐக்யூ, நம் கல்வித்திட்டம், குறைபாடுகள், நிஜமாகவே களைய வேண்டிய பிரச்சனைகள், என்ன மாற்றங்கள் தேவை என்பதனைப் பற்றி (நீண்ட பதிவு)...

தமிழ்நாடு முழுக்க எட்டு லட்சம் குடும்பங்கள் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு எப்போதும் போல இன்று காலை 9.30 க்கு வெளிவந்து விடும் என்று அலைபேசி கணினி முன்னால் அமர்ந்து நகம் கடித்துக் கொண்டு இருந்த நேரத்தில் ரசிகர் மன்றத் தலைவருக்கு ராத்திரி முழு நேர பணி இருந்த காரணத்தால் காலை 10.30 மணிக்கு மேல் கூச்சமே இல்லாமல் நூலகத்திற்கு வந்து அறிவிப்பு வெளியிட்ட பின்பு ஒன்றரை மணி நேரம் கழித்து தேர்வு முடிவுகள் வந்தது.

இங்கு ஒரு பெரிய பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் கவனம் செலுத்தி வந்தேன். ஆச்சரியம் என்னவெனில் தொழிற்கல்வி மாணவர்கள் அனைவரும் நல்ல மதிப்பெண்களுடன் முழுமையாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். (காரணம் கீழே எழுதியுள்ளேன்) பள்ளியில் முதல் மதிப்பெண் 593/600

அரசு பள்ளிகளில் ஆல் பாஸ் என்ற அரசின் கொள்கை முடிவு காரணமாக ஆசிரியர்கள் தங்கள் கடமைகளில் இருந்து ஒதுங்கி விடுகின்றார்கள்? பத்தாம் வகுப்பு வந்து சேரும் மாணவர்கள் எழுத வாசிக்க மிகவும் தடுமாறுகின்றார்கள். அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு இன்னமும் ஆங்கிலம் என்பது பயமுறுத்தக்கூடிய பாடம் தான். பலரும் ஹிந்தி மொழி அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கும் வேண்டும் என்று எழுதும் போது மனதிற்குள் சிரிப்பு வரும். அவர்களின் பாதிக்குப் பாதிப் பேர்களுக்கு இன்னமும் தமிழ் என்பது தகறாறுக்குரியதாகவே உள்ளது. சரியான ஆசிரியர்கள் எங்கங்கு இருக்கின்றார்களே அவர்களின் சுய ஆர்வம் மற்றும் அவர்கள் மனசாட்சி காரணமாக தத்தமது மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கின்றது.

நம்பினால் நம்புங்கள். இங்குள அரசு பெண்கள் கலைக்கல்லூரிகளின் தற்போது முதல் ஆண்டு பயிலும் மாணவிகளில் குறிப்பிட்ட சில துறைகளில் தாய் மொழியை வாசிக்கவே தடுமாறுகின்றார்கள். பேராசிரியர்கள் நாங்கள் ஆங்கிலத்தில் தான் பாடம் நடத்துவோம். நீ தான் முயற்சி எடுத்து வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினாலும் தாழ்வு மனப்பான்மை யில் இருந்து அவர்களால் வெளியே வரவே முடியவில்லை. காரணம் ஆங்கிலம் என்பது படுசுத்தம். இவர்கள் அனைவரும் திருப்பூரைச் சுற்றியுள்ள அரசு பள்ளிக்கூடங்களில் படித்தவர்கள்.

இன்றைய பள்ளிக்கல்வித்துறை ஆணையர் திரு. நந்தகுமார் இஆப அவர்களைக் கல்வி அமைச்சர் என்ற பெயரில் இருக்கும் ரசிகர் மன்றத் தலைவன் முதல் பல்வேறு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வரை அத்தனை பேருக்கும் முதன்மை எதிரியாக இருந்தாலும் கூடக் கடந்த இரண்டு வருடங்களில் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி மிகப் பெரிய அஸ்திவாரத்தை உருவாக்கியுள்ளார். இனிவரும் காலங்களில் பலன் அளிக்க வாய்ப்புண்டு.

தனியார்ப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு வரைக்கும் நன்றாகக் கறந்து விட்டு இவன் தேற மாட்டான் என்று முடிவுக்கு வந்தவுடன் எழுதி வாங்கிக் கொண்டு வெளியே அனுப்பி விடுகின்றார்கள். கௌரவம் என்ற பெயரில் தங்கள் வாரிசுகளைப் பலிகொடுத்த பெற்றோர்கள் ஒரு பக்கம். பத்தாம் வகுப்பு வந்த மாணவர்களை எப்படியும் படிக்க வைக்க முடியாமல் தடுமாறும் அரசு பள்ளிக்கூட ஆசிரியர்கள் மறுபக்கம். தனித்தேர்வர் என்கிற வகையில் வருடம் ஒரு லட்சம் மாணவர்கள் இங்கு எழுவது எவர் கண்ணுக்கும் தெரிவதில்லை.

தனியார் பள்ளிக்கூடங்களின் குறைந்தபட்சம் தொகையாகக் கணக்கு வைத்து (மெட்ரிக்) பார்த்தால் ஒரு மாணவர் 10,11,12 இந்த மூன்று வகுப்பு கடந்து வர 4 முதல் 5 லட்சம் செலவாகின்றது. சிபிஎஸ்சி என்றால் இதில் இருந்து பள்ளியின் பிராண்ட் நேம் பொறுத்துக் கூடுதலாகும்.

தற்போது பள்ளிகளே கலைக் கல்லூரிகளும் வைத்து உள்ளனர். மதிப்பெண் இருந்தால் கட்டணம் முழுமையாக இலவசம், கட்டணச் சலுகை என்ற தூண்டில் முள் என்பதனை அறியாமல் மூன்று வருடங்கள் 4 முதல் 5 லட்சம் செலவளிக்கும் கீழ் நடுத்தரவர்க்கம் செலவழிப்பது கல்விக்கல்ல. அவர்கள் கௌரவம் காப்பாற்றப்படுவதற்கு என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற கல்லூரிகளில் படிப்பவர்கள் கட்டாயம் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்களில் (சிறிய பேரங்காடி ) ரசீது போடும் எந்திரங்களின் முன்னால் தினமும் அசராமல் 12 மணி நேரம் நின்று கொண்டு உழைக்கின்றார்கள். அவர்கள் கல்லூரிக்குச் செலவழித்த தொகையை எடுக்க கட்டாயம் மூன்றாண்டுகள் உழைத்தே ஆக வேண்டும்.

முக்கிய நகரங்களில் அரசுப் பள்ளிகளில் தேவைக்கேற்ப ஆசிரியர்கள் ஓரளவுக்கேனும் இருக்கின்றார்கள். இங்கும் தொழில் கல்வி சார்ந்த படிப்புகளில் ஐந்து ஆசிரியர்கள் தேவை எனில் ஒரே ஓர் ஆசிரியர் தான் இருக்கின்றார். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பெற்றோர் ஆசிரியர் கழகம் இயல்பாக சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. இவர்கள் அதைக் கலைத்து அதனை அரசியலாக மாற்றி கட்சி சார்ந்த நபர்களை உள்ளே நுழைத்து தற்போது கந்தர் கோலமாகி தலைமையாசிரியர் எந்த முடிவும் எடுக்க முடியாமல், பயந்து கொண்டு தடுமாற்றத்துடன் ஒவ்வொன்றையும் தள்ளிப் போட்டுக் கொண்டே தன் வேலையைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே தினசரி கடமையாக வைத்துள்ளார்

நீட் தேர்வு இங்கே வந்தவுடன் நான் உணர்ந்து கொண்ட சில விசயங்கள்.

அந்தத் தேர்வுக்குத் தங்களை எப்படித் தயார் படுத்திக் கொள்வது என்பது பெரும்பாலான ஆசிரியர்களுக்கே இங்கே தெரியவில்லை. ஒரு விசயத்தை நாலைந்து விதமாக மாற்றி மாற்றி கேட்கும் போது அதனை அவர்களால் எப்படி மாணவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்பது தெரியவில்லை. குறிப்பாக மாணவர்கள் நீட் தேர்வில் எளிதாகத் தேர்ச்சி பெற வேண்டும் என்றால் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு அனைத்துப் பாடங்களையும் நீட் தேர்வில் எப்படிக் கேள்வி பதிலில் கேட்கின்றார்களோ அப்படி அப்ஜக்ட்டிவ் வகைக் கேள்வி பதில் போல மாற்றியாக வேண்டும். முதலில் அந்தந்த பாட ஆசிரியர்கள் தங்களை அதற்குத் தகுந்தாற் போல மாற்றிக் கொண்டால் தான் மாணவர்கள் மாற முடியும்.

பத்து வருடங்கள் மனப்பாடம் என்ற செக்குமாட்டுச் சூழலில் சுழலில் பயின்று வந்த மாணவர்களுக்கு நாம் விருப்பப்பட்டுத் தனிப்பட்ட முறையில் மூன்று மாதங்கள் பயிற்சி அளித்தாலும் செடி வாடாமல் இருக்க ஊற்றப்படும் நீர் போலத்தான். அவர்கள் பயத்தை போக்கவே முடியவில்லை. காரணம் சிந்திக்கக் கூடிய கல்வித்திட்டம் இங்கே இல்லை. அதனை நம் அரசியல்வாதிகள் விரும்புவதும் இல்லை.

மருத்துவ கனவுகளுடன் இருக்கும் மாணவர்களுக்கு தனி குரூப் உருவாக்கி விடலாம். 90 சதவிகித மாணவர்கள் பாடச்சுமையில் செத்து சுண்ணாம்பாகி விடுகின்றார். கட்டாயம் டிசம்பர் மாதத்திற்குள் முழு சிலபஸ் முடிக்க ஒவ்வொரு ஆசிரியர்களும் ஓடி ஓடி நடத்தி ஒரு மண்ணும் புரியாமல் பாஸ் ஆனால் போதும் என்று இரண்டு பக்கமும் பரஸ்பரம் சோர்ந்து போய் நிற்கின்றார்கள். அதாவது தற்போது கல்வி என்பது பெருஞ்சுமை. ஆசிரியர்களுக்கு. மாணவர்களுக்கு. பெற்றோர்களுக்கும்.

தினமும் முழுப் பக்கங்களில் வரும் தனியார் கல்லூரிகள் சார்ந்த விளம்பரங்கள் (அச்சு ஊடகங்கள்) நீட் ஒழிக என்று நாமும் உரக்கச் சொன்னால் ஆளுங்கட்சி ஏதாவது ஒரு பதவி கொடுத்து விடும் என்று செயல்படுகின்ற செய்தி ஊடகங்களில் பேசும் புத்திசாலிகள், அடுத்து என்ன படிக்கலாம் என்கிற வகையில் வீசப்படும் விதம் விதமான தூண்டில்கள், கல்வியாளர்கள் என்ற பெயர் டியூப் முதல் பல்வேறு இடங்களில் வாயை வாடகைக்கு விடும் வாய் விபச்சாரன்கள், ஆலோசகர்கள் என்ற பெயரில் அடுத்தவர் காசை கூசாமல் ஆட்டையைப் போடும் அயோக்கியர்கள் என்று பெருங்கூட்டத்தைக் கண்டும் காணாமல் கடந்து இவர்களிடம் உங்களை அடகு வைத்து உங்கள் பணத்தை இழக்காமல் இருக்க என் வாழ்த்துகள்.

கடைசியாக

அவர்கள் எங்களைப் படிக்க விடாமல் தடுத்து வைத்திருந்தார்கள்? என்று இன்று வரையிலும் கூக்குரலிட்டுக் கொண்டு இருக்கும் கூமுட்டைகளிடம் ஒரே கேள்வி கேட்டுப் பாருங்கள்.

ஏண்டா முப்பதாயிரம் கோடியை உங்கள் பிணத்தோடு வைத்துக் கூடப் புதைக்க மாட்டார்களே? குறைந்தபட்சம் தேவைப்படும் அரசுப் பள்ளி கல்லூரிகளில் தேவைப்படும் ஆசிரியர்களையாவது நியமிக்கலாமே? ஏண்டா இவர்களைப் படிக்க விடாமல் இம்சிக்கின்றீர்கள்? என்று கேட்க அவர்களை கண்டா வரச்சொல்லுங்க?

பின்குறிப்பு

தனிப்பட்ட அறம் என்பதே தேவையில்லை. எங்களுக்கு பணம் என்பது தான் முக்கியம் என்பதனை கருத்தில் கொண்டு செயல்படும் ஊடகம் என்பது எப்படி தமிழகத்தில் செயல்படுகின்றது என்பதற்கு நேற்று மதுரையில் நீட் தேர்வு நடந்த யாதவா கல்லூரியில் தமிழ் இந்த திசை இந்த தினசரியை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கியது.

மீதி உங்கள் யூகத்திற்கே.

இத்தனை மாபியாக்களை கடந்து தான் இங்கே ஒரு மாணவர் மாணவியர் தங்கள் இலக்கு நோக்கி நகர வேண்டும். நகர முடியும். பெற்றோர்கள் நீங்கள் முதலில் உங்களை தயார் செய்து கொள்ளுங்கள்.

No comments: