Thursday, July 30, 2020

OMR - கொரானா உருவாக்கிய மாற்றங்கள்

நண்பர் பகிர்ந்துள்ள செய்தி.

*கொரானா பாதிப்பில் சென்னை OMR IT COMPANY மற்றும் அதை நம்பியுள்ள தொழில்களும்:*

ஐடி துறையில் வொர்க் ஃப்ரம் ஹோம் நிறைய பிசினசுக்கு ஆப்பு வச்சுடுச்சுன்னு தான் சொல்லனும்.

இந்த ஐடி துறையை நம்பிதான் சென்னை ஓஎம்ஆர் சாலை முழுக்க வானுயர்ந்த கட்டிடங்கள் வணிக வளாகங்கள்ன்னு கடந்த 20 வருஷத்துல எக்கச்சக்கமா வளர்ந்துச்சு.


பலரது வியாபாரம் பெருகிச்சு. ஏராளமான அடுக்குமாடிக்குடியிருப்புகள் உருவாச்சு. பல முன்னணி வர்த்த நிறுவனங்கள் குறிப்பாக ஆட்டோ மொபைல் இன்ட்டஸ்ட்ரி, ஹோட்டல்கள், பிராண்டட் ரெடிமேட்ஷோரூம்ஸ், மொபைல் ஷோரூம்ஸ், சர்வீஸ் சென்டர்ஸ் எல்லாம் இவங்களை நம்பி கடைகளை விரிச்சாங்க.

இப்போ வொர்க் ஃப்ரம் ஹோம்ல செலவினங்கள் கணிசமா குறைஞ்சு போச்சு. கீ போஸ்ட்ல இருக்கறவங்க மத்தவங்களை மானிட்டர் பண்ண ஆயிரம் சதுர அடி அளவுல கட்டிடம் இருந்தா போதும். அதுவும் அந்த ஏரியாலதா இருக்கனும்கிறதும் இல்லே.

இந்த வொர்க் ஃப்ரம் ஹோம்ல ஐடி நிறுவனங்களுக்கு இலட்சக்கணக்கான ரூபாய் வாடகை மிச்சம். கரன்ட் பில் மிச்சம். தண்ணீர், பேன்ட்ரி, ஹவுஸ் கீப்பிங், செக்யூரிட்டி இன்ன பிற செலவினங்கள்ன்னு எதுவும் இருக்காது. அதனால பல முன்னணி நிறுவனங்கள் சின்ன கட்டிடங்களுக்கு தங்களது அலுவலகத்தை மாற்ற முயற்சிக்கின்றன.

ஓம்எம்ஆர் ல இருக்கற ஆயிரக்கணக்கான வணிக வளாகங்கள் இதனால காலியாகற சூழல் வரலாம். கமர்சியலுக்காக கட்டியிருக்கற கட்டிடங்களோட டிசைனை இனி டொமஸ்டிக் பர்ப்பசுக்கு மாத்தவும் முடியாது. மாத்த முயற்சி பண்ணா ஏகப்பட்ட சிக்கல்கள்.

இந்த பில்டிங்குகளை கோடிக்கணக்கில் செலவு பண்ணி (வங்கிகள்ல கடன் வாங்கி கட்டிய கட்டிடங்கள் தான் ஏராளம்) கட்டி வாடகைக்கு விட்டு அதுல கிடைச்ச வருமானத்துல இஎம்ஐ கட்டிட்டு தங்களுடைய வாழ்க்கையை நடத்திகிட்டு இருந்தவங்க நிலை இப்போ ரொம்ப பரிதாபம். ஐடி நிறுவனங்கள் ஒன்றன்பின் ஒண்ணா காலிபண்ணிட்டா அந்த ஏரியாலே இதைச் சார்ந்த மத்த வியாபாரங்களும் படுத்துடும்.

வொர்க் ஃப்ரம் ஹோமில் நிர்வாகத்திற்கு செலவினங்கள் மிகமிகக்குறைவு என்பதை அறிந்து கொண்ட ஐடி நிறுவனங்கள் இனி மிகப்பெரிய கட்டிடங்களில் இயங்க வாய்ப்பிருக்கப்போவது இல்லே. பல நிறுவனங்களில் ஆட்குறைப்பும் செஞ்சுகிட்டேவர்றாங்க. இந்த நிறுவனங்களையே நம்பி கான்ட்ராக்ட் பேசிஸ்ல ஓடிகிட்டு இருந்த ‍டிரான்ஸ்போர்ட் சர்வீஸ், கேண்ட்டீன் தொழில் எல்லாம் மோசமான சூழலை சந்திக்க நேரிடலாம்.

கமர்சியல் கட்டிடங்களை ஒண்ணும் பண்ணவும் முடியாது. ஐடி துறைக்கு அடுத்தபடியாக அந்த விஸ்தாரமான சதுர அடி கொண்ட பல அடுக்கு மாடி கட்டிடங்களுக்கு வேறு எந்த துறையும் வர்றதுக்கு வாய்ப்பில்லே. அப்போ அந்த கட்டிடங்களோட நிலைமை?

இந்த ஏரியாவில் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு லோன் கொடுத்த வங்கிகள் இனி தவணையை வசூலிக்க ரொம்ப சிரமப்படனும். வாடகையே இல்லாத கட்டிடத்துக்கு கமர்சியல் டாக்ஸ் இலட்சக்கணக்குல எப்படி கட்றது? இந்த கட்டிடங்களை ஏலத்துக்கு விட்டாலும் எடுக்க யாரும் முன்வரப்போறது இல்லே.

கொரோனா வந்தாலும் வந்துச்சு. இன்னைக்கு பல தொழில்களை தன்னுடைய கோரக்கரங்களால் நசுக்கி போட்டுடுச்சு. பலருக்கு வாழக்கையில் சிக்கனத்தை கத்துக்கொடுத்து இருந்தாலும் இலட்சக் கணக்கானோரின் வாழ்வாதாரத்தை சிதைச்சுடுச்சுன்னு தான் சொல்லனும்.

சென்னைக்கு பெருமை சேர்த்த ஓஎம்ஆர் சாலையானது இந்த கொரோனா முடிந்து சந்திக்கப்போகும் சவால்கள் ஏராளம். மீண்டு வருவதற்கான வழிமுறைகளை பொருளாதார வல்லுனர்கள் ஆய்வு செய்யவேண்டும்.
இந்த கட்டிடங்கள் கட்டியவர்களாகட்டும், ஐடி துறையையே நம்பி அங்கே தொழில் நடத்திக்கொண்டிருந்த பலரது வாழ்வாதாரம் ஆகட்டும், கொரோனா தாக்கம் முடிந்த பிறகு என்ன ஆகப்போகின்றது என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்த ஓஎம்ஆர் ரோடுல ஏராளமான ஹாஸ்டல்கள், ஐடி துறையில் வேலை செய்யற பெண்களுக்கும் ஆண்களுக்கும் கட்டிடங்களை வாடகைக்கு எடுத்து அதில் சின்ன சின்ன அறைகளா தடுத்து அவங்களை தங்க வைச்சு உணவு சமைச்சுப்போட்டு நல்லகாசு பார்த்தாங்க.

இந்த வொர்க் ஃப்ரம் ஹோம்ல எல்லாருமே அந்த ஹாஸ்ட்டல்களை காலி பண்ணிட்டுப்போய்ட்டாங்க. அது மட்டுமில்லே, இந்த துறையில் இருந்த ஒரு நாலைஞ்சு பேரு ஒண்ணா சேர்ந்து அங்க இருக்கற அபார்ட்மென்ட்டுகளை வாடகை ‍எடுத்து தங்கிகிட்டு இருந்தாங்க. அவங்கள்ல நிறைய பேருகாலி பண்ணிட்டு போய்ட்டாங்க. இதனால அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைய காலியாகிகிட்டே இருக்கு. வேலை பறிபோனவங்க கொடுத்த மூனு மாசம் அட்வான்சை கழிச்சுட்டு அவங்கவங்க சொந்த ஊருக்கு கிளம்பிட்டாங்க.

SRS Travels மட்டும் இந்த ஐடி நிறுவனங்களை நம்பி சுமார் 1000 பேருந்துகளை கான்ட்ராக்ட் பேசிஸ்ல இயக்கிகிட்டு இருந்துச்சு. இப்போ அந்த டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் இந்த லாக்டவுன்ல தொழில் நடத்தமுடியாம சிக்கித் தவிக்குது.
எத்தனை டிராவல்ஸ் நிறுவனங்கள் தங்களது கார்களை இந்த துறைகளில் கான்ட்ராக்ட் பேசிஸ்ல வாடகை விட்டு தங்களது வாழ்வை நடத்திக்கொண்டிருந்தன. அத்தனையும் தற்போது முடங்கிப்போய்டுச்சு.

விடியகாலை 4 to 6
350 முட்டை போன்டா சேல்ஸ் ஆகிடும் ஒரு முன்னணி IT பார்க் முன்னாடி இருக்கிற கடையில்...10 இந்தி காரர்கள் 6தமிழர்கள் வேலை செய்து வந்தனர்.
தண்ணீர்
காய்கறிகள்
முட்டை
மளிகை
இதெர்கெல்லாம் சப்ளை செஞ்சவங்க ...
மொத்தத்தில் ஒரு நாளைக்கு 50000 வரவு செலவு செய்தவர் மனம் நொந்து பேசுகிறார்
இப்போ இந்தி காரங்களும் இல்லை
தமிழர்களும் இல்லை
அவரும் அவர் மனைவி மட்டுமே...
என்ன ஆறுதல் சொல்ரது??

ஓலா உபர் வளர்ந்ததெல்லாம் முழுக்க முழுக்க ஐடி துறையாலதான். இனி அவங்க வாழ்வாதாரம் மோசமாகக்கூடும். வாகனங்களை லோன் போட்டு வாங்கி இந்த நிறுவனங்கள்ல அட்டாச் பண்ணி ஓட்டிகிட்டு இருந்தவங்க வாங்கின கடனுக்கு இஎம்ஐ கட்டமுடியாம தவிக்கறாங்க. அவங்களோட வாழ்வாதாரமும் போய்டுச்சாம் 

10 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

வேதனைதான்
பெரும் பெரும் கட்டிடங்களை வாடகைக்குப் பிடித்துச் செலவு செய்துவந்த நிறுவனங்களுக்கு, கொரோனா புதிய வழியினைக் காட்டியிருக்கிறது. நிறுவனங்களுக்கு செலவு குறையும், அதனை நம்பியிருக்கும் பல துறையினைச் சார்ந்தவர்களுக்கும், பல தொழில்களைச் செய்து வந்தவர்களுக்கும் வரவு இல்லாமல் போய்விடுவது வேதனைதான்.
கோரோனா கூட வலியவர்களுக்குத்தான் உதவி செய்கிறது

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இக்காலகட்டச் சோதனைகளில் இதுவும் ஒன்று. மிகவும் வேதனை.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உண்மைதான்
பிரம்மாண்டமான டீலக்ஸ் அப்பார்ட்மெண்ட்கள் திருப்போரூர் வரையும் அதைத் தாண்டியும் காணப்படுகின்றன. சென்னையில் இருந்து இந்த புறநகர்ப் பகுதியில் குடியமர்த்தப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் ஐடி நிறுவனங்களையும் அதில் பணிபுரிபவர்க்ளையும் நம்பித்தான் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கட்டிடவேலை எலக்ட்ரிகல்.பிளம்பிங் வீட்டு வேலை வரை வாய்ப்புகள் இருந்தன. இனி அவை என்ன ஆகப் போகிறது எனத் தெரியவில்லை
ஐடி நிறுவனங்கள் ருசிகண்டுவிட்டன. வீட்டில் இருந்து பணி புரிவதால் இணையச் செலவும் மின் கட்டணமும் எகிறிக்கொண்டிருக்கிறது. நிறுவனங்கள் இந்த செலவுகளுக்குச் சிறப்பு சலுகை எதுவும் வழங்குவதாகத் தெரியவில்லை.ஊழியர்களோ விட்டில் இருந்து பணிபுரிவதே சலுகை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். போகப்போகத்தான் புர்ந்துகொள்வார்கள் ஒர்க் ஃப்ரம் ஹோம் வரம் அல்ல சாபம் என்பதை

திண்டுக்கல் தனபாலன் said...

ஆடம்பர(மு)ம் இனி கனவே...

ஜோதிஜி said...

சென்னைக்கு வெளியே கிராமங்களுக்கு கிராமங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவைப்படும் மின்சாரத்தை வேளச்சேரி பீனிக்ஸ் மாஸ் ஒரு நாள் பயன்படுத்துகின்றது என்று ஏற்கனவே படித்துள்ளேன். அதே போல ஐடி நிறுவனங்கள் முழுக்க முழுக்க குளிர்சாதன வசதிகளில் (அடைக்கப்பட்ட கண்ணாடி கூண்டு) செயல்படுவது இனி குறையும். மின்சாரத் தேவை தமிழகம் முழுக்க வந்து சேரும். இதுவும் இதில் உருவான மாற்றம்.

ஜோதிஜி said...

அசைவ உணவே கடந்த 90 நாளில் ஆடம்பரமாக மாறிவிட்டதே.

ஜோதிஜி said...

மகள்கள் ஒவ்வொருவரும் அவரவர் பாடத்தை முழுமையாக படித்து விட்டு தினமும் எனக்கு பாடம் நடத்த வேண்டும் என்பது எங்கள் வீட்டில் உள்ள சட்டம். ஜுன் மாதம் உள்ள பாடங்களை அவர்கள் முழுமையாக படித்து நடத்தி முடித்து விட்டார்கள். இப்போது ஜுலை நடந்து கொண்டிருக்கின்றது. ஆகஸ்ட் மாதம் பள்ளி கல்லூரிகள் இல்லை. அடுத்த 30 நாளைக்குள் பாதிப் பாடங்களை முடித்து விடுவார்கள். அவர்களே உணர்ந்து உள்வாங்கி பாடம் நடத்துகின்றார்கள். பள்ளி என்றால் கேள்வி பதிலாக மட்டுமே படித்து இருப்பார்கள். கொரானா தந்த மாற்றமிது.

ஜோதிஜி said...

வாடகை கட்ட பணம், மூன்று நேர சாப்பாட்டுக்குப் பணம் இருந்தால் போதும் என்கிற நிலைக்கு மனம் வந்து நின்று விட்டது என்கிற அளவிற்கு கொரானா பாடம் கற்றுக் கொடுத்து விட்டது.

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

எங்கள் அலுவலகத்தையும் காலி பன்னிட்டாங்க. மறு அறிவிப்பு வரும் வரை யாரும் அலுவலகம் வர வேண்டாம்னு சொல்லிட்டாங்க. இன்னும் ஒரு வருசம் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டியது தான். இப்பவே வீட்ல பல பிரச்சனை. இன்னும் ஒரு வருசம் எப்படி சமாளிக்கறதுன்னு தெரியல.

வெங்கட் நாகராஜ் said...

சோதனைகள் மிகுந்த நாட்களாகவே இருக்கப் போகிறது. விரைவில் சூழல் சரியாகவேண்டும். வீட்டிலிருந்து வேலை செய்வது பல விதங்களில் தொல்லையானது. அலுவலகத்தில் சென்று வேலை செய்வது போல வராது.