Sunday, April 01, 2018

மேலும் சில குறிப்புகள் 9

சூரியன் மறையும் போதே நிழலும் காணாமல் போய்விடும். ம. நடராசன் வாழ்க்கையும் இன்றோடு மண்ணுக்குள் முடிவடைகின்றது. 

பதவி, பணம், அதிகாரம் இந்த மூன்றும் இருக்கும் போது அல்லது இந்த மூன்றில் ஏதாவது ஒன்றாவது நம்மிடம் இருந்தால் மனிதர்களின் பார்வையும், வார்த்தைகளும் எந்த அளவுக்கு இருக்கும் என்பதற்கு நடராசனின் இறுதி அஞ்சலியில் பேசிய இரங்கல் வார்த்தைகளை வைத்தே நம்மால் முடிவு செய்ய முடியும். 

மொழி ஆர்வலர். 
ஹிந்தி எதிர்ப்புப் போராளி 
தமிழ் இலக்கியத்தை விரும்பி முன்னெடுத்தவர். 
ஈழப்போராளிகளுக்கு ஆதரவளித்தவர். 
கொள்கை வேந்தன். 
உதவும் கரங்களுக்குச் சொந்தக்காரர். 
பத்திரிக்கை ஆசிரியர். 
வட மாநில அரசியல்வாதிகள் வரைக்கும் அறிந்து வைத்திருந்த செல்வாக்கு மிகுந்தவர். 

எல்லாமே சரி தான். ஒவ்வொன்றுக்கும் அவர் கொடுத்த விலையைப் பற்றிப் பேசியவர்கள் எவருமே சொல்லவில்லை. இப்போது தான் ஒரே ஒரு செய்தி மட்டும் வெளியே வந்துள்ளது. 

மாயாவதிக்கு கொடுத்த ஆயிரம் கோடி இனி என்னவாகும்? திரும்புமா? இல்லை அது காந்தி கணக்கில் போய்விடுமா? 

இன்று வரையிலும் தொலைக்காட்சியில் புதிய பார்வை பத்திரிக்கை ஆசிரியர் என்று தான் அடைமொழியிட்டு அழைக்கின்றார்கள். சமஸ்தான மன்னர்களுக்கு ஆங்கிலேயர் கொடுத்திருந்த சர் பட்டம் போல. 

கோமல் சுவாமிநாதன் நடத்திய சுபமங்களா இதழ் போலப் புதிய பார்வை இதழும் கவர்ச்சிகரமாகவே இருந்தது. கோமல் கையைக் கடிக்க ஒதுங்கி விட்டார். இவருக்குக் கை மட்டுமல்ல காலும் எந்த நாளும் கடிக்காது. காரணம் லாபத்திற்காகப் பத்திரிக்கை நடத்துவது என்பது வேறு. வெறுமனே தொழிலுக்காக ஒரு பத்திரிக்கையை நடத்த வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இருப்பதென்பது வேறு. இரண்டாவது நிலையில் தான் ம. நடராசன் இந்தப் பத்திரிக்கையை நடத்தி வந்தார். இப்போது இருக்கின்றதா? என்பது தெரியவில்லை. 

இவர் சில மாதங்களுக்கு முன்பே சென்று சேர்ந்திருப்பார். ஆனால் அறந்தாங்கி அருகே உள்ள ஒரு இளைஞர் சாலை விபத்தில் இறக்கும் தருவாயில் இருந்தவரை இவருக்குத் தேவைப்பட்ட உடல் உறுப்புக்காகக் கொண்டு வந்த காட்சிகள் திரைப்படச் சாகசத்தை மிஞ்சுவதாக இருந்தது. 

இப்போது ஆட்சி புரியும் எடப்பாடி அரசு என்பது உங்களுக்கு உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறேன். ஆனால் என் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள நேரிடையான தொடர்பு வேண்டாம் என்கிற ரீதியில் இருப்பதால் இன்று வரையிலும் சசிகலா சிறைவாழ்க்கை கூடச் சிறப்பாகத்தான் உள்ளது. 

இவரின் சாதனை என்பதனை பத்திரிக்கைகள் பலவிதமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளன. அது வெறுமனே சசிகலா, ஜெயலலிதா இருவருடன் உள்ள தொடர்பும் அதன் மூலம் உருவாக்கிய நிழலுக வேலைகளைப் பற்றித்தான் பேசுகின்றார்கள். ஆனால் இவர் மற்றொரு அழகான காரியத்தைச் செய்துள்ளார்.

முதல்முறையாக ஜெ. ஆட்சிக்கு வந்த சமயம். 
ஜெ, தான் ஆட்சிக்கு வந்தவுடன் அதிகாரத்தின் கொடூர முகத்தை உணர்ந்து கொள்ளாமல் என்றும் அதிகாரம் நம்மிடம் தான் இருக்கப் போகின்றது என்பதனை மனதில் வைத்துக் கொண்டு திரைப்படச் சாகச வேலைகளைப் போலவே அதிகார சுவையில் திளைத்தார். ஆனால் அவர் ஆட்சிக்கு வர உதவிய நடராஜன் அப்போதே தன் புனிதப் பணியைத் தொடங்கி விட்டார். 

தன் சாதி சார்ந்த படித்த, படிக்காத ஒவ்வொருவரையும் அரசு சார்ந்த, அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தும் ஒவ்வொரு இடங்களிலும், அதுவும் அதிகாரம் பொருந்திய பதவிகளில் தொடர்ந்து உள்ளே நுழைத்துக் கொண்டேயிருந்தார். அரசாங்கத்தின் வருமானம் வேறு எவருக்கும் போய்விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார். 

தன் உறவுகளை எங்கே வைக்க வேண்டும்? உறவுகளைச் சார்ந்திருக்கும் கட்சிக் காரர்களை எங்கே நிறுத்த வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருந்தார். ஆனால் மொத்த லகானையும் தன் கையில் வைத்திருந்தார். ஒவ்வொரு செயல்பாடுகளில் கவனமாக இருந்தவர் செயல்பாடுகளினால் கிடைத்த லாபத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை மட்டும் மனைவி பார்க்கும்படி வைத்திருந்தார். மனைவி மூலம் மேல் மட்டம், கீழ் மட்டம் என்று மட்டைப்பந்து ஆட்டம் போலவே தினசரி வசூல் களைகட்டியது. 

உறவுகளின் எண்ணிக்கை கூடக்கூட வசூலின் பரிணாமமும் அதிகரித்தது. ஜெயலலிதா தமிழகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு விலை வைத்திருந்தார். ஆனால் கணவரும் மனைவியும் விலைக்குக் கட்டுப்பட்டவர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரங்களைப் பெற்று இருந்தார்கள். ஜெ. வின் எதிர்பார்ப்பு என்பது வெறுமனே கேள்விகளாகவே இருந்தது. ஆனால் அதற்கு விடை எழுதும் முழுத் தகுதியை நடராசனும் சசிகலாவுமே பெற்று இருந்தனர். 

பிறகென்ன? 

பதிலை எழுதுபவர்களே திருத்தும் ஆசிரியர்களாக இருந்தால் எல்லாப்பாடமும் நூற்றுக்கு நூறு தானே? 

வருமானம் எல்லை மீறியது. தமிழக மானம் கப்பலேறியது. கப்பலுக்குக் கேப்டன் ஒன்று ஒருவர் தான் இருந்தார். ஆனால் கப்பலின் கட்டுப்பாடு என்பதோ சசிகலாவின் கையில் இருந்தது. பள்ளிக்கூடம் கூட முழுமையாக முடிக்காத பெண்மணியின் கண் அசைவில் நம் தமிழகம் இருந்தது என்பது நமக்கு எந்த அளவு பெருமை? 

ஊடகங்கள், சட்டங்கள், மத்திய மாநில அரசின் அதிகாரவர்க்கத்தின் அனைத்துக் கதவுகளையும் தன் விருப்பத்திற்காக மாற்றிய பெருமையைப் பெற்ற ஒரே பெண்மணி ஜெ என்றால் அதனைத் தங்களுக்கு எல்லா நிலையிலும் சாதகமாகவே கடைசி வரையிலும் வைத்திருந்த அருஞ்சாதனையைச் செய்தவர்கள் நடராசனும் சசிகலாவும். 

இன்று சசிகலாவின் கணவர் நடராஜன் என்ற பெயர் தான் நிலைத்துள்ளது. 

கடந்த 30 ஆண்டுகளில் அரசாங்கத்தின் ஒவ்வொரு நிலையிலும் இவர் சேர்த்த நபர்கள் சகல துறைகளிலும் இருக்கின்றார்கள். இன்று பலர் ஓய்வு பெற்றுள்ளனர். குறிப்பாகக் கன்பெர்டு ஐஏஎஸ் பதவிகளில் அமர்ந்த பலரும் இவரின் கடைக்கண் பார்வை பெற்றவர்கள். தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் மலைச்சாமி போன்றவர்கள் கூடத் தலைமைச் செயலாளராக வர முடியும் என்பதற்கு இவரே ஒரு முன் உதாரணம். 

இன்று காவல் துறையில் கள்ளர் இனம் சார்ந்த அதிகமான பேர்கள் இருப்பதற்கு முக்கியக் காரணமும் இவரே. ஒவ்வொரு வேலைகளையும், ஒவ்வொரு நிலையிலும் சுருதி சுத்தமாகச் செய்து கொண்டே வந்தார். 

எதிர்காலம் என்பது எப்படியிருக்க வேண்டும்? என்பதனை துல்லியமாக கணக்கில் வைத்திருந்தார். ஈழப்பிரச்சினைக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு முகம். அரசாங்கத்திற்கு மற்றொரு முகம். எதிர்க்கட்சிகளில் இருப்பவர்களிடம் பழக்கவழக்கத்திற்கு ஒரு முகம். அதன் மூலம் அறிமுகமாகி நெருக்கமானவர்களிடம் மற்றொரு முகம் என்று ஒவ்வொரு இடங்களிலும் தன் தயாள குணத்தைக் கடை பரப்பி வைத்திருந்தார். சாதி ஒரு பக்கம் என்றால் மற்றொரு புறம் சமாதானத்தைக் கையில் வைத்துக் கொண்டு கடைசி வரைக்கும் தான் ஒரு ராஜதந்திரி என்பதனை நிரூபித்துக் கொண்டேயிருந்தார். 

இன்று தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இவரின் கடைக்கண் பட்டுத் தொழில் அதிபர்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அநேகம் பேர்கள். பாதிப் பேர்கள் வெளியே தெரிகின்றார்கள். மீதிப் பேர்கள் இப்போது மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருப்பார்கள். தம்பதியினரின் மகத்தான மறுக்க முடியாத சாதனை என்பது தங்களைத் தவிர வேறு எவரும் தொடக்கம் முதல் கடைசி வரைக்கும் ஜெ அருகே நெருங்க முடியாத அளவிற்கு வைத்திருந்த வலைபின்னல் என்பது என்பது இனி எவராலும் செய்ய முடியாத சாதனை.  சோ ராமசாமி தோற்றது கூட எனக்கு இன்னமும் ஆச்சரியமாகவே உள்ளது. 

அடியாட்கள் அதிகாரத்தின் சுவையை அருந்த முடியும். ஆனால் அதிகாரத்தின் உச்சத்தைத் தொட முடியாது. இது தான் மன்னர் ஆட்சி முதல் மக்களாட்சி வரைக்கும் சரித்திரம் நமக்குச் சொல்லும் பாடம். 

தங்களால் வாழ்க்கை பெற்றவர்கள் அனைவரும் உச்சத்தில் இருக்க இன்று எச்சம் போல எவரும் எட்டிப் பார்க்காமல் இருக்கும் வாழ்க்கையோடு மண்ணுக்குள் போய்ச் சேர்ந்துள்ளார். 

கடைசி வரையிலும் தனக்கான வாழ்க்கையை வாழாமல் தான் சென்றுள்ளார்.

வாழ்க்கை சொல்லும் பாடங்கள் எப்போதும் நம்மால் புரிந்து கொள்ள  முடியாததாகவே உள்ளது.


7 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உண்மையிலேயே வாழ்க்கை ஒரு பாடம்தான்.

'பரிவை' சே.குமார் said...

வாழ்க்கை நமக்குச் சொல்லிக் கொடுப்பது அதிகம்... அதை சரியான முறையில் படித்தோமானால் வாழ்க்கையை வாழ்ந்து செல்லலாம் அண்ணா... அருமையான கட்டுரை.

Rathnavel Natarajan said...

அருமை. நன்றி.

ஜோதிஜி said...

தொடர் வாசிப்புக்கு மிக்க நன்றி.

ஜோதிஜி said...

சரியான முறையில் படிக்கத் தானே முயற்சிக்கின்றோம். ஆனால் அடுத்த நாள் ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும் தானே திசை திருப்புகின்றது குமார்.

ஜோதிஜி said...

உண்மை தான் அய்யா. கட்டணம் வாங்காத ஆசிரியர்.

Paramasivam said...

மிக அழகாக அலசி எழுதப்பட்ட கட்டுரை. நடராசனின் உண்மையான வாழ்க்கை வரலாறு புத்தகமாக வந்தால், பலருக்கும் வாழ்க்கைபாடமாக அமையும்.