Wednesday, December 18, 2013

சந்துக்குள் சிந்து பாடலாம்.

நாம் வலைபதிவுகளில் என்ன எழுதுகின்றோம்? எதைப்பற்றி எழுதுகின்றோம்? என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள். 

நீங்கள் வாழும் சமூகத்திற்கும், நடக்கும் நிகழ்வுகளுக்கும் சம்மந்தம் இருக்கின்றதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சில வருடங்கள் கழித்துத் திரும்பிப் பார்க்கும் போது ஒரு பிரச்சனையின் ரூபம் உச்சகட்டத்தை அடையும் போது நம் பார்வை என்ன? என்பதை உணர வாய்ப்பாக இருக்கும். நாம் எழுதி நாடு மாறி விடுமா? என்ற எண்ணத்தைச் சற்றேனும் ஒதுக்கி வைத்து விட்டு வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் சிலவற்றையாவது ஆவணப்படுத்த முயற்சி செய்யுங்கள். 

வலைபதிவுகளில் எழுதி பெரிதான எந்த மாறுதல்களையும் உருவாக்க முடியாது என்ற எண்ணம் கொண்டவர்களாக இருந்தால் அதை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் வந்து கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டில் பத்திரிக்கைகளைப் படிப்பவர்களே குறைவு. இதில் வெகுஜன மக்களுக்குத் தெரியாத வலைபதிவில் எழுதுகின்ற சமாச்சாரங்கள் பொது மக்களுக்கு எங்கே தெரியப்போகின்றது?என்று மனதில் சோர்வு எண்ணம் கொண்டவர்களுக்கு மட்டும் இந்தப் பதிவு

பத்திரிக்கைகளில் உள்ள தகவல்களை வைத்து வலைபதிவுகள் எழுதிய காலம் மாறி தற்பொழுது வலைபதிவுகளில் வரும் விசயங்களை வைத்துப் பத்திரிக்கைகள் ஒப்பேற்றுவதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. 

இந்த வருடம் எழுதியுள்ள சில பதிவுகள் மூலம் கற்றதும் பெற்றதும்

திருப்பூரில் உள்ள நண்பர் வினோத் இது குறித்து அவசியம் எழுத வேண்டும் என்று ஒரு கோரிக்கையை வைத்திருந்தார். சென்றவருடம் அக்டோபர் 30ந் தேதி எழுதிய பதிவு இது. 

சில மாதங்கள் கழித்து ஒவ்வொரு பத்திரிக்கையிலும் இது குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கியது. 

கடைசியில் என்ன நடந்தது? 

சில வாரங்களுக்கு முன் இந்தத் திட்டத்திற்கு நீதிமன்றம் ஒப்புதல் கொடுத்த போது அப்போது நண்பர் பந்து எழுதிய தீர்க்க தரிசன விமர்சனம் இப்போது என் நினைவுக்கு வருகின்றது. 

"இதை எதிர்த்து நீதி மன்றம் செல்ல முடியாதா? கொடுமை என்னவென்றால், கோர்ட் அரசு எடுக்கும் கொள்கை (கொள்ளை?) முடிவுகளில் தலையிடமுடியாது என்று பல சமயம் சொல்லிவிடுகிறது! 

(கேஸ் இருந்தால்) வெந்ததைத் தின்போம். விதி வந்தால் சாவோம் என்று முடிந்துவிடுமா நம் எல்லோரின் நிலைமை?"


"நான் ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களில் தமிழ்நாட்டை மின் மிகை மாநிலமாக மாற்றி விடுவேன்" என்றார் ஜெயலலிதா. ஆனால் இன்று தமிழ்நாடு அனுபவித்துக் கொண்டிருக்கும் மின்சாரப் பற்றாக்குறை என்பதை யாவரும் அறிந்ததே. மத்திய அரசை குறை சொல்வது மட்டுமே தனது தகுதியாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு மாநில முதல்வருக்கு இங்கே இருக்கும் வாய்ப்புகள் குறித்தோ? அதற்காக உழைக்க வேண்டிய தேவை குறித்தோ தெரியாமல் இருப்பது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

மக்களின் சிரமங்களைப் பற்றித் தெரியாதவர்களைப் பற்றி, தெரிந்து கொள்ள விரும்பாதவர்களைப் பற்றி எழுதி ஒன்றும் ஆகப்போவதில்லை. சென்ற ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் "தனியார் மூலம் மின்சாரம் வாங்கினால் மட்டுமே தங்களுக்குச் சேர வேண்டியது கைக்குக் கிடைக்கும்" என்பதே இதன் அடிப்படைக் கொள்கை. மற்றபடி இது சார்ந்த திட்டங்கள் அனைத்தும் கொள்கையளவில் ஆமை வேகத்தில் நடக்கும்... நடந்து கொண்டேயிருக்கும். 

2016-2017 ஆண்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியம் என்பது இல்லாமல் போயிருக்கும். தனியார் மூலம் மட்டும் மின்சாரத்தைப் பார்க்க முடியும். 


லரும் பல சமயத்தில் என்னை நோக்கி சுட்டிக் காட்டிய முக்கியக் குற்றச்சாட்டு, "ஈழ விவகாரங்களைப் பற்றி உணர்ச்சி அடிப்படையில் தான் எழுதுகின்றீர்கள். இது தவறு" என்றார்கள். 

குறிப்பாக நண்பர்களுடன் உரையாடியபோது, ராஜீவ் காந்தி படுகொலையில் தூக்குத் தண்டனைக்காகக் காத்துக் கொண்டிருக்கும் பேரறிவாளன் குறித்துத் தகவல்களைத் தெரிந்து கொண்ட போது அப்போது அவர் அம்மாவின் நேர்காணலை பதிவு செய்து இருந்தேன். 

ராஜீவ் காந்தி படுகொலையில் விசாரனை அதிகாரியாக இருந்த ரகோத்தமன் இந்த வழக்கில் உள்ள ஓட்டைகளைப் பற்றி வாய்த் திறந்தார். தற்பொழுது ராஜீவ் கொலை வழக்கில் "பேரறிவானனின் வாக்குமூலத்தைத் தவறாகப் பதிவு செய்து விட்டேன். பாவ மன்னிப்புத் தாருங்கள்" என்றார் சிபிஜ முன்னாள் அதிகாரி தியாகராஜன். 

தொடர்ந்து இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்வதற்கான தைரியமும், துணிச்சலும் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? 

என் பிள்ளையிடமிருந்துதான். அவன் எந்தத் தப்பும் செய்யவில்லை என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். ஏனெனில், அவனால் ஒரு சின்னத் தவறுகூடச் செய்ய இயலாது. யாரிடம் பேசும்போதும் முகம் கோணும் விதமாக நடந்துகொள்வதை அவன் விரும்ப மாட்டான். யாருடைய முகமும் வாடிப்போவதை அவன் சகித்துக்கொள்ள மாட்டான். யாருக்கும் எந்தத் தொந்தரவும் தரக் கூடாது என்று அவன் எப்போதும் எங்களிடம் சொல்வான். 



டிசம்பர் 3 2013 அன்று இந்தோனேசியாவில் உலக வர்த்தக அமைப்பு மாநாடு தொடங்கியது. இந்தியாவின் சார்பாகத் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ஆனந்த சர்மா இந்திய குழுவினருடன் கலந்து கொண்டார். 159 நாடுகள் கலந்து கொண்டனர். இந்தச் செய்தியை பத்திரிக்கையில் இந்த மாதம் படித்திருக்க வாய்ப்பிருக்கலாம். 

வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளில் உள்ள விவசாயப் பொருட்களை இரும்பு, எண்ணெய் போல வர்த்தகப் பொருளாக மாற்ற வேண்டும் என்றும், இந்தியா போன்ற நாடுகளைத் தங்களது நிறுவனங்களுக்குச் சந்தையாக மாற்றவும் விரும்புகின்றது. இதற்காகத்தான் உலக வர்த்த அமைபு மூலமாக வேளாண் ஒப்பந்தம் போடப்படுகின்றது.இதன் மூலம் உள்நாட்டில் விவசாயிகளுக்குக் கொடுக்கப்படும் மானியங்கள்,ஆதரவு என அனைத்தும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். 

ஏழைகளுக்குக் கொடுக்கப்படும் மானிய உணவுகளும் கட்டுப்படுத்தப்படும். இதன் மூலம் பல்வேறு நாடுகளில் விளைவிக்கப்படும் விவசாயப் பொருட்களை இந்தியாவில் கொண்டு விற்க தடையில்லா ஒப்பந்தம் உருவாக்கப்படும். 

தொடக்கத்தில் ஒப்புக்கொள்ள முடியாது என்ற முழங்கிய நம் வீராதி வீரர்கள் பாலித்தீவு தந்த "சுகத்தில்" நான்கு ஆண்டுகள் கழித்து இந்த ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டு நிறைவேற்றுவோம் என்று மறைமுக ஒப்புதல் கொடுத்து விட்டு வந்துள்ளார்கள். காரணம் காங்கிரஸ் அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள பாராளுமன்றத் தேர்தலே. ஒரு வேளை வருகின்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் நாம் திருவோடு ஏந்த தயாராக இருக்க வேண்டும். 

எப்போதும் போல ஊடகங்கள் மூலம் இந்தியாவிற்கு வெற்றி என்ற கோஷத்தை முன்னிறுத்தியது. ஆனால் உண்மை நிலவரங்களைப் பற்றி விரிவாக எந்த மாநில கட்சிகளும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.


உலக அளவில் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகள் மொத்தமும் சேர்ந்து தங்கள் விவசாயிகளுக்குக் கொடுக்கும் மொத்த மானியத் தொகையே 19 பில்லியன் டாலர்கள் மட்டுமே. ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளின் மானியத் தொகையின் அளவு எவ்வளவு தெரியுமா? 150 பில்லியன் டாலர்கள். 

ஒவ்வொரு முறையும் உலக வங்கி வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளைப் பார்த்து மானியத்தைக் குறைக்க வேண்டும் என்கிறார்களே? 

ஏன்? 

அரசாங்கம் கொடுக்கும் மானியத்தை நிறுத்திவிட்டால் விவசாயி இயல்பாகவே விவசாயத்தை விட்டு வெளியே வந்து விடுவான். பிறகென்ன? தேவைப்படும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலங்களை அபகரிக்க வசதியாகத்தானே இருக்கும். கார்ப்ரேட் பாணியில் விவசாயத்தைத் தொடங்கி விடுவார்கள். ஒரே சமயத்தில் ஒரு உணவுப் பொருளின் விலையை ஏற்றலாம், இறக்கலாம், பதுக்கலாம். பக்கத்து நாடுகளுக்கு ஏற்றுமதி கூடச் செய்யலாம்.

22 comments:

saidaiazeez.blogspot.in said...

நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்!

திண்டுக்கல் தனபாலன் said...

ஆவணப்படுத்தவா...? ஹா... ஹா...

நிழலை நன்றாகவே ஆவணப்படுத்துகிறார்கள்...

உங்களின் முயற்சிக்கு... ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள் அண்ணே...

முன் குறிப்பு : நிழல் = 99.99% சினிமா...!

ராஜி said...

நல்லதொரு முயற்சி. பகிர்வுக்கு நன்றி!

Unknown said...

ஜி .. நல்ல முயற்சி ..


ஆனா தலைப்புகு என்ன சம்பந்தம் ?

மேலும்... http://vimarisanam.wordpress.com/2013/12/13/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%89/

இந்த இடுகையை கொஞ்சம் படிக்கவும்
நன்றி,
வீனோத்

உஷா அன்பரசு said...

நாம் ஒருத்தர் பேசி என்ன மாற்றம் வந்துட போகுதுன்னு நாம் யோசித்தோம் என்றால் ... அதுதான் மாற்றத்திற்கான முதல் தடை...!

உங்கள் சிந்தனையும், முயற்சியும் பிரமிக்க வைக்கிறது....! நன்றி தொடருங்கள்....

கும்மாச்சி said...

நல்ல முயற்சி, பகிர்விற்கு நன்றி.

Avargal Unmaigal said...

/வலைபதிவுகளில் எழுதி பெரிதான எந்த மாறுதல்களையும் உருவாக்க முடியாது என்ற எண்ணம் கொண்டவர்களாக இருந்தால் அதை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம்////
மிக சரியாக சொன்னீர்கள் ஜோதிஜி. இதைபற்றி நானும் எழுத வேண்டும் என்று நினைத்தேன் அதி இன்னும் சில நாட்களில் எழுதுகிறேன் வலைபதிவுகளில் மட்டுமல்ல சமுக தளங்களி எழுதுவதால் நிச்சயம் மாறுதல்களை உருவாக்க முடியும் என்பது எனது கருத்தும் கூட

தி.தமிழ் இளங்கோ said...

// நாம் எழுதி நாடு மாறி விடுமா? என்ற எண்ணத்தைச் சற்றேனும் ஒதுக்கி வைத்து விட்டு வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் சிலவற்றையாவது ஆவணப்படுத்த முயற்சி செய்யுங்கள். //

வலைப்பதிவர்களை நெறிப்படுத்தும் வார்த்தைகள்!

// பலரும் பல சமயத்தில் என்னை நோக்கி சுட்டிக் காட்டிய முக்கியக் குற்றச்சாட்டு, "ஈழ விவகாரங்களைப் பற்றி உணர்ச்சி அடிப்படையில் தான் எழுதுகின்றீர்கள். இது தவறு" என்றார்கள். //

இந்த குற்றச் சாட்டு உண்மைதான். அதனால்தான் இந்த பிரச்சினையைப் பற்றிய உங்கள் கட்டுரைகளில் எனது கருத்துரையை பதிந்ததில்லை. ஆரம்பத்தில் நானும உங்களைப் போலவே உணர்ச்சி வசப்படும் ஒரு தமிழனாகவே இருந்தேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

//நாம் எழுதி நாடு மாறி விடுமா? என்ற எண்ணத்தைச் சற்றேனும் ஒதுக்கி வைத்து விட்டு வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் சிலவற்றையாவது ஆவணப்படுத்த முயற்சி செய்யுங்கள். //
அனைவரும் உணர வேண்டிய பின்பற்ற வேண்டிய வார்த்தைகள் ஐயா நன்றி

Amudhavan said...

\\பலரும் பல சமயத்தில் என்னை நோக்கி சுட்டிக் காட்டிய முக்கியக் குற்றச்சாட்டு, "ஈழ விவகாரங்களைப் பற்றி உணர்ச்சி அடிப்படையில் தான் எழுதுகின்றீர்கள். இது தவறு" என்றார்கள். \\
சில விவரங்களை அறிவுபூர்வமாக அணுகுகிறோம். சில விவரங்களை நடைமுறை அனுபவங்கள் என்ன உணர்த்துகிறதோ அதற்கேற்ப அணுகுகிறோம். சில விவரங்களை நாம் தெரிந்துகொண்டிருக்கும் அல்லது உணர்ந்து கொண்டிருக்கும் அறங்களுக்கு ஏற்ப அணுகுகிறோம். சிலவற்றை உணர்வுபூர்வமாகத்தான் அணுக வேண்டியிருக்கிறது.

தினமும் செத்துக்கொண்டிருக்கும் மக்களைப் பற்றிக் கேள்விப்படும்பொழுதும், நியாய அநியாயங்கள் பற்றிக் கவலைப்படாமல் வெறும் தீமைகள் மட்டுமே தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு விவகாரத்தை, வெறும் வெளிநாட்டுக்கொள்கை சார்ந்தது என்றெல்லாம் சொல்லிக்கொண்டு புள்ளிவிவரங்களை மட்டும் பேசிக்கொண்டு மேலோட்டமாய் அணுகிக்கொண்டிருக்க முடியாது. எல்லாருக்கும் அது சாத்தியமும் இல்லை. உணர்வுபூர்வமாகத்தான் அணுக வேண்டியிருக்கிறது.

அது தற்போதைக்கு மனிதாபிமானமற்ற மனிதர்கள் ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருப்பதால் வெற்றியைத் தரவில்லையே தவிர, அதற்காக இப்படிப்பட்ட அணுகுமுறையே தவறு என்று சொல்வதைப் பெரிதாகக் கருதி மறுபரிசீலனையில் ஈடுபடத் தேவையே இல்லை.

ஜோதிஜி said...

நன்றி தலைவரே

ஜோதிஜி said...

நாம் முடிந்தவரைக்கும் முயற்சிப்போம் தனபாலன்.

ஜோதிஜி said...

நன்றி ராஜி

ஜோதிஜி said...

ஹா ஹா

படித்து விட்டேன்.

ஜோதிஜி said...

நன்றிங்க.

ஜோதிஜி said...

மிக்க நன்றி.

ஜோதிஜி said...

அவசியம் எழுதுங்க நண்பா. அடுத்த பதிவு உங்களின் உதவி தேடி.

ஜோதிஜி said...

ஆனால் சில விசயங்கள் அமுதவன் சொன்னது போலத்தான் உள்ளது என்பது என் கருத்து. அடுத்த பதிவில் இது குறித்து நான் அடைந்த தாக்கத்தை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

ஜோதிஜி said...

நன்றிங்க

ஜோதிஜி said...

தனிப்பட்ட முறையில் உங்கள் விமர்சனம் என் உள்ளத்தில் உள்ள எண்ணங்களைச் சொல்வதாக இருந்தது. அடுத்த பதிவில் சிலவற்றை புரிந்து கொள்வீர்கள். நன்றி.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வலைப் பதிவில் எழுதுபவை உடனடி மாற்றம் ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாவிட்டாலும் . சைலென்ட் சேஞ்ச் ஏறபடுத்த வாய்ப்பு உண்டு என்றே கருதுகிறேன்.
நல்ல தொகுப்பு.

கிரி said...

"நாம் எழுதி நாடு மாறி விடுமா? என்ற எண்ணத்தைச் சற்றேனும் ஒதுக்கி வைத்து விட்டு வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் சிலவற்றையாவது ஆவணப்படுத்த முயற்சி செய்யுங்கள்."

இந்த நிலையில் தான் நான் இருக்கிறேன்.. சின்ன திருத்தமாக.. மாறி விடும் என்று நினைக்கவில்லை.. எழுதி சலிப்பு தான் வருகிறது. எழுதிய பிறகு அதைப் படித்தால் எனக்கு காமெடியாக இருக்கிறது. இது போன்ற காரணங்களே மேலும் எழுதுவதை குறைக்கிறது.

முன்பு நிறைய அரசியல் பற்றி எழுதிக்கொண்டு இருந்தேன்.. பின்னர் குறைக்க வேண்டும் என்று நினைத்து.. அப்படியே குறைத்து விட்டேன். இதைக் கூறியே ஆக வேண்டும் என்று தோன்றுவதை மட்டும் அவ்வப்போது எழுதுகிறேன்.

இது மட்டுமே தொடரும் என்று நினைக்கிறேன்.. முன்பு போல அதிகமாக அரசியல் சமூகம் பற்றி எழுத ஆர்வமில்லை. பார்ப்போம்.. மனநிலை அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும் :-)

BTW நீங்க ஏற்கனவே ஒருமுறை இது பற்றி என்னிடம் கூறியதாக நினைவு. எப்போது என்று நினைவில்லை.