Saturday, February 23, 2013

கொக்கரக்கோ..!!! - சௌம்யன் விமர்சனம் (DOLLAR NAGARAM)


இதுவரை  சினிமா விமர்சனம் கூட ஒன்றிரண்டு எழுதியிருக்கின்றேன் ஆனால புத்தக விமர்சனம் என்று எதையும் தனி பதிவாக நான் எழுதியதில்லை. 

காரணம் ஒரு புத்தகம் என்பதே, ஏதாவது ஒரு விடயத்தைப் பற்றிய விமர்சனம் அல்லது கருத்து அல்லது பதிவு அல்லது .....  என்கிற போது, அந்த நூல் ஆசிரியரின் அந்த குறிப்பிட்ட விடயம் பற்றிய தனிப்பட்ட கருத்தை விமர்சனம் செய்வது என்ன நியாயம் என்பது என் நிலைப்பாடு!

அதேப் போன்று தான் இந்த “டாலர் நகரம்” புத்தகம் பற்றியும் எனது நிலைப்பாடு என்றாலும், என்னுடைய சக இணைய பதிவர், ஒரு நூலாசிரியராக புது பரிமாணம் எடுத்திருக்கும் இந்த நூல் பற்றி எழுதுவது  என் கடமையாகும். 

அதாவது அது பற்றிய எனது கருத்துக்களை மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்வது என்பது, தமிழ் எழுத்துலகுக்கு இணைய உலகம் புடம் போட்டு தந்து கொண்டிருக்கும் புதிய எழுத்தாளர்களைப் பற்றிய கருத்துக்களை அல்லது விமர்சனங்களை பகிர வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து தான் இந்த நூல் விமர்சனத்தை எழுத முன் வந்திருக்கின்றேன்.

நடப்பு கால மாணவ சமுதாயத்திற்கு வாசிப்பு அனுபவம் என்பது மிகவும் குறைவாக, கிட்டத்தட்ட இல்லை என்கிற அளவிற்கே இருக்கிறது என்பதாக சமீபத்தில் எல்லோராலும் பரவலாக கவலைக்குறிய விஷயமாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. அதே சமயம் இன்றைய தேதியில் 35 வயதினைத் தாண்டியவர்களில் பெரும்பாலானோருக்கு சம காலத்திய இளைஞர்களோடு ஒப்பிடும் போது இந்த வாசிப்பு அனுபவம் இன்றைக்கும் சற்று அதிகமாகவே இருப்பது கண் கூடு.

இதற்கு காரணம், அப்பொழுது வாஸந்திகளும், சிவசங்கரிகளும், சுஜாதாக்களும், பால குமாரன்களும்....., பேரிலக்கியம், புண்ணாக்கு என்றெல்லாம் பீற்றிக் கொண்டிருக்காமல், வாசிப்பவர்களுக்கு அவர்கள் தளத்திலிருந்து புரிந்துகொள்ளக் கூடிய நடையில் எழுதியது தான் என்பதை யாரும் மறுக்க இயலாது.

சமீப காலமாக தோன்றியிருக்கும் இலக்கியவாதிகள், பேரிலக்கியவாதிகள், முன்நவீனத்துவவாதிகள், பின் நவீனத்துவவாதிகள் என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டிருக்கின்ற எழுத்தாளர்கள், சாமான்ய வாசிப்பாளர்களை அல்லது மாணவப் பருவத்திலிருக்கும் இளைய சமுதாயத்தினரை போட்டு படுத்தி எடுத்து, புத்தகங்களைக் கண்டாலே அவர்களைக் காத தூரத்திற்கு ஓட  வைத்தது தான் நடப்பு கால இளைஞர்களின் வாசிப்பு அனுபவத்தை செயலிழக்கச் செய்திருக்கிறது என்பது என் தனிப்பட்டக் கருத்து.

இந்த மாய பிம்பங்களை உடைத்தெறிந்து சாமான்யர்களும் படித்துப் பயன்பெறும் அளவிலான் எழுத்து நடையோடு அவ்வப்பொழுது சில படைப்புகளும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. 

அந்த வரிசையில் நண்பர் ஜோதிஜி எழுதியிருக்கும் இந்த டாலர் நகரம்  புத்தகமும் முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளது என்பதை இங்கு பதிவு செய்து விடுகின்றேன்.  

தன் சுய சரிதம் போல எழுத முற்பட்டு, திருப்பூரின் கடந்த 20 வருட செயல்பாடுகளை, வளர்ச்சி - வீழ்ச்சிகளை தன் பார்வையின் ஊடாக பதிவிட்டிருக்கிறார் ஆசிரியர் ஜோதிஜி!

திருப்பூர்வாசிகளுக்கும், திருப்பூரோடு தொழில்முறை உறவு வைத்திருக்கும் வெளியூர் வாசிகளுக்கும், உள்ளூரில் வேலை கிடைக்காமல் திருப்பூர் சென்று வேலையிலமர்ந்து புது வாழ்வைத் தொடங்கலாம் என்று நினைப்பவர்களுக்கும் அந் நகரைப் பற்றிய நல்லதொரு புரிதலை தரும் நூலாக இது அமைந்திருக்கிறது.

இதெல்லாம் இந்நூலைப் பற்றிய பொதுவான பார்வைகள் என்றாலும், புத்தகத்தை படிக்க ஆரம்பித்தவுடன் அது கொஞ்சம் கொஞ்சமாக நம்மை கைப்பிடித்து திருப்பூர் தெருக்களின் ஊடாகவும், அங்குள்ள பல்வேறு வகை தொழில் கூடங்களின் உள்ளேயும் அழைத்துச் செல்வதை காணொளியின் ஊடாக காண்பது போன்ற பிரேமையை உண்டு பண்ணுவதை மறுப்பதற்கில்லை.

இங்கு தான் ஜோதிஜியின், ”சிறந்த எழுத்தாளர்” என்ற அந்த பிம்பம் அறங்கேற்றப் படுகிறது. 

உள்ளே சென்று இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக ஆராயும் பொழுது, சில இடங்களில் சில விஷயங்கள் ஆங்காங்கே தொங்கலாக நிற்பது போன்ற பிரமை ஏற்படுகிறது. 

உதாரணத்திற்கு தயாநிதி மாறன் செய்த எந்த மாதிரியான தவறு இந்த துறையை முடக்கிப் போடுகிறது என்பதற்கான விளக்கம் சுத்தமாக இல்லை.  அதேப் போன்று பொருளாதார உலகமயமாக்கல் ஒப்பந்தத்தில் நரசிம்மராவ் கையெழுத்திட்டது எந்த விதத்தில் இந்தத் துறையை பாதித்தது என்பது பற்றியும் தெளிவான விளக்கம் இல்லாமல் இருக்கின்றது.

ஒரு கட்டத்தில் அதே பொருளாதார உலகமயமாதல் நல்ல பலன்களை தந்து கொண்டிருப்பதையும், அதன் மூலமாக ராக்கெட் வேகத்தில் ஏற்றுமதி அளவு வளர்ந்திருப்பதையும் இந்தப் புத்தகத்தின் மூலமாகவே அறிந்து கொள்ளவும் முடிகிறது.

ஜோதிஜி ஏதாவது ஒரு தளத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டு தன் பார்வையை படர விட்டு எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. அல்லது வெவ்வேறு தளங்களின் நல்லது கெட்டதுகளையும் தெளிவாக பட்டியலிட்டு, அதன் மூலம் களையப்பட வேண்டிய குறைகளை அது எவ்வாறு களையப்பட வேண்டும் என்ற தீர்வோடு சொல்லியிருந்தால், இது ஒரு ஆகச் சிறந்த படைப்பாக, திருப்பூர் தொழில் துறையினருக்கான பொக்கிஷமாக அமைந்திருந்திருக்கும்!

ஆனால் ஜோதிஜியிடம் இது பற்றிப் பேசிய பொழுது, 600 பக்கத்திற்கு எழுதப்பட்ட புத்தகம், சில பல காரணங்களால் இருநூற்று சொச்சமாக குறைந்து விட்டது அதனால் ஏற்பட்ட விளைவுகள் தான் இதெல்லாம் என்று கூறியதையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும்.

எந்தவொரு படைப்பாளிக்குமே தான் பிரபல்யம் ஆவதற்கு முன் வரும் ஆரம்பகால படைப்புகளில் இது போன்ற சங்கடங்கள் வருவது இயல்பு தான். தன்னுடைய அடுத்தடுத்த நூல்களில் ஜோதிஜி இவற்றையெல்லாம் இலகுவாக கடந்துவிடுவார் என்று நம்பலாம்.

அடுத்ததாக இன்னும் கொஞ்சம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனி பதிவுகளைப் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுதுகிறது. 

பொதுவாக ஒரு தேர்ந்த நூலில் அடுத்தடுத்த அத்தியாயங்கள் உணரப்படுகின்ற ஒரு இழையில் கோர்க்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி இயலதபட்சத்தில், வேறு ஒரு அத்தியாயத்துடன் அது கண்டிப்பாக இணைக்கப்பட்டுவிட வேண்டும். மொத்தத்தில் அனைத்து பகுதிகளுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்க வேண்டும்.

ஏதாவது ஒரு காரணத்துடன் இணைப்பில் வந்து விட வேண்டும்.  அப்படியிருந்தால் தான் படிப்பவர்களுக்கு தொண்டை நனைய நீர் குடித்த திருப்தி கிடைக்கும்.

இந்த நூலில் பல சம்பவங்கள் அப்படி தொடர்பில்லாமல் அறுந்து போகும் நிலையில் இருப்பது தவிர்க்கப்பட வேண்டியது. குறிப்பாக சொந்த ஊர் விவசாய சம்பவங்கள், பள்ளிச் சம்பவங்கள் போன்றவற்றை தவிர்த்திருக்கலாம். திருப்பூரைத் தவிர்த்து நம்மை வெளியில் கொண்டு செல்லும் போது கொஞ்சம் அசூயை வருகிறது.

மேலும் எழுத்துப் பிழைகள் ஒரு எல்லையைக் கடந்து நம் கண்களை உறுத்துகின்றன. அது பதிப்பகத்தார் சரி செய்ய வேண்டிய விஷயம். அடுத்தடுத்த பதிப்புகளில் அது சரி செய்யப்பட்டுவிடலாம்.

இதெல்லாமே நூலின் ஆசிரியர் நமது நண்பர் என்ற வகையில் எடுத்துச் சொல்லப்பட வேண்டிய, பொதுவாக சாதாரணமாக வாசிப்பவர்களுக்கு எளிதில் புடிபடாத குறைகள் மட்டுமே!

பொதுவாக இந்த புத்தகத்தைப் பற்றிய பார்வையாக நாம் வைக்க வேண்டுமானால், ஒரு அசாத்திய உழைப்பாளியின்  அனுபவங்களை படித்து முடித்தவுடன், கொஞ்ச நேரத்திற்கு நம்மை ஒரு வித பிரம்மிப்பிலேயே ஆழ்த்திவிடுகிறது, என்பதைத் தான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

எழுத்து நடையும், அவலங்களைக் கண்டு கொதிக்கும் அவரது கோபமும், படிக்கின்ற நம்மையும் அப்படியே தொற்றிக் கொண்டு விடுகிறது. கொஞ்சம் ஒதுக்கக்கூடிய நேரம் அமையப்பெற்றவர்கள், ஒரே மூச்சில் படித்து முடித்து விடக் கூடிய அளவிற்கு விறுவிறுப்பாக புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் சம்பவங்களும், அதைப் பகிர்ந்திருக்கும் முறையும் அருமை. 

புத்தகத்தின் விலைக்கு அதிகமாக தரத்தை தந்திருக்கின்றார்கள். 

நல்ல காகிதம், பெரிய எழுத்துக்கள், வண்ண புகைப்படங்கள்....  இதெல்லாம் சமீபத்தில் வெளிவந்த புத்தகங்களில் இத்தனை பக்கங்களில் இந்த விலையில் நிச்சயம் வெளி வந்திருக்கவில்லை. அதனால் கொடுத்த காசுக்கு பைசா வசூல்...

தன்னுடைய  முதல் இன்னிங்ஸிலேயே வெற்றிக் கோட்டை தொட்டிருக்கிறார், தோழர் ஜோதிஜி......  வாழ்த்துக்கள்!!

விமர்சனப் பார்வைகள்.

2 comments:

சேலம் தேவா said...

நண்பரென்பதால் நிறைகளை மட்டும் சொல்லாமல் சிறிய குறைகளையும் சொல்லியிருக்கும் சௌம்யன் அவர்களின் சிறப்பான விமர்சனம்.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நன்றி.