Wednesday, February 27, 2013

பணம் மட்டும் போதும்.

வட்டத்திற்குள் சிக்காத மனிதர்கள் பகுதி 3

இதன் முந்தைய  பகுதிகள்


முதல் தடவை ஞானாலயா நூலகத்திற்கு சென்று வந்த பிறகு ஒரு வாரம் இந்த நூலகம் குறித்தே சிந்தனைகளே என்னுள் இருந்தது. மலைத்துப் போய்விட்டேன் என்று எழுதி விடலாம். ஆனால் அதற்கு அப்பாலும் என்னுள் தினந்தோறும் பல கேள்விகள் எழுந்து கொண்டேயிருந்தது.

வீட்டை விட்டு இறங்கியது முதல் அன்று இரவு வீட்டுக்குள் வந்து சேர்ந்து உறங்குவது வரைக்கும் சந்திக்கும் மனிதர்கள், பேசும், பழகும் மனிதர்கள் என்று எல்லாநிலையிலும் பணம் என்ற வார்த்தை இங்கே பிரதானமாக இருக்கின்றது.

எழுதலாம். படிக்கலாம். ரசிக்கலாம். ஆனால் கடைசியில் எதார்த்தம் என்ற நிலையில் நம்மை வைத்து பார்க்கும் போது இந்த பணம் மற்றும் அது தரும் அடிப்படை வாழ்க்கை என்று எல்லாநிலையிலும் பணத்தைத் தவிர வேறு எதையும் நாம் சிந்திக்க தேவையில்லை என்பதாக நமது வாழ்க்கையும் மாறி விட்டது. .

ஆனால் திரு. கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவருடன் சேர்ந்து குடும்பமும் சேர்ந்து எப்படி இப்படி ஒரு அசாதாரணமான சாதனையை உருவாக்கி உள்ளார்களே? எப்படி சாத்தியமானது என்ற கேள்வி மட்டும் என்னை ஒவ்வொரு நாளும் துரத்திக் கொண்டேயிருந்தது.

ஒவ்வொருவரும் சிறுவயதில் எத்தனையோ புத்தகங்களை படித்து வந்த போதிலும் புத்தகங்களுக்கென்று ஒரு நூலகத்தை உருவாக்க வேண்டும் என்று எவராவது யோசித்து இருப்போமா?  குறிப்பாக ஒவ்வொரு புத்தகத்தின் முதல் பிரதி என்பது இன்று எவர் கையிலும் இருப்பதில்லை.  ஒரு புத்தகம் முதன் முதலாக அச்சுக்கு வந்த போது எப்படி இருந்தது. 

அந்த புத்தகமே பல  வருடங்கள் கழித்து வேறொரு பதிப்பகம் மூலம் சந்தைக்கு வரும் போது பல பக்கங்கள், கருத்துக்கள் காணாமல் போயிருக்கும்.  புத்தகம் என்ற ரூபத்தில் இருக்குமே தவிர அது தரும் செய்திகள் வெறும் சுவராசியம் என்கிற  ரீதிக்கு காசுகேத்த பணியாரம் என்கிற கதையாக மாறியிருக்கும்.  ஆனால் ஞானாலயா நூலகத்தில் இது போன்ற முதல் பிரதி நூல்கள் மட்டும் 500 க்கும் மேற்பட்டதாக கவனமாக சேமித்து வைக்கப்பட்டு உள்ளது. 

நாம் சிறு வயதில் விரும்பி படித்த புத்தகங்களைக்கூட நாம் சரிவர பாதுகாத்து இன்று வரையிலும் நம்முடன் வைத்திருப்போமா? என்று யோசித்துப் பார்த்தால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்லக்கூடும்.

இந்த கேள்விகள் தான் மீண்டும் ஒரு முறை ஞானாலயாவுக்கு நண்பர் சிவா மற்றும் மதுரையில் உள்ள திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் சேர்ந்து செல்ல வேண்டும் என்று தோன்றியது. மூவரும் சென்றோம். ஒரு நாள் முழுக்க அங்கே இருந்தோம்.  வைரம் பட்டை தீட்டப்படுவதைப் போல மேலும் என் எண்ணம் மெருகேறியது.  

திருப்பூர் வாழ்க்கை கொடுத்த பணம் சார்ந்த எண்ணங்களை நண்பர் பகிர்ந்த இந்த பொன்மொழிகளைப் போல என்னுள் இருந்த ஏராளமான கேள்விகளை கொஞ்சம் கொஞ்சமாக துடைக்கப்பட்டு தூசி அடைந்த கண்ணாடியை ஈரத்துணி வைத்து துடைத்தது போல மனம் இலகுவாகி யோசிக்கத் தூண்டியது. மனம் முழுக்க எப்போதும் நிறைந்திருந்த பணம் என்ற வார்த்தை பின்னுக்குச் சென்று மனம் என்பது தடையற்று யோசிக்க காரணமாக இருந்தது.

இந்த தொடரை படித்துக் கொண்டு வரும் நீங்கள் இந்த பணம் குறித்து மற்றவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை உள்வாங்கி விடுங்கள்.  

மீண்டும் அடுத்த பதிவில் ஞானாலயா குறித்த மேற்கொண்டு சில விபரங்களைப் பார்ப்போம்.  

பணம் இருந்தால்...!

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது. -ஸ்மித். ..

பணக்காரனாய் சாக வேண்டும் என்பதற்காக வறுமையில் வாழ்வது வடிகட்டிய முட்டாள்தனம் - ஜீவெனால்.

பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளைக் குறைத்துக் கொள். -வீப்பர்

நாம் பணக்காரர்களாக இருக்க கடமைப்பட்டிருக்கவில்லை. ஆனால் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். - பெர்னார்ட்ஷா.

பணப்பிரச்சனை என்றால், எல்லோரும் ஒரே மதத்தினர்தான். - வால்டேர்.

பணம் ஒன்றே வாழ்வின் இலட்சியம் என்றால் அது தவறான வழியிலேதான் தேடப்படும். -ரஸ்கின்.

பணத்திற்குக் கடல் நீரின் குணம் ஒன்று உண்டு. கடல் நீரைக் குடிக்கக் குடிக்கத் தாகம் அதிகமாகும். - ஷோப்பன் ஹொபர்.

சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவர். ஆனால், அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தை! - கோல்ட்டஸ்.

பணம் தலைகுனிந்து பணியாற்றும் அல்லது தலைகுப்புறத் தள்ளிவிடும். - ஆலிவர் வெண்டல்.

பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஒழுக்கத்தை விற்று விடாதே. - தாமஸ் பெயின்.

பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன் கேட்கும் போதுதான் தெரியும். - பிராங்க்ளின்.

பணமும் இங்கித நடவடிக்கையும் ஒரு கனவானை உருவாக்குகின்றன. - தாமஸ் புல்லர்.

பணத்தை அடிக்கடி குறை கூறுவார்கள். ஆனால் அதை யாரும் மறுப்பதில்லை - டென்மார்க் பழமொழி.

பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம். அது இல்லாதவனுக்குக் கவலை - பாரசீகப் பழமொழி.

பணமும் மகிழ்ச்சியும் பரம விரோதிகள். ஒன்றிருக்குமிடத்தில் மற்றொன்று இருப்பதில்லை - ஆஸ்திரேலியாப் பழமொழி.

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது. -ஸ்மித். ..

இந்த தொடரின் முந்தைய தொடர்ச்சி




9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பணத்தின் தத்துவங்களும் மதிப்பானது... பயணம் தொடரட்டும்...

திண்டுக்கல் தனபாலன் said...

முதலும் முடிவும் Repeat... (ஸ்மித்)

திண்டுக்கல் தனபாலன் said...

பணத்தின் தத்துவங்களும் மதிப்பானது... பயணம் தொடரட்டும்...

கோமதி அரசு said...

நாம் பணக்காரர்களாக இருக்க கடமைப்பட்டிருக்கவில்லை. ஆனால் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். - பெர்னார்ட்ஷா.//

நல்ல கருத்து.
நல்ல கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி, நன்றி.

திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் அவர் குடும்பத்தினர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Unknown said...

திரு அய்யா . கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பணி மென்மேலும் சிறக்க வணங்குகின்றோம்

ஜோதிஜி said...

நன்றி கோமதி அரசு.

ஜோதிஜி said...

நன்றி சேகர்

ஜோதிஜி said...

நமது பயணமும் விரைவில் தொடர வேண்டும்

'பரிவை' சே.குமார் said...

நல்ல விஷயம் ஒன்றை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அண்ணா