Monday, September 28, 2009

புழுதியை கிளப்பிய பொக்கிஷம்



ருசித்த வாளுக்கும் ரசித்த கண்களுக்கும் விசும்பிய குரல்கள் கேட்கவில்லை. வெறியை சமைத்த கரங்கள் புசிக்க மறந்து ருசிக்கு அலைந்தாயே? அடங்காத பசி உனக்கு அனாதை வாழ்க்கை?
புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி 34

கண்ணீர், கதறல், கலவரம்.

பாகிஸ்தானின் தந்தை ஜின்னா சாகிப்பின் வெற்றி ஊர்வல வாகனத்தில் மவுண்ட் பேட்டன் பிரபு உடன் பயணித்து இருக்காவிட்டால் என்ன நடந்து இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

ஆமாம்.

மொத்த சீக்கிய, சுயம் சேவக் தீவிரவாத எண்ணம் கொண்ட குழுக்கள் என்ன ஆனார்கள்.? மொத்த நவீன வசதிகளும், ஆள் பலமும், ஆளுமை பலத்துடன் வெறியுடன் கூட்டத்திற்குள் கலந்து இருந்தவர்கள் என்ன ஆனார்கள்?

மவுண்ட் பேட்டன் பிரபுக்கு சற்று குழப்பம். உளவுத்துறை தவறான தகவல்களை தந்து விட்டார்களோ? எத்தனை விதமாக கலங்கி விட்டேன். மொத்தமாக கூடி வந்த இந்த சூழ்நிலையில் அரை மணி நேரத்திற்குள் அரை யுகம் வாழ்ந்த அவஸ்த்தைகள். அப்பாடா........ என்று பெருமூச்சில் ஜின்னா சொன்ன லொள்ளு வார்த்தைகளை மறந்து போயிருக்கலாம்.

எத்தனை உழைப்பு, அதிகாரம், ஆட்சி, ஆளுமை என்ற போதிலும் தீவிரவாதம் என்ற ஒரே சொல் அத்தனை பேர்களையும் அலைக்கழித்து விடுகின்றது.

ஒரே ஒரு குறி. ஆனால் பாதிப்பு பல லட்ச மக்கள். அதைத் தொடர்ந்து நீக்கவே முடியாத கறைகள் வன்மத்தின் தொடர்ச்சி.

மொத்த சிறப்பான திட்டுமிடுதல் பெற்ற நபர்கள் ஏன் ஜின்னாவை சுட்டுக்கொல்லவில்லை. அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. வாகனத்தில் மவுண்ட் பேட்டன் பிரபும் சேர்ந்து பயணிப்பார் என்று.

மவுண்ட் பேட்டன் பிரபு மரியாதைக்குரிய இந்திய வைஸ்ராஸ். எந்தக் குறையும் சொல்ல முடியாதவர். எவருமே வெறுக்க முடியாத அத்தனை நேர்மையான மனிதர். உத்தரவு கொடுக்க வேண்டிய நபர் அமைதியாய் பின்னால் மறைந்து விட்டார். குண்டு வைத்திருந்தவர்கள் உத்தரவு இல்லாததால் அவர்களும் மறைந்து விட்டார்கள்.

ஒருவேளை அன்று மட்டும் அந்த குண்டு வீச்சு நடந்து இருந்தால் மொத்த இந்தியாவின் முகமே மாற்றம் பெற்று இருக்கும்?

இன்றைய சுதந்திர இந்தியாவின் வாழ்ந்து கொண்டுருக்கும் நாம் அனைவருமே பாடுபட்ட அத்தனை தலைவர்களையும் விட தன்னாலான புத்திசாலி நடவடிக்கைக்களால் மவுண்ட் பேட்டன் பிரபு ஒரு வடிவத்துக்கு கொண்டு வந்தார் என்றால் அதில் ஒரு துளி கூட சந்தேகம் இல்லை. காரணம் பின்னால் வரப்போகின்ற அத்தியாயங்களில் சுதந்திரம் வாங்கிய பிறகும் கலவரங்களை நிறுத்த முடியாமல் நேரு அவர்கள் ஓய்வில் (கோடை வாஸ்தலம்) இருந்த மவுண்ட் பேட்டன் பிரபு அவர்களை வரவழைத்து அவரின் கைகளில் அதிகாரத்தை கொடுத்த கொடுமையும் நடந்தது.

துப்பறியும் துறைக்கு தலைவரான சாவேஜ், மவுண்ட் பேட்டன் பிரபு, எட்வினா, ஜின்னா, அலிகான் அத்தனை பேர்களும் அச்சம் தீராமல் இறங்கினார். வெற்றி ஊர்வலம் ஒரு முடிவுக்கு வந்தது. மாளிகையை அடைந்தது.

ஆனால் இந்த இடத்தில் ஏன் இந்த தீவிரவாத எண்ணம் தோன்றியது? என்பதற்கான காரணத்தையும் உள்ளே போய் பார்த்துவிடலாம்.

பாகிஸ்தான் இந்தியா பிரிவினை மற்றும் பஞ்சாப் மக்களின் இடப்பெயர்ச்சி என்று எல்லாவகையிலும் அன்றைய நீதிபதி ஜி.டி. கோஸ்வா அவர்களின் அறிக்கைப்படி ஐந்து லட்சம் பேர்கள்.

கலவரத்திற்குள்ளே பல சிரமங்களுக்கு இடையே பலவிதங்களிலும் பணியாற்றிய உதவிய சரித்திர ஆய்வாளர்கள், ஆசிரியர்கள் (பண்டரின் மூன், வீ. ஹட்சன்) கணக்குகள் இரண்டு லட்சம் முதல் தொடங்குகிறது.

ஆனால் பார்த்த பத்திரிக்கையாளரின் கணக்கு பத்து லட்சம் முதல் இருபது லட்சம் வரை இருக்கலாம் என்கிறார்கள்.

ஆனால் உறுதியான கணக்கு ஒரே ஒரு வகையில் கிடைத்தது. ஆமாம் வாகா எல்லை சோதனைச் சாவடி, சுலைமாங்கி, பல்லோக்கி போன்ற மார்க்கங்கள் வழியாக சுமார் ஒரு கோடியே பத்து லட்சம் பேர்கள் வந்தார்கள்.

வங்காளத்தில் இருந்து கலவரம் இன்றி இடம் பெயர்ந்தோர் மொத்த எண்ணிக்கை (அகதிகள்) ஒரு கோடி பேர்கள்.

கிடைத்த வரையில் பரவாயில்லை என்று மக்கள் பணம், மாடு, ஆடுகள், மாட்டுவண்டி என்று பஞ்சாப்பின் அத்தனை சிறிய பெரிய பாதைகள் முழுக்க மக்களின் கூட்டம் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. சில அகதிகளின் கூட்டம் மைல் கணக்கில். நடந்து வரும் போதே இரு பக்கமும் எறிந்து கொண்டுருந்த வயல்வௌிகளும், ஆலைகளும், கொலைகளும், கற்பழிப்புகளும் என்று பார்த்து பயந்து கொண்டு குடிக்க நீர் இல்லாமல் நா வரண்டு நடக்க திராணி இல்லாமல் உயிரை கையில்பிடித்துக்கொண்டு. நடந்து வரும் போதே தாக்கிய விஷ ஜுரம், காப்பாற்ற முடியாத குழந்தைகள் பெரியவர்கள் பாதை எங்கும் அப்படியே விட்டுவிட்டு பயணித்துக்கொண்டுருந்தார்கள்.

பஞ்சாப்பின் ஒவ்வொரு பாதையும் ஒரு புதைகுழி, முடிவற்ற மயானம்.

லாகூரில் இருந்து அமிர்தசரஸ் வரையிலான 65 கிலோமீட்டர் தூரமும் இடைவௌிகளில் ஏராளமான புதைக்கப்படாத பிணங்கள் அழுகி நாற்றத்துடன் காணப்பட்டது. பறந்து கொண்டுருந்த கழுகுக் கூட்டங்கள் அந்த இடத்தை விட்ட பறந்து வேறு இடம் செல்ல வேண்டிய நிலைமை இல்லாமல் அங்கேயே சுற்றிக்கொண்டுருந்தது. பிணங்கள் வந்து கொண்டே இருந்தது.

நடந்து வந்த கூட்டங்களினால் உருவான காலடித் தடங்களின் புழுதி பறந்து மேலே வானத்தை மறைத்தது. வேறு வழியே இல்லாமல் அங்கங்கு சமைத்து சாப்பிட அடுப்பு உருவாக்கிய புகை மண்டலம் விண் வரைக்கும் தொட்டு தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு வினோத பயத்தை தந்தது.

சுதந்திரம் பெறுவதற்காக உழைத்த அத்தனை தலைவர்களுமே இதனை கண்டு நடுநடுங்கி விட்டார்கள். வௌ்ளையர்கள் கூட இந்த கோரத்தை இந்த அளவுக்கு எதிர்பார்த்து இருக்கவில்லை. கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை விட கட்டுக்குள் அடங்காமல் கலவரத்தீ மேலும் மேலும் பல்வேறு இடங்களுக்கு பரவிக்கொண்டேயிருந்தது.

சுதந்திரம் என்பது வேண்டி விரும்பி வாங்கிய போது சுமையாகத்தான் இருந்தது.

வௌ்ளையர்கள் இறக்கி வைத்த அந்த சுமை, வாங்கியவர்களின் பலத்தை சோத்தித்தது. சுமையை தாங்க முடியாமல் எலும்பு நொறுக்கியது. வன்மம் வளர்க்க காரணமாக இருந்தவர்கள், வன்மத்தை மட்டுமே வளர்த்தவர்கள், வளர்ந்த போது கட்டுக்குள் கொண்டு வராமல் அதில் கொண்டு குளிர் காய்ந்தவர்கள், கண்டும் காணமல் இருந்த தலைவர்கள், தவறு என்று சொன்ன காந்தியை பரிகாசமாய் பார்த்தவர்கள் அன்று தான் உள்மனதில் உணர்ந்து இருப்பார்கள்.

காரணம் அத்தனை பேர்களுக்கும் அன்று காந்தி இருந்த கல்கத்தா பூமி ஆச்சரியமாக இருந்தது. கலவர பூமியாக மாறிவிடும் என்று எதிர்பார்த்து இருந்த அத்தனை பேர்களும் ஆச்சரியப்படும் அளவிற்கு கல்கத்தா பிரார்த்தனை பூமியாக மாறியிருந்தது.

இந்துக்களும் முஸ்லீம்களும் கூட்டம் கூட்டமாக, குழுவாக, பல்வேறு மதப்பாடல்களை பாடிக்கொண்டு அவரது தங்கியிருந்த இடத்துக்கு போய்க்கொண்டே இருந்தார்கள்.

தேன் கூடு thamizmanam.com/bloglist.php?id=5625



































3 comments:

பின்னோக்கி said...

அருமை..தொடருங்கள்..அவலுடன் படித்துக்கொண்டிருக்கிறேன். வரலாற்றை சுவைபட கலப்படமில்லாமல் எழுதுகிறீர்கள்.

பின்னோக்கி said...

நீங்கள் tamilish -ல் உங்கள் பதிவுகளை போடுங்கள். நிறைய பேர் படிக்கமுடியும்

ஜோதிஜி said...

ஊர் சுற்றியில் உள்ள தொடக்க கோட்டை எல்லாம் குடி யைச் சுற்றி வருகிறதே? பரவசம். படைப்பு கூட செட்டி நாட்டு உணவகம் போலத்தான் சிறப்பாக இருக்கிறது. நன்றி முன்னோக்கி பார்த்தமைக்கு. கூட ஊர் அறிய வேண்டும் என்ற மாசில்லா எண்ணத்துக்கு. வாழ்த்துக்கள்.