Sunday, December 03, 2017

ஜெயலலிதா - எம்.ஜி.ஆர் - சசிகலா


வலம்புரி ஜான் எழுதிய வணக்கம் - நூல் விமர்சனம் 3

எம்.ஜி.ஆர் படங்களில் சண்டைக் காட்சி என்பது பிரசித்தமானது. வெகுஜன மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்டது. எம்.ஜி.ஆரின் படங்கள் திரையரங்கத்திற்கு எந்த அளவுக்கு லாபம் தரக்கூடியதோ அந்த அளவுக்கு ரசிகர்கள் செய்யும் ஆர்ப்பாட்டங்களால் நஷ்டங்களையும் சந்தித்தது. உடைந்த சேர்களும், கிழிந்த இருக்கைகளும் அதிகம்.

நல்லவன். கெட்டவன். என்ற இரண்டே விசயங்களை வைத்துக்கொண்டு சித்து விளையாட்டு காட்டியவர். இறுதியில் எம்.ஜி.ஆர் வில்லனை வெல்வார் என்பதே. ஆனால் எம்.ஜி.ஆர் வாழ்க்கை முழுக்கக் கடைசி வரையிலும் தோற்றது ஜெயலலிதாவிடம் மட்டுமே.

தான் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம் என்பது தெரிந்தே தோற்றுக் கொண்டிருந்தார். 

தான் செலுத்திய அன்பைப் புரிந்து கொள்ளாமலும், அதே சமயத்தில் அவரை விட்டுப் பிரிய மனமில்லாமலும் தனக்குத் தானே மன உளைச்சலை உருவாக்கிக் கொண்டவர் எம்.ஜி.ஆர். அவர் ஜெ மேல் வைத்திருந்தது அன்பல்ல. ஆதிக்கம் என்று வைத்துக் கொண்டாலும் ஜெயலலிதா எம்.ஜி.ஆருக்கு வைத்த பெயர் பெட்டை. இதன் அர்த்தத்தை விவரிக்கத் தேவையில்லை. 

இவர் முகத்தை மட்டுமே பார்ப்பதற்காக நாள் முழுக்கக் காத்திருந்த கோடிக்கணக்கான மக்களிடமிருந்த இவரின் அபரிமிதமான புகழும் செல்வாக்கும் எங்கே? ஒவ்வொருநாளும் ஜெ வுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த காட்சிகளை எல்லாம் வாசிக்கும் போது தனி மனிதனின் அந்தரங்கமாகத் தெரியவில்லை. ஒரு தலைமைப்பண்பு உள்ளவரின் இருக்கத் தேவையில்லாத குணாதிசியங்களின் அவலமாகத்தான் தெரிகின்றது. 

தனக்குச் சொந்தமானதை வேறு எவரும் சொந்தமாக்கிவிடக் கூடாது என்பது அவரின் பிடிவாத கொள்கை. ஆனால் இதற்காக அவர் பெற்றதை விட இழந்தது தான் அதிகம். அவர் வாழ்நாள் முழுக்க இதற்காகவே தன் ஆரோக்கியத்தைப் பரிசாகத் தர வேண்டியிருந்தது. மன நலத்தைப் பாதித்தது. கடைசியில் தன் முதல் அமைச்சர் பதவிக்கே வேட்டு வைக்கப் போகின்றது என்பதனை உணர்ந்து அவர் வருத்தப்பட்ட அந்தரங்க ரகசியங்கள் சிலவற்றை மட்டும் வலம்புரி ஜான் இந்தப் புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். 

ஜெயலலிதாவை மன்னர் பரம்பரை போல இன்னமும் சித்தரிப்பவர்கள் அவர் அம்மா வாழ்ந்த தொடக்க வாழ்க்கைப் பற்றிச் சில இடங்களில் வருகின்றது. ஆதாரங்களும், அதைக் கண்டவர்களைப் பற்றியும் குறிப்புக் கொடுத்துள்ளார். ஜெயலலிதாவின் அம்மா தமிழ்நாட்டில் தொடக்கத்தில் தேவிபட்டணத்தில் ஆயாம்மா வேலை பார்த்ததும் அதன் பிறகே அவர்களின் பூர்விகமான ஸ்ரீ ரங்கம் ஊருக்கு வந்ததைப் பற்றியும் எழுதியுள்ளார். அங்குள்ளவர் தொடர்பின் மூலமாகத்தான் சென்னையில் திரைப்பட வாய்ப்பு தேடி வந்துள்ளார், சந்தியாவின் தங்கையும் அப்போது நடிகையாக இருந்துள்ளார். 

காலப்போக்கில் எம்.ஜி.ஆர் படங்களில் கதாநாயகியாக வளரும் அளவுக்கு வாழ்க்கை மாறியுள்ளது. இடையில் வாழ்க்கையை நடத்தக் கஷ்டப்பட்ட காலத்தில் சந்தியாவும், ஜெயலலிதாவும் பணத்திற்காகச் செய்த பல காரியங்களை மேலோட்டமாகவே எழுதியுள்ளார். ஆண் துணை இல்லாத குடும்ப வாழ்க்கையில் தங்களையே உருக்கித்தான் தங்களை நிலைப்படுத்திக் கொண்டு உள்ளனர். 

இது ஆண் உலகம். ஆண்கள் செய்கின்ற விசயங்கள் எதுவும் பெரிதாகத் தெரியாது. ஆனால் பெண்கள் அதுவும் நடிகையாக இருப்பவர்கள் செய்த காரியங்கள் அனைத்தும் சம்மந்தப்பட்டவர்கள் எவர் மூலமாகவோ வெளியே வந்து தான் தீரும். இவர்களின் தொடக்க வாழ்க்கையை முழுமையாக அறிந்தவர் அக்னி நட்சத்திரம் படத்தில் வில்லனாக  நடித்த திரையரங்க அதிபர் ஜி. உமாபதி. தொடக்கக் கால இவர்களின் அழுக்கைப் பொருட்படுத்தாமல் எம்.ஜி.ஆர் இவருக்கு வழங்கிய வாய்ப்புகளும், உதவிகளும் கடைசியில் அவருக்கே எதிராகவே வந்து சேர்ந்துள்ளது. 

எம்.ஜி.ஆரின் புகழும், அவர் இருந்த பதவியும் ஜெயலலிதாவிற்கு முக்கியமாகத் தெரிந்தது. ஜெயலலிதாவின் எண்ணமும், அடுத்தடுத்து நகர்த்திய செயல்பாடுகளும் அதை நோக்கியே நகர்ந்தது. இது அரசியல் மட்டுமல்ல. பணம், புகழ் அதிகம் இருக்கும் அனைத்து துறைகளிலும் கீழ்மட்ட நிலைகளில் இருப்பவர்கள் செய்யக்கூடியதே. மன்னர்கள் காலம் முதல் படையெடுப்பாளர்கள் காலம் வரைக்கும் எவர் தமக்கு உதவி செய்தார்களோ அவர்களை முடித்துக் கட்டுவது தான் வாடிக்கையாக இருந்துள்ளது. காரணம் சொல்லத் தேவையில்லை. தன்னைப் போல மற்றவர்களுக்குச் செய்துவிடக்கூடாது என்பதே பிரதான காரணம். 

மற்றது எல்லாம் பிறகு தான். 

ஜெயலலிதா வாசித்த புத்தகங்கள் அவருக்கு அரசியல் ஆசைகளை உருவாக்கியது. அது தான் முதல் காரணம். முக்கியக் காரணம். கற்பனைகள் எல்லாமே எதார்த்தத்தில் பொருந்தி போய்விடுவதில்லை. ஆனால் உருவான இடையூறுகளைத் தாண்டி ஹைதராபாத் சென்று தங்கிவிடலாம் என்ற எண்ணத்தை மாற்றி இங்கே தங்க வைத்தவர்கள் சசிகலா மற்றும் நடராஜன். 

ஜெயலலிதாவின் ஆசைகளை முழுமையாக்கிய பெருமை சசிகலா மற்றும் நடராஜனையே சாரும். ஒரு மூளையில் இருந்து உதிக்கும் சிந்தனைகளுக்கும் அதுவே மூன்று மூளைகளில் உருவாகும் செயல்பாடுகளின் வீரியம் எந்த அளவுக்கு இருக்கும்? என்பதனை உங்களால் யூகிக்க முடிந்தால் ஏன் வெகுவிரைவில் ஜெயலலிதா முதல் அமைச்சர் பதவியில் அமர முடிந்தது என்பதனை உணர்ந்து கொள்ள முடியும். 

திரைப்படங்களில் காட்டப்படும் காட்சிகளும் சசிகலா வாழ்க்கையும் ஒன்றாக இருப்பது ஆச்சரியம் தான். ஒரு கிராமத்துப் பெண். கிராம வாழ்க்கையைத் தவிர வேறு எதுவும் பார்த்திராத பெண். அரசு அதிகாரியாக இருந்த நடராஜனுடன் திருமணம் நடக்கின்றது. சென்னையில் ஏதாவது ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகின்றது. சசிகலா முதல் முறையாகச் சென்னை வருகின்றார். சென்னையில் யாரையும் தெரியாது. தங்குவதற்கு இடம் கூட இல்லை. சந்திரலேகா ஐ.ஏ.எஸ் கொடுத்த கடிதம் மட்டும் கையில் உள்ளது. காட்சிகள் மாறுகின்றது. ஆனால் கால் நூற்றாண்டு காலத்திற்குள் அகில உலகத்திற்கும் தெரிந்த நபராக மாறியுள்ளார். 

இவர் குடும்ப உறுப்பினர்களிடத்தில் உள்ள சொத்துக்களின் மொத்த அளவு என்பதனை எவராலும் இன்று வரையிலும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஜெயலலிதாவிடம் சசிகலாவை அறிமுகம் செய்து வைத்த சந்திரலேகா ஐ.ஏ.எஸ் கடைசியில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்படப் போகின்றோம் என்று நினைத்துப் பார்த்திருப்பாரா? சசிகலா அதிமுகத் தலைமைச் செயலகத்திற்குத் தான் வந்த ஆட்டோவிற்கு அதிமுகக் கழகத்தில் உள்ளவர்களிடத்தில் ஐந்தும், பத்துமாக வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தவர் என்றால் இன்று நம்பும்படியாக உள்ளதா?

ஜெயலலிதா, சசிகலா காலில் விழாத அரசியல்வாதிகளை இனி யாராவது மிச்சம் மீதி இருக்கின்றார்களா? 

சசிகலாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் நடராஜனைச் சார்ந்தது இருந்தது. நடராஜனின் ஒவ்வொரு நடவடிக்கையும் எவரும் நினைத்துப் பார்க்காத பொன் முட்டையிடும் வாத்தைப் பாதுகாக்கும் பணியைச் செய்து கொண்டிருந்தது. திட்டமிடுதலும், களப்பணியும் சரியாக இருக்க வேண்டும். அது காலச் சூழலுடன் ஒத்துப் போக வேண்டும். இதற்குச் சமகாலத்தில் மிகச் சிறந்த உதாரணம் ஜெயலலிதா, சசிகலா வாழ்க்கை முறை தான். 

ஜெயலலிதாவிற்குத் தொடக்கத்தில் 14 பேர்கள் கொண்ட பாதுகாப்புக் குழுவை அப்போது அவருடன் நெருக்கமாக இருந்த திருநாவுக்கரசு தான் தன் சொந்த செலவில் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் அந்தப் படையை நீக்கியது முதல் ஜெயலலிதாவின் உறவு முதல் நட்பு வட்டம் வரைக்கும் பார்த்துப் பார்த்து களையெடுத்த சசிகலா நடராஜனின் ராஜதந்திர நடவடிக்கைகளைப் பல இடங்களில் வலம்புரி ஜான் அதீதமாகப் பாராட்டி எழுதியுள்ளார். ஜெயலலிதா மனதில் அரசியல் ஆசை துளிர்விட்ட காலம் முதல் அவர் முதல் முறையாக முதலமைச்சர் பதவியேற்ற நாள் வரைக்கும் எத்தனையோ பேர்கள் உதவியுள்ளார்கள். பட்டியல் நீளம். ஆனால் அவர்கள் ஒருவர் கூட அருகில் இல்லாதவாறு பார்த்த பெருமை சசிகலா நடராஜனையே சாரும். 

இந்த இடத்தில் ஒரு குறிப்பிட்ட விசயத்தை ஜான் சுட்டிக் காட்டி எழுதுகின்றார். 

மன்னர் காலம் தொடங்கி, ஆங்கிலேயர் ஆட்சி மற்றும் கடந்த எழுபது ஆண்டுக் கால இந்திய சரித்திரத்தில் பிராமணர்களைத் தவிர்த்து எந்த உயர் பதவிகளும் இருந்ததே இல்லை. எல்லா இடங்களிலும் அவர்கள் தான் இருப்பார்கள். இது அவர்களின் தனித்திறமை அல்லது புத்திசாலித்தனம். ஆனால் நடராஜன் தான் இந்த லாபி வட்டத்தை உடைத்துக் காட்டியவர். "எங்காத்து பொண்ணு வந்திருக்கா" என்று சிலாகித்த எந்தப் பிரமாணர்களும் ஜெ பக்கத்தில் நெருங்க முடியாத அளவிற்கு வலைப்பின்னல் சரியாகவே உருவாக்கி வைத்திருந்த சசிகலா நடராஜன் திறமையை எப்படிப் பாராட்டுவது? 

ஜெயலலிதாவிற்கு என்ன தான் திறமையிருந்தது? என்பது குறித்து வரலாற்றில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எதுவுமில்லை. எடுத்தேன்? கவிழ்த்தேன் ரீதியான நபரைப் பொம்மை போல வைத்துக் கொண்டு மொத்த அதிகாரங்களையும் தாங்கள் கையில் வைத்துக் கொண்டு வித்தைக் காட்டிய அவர்களின் திறமையைப் பல இடங்களில் வலம்புரி ஜான் சிலாகித்து எழுதியுள்ளார். 

குறிப்பாக நடராஜன் வேட்டை நாய் போலவே தொடக்கம் முதலே செயல்பட்டு வந்துள்ளார். எதிரி என்றால் அழித்து முடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் எந்த மாற்றத்தையும் உருவாக்கிக் கொள்ளவே இல்லை. கணவன் வெளிப்புறம். மனைவி உட்புறம் என்பது எழுதப்படாத விதியாக வைத்துக் கொண்டு தமிழ்நாட்டின் மொத்த விதியையும் மாற்றிய பெருமை இவர்களையே சேரும். சசிகலா நடராஜன் குறித்து அவர்களின் சகல பாகங்களையும் செய்த பாவங்களையும் பலரும் பல இடங்களில் பாகம் குறித்து எழுதிவிட்டனர். 

இவர்களைப் பற்றி வலம்புரி ஜான் எழுதிய வாசகம் பொருத்தமாக உள்ளது. 

ஜெயலலிதா செய்த வேலை எம்.ஜி.ஆரின் உண்மையான விசுவாசிகளை அழித்து ஒழித்தது. ஆனால் சசிகலா செய்தது ஜெயலலிதாவின் விசுவாசிகள் என்பது அறவே இருக்கக்கூடாது என்பதனை கர்மசிரத்தையுடன் செய்து முடித்தது.

தீபா, தீபக் போன்ற பெயர்கள் கூட ஜெயலலிதா இறப்புக்குப் பின் தானே நமக்குத் தெரிய வந்தது. ஜெயலலிதா எல்லாவற்றுக்கும் விலை வைத்திருந்தார். ஆனால் சசிகலா குடும்பத்தினரோ விலை என்பதே இல்லை. அனைத்தும் நமக்குரியது என்பதனை ஒவ்வொரு செயல்பாட்டிலும் நிரூபித்தனர். 

தலைமைப்பொறுப்பில் இருப்பவர்களுக்குப் பலகீனம் இருந்தால் அது எந்த அளவுக்கு நாச விளைவுகளை நாட்டுக்கு உருவாக்கும் என்பதனை தமிழ்நாட்டின் கடந்த கால அரசியல் தலைகள் ஒவ்வொருவரும் அவர்களின் வாழ்க்கை வழியே நமக்குப் பலவிதங்களில் உணர்த்திக் காட்டிச் சென்று உள்ளனர். 

ஆனால் ஜெயலலிதா வாசித்த புத்தக அறிவு மூலம் தனக்குத் தானே உருவாக்கிக் கொண்ட ஆளுமை எதுவும் அவரின் செயல்பாட்டில் காட்ட முடியாத அளவிற்குப் பரந்துபட்ட மனசு இல்லாமல் போனதற்கு முக்கியப் பல காரணங்களில் சசிகலா குடும்பமே முக்கியக் காரணமாக இருக்கின்றார்கள். 

காலம் ஒவ்வொரு தனி மனிதர்களுக்கும் அவரவருக்குண்டான சில அதிர்ஷ்ட வாய்ப்புகளை அவ்வப்போது வழங்கத் தான் செய்கின்றது. சிலர் சரியான சமயத்தில் பயன்படுத்தி வெற்றி கண்டு விடுகின்றார்கள். சிலர் அந்த வாய்ப்பு வந்ததை அறியாமல் கோட்டை விட்டு வாழ்நாள் முழுக்கப் புலம்பும் மனிதராக வாழ்கின்றார்கள். ஜெயலலிதாவிற்குத் தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல்வாதிகளுக்கும் உண்டான பெரிய வித்தியாசம் ஒன்று என்னவென்றால் மொத்த அதிர்ஷ்டமும் இவர் பக்கம் இருந்தது. ஆனால் இவரின் அதிர்ஷ்டங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் சசிகலா குடும்பத்தினர் மட்டுமே. 

உடல் உறுப்புகள் மொத்தமாக மாற்றி, சாவுக்கு மிக அருகே சென்று வந்தும் கூடத் தன் குணாதிசியங்களை மாற்றிக் கொள்ள முடியாத நடராஜனின் சமீப பேட்டிகளை வாசிக்கும் போது அவரின் ஆரோக்கியமான வாழ்க்கையின் போது அவரது எண்ணங்கள் எப்படியிருந்துக்கும் என்பதனை புரிந்து கொள்ள முடிகின்றது. எம்.ஜி.ஆர் கடைசிக் காலத்தில் நோய் என்ற வலைக்குள் மாட்டிக் கொண்டார். ஆனால் அவருக்குண்டான உதவிகள் கிடைத்தது. எதுவும் மறைக்கப்படவில்லை. மறுக்கப்படவில்லை. 

ஆனால் ஜெயலலிதா வாழ்க்கையில் மொத்தமும் தலைகீழ். என்ன நடந்தது? என்ன நடந்திருக்கும்? என்பதனை இன்னமும் தமிழ்கூறும் நல்லுலகம் ஆராய்ந்து கொண்டிருக்கின்றது.

இது தான் சசிகலா? 

எம்.ஜி.ஆர் உடல் நலிவுற்று இருந்த போது ஜெயலலிதா இவரால் இந்தச் சூழ்நிலையில் கூடத் தமிழ்நாட்டை ஆள முடியும் என்றால் என்னால் ஏன் முடியாது? என்று கேள்வி எழுப்பியவர் என்றால் அரசியலை எந்த அளவுக்குப் பார்த்துள்ளார்? என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழக அரசியல் என்பதும் முதல் அமைச்சர் நாற்காலி என்பதும் இப்போது கூட இரண்டு வெற்றிப்படங்கள் நடித்து விட்டால் அது நமக்குச் சொந்தம் என்று கருதும் தமிழ் நடிகர்கள் சொல்லும் விளையாட்டு நாற்காலி போலத்தானே இருக்கின்றது? 

பல புத்தகங்கள் வாசித்த ஜெயலலிதா தமிழக அரசியலைப் பற்றி எப்படிப் புரிந்து வைத்திருக்கக்கூடும்? என்பதனை நம்மால் புரிந்து கொள்ள முடியும். தனக்குத் தெரிந்த ஆங்கில அறிவே அனைத்துக்கும் அருமருந்தாக இருக்கும் என்று கடைசி வரைக்கும் நம்பினார். ஆங்கிலம் தெரியாதவர்கள் அவர் பார்வையில் மனிதர்களாகவே தெரியவில்லை. 

தாழ்வு மனப்பான்மை என்பது பல சமயங்களில் உயர்வு மனப்பான்மையாகத் தெரியும். தன்னுடைய காயங்கள், தன் அழுக்கு, மறைக்க முடியாத தோல்விகள், மறைத்த ஆக வேண்டிய கடந்த கால அசிங்கங்கள் அனைத்தும் தன்னுடைய அகங்கார செயல்பாடுகளால் மறைத்து விட முடியும் என்று நம்புவர்களின் வாழ்க்கைக்கு மிகச் சிறந்த உதாரணம் ஜெயலலிதாவின் வாழ்க்கை. தொடக்கம் முதலே ஜாதகம் விசயங்களில் அதீத ஈடுபாட்டுடன் இருந்துள்ளார். அதைப் போலவே மந்திர, சித்து வேளைகளில் அதே அளவுக்கு ஈடுபாட்டுடன் இருந்துள்ளார். 

வலம்புரி ஜான் தான் அதற்கும் உதவியுள்ளார். தன் உண்மையான ஜாதகத்தைப் போல மற்றொரு ஜாதகத்தையும் தயார் செய்து வைத்து மற்றவர்களைக் குழப்பும் வேலையையும் தெளிவாகவே செய்துள்ளார். பிரபல ஜோதிடர் இவரின் எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லியவர் ஒரு வார்த்தையும் சேர்த்துச் சொல்லியுள்ளார். இந்த ஜாதகி போதை விவகாரங்களில் தள்ளியே இருக்க வேண்டும் என்பதே. நாம் தான் யூகித்துக் கொள்ள வேண்டும். 

அமெரிக்கா சென்றவர் இறந்தே விட்டார் என்று நம்பி செய்த காரியங்கள் எதுவும் அவர் முழுமையாகத் திரும்பி வந்ததும் நிறைவேறவே இல்லை. ராஜ ரகசியங்கள், ராஜாங்க உள்ளடி வேலைகள் அனைத்தையும் அங்கங்கே வலம்புரி ஜான் விவரித்திருப்பதைப் பார்க்கும் போது பழிவாங்கும் குணம் அதிகம் உள்ள எம்.ஜி.ஆர் எப்படி இவர்களை எல்லாம் இவ்வளவு தூரம் விட்டு வைத்திருந்தார் என்பதே ஆச்சரியமாக உள்ளது. 

காலம் சில சமயம் கழிவுகளை உச்சத்திற்கு அழைத்துச் செல்லும். தீமைகள் தன் பேயாட்டத்தை இறுதி வரைக்கும் நிறுத்தாது. ஆனால் வரலாற்றுப் பக்கங்கள் மொத்தத்தையும் ஏதோவொரு சமயங்களில் வெளியே கொண்டு வந்து துப்பி விடும் வல்லமை கொண்டது. 

கறை நல்லது



தொடர்புடைய  பதிவுகள்

ஜெ. செய்த ஊழல்களை முழுமையாக தெரிந்து கொள்ள இந்த மின் நூல் உதவக்கூடும்.





உங்கள் வாசிப்புக்கு மின் நூல்கள்




Thursday, November 30, 2017

எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா


வணக்கம் -   நூல் விமர்சனம்  - 2

கலைஞரைப் பற்றி அவரின் தொடக்கக் கால வரலாற்றைப் பற்றிக் கிண்டலும் கேலியுமாகப் பேசுபவர்களுக்கு இன்றைக்கும் கண்ணதாசன் எழுதிய வனவாசம் என்ற நூல் தான் முக்கியக் காரணமாக உள்ளது. ஆனால் அதே கண்ணதாசன் எம்.ஜி.ஆர் குறித்து அலை ஓசை பத்திரிக்கையில் தொடராக எழுதினார் பாதியில் நிறுத்திவிட்டார். காரணம் பணம். கண்ணதாசனின் மொத்த கடன்களும் தீர்க்கப்பட்டது. அத்துடன் அந்த வருடமே கண்ணதாசன் அரசவைக் கவிஞராகவும் மாறினார். எம்.ஜி.ஆர் குறித்த தொடரும் நின்று போனது. தமிழக அரசியலை 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்குத் இதனைப் பற்றித் தெரியும். 

எம்.ஜி.ஆர் தொடக்கம் முதல் அதிக அக்கறை காட்டிய இரண்டு விசயங்கள். ஒன்று தனது ஆரோக்கியம். மற்றொன்று தனது பிம்பம். திரைப்படங்கள் மூலம் உருவாக்கப்பட்ட தனது மாயப் பிம்பம் கலைவதை எந்தக் காலத்திலும் சகித்துக் கொண்டேயில்லை. அந்தப் பிம்பத்திற்குள் நல்லதும் இருந்தது. கெட்டதும் இருந்தது. ஆனால் நல்லது பெரும்பான்மையாக இருந்த காரணத்தால் அவருக்கு நிர்வாகம் தெரியாது, கோமாளி, மலையாளி என்ற அவப்பெயர்கள் துக்குநூறாகிப் போனது." நீ இருக்கும் வரையிலும் எங்களுக்கு நீ தான் ராஜா" என்று தமிழக மக்கள் மொத்த ஆதரவையும் வழங்கினர். 

ஆனால் வலம்புரி ஜான் எம்.ஜி.ஆர் பழகிய ஆயிரக்கணக்கான நபர்களில் ஒருவர். இவரைவிடவும் முக்கியத்துவம் பெற்று கடைசி வரைக்கும் அவர் நிழல் போல வாழ்ந்தவர்கள் பலர். எம்.ஜி.ஆர் தன் வாழ்நாளில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னைச் சுற்றி எப்படிப்பட்ட ஆட்கள் இருக்க வேண்டும்? அவர்கள் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதனையும் திட்டமிட்டு சரியாகவே செய்து வந்தார். ஆர்.எம்.வீரப்பனுக்கு உண்டான மதிப்பு வேறு. ஜேப்பியாருக்கு உண்டான மரியாதை வேறு. ஆனால் இருவருமே தங்கள் தலைவரை உயிரென நினைத்தனர். இதே போலப் பயில்வான்கள் முதல் பல்கலை வித்தகர் வரைக்கும் உண்டான அத்தனை பேர்களையும் அழகாக அவரருக்குண்டான மரியாதைகளுடன் வைத்திருந்தார். 

ஆனால் வலம்புரி ஜான் எம்.ஜி.ஆர் குறித்து எழுதும் போதெல்லாம் எம்.ஜி.ஆரின் பலவீனங்களைச் சில வார்த்தைகளிலே சொல்லி புரிய வைத்து விடுகின்றார். "பலவீனம் என்பது மிகப் பெரிய பள்ளத்தாக்கு. அதில் விழுந்தால் யானை கூடப் பூனை தான்." 

ஆனாலும் எம்.ஜி.ஆரின் மொத்த பலவீனங்களையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகின்றது அவரின் தயாள குணம். காரணம் அவரின் இளமைப் பருவத்தில் அவர் அடைந்த துன்பங்கள். ஒரு வேளை சாப்பாட்டுக்கு அவரும் அவர் குடும்பமும் பெற்ற துன்பங்களைக் கடைசி வரைக்கும் மறக்காமல் இருந்தது ஆச்சரியம். எவரைச் சந்தித்தாலும் முதலில் சாப்பிட்டுவிட்டீர்களா? என்று கேட்பதும் இதனால் தான். 

எம்.ஜி.ஆரின் முதல் நாற்பது வருடங்கள் ஒரு வேளை சாப்பாட்டுக்குக் கூடக் கையேந்தும் நிலையில் வைத்த இயற்கையின் கருணைப்பார்வை அடுத்தடுத்து அவரை வளர்த்தது. நம்பமுடியாத அளவுக்குப் புகழ் வெளிச்சம் அவர் மேல் பரவி கொண்டேயிருந்தது. அஸ்தமனம் ஆகாத சூரியன் போலவே வாழ்ந்தார். அதனால் தான் அறிஞர் அண்ணா நம் சூரியன் சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வதே எம்.ஜி.ஆர் என்று உறுதியாக நம்பினார். இந்த நம்பிக்கை தான் அண்ணா முதல் முறையாக ஆட்சிக்கு வந்த போது தான் தேர்ந்தெடுத்த அமைச்சரவை பட்டியலை எம்.ஜி.ஆரின் பார்வைக்குக் கொடுத்து அவரின் ஒப்புதலையும் பெற வைத்தார். அவர் திருத்தியதையும் ஏற்றுக் கொண்டார். 

வளமிக்க, சக்திமிக்க, அதிகாரம் பொருந்திய மனிதராக மாற்றிய காலம் எம்.ஜி.ஆரின் கடைசிக் காலத்தை வெளியே சொல்ல முடியாத வெறுமையை, தனிமையை, உடல் பலகீனத்தை, நோயை பரிசாகத் தந்தது. 

இடைப்பட்ட காலம் தான் அவரின் பொற்காலம். வெறுமனே பொற்காலம் என்று சொல்லிவிட முடியாது. நாலைந்து பிறவிகள் ஒரு மனிதன் அடையவேண்டிய அத்தனை புகழையும், பெருமையையும் , வசதிகளையும் காலம் வழங்கிச் சென்றுள்ளது. பசி, பட்டினியைப் பார்த்தே வளர்ந்தவர் தன்னை நம்பியே இருந்தவர் என்றால் அவருக்குச் சிறிது கூட யோசிக்காமல் தன்னால் என்ன முடியுமோ? அனைத்தையும் வாரி வழங்கியுள்ளார். இது அவர் உடல் நலிவுற்று இருந்த சமயத்தில் கூட மாறவில்லை. சுய நினைவோடு இருந்த காலம் வரைக்கும் அவரின் வள்ளல் தன்மை மாறவே இல்லை. பேச்சுத் திறன் இழந்த நிலையிலும் அவரால் எப்படி இந்தக் குணாதிசியத்தை மாற்றிக் கொள்ளாமல் வாழ முடிந்துள்ளது என்பதே மகத்தான ஆச்சரியம். 

அரசியலுக்காக, விளம்பரத்திற்காகச் செய்தார் என்றால் கூட அவர் மூலம் ஆதாயம் அடைந்தவர்கள், அருகே இருந்து பார்த்தவர்கள் என்று மொத்தமாக அவரின் இந்த ஈகை குணத்தைப் பல இடங்களில் எழுதியதை, கூட்டங்களில் பேசியதை கேட்கும் போதெல்லாம் அவரின் ஆழ்மன காயங்களை இதன் மூலம் தீர்க்க விரும்பியுள்ளார் என்பதனை புரிந்து கொள்ள முடிகின்றது. 

"என்னை நம்பியவர் எவரும் கெட்டுப் போவதில்லை" என்பதனை பல இடங்களில் பல பேரிடம் தனது செய்கைகள் மூலம் நிரூபித்துள்ளார். எம்.ஜி.ஆரால் கெட்டுப் போனவர்களின் பட்டியலும் நீளம். அதற்குப் பின்னால் உள்ள காரணங்களும் அதிகம். வலம்புரி ஜான் அதனைப் பற்றி எந்தக் குறிப்பும் இந்தப் புத்தகத்தில் சொல்லவில்லை. ஆனால் ஜெயலலிதா மேல் புரிந்து கொள்ளவே முடியாத தீரா மயக்கம் இருந்தது ஏன்? என்று எவராலும் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. 

எம்.ஜி.ஆர் எந்த விசயத்திலும் எவரையும் நம்புவதே இல்லை. ஒருவர் சொல்வதைப் பலபேர்களிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டேயிருப்பது அவரின் வாடிக்கையான பழக்கம். ஆனால் ஜெ குறித்த எண்ணங்களில் அவரால் மாற்ற முடியாத நிலைக்கே வாழ்ந்துள்ளார். இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, போன்றவர்கள் மூலம் எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதாவால் கொடுக்கப்பட்ட பலவித அழுத்தங்கள், உருவாக்கப்பட்ட அச்சங்கள் எல்லாமே அவரின் ஆயுளை குறைக்கக் காரணமாகவும் இருந்துள்ளன. பல சந்தர்ப்பங்களில் இனி மாறித்தான் ஆக வேண்டும் என்ற எண்ணம் எடுத்த அடுத்த நாலைந்து மணி நேரத்தில் அப்படியே மாறிவிடுவார் என்பதனை அருகே உள்ளவர்கள் உணர்ந்திருந்த காரணத்தால் ஜெயலலிதா விசயத்தை மட்டும் எவரும் கண்டு கொள்ளவே இல்லை. அதனையும் மீறி செயல்பட்டவர் ஆர். எம். வீரப்பன் மட்டுமே. 

ஜெயலலிதாவுக்குத் தொடக்கம் முதல் சிம்ம சொப்பனமாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். வீரப்பனுக்கு வலம்புரி ஜான் மேல் தீரா கோபம். காரணம் அந்த அம்மையாருக்கு அரசியல் ஆசையை உருவாக்கிக் கொடுத்ததே இவர் தான் என்ற எண்ணத்தில் வீரப்பனுக்குப் பல காலம் வலம்புரி ஜான் வேண்டாத மனிதராகவே இருந்து உள்ளார். ஆனாலும் ஆர்.எம்.வீரப்பனின் நெருங்கிய நண்பராகவும் வலம்புரி ஜான் இருந்துள்ளார். இதில் ஒரு மகத்தான ஆச்சரியம் ஒன்று உண்டு. 

இன்று வரையிலும் ஜெயலலிதா குறித்துப் பேசுபவர்கள் இரண்டு விசயங்களைப் பற்றித் தவறாமல் குறிப்பிடுகின்றார்கள். அவர் நடிகையாக இருந்தார். வசதிக்கு என்ன குறைவு? எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடித்தார். இருவருக்கும் இயல்பான உறவு தொடக்கம் முதலே இருந்திருக்கும்? 

இரண்டுமே தவறு. 

ஒரு நடிகரை விட நடிகையின் ஆயுள் காலம் மிக மிகக் குறைவு. ஜெயலலிதா மாறிக் கொண்டேயிருந்த காலச் சூழலில் அவரின் படங்களும் எடுபடாமல் போனது. ஒதுக்கப்பட்டார். எம்.ஜி.ஆரின் தொடர்பு இல்லாமல் தான் வாழ்ந்து வந்தார். 

எம்.ஜி.ஆர் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடத்த ஆசைப்பட்டார். அது சார்ந்த முக்கியப் பொறுப்புகள் அனைத்து ஆம்.எம்.வீரப்பன் வசம் கொடுக்கப்பட்டு இருந்தது. எம்.ஜி.ஆரை நேரிடையாகத் தொடர்பு கொண்டால் வேலைக்கு ஆகாது என்று நினைத்த ஜெயலலிதா ஆம்.எம்.வீரப்பன் அவர்களைத் தொடர்பு கொண்டு அப்போது அவர் நடத்திக் கொண்டிருந்த "காவிரி தந்த கலைச்செல்வி" என்ற நாட்டியக்குழுவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த இடத்தில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் அதிகாரிகள் கூட ஜெயலலிதாவை மதிக்கத் தயாராக இல்லை. அவர்களிடமும் கெஞ்சிக் கூத்தாடி தான் அந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் எம்.ஜி.ஆருடன் உண்டான தொடர்பு புதுப்பிக்கப்பட்டது. 

இது ஆரம்பம். 

இந்த ஆரம்பம் மற்றொரு விசயம் மூலம் எம்.ஜி.ஆருடன் மிக நெருக்கமான தொடர்பை காலம் உருவாக்கிக் கொடுத்தது. அப்போது கலைஞர் ஜெயலலிதாவை எம்.ஜி.ஆருக்கு எதிராகச் செயல்படக் காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றார் என்பதனை அதிகாரப்பூர்வமாகக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் அதன் பிறகே ஜெயலலிதாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து தனது நேரிடைப் பார்வையில் கொண்டு வந்தார். இதன் பிறகே மாற்றங்கள் ஒவ்வொன்றும் விரைவாக நடந்தேறத் துவங்கியது. 

பட வாய்ப்பு இல்லாமல் வருமான ரீதியாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ஜெயலலிதாவிற்கு மறுவாழ்க்கை கொடுத்தவர் ஆர்.எம்.வீரப்பன் தான். அது எம்.ஜி.ஆரின் சாவு வரைக்கும் போய் நின்று விட்டது. எம்.ஜி.ஆரின் மரணம் ஜெயலலிதா விரும்பிய அரசியல் பாதையைக் காட்டியது. ராஜீவ் காந்தியின் மரணம் ஜெயலலிதாவிற்கு அதிர்ஷ்டக் கதவை திறந்து விட்டது. 

ஜெயலலிதாவின் குணத்தைப் பற்றி ஜான் ஒரு இடத்தில் இவ்வாறு சொல்கின்றார். 

பிராமணர்கள் வக்கிலாக, ஆசிரியராக, நீதிபதியாக, விஞ்ஞானியாகவே இருந்தாலும் அவர்கள் கடைசிவரைக்கும் முழுமையான பிரமாண குணாதிசியங்களாவே இருக்கின்றார்கள். தங்களால் வர முடியாத துறை என்றால் வந்தவர்களை மடக்கிக் கொள்ளுதல் அவர்களுக்குக் கைவந்த கலை. நடிகர் ரஜினிகாந்த வரைக்கும் உதாரணமாக அடுக்கிக் கொண்டே செல்கின்றார். 

காரணம் மத்திய அரசின் செல்வாக்கை தொடக்கத்தில் ஜெயலலிதாவிற்கு உருவாக்கிக் கொடுத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன். அவர் கடைசி வரைக்கும் ஜெயலலிதாவை அடுத்தடுத்து நகர்த்திக் கொண்டு வருவதில் கர்மசிரத்தையுடன் செயல்பட்டுள்ளார். இவரைப் போலப் பலரும் ஜெ. வுக்குச் சாதி அபிமானம் என்ற ஒரே நோக்கத்தில் பலவிதங்களில் உதவியாக இருந்துள்ளனர். அது எந்த அளவுக்கு இருந்தது என்றால் ராஜீவ் காந்தி சென்னையில் நேரு சிலையைத் திறக்க வரும் போது ஜெயலலிதாவும் அதில் கலந்து கொண்டு தான் ஆக வேண்டும் என்று எம்.ஜீ.ஆரை மிரட்டிப் பார்க்கும் அளவிற்கு மத்திய அரசின் லாபி வட்டம் கச்சிதமாகச் செயல்பட்டது. 

மற்ற துறைகளை விட அரசியல் என்பது வித்தியாசமான துறை. உச்சத்தை அடைந்தவர்கள், அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள், இவர்கள் இருவரையும் அனுசரித்துத் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்கள். இந்த மூன்று வகையினர் தான் நம்மை மக்களாட்சி என்ற பெயரில் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த மூன்று வட்டத்திற்குத் தொடர்பில்லாத தன் உழைப்பு தன் வாழ்க்கை என்று எப்போதும் போல மக்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

அவரவருக்குப் பிடித்த கொள்கைகள், விருப்பங்கள் என்ற எளியத் தத்துவத்திற்குள் தங்களைப் பொருத்திக் கொண்டு வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றார்கள். எம். ஜி.ஆரும் இப்படி வாழ்ந்து முடிந்து போயிருக்க வேண்டியவர் தான். ஆனால் தன் முயற்சியில் மனம் தளராத எம்.ஜி.ஆரின் வாழ்க்கைப் பயணம் என்பது தன்னம்பிக்கையின் மொத்த சாராம்சம். 

தான் ஒருவருக்கு வாக்கு கொடுத்து விட்டால் அதனை எப்பாடுபட்டவது நிறைவேற்றி விடுவது என்ற கொள்கையில் எம்.ஜி.ஆர் கடைசி வரையிலும் உறுதியோடு வாழ்ந்துள்ளார். இன்று வரையிலும் ஈழப் போராட்டத்திற்குக் குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கு எம்.ஜி.ஆர் செய்ய உதவிகள் அனைத்தும் பெரும்பாலானோருக்குத் தெரியும். ஆனால் அதற்கு மத்திய அரசாங்கம் விடுத்த மிரட்டலும் அதனைத் தாண்டி நான் ஏற்கனவே அவர்களுக்குப் பணம் கொடுத்து விட்டேன் என்று ஆச்சரியப்படுத்தியுள்ளார். ஆனால் அன்று மத்திய அரசிடம் இவரின் செயல்பாடுகளைப் போட்டுக் கொடுப்பவராகத்தான் ஜெயலலிதா இருந்துள்ளார். ஈழ விசயத்தில் கடைசிவரைக்கும் நடிகையாகத் தான் வாழ்ந்துள்ளார். 

எம்.ஜி.ஆர் நடிகர் என்ற ஒரு வார்த்தையைத் தாண்டி தமிழக மக்களின் வாழ்க்கையோடு எந்த அளவுக்குக் கலந்துள்ளவர் என்பதனை சரியாகப் புரிந்து கொண்டவர் அறிஞர் அண்ணா. 1952 க்குப் பிறகு துணை நடிகர் மூலம் அண்ணாவைச் சந்தித்தார். அதுவரையிலும் காங்கிரஸ் அபிமானியாகவே இருந்தார். திமுக வில் எம்.ஜி.ஆர் வந்த பிறகே சூரியன் என்ற சின்னம் நடுத்தரவர்க்கத்திற்குக் கீழே உள்ள மொத்த மக்களிடமும் சென்று சேர்ந்து. அது வரையிலும் படித்தவர்கள், குறிப்பிட்ட இளைஞர்கள் கூட்டம் என்று இருந்த திராவிடக் கொள்கைகள், கட்சி, சின்னம் உழைப்பாளிகள், அடித்தட்டு மக்கள் வரைக்கும் சென்று சேர்ந்துள்ளது. 

எம்.ஜி.ஆர் எப்போதும் சந்தேகம் கொள்பவராக இருந்துள்ளார். ஆனால் சரியான காரணம் தெரிந்தும் மீண்டும் அவரது இயல்பான குழந்தைத்தனமாக மாறுவதுமாகவும் இருந்துள்ளார். ஆனால் ஜெயலலிதா இதில் இருந்து வேறுபாடானவர். 

ஒவ்வொரு செயல்பாட்டிலும் வன்மமும், வக்கிரமும் கொடி கட்டிப் பறந்துள்ளது. அடைந்தே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்துவிதமான அயோக்கியத்தனங்களையும் கூசாமல் செய்துள்ளார். தான் நினைத்ததை அடைந்த பின்பு கூட அவரால் தனது குணாதிசியங்களை மாற்றிக் கொள்ள முடியவில்லை. மாற்றிக் கொள்ளாமல் வாழ்ந்த போதிலும் உருவான சூழ்நிலைகள் ஒவ்வொன்றும் அவருக்குரியதாகவே மாறிப் போனதும் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அவரின் செயல்பாடுகளும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாற்றியது. 

தமிழக மக்களின் மாறாத மனோபாவங்கள் ஒரு புறம். அதை எந்தக் காலத்திலும் மாற்றிவிட ஆசைப்படாத ஆட்சியாளர்களின் தந்திரங்கள் மறுபுறம். இன்று வரையிலும் ஒவ்வொரு வாக்களானும் இரட்டை இலைக்கு ஓட்டு போடுவதன் மூலம் தாங்கள் இன்னமும் எம்.ஜி.ஆரின் விசுவாசி என்று காட்டிக் கொள்வதாக நினைத்துக் கொள்கின்றார்கள்.  

ஆனாலும் காலம் அவருக்குத் தான் வாய்ப்பு வழங்கியது. 

வெற்றியாளர்களை மட்டுமே இந்தச் சமூகம் கொண்டாட விரும்புகின்றது. அப்போது அந்த வெற்றிக்குப் பின்னால் உள்ள மோசமான விசயங்கள் அனைத்தும் மறக்கப்படுகின்றது. மாற்றப்படுகின்றது.


Wednesday, November 29, 2017

வணக்கம் - நூல் விமர்சனம்


எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா (1917- 2017) கொண்டாடும் நேரமிது. வைகோ அவர்களும் எம்.ஜி.ஆருக்காகச் சமீபத்தில் ஒரு விழா நடத்தியிருந்தார். எம்.ஜி.ஆருக்கான விழா என்று சொல்லாமல் தனக்கான பொன்விழா என்று காரணம்காட்டி அரசாங்கத்திடமிருந்து கலைவாணர் அரங்கைப் பெற்று இருந்தார். விழா மேடையில் எம்.ஜி.ஆர் குறித்துப் பல தகவல்களைப் பகிர்ந்தார். அவர் பேசும் போது "நான் இந்த மேடையில் பேசுவதற்கு முன்பு எம்.ஜி.ஆர் குறித்து ஏறத்தாழ நாற்பது புத்தகங்கள் பல்வேறு நபர்கள் ஒவ்வொரு சமயத்திலும் எழுதியதை வாசித்து விட்டுத் தான் இங்கே பேசுகின்றேன்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். 

வைகோ வும் எம்.ஜி.ஆரும் எதிரெதிர் திசையில் இருந்து அரசியல் களத்தில் செயல்பட்டவர்கள். வைகோ அவர்களுக்கு எம்.ஜி.ஆர் குறித்து நேரிடையான, மறைமுகமான, செவிவழிச் செய்திகள் ஏராளமாகத் தெரிந்திருந்த போதிலும் எம்.ஜி.ஆர் குறித்த புத்தகங்கள் அனைத்தையும் வாசித்து விட்டு விழாவில் பேசியது என்னளவில் ஆச்சரியமாகவே இருந்தது. 

வைகோவின் உரையைக் கேட்டதிலிருந்தே எம்.ஜி.ஆர் குறித்த பலதரப்பட்ட புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்தது கொண்டே இருந்தது. இதுவரையிலும் எம்.ஜி.ஆர் குறித்த தகவல்கள் அனைத்தும் பத்திரிக்கைகள் வாயிலாகத் தெரிந்தது மட்டுமே. 

காரணம் எம்.ஜி.ஆர் மறைந்த போது நான் கல்லூரி இரண்டாம் ஆண்டில் இருந்தேன். நான் இதுவரையிலும் வாசித்த வாசிப்பின் வாயிலாகவே அவரைப் பற்றிப் பல விசயங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது. தீரா ஆச்சரியங்கள் நிறைந்த அவரின் வாழ்க்கை குறித்த தேடல்கள் இன்னும் முழுமையடையவில்லை. நீண்ட நாளைக்குப் பின் நான் எதிர்பார்த்துக் காத்திருந்த புத்தகம் என் கைக்கு வந்து சேர்ந்தது. 

அது வலம்புரி ஜான் எழுதிய வணக்கம்

இந்தத் தொடர் நக்கீரனில் வாரந்தோறும் வெளிவந்த காலம் எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. அப்போது கல்லூரி முடித்து வெளியே வந்து வேலையில் சேர்ந்த சமயம். இடையிடையே சில அத்தியாயங்களை வாசித்துள்ளேன். அப்போது தொடர் வாசிப்பில் இல்லாத காரணத்தால் வாசிப்பு நிலையில் இருந்து தள்ளியே இருக்க வேண்டிய சூழ்நிலை. ஆனால் அப்போது வாசித்த விசயங்களுக்கும், இப்போது வாசிக்கும் போது உண்டான மனநிலைக்கும் ஏராளமான வித்தியாசங்கள். அன்று புரியாத பல அரசியல் சூட்சமங்கள் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது இவையெல்லாம் நாம் அன்றாடம் செய்தித்தாளில் வாசித்தது தானே? என்று யோசிக்க வைக்கின்றது. 

வலம்புரி ஜான் எழுதிய பல புத்தகங்களை ஊரில் இருந்த போது நூலகத்தில் எடுத்து வாசித்துள்ளேன். இருபது வயது இளைஞர்களைச் சுண்டியிழுக்கும் நடையது. அருவி போல நம்மை இழுத்துக் கொண்டே சொல்லும். எந்த எழுத்தாளர்களின் நடையுடனும் ஒப்பிடவே முடியாது. அதீத புத்திசாலிகள் வரிசையில் நிச்சயம் வலம்புரி ஜான் அவர்களுக்கும் ஒரு இடமுண்டு. தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் கரை கண்டவர். எழுத்தாற்றல், பேச்சாற்றல், பத்திரிக்கையாளர், பாராளுமன்ற உறுப்பினர் என்று வாழ்நாள் முழுக்கக் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு சுழன்று வாழ்ந்தவர். பல இளைஞர்களைப் பத்திரிக்கையுலகத்திற்கு அடையாளம் காட்டியவர். 

குறிப்பாக நக்கீரன் கோபால் அவர்கள் வலம்புரி ஜான் மூலமாகத்தான் முதன் முறையாகப் பத்திரிக்கை உலகத்திற்கு உள்ளே வந்தார். அப்போது வலம்புரி ஜான் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த தாய் வார இதழில் லே அவுட் ஆர்டிஸ்ட்டாக நக்கீரன் கோபால் தனது பத்திரிகை உலகப் பயணத்தைத் தொடங்கினார். 

கடந்த 25 ஆண்டுகளாக வலம்புரி ஜான் அவர்களின் எந்தப் புத்தகத்தையும் வாசித்தது இல்லை. ஆனால் பல்வேறு இடங்களிலும் பேசிய பேச்சுத் தொகுப்புகளை மட்டும் இணையத்தில் அவ்வப்போது கேட்பதுண்டு. பல சமயம் வியந்து போனதுண்டு. ஞாபக சக்தி, தொடர்ந்து வந்து விழுந்து கொண்டேயிருக்கும் வார்த்தைகளும், பலரும் அறிந்திராத சரித்திர குறிப்புகள் முதல் நிகழ்கால அரசியல் அவலங்கள் வரைக்கும் எனக் கலந்து கட்டி கேட்பவரை திகைக்க வைப்பதில் கில்லாடியாக இருப்பார். 

வணக்கம் தொடர் நக்கீரனில் வெளிவந்த போது ஏராளமான பிரச்சனைகளைச் சந்தித்தது. வலம்புரி ஜானுக்கு மட்டுமல்ல. நக்கீரன் வார இதழுக்கும் சேர்த்து ஜெ பல இடைஞ்சல்களை உருவாக்கினார். நீதிமன்றம், காவல்துறை கலந்து கட்டி கபடி விளையாடியது. ஜெ. முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றிய போது தமிழகம் புதுப்புது விசயங்களைக் கண்டது. மேற்கத்திய நாடுகள் மட்டுமே கண்ட சர்வாதிகாரம் என்பது இங்கே உள்ள மக்களாட்சியில் என்னவெல்லாம் உருவாக்க முடியும் என்பதனை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியவர் ஜெயலலிதா. 

ஜெயலலிதா காலத்தில் இந்தப் புத்தகம் வெளிவந்த போதிலும் 2016 ஆம் ஆண்டு வரைக்கும் நான்கு பதிப்புகள் கண்டாலும் தற்போது தான் அதீத கவனம் பெற்றுள்ளது. காரணம் இதில் சசிகலா குறித்துச் சொல்லப்பட்ட விசயங்கள் அனைத்தும் உண்மையாகவே நடந்து கொண்டிருப்பது முக்கியக் காரணமாக இருந்தது. வலம்புரி ஜான் இந்தப் புத்தகத்திற்கென என்னுரை என்று 2002 வருடத்தில் எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால் முதல் பதிப்பு 2005 வந்து அதற்குப் பிறகு ஐந்து பதிப்புகள் வெளி வந்துள்ளது. 

புத்தகத்தை முதல் முறை வாசித்து விட்டு உருவான தாக்கமும், மீண்டும் மீண்டும் பலவற்றை யோசித்துக் கொண்டே புத்தகத்தில் சொல்லப்பட்ட சின்னச் சின்னக் குறிப்புகளை யோசித்துக் கொண்டே மூன்று நாட்களும் இந்தப் புத்தகமே மனதிற்குள் சுழன்றடித்துக் கொண்டேயிருந்தது. 

தற்போது ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர்களுக்குக் கூடக் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் போன்றவர்களைப் பற்றி எழுத்தின் வாயிலாகவே தெரிந்து இருப்பார்கள். தற்போது இணைய ஊடகங்கள் ஆதிக்கம் பெற்ற பின்பு தான் பல மறைக்கப்பட்ட பல தகவல்களும், உண்மையான விசயங்களும் விவாத பொருளாக மாறியுள்ளது. 

காரணம் இணையத்தில் கலைஞர் குறித்து நேர்மறை எதிர்மறை விசயங்கள் அனைத்தும் கலந்து இருப்பதால் வாசிப்பில் ருசி உள்ளவர்கள் எளிதாக எது சரி? எது தவறு? என்பதனை உணர்ந்து கொள்ள முடியும். இன்று வரையிலும் பல அரசியல்வாதிகள் கடந்த கால வாழ்க்கை, அவர்களின் நிலைப்பாடுகள், கொள்கைகள் விவாத பொருளாகவே உள்ளது. ஆனால் எம்.ஜி.ஆர் குறித்துச் சொல்லிக்கொள்ளும்படி இல்லையே? ஏன் என்று பலமுறை நெருங்கிய நண்பர்களிடம் விவாதிப்பதுண்டு. அப்பொழுதெல்லாம் அதற்குக் காரணம் எம்.ஜி.ஆர். அவர்களின் வள்ளல்தன்மையைக் காரணமாகச் சொல்லி அதற்குப் பின்னால் உள்ள அரசியல் விசயங்களை நண்பர்கள் புரியவைப்பார்கள். 

ஆனால் ஜெயலலிதா குறித்து நம்மால் அனைத்து விசயங்களையும் இணையத்தில் தேடி எடுத்துக் கொள்ள முடியும். இணைய வளர்ச்சியில் ஜெயலலிதாவின் அகங்காரம் எடுபடாமல் போய்விட்டது. 

நாற்பது வயதைக் கடந்தவர்கள் நிச்சயம் இன்றைய சூழ்நிலையில் ஜெயலலிதாவின் மொத்த குணாதிசியங்களையும், அவரின் அவல ஆட்சி அதிகார அவலங்களை நன்றாகவே தெரிந்து வைத்து இருப்பார்கள். தமிழக அரசியலில் இறப்புக்குப் பின்பு ஜெ வைப் போலக் கேவலப்பட்டவர்கள் எவருமே இல்லை. அதேபோல இந்திய அரசியலில் இந்த அளவுக்கு அசிங்கப்பட்டவர்களும் எவருமில்லை. 

இன்றும் அவரை ஆதரிப்பவர்களை என் பார்வையில் இரண்டு விதமாகத் தான் பிரிக்க முடியும். 

ஒன்று அவர் சாதி சார்ந்த அபிமானம்.

மற்றொன்று மாற்றிக் கொள்ள முடியாத கலைஞர் மீதான வெறுப்பின் காரணமாகவும் இருக்கின்றார்கள். 

எம்.ஜி.ஆர் போல நிஜமான வள்ளல் தன்மை கொண்டவரும் இல்லை. ஆனால் தனக்கு ஒன்று தேவை என்றால் அதற்காக எந்த நிலைக்கும் இறங்கலாம் என்ற கேவல அத்தியாங்களைத் தமிழக அரசியலுக்கு அறிமுகப்படுத்தியவரும் ஜெயலலிதா தான். இவரைப் பற்றித் தான் வலம்புரி ஜான் இந்தப் புத்தகத்தில் பேசுகின்றார். அத்துடன் அவர் வாழ்ந்த கால கட்டத்தில் உள்ள அரசியல் நிலைமைகள், சம்மந்தப்பட்ட மனிதர்கள், ஆயுதம் ஏந்தத் தேவையில்லாத அரசியல் யுத்தத்தின் சகல பரிணாமங்கள் ஒவ்வொன்றையும் அவர் பாணியில் தனித்தனி கட்டுரையாகச் சொல்லியுள்ளார். 

அவரைப் பற்றிய குறிப்புகள் மிகக் குறைவாகவே உள்ளது. 

இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தும் வலம்புரி ஜான் குறித்தும், இந்தப் புத்தகம் குறித்தும் இணையத்தில் தேடிப்பார்த்தேன். இரண்டு பேர்கள் எழுதிய விமர்சனங்கள் என் கண்ணில் பட்டது. ஆனால் மொக்கை எழுத்தாளர்க்கு இணையத்தில் கிடைத்துள்ள அங்கீகாரம் கூட வலம்புரி ஜான் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. எந்த இடத்திலும் வலம்புரி ஜான் குறித்த முழுமையான விபரங்கள் இல்லை. 

முக நூல் வந்த பிறகு ஐம்பது வருடங்களுக்கு முன்பு துணை கதாபாத்திரங்களில் நடித்த சாதாரண நடிகை நடிகர்களைப் பற்றிக் கூட விமர்சனமாகச் சிலாகித்து எழுதும் நபர்கள் எவரும் வலம்புரி ஜான் அவர்களைப் பற்றி எழுதாமல் இருப்பது ஒரு வகையில் ஆச்சரியம் என்றால் அவரின் கடந்த கால அரசியல் செயல்பாடுகளும் விமர்சனத்துக்கு உரியதாகவே உள்ளது. தொடர்ந்து கட்சி மாறிக் கொண்ட வந்தது முதல் எந்த இடத்திலும் நிலையாக இல்லாமல் நினைத்த போது நினைத்தவாறு பேசியது வரைக்கும் எல்லாமே அவரைக் கடைசியில் மரணம் வரைக்கும் துரத்தியது. அவரின் மரணமும், மரண ஊர்வலமும் சங்கடமாக முடிந்தது. 

தொலைக்காட்சியில் தினந்தோறும் அவர் உரையாற்றுவதைக் கேட்டுள்ளேன். மருத்துவத்தின் அத்தனை பக்கங்களையும் அலசுவார். ஆலோசனைகளை அள்ளி வழங்கிக் கொண்டேயிருப்பார். கேட்பவர்களுக்கு எதை எடுத்துக் கொள்வது? எப்படிப் பின்பற்றுவது? என்று குழப்பங்களை வரும் வரைக்கும் சரித்திர காலச் சம்பவங்களுடன் கோர்த்துச் சொல்லுவார். கடைசியில் அவர் உடம்பு நோயின் மொத்த குத்தகை கிடங்காக மாறி எலும்பும் தோலுமாக இறந்தார். இந்த இறப்பில் ஜெயலலிதாவிற்கு முக்கால்வாசி பங்குண்டு. 

ஜெயலலிதாவை அரசியலில் அறிமுகம் செய்து வைத்த போது எம்.ஜி.ஆர் அவர்களால் ஜெ. வுக்கு ஆலோசகர் என்ற நிலையில் வலம்புரி ஜான் அவர்களைத்தான் தேர்ந்தெடுத்தார். 

இவர் தான் வாசிப்பு முதல் அரசியல் பழக்கங்கள் வரைக்கும் ஜெ. வுக்குக் கற்றுக் கொடுத்தார். ஆனால் காலம் வேறுவிதமாக நகர்த்தியது. ஜெ அதிகாரத்திற்கு வந்த போது வலம்புரி ஜான் ஆகாத மனிதராக மாறிவிடக் கைது நடவடிக்கையின் போது மெல்ல கொலும் விசயத்தை டீ யில் கொடுத்து இவர் உடல் நலன் சீர்கெட்டுப் படுக்கையில் விழும் அளவிற்குக் கொண்டு போய் நிறுத்தியது. 

இந்த வணக்கம் புத்தகத்தை வெறுமனே நூல் விமர்சனம் என்ற நிலையில் பார்க்க மனம் வரவில்லை. இதில் உள்ள முக்கியக்குறிப்புகள் இணையத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு பதிவுகளாக எழுதி வைத்திட விரும்புகின்றேன். 

எம்.ஜி.ஆர். -  ஜெயலலிதா 
ஜெயலலிதா -  எம்.ஜி.ஆர். 
ஜெயலலிதா -  சசிகலா 
மூவருக்கும் மத்தியில் வாழ்ந்த வலம்புரி ஜான். 

தொடர்ந்து பேசுவோம்...........