Wednesday, January 31, 2018

விதைகள் முளைக்கும் தருணம்


உறவுகள், தனிப்பட்ட நண்பர்கள், நான் இருக்கும் தொழில் சார்ந்த தொடர்புகளில் என்பது சதவிகித பேர்களுக்கு நான் எழுதக்கூடியவன். பரவலாக என் எழுத்துக்கள் வாயிலாகச் சென்று சேர்ந்தவன் என்பது யாருக்கும் தெரியாது. எவரிடமும் சொல்வதும் இல்லை.

யோசிப்பு, வாசிப்பு இந்த இரண்டையும் வெறுக்கக்கூடிய தொழில் சூழல் ஒரு பக்கம். மற்றொருபுறம் ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும்? என்று புத்திசாலித்தனமாக யோசிக்கும் பெரும்பான்மையினர் மறு பக்கம். குறிப்பாக அரசியல் குறித்து எழுதும் போதெல்லாம் ஏன் எதிரிகளை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சுயபாதுகாப்பு அறிவுரைகள் வந்து தாக்கும்.

பொருளியல் உலகில் பணம் சேர்த்தவர்கள் மட்டுமே வெற்றியாளன். கலைகளை விரும்புபவர்கள் கலாவதியானவர்கள்.

ஆறாம் வகுப்பு முதல் இயல்பாக வாசிக்கத் தொடங்கிய மனம் இன்று வரையிலும் நின்று விடவில்லை. விட்டு விட்டு வரும் சாரல் மழை போல மனதைக் கழுவிக் கொண்டேயிருக்கின்றது. சிந்தனையில் தெளிவும், சோர்வு வரும் போதெல்லாம் மருத்துவர் போல உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றது. மன ஆரோக்கியத்தை மேம்படுத்தியுள்ளது. இன்று வரையிலும் இருபது வயது இளைஞன் போல அன்றாட நடவடிக்கையில் வேகத்தைத் தந்து கொண்டிருக்கின்றது. மருந்து, மாத்திரை இல்லாத வாழ்க்கை வாழ முடிந்துள்ளது.

பல எழுத்தாளர்களை வாசித்துக் கொண்டே வந்த எனக்கு ஒருவர் மறைமுகமாக உன்னாலும் எழுத முடியும்? என்ற கதவை திறந்து வைத்தார். அவர் எழுத்தாளர் பா. ராகவன். ( Pa Raghavan )அது வரைக்கும் வாசித்த நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் யோசிக்க வைத்தார்கள். இவர் ஆச்சரியப்படுத்தினார். இந்தத் துறைகளைப் பற்றியெல்லாம் எழுத முடியும்? என்ற நம்பிக்கையூட்டினார். ஒரு இயக்குநரின் படம் நன்றாக உள்ளது என்றால் அவருக்குப் பின்னால் முப்பது துறைகளின் உழைப்பு இருக்கும்.

ஆனால் ஒரு எழுத்தாளரின் வெற்றிக்குப் பின்னால் அவர் ஒருவரின் உழைப்பு மட்டுமே இருக்கும். நம்ப முடியாத வேகத்தையும், வேகத்திற்குள் ஆச்சரியப்படத்தக்க வார்த்தைகளின் கோர்வையும், சிக்கெடுத்து சீவிய தலையைப் போலத் தெளிவான சுகமான நான்கு வழித்தடம் நெடுஞ்சாலை பயணம் போல இவரின் எழுத்துக்கள் என்னை அதியசமாகத் தொடர்ந்து படிக்க வைத்துக் கொண்டேயிருந்தது. கற்றுக் கொண்டேயிருந்தேன். இலக்கியம் என்ற போர்வையில் லேகியம் விற்காமல் ஒன்பதாவது படிக்கும் மகள் வாசிக்கும் அளவிற்கு அவரின் எழுத்துக்கள் என் புதிய பாதையை எனக்குக் காட்டியது.

இவர் எழுதிய ஒவ்வொரு புத்தகத்தின் வாயிலாக என் நம்பிக்கையை அதிகப்படுத்திக் கொண்டேயிருந்தார்.

எழுதித்தான் பார்க்கலாம் என்று தொடங்கிய பயணம் இன்று எட்டு வருடங்கள் கடந்து விட்டது. நான் எழுதிய வலைபதிவுகளில் உள்ள கட்டுரைகளை அடங்கிய மின்னூல்கள் ஒருதளத்தின் வாயிலாக மட்டும் 2,50,000 பேர்களுக்குச் சென்று சேர்ந்துள்ளது. என் முதல் புத்தகம் டாலர் நகரம் 1500 பிரதிகள் விற்றுள்ளது. மாதத்தில் நாலைந்து பேர்களாவது படித்து விட்டு விமர்சனத்தை மின் அஞ்சல்வாயிலாகத் தெரிவிக்கின்றார்கள்.

பயணங்களில் அலைபேசி வாயிலாகப் படிக்க வாய்ப்பு இருப்பதால் மின் நூல்கள் அதிக நபர்களால் விரும்பப்படுகின்றது என்பதனை தாமதமாகப் புரிந்து கொண்டேன். உருவான, உருவாகிக் கொண்டிருக்கும் நவீன தொழில் நுட்ப முன்னேற்றங்கள் மூலம் மாறிய வாழ்க்கை முறைகள் ஏதோவொரு விதமாகப் பலருக்கு அங்கீகாரத்தையும் சேர்த்து தந்து விடுகின்றது. உருவான தொழில் நுட்ப அலையைப் பொழுது போக்காகப் பயன்படுத்தாமல் சரியாகப் பயன்படுத்திக் கொண்டோம் என்ற திருப்தி எப்போதும் எனக்குண்டு.

ஆனால் என் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்து, அதன் மூலம் கவரப்பட்டு, நம்மாலும் எழுத முடியும் என்று ஒருவர் யோசித்தது கூட எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை.

அவர் பணிபுரியும் சூழல் என்பது எந்திரங்களுடன் உறவாடி, கண்களுக்குச் சோர்வு அளிக்கக்கூடிய, கண்களைப் பதம் பார்க்கக்கூடிய வெல்டிங், மற்றும் அது சார்ந்த துறைகளில் ஒருவர் பணியாற்றிக் கொண்டே தன் திறமையை வளர்த்துக் கொண்டு உள்ளார் என்பது ஆச்சரியத்தின் உச்சம். இதை விட மற்றொரு நம்ப முடியாத அதிசயம் என்னவென்றால் எழுதுவதற்கு இடம், சூழ்நிலை, வசதிகள் முக்கியமல்ல. அது உள்ளார்ந்த ஈடுபாடு தான் தன் திறமைகளை வெளியே கொண்டு வரும் என்பதனை எனக்கு மறைமுகமாக உணர்த்தியுள்ளார். 

பொருளாதாரச் சிக்கலின் காரணமாக வெளிநாட்டு வாழ்க்கை. மனைவி குழந்தைகளைப் பிரிந்து வாழும் வாழ்க்கை. வாழ் நாள் முழுக்கச் சொல்ல முடியாத ஏக்கத்தையும், பகிர முடியாத தன் உணர்வுகளைத் தன் எழுத்தின் வாயிலாகக் கடத்திக் கொண்டிருக்கின்றார். கற்றுக் கொண்ட எழுத்துத் திறமையைத் தான் வைத்துள்ள அலைபேசி வாயிலாக எழுதுகின்றார்.

கட்டுரைகள் வாயிலாக, புனைவு, அபுனைவு என்பதன் அர்த்தம் தெரியாத போதும் கூடச் சரியான வார்த்தைக் கோர்வைகளுடன், சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்லக் கற்றுள்ளார். நான் எழுதக் கற்றுக் கொள்ள எழுதத் தொடங்கிப் பல மாதங்கள் கழித்து வசப்பட்டது. ஆனால் இவருக்கே மிகக் குறுகிய காலத்திற்குள் வசமானதற்குக் காரணம் ஒன்றே ஒன்று. வாழும் சூழ்நிலையைக் காரணம் காட்டாமல் இருக்கும் சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டது தான்.

இதுவரையில் நேரில் சந்திக்காத போதும் கூட உறவாய் உணர்வுடன் நெருங்கிய தம்பிக்கு நிறையப் பிரியங்களும் அதிகமான ஆசீர்வாதங்களும். விரைவில் எழுத்து வானம் வசப்பட வாழ்த்துகள்.

#2017 நம்பிக்கை நட்சத்திரம் ***** Jose H Jose


Saturday, January 27, 2018

நன்றி ஆசான்



பினாமி என்ற வார்த்தையை அரசியல் உலகில் கேட்டு இருப்பீர்கள். ஆனால் தொழில் உலகத்திலும் உண்டு. ஆனால் இந்தத் தொழில் உலகத்தில் உறவினர் வட்டங்களுக்குள் முடிந்து விடும். ஆனால் இங்கு குறிப்பிட்ட சில முதலாளிகள் மட்டும் உறவுக்கு அப்பாற்பட்டு சிலரை தன் உள்வட்டத்தில் மகளுக்குச் சமமாக வைத்திருக்கின்றார்கள். அப்படி ஒரு உயர்நிலையில் இருந்தவர்களில் இவரும் ஒருவர்.

இவர் பணியாற்றிய நிறுவனத்தில் நான் நுழைந்த போது, இவருடன் அடுத்தச் சில வாரங்களில் பழகிய போதும், என்னை விட உயர்நிலையில் இருந்த போதும் என் மேல் அன்பு பாராட்டினார். என் மேல் கொண்ட கூடுதல் அக்கறை வைத்து வழிகாட்டியாக இருந்தார். அன்றைய சூழ்நிலையில் அதிக முன் கோபம், வேகம் என்று இருந்தவனை மறைமுகமாக மாற்றக் காரணமாக இருந்தார். குறுகிய காலத்தில் அவர் உரையாடலின் வாயிலாக என் மேல் கொண்ட அன்பினை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. சில மாதங்களில் முழுமையாக இவரைப் பற்றிப் புரிந்து கொண்டேன். அவர் இருந்த நிலையில் கோடிக்கணக்கான ரூபாய்களைச் சம்பாரிக்க வாய்ப்புகள் அவர் வாசல் தேடி வந்த போதும் சுய ஒழுக்கம் என்பதனை உயிர் மூச்சாக வைத்திருந்தார்.

நேர்மை, உண்மை, சத்தியம் என்ற வார்த்தையின் பொருள் இன்றைய காலகட்டத்தில் வலுவிழந்து விட்டது. ஆனால் இந்த மூன்றின் மூலாதாரம் இவர் தான். முதலாளி வெளிநாட்டில் வசித்தாலும், வாழ்ந்தாலும் அவர் சொத்துக்களைக் கட்டிக் காக்க வேண்டிய பொறுப்புகளைத் துளி கூடச் சஞ்சலம் இல்லாமல் என் கடன் பணி செய்து கிடப்பது மட்டுமே என்று எத்தனைப் பேர்களால் வாழ முடியும் என்பதனை நினைத்துக் கூட முடியவில்லை. 

இவர் அதிகமாக எழுதுவதில்லை. குடும்ப நிகழ்வுகள், புகைப்படங்கள் போன்றவற்றை நினைத்த நேரத்தில் பதிவிடுவார்.

இப்போது கோவையில் இந்தியா முழுக்கத் தெரிந்த, முக்கியமான ஒரு நிறுவனத்தில் மிகப் பெரிய பதவியில் அமர்ந்துள்ளார். சேர்ந்த நிறுவனத்தில் மிகக் குறுகிய காலத்திற்குள் நம்பிக்கை பெற்று குறிப்பிட்ட தொகை வரைக்கும் இவரே கையொப்பம் இடும் அதிகாரத்தைப் பெற்றுள்ளார்.

தொழில் வாழ்க்கையில் நிறுவனங்கள் மாறும் போது அந்தத் தொடர்பு அப்படியே காற்றில் கரைந்து விடும். சாதகம், பாதகம் பொறுத்து தொடர்பு எல்லைக்கு உள்ளே, வெளியே என்று இருக்கும். ஆனால் இவர் இன்னமும் என் தொடர்பில் இருக்கின்றார். என் வாசகராக இருக்கின்றார். தீவிரமான திமுக அபிமானி. ஆனால் இதை வைத்து இவரை அவ்வப்போது கலாய்ப்பதுண்டு. துளிகூட அசரமாட்டார். லாகவமாகக் கையாள்வார்.

இவரை நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

வாழ்வில் நாம் கடைப்பிடிக்க விரும்பும் நேர்மை என்ற சொல் வெறும் வார்த்தையல்ல. அது நாமே தேர்ந்தெடுத்துக் கொண்ட அவஸ்தை. அப்படித்தான் இப்பொதுள்ள சமூகம் சொல்கின்றது.

மனைவி, உறவினர்கள், நண்பர்கள், தொழில் சார்ந்த உறவுகள் எவரும் நமக்குச் சிலை வைக்க விரும்புவதில்லை. ஆனால் மன தைரியத்தைச் சிதிலமாக மாற்றி விடும் வல்லமை கொண்டவர்கள். இவரிடம் கற்றதும் பெற்றதும் ஏராளம். ஆனால் இன்று வரையிலும் நான் இருக்கும் பதவியில் ஆரோக்கியமாகத் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதற்கு இவரும் ஒரு காரணம்.

என் குழந்தைகளுக்கு என் பாவங்கள் சென்று விடக்கூடாது என்ற எண்ணத்தில் வாழும் என் வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்கள் ஏராளமாக இருந்தாலும் இவர் எப்படி வாழ்கின்றார்? எப்படி வாழ்ந்தார்? ஏன் நம்மால் வாழ முடியாது என்ற எண்ணத்தில் தான் இத்தனை வருடங்கள் இங்கே உள்ள தொழில் நகரக் குப்பைக்குள் மன தைரிய மாளிகை கட்ட முடிந்ததுள்ளது.

அந்த மாளிகை விலைமதிப்பற்றது. அதன் அர்த்தம் நூறு கோடி பெறுமான தொழில் சாம்ராஜ்யத்தை என்னை நம்பி ஒப்படைக்கும் வல்லமை கொண்டது.

நன்றி ஆசான். Senthil Kumar Subramanian

Friday, January 26, 2018

நற்சிந்தனை மனிதர்


சில வருடங்களுக்கு முன்பு வலைபதிவில் நாடார் சமூக வாழ்க்கை வரலாறு குறித்துத் தொடர் பதிவாக எழுதினேன். எழுதும் முன்பு அவர்கள் சார்ந்த வரலாற்றை அறியும் பொருட்டுப் பல புத்தகங்களைப் படிக்க வாய்ப்பு அமைந்தது. இன்று வரையிலும் அந்தப் பழைய பதிவுகளை யாரோ சிலர் தொடர்ந்து வந்து படித்துக் கொண்டேயிருக்கின்றார்கள். 

எந்தத் தலைப்பை யார் யார் எங்கிருந்து படிக்கின்றார்கள் என்ற வசதி வலைபதிவில் உண்டு.

நாடார் சமூகத்தின் இன ஒற்றுமை ஆச்சரியமளித்தது. ஒடுக்கப்பட்டு இருந்த அந்தச் சமூகம் இன்று பொருளாதார நிலையில் உச்ச நிலையில் அடைந்து ஆட்சி, அதிகாரம், கல்வி, பொருளாதாரம் என்று அனைத்துத் தளங்களிலும் கோலோச்சுகின்றார்கள். சாதி என்ற ஒற்றைப்புள்ளி அவர்களை இணைத்து ஒரு பெரிய சமூக மாற்றத்தை உருவாக்கியுள்ளது. 

இன்று ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சுதந்திரத்திற்குப் பிறகு வழங்கப்பட்ட வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், முழுமையாக முன்னேற முடியாமல் தடுமாறுகின்றார்கள். அரசியல்வாதிகளின் சமயோசித புத்தி ஒரு பக்கம் இருந்தாலும் பணமும், பதவியும் அவர்களுக்கு விரல்விட்டு எண்ணக்கூடியவர்களுக்குக் கிடைத்தாலும் அது அடுத்தடுத்து அந்தச் சமூகம் சார்ந்த மக்களுக்குச் சென்று சேர்வதில்லை. கிடைத்தவர்கள் தங்கள் அடையாளத்தை மறைக்க முற்படுகின்றார்கள். தங்களைப் பார்ப்பனியமாக மாற்றிக் கொள்ளத்தான் நினைக்கின்றார்கள். அவர்கள் இனம் சார்ந்த சக உறவுகளைக் கூடப் பொருட்டாக மதிப்பதில்லை. இது தான் நிதர்சனம். 

ஒரு சமூகம் முன்னேற அரசாங்கம், அதன் கொள்கைகள், அரசியல்வாதிகள் வைக்கும் குற்றச்சாட்டுக்களை விடப் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை முன்னேற்றிக் கொள்ள எந்த அளவுக்குத் தயார் படுத்திக் கொள்கின்றார்கள் என்ற சமூக நிகழ்வுகளை உற்றுக் கவனித்தால் சோகம் தான் மிஞ்சும். அரசியல்வாதிகள் உருவாக்கும் பிரித்தாளும் சூழ்ச்சிகளும், விலைக்குச் சோரம் போன தலைவர்களும், கிடைத்த வாய்ப்புகளைத் தங்கள் சுயநலனுக்குப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் குடும்பத்தை வளப்படுத்திக் கொண்டவர்களும் தான் அதிகம். 

ஆனாலும் நம்பிக்கை வைத்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ஏறக்குறைய இந்தியா முழுக்க 40 சதவிகிதத்திற்கு மேலே உள்ள தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கையை ஒப்பு நோகையில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அரசாங்க சலுகைகளைப் பெற்ற குடும்பத்தின் வாரிசுகளே அடுத்தடுத்து வளர்ந்து தங்களை வளப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். கடைக்கோடி கிராமவாசிகள் இன்னமும் மனித கழிவுகளை அள்ளுவது முதல் அடிமை வாழ்க்கை முறையைத் தான் தேர்ந்தெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

சுய சிந்தனைகளை அடகு வைத்து, தன் நிலையை உணரத் தெரியாமல், கிடைத்த வாய்ப்புகள் தனக்கு அமையாவிட்டாலும் தன் சந்ததியினருக்காகத் தங்களைத் தியாக உருவாக மாற்றிக் கொண்டு வளர்க்க விரும்புபவர்கள் மிக மிகக் குறைவான சதவிகிதமே. இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருந்தாலும் இன்னமும் முன்னேறாமல் இருப்பதற்குக் காரணம் ஒவ்வொரு தனி மனிதர்களும் தான். 

வட்டத்தை உடைத்து வெளியே வந்தவர்கள் தங்கள் வந்த பாதையை மறக்கவே விரும்புகின்றார்கள். வர விரும்புவர்களை அரசியல்வாதிகள் அடைத்து வைக்கவே விரும்புகின்றார்கள். இது போன்ற பல காரணங்களை அலசாமல் அவர்கள் மேல் பரிதாபப்பட்டு அண்ணல் அம்பேத்கர் கொள்கைகள், தந்தை பெரியார் கொள்கைகள், திருமாவளவன் என்று புகழ்பாடி இன்னமும் முக நூலில் நற்சிந்தனை என்ற பெயரில் எழுதிக் கொண்டிருப்பவர்கள் என் பார்வையில் பரிதாப ஜீவன்களாகவே தெரிகின்றார்கள். 

இந்த வருடத்தின் மத்திம பகுதியில் இருந்து தான் இவரைக் கவனிக்கத் தொடங்கினேன். தெளிவான சிந்தனை. எல்லாமே நேர்மறை சிந்தனைகள். அளவு கடந்த நம்பிக்கைகள். இராணுவத்தின் பணியாற்றியதால் சமூக அக்கறை கூடுதலாகவே உள்ளது. எழுத்து நடை, சொல்ல வந்த விசயத்தை அழகாக எடுத்து வைக்கும் பாங்கு, என்று எல்லாவிதங்களிலும் இவர் எழுத்துப் படிக்கத் தூண்டுவதாகவே உள்ளது. ஆனால் எல்லாமே விழலுக்கு இறைத்த நீராகவே உள்ளது. 

பவர் புரோக்கர் என்றொரு சாதி அரசியலில் உள்ளது. அதில் முக்கியமானவர் திக வீரமணி. கலைஞர் நம்பி வீணாப் போனவர்களில் இவரும் ஒருவர். கலைஞருக்குக் கிடைக்க இருக்கும் வாக்குகளை அவ்வப்போது காலி செய்வதில் வல்லவர். ஏ1 குற்றவாளியைச் சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டம் கொடுத்துச் சிலாகித்தவரை நண்பர் பெருமையாக எழுதும் போது இவர் விக்ரமன் படத்திற்கு வசனம் எழுதாமல் இருந்து விட்டாரோ? என்று நினைத்துக் கொள்வதுண்டு. 

இந்த வருடம் எனக்குப் பிடித்த முகநூல் பதிவர்களில் இவரும் ஒருவர். நன்றியும், வாழ்த்துகளும் அன்பும். Poovannan Ganapathy