Showing posts with label தேர்தல் களம் 2011. Show all posts
Showing posts with label தேர்தல் களம் 2011. Show all posts

Tuesday, April 12, 2011

நான் ஓட்டுப் போட்டா நாடு திருந்திடுமா?

ஏப்ரல் 13 2011 

நாளைய பொழுது இந்நேரம் பலரின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துருக்கும்.  ஆனால் அத்தனையும் ஒரு சின்ன பொட்டிக்குள் இருக்கும். பாவம் இந்த மக்கள் சேகவர்கள். கடுமையான உழைப்பு.  அயராத பணி. குளிர்சாதன வண்டிக்குள் இருந்து கொண்டு சுற்றி வந்து உழைத்துக் களைத்த மக்கள் சேவகர்கள் சற்று பயத்தோடு ஓய்வு எடுக்கக்கூடும். 


தேர்தல் ஆணையத்தின் புண்ணியத்தால் அதிக அளவு வெளியே கொண்டுவர முடியாத பணமூட்டைகள் எங்கேயோ பதுங்கி பலரின் பாவத்திற்கும் ஆளாகியிருக்கும்.  மேலிடத்தில் இருந்து செலவுக்கென்று ஒதுக்கிய பணத்தைப் பெற்று தேர்தல் ஆணைய கெடுபிடிகளின் காரணமாக எங்களால் வெளியே கொண்டுவரமுடியவில்லை என்று சொல்பவர்கள் தேர்தல் முடிந்ததும் திடீர் பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள். 

ஆத்துல போற தண்ணிய அய்யா கொஞ்சம் அம்மா கொஞ்சம் அள்ளிக் குடித்ததைப் போல தொண்டர்களும், நம்பியவர்களும் பிழைத்துப் போகட்டுமே?

ஆனால் நாளை அரசு மற்றும் தனியார் (எத்தனை நிறுவனங்கள் கொடுப்பார்களோ?)ஊழியர்களுக்கு சம்பளத்தோடு கூடிய விடுமுறை தினம்.  இந்த விடுமுறை தினத்தை கருத்தில் கொண்டு ஏற்கனவே திட்டமிட்டப்பட்ட சுற்றுலா கொண்டாட்டங்கள், குறுந்தகடுகள் வாங்கி உல்லாசமாக இருக்கப்போகும் நண்பர்களுக்கும், சரக்கு தரமாட்டார்கள் என்ற இருப்பில் வைத்திருக்க சில தினங்களுக்கு முன்பே வீட்டில் வாங்கி வைத்துள்ள குடிமகன்களுக்கும் நல்வாழ்த்துகள். 

நான் இப்போதுள்ள அரசியல் களத்தை கவனித்தவரைக்கும் இந்த முறை கலைஞர் சற்று தடுமாற்றமாக இருப்பது போல் தெரிகின்றது.  தேர்தல் ஆணையத்தை (எதிர்கட்சியை ஆளுங்கட்சியாக மாற்ற முயற்சிக்கிறார்கள்), தமிழ்நாட்டு காவல்துறை (நான் இவர்களுக்கு எத்தனையோ நல்லது செய்து இருக்கின்றேன். மறந்து விட்டார்கள்) குறித்து புலம்பித் தள்ளிவிட்டார். இதற்கு மேலாக உங்கள் வீட்டு வேலைக்காரனாக செயல்பட விரும்புகின்றேன் என்று பலபடிகள் இறங்கி வந்துள்ளார்.  ஏன் இத்தனை நலத்திட்டங்கள் செய்தவர்கள் இந்த அளவுக்கு புலம்ப வேண்டுமா?  ஒரு பக்கம் வரிப்புலியே வா?  மறுபக்கம் இனமான உணர்வு மிக்க தமிழா?  கலைஞர் மேல் எத்தனை விமர்சனம் வைத்தாலும் நேற்று வந்த விஜயகாந்திற்கு தொண்டை கட்டி விட்டதாம்.  பாருங்கள்......... இவருக்கு கணீர் கணீர் தான்...............

ஆசையோ? அக்கறையோ? பயமோ?  மொத்தில் பாராட்டியே ஆக வேண்டிய அபாரமான உழைப்பாளி.  நடிகர் சிவகுமாருக்கு மார்க்கண்டேயன் என்று பட்டம் கொடுத்ததைப் போலவே இவருக்குக்கூட அந்த பட்டத்தை இரவலாக கொடுக்கலாம்.

என்னுடைய பார்வையில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருகின்றதோ இல்லையோ கலைஞர் போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் திமுகவின் மற்ற வேட்பாளர்களை விட கலைஞர் மிக அதிக வித்யாசத்தில் ஜெயிக்க வேண்டும். எப்போதும் உள்ளூரில் மாடு விலைபோகாது என்பார்கள். அவ்வாறு கலைஞர் பெருவாரியான வாக்கு வித்யாசத்தில் ஜெயித்தால் மட்டுமே திமுக வெற்றி பெற்றதாக கருதமுடியும்.  காரணம் நான் தான் மூத்த தலைவர். பெரியார் வழியில் வந்தவன், அண்ணா பாடத்தை கற்றவன். இது எனக்கு கடைசி தேர்தல் என்று சொல்லும் கலைஞருக்கு அவர் சொந்த மண் மக்கள் எவ்விதம் மரியாதை செய்யப் போகிறார்கள்?

இத்தனை ஆண்டு காலம் பொதுவாழ்க்கை கண்டவன், தமிழ்நாட்டு மக்களுக்காகவே என்னை அர்ப்பணித்தவன் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்லிக் கொண்டு வரும் கலைஞருக்கு கிடைக்கும் வாக்கு வித்யாசத்தை பார்க்க ஆவலாக உள்ளேன். 


காரணம் இந்த முறை நடைபெறப்போகும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எந்த அனுதாப அலையும் இல்லை. அதற்கு மேல் அழகிரி மேல் தேர்தல் ஆணையம் வைத்துள்ள 'சிறப்புக் கண்' மொத்த அரசியல் நோக்கர்களாலும் உற்று நோக்கப்படுவதால் மொத்த உடன் பிறப்புகளுக்கும் வால் ஆப்புக்குள் சிக்கிக் கொண்ட வேதனை. 

தேர்தல் ஆணைய கெடுபிடிதனத்தால் உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் சொன்ன மாதிரி இந்த முறை தமிழ்நாட்டு அரசியல் களமென்பது எழவு வீடு போலவே உற்சாசமின்றி படு ஆச்சரியமாக இருக்கிறது.  

இதற்கெல்லாம் காரணம் புண்ணியவான் தேர்தல் ஆணைய கதாநாயகன் குரோஷியா அல்லது அவருக்கு பின்னால் இருக்கும் சக்தியா?  

மொத்தத்தில் ஆளுங்கட்சிக்கு ஏராளமான இடைஞ்சல் என்பது மட்டும் உண்மை.  தமிழ்நாட்டு காவல்துறை டம்மியாக இருக்க அந்தந்த மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் தட்டிய கும்மிக்கு நடனமாட வேண்டிய சூழ்நிலை.  ஆனால் கலைஞர் பல களம் கண்ட வேங்கை.  நாளைய தினத்தின் ஓட்டுப் பதிவு முடியப் போகும் கடைசி ஒரு மணி நேரத்தில் 'விஞ்ஞான ரீதியான மாறுதல்' உருவானால் ஆச்சரியப்படாதீர்கள். 

காரணம் சென்ற பாராளுமன்ற தேர்தலில் நடந்த கடைசி ஒரு மணி நேர கூத்துக்களை அத்தனை உபிகளும் நன்கு அறிந்து இருப்பார்கள்.  இந்த முறை அந்த வாய்ப்பு உண்டா தெரியவில்லை?


இந்த முறை தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கெடுபிடிகள் செய்வதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆலோசனை நடத்தியவர்கள் கொடுத்தபடி நடந்து கொண்டிருக்கும் தேர்தல் ஆணைய கெடுபிடிகள் மொத்தத்தில் அரசியல் கட்சிகளுக்கு கெட்ட விசயமாக இருந்தாலும் திருவாளர் பொதுஜனத்திறகு மகா நிம்மதி. 

இது இன்னும் கூட சற்று நீட்சி அடைந்தால் நன்றாகயிருக்கும். கற்பனை காண சொல்லித்தந்த முன்னாள் ஜனாதிபதி அய்யா அப்துல்கலாமுக்கு நன்றி.

1.தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் ஆளும் அரசாங்கம் அந்த திட்டங்களையும் வெளியிடக்கூடாது என்பதைப் போலவே குறைந்த பட்சம் தேர்தல் நடப்பதற்கு ஒரு மாதம் முன்பாக முதல் அமைச்சர் முதல் அமைச்சர்களின் அதிகாரங்களை ஒரு வரையறைக்குள் கொண்டு வந்து காபந்து அரசாங்கம் போல் தேர்தல் ஆணையமே எடுத்துக் கொண்டு விட்டால் பாதி அதிகார துஷ்பிரயோகம் காணாமல் போய்விடும்.

2. அதிகாரத்தில் இருந்தவர்கள் மீண்டும் போட்டியிடும் போது அவர்கள் சமர்பிக்கும் சொத்து ரீதியான அத்தனை சான்றிதழ்களையும், அவர்களின் பினாமி சொத்துக்களை கட்சி பாகுபாடு இல்லாமல் கண்ணில் விளக்கெண்ய் ஊற்றிக் கொண்டு வெளியே கொண்டு வந்தாலே பாதி பேருக்கு டர் ஆகி விடும்.  பின்னங்கால் பிடறி தெறிக்க கொல்லைபுற வாசல் வழியாக நான் போட்டியிட விரும்பவில்லை என்று ஓடிவிடக்கூடும். போட்டியிடும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரின் உண்மையான சொத்து நிலவரங்களை மிகச் சாதாரண குடிமகன்களுக்கே நன்றாக தெரிகின்றது. ஆனால் தேர்தல் ஆணையத்திற்கு இந்த சான்றிதழ்கள் சரிபார்ப்பு மட்டும் காலங்காலமாக ஒரு சடங்காகவே இருக்கிறது.  

3.  எந்த தொகுதியில் போட்டியிட விரும்புகிறார்களோ அந்த தொகுதியில் உள்ள பொதுமக்கள், அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், பொதுநல ஆர்வலர்கள் என்ற பொதுஅமைப்பின் மூலம் சம்மந்தப்பட்ட வேட்பாளர்களிடம் குறைந்த பட்சம் அந்த தொகுதி குறித்த அடிப்படை அறிவு இருக்கிறதா? அவர்கள் பதிவிக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்பதை கூட்டப்படும் கூட்டத்தின் முன்பாக கேட்டு அதை தொலைக்காட்சியில் கட்டாயம் நேரலை வாயிலாக அணைவரும் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்தால் இந்த மக்கள் சேகவர்களின் அறிவு குறித்து அணைவருக்கும் புரியக்கூடும்.

4.  தேர்தல் பணியில் கட்டாயம் அரசு ஊழியர்களை பயன்படுத்தவே கூடாது.  இங்கே தான் வில்லங்கம் தொடங்குகின்றது.  பிடித்தவர், பிடிக்காதவர், நமக்கு ஏன் வம்பு என்ற மூன்று ஜாதிகள் இதில் இருப்பதால் விடை ஜீரோதான்.
படித்த இளைஞர்களை பயிற்சி கொடுத்து பயன்படுத்த முடியும். 


5. ஆயிரத்தெட்டு நொள்ளை காரணங்களை சுட்டிக் காட்டும் தேர்தல் ஆணையம் முதலில் அந்த தொகுதி வாக்காளர்கள் அணைவருக்கும் பூத் சிலிப் போய் சேர்ந்துள்ளதா என்பதை பல முறை உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் போன்ற எளிதில் இனம் கண்டு கொள்ளக்கூடிய வகையில் இருக்கும் நபர்களை அந்தந்த துறையின் அழுத்தம் காரணமாக கட்டாயமாக வாக்குச் சாவடிக்கு வரவழைக்க வேண்டும்.  இது ஜனநாயக நாடு என்ற ஈரவெங்காய புடலங்காயை ஓரமாக காய வைத்து விட்டு வாக்களிப்பது என்பது கட்டாயத்தின் தொடக்கமாக இதை கொண்டு வந்தே ஆக வேண்டும்.காரணம் இந்திய தேர்தலின் முக்கிய வாக்காளர்கள் என்பவர்களே அன்றாடங்காய்ச்சிகளே ஆவார். 

6.  ஒவ்வொரு வாக்காள அடையாள அட்டையில் இருக்கும் எண் கொண்டு தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் இருப்பவர்கள் அவர் தொகுதிக்கு வாக்களிக்கும் ஆன் லைன் முறை கொண்டு வந்து விட்டால் வாக்கு சதவிகிதம் நிச்சயம் உயரும்.  ஊருக்கு போக சோம்பேறிபடுபவர்கள், பல காரணங்களால் பயந்து கொண்டு பின்வாங்குபவர்கள் என்று ஒரு பெரிய ஜனத்தொகையே இதற்குள் அடங்கி இருக்கிறது.

7. வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயர் மாற்றம், புகைப்பட மாற்றம் போன்ற நமது இந்திய ஜனநாயக கேலிக்கூத்துக்களை தவிர்க்க ஓட்டளிப்பவர்கள் கட்டாயம் தங்களது கட்டைவிரல் அடையாளத்தை வாக்களிக்கும் எந்திரத்தில் ஓற்றிவிட்டு வரும்படி செய்து விட்டால், ஒருவரே பலரின் ஓட்டுக்களை போடுவதை தவிர்க்க உதவலாம். ஏற்கனவே ஒருவர் நமக்கான அடையாள அட்டையை உருவாக்க கடந்த இரண்டு வருடங்களாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். பாவம் அரசியல்வியாதிகளிடம் சிக்கி அவருக்கு என்னவித வியாதிகள் வந்துள்ளதோ?

8. வாக்குச் சாவடிக்குள் இருக்கும் பூத் ஏஜெண்டுகள் ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தை முறியடிக்க வாக்குச் சாவடிக்குள் பொருத்தப்பட்ட புகைப்பட கருவிகள் மூலம் வாக்குப்பதிவு நடக்கும் மொத்த நேரத்தையும் நேரலை மூலம் அந்தந்த பகுதியில் வாழும் (குறைந்தபட்சம்) பொது மக்களும் கவனிக்கும்படி உருவாக்கினால் பலரும் பீதியடைந்து பின்வாங்கி விடக் விடக்கூடும்.  

9.  29 சதவிகிதம் வாங்கிய கட்சி எதிர்கட்சியாகவும் 32 சதவிகிதம் வாங்கியவர் ஆளுங்கட்சியாக அரசாங்கத்திற்கு வரும் கொடுமை இந்த இந்தியாவில் தான் உண்டு.  மீதியுள்ள சதவிகிதம்?  ஐயோ பாவம்?

10.  வெளிநாட்டில் வாழ்பவர்கள் அணைவரும் ஒவ்வொரு தேர்தல் மூலமும் தங்கள் ஜனநாயக கடமையை செய்ய கட்டாயம் ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு உரிய ஏற்பாடுகளை எளிதாகவே செய்ய முடியும். தபால் ஓட்டுக்களைப் போலவே முறைப்படுத்தப்பட்ட பல விசயங்களை ஒழுங்காக செயல்படுத்தினால் நிச்சயம் 80 சதவிகித வாக்கு எண்ணிக்கை இந்தியாவில் சாத்தியமே.  வாக்கு சதவிகிதம் அதிகமாகும் போது தான் உண்மையான நிலவரம் என்பது நமக்கு புரியக்கூடும்.  

இன்னும் நிறைய ஐடியாக்கள் என் கைவசம் உண்டு. நான் இப்போது சொன்னால் கலைஞர் காப்பி அடித்து விடுவார்.

நன்றி விஜயகாந்த்.

ஜனநாயகம் என்பது கேலிக்கூத்தல்ல.  அது கேடு கெட்டவர்கள் ஆட்சிக் வருவதால் உருவாக்கப்படும் சின்னபுள்ளத்தனமாக விளையாட்டுக்களை கண்டு நொந்து போய் நாளை ஏப்ரல் 13 2011 வாக்களிக்க மறந்து விடாதீர்கள். தலைவர் நல்லக்கண்ணு அய்யா சொன்னது போல்

 'எந்த அரசியல் அதிகாரம் ஒருவரை உயரத்திற்கு கொண்டு போய் நிறுத்தி  வைத்து அழகு பார்க்கின்றதோ அதே அதிகாரம் அவரை அதளபாதாளத்திற்கும் கொண்டு போய் தள்ளிவிடும். அது தான் அரசியல்..' 

பத்துவருடங்களுக்கு முன்பு துடிப்போடு செயல்பட்ட அரசியல்வியாதிகள் பலரும் இப்போது களத்தில் இல்லை. இப்போது நீங்க பார்த்துக் கொண்டிருக்கும் அஞ்சு கொல ஆறுமுகம் என்று சொல்லப்படும் வீரபாண்டியார் போல வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருப்பவர்கள் தான் இப்போது களத்தில் இருக்கிறார்கள்.  2016 தேர்தலில் இவர்களும் போக வேண்டிய இடத்திற்கு போய்ச் சேர்ந்து விடுவார்கள். கவலைப்படாதீர்கள்............


இன்றைய அமெரிக்கா பெற்றுள்ள வளர்ச்சி ஏறக்குறைய பல நிறைகுறைகளை தாண்டிய 400 வருட சரித்திர பின்ணணியைக் கொண்டது.  நாம் சுதந்திரம் பெற்று முழுமையாக 100 வருடங்கள் கூட தொடுவதற்கு இன்னும் நிறைய வருடங்கள் இருக்கிறது.  நம் இந்தியாவை, இந்திய மக்களை, இந்திய அரசியல்வாதிகளை மானாவாரியாக திட்டிப் தீர்ப்பதே தனது கொள்கையாக கொண்டிருந்த புண்ணியவான் வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னது (இந்தியர்களுக்கு உண்மையான அதிகாரம் பற்றி புரிந்து கொள்ளவே 100 வருடங்கள் தேவைப்படும்) பலிக்கட்டுமே?

நாம் நல்ல விதைகளை விதைத்து விட்டு செல்வோம். பின்னால் வரும் நம் வாரிசுகளுக்கு உதவக்கூடும்.

Wednesday, March 30, 2011

இந்திய அரசியல் அமைப்பில் சொல்லப்பட்டவாறு .................

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களாட்சி நடந்து கொண்டிருக்கும் இந்தியாவில் நாமும் வேட்பாளாராக மாற சென்ற பதிவில் சொன்னபடி வேட்புமனுவை முறையாக பூர்த்தி செய்து அத்துடன் வங்கி கணக்கு, சொத்து குறித்த சான்றிதழ்கள், வழக்குரைஞர் சான்றிதழ்கள், கிராம நிர்வாக அதிகாரியின் சான்றிதழ்களுடன் ஒவ்வொரு பகுதியையும் சரியாக பூர்த்தி செய்து உள்ளோமோ என்று கவனித்து தேவைப்படும் அத்தனை இடங்களிலும் நாம் கையொப்பமிட்டு தைரியமாக சிங்க நடை போட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவகத்திற்கு சென்றாலே ஒரு தனிப்பட்ட கம்பீரம் உங்களுக்கு வந்து விடுவதை உணரக்கூடும்.  


காரணம் இந்தியாவில் எத்தனை குறைபாடுகள் இருந்தாலும் இது போன்ற சமயத்தில் நாம் எத்தனை சுதந்திரமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.  நமக்காக எத்தனை வாய்ப்புகள் உள்ளது என்பதை முழுமையாக உணர முடியும்.  

அந்தந்த வருவாய் கோட்டாட்சியாளர் தான் தேர்தல் நடத்தும் அதிகாரியாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர். 

இவர் அலுவலகத்திற்குள் நுழைவதற்கு முன்பு வாசலில் அமர்ந்திருக்கும் நபர் நம்மை வரவேற்பார்.  வரிசையில் நின்று அவரிடம் நாம் பூர்த்தி செய்து வைத்துள்ள மொத்த விண்ணப்ப படிவங்களையும் கொடுத்தால் நம்முடைய பெயர், முகவரி, வாக்காளர் அடையாள அட்டையின் எண் போன்றவற்றை குறிப்பிட்டு ஒரு துண்டுச்சீட்டை நம்மிடம் கொடுப்பார். அதில் வரிசை எண் போடப்பட்டிருக்கும்.

அந்த எண் சொல்லி அழைக்கும் போது அலுவலகத்தின் அடுத்த பகுதிக்குள் செல்ல அனுமதி கிடைக்கும். அங்கே இருவர் அமர்ந்திருப்பார்கள் அவர்கள் கையில் நான்கு பக்கம் உள்ள விண்ணப்ப படிவம் இருக்கும்.  இதுவரையிலும் நாம் கையாண்ட எந்த படிவத்திலும் ஆங்கிலம் என்பது மருந்துக்குக்கூட இருக்காது.

இப்போது வழங்கப்படும் படிவத்தில் ஆங்கிலப் படிவமும் இருக்கும். நம் பெயரை முகவரியை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுப்பதுடன் மற்ற சம்பிரதாய விசயங்களையும் கொடுக்கப்பட்ட மற்ற படிவங்களிலும் பூர்த்தி செய்ய வேண்டும்.

இனிமேல் தான் உங்களுக்கு ஒரு வித்யாச அனுபவம் கிடைக்கும். 

நாம் சராசரி, சாமான்யன் என்று கருதிக் கொண்டிருப்பவர்களுக்கு உள்ள தேர்தல் அதிகாரி (கோட்டாட்சியர்) இருக்கும் அறைக்குள் சென்றதும் கிடைக்கும் ராஜமரியாதை ஆச்சரியப்படத்தக்கது. 

அந்த அறையில் கோட்டாட்சியர் நடுநாயகமாக அமர்ந்திருக்க அவரின் பக்கவாட்டில் ஐந்து அலுவலர்கள் (இரண்டு பெண் அலுவலர்) அமர்ந்து இருப்பார்கள்.  முதல் நபர் நம்முடைய துண்டுச்சீட்டை பெற்றுக் கொண்டு அடுத்தவரிடம் நம்முடைய விண்ணப்ப படிவம் மற்றும் அதனைச் சார்ந்த மொத்த சான்றிதழ்களையும் வழங்குகிறார். இவர் ஒவ்வொன்றையும் சரிபார்த்து விட்டு அடுத்தவரிடம் கொடுக்க அவர் நாம் சொல்ல வேண்டிய பிரமாண பத்திரத்தையும் கொடுத்து கோட்டாட்சியரிடம் கையெழுத்து வாங்க அனுப்புகிறார். 

நம்மிடம் வாங்கிய அந்த விண்ணப்ப படிவத்தில் கையெழுத்து போடுவதற்கு முன்பு பக்கவாட்டில் நிற்கும் புகைப்படக்காரர் கோட்டாட்சியருடன் சேர்த்து நம்மை ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.  நாம் உள்ளே நுழைந்தது முதல் இறுதியாக பிரமாண பத்திரம் வாசிக்கும் வரையிலும் உள்ளேயிருக்கும் வீடியோகிராபர் மொத்த நிகழ்வுகளையும் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.  குறிப்பாக பிரமாண பத்திரம் வாசிக்கும் போது நம்மை மட்டும் தனியாக அந்த குறிப்பிட்ட நிகழ்வுகளை படமாக்கிக் கொள்கிறார்.


இப்போது பக்கவாட்டில் கடைசியாக இருக்கும் அந்த அலுவலரிடம் மீண்டும் மொத்த விண்ணப்பபடிவங்களையும் கொடுத்து விட அவர் ஒரு பிரமாண பத்திரத்தை கொடுத்து எழுந்து நின்று வாசிக்கச் சொல்கிறார். அதன் சுருக்கம் இது.

.................................................. ......................................................இந்த தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவதற்குரிய வேட்பாளராகிய ........................................................ தேதி............................................. அன்று ........................................................ மணிக்கு இந்திய அரசியமைப்பில் சொல்லப்பட்டுளளவாறு ஆண்டவன்/உளமாற மீது சூளுரைத்து உறுதி கூறுகின்றேன்.

இறுதியாக கையொப்பமிடும் போது புகைப்படம் எடுக்கப்படுகின்றது.

விடைபெறும் போது உறுதி மொழி எடுத்துக் கொண்டதற்கான சான்று, நம்முடைய வேட்பு மனு எப்போது பரிந்துரைக்கு எடுத்துக் கொள்ளபடும் என்பதற்கான விபரங்கள் அடங்கிய படிவம், நாம் வேட்பு மனுக்காக செலுத்தப்பட்ட தொகையான ரூபாய் பத்தாயிரத்திற்கான ரசீது (இது தான் டெபாஸிட் தொகை என்றழைக்கப்படுகின்றது. கடந்த தேர்தல்களில் சுயேச்சைகள் அதிகளவில் போட்டியிட்ட காரணத்தால் தான் பத்தாயிரம் என்கிற அளவிற்கு இந்த தொகை உயர்த்தப்பட்டுள்ளது)  பத்திரிக்கையில் டெபாஸிட் காலி என்று வார்த்தை வருமே?  ஜெயித்த வேட்பாளர்கள் வாங்கிய வாக்கு சதவிகிதத்தில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளபடி குறிப்பிட்ட சதவிகிதம் வாக்கு வாங்காத பட்சத்தில் வேட்பாளர் கட்டிய பணம் திருப்பி தரப்படமாட்டது.

இவற்றுடன் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் விதிமுறைகள் அடங்கிய தாள்கள், தேர்தல் முடிந்தவுடன் நாம் ஒப்படைக்க வேண்டிய கண்க்கு குறித்த விபரங்களுக்கான வழிகாட்டிகள் அடங்கிய காகித தாள்கள் வழங்கப்படுகின்றது. தேர்தல் நடைமுறைகள் குறித்து ஏறக்குறைய 30 பக்கங்கள் உள்ள ஒரு கையேட்டை பெற்றுக் கொண்டு வந்து விட் வேண்டும். 

தேர்தல் அதிகாரி குறிப்பிடப்பட்டுள்ள நாளில் சென்று நமக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தை தெரிந்து கொள்ளலாம். இந்த சடங்கு நடைமுறையில் செலவழிக்கும் தொகை ரூபாய் பத்தாயிரம்.  மொத்தத்தில் தமிழ்நாடு சட்டமன்ற வேட்பாளராக ரூபாய் 11500 போதுமானது.   இதற்கு பிறகு தான் அரசியல் கட்சிகள் உருவாக்கியுள்ள 'திருமங்கலம் சூத்திரம்' போன்ற வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை என்ற பஞ்சாயத்து வருகின்றது. ஆனால் இப்போது நடக்கப் போகின்ற தேர்தலில் அதற்கும் வாய்ப்பு குறைவு. கண்ணில் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் நம் தலைவர்கள் எத்தனை பார்த்திருப்பார்கள்? 

ஆனால் மொத்தத்திலும் நமக்கு ஒரே ஒரு பிரச்சனையுண்டு. 


தில்லாலங்கடி மூலம் நம்முடைய வேட்புமனு நிராகரிப்பு ஆகாமல் இருக்க வேண்டும். அது போன்ற ஒரு அனுபவத்தை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கின்றேன்.

Tuesday, March 29, 2011

நீங்களும் (சட்டமன்ற) வேட்பாளர்தான்?

ஒவ்வொரு தேர்தலின் போதும் வேட்பு மனுத்தாக்கல் குறித்த செய்திகளையும், அந்த வேட்பாளர்களின் புகைப்படங்களையும் பார்த்திருப்போம். குறிப்பிட்ட அந்த வேட்பாளர் சிலருக்கு நண்பராக இருக்கலாம். பலருக்கு பள்ளித் தோழராகவும் கூட இருக்கலாம். ஆனால் கட்சி சார்ந்த வேட்பாளர் என்றவுடன் அவர் வாழ்க்கையில் மாறும் காட்சிகள் ஆச்சரியம் அளிக்கக்கூடியதாக இருக்கும். இதைப் படிக்கும் நீங்க அதிக பட்சம் கிராம நிர்வாக அதிகாரி முதல் தாசில்தார் அலுவலகம் வரைக்கும் போய் நின்று ஏதோவொரு சான்றிதலுக்காக மட்டும் போய் வரிசையில் நின்று இருக்கக்கூடும்.

ஆனால் இது போன்ற அலுவலகங்கள் தான் நம் இந்தியாவில் நடக்கும் தேர்தலுக்கு முக்கிய பங்காற்றிக் கொண்டு இருக்கிறது. வருவாய் கோட்டாட்சியர் அதிகாரி தான் அந்தந்த தாலூகாவின் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இவருக்கு தேர்தல் ஆணையம் வழங்கும் அதிகாரம் என்பது ஆச்சரியத்தின் உச்சம். ஒரு வேட்பாளர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வது முதல் அதை இறுதியாக உறுதிப்படுத்துவது வரைக்கும் இங்கு தான் படிப்படியான ஒவ்வொரு நிகழ்வுகளும் நடக்கின்றது.  இந்த வருவாய் கோட்டாட்சியருக்கு பின்னால் ஒரு மிகப்பெரிய படைபட்டாளமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

இது தவிர ஏனைய மற்ற அரசாங்கத் துறைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அரசு ஊழியர்களையும் தேர்தலின் போது நமது அரசாங்கம் பயன்படுத்திக் கொள்கின்றது.

இவர்கள் விரும்பாதபோதும் கூட படாய்படுத்தி தேர்தல் வேளையில் பங்கெடுக்க வைத்து விடுகிறார்கள். மொத்தத்தில் மக்களுக்கு தேவைப்படும் சார்பாளர்களை தேர்ந்தெடுக்க ஒரு மிகப் பெரிய அரசு எந்திரம் தேர்தல் முடிவு அறிவிக்கும் வரையிலும் இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு தேர்தலின் முடிவு வந்த போதிலும் கூட அத்தனை ஆவணங்களையும் பாதுகாக்க வேண்டியதாகவும் இருப்பதால் இதன் முக்கியத்துவம் ஆச்சரியப்படக்கூடியது.

இப்போது வலைபதிவுகளில் எழுதிக்கொண்டிருப்பவர்களின் மனதில் எதிர்காலத்தில் கட்சி சார்ந்து அல்லது சார்பில்லாமல் 2016 அன்று நடக்கப்போகும் (அல்லது அமையப்போகும் கூத்து அரசாங்கம் கவிழ்ந்து இடையில் உருவாகப்போகும்) தேர்தலில் நீங்கள் பங்கெடுத்துக் கொள்ள விரும்பினால் இந்த கட்டுரை உங்களுக்கு பயன்படக்கூடும்.

உங்களுக்கு தேர்தலில் போட்டியிட ஆசையா? 

நீங்கள் வேட்பாளராக வேண்டுமென்றால் சில ஆவணங்கள் உங்கள் கைவசம் இருக்கிறதா என்பதை இப்போதே சோதித்துப் பார்த்துக் கொள்ளவும்.

வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை (ரேஷன் கார்டு), ஓட்டுநர் உரிமம், பள்ளியில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ், உங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அதிகாரியிடம் வாங்கியுள்ள சொத்து குறித்த சான்றிதழ், ஒரு வேளை உங்களுக்கு சொத்து இல்லாவிட்டாலும் கூட அதை குறிப்பிட்டு எழுதி வாங்கி வைத்திருக்க வேண்டும்.  உங்களுக்கு நிரந்தராக தொழில் இருந்தால் அது குறித்த தணிக்கையாளர் சான்றிதழ் மற்றும் வருமான வரி கட்டிய விபரங்கள் போன்றவை அவஸ்யம் தேவை.

இது தவிர தேர்தலுக்காகவென்று ஒரு புதிய வங்கி கணக்கு.  இது சேமிப்பு கணக்காகக்கூட இருக்கலாம். வங்கியிடம் கேட்டு நம்முடைய கணக்குக்கான அட்டையை வாங்கி வைத்திருக்க வேண்டும்.  கடைசியாக 20 ரூபாய் மதிப்புள்ள பத்திரத்தில் (நோட்டரி பப்ளிக்) வழக்குரைஞரிடம் உறுதி மொழி சான்றிதழ்..

தேர்தலுக்கான விண்ணப்ப படிவத்தை முதலில் பெற அந்தந்த தாலூகா அலுவலகத்தில் சிறப்பு பிரிவாக உருவாக்கப்பட்டிருக்கும் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் ஒரு விண்ணப்ப படிவத்தை இலவசமாக தருகிறார்கள். அதில் அனுப்புநர், பெறுநர் (தேர்தல் அதிகாரி) போன்ற சம்பிரதாய வாசகங்களுடன் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கும் விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். 

உங்கள் பெயர், அப்பா பெயர், தற்போது வசிக்கும் முகவரி, உங்கள் வாக்காளர் அடையாள அட்டையின் எண், பிரிக்கப்பட்ட தொகுதி என்றால் எந்த பிரிவில் வருகிறது? தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புத்தகத்தின்படி எந்த பக்கத்தில் உங்கள் பெயர் வருகின்றது போன்றவற்றை இந்த விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டு நீங்கள் கையொப்பமிட்டு உள்ளே கொடுக்க வேண்டும். உங்களிடம் வாக்களர் அடையாள அட்டை இருந்து அது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புத்தகத்தில் வராதபட்சத்தில் ஆசையை அடக்கிக் கொண்டு அடுத்த வேளையை பார்க்க போய்விடலாம்.

ஏனப்பா என் பெயர் இதில் வரவில்லை என்று உங்களால் கேட்க முடியாது.  காரணம் இதற்காகத்தான் பல வாய்புக்கள் வழங்கப்படுகின்றது.  அது போன்ற சமயத்தில் அடித்தல், திருத்தல், மற்ற மாற்றங்கள் குறித்து குறிப்பிட்ட அலுவலரிடம் தெரிவித்து முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக இருக்க வேண்டும்.

முதலில் தேர்தலுக்கான விண்ணப்ப படிவம் வாங்க உள்ளே நுழையும் போது மூன்று அலுவலர்கள் உங்களை வரவேற்கிறார்கள். ஒருவர் உங்கள் விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொண்டு ஒரு குறிப்பேட்டில் குறித்துக் கொண்டு அவர்கள் வைத்திருக்கும் ஆவணங்களை வைத்து சரி பார்த்து அடுத்தவரிடம் கொடுக்கிறார். அவர் நாம் கொடுத்துள்ள விபரங்களை நம்மிடம் கேட்டு உறுதிபடுத்திக் கொண்டு நம்மிடம் இருந்து பத்து ரூபாய் கேட்டு வாங்கிக் கொண்டு ரோஸ் கலர் விண்ணப்ப படிவத்தை தருகிறார். 

இது தான் வேட்பாளருக்கான விண்ணப்ப படிவம். 

மூன்றாவது நபர் நாம் கொடுத்த பத்து ரூபாய்க்கு உரிய ரசீதும், அவர் வைத்துள்ள குறிப்பேட்டில் நம்மைப் பற்றி விபரங்களையும் பெற்று எழுதிக் கொண்டு வழியனுப்பி வைக்கிறார்கள்.

முதல் கட்டம் முடிந்தது.

இந்த ரோஸ் கலர் விண்ணப்ப படிவமானது இந்திய தேர்தல் ஆணையத்தின் படிப்படியான கெடுபிடிகளால் சமீபகாலமாகத்தான் உருவாகியிருக்கும் போலிருக்கு.  ஏழு பக்கங்கள் இருக்கிறது.  முதல் வரியே 

தேர்தல் நடத்துவது குறித்த 1961 ஆம் ஆண்டு விதிகளின் 4 வது விதியைக் காண்க.  ( இதுக்கு அப்புறம் எவரும் இதில் கையை வைக்கலையோ?)

இதில் ஒவ்வொரு பகுதியாக பிரித்துள்ளார்கள்.

முதல் பகுதியில் நம்மைப்பற்றி விபரங்கள், முகவரி, வாக்காளர் அடையாள அட்டையின் எண், பிரிவு, பாகம் போன்ற விசயங்கள்.

இதில் தொடர்ச்சியாக மற்றொரு அதி முக்கியமான விசயம் ஒன்று உண்டு.  நம்மை பத்து பேர்கள் பரிந்துரை செய்ய வேண்டும்.  ஒவ்வொருவரின் பெயர், அவரின் வாக்காளர் அடையாள அட்டையின் எண், பாகம், பிரிவு அத்துடன் அவரின் கையொப்பம். 


இரண்டாவது பகுதியில் வேட்பாளர் வயது, நாம் விரும்பும் (மூன்று) சின்னங்களை கேட்டு அதில் குறிப்பிட வேண்டும்)

இந்த பிரிவின் கடைசியாக "தற்போது நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் நான் இரண்டுக்கும் மேற்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளிலிருந்து வேட்பாளராக நியமனம் செய்யப்படவில்லை என்று அவ்வாறு நியமனம் செய்யப்பட மாட்டேன என்றும் மேலும் உறுதியளிக்கின்றேன்" என்றும் முடிவு பெறுகின்றது.

அடுத்த பிரிவில் அற்புதமான பஞ்சாயத்து சமாச்சாரங்கள் நிரம்பி வழிகின்றது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டு, வழக்கு விபரங்கள், அதன் குற்றவியல் குறித்த விபரங்கள் என்று இரண்டு பக்கத்திற்கு விலாவாரியாக விவரிக்கப்பட்டுள்ளது.

கடைசி இரண்டு பக்கங்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிக்குரிய பக்கங்களாகும்..  
இந்த வேட்புமனுவை பரிசீலித்து கீழ்கண்டவாறு முடிவு செய்கின்றேன் என்று அவர் இறுதியாக கையொப்பமிட வேண்டும்.

ஏறக்குறைய ஏழு பக்கங்கள். ஒவ்வொரு பக்கத்தின் முன்பின் நிரப்பப்படும் இந்த விண்ணப்பபடிவத்தின் மூலமாகத்தான் நம்மை ஆட்சியப் போகும் ஏழரை பகவான்களை நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம்.  ஆனால் இத்துடன் நமக்கு வழக்குரைஞர் அளிக்கும் 20 ரூபாய் மதிப்புள்ள பத்திர சான்றிதழ் அதி முக்கியமானது. 

இந்த பத்திரம் 16 பக்கங்கள் வருகின்றது. 

இது முழுக்க முழுக்க நம்முடைய சொந்தக்கதை சோகக்கதையை நிரப்பியாக வேண்டும்.

பெயர், முகவரி, வாக்காளர் அடையாள அட்டை குறித்த விபரங்ளுடன், குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால், தண்டனை பெற்றிருந்தால், மனு நீதி மன்றத்தில் இருக்கும்பட்சத்தில், வாய்தாவாக இழுத்துக் கொண்டே இருந்தால்...  

விலாவாரியாக ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொன்றையும் சொல்லிக் கொண்டே செல்கிறது.  (கிட்னி மோசடியில் ஈடுபட்டு வழக்கு மன்றத்தில் இருப்பவரை தங்கபால் தேர்ந்தெடுத்துள்ள வேட்பாளர் குறித்து இப்போது உங்கள் நினைவுக்கு வந்து இருந்தால் நான் பொறுப்பல்ல) 

இத்துடன் நாம் வாங்கியுள்ள சொத்துக்களையும் குறிப்பிட வேண்டும். அசையும் சொத்து, அசையாச் சொத்து, நாம் வைத்திருக்கும் வாகனங்கள், அதன் மதிப்பு, துணைவியார் பணியில் இருந்தால் அவரின் வருமானம் குறித்த விபரங்கள், வீட்டில் உள்ள நகையின் இன்றைய மதிப்பு.........................

நாம் தான் கலைஞர்,ஜெயலலிதா போன்றோர்கள் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள அவர்களின் சொத்து மதிப்பை நாம் பத்திரிக்கைகளில் படித்துக் கொண்டு தானே இருக்கிறோம்(?)

நாம் குறிப்பிட்டுள்ள சொத்தின் அளவைப் பொறுத்து, வருமான வரி சான்றிதழ்கள், பான்கார்டு விபரங்கள், தணிக்கையாளர் சான்றிதழ் போன்றவற்றை தனியாக குறிப்பிட வேண்டும்.  இத்துடன் நாம் தேர்தல் செலவுக்கென்று புதிதாக ஒரு வங்கிக் கணக்கு அது குறித்த விபரங்கள்.

கையொப்பம் இட வேண்டிய அத்தனை இடங்களிலும் கவனமாக பார்த்து கையொப்பமிட்டு விட்டால் முதல் கட்ட தகுதி முடிவுக்கு வந்து விடுகின்றது.


விண்ணப்ப படிவத்திற்கு பத்து ரூபாய், மற்றபடி வழக்குரைஞருக்கு, ஒவ்வொன்றையும் நகல் எடுக்க, அலைச்சலுக்கு தேவைப்படும் பெட்ரோல், வங்கிக் கணக்கு தொடங்க ஆயிரம் ரூபாய் என்று இந்த முதல் பகுதியில் நமக்குத் தேவைப்படும் செலவீனம் மிக அதிகபட்சமாக 1500 ரூபாய்.

அடுத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைப்பதற்கான நடை முறைகள்........ 

Sunday, March 27, 2011

63 நாயன்மார்களுக்கு சீமான் உருவாக்கியுள்ள ஆப்பு

காங்கிரஸ் கட்சி. 

இந்திரா காந்தி அம்மையார் குறித்த பல விமர்சனங்கள் இருந்தாலும் அத்தனையும் தாண்டி அவருக்குள் இருந்த தீர்மானமான கொள்கை முடிவுகள் இந்தியாவை பல படிகளேனும் முன்னேற்றப்பாதையில் அழைத்துச் சென்றது என்பதும் உண்மை. திடீர் தலைவராகவோ, திட்டமிடுதல் இல்லாமல் வந்த அமரர் ராஜீவ் காந்தி போலவோ இல்லாமல் முன்னாள் பிரதமர் ஜவர்ஹலால் நேருவின் உதவியாளர் போலவே செயல்பட்டு அரசியலின் ஒவ்வொரு படியையும் கடந்து மேலே வந்தவர். 

வாரிசு என்றொரு குற்றச்சாட்டு எத்தனை உண்மையோ அதையும் உடைத்து தன்னுடைய ஆளுமையை நிரூபித்த மகா பெண்மணி.  இந்திரா காந்தி இருந்த போது அவருடன் இருந்த மற்ற முக்கிய தலைவர்கள் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதை அரசியல் நோக்கர்களைத் தவிர இப்போது போல அவ்வளவு சீக்கீரம் நம்மால் புரிந்து கொள்ள முடியாது. காரணம் இந்திரா ப்ரியதர்ஷிணி சகலவிதங்களிலும் வியாபித்திருந்தார். 

குறிப்பாக வெளிநாட்டுக் கொள்கைகளில் பங்களாதேஷ் முதல் ஈழம் வரைக்கும் சுயமாக சிந்தித்து முடிவு எடுத்த சாதனைப் பெண்மணி.  

நான் வாழ்ந்த பகுதியில் எந்த தேர்தல் வந்தாலும் மாநிலத்திற்கு இரட்டை இலை.  மத்தியில் கைச் சின்னம்.  இதுதான் தராக மந்திரமாகவே இருந்தது.  காங்கிரஸை தூற்றுவதும் பழிப்பதும் ஏறக்குறைய ஒரு பாவச் செயல் போலவே கருதப்பட்டது. 

ஆனால் காலங்கள் உருண்டோடி காவுகள் பல வாங்கி வந்து நிற்கும் இன்றைய காங்கிரஸ் கட்சியின் நிலைமை?  அந்தோ பரிதாபம்? 

ஈழம் சார்ந்த கொள்கைள் முதல் இன்றைய வெட்கக்கேடான வெளியுறவுக் கொள்கைகள் வரைக்கும் அத்தனையும் சிக்கல் மேல் சிக்கலாகி சின்னாபின்னமாக்கி சிதறுண்டு போய்க்கிடக்கிறது. டம்மி பிரதமரை வைத்துக் கொண்டு கும்மியாட்டம் நடத்திக் கொண்டிருக்கும் இந்த மத்திய காங்கிரஸ் கட்சியை சீமான் எதிர்ப்பது ஈழத்தில் நடந்த அக்கிரமத்திற்காக மட்டுமே.  ஆனால் என்னுடைய பார்வையில் இந்த காங்கிரஸ் கட்சி, ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த சில நிகழ்வுகளையும் பார்த்து விடலாம். 

சாய்நாத் ஹிந்து பத்திரிக்கையில் எழுதிய இந்த விபரங்கள் இன்றைய சாதனை காங்கிரஸ் கட்சியின் சாதனைப் பட்டியல் சிலவற்றை மட்டுமே கொடுத்துள்ளேன்?

2005-06 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி, பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்துள்ள வரி - 3,74,937 கோடி ரூபாய். (இது, 2ஜி அலைக்கற்றை ஊழல் தொகையைவிட 2 மடங்கு)

இப்போது நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்துள்ள வரி - ரூ.88,263 கோடி.

இப்படி பெரும் தொகையை தொழில் நிறுவனங்களுக்கு ரத்து செய்த பிரணாப் முகர்ஜி, விவசாயத் துறைக்கான ஒதுக்கீட்டில் ரூ.5568 கோடியை வெட்டி விட்டார். பயிர்ப் பாதுகாப்புக்காக, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தொகையில் மட்டும் குறைக்கப்பட்ட நிதி ரூ.4,447 கோடி.

பெரும் தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையை தள்ளுபடி செய்தது மட்டுமல்ல, இனி எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய சுங்கவரியைக் கட்டத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்ட தொகை - ரூ.48,798 கோடி!                (நாடு முழுதும் பொது விநியோகத் துறையான ரேஷன் கடைகளுக்கு ஓராண்டுக்கு செலவிடப்படும் தொகையில் இது பாதி)

அப்பல்லோ போன்ற ‘நட்சத்திர ஓட்டல்’ தரத்தில் நடத்தப்படும் தனியார் மருத்துவமனைகளுக்கு வெளிநாடுகளிலிருந்து நவீன மருத்துவக் கருவிகளை இறக்குமதி செய்ய, இந்த நிதி நிலை அறிக்கையில் விலக்காக அளிக்கப்பட்டுள்ள சுங்கவரித் தொகை ரூ.1,74,418 கோடி.

இந்த மருத்துவமனைகளில் 30 சதவீத படுக்கைகளை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கி, சிகிச்சை அளிப்பதாக இந்த நிறுவனங்கள் பொய் கூறி அரசிடமிருந்து சலுகைகளைப் பெறுகின்றன. உண்மையில் அப்படி எந்த இலவச சிகிச்சையும் இங்கே வழங்கப்படுவது இல்லை.

இந்த நிதிநிலை அறிக்கையில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகளாக அறிவிக்கப்பட்டுள்ள தீர்வை வரி - ரூ.1,98,291 கோடி.                (கடந்த ஆண்டு - ரூ.1,69,121 கோடி)

தொழில் வருமான வரி, சுங்க வரி, தீர்வை வரி - ஆக பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் செலுத்தத் தேவையில்லை என்று 2005-2006 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தமாக வழங்கப்பட்ட வரிச் சலுகை - ரூ.21,25,203 கோடி. (21 இலட்சத்து 25 ஆயிரத்து 203 கோடி. 2ஜி அலைக்கற்றை ஊழலைவிட 12 மடங்கு அதிகம்)

இப்படி கோடிகோடியாக தொழில் திமிங்கலங்களின் வயிற்றில் கொட்டும் இந்த காங்கிரஸ் ஆட்சி தான். ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருள்களை வழங்க நிதி இல்லை என்று கை விரிக்கிறது. உணவுக்காக வழங்கப்படும் நிதி உதவியை குறைக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களை வரவேற்கும் மத்திய மாநில அரசுகள் உள் கட்டமைப்புகளில் கவனம் செலுத்துவதில்லை. 

மற்ற ஊர்களில் எப்படியோ? திருப்பூரில் தொடக்கத்தில் மின்சாரத்தடை இரண்டு மணி நேரமாக இருந்தது.  இப்போது ஒரு நாளைக்கு சராசரியாக 6 மணி நேரமாக மாறியுள்ளது. உள்ளே இருக்கும் நிறுவனங்களுக்கே மின்சாரம் வழங்க முடியா சூழ்நிலையில் இருப்பவர்கள் தான் பன்னாட்டு நிறுவனங்களை ரத்தினக்கம்பளம் போட்டு வரவேற்கிறார்கள்.வருகின்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம்.அத்துடன் குறிப்பிட்ட வருடங்களுக்கு வரிவிலக்கு. 

காரணம் என்ன?  

எச்சில் பொறுக்கிகள் தங்கள் மேல் விழும் எலும்புத் துண்டுகளை கவ்வ தயாராக இருப்பதால் நம் இந்தியாவை இன்று பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாகவே இப்போதுள்ள மத்திய அரசாங்கம் மாற்றியுள்ளது, இந்த பட்ஜெட்டில் உள்நாட்டு தயாரிப்பாளர்களுக்கு நிதியமைச்சர் பிரணாப் கொடுத்த மற்றொரு அன்புப் பரிசு கலால் வரி பத்து சதவிகிதம். 

ஜட்டி, பனியனை தயாரித்து நிறுவனத்தை விட்டு வெளியே கொண்டு வர வேண்டுமென்றால் 100 ரூபாய்க்கு பத்து ரூபாயை வரியாக கட்டி ரசீது வாங்கி விட்டு தான் வெளியே கொண்டு போக வேண்டும். இது போன்று ஒவ்வொரு துறைக்கும் இவர்களின் அன்புப் பரிசு உண்டு.

கற்பனை செய்து பாருங்க. நம்மை ஆளும் அரசாங்கம் நம் மக்களை வாழவைக்கவா?  இல்லை அழித்து முடித்து அடுத்த நாட்டு கையில் ஓப்படைக்கவா?

இந்த 2011 தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள 63 நாயன்மார்களை ஒழித்துக் கட்ட சீமானின் நாம் தமிழர் இயக்கம் உருவாக்கிய காணொளி தமிழ்நாடு முழுக்க சென்றடையுமா? என்று தெரியவில்லை. நல்ல வேளை மொத்த பிரச்சனைகளுடன் ஈழப்பிரச்சனைகளையும் சேர்த்து இடையிடையே சீமானின் பேச்சும் கலந்துள்ள இந்த 20 நிமிட காணொளியை பார்க்கின்ற இளைஞர்களுக்கு, குறிப்பாக முதன் முறையாக ஓட்டுப் போடுகின்றவர்களை பாதிப்படைய வைத்தாலே முழு வெற்றி தான். 

நிச்சயம் இது போன்ற இளைஞர்கள் மற்றும் முடிவெடுக்க யோசித்துக் கொண்டிருப்பவர்கள், ஒவ்வொரு முறையும் வாக்குச் சாவடிக்குச் செல்லாமல் இருப்பவர்கள் என்று குறிப்பிட்ட சதவிகிதம் யோசித்தாலே போதுமானது.

ஆனாலும் சீமான செய்ய வேண்டிய வேலையின் பாதி அளவை ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தங்கபாலு செய்து முடித்து விட்டார். 

காரணம் காந்திஜியின் தண்டி யாத்திரையில் கலந்து கொண்ட வழித்தோன்றலான தங்கபாலு மனைவி ஜெயந்திக்கு இந்த முறை சீட்டு கிடைத்துள்ளது. தங்கபாலூவின் கைபேசியை தூக்கிக் கொண்டு வரும் தாமோதரனுக்கும், கார் கதவை திறந்து விடும் சிவலிங்கம் போன்ற தியாகச் செம்மல்களுக்கு சீட்டு கிடைத்துள்ள காரணத்தால் இப்போது தங்கபாலு வசிக்கும் வீட்டு சந்துக்கே கூட காவல் போட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார். 

ஆனால் இவர்களை விட முக்கியமான ஒரு பிரமுகர் உண்டு. 

கிருஷ்ணகிரி வேட்பாளர் ஹசீனா சையத்.  இவர் செய்து கொண்டிருந்த தொழில் தங்கபாலுவின் தொலைக்காட்சியில் அழகுக்கலை நிகழ்ச்சியை வழங்குவது.  

ஆகா புல்லரிக்குது. 

தங்கபால் காங்கிரஸ்க்கு பால் ஊற்றியதற்கு நன்றிங்கோ.

இந்த காணொளியை பகிர்ந்து கொண்ட தெகா மற்றும் ராஜாகீர்த்திக்கு நன்றி.



Saturday, March 05, 2011

விஜயகாந்த் அதிர்ஷடக்காரர்?

இந்த முறை தேர்தலில் தொடக்கம் முதல் இரண்டு பேர்களை கவனித்துக் கொண்டே வருகின்றேன். ஒன்று சீமான்.  மற்றொருவர் விஜயகாந்த.  

சீமானைப் பொறுத்தவரையில் அவரின் உண்மையான நிலைப்பாடு இந்த முறை தேர்தலில் பங்கெடுப்பது இல்லை.  அடுத்து வரும் தேர்தலுக்கு (2016)முன்னோட்டமாக இன உணவாளர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.  குறிப்பாக காங்கிரஸ் கட்சியை முடிந்த வரைக்கும் முடித்துக் கட்டுவதில் குறியாக இருக்கிறார்.  சீமான் பேசும் கூட்டங்களில் இளையதலைமுறையினர் ஆர்வமாக பங்கெடுத்துக் கொள்கின்றனர்.  முக்கியமாக படித்தவர்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. 

சீமான் மனதிற்குள் போட்டுள்ள கணக்கை விட இந்த தேர்தல் முடிவுதற்குள் கிங்கர ராஜாக்கள் என்ன மாதிரியான கணக்கை வைத்துள்ளார்களோ?  

காரணம் புதுக்கோட்டையில் முதல் களப்புலியை காவு வாங்கி தங்களது புனிதப்பணியை தொடங்கியுள்ளனர். இதற்குள் உள்குத்து அதிகமாக இருந்தாலும் முழுமையாக எந்த ஊடகமும் இதைக் குறித்து ஆராயாமல் சற்று மேம்போக்காகவே போய்விட்டது.  இன்னும் எத்தனை பேர்களை பலி பீடத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறார்களோ?  சென்னையில் இயக்குநர் பாரதிராஜா அலுவலகத்தை யார் தலைமையில் சூறையாடினார்கள் என்று அணைவருக்கும் தெரிந்து போதிலும் அத்தனை பேர்களும் அமைதி காத்தனர். காரணம் கடந்த தேர்தலில் ப. சிதம்பரம், இளங்கோவன் போன்றவர்களை மண்ணைக் கவ்வியதற்கு முக்கிய காரணம் ஈழம் என்ற ஒரு சொல்லும் அதன் ஆதரவாளர்களுமே காரணமாக இருந்தனர்.  

ஆனால் ப. சிதம்பரம் அழிச்சு கிழிச்சு கெஞ்சி கூத்தாடி கழைக்கூத்தாடி போலவே ஆளை விட்டால் போதுமடா சாமின்னு ஓட்டமாய் பின்வாசல் வழியே மேலே போய் உட்கார்ந்து விட்டார்.  இப்போது காங்கிரஸ் மக்கள் கொஞ்சம் உசாராகவே இருக்கின்றனர். ஈழம் என்று சொல்லிக்கொண்டு வெற்றி வாய்ப்பை தட்டிப் பறிப்பவர்கள் எவராயினும் அவர்களுக்கு உரிய பாடம் புகட்டப்படும் என்பதை உணர்த்திக் காட்ட எதற்கும் தயாராகவே உள்ளனர். மீறி உணர்த்திக் காட்டிவர்களுக்கு முடிந்த வரைக்கும் அவ்வப்போது ஒவ்வொரு கணக்கும் தீர்த்துக் கொண்டே வரப்படுகின்றது. 

செயலில் இறங்கிய இளங்கன்றுவின் வேகம் இன்று வாசன் கோஷ்டியை விட மேலேறி உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்துள்ளது. உடன்பிறப்பு, ரத்தத்தின் ரத்தம் தொண்டர்களுக்கு நான் எந்த வகையில் சளைத்தவன் அல்ல என்று இளங்கன்றுவின் வேகத்தை உள்துறை கூட மனதில் உள்ளே வைத்து ரசித்து இருக்கக்கூடும்.  காரணம் இது அரசியல்.  இப்போது தவறவிட்டால் எப்போதும் தவறாய் போய் முடிந்து விடும்.  

ஆனால் இந்த 2011 தேர்தல் என்பது தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சுயபரிசோதனை என்பதை விட உண்மையிலே ஈழம் இனப்படுகொலை என்பது தமிழ்நாட்டில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது? என்பதை உணர்த்தக் கூடும். இதை வைத்து தான் சீமான் களத்தில் இறங்கியிருக்கிறார்.  முடிந்த கதையை எத்தனை நாளைக்கு பேசிக் கொண்டு இருக்கப்போகிறாய்? என்று தமிழ்நாட்டு வாக்காளர்கள் கேட்கப்போகிறார்களா? அல்லது சீமானின் கர்ஜனை எந்த அளவிற்கு தாக்கத்தை உருவாக்கும்? என்று தெரியவில்லை.  பெரும்பாலும் இந்த தேர்தல் முடிவை வைத்து சீமான் செல்வாக்கானவரா இல்லை செல்லக்காசா? என்று முடிவு தெரிந்து விடும்.


விஜயகாந்த்.   

நான் தான் முதலமைச்சர்!!!! என்று தைரியமாக கூவியதற்கே முதலில் பாராட்டுரை வழங்க வேண்டும்.  பெரும்பாலும் தேமுதிக என்ற கட்சி தொடங்கிய பிறகு தான் விஜயகாந்த் அரசியல் குறித்து கொஞ்சமாவது படித்து கேட்டு இருக்கக்கூடும். பண்ட்ருட்டி ராமச்சந்திரன் மனம் மாறாமல் இன்னமும் விஜயகாந்த பக்கத்தில் இருப்பதால் கொஞ்சம் அனுபவ பாடங்களும் கிடைத்து இருக்கக்கூடும்.  ஒரு பக்கம் மனைவி பிரேமலதா மற்றொரு புறம் மச்சினன் சுதிஷ் பின்பக்கம் பண்ட்ருட்டி முன்பக்கம் எப்போது அவர் சொல்லிக் கொண்டு இருப்பது அந்த ஆண்டவன். 

விஜயகாந்த மேடையில் பேச்சும் தெளிவாக இல்லை. கோர்வையாகவும் சொல்லத் தெரியவில்லை.  மொத்தத்தில் நிதானமும் இல்லை.  ஆனால் தொடக்கம் முதல் இந்த தில்லுதுர வைத்திருந்த நம்பிக்கை இன்று வீணாகிப் போய்விடவில்லை. பட்டையைக்கிளப்பி போய்க் கொண்டு இன்று அதிமுக வில் 41 சீட்டு பெற்றுள்ளார்.  பாவம் வைகோ, கம்யூனிஸ்ட்கள்.


விஜயகாந்தின் பழைய படங்களைப் பார்த்தால் அந்த வெண்திரையில் விஜயகாந்த சிரித்தால் அந்த பற்கள் மட்டும் கொஞ்சம் வெள்ளையாக தெரியும்.  நடிகர் விஜய் அப்பா எஸ்.ஏ.சி க்கும் நண்பர் இப்றாகிம் ராவுத்தருக்கும் தான் விஜயகாந்த் காலம் முழுக்க நன்றி சொல்ல வேண்டும்.  கதாநாயகனுக்கு உரிய எந்த அங்கலட்சணமும் இல்லாமல், இன்று வரையிலும் தமிழ் உச்சரிப்பு கூட சரியாக பேச முடியாமல், தொப்புளில் பம்பரம் விட்டு கலைச்சேவை செய்து இன்று நாட்டுக்கு சேவை செய்ய வந்து இருக்கும் இவரின் சேவையை யார் உணர்ந்தார்களோ இல்லையோ விருத்தாச்சலம் தலித் மக்கள் கொடுத்த ஆதரவு மகத்தானது. 

பாசமுள்ள மகன் கட்சிக்கு சொந்தக்காரன ராமதர்ஸ் கோட்டைக்குள் நுழைந்து பிடறியை உலுக்கியதோடு பீடு நடை போட்டு சட்டமன்றம் வரைக்கும் சென்றது வரைக்கும் முழுக்க முழுக்க அவரின் தனிப்பட்ட அசாத்தியமான தைரியமே.  வைகோ போல் குறுக்கும் நெடுக்கும் நடைபயணம் இல்லை. திருமா போல வீர வசனம் இல்லை. மற்ற அரசியல் தலைவர்கள் போல களப்பணிகள் இலலை.  மொத்தத்தில் பெரிதான கஷ்டங்களை சந்திக்காமல் நானே ராஜா நானே மந்திரியாய் முழு நேர அரசியல் தலைவராய் பரிணமித்துள்ளார். இன்று கேப்டன் தொலைக்காட்சியில் இவர் புகழ் எட்டுத்திக்கும் பறந்து கொண்டுருக்கிறது.  

கலையுலகம் முதல் இன்றைய அரசியல் உலகம் வரைக்கும் அத்தனையிலும் தான் கொண்ட நம்பிக்கையை விஜயகாந்த் இன்று வரைக்கும் மாற்றிக் கொள்ளவேயில்லை. இந்த நம்பிக்கை தான் இன்றைய அதிர்ஷ்ட திசையின் ஆரம்பம்?

டெல்லியில் இருந்து வந்த பாரதிய ஜனதா கட்சி நபர்களையே வாசலில் காக்க வைத்த போயஸ்தோட்டம் இன்று வேறு வழியே இல்லாமல் விஜயகாந்தை வெத்தலை பாக்கு வைக்காத குறையாக வரவேற்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது.. குறிப்பாக பா.ம.கா வை கலைஞர் உள்ளே இழுத்தது காங்கிரஸ்க்கு எரிச்சலாக இருந்து இருக்குமே தவிர விஜயகாந்த்திற்கு மற்றொரு அதிர்ஷ்ட வாய்ப்பு.  மீதி இருக்கும் ஒரே வாய்ப்பு தேமுதிக மட்டுமே என்கிற நிலை வந்த போது அதிமுக வேறு என்ன செய்ய முடியும்?  

தொடக்கம் முதல் விஜயகாந்த் கடைபிடித்த அமைதி ரொம்பவே ஆச்சரியமானது. எதிலும் பிடிகொடுக்கவில்லை. எந்த வாய்ப்புகளையும் தவற விட தயாராய் இல்லை. டெல்லிக்கு படையெடுத்தது முதல் காங்கிரஸ் ஒரு பக்கம், மற்றொரு புறம் தனது அக்கா விஜயலெட்சுமி மூலம் அழகிரி ஒரு பக்கம் என்று உருவாக அரசியல் சந்தையில் தேமுதிக முக்கியமானதாக போய்விட்டது. 

விஜயகாந்த் அரசியல் வாழ்வில் இத்தனை பெரிய அதிர்ஷ்டக் காற்று அடிக்கும் என்று அவரே நினைத்து இருக்கமாட்டார்.  

' நான் ஆண்டவனுடன் மற்றும் மக்களுடன் கூட கூட்டணி வைப்பேன் ' என்று சொன்னவர் இன்று அதிமுகவுடன் வந்து சேர்ந்துள்ளார்.  விஜயகாந்த் வைத்திருக்கும் பத்து சதவிகித ஓட்டுகள் இந்த முறை அதிமுகவுக்கோ உதவுகின்றதோ இல்லையோ நிச்சயம் தன்னுடைய அரசியல் ஸ்திரத்தன்மையை மேம்படுத்திக் கொள்ள இந்த தேர்தல் தேமுதிகவுக்கு உதவும்.  போயஸ் தோட்டத்தில் கனகம்பீரமாக உள்ளே நுழைந்த நபர் இவராகத்தான் இருப்பார்.

இவர் தொடக்கம் முதல் சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு வாக்குறுதி வித்யாசமானது.  "நான் ஆட்சிக்கு வந்தால் ரேசன் பொருட்கள் அத்தனையும் ஒவ்வொருவரின் வீட்டுக்கே வந்து சேரும்.  இதைப் போலவே பல ஐடியாக்கள் வைத்துள்ளேன்.  இப்போது அதை வெளியே சொன்னால் திமுக காப்பி அடித்து விடும்" என்று வேறு பயமுறுத்தி வைத்துள்ளார்.  ஏற்கனவே இதைப்போலவே பா.மா.க, விடுதலை சிறுத்தைகள். தனிப்பட்ட முறையில் பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர்.  இன்று அத்தனையும் காற்றில் அலைகின்றது.  இவரின் ஐடியாக்களை இவர் முதலமைச்சராக ஆகும் போது இவருக்கு கீழே இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் எப்படி புரிந்து கொள்ளப் போகின்றார்களோ?

காங்கிரஸை வழிக்கு கொண்டு வர திடீர் ஞானோதயம் பெற்ற கலைஞர் எப்படி ராமதாஸை திமுக கூட்டணிக்கு கொண்டு வந்துள்ளாரோ அதைப் போலவே இந்த முறையும் ஓட்டு பிரிந்து போய் திமுக ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக பலமடங்கு கீழிறங்கி நம்ம கேப்டன் அதகளத்தை கடைவாயில் அடக்கிக் கொண்டு போயஸ் தோட்டம் புன்னகை சிந்தியுள்ளது.


இன்னும் 90 நாட்களில் அதிமுக ஜெயித்து வரும் பட்சத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கும் திரைக்கதையில் உருவாகப்போகும் முடிச்சுகள் அவிழத் தொடங்கும். என்னையே அலைக்கழித்தாயா? என்று யோசிக்கத் துவங்கும் போது இயக்குநர் மகேந்திரனின் உதிரிப்பூக்கள் போல தேமுதிக வின் உண்மையான பலம் பலவீனம் அப்போது நமக்குத் தெரியும்..

இன்றைய விஜயகாந்தின் அதிர்ஷ்டத்தை விட அன்று உருவாகப்போகும் துரதிஷ்டத்தை எப்படி சமாளிப்பார் என்பதில் தான் விஜயகாந்தின் அரசியல் எதிர்காலம் இருக்கிறது. தமிழ்நாட்டு வாக்காளர்களைப் பற்றி அத்தனை எளிதாக கணித்து விட முடியாது.  கடைசி நிமிடம் வரைக்கும் சாவடித்து விடக்கூடியவர்கள். 

சொல்லமுடியாது.  ஒரு வேளை நடைபெறப் போகும் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில்??

கேப்டன் காட்டில் அடைமழையல்ல.  மழைக்குள் கேப்டன்.