Showing posts with label தனுஷ்கோடி. Show all posts
Showing posts with label தனுஷ்கோடி. Show all posts

Monday, November 06, 2017

தனுஷ்கோடி - அந்த ஒரு நாள்


மூன்று வருடங்களுக்கு முன்பு சென்னை ஆசான் அவர்களுடன் சென்ற சுற்றுப் பயணத்தில் தனுஷ்கோடி பக்கமும் முதல் முறையாக செல்ல வாய்ப்பு அமைந்தது.  அப்போது அது சார்ந்த பயணக்கட்டுரையை எழுதி வைத்தேன். தற்போது அறுபது வயதை நெருங்கியவர்கள் அப்போது அந்தப் பதிவில் தனுஷ்கோடி கோரத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டார்கள்.  இன்று இந்த செய்தி முகநூலில் கிடைத்தது. பதிவில் இருந்தால் இந்த வரலாற்றுக் கொடுமை பலருக்கும் சென்று சேரும் என்பதற்காக இங்கே பதிவாக்கி வைக்கின்றேன்.

மணலுக்கு கீழே பிணங்கள் (பயணக்கட்டுரை)

♥#தனுஷ்கோடி 

#நடந்தது_என்ன? ஒரு அற்புத பதிவு,,,

♥டிசம்பர் 22 1964... தனுஷ்கோடியின் அன்றைய தினம் தொடக்கம் முதலே வழக்கத்தை விட அதிகமான காற்றையும் மழையையும் எதிர்கொண்டிருந்தது.

♥கடலுக்குள் செல்வதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கவில்லை. வங்கக் கடலில் தோன்றிய புயல் எங்கு, எப்போது கரையைக் கடக்கப்போகிறது என்பது பற்றியும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

♥அவர்களைப் பொறுத்தவரை 'புயல் மையம் கொண்டுள்ளது, காற்றடிக்கும், மழை பெய்யும், கடலுக்குள் செல்லக் கூடாது....' என்றளவில் மட்டுமே விழிப்புணர்வு இருந்தது.

♥புயல் எச்சரிக்கை என்பது தெரியும், ஆனால் புயல் எங்கு கரையைக் கடக்கப் போகிறது என்பதை எல்லாம் அறிந்து கொள்ளும் வசதி அந்நாளில் இல்லை. புயலின் தீவிரம் இந்த அளவிற்கு இருக்கும் என்பது புயல் கரையைக் கடந்த பின் மட்டுமே தெரிந்தது.

♥ரயில் நம்பர் 653, பாம்பனில் இருந்து தனுஷ்கோடி வரை செல்லும் தனுஷ்கோடி - பாம்பன் பாசன்ஜெர் சரியாக 11.55க்கு தனுஷ்கோடி நோக்கிய தனது (இறுதி) யாத்திரையைத் தொடங்கியது.

♥ரயில் தனுஷ்கோடியை நெருங்கும் சில நூறு மீட்டர்களுக்கு முன், காற்றின் வேகம் தீவிரம் அடைந்து, கடல் கொந்தளிக்கத் தொடங்கி இருந்தது.

♥இஞ்சின் டிரைவர் ரயில்வே சிக்னல் வேலை செய்யவில்லை என்பதை அப்போதுதான் கவனித்து இருந்தார்.

♥தனுஷ்கோடியை புயல் தாக்கத் தொடங்கி இருந்ததால் அணைத்து தொடர்பு சாதனங்களும் செயல் இழந்து இருந்தன. ரயில்வே சிக்னல், தந்தி கம்பங்கள் என எதுவும் வேலை செய்யவில்லை.

♥டிரைவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. 'பலத்த மழையின் காரணமாக சிக்னல் செயல் இழந்து இருக்கும்' என்று கணிக்கத் தெரிந்தவருக்கு வரப்போகும் அபாயத்தைப் கணிக்கத் தெரியவில்லை.

♥எங்கும் இருள் சூழ்ந்து இருக்கவே, ரயில் வருவதை தெரிவிக்க.... தன்னிடம் இருந்த விசிலை ஊதிக் கொண்டே வண்டியை நகற்ற ஆரம்பித்தார்.

♥அந்த நிமிடம், அந்த நொடி, அந்த 115 பேரும் என்ன மனநிலையில் இருந்திருப்பார்கள்..........

♥ஆழிப் பெருங்காற்றும் அதைத் தொடர்ந்த பேரலையும் இரயிலை வாரி அணைத்துக் கொண்டது. இரயிலில் பயணித்த அத்தனை பயணிகளும் ஜலசமாதி ஆயினர்.

♥ரயில் நிலையத்திற்கும் ரயிலுக்குமான சில நூறு மீட்டர் இடைவெளிகளில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்து விட்டது.

♥ஒரு சில நிமிடங்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்குமானால் அந்த பாசன்ஜெர், ரயில் நிலையத்தை அடைந்திருக்கும். அத்தனை உயிர்களும் மிகப் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டிருக்கும்.

♥'விதி சற்றே வலியது'. அதனால் தானோ என்னவோ, அவர்கள் உயிர் பிழைக்க வழி கொடுக்காமல் தன்னுடன் அழைத்துக் கொண்டது.

♥தனுஷ்கோடிக்கு முன்பே, புயல் தலைமன்னாரை நெருங்கி இருந்தது. தலைமன்னாரும் பல ஆயிரம் உயிர்களை புயலுக்கு காவு கொடுத்திருந்தது. தலைமன்னார் கடலில் கலந்த உயிர்கள், தனுஷ்கோடி கரையில் உடலாக ஒதுங்கத் தொடங்கியிருந்தது.

♥தனுஷ்கோடியிலோ நிலைமை இன்னும் பரிதாபம், மின்கம்பங்கள் அறுந்து ஊரே இருளில் மூழ்கியது. கட்டிடங்களின் கூரைகள் பிய்த்துக் கொண்டு பறக்கத் தொடங்கின. அவசரகால தகவல் தொடர்புச் சாதனமான தந்திக் கம்பங்களும் அறுந்து தொங்கின,

♥''இன்னது நடக்கிறது...'' என்று தகவல் சொல்லக் கூட அங்கிருந்தவர்களுக்கு வழி இல்லமால் போனது. கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்பி ஒரு ஊரையே மிரட்டிக் கொண்டிருந்தன.

♥நடுநிசியில், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பலராலும்.... ஆழிக்காற்றின் வேகத்தை உணர முடியவில்லை. உறக்கத்தில் உயிரைத் தொலைத்தவர்கள் அநேகம் பேர்.

♥இருந்தும் அதிகரித்த காற்றின் வேகமும், அலைகள் மூலம் ஊருக்குள் புகுந்த தண்ணீரும் வரப் போகும் அசம்பாவிதத்தை எடுத்தியம்பத் தொடங்கின. இயற்கை கொடுத்த இந்த 'அபாய அறிவிப்பை' உணர்ந்து கொண்டவர்கள் வேகமாக செயல் படத்தொடங்கினார்கள்.

♥அங்கு குடியிருந்த மக்களில் பெரும்பாலனவர்கள் மீனவர்கள் என்பதால் குழந்தைகள் பெண்களை சுமந்து கொண்டு பாதுகாப்பான இடம் தேடி நகரத் தொடங்கினார்கள்.

♥இதில், 'நீச்சல் காளி' என்னும் மீனவர் மட்டும் தனியொரு ஆளாக பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார்.

♥அடைமழையில் அவர்களுக்கு கிடைத்த ஒரே ஒரு பாதுகாப்பான இடம் உயர்ந்த மணற்குன்றுகள் மட்டுமே. அதைத் தவிர அவர்களுக்கு வேறுவழி இல்லை. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கு தான் நின்றாக வேண்டும்.

♥இதைத் தவிர இன்னுமொரு முக்கியமான இடமும் சில நூறு உயிர்களைக் காப்பாற்றியது.....

♥ஒரு ரயில் ஒருநூறு உயிர்களைக் காவு வாங்கியது, மறுபுறம் ஒரு ரயில் சில நூறு உயிர்களைக் காவல்காத்தது .

♥ஆம். பெரும்பாலான மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தேடி ஓடிய இடம் தனுஷ்கோடி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலைத் தான். மொத்த மக்கள் கூட்டமும் ரயிலை நிரப்பி கதவு ஜன்னல்களை இருக மூடிக் கொண்டது.

♥ஊர் முழுவதும் வெள்ளமும் சோகமும் ஒரு சேர பரவத் தொடங்கி இருந்தது. தங்கள் குழந்தையை, துணையை, உறவினரைத் தேடத் தொடங்கியது.

♥தங்கள் உயிர் காப்பாற்றப்பட்டது என்ற மகிழ்ச்சியை விட தொலைந்து போன உயிர்கள் பற்றிய பயமும் சோகமும் அவர்களை வாட்டியது.

♥எதிர்பாரா சம்பவங்கள் அவர்களை குழப்பத்தில் தள்ளியது. கூச்சலும் குழப்பமும் நிறைந்த தனுஷ்கோடி தன்னுடைய ஒட்டுமொத்த ஆர்ப்பரிப்பையும் அந்த ஒரு இரவில் வெளிப்படுத்தி அடங்கியது.

♥இவை எதுபற்றியுமே அறியாமல் தமிழகம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது. அடுத்த நாள் பொழுதுபுலர்ந்த பொழுது கூட தனுஷ்கோடியின் நிலைமை குறித்து ஒருவரும் முழுவதுமாக அறிந்திருக்கவில்லை.

♥அந்த நாட்களில் ராமேஸ்வரம் செல்வதற்கு தரைப்பாலம் கிடையாது. படகுப் போக்குவரத்தும், ரயில் சேவையும் மட்டுமே.

♥மற்றுமொரு கொடுமையான விஷயம் குடிநீரும் உணவுப் பொருட்களும் தமிழகத்தில் இருந்து செல்லும் ரயில்கள் மூலமாக மட்டுமே கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.

♥புயல் பாம்பன் பாலத்தையும் பதம் பார்த்திருந்தது, தண்டவாளங்கள் அறுந்து தொங்கிக் கொண்டிருந்தன. ஒட்டு மொத்த தனுஷ்கோடியும் எவ்வித தொடர்பும் இன்றி தனித்து விடப்பட்டிருந்தது. குடிக்கும் நீருக்குக் கூட வழியில்லாத ஆழி சூழ் உலகாக மாறி இருந்தது தனுஷ்கோடி. 

♥விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக பரவத் தொடங்கியது. தமிழக அரசாங்கம் விழித்துக் கொண்டது. அன்றைய முதல்வர் பக்தவத்சலம் உடனடியாக செயல்படத் தொடங்கினார்.

♥இந்திய அரசின் உதவியை நாடினார். நிலைமையைப் புரிந்து கொண்ட இந்திய அரசும் போர்கால அடிப்படையில் செயல்படத் தொடங்கியது. தனுஷ்கோடி துயரச் சம்பவத்தை ''தேசியப் பேரிழப்பு'' என்று அறிவித்தது.

♥இராணுவம் தொடங்கி முப்படைகளும் தனுஷ்கோடி நோக்கி விரைந்தன. முதல் தேவை நீரும் உணவும். வான்படையின் ஹெலிகாப்டர்கள் மூலமாக உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன. இந்தியக் கப்பல் படையின் மீட்புக் குழுவும் களத்தில் இறங்கியது.

♥அடுத்த நாளும் மழை நின்றபாடில்லை. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது.
♥''காப்பாற்றப்பட்ட மக்களை விட கண்டெடுத்த சடலங்களே அதிகம்'' என்று மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

♥எஞ்சிய தனுஷ்கோடியை "சாரதா" என்னும் கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல விரைந்தது. உயிர் பிழைத்த மக்கள் அனைவரையும் மதுரை அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதித்த பின்னும் கூட அரசாங்கத்தால் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

♥மூன்றாம் நாள் தான் அரசாங்கத்திற்கு நினைவு வந்தது, 'ஒரு பயணிகள் ரயிலைக் காணவில்லை' என்று.

♥மீண்டும் தேடல் தொடங்கியது. இறுதியாக முடிவுக்கு வந்தனர். புயலில் இரயில் கடலோடு கடலாக கலந்திருக்க வேண்டுமென்று. கடலுக்குள் இறங்கித் தேடத் தொடங்கினர்.

♥இரயிலின் பெரும்பாலான பாகங்கள் அதாவது இரும்பு தவிர்த்து மற்றவை அனைத்தும் கடலோடு கடலாக அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. அதில் பயணித்த 115 பயணிகளும் மாண்டுவிட்டதாக அறிவித்தனர்.

♥பேரழிவைப் பார்வையிட வந்த முதல்வர் பக்தவத்சலம் தன்னால் 'ரயிலின் சில பாகங்களைக் காண முடிந்தது' என்று குறிப்பிடுகிறார்.

♥தனுஷ்கோடியில் வெள்ளம் வடிய நான்கு நாட்களுக்கு மேல் ஆகியது. இந்தியாவை நிலை குலைய வைத்த சம்பவம் பற்றி உலகமே பரபரப்பாகப் பேசத் தொடங்கியது.

♥தனுஷ்கோடியில் அடித்த புயலின் வேகம் மிக அதிகம். தலைமன்னாரைக் கடக்கும் பொழுது மணிக்கு 150 கி.மீ வேகத்தில் நகர்ந்த புயல், தனுஷ்கோடியை தாக்கும் பொழுது மணிக்கு 250 கி.மீ வேகத்தில் தாக்கியுள்ளது.

♥விளைவு 1500 மக்களின் உயிரைக் குடித்தது. 1500 ஏக்கருக்கும் மேலான நிலப்பரப்பை நீருக்குள் இழுத்துக் கொண்டது. சொல்லப் போனால் மூன்று முழு கிராமங்கள் இன்றும் கடலடியில் தான் இளைப்பாறிக் கொண்டுள்ளன, தனுஷ்கோடி துறைமுகத்தையும் சேர்த்து. 

♥''ஆசியாவின் இருபதாம் நூற்றாண்டுப் பேரிழப்பாக'' ஐ.நா சபை இந்த சம்பவத்தை அறிவித்தது.

♥நிலமை இப்படி இருக்க தமிழகமோ புயலில் சிக்கிய ஒரு சினிமா நடிகர் குறித்துக் கவலை கொள்ளத் தொடங்கியது.

♥டிசம்பர் 22 மாலை, ஜெமினியும் சாவித்திரியும் தனுஷ்கோடி கடலில் புனித நீராடிவிட்டு அவர்கள் தங்கியிருந்த அறைக்கு திரும்பும் பொழுதே காற்றின் வேகம் மிகவும் பலமாக இருந்தது. மழையும் விடாமல் பெய்து கொண்டிருந்தது.

♥'அன்றைய இரவுப் பொழுது தனுஷ்கோடியில் இருக்க வேண்டும்' என்பது சாவித்திரியின் விருப்பம். விடாது அடித்த காற்றும் அடைமழை கொடுத்த எச்சரிக்கையும் ஜெமினியை தனுஷ்கோடியில் இருக்கச் சம்மதிக்கவில்லை.

♥சாவித்திரி எவ்வளவோ கேட்டுக்கொண்டும் ஜெமினி கண்டிப்புடன் எச்சரிக்கவே அன்றைய மாலை ரயிலில் ராமேஸ்வரம் கிளம்பிச் சென்றுவிட்டனர்.

♥புயலைப் பற்றி ஜெமினி மற்றும் சாவித்திரி பின்வருமாறு குறிபிடுகிறார்கள் :

♥"ஓயாம காத்து அடிச்சிட்டே இருந்தது. நிறைய நரி ஊளையிடற சத்தம் விடாம கேட்டுட்டே இருந்தது. புயல் காத்து அப்புறம் நரி ஊளையிடுற சத்தம், மழை எல்லாமே சேர்ந்து ஒருவித திகலாவே இருந்தது.

♥சினிமால தான் இந்த மாதிரியான காட்சிகள் இருக்கும். அன்னைக்கு நைட் எங்களால தூங்கவே முடியல."

♥"அடுத்த நாள் காலைல தனுஷ்கோடி மக்கள் எல்லாரும் ராமேஸ்வரம் நோக்கி ஓடிவாறாங்க. அவங்க நிலமைய பார்த்தப்போ தான் புயலோட தீவிரம் முழுசா தெரிஞ்சது.

♥அவங்க எல்லாரும் கையில பிணங்கள தூக்கிட்டு ஓடி வந்தாங்க. அந்தக் காட்சிய பாக்குறதுக்கே கொடூரமா இருந்தது." தங்கள் பேட்டியில் ஒருவித மிரட்சியுடன் அந்த காட்சியை விவரித்து இருகிறார்கள்

♥அன்றைய தினம் காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல் இன்றுவரை கிடைக்கவில்லை. மணலில் புதைந்த பிணங்களும், கடலில் மிதந்த பிணங்களும் ஏராளம்.

♥அவற்றைத் தேடி எடுக்க மீட்புப் பணியினரால் முடியவில்லை. மேலும் பல உடல்கள் கழுகுகளாலும் மிருகங்களாலும் வேட்டையாடப்பட்டதால் அவர்களை இனங்கான முடியாமல் போயிற்று.

♥மக்கள் வாழ்வாதரங்களை இழந்த நிலையில் அரசு தனுஷ்கோடியை ''மக்கள் வாழத் தகுதியற்ற நகரம்'' என்று அறிவித்தது.

♥தன்னுடைய அத்தனை அடையாளங்களையும் அன்றைய ஒருநாள் புயலில் மொத்தமாக இழந்தது தனுஷ்கோடி.

♥ரயில்நிலையம், தபால்நிலையம், தந்தி ஆபீஸ், சுங்கச் சாவடி, மாநிலத்தின் முக்கியமான துறைமுகம் மற்றும் மீன்பிடி நிலையம் என்று தனது அன்றாட வாழ்கையை இழந்து, ''மக்கள் வாழத் தகுதியற்ற...'' என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

♥தனுஷ்கோடி மக்களுடன் சேர்ந்து, அன்று தொலைந்த தனுஷ்கோடி... இன்று வரை அடையாளம் காணப்படாமல் அப்படியே நிற்கிறது, எஞ்சிய தனுஷ்கோடியின் மிச்சங்களையும் பூர்வகுடிகளையும் சுமந்துகொண்டு.

♥ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி பதினான்கு கி.மீ தொலைவில் உள்ளது. செல்லும் வழியில் வலப்புறம் வெகு அருகில் இந்தியப் பெருங்கடலையும், இடப்புறம் வங்கக் கடலையும் கொண்டுள்ளது.

♥மக்கள் வாழத் தகுதியற்ற என்று முத்திரை குத்தப்பட்ட தனுஷ்கோடியில் இன்று இருநூறு குடும்பங்கள் வரை வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு மின் இணைப்பு கிடையாது.

♥இவர்களது இரவும் பகலும் மின்சாரம் இல்லாமல் தான் கழிகிறது, கருக்கல் நேரங்களில் சிமினி விளக்குகள் மட்டுமே தனுஷ்கோடிக்கு வெளிச்சம் தருகின்றன.

♥"ராமேஸ்வரத்துக்கு போனா தான் நாங்க லைட்ட பாக்க முடியும்" என்றார் என்னுடன் உரையாடிய ஒரு பெரியவர்.

♥சிலரிடம் ரேடியோ இருக்கின்றன, சிலரிடம் மொபைல் இருக்கிறது, சிக்னல் கிடைப்பது இல்லை, பாடல் கேட்கும் சாதனமாக அதைப் பயன்படுத்துகிறார்கள்.

♥அடிப்படை வசதி என்று எதுவும் கிடையாது, கடற்கரை மணலில் சில அடி ஆழத்தில் நன்னீர் ஊற்றுகள் இருக்கின்றன, இந்த நீரூற்றுக்கள் தான் இவர்களது நீர் ஆதாரம்.

♥சமையல் பொருட்கள் அனைத்தையும் ராமேஸ்வரத்தில் இருந்தே வாங்கி வருகிறார்கள். இங்கு இருப்பவர்கள் அனைவரும் காலங்காலமாக தனுஷ்கோடியில் வாழ்ந்து வரும் மீனவர்கள்.

♥மீன்பிடி தொழில் போக கடல் சிப்பிகளைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்தும் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இந்த இடத்தைவிட்டு செல்ல இவர்களுக்கு மனம் இடங்கொடா காரணத்தால் இங்கேயே தங்கி விட்டனர்.

♥வெளியிடத்து மக்கள் பெண் எடுக்கவும் கொடுக்கவும் அச்சப்படுவதால் திருமணங்கள் கூட தனுஷ்கோடிக்கு உள்ளேயே நடக்கின்றன.

♥சுற்றுல்லாத் தலமாக்கவும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் கோரிக்கைகள் வைக்கப்பட்ட போதிலும், 'மற்றுமொரு புயல் தாக்கி இதைவிட இன்னும் மோசமான அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக்கூடாது' என்று அரசாங்கம் பயப்படுவதால் தனுஷ்கோடியின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவே இருக்கிறது.

♥வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தனுஷ்கோடி சென்று வாருங்கள் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான பயணமாக தனுஷ்கோடி இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

நன்றி: ரிப்போர்ட்டர் அண்ணாதுரை
Via: ஆந்தை ரிப்போர்ட்டர்



எனது ஒன்பதாவது மின் நூல் சில ரகசிய குறிப்புகள்.

Saturday, March 22, 2014

பயணமும் படங்களும் - மணலுக்கு கீழே பிணங்கள்

உங்கள் வயது 50 வயது என்றால் நீங்க பிறந்த வருடத்தில் தான் நடந்தது. ஒரு வேளை அறுபது வயதை தாண்டியிருந்தால் நிச்சயம் பலரும் சொல்லக் கேட்டுருப்பீர்கள். நான் அப்போது பிறந்திருக்கவில்லை. 

நான் ஈழம் சார்ந்த வரலாற்றுப் புத்தகங்களை மற்றும் அது தொடர்பான பல புத்தகங்களையும் படித்துக் கொண்டு வந்த போது தான் முதல்முறையாகத் தனுஷ்கோடியில் 1964ம் ஆண்டு நடந்த கோரத்தாண்டவத்தைப் பற்றித் தெரிந்து கொண்டேன். 

ஒரு பகுதியையே மொத்தமாகக் கடல் உள்வாங்கிக் கொண்டதையும், அழிந்து போன மக்கள் தொகை போன்றவற்றைத் தெரிந்து கொள்ள முடிந்தது. இந்தத் துயர சம்பவம் நடந்து முடிந்து ஐம்பது வருடங்கள் கழித்துத் தனுஷ்கோடி பகுதியில் உள்ள ஒவ்வொரு இடத்திற்கும் சென்று சுற்றி வந்த போது என் மனதில் உருவான உறுத்தலுக்கு அளவேயில்லை. 

அந்த மணல்வெளியில் நாம் நடந்து வரும் போது நம்முடைய கால்கள் மணலில் புதைந்து அதன் பிறகே அடுத்த அடி எடுத்து வைக்கும் அளவிற்கு உள்ளது. மொத்தமாக எல்லா இடங்களிலும் மணல் குவியலாகவே உள்ளது. 

நான் எடுத்து வைத்த ஒவ்வொரு காலடித்தடத்திற்குக் கீழேயும் எத்தனை பிணங்கள் இருந்ததோ? என்பதை யோசித்துக் கொண்டே சுற்றி வந்தேன். சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் கடல் நீர். இதற்கு மேலாக ஹிந்து மத நம்பிக்கைகள் சார்ந்த புராண இதிகாச கதாபாத்திரங்களைச் சிறப்புப் படுத்தும் வழிபாட்டுத்தலங்கள். 

இயல்பான மனிதர்களைப் போலச் சராசரி உணர்ச்சிகளுக்கு எளிதில் கலங்கி விடாத எனக்குள் ஏராளமான மாற்றத்தை இந்தப் பூமியும் இங்கே வாழ்ந்த மக்களும் தந்தார்கள் என்றால் அது மிகையில்லை. 

உள்ளே கால் வைத்ததும் இங்கே மக்கள் இன்னமும் வசிக்கின்றார்களா? என்று தான் முதலில் நண்பர்களிடம் கேட்டேன். காரணம் திரைப்படங்களில் உச்சக்கட்ட காட்சியில் கதாநாயகனும், வில்லனும் சேர்ந்து ஆட்கள் நடமாட்டம் இல்லாத அத்துவான காட்டில் சண்டை போடுவார்களே? அதைப் போலத்ததான் இருந்தது. இங்கே வசித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதர்களிடத்திலும் பகிர்ந்து கொள்ளப் பல கதைகள் இருக்கின்றது. ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஓராயிரம் சோகங்களும் உள்ளது. 

இவர்களின் நாளை பொழுது என்பது நிச்சயமில்லாத வாழ்க்கை. என்ன வேண்டுமானாலும் நடக்கும்? வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் மாறும். அரசாங்கம் இந்தப் பகுதியை "மனிதர்கள் வசிக்க முடியாத பகுதி" என்பதாக மாற்றியுள்ள போதிலும் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் இந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லத் தயாராக இல்லை. இதன் காரணமாகவே எந்த அடிப்படை வசதிகளும் இங்கே நிறைவேற்றப் படவில்லை. 

ஆனாலும் அவர்களின் அப்பாவித்தனத்தையும், ஆடம்பரம் தேவைப்படாத வாழ்கையைப் பார்த்த போதும், அவர்களின் உரையாடல்களும், எதார்த்த மொழியும் ஏராளமான நம்பிக்கைகளை எனக்குள் விதைத்தது. இது போன்ற கோடிக்கணக்கான பகுதிகள் இந்தியாவில் இருப்பதால் தான், இவர்களைப் போன்ற மனிதர்களினால் மட்டுமே காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் இன்று வரைக்கும் இந்தியா உடையாத நாடாக உள்ளது. பரந்த தேசமாக இந்தப் பாரதப் பூமி நமக்குக் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது. 

ஒரு சின்ன உரையாடலை மட்டும் பதிவு செய்ய விரும்புகின்றேன். 

சங்கு, பாசி, மணி இன்னும் பல பொருட்களை வைத்து ஒரு கீற்றுக் கொட்டகையின் கீழ் விற்பனை செய்து கொண்டிருந்த பெண்மணியைப் பார்த்து "கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?" என்று யோசித்துக் கொண்டே கேட்டேன். இப்போது பொது இடங்களில் தண்ணீர் கேட்கும் போதே ரொம்பவே யோசிக்க வேண்டியதாக உள்ளது. பக்கத்தில் உள்ள காசு கொடுத்து வாங்க வேண்டிய பாட்டில்களை நோக்கித்தான் கையைக் காட்டுகின்றார்கள். 

"இருங்க தர்றேன்" என்று ஒரு சொம்பு நிறையத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். ஊத்துத் தண்ணீர். மிகுந்த சுவையுடன் இருக்க ஆச்சரியமாகக் கேட்ட போது அவர்கள் குடிநீருக்காகப் படும் அவஸ்த்தைகளைச் சொன்ன போது தொண்டைக்குள் சென்ற தண்ணீர் வெளியே வரட்டுமா? என்று கேட்பது போலவே இருந்தது. 

மெதுவாகப் பேசத் தொடங்கினேன். 

அவர் வைத்திருந்த பொருட்களைப் பார்த்தவுடன் அப்போது தான் வீட்டில் இருக்கும் நான்கு பெண்களைப் பற்றி நினைப்பே வந்தது. எல்லாமே அவர்களுக்குத் தேவைப்படும் சமாச்சாரம். இது போன்ற இடங்களில் விலைகள் அதிகமாக இருக்குமே? என்று யோசித்துக் கொண்டு விலைகளைக் கேட்ட போது பரவாயில்லை என்கிற நிலையில் தான் இருந்தது. "நான் அதிகமாக எடுத்துக் கொள்கின்றேன். எனக்குக் குறைத்துக் கொடுப்பீங்களா?" என்று அவரின் மனநிலையை அறிந்து கொள்ளக் கேட்ட போது "நீங்க விரும்பும் விலையில் தருகிறேன்" என்றார். 

சில பொருட்களை மட்டுமே எடுக்கலாம் என்று அவர் கதைகளைக் கேட்டுக் கொண்டே ஏறக்குறைய ஆயிரம் ரூபாய் அளவுக்குப் பாசி, மணி, தோடு , அலங்காரப் பொருட்கள் என்று அனைத்தையும் எடுத்து "மொத்த கணக்குச் சொல்லுமா?" என்று கேட்ட போது அவர் முகத்தில் உருவான பிரகாசத்தைப் பார்க்க வேண்டுமே? 

"ஏழெட்டு மாதங்களுக்குப் பிறகு இன்றையக்குத் தான் ஆயிரம் ரூபாய் வியாபாரம் நடந்துள்ளது" என்றார். அவர் கதையைக் கேட்ட காரணத்தாலும், அங்குள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டும் ஒவ்வொரு பொருளையும் இரண்டாக எடுத்துக் கொண்டு வந்தேன். இரண்டும் வெவ்வேறு நிறத்தில் இருந்தால் ஒவ்வொரு நாளும் பயன்படுத்த முடியும். எடுத்து வைத்த பொருட்களைச் சரிபார்த்துக் கொண்டு வந்த போது வீட்டில் எப்போதும் நடக்கும் பஞ்சாயத்து என் நினைவுக்கு வந்தது. 

நாம் ஆசைப்பட்டு ஏதாவது வாங்கிக் கொண்டு சென்றால் வீட்டில் உள்ள நான்கு பேர்களும் அது நொள்ளை இது நொள்ளை. இது கூடப் பார்த்து வாங்கத் தெரியாதா? என்று ரவுண்டு கட்டி அடிப்பது வாடிக்கை. இதை மனதில் கொண்டே நிதி மந்திரியை அழைத்துக் கேட்டு விடலாம் என்று யோசித்துக் கொண்டே அலைபேசியில் டவர் இருக்குமா? என்று பார்த்த போது பிஎஸ்என்எல் வாழ்க என்று கூவத் தோன்றியது. 

அந்தப் பெண்மணியிடம் உரையாடிய போது ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. "பணத்திற்கு அப்பாலும் ஒரு வாழ்க்கை உள்ளது. வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றிக் கொண்டு வாழ முடியும்" என்பதைத்தான் அவர்கள் வாழும் வாழ்க்கை உணர்த்துவதாக இருந்தது.

இங்கு வசிக்கக்கூடிய (ஏறக்குறைய 300 குடும்பங்கள் என்றார்கள்) குடும்பங்களில் உள்ள குழந்தைகள் படிப்பதற்கென்றே ஒரு பள்ளிக்கூடம் உள்ளது. அதுவும் பாதுகாப்பு பிரச்சனையின் அடிப்படையில் சில மைல்கள் தாண்டி உள்ளது. இராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி வரும் போது அந்தப் பள்ளியைத் தாண்டி தான் இங்கே வர முடியும். 

மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு தான் பள்ளியும் ஒரு பேரூந்து வசதியையும்
(மட்டும்)அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்தப் பள்ளிக்குச் செல்லக்கூடிய குழந்தைகள் காலையில் ஐந்து மணிக்கு எழுந்து பேரூந்தில் பயணித்துப் பள்ளிக்குச் செல்ல வேண்டும். தினந்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் தான் அந்தப் பேரூந்து வசதியை உருவாக்கியுள்ளனர். இதே போல மாலையிலும் குறிப்பிட்ட நேரத்தில் அதே பேரூந்து இங்கே வந்து சேரும். அதிகாலையில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் ஆசிரியர்கள் (ஒன்பது மணிக்கு மேல்) வந்து சேரும் வரையிலும் கொண்டு போன காலை உணவையும் உண்டு, விளையாடி, அதன் பிறகு படித்து முடித்து வருகின்றார்கள். 

இது தொடர்பாகப் பல சோகங்களையும் பகிர்ந்து கொண்டார். இவர்கள் விற்பனை செய்யும் அனைத்துப் பொருட்களும் முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் அண்ணன் நடத்திக் கொண்டிருக்கும் பெரிய கடைகளில் இருந்து தான் வாங்கி வருகின்றோம் என்றார். 

வாழ்க்கையில் அனைவரும் "நாம் இறந்து விடப் போவதில்லை" என்று தான் பத்து தலைமுறைக்குத் தேவையான சொத்துக்களைச் சேர்த்து விட வேண்டும் என்று அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 

இவர்களோ அடுத்த நிமிடம் "நமக்குச் சாவு வந்து விடக்கூடும்" என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதால் வாழும் ஒவ்வொரு நொடிப் பொழுதுகளையும் மகிழ்ச்சியாக மாற்றி வைத்துக் கொண்டு எவ்வித அதிகப்படியான எதிர்பார்ப்புகளையும் மனதில் வளர்த்துக் கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

மொத்த பயணத்தையும் முடித்து விட்டு வீட்டில் மனைவியிடம் சொன்னேன். "அவர்கள் கொடுத்து வைத்தவர்கள். தினந்தோறும் மீன்குழம்பு தான் அவர்களின் தினசரி உணவாக உள்ளது".  

சைவ பட்சிணிக்குத் தெரியுமா அசைவ மனிதனின் புலம்பல்கள்?





 






















தொடர்புடைய பதிவுகள்