Saturday, February 27, 2021

இந்தியா முழுக்க கொண்டு சேர்த்த ரயில்வே துறை அமைச்சர்

கொரோனா பகவான் அருள் வழங்கத் தொடங்கிய மாதம் முதல் பிறந்த ஊருக்குப் போவதையே மறந்து விட்டேன்.  அங்கே சென்று நாம் என்ன பேசினாலும் செல்லுபடியாகாது. நாம் ஏன் வம்பை விலைக்கு வாங்க வேண்டும் என்று செல்ல வேண்டிய சூழல் வந்தால் சபாநாயகர் சென்று விடுவார். 




என்ன கொஞ்சம் நேரம் திட்டு வாங்க வேண்டும். சிரித்துக் கொண்டே அர்ச்சனையை வாங்கும் போது பெண்கள் நலக்கூட்டணி என்னை வித்தியாசமாகப் பார்ப்பார்கள். இதற்கெல்லாம் பயந்தால் வாழ முடியுமா?

காரைக்குடி மயிலாடுதுறை கம்பன் எக்ஸ்பிரஸ் என்னவாயிற்று என்று நண்பரிடம் கேட்டேன். காரணம் காங்கிரஸ் ஆட்சியில் தண்டவாளத்தை பிடுங்கிப் போட்டுப் பல வருடங்கள் ரயில் செல்லாமல் அப்படியே கிடந்தது. ஆடிட்டர் அமைச்சராக வந்தவுடன் வேகம் பிடித்து ரயில் ஓடத்துவங்கியது. நான் இன்னமும் அந்த ரயில் செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் பல பஞ்சாயத்துகள் காரணமாக அந்த ரயில் நிறுத்தப்பட்டுள்ளது என்பதனை நேற்று தான் அறிந்தேன்.

காலையில் எப்போதும் மத்திய அரசின் புதிய திட்டங்கள். கல்வித்துறையில் உள்ள அறிவிப்புகளை வரிசையாகப் பார்த்துக் கொண்டு வந்த ஆடிட்டருக்கு வாழ்த்து சொல்லி விட்டு அய்யா கொஞ்சம் பார்த்து பண்ணுங்கள் சாமி என்று எப்போதும் போல ஒரு கடுதாசி போட்டு விட்டு மறந்து விட்டேன்.  

என் பணிக்கு இடையே வரிசையே நோட்டிபிகேசன் வந்து கொண்டேயிருக்க என்னவாயிற்று என்று உள்ளே சென்று பார்த்த போது ஆடிட்டர் பதில் அளித்து இருந்தார். 60 000 பேர்களுக்கு மேல் சென்று சேர்ந்துள்ளது.

ஏன் இதனை இங்கே எழுதுகிறேன் என்றால் இங்குள்ள ஜெய்வாபாய் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் அரசு அறிவித்தபடி 10,11,12 வகுப்புகள் செயல்பட்டாலும் 12 ஆம் வகுப்புகள் மட்டும் தான் தினமும் நடைபெறுகின்றது. 10 மற்றும் 11 வகுப்புகள் நினைத்த நேரத்தில் வைக்கின்றார்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் வைக்கின்றார்கள்.  

காரணம் என்னவென்று உள்ளே சென்று விசாரித்த போது அரசுப்பள்ளி வகுப்பறைகளைக் கொரோனா வார்ட் ஆக பயன்படுத்தி இருந்தார்கள். அதனை மீண்டும் சுத்தப்படுத்தி வகுப்பறை செயல்படத் தாமதம் ஆகின்றது என்பதனை கேள்விப்பட்டு எங்கள் ஊர் மாவட்ட நிர்வாகத்திடம் கடந்த சில நாட்களாக ட்விட்டரில் கோரிக்கை வைத்த போதும் பதிலும் இல்லை. அந்தப் பணி குறித்த வேகமும் நடைபெறுவதாகத் தெரியவில்லை. 

என்னை அரசு மதிக்கின்றது. என் கேள்விகளுக்குப் பதில் சொல்கின்றது? என்ற உணர்வு உங்களுக்குத் தோன்றும் போது உங்களுக்குத் தகுதியான நபர்கள் சரியான இடத்தில் இருந்தால் எப்படியிருக்கும்? என்ற எண்ணம் என்னைப் போல உங்களுக்கும் உருவாகக்கூடும்.🥰

====

இன்றைக்குக் காலையில் மகள் தான் திட்டிக் கொண்டே எழுப்பினார்.  நடைப்பயிற்சி போகாமல் என்ன தூக்கம்? என்று அன்போடு வெளியே அனுப்பி வைத்த போது இன்று இந்தியா முழுக்க சென்று சேர்வோம் என்று கனவிலும் நினைக்கவில்லை.  



ஏற்கனவே ஃபேஸ்புக் பூட்டிக்கொண்டு நாம் ஆற்றும் சேவை அனைவரும் அறிந்ததே.  நாம் எழுதுவதையும் படிக்க ஆட்கள் இருக்கின்றார்களே? என்று நம்மை நாமே ஆறுதல் பட்டுக் கொண்டு இருந்த வேளையில் ஆடிட்டர் ஒரே நாளில் அய்யா மோடி வரைக்கும் கொண்டு சேர்த்து விட்டார்.