Tuesday, February 02, 2021

சொந்தமாக பேச எழுதத் தெரியாது. யாருக்கு?

2021 தேர்தலில் நடக்கப் போகும் ஆச்சரியங்களைப் போல 2016 ஆம் ஆண்டு தேர்தலும் தமிழக அரசியல் பார்வையாளர்களால் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது.  

ஏறக்குறைய வாழ்வா? சாவா? என்ற போராட்டம் என்கிற நிலைக்கு இருந்தது. 



கலைஞருக்கும் சரி, தாயம்மாவுக்கும் சரி இறுதிக் காலத்தின் நாட்களை எண்ணிக்கொண்டிருந்த தருணமாக இருந்தது.  

வென்றால் இராணுவ மரியாதை. இல்லாவிட்டால் முன்னாள் முதல்வர் என்ற நிலை.  

ஆனால் வென்றது அதிமுக தான். விசயம் அதுவல்ல.

அந்தத் தேர்தலில் தமிழ்நாட்டிற்கு அறிமுகம் இல்லாத ஒரு சம்பவம் நடந்தது. கார்ப்பரேட் பாணியில் தேர்தல் கூட்டத்தை வடிவமைப்பு உருவாக்கி தனியார் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டு இங்கே அதனை அறிமுகம் செய்தவர் அன்புமணி இராமதாஸ்.  

தனி மேடை. அவர் மட்டும் ஏறுவார். பின்னால் பெரிய திரை. அத்துடன் புதிய கோஷம் ஒன்று உருவானது. 

அன்புமணியாக நான்.... 

உங்கள் ஊரில் உங்கள் அன்புமணி 

என்று தமிழக முதல்வராகப் பதவிப்பிரமாணம் எடுப்பது போலக் காட்சிகளை அரங்கேற்றினார்.  

மத்திய மருத்துவத்துறை அமைச்சராக இருந்த காரணத்தால் அன்று அவரால் செலவழிக்க முடிந்தது. பாமக தனியாக அந்தத் தேர்தலில் களம் கண்டது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உருவாக்கிய பாணியை இங்கே உருவி மாற்றி மிகுந்த நம்பிக்கை வைத்து இளம் முதல்வர், ஆரோக்கியமான முதல்வர், உலகத்தில் உள்ள எந்தத் தலைவருடனும் பேசக்கூடிய முதல்வர், ஆங்கிலம் நன்றாகப் பேசத் தெரிந்த முதல்வர் என்று பல வகையில் காரம், மசாலாப் பொடிகள் தூவி பிரமாதமாக விருந்து படைத்தார் அன்புமணி.

அப்போது அவர் சொன்ன வாசகம்

மக்கள் சந்திப்பு.

பிரச்சனைகளை அடையாளம் காணுதல்.

உடனே களம் புகுந்து தீர்வு காணுதல்.

அதாவது அவர் அந்தத் தேர்தலில் வென்று இருந்தால் இன்று சிங்கப்பூர் தமிழகத்திடம் வந்து பிச்சை எடுக்கும் நிலைக்கும் வந்து சேர்ந்திருக்கும். அந்த அளவுக்குத் திட்டங்களும், நோக்கங்களும், சொல்லப்பட்ட விசயங்களும் தமிழக வாக்காளர்களை அண்ணாந்து பார்க்க வைத்தது. 

ஆனால் அவர் நம்பிய அவர் மக்களே கும்மி தட்டி விட்டனர்.

சரி? ஏன் இப்போது இங்கே இதனைப் பேசப்பட வேண்டும் என்று உங்களுக்கு யோசனை வரும்?

350 கோடி பீகார் பகவான் அதனை இப்போது கையில் எடுத்துள்ளார். திரைக் கதை எழுதி கையில் கொடுத்துள்ளார்.

அன்புமணி அந்தத் தேர்தலில் அழைத்து வந்த நிறுவனத்திற்கு எத்தனை கோடி கொடுத்தார் என்று தெரியவில்லை.  ஆனால் அவர் உருவாக்கிய பாணி இன்று தமிழகத்தைச் சுற்றி வரப் போகின்றது.

அதிமுகவின் பாணியே தனி. 

அவர்களுக்கு இது போல மண்டைக்குடைச்சல் எதுவுமில்லை.  அட ஏம்பா கூகுள் காரணனுக்கு, மற்ற தனியார் நிறுவனங்களுக்குக் கொட்டிக் கொடுக்க வேண்டும். அப்படியே சிந்தாமல் சிதறாமல் வாக்காளர்களுக்குக் கொடுத்து விடலாமே என்று அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். 

கூடவே மீதியுள்ள தொகையைக் கொஞ்சம் பகிர்ந்து சீட் கிடைக்காத அல்லக்கை, நொந்தகை, வெந்தகை வைத்து சோலியை முடித்து விடலாம் என்ற அபரிமிதமான நம்பிக்கையில் இருக்கின்றார்கள் என்றே நினைக்கிறேன்.

2016ல் இப்போது உள்ள அளவுக்கு வாட்ஸ்அப் இல்லை.  2021 ல் டிஜிட்டல் மீடியாவின் கொலைப்பசியில் ஒவ்வொன்றாக வந்து விழுந்து கொண்டேயிருக்கிறது.  முன்பின் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் பார்ப்பவர்களைச் சிரிப்பாய் சிரிக்கக் கொண்டிருக்கிறது.

200 முதல் 500 வரை கொடுத்து அழைத்து வரப்படும் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறுமா?

மில்லியன் டாலர் கேள்விக்குள் தான் தமிழகத்தின் எதிர்காலம் உள்ளது.

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எதிர்காலமே சிரமம் தான்... துயரமாக மாறாமல் இருந்தால் சரி தான்...!

KILLERGEE Devakottai said...

வாக்குக்கு பணம் வாங்கும் மக்கள் பெரும்பான்மை ஆகிவிட்டதால் இனி தேர்தல் முறையை ஒழித்து விட்டு மன்னர்கள் ஆட்சியை கொண்டு வரலாம் தேர்தல் செலவுகளால் கடன் மா'க்கள் தலையிலேயே விழுகிறது.

ஜோதிஜி said...

இப்போது தான் மக்கள் அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்க தொடங்கி உள்ளனர். இளைஞர்களிடம் கொஞ்சம் மாறுதல் உருவாகியுள்ளது. இணையம் ஒவ்வொன்றையும் கொண்டு சேர்த்துக் கொண்டே இருக்கிறது. அடுத்த தேர்தலில் வெடிக்கும்.

ஜோதிஜி said...

30 ஆண்டுகாலம் அரசியலில் இருந்தும் அடிப்படை திறமை கூட இல்லை என்பவரை எப்படிப் பார்ப்பீர்கள்?

KILLERGEE Devakottai said...

விடுதலையாகி வெளியே வந்த சசிகலாவை 'தியாகத்தலைவி' என்பதும் மாறுதலில் உட்பட்டதா நண்பரே ?

ஜோதிஜி said...




அரசியல்வாதிகள், அதிகாரிகளை விட தற்போது மிக மிக ஆபத்தான ஜனநாயக் கொலையை திட்டமிட்டு செய்து கொண்டிருப்பது ஊடகங்கள். அவர்கள் தான் தாங்கள் விரும்புகின்றதை மக்கள் பேசும் செய்திகளாக மாற்றிக் கொண்டேயிருக்கின்றார்கள். மக்களுக்கு தேவையான விசயங்கள், தேவைப்படுகின்ற விசயங்கள் இங்கே எத்தனையோ சுட்டிக்காட்டப்படாமல் உள்ளது. சுட்டிக்காட்டப்பட வேண்டிய விசயங்களை கண்டு கொள்ளாமல் இன்னமும் திரைப்பட மயக்கத்தில் தமிழர்களை வைத்திருப்பதன் எச்சமும் சொச்சமும் இந்த தியாக தலைவி என்ற எச்சப்பொறுக்கித்தனம்.

Rathnavel Natarajan said...

அருமை

ஸ்ரீராம். said...

தமிழகத்தில் இரண்டு கட்சிகளை விட்டால் நாதி இல்லை என்கிற நிலையே நிலவுகிறது.  தேசியக் கட்சிகளுக்கு இனி வாய்ப்பும் இல்லை.  இரண்டு கட்சிகளில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசுத்துறைகளில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை.  சொல்லப்போனால் அந்தந்தத் துறைகளில் கொட்டைபோட்டவர்கள்தான் அந்தந்தத் துறை அமைச்சர்களுக்கு செயலாளர்களாகப் போகப்போகிறார்கள்.  அவர்கள் மூலம் பழைய அவலங்கள் இன்னும் கொஞ்சம் வேகமாகத் தொடரும்.

வெங்கட் நாகராஜ் said...

அரசியல். நம் ஊரைப் பொருத்தவரை எந்த கட்சியாக இருந்தாலும், வெல்லப்போவது எவராக இருந்தாலும் சுரண்டல் தொடரவே செய்யும். தமிழகத்தில் பணபலம் இருந்தால் போதும் என்பதே நிலை. பார்க்கலாம் என்ன நடக்கிறது என!