Saturday, November 16, 2019

4 பேருக்கு நன்றி.


"இன்றைய ஒரு நாள்" என்பது தான் எனக்கு மிகவும் முக்கியம். 

இந்தக் கொள்கை தான் என்னை இன்று வரையிலும் இயக்கிக் கொண்டிருக்கின்றது. அதனால் இன்று நான் செய்ய வேண்டிய வேலைகள், இன்றைய நிலையில் நான் யாருக்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டும்? யாரெல்லாம் எனக்கு உதவி உள்ளனர் என்பதனை அவ்வப்போது பதிவு செய்துவிடுவது வாடிக்கை.  அதன் பொருட்டு இந்தப் பதிவு.

()()()()

மகாகவி பாரதி முதல் நேற்று நீங்கள் பார்த்து வருத்தப்பட்ட பக்கத்து வீட்டுத் தாத்தா மரணம் வரைக்கும் யோசித்துப் பாருங்கள். தன் குடும்பம், தன் பெண்டிர் என்று வாழாமல் அதற்கு மேலாகத் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கும் சேர்ந்து வாழ்ந்த, வாழும் மனிதர்களை நம் சமூகம் எளிதில் அங்கீகரிக்க விரும்புவதில்லை.  

காரணம் மனிதர்களின் தோற்றமும் வளர்ச்சியும் நாகரிகத்தின் அடிப்படையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக் கொண்டே வந்தாலும் அவனுக்குள் இருக்கும் பொறாமையும், வன்மமும் காலத்திற்கேற்ப மாறிக் கொண்டே, வெவ்வேறு விதமாக வளர்நது கொண்டே தான் வருகிறதே ஒழிய அது முற்றிலும் அவனை விட்டு மறைந்து விடுவதில்லை.  

மனிதர்களைக் கவனிப்பது ஒரு கலை.  எப்போதும் மகள்களிடம் நான் சொல்வதுண்டு.

கவனி. 
கண்காணித்துக் கொள். 
கற்றுக் கொள்

இந்த மூன்றையும் இறப்பு வரும் வரைக்கும் தொடர்ந்து கடைபிடி. 

இது தான் வாழ்க்கை முழுக்க பயன்படும் என்று சொல்வதுண்டு.



மற்ற இனங்களை விடத் தமிழர்களின் மனத்தடை என்பது பிரசித்தி பெற்றது.

ஏன் இந்த மனத்தடை நமக்குள் இருக்கிறது? என்று கேள்வி எழுப்பிக் கொள்ள விரும்புவதில்லை.  காரணம் அது தான் தனக்கு வசதியாக உள்ளது என்று அவர்களே ஆழ்மனதில் நம்புகின்றார்கள்.  

அது தான் சரி என்றும் உளப்பூர்வமாக உறுதியும் எடுத்துக் கொண்டு தங்கள் வாழ்க்கையை தங்களுக்குத் தோன்றியபடி வாழ்ந்தும் முடித்து விடுகின்றார்கள்.

நன்றாகப் புத்திசாலித்தனத்தோடு வாழத் தெரிந்தவர்கள், நல்ல திறமை கொண்டவர்கள், உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்து விட்டு அறிவுப்பூர்வமாக வாழத் தெரிந்தவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் தோற்றுப் போனவர்களாகத்தான் இருக்கின்றார்கள். ஒரே காரணம் இவர்கள் காலம் முழுக்க சிறுபான்மையாகவே இருக்கின்றார்கள்.  இவர்கள் தான் சமூகம் அடுத்த கட்டத்திற்கு நகர உதவுகின்றார்கள். 

புதிய மறுமலர்ச்சியை அடையாளம் காட்டக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். 

ஆனால் அங்கீகாரம் இன்றி இறந்தும் போய்விடுகின்றார்கள்.  

நாம் இன்று பெற்றுள்ள வசதிகள் யாரோ சிலர் அவர்கள் வாழ்ந்த காலத்தில் உருவாக்கியது என்பதனை அனுபவிப்பவர்கள் கூட உணர மறுப்பது தான் ஒவ்வொரு இனத்திலும் நடந்து கொண்டிருக்கும் கொடுமையான உண்மை.

()()()()()

ஒவ்வொருவருக்கும் இங்கே ஒவ்வொரு கொள்கையுண்டு.  

இந்த கொள்கையில் மதம், சாதி, கட்சி அரசியல் மற்ற விருப்பங்கள் கலந்தே இருக்கும். அத்துடன் உங்கள் கொள்கை கலந்து இருந்தால் உங்களுக்கு உடனே அங்கீகாரம் கிடைக்கும்.  உடனடி அங்கீகாரத்திற்கு ஏங்குவது மனித மனத்தின் இயல்பு. அதையும் மீறி வென்று விடுவேன் என்று துணிந்து நிற்பது தான் நமக்கு முன்னால் வாழ்ந்த சாதனையாளர்களின் வாழ்க்கைச் சுவடுகள்.  இவர்களைத் தான் எப்போதும் நான் கருத்தில் கொள்வேன். 

இப்படிப்பட்டவர்களைத் தான் என் அருகில் வைத்திருப்பேன்.  அவர்கள் தான் என் வாழ்க்கையை மாற்றியிருக்கின்றார்கள். 

()()()()()()

அப்படிப்பட்ட 4 பேர்கள் என் 5 முதலாளிகளின் கதைக்கு வலையுலகம் சார்பாக நான் கேட்காமல் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். இப்படியொரு புத்தகம் மின்னூலாக அமேசான் போட்டிக்கு வெளிவந்துள்ளது என்று உலகத்திற்கு கொண்டு போய் சேர்த்துள்ளனர்.  மகிழ்ச்சி.


நான் வெளியிட்ட பல இலவச மின்னூல்களுக்கு இவர் தான் அட்டைப்படம்  வரைந்து கொடுத்தார். மணிக்கணக்கில் என் அவசர வேகத்தைப் பொறுத்து வரைந்து கொடுத்து என்னை வெளியுலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார்.  இன்னமும் சந்திக்கவில்லை. அலைபேசியில் பேசியுள்ளேன்.  

நான் வெளியிட்ட இலவச மின்னூல்களுக்கு இவர் உழைத்து உழைப்பிற்கு நான் கொடுக்க வேண்டிய காணிக்கை நன்றிக்கடன் என்கிற ரீதியில் அப்படியே என்னிடம் உள்ளது. இன்று வரையிலும் இவரின் புனிதப் பணி என்பது எனக்காகத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. நன்றி.


நான் அமேசான் நடத்தும் பெண்டூபப்ளிஷ் 2019 ல் கலந்து கொள்கிறேன். 5 முதலாளிகளின் கதை என்ற பெயரில் வருகின்றது என்பதனை நண்பர்களிடம் சொன்னது போலத்தான் சொன்னேன். 

அறிவிக்கப்படாத கொள்கை பரப்புச் செயலாளர் போலச் செயல்படத் தொடங்கி விட்டார். இவர் எனக்கு மட்டும் அல்ல. உலகம் முழுக்க இருக்கும் வலையுலக நண்பர்கள் அத்தனை பேர்களுக்கும் இதே உதவியை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து கொண்டு வந்தவரிடம் உலகம், சமூகம், மனிதர்கள், மனித இயல்பு போன்றவற்றைப் பல தடவை பல மணி நேரம் பாடம் நடத்தி உள்ளேன்.

காற்றில் கரைந்து போன பெருங்காய வாசனை போலவே ஆனது.  

சமீப காலமாகக் காலம் அவருக்குப் பாடம் நடத்திக் கொண்டு இருக்கிறது.  


நான் இன்னமும் சந்திக்கவில்லை. சென்னை சென்று இருந்த போது சந்திக்க வேண்டும் என்று சொல்லியிருந்தேன். வாய்ப்பு அமையவில்லை. கோபிச் செட்டி பாளையம் தான் அவரின் சொந்த ஊர் என்றாலும் இருவருக்கும் உண்டான தொலைவு அமெரிக்காவிற்கும் சென்னைக்கும் இடையே உள்ள தொலைவை விட அதிகமாக உள்ளது.  அதனால் என்ன? அலைபேசி அவ்வப்போது தொலைவைக் குறைத்து விடுகின்றது.  

நிதானமான மனிதர்கள் எதிலும் அவசரம் காட்டமாட்டார்கள்.  அவர் எழுதிய 5 முதலாளிகளின் கதையின் விமர்சனமும் நிதானமாகவே இருந்தது.


என்னை விட வயது மூத்தவர். எனக்குத் தெரிந்து நான் பெயர் சொல்லி அழைக்கும் உரிமை பெற்றவன் நான் ஒருவன் தான் என்றே நினைக்கிறேன். இப்போது ஃபேஸ்புக்கில் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றார்.  மதுரை போக்குவரத்துத் துறையில் உயர்பதவியில் பணியாற்றி, தொழிற்சங்கத்தில் முக்கியப் பொறுப்பிலிருந்து பணி ஓய்வு பெற்றவர். எழுத்துலகிலும் ஆர்வமாக இன்று வரையிலும் செயல்பட்டுக் கொண்டிருப்பவர். தன் குடும்பக் கடமைகளை மிக அழகாக செய்துள்ளார்.  கூடவே சமூக கடமைகளும் மிகத் தெளிவாக செய்து கொண்டு வருகின்றார்.

டாலர் நகரம் விழாவிற்கு ஓடி வந்து கலந்து கொண்டார்.  எனக்குத் தெரிந்த அத்தனை பேர்களையும் அவருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளேன். 

அவரும் பல பத்திரிக்கைகளில் எழுதிக் கொண்டு வருகின்றார்.  சட்டக்கதிர் என்ற பல உயர்ந்த பட்ச அதிகாரம் கொண்ட நீதிமான்களின் கட்டுரைகளை அழகாகத் தமிழில் மொழி பெயர்த்துப் பல புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.

இவர் தான் முதல் ஆளாக 5 முதலாளிகளின் கதைக்கு ஃபேஸ்புக்கில் விமர்சனம் எழுதியவர்.  தனிப்பட்ட உரையாடலில் இருப்பவர்.  புத்தகம் குறித்துச் சிலாகித்துத் தள்ளிவிட்டார்.  மனம் தூய்மையாக இருந்தால் பாராட்டுவது எளிது. உதவுவதும் எளிது என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து கொண்டு இருப்பவர்.

இந்த சமயத்தில் நண்பர்களுக்கு நன்றி என்ற வார்த்தையைப் பதிவு செய்து விட வேண்டும் என்று தோன்றியது. 

()()()()()

ஒரு பக்கம் கட்சி சார்பாக மிகப் பெரிய லாபி, சந்தைப்படுத்துதல் நடந்து கொண்டே இருக்கின்றது.  அதன் மூலம் தங்களுக்கான இடத்தை எளிதில் அடைந்து விடுகின்றார்கள். விடமுடியும். உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றால் நீங்கள் கட்சி, சாதி, இயக்கம், சித்தாந்தம், கொள்கை என்று ஏதோவொன்றில் கூட்டத்தோடு கூட்டமாக இருக்க வேண்டும். எதிர்காலம் இன்னமும் மோசமாக இருக்கப் போகின்றது. நம் தலைமுறைகள் குப்பைக்குள் தான் நீந்தி வர வேண்டும். தங்களை நிரூபிக்க வேண்டும். ஒழுக்கம் உயிரினும் பெரிது என்ற குறளின் கருத்து முற்றிலும் மாறியிருக்கும்.

ஆனால் குறிப்பிட்ட நண்பர்கள், எதிர்பாராத ஃபேஸ்புக் நண்பர்கள் ஒவ்வொருவரும் உண்மையிலேயே விலை கொடுத்து வாங்கி, முழுமையாகப் படித்து முடித்து விட்டு இந்த புத்தகம் பாடத்திட்டத்தில் வைக்க வேண்டிய புத்தகம் என்கிற அளவிற்கு அவரவர் மனதைத் திறந்து விமர்சனமாக எழுதி உள்ளனர். 

அவர்கள் அனைவரும் வலையுலகத்திற்குத் தொடர்பு இல்லாதவர்கள்.  அல்லது நம்மைப் போன்று இன்னமும் வலையுலகத்தில் தொடர்ந்து செயல்படுபவர்களும் அல்ல.

()()()()()

பங்குச் சந்தை போல அமேசான் தளத்தில் என் புத்தகம் தரம் மேலேறி கீழ் இறங்கி மேலேறி என்று மாய வித்தையைக் காட்டிக் கொண்டு இருக்கிறது.

ஆச்சரியப்படத்தக்க வகையில் பலமுறை வர்ணஜாலம் காட்டி மயக்குகின்றது. வலையுலகம் போல் இல்லாமல் ஃபேஸ்புக் தளம் உலகத்து தமிழரிடம் எளிதில் கொண்டு போய் சேர்த்து விடுகின்றது. இதில் அதிக விற்பனை என்கிற ரீதியில் வேறொரு கணக்கும் உள்ளே வந்து நின்று அதற்குத் தனியாக ஒரு பட்டியல் போட்டு அமேசான் நம்மை பயமுறுத்துகின்றது.

நல்ல மனம் படைத்த நண்பர்கள் மூலம் தற்போது 5 முதலாளிகளின் கதை இன்றைய நிலையில் முதல் நூறு இடத்தில் வந்து நிற்கின்றது.  பல சமயம் 51வது இடத்திற்குள் வந்து உள்ளது.

டிசம்பர் 15 வரைக்கும் நேரம் உள்ளது.

உள்ளூர் போட்டி, மாவட்ட போட்டி, மாநில போட்டி, இந்தியப் போட்டி என்பதனைக் கடந்து இப்போது உலகப் போட்டியில் நான் நீந்தி வர வேண்டியதாக உள்ளது. ஆமாம். உலகப் போட்டியில் 50 வது இடத்தைப் பெற்றுள்ளேன் என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

()()()()()

படிக்க விருப்பம் இருப்பவர்கள் ஒரு முறை படித்துப் பார்க்கலாம்.

அமேசான் தளத்தில் விமர்சனம் எழுதத் தெரிந்தவர்கள் உங்கள் மொழி அறிவைச் சோதிக்கக் கூகுள் மொழி பெயர்ப்பு கருவி மூலம் செய்து பார்க்கலாம்.

உங்கள் தளம் வாயிலாக நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைக்கலாம். 

நாமும் இவரைப் போல எழுதி அடுத்த முறை அமேசான் தளம் நடத்தும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத் துணிவு கொண்டவர்களை என் புத்தகம் உருவாக்கினால் அதுவே எனக்கு என் புத்தகத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாகக் கருதுவேன்.

நன்றி.

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

முயற்சி + பயிற்சி = வெற்றி

இது தான் எனது தாரக மந்திரம்...!

முயற்சி + பயிற்சி - ல் வரும் அனைத்தும் நமக்கு உணர்த்தும் படிக்கட்டுகள்...

வரும் அனைத்தும் = தோல்வி, அவமானம், பொறாமை, சலிப்பு, கோபம், எரிச்சல், வெறுப்பு, எதிர்ப்பார்ப்பு, இன்னும் பல, பலப்பல எதிர்மறை எண்ணங்கள் பல...

நன்றி...

வருண் said...

ஜோதிஜி: என்னங்க ஆச்சு தமிழ்மணம்? தமிழ்மணம் நிர்வாகிகள் பத்தி உங்களுக்குத் தெரியலை. தமிழ்மணம் உயிர் பெறப் போவதில்லை என்பதே உண்மை. நீங்க இந்தா வருது, அந்தா வருதுனு சொல்ல வேண்டியதில்லை. நான் உயிர் பெற்றதும் வந்து சொல்றேன். :)

ஜோதிஜி said...

தல 10 000 யூஎஸ் டாலர் அனுப்ப முடியுமா? என்று பாருங்கள். ஒரு டீம் இருக்கு. உங்களைத் தலைவராக போட்டு புதிய திரட்டி திறந்து விடலாம். டீலா?

வருண் said...

10,00 டாலர் அனுப்பி இன்னொரு தமிழ் திரட்டி ஆரம்பிக்கவா? நம்ம ஊரில் இப்படித்தான் ஆயிட்டாங்க. வயதானவர்களை (தமிழ்மணம் போல்), செத்தால் பரவாயில்லைனு விட்டுடுறாங்க.

தமிழ் மணம் நிர்வாகத்துக்கு பிரச்சினை, பணப் பிரச்சினையா? என்பதை தெளிவு படுத்தினீங்கனா நல்லது. அப்படி இல்லை என்றால் என்ன பிரச்சினை?னு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்க. நன்றி

ஜோதிஜி said...

மின் அஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்க.

வருண் said...

என்ன ஜோதிஜி, ரொம்ப பெரிய விடயமாக்குறீங்க? :) தமிழ்மணம் பற்றி பலருக்கும் இதே கேள்விகள் உண்டு என்பதால்தான் நான் இதைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன். தனி மடலில் பேச வேண்டிய அளவுக்கு ரகசியம் இருந்தால், பேசாமல் விட்டுட்டுப் போயிடுவேன். மற்றபடி நான் 10,000 டாலர் எல்லாம் கொடுத்து திரட்டி ஆரம்பிக்கத் தயாராக இல்லை. :)

ஹார்வேர்ட் தமிழ் இருக்கைனு கோடி கோடியா செலவழிக்கிறாங்க. ஒரு சாதாரண திரட்டியை நம்மளால நடத்த முடியலையே என்கிற ஆதங்கம்தான். மற்றபடி பதிவெழுத எல்லாம் எனக்கு நேரம் இல்லை. அதைவிட உருப்படியான வேலைகள் ஆயிரம் இருப்பதால். அதனால் தமிழ்மணம் எக்கேடு கெட்டுப் போனாலும் தனிப் பட்ட முறையில் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை.

உங்களுடைய தொடர் பதிலுக்கு நன்றி.

எல்லாமே காலப்போக்கில் அழிந்து கொண்டேதான் போகிறது. தமிழும் ஒரு நாள் அழியத்தான் போகிறது. என்ன இப்படி சொல்லீட்டேன்னு யோசிக்காதீங்க. நம்ம பூமி இருக்கு இல்லையா? அதுவும் சில பில்லியன் வருடங்களுக்கு பிறகு அழிந்து விடுமாம். பூமியே அழிந்தால் தமிழ் எங்கே வாழ? இப்படி எல்லாம் தமிழ் பற்றாளர்களால் யோசிக்க முடிவதில்லை. எங்கே பார்த்தாலும் இதுபோல் சிந்திக்கத் தெரியாத கூட்டமாகத்தான் இருக்கிறது. இவனுகள் லெவெலுக்கு பதிவும் எழுத முடிவதில்லை. :)

ஜோதிஜி said...

எங்கே பார்த்தாலும் இதுபோல் சிந்திக்கத் தெரியாத கூட்டமாகத்தான் இருக்கிறது. இவனுகள் லெவெலுக்கு பதிவும் எழுத முடிவதில்லை. :) தமிழகத்தில் விஸ்காம் படிக்கும் மாணவர்களுக்கு (எதிர்கால பத்திரிக்கையாளர்கள்) பகத்சிங், பிரபாகரன், வஉசி போன்றவர்கள் யார் என்று கேட்கின்றார்கள். நேற்று பேராசிரியர் சொல்லி அழுகின்றார்.