Friday, March 23, 2018

மேலும் சில குறிப்புகள் 6

ஹெச். ராஜா வின் பேச்சையும், வைரமுத்துவின் பேச்சையும் முழுமையாகக் கேட்ட போது சில விசயங்கள் புரிந்தது. 

ராஜா தன்னிலை மறந்து பேசியது போலத் தெரியவில்லை. இப்படித்தான் இந்த விசயத்தைப் பேசி கவனத்தை தம் பக்கம் திருப்ப வேண்டும் என்று பேசியது போலத் தெரிகின்றது. தொடக்கத்தில் இயல்பாகவே பேசத் தொடங்கினார். போகப் போக வார்த்தைகள் தெறித்தது. தன்னிலை மறந்தார். உடம்பு நடுங்கியது. அவரால் அவர் நிலையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வார்த்தைகள் எல்லை மீறியது. இன்று எல்லாப் பக்கங்களிலும் இருந்து ராஜா குறித்து பேச வைத்து விட்டார்.

வைரமுத்து வார்த்தைகள் கவனமாகக் கோர்க்கப்பட்ட மாலை போல இருந்தது. அவர் சொல்ல வந்த விசயத்தை அமைதியாகவே தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் தன் மொழி ஆளுமையின் கீழ் தெளிவாகவே எடுத்து வைத்தார். நிச்சயம் விவாதமாக மாறும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் காத்திருந்தவர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் இரண்டு பக்க எதிர்வினைகள் தேவை என்றே கருதுகின்றேன். ஆனால் அது பேச்சின் மூலம் வராமல் எழுத்தின் வாயிலாகவே வந்து இருக்க வேண்டும். நிச்சயம் நிதானம் கிடைத்து இருக்கும். கட்டுரை வந்த தினசரியில் ராஜா தன் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்து இருக்க வேண்டும். இது குறித்து இப்போது சிங்கப்பூரில் இருக்கும் சுப. வீரபாண்டியன் அவர்களின் பேச்சு மிக மிக அற்புதமாக இருந்தது. பேச்சாளர்கள் ஒவ்வொருவரும் மேடையில் எப்படிப் பேச வேண்டும் என்பதனை தற்போது சுப. வீரபாண்டியன் அவர்களிடம் இருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒருவரின் கொள்கைகள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சொல்லும் விதம் முக்கியம். அதனை விடப் பயன்படுத்தும் வார்த்தைகள் மிக முக்கியம். 

வளர்ந்து கொண்டேயிருக்கும் உலகில், மாறிக் கொண்டேயிருக்கும் வாழ்க்கை முறையில் ஒவ்வொன்றையும் மறு சீராய்வு செய்யும் போது தான் மாற்றங்கள் உள்ளே வரும். மாற்றங்களை ஏற்காவிட்டால் மொழி வளராது. மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தனி மனித வாழ்க்கை கூட சாக்கடை போல தேங்கி விடும் ஆபத்துள்ளது.

இங்கே புனிதம் ஒன்று இருக்கின்றதாக நம்ப வைக்கப்படுகின்றது. ஆனால் என் அனுபவத்தில் ஒவ்வொன்றையும் புனிதமா? புனிதமற்றதா? என்பதனை ஒவ்வொரு தனிமனிதனின் சந்தர்ப்ப சூழ்நிலைகள் தான் தீர்மானிக்கின்றது.

கடவுள், மதம், நம்பிக்கைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக் கொண்டே தான் வந்து கொண்டு இருக்கின்றது. மாற்றம் ஒன்று தான் மனித வாழ்க்கையில் முன்னேற்றத்தை நிகழ்த்திக் காட்டியுள்ளது. ஆனாலும் நிலையாமை என்பது மனித வாழ்க்கையில் முக்கியமானது. மாற்ற முடியாதது.

"ஏம்பா அவரா கொலையைச் செய்தார்?" என்று வியப்புடன் ஒரு செய்தி உங்களை வந்து சேர்ந்தால் சம்மந்தப்பட்ட வெளியே வாழ்ந்த வாழ்க்கையைப் போல அவருக்கென்று உள்ளே ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கின்றார். ஆனால் அதனை வெளியே தெரியாதவாறு அல்லது காட்டிக் கொள்ளாமல் இரண்டு வாழ்க்கையாக வாழ்ந்து இருக்கின்றார் என்று அர்த்தம்.

அப்படித்தான் கலைஞர்களும், அரசியல்வாதிகளும். 

இவர்கள் வாழ்நாள் முழுக்க இரட்டை வாழ்க்கை வாழ வரம் பெற்று வாழ வந்தவர்கள். ஒழுக்கத்தை, புனிதத்தைப் போதிப்பவர்கள் ஒரு நாளும் ஒழுக்க சீலராக வாழ்ந்ததாக எந்த வரலாறும் சொல்லவில்லை. உச்சகட்ட அயோக்கியத்தனங்கள் செய்தவன் தான் குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு மனம் மாறித் திருந்தி ஆன்மீகவாதியாக உருவெடுக்கின்றான். சரணாகதி என்ற நிலைக்கு மாறி விடுகின்றான்.

வாழ்க்கையின் முடிவின் எல்லைக்கு வந்து விட்டோம் என்ற பயம் உருவாகும் போது நாம் வைத்திருந்த கொள்கைகள் அனைத்தும் நம்மை விட்டு செல்லத் தொடங்கும்.

முழுமையாகக் கொள்கைகள் இல்லாமல் உயிர் பிழைத்து இருப்பது என்ற நிலைக்கு வந்து விட்டால் சாவு மிக அருகில் உள்ளது என்று அர்த்தம்.

இது ராஜாவுக்குத் தெரியுமா? என்று தெரியவில்லை. ஆனால் வைரமுத்துவின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படியிருந்தாலும் அவரால் தமிழ் மொழி வளர்ந்துள்ளது. உலகம் முழுக்க பரவியுள்ளது. தமிழைத் தாய் மொழியாகக் கொண்டு வெளிநாட்டில் வாழ்பவர்களின் வாயில் தமிழ்ப்பாடல் இன்னமும் உச்சரிப்பதற்குக் காரணங்களில் வைரமுத்துவும் ஒருவராக இருப்பார்.

ஆனால் ராஜா போல மதக்காப்பாளர்களை இந்தப் பூமி பலரையும் பார்த்து விட்டது. எவர் பெயரும் இங்கே நிலைக்கவில்லை. மதம் இது இயல்பான போக்கில், வாழ்நிலை, சூழ்நிலை பொறுத்து மாற்றம் பெற்று வளர்ந்து, வீழ்ந்து, தன்னை இளக்கிக் கொண்டு, மாறிக் கொண்டே தன் பயணத்தை இன்னமும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது. மதங்களை வளர்க்கத் தனி மனிதர்கள் தேவையில்லை. காரணம் மதம், கடவுள், நம்பிக்கைகள் என்பது அவரவர் மனம் சார்ந்தது.

எந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் மனத்தை அளக்க முடிகின்றது? அப்படி ஒரு கருவி இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா?

ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசியதற்கு எதிர்வினையாகப் பேசிய மற்றவர்களின் பேச்சை விட இந்தக் காணொலியில் பாரதிராஜா பேசியது பிடித்து இருந்தது. அதனை விட அவர் இன்னமும் பக்கத்தைத் திருப்ப எச்சில் தொட்டு திருப்பும் பழக்கத்தை விடாமல் வைத்திருப்பது முக்கியமாகத் தெரிந்தது. 😀


https://www.youtube.com/watch?v=g0yRmQcGrBE

https://www.youtube.com/watch?v=P_Yx83fmJvM

https://www.youtube.com/watch?v=aGzIrdFhBHY

5 comments:

Unknown said...

good analysis

தி.தமிழ் இளங்கோ said...

ஜாதி, மதம், அரசியல் என்றாலே கருத்துகள் சொல்ல யோசிக்கும் இந்த கால கட்டத்தில், உங்கள் பார்வையை வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறீர்கள்.

Rathnavel Natarajan said...

மேலும் சில குறிப்புகள் 6 - எனது பக்கத்தில் பகிர்கிறேன்.

நன்றி திரு ஜோதிஜி.

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களது அலசல் அருமை ஐயா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மனதை அளக்கவே முடியாது.