Saturday, November 02, 2013

தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கின்றார்

"வீடு ரொம்ப நல்லா இருக்குடா" என்றார்.

அம்மா முதல் முறையாக வீட்டுக்கு வந்த போது சொன்ன வார்த்தைகளை விட அவரை திருப்பூருக்கு அழைத்து வந்ததே பெரிய சாதனையாக எனக்குத் தெரிந்தது.  

புதிய கார் எடுத்த ஒரு மாதத்தில் கட்டாயப்படுத்தி அழைத்து வந்தேன். ஊரிலிருந்து ஆறு மணி நேர பயணத்தில் வீட்டில் கொண்டு வந்து நிறுத்திய போது பயந்தபடி அவரின் கால் வீங்கவில்லை. காருக்குள் அளவாக வைத்திருந்த குளிர்சாதன வசதியால் பயண அலுப்பு கூட தெரியவில்லை. 

மகிழ்ச்சியுடன் வீட்டுக்குள் நுழைந்தவர் "கார் நல்லா ஓட்டுறாண்டி" என்று மனைவியுடன் பேசிக் கொண்டிருந்த போது எனக்கு சற்று நம்பிக்கை வந்தது. நிச்சயம் சில மாதங்கள் இங்கே இருப்பார் என்றே நம்பினேன்?.

அம்மா வந்த போது குழந்தைகள் பாலர் பள்ளியை முடித்திருந்தார்கள். வீட்டுக்குள்  சுவற்றுக்குள் மாட்டியிருந்த பலவிதமான அட்டைகளை வினோதமாக பார்த்துக் கொண்டிருந்தார். எண்கள், எழுத்துக்கள், படங்கள் என குழந்தைகளின்    கல்வி ஆர்வத்தை வளர்க்க ஒவ்வொன்றாக வாங்கி மாட்டி வைத்திருந்தேன். பலவிதமான கல்வி சார்ந்த பொம்மைகள் வீடு முழுக்க இருந்தன. ஆர்வமாய் ஒவ்வொன்றையும் பார்த்தவர், "இப்படியெல்லாம் தான் நீங்க படிச்சீங்களா?" என்று கேட்டு சிரித்தார்.

இது தவிர அவர்களின் கல்விக்கென வேறெந்த பெரிதான முயற்சியையும் செய்யவில்லை. அதிகாலைப் பொழுதில் குளிக்க உதவும் போது அவர்களுடன் பேசுவதைத் தவிர வேறெந்த சமயமும் வாய்ப்பதில்லை. பள்ளி முடியும் சமயத்தில் அவசரமாகச் சென்று அழைத்து வீட்டில் விடுவதோடு என் கடமை முடிந்து விடும்

அலுவலகம் முடிந்து நள்ளிரவில் வீட்டுக்குள் நுழையும் பொழுது தூங்கிக் கொண்டிருப்பார்கள். எனக்கும் குழந்தைகளுக்கும் உண்டான உறவும், உரையாடலும் மிகக் குறைவாகவே இருந்தது. இதன் விபரீதம் அம்மா வந்த பொழுது, அவர் குழந்தைகளுடன் உரையாடும் சமயங்களில் தான் எனக்கு முழுமையாக புரிந்தது.

அம்மாவின் திருமண வாழ்க்கைக்குப் பிறகு அவர் காசி பயணத்தைத் தவிர வெளியுலகத்தை பார்த்த தருணங்கள் மிக மிக குறைவு. மிகப் பெரிய கூட்டுக்குடித்தனத்தின் அச்சாணியே அவர் தான். நாள் முழுக்க உழைப்பு. அந்த உழைப்பு மட்டுமே குடும்பத்தின் ஆதாரமாக இருந்தது. அவர் உடம்பும் எண்ணமும் உழைப்பதற்கென்றே மாறிப் போன காரணத்தால் பக்கத்து ஊர்கள் குறித்து கூட தெரிந்து கொள்ள ஆர்வமின்றி நாற்பதாண்டு காலத்தை கழித்தவர். 

அவருக்கும் பயணம் என்றால் பயம் பிடிக்கும் சமாச்சாரம். கனத்த உடம்பு படுத்தி எடுப்பதால் ஆசைகள் இருந்தாலும் அவரின் உடம்பு ஒத்துழைப்பதில்லை. வெளியுலகம் என்பதே அப்பாவின் மறைவுக்குப் பிறகே அவருக்கு வாய்த்த காரணத்தால் ஒரு படபடப்பு அவருக்குள் இருந்து கொண்டேயிருக்கும்.

சாலையில் படபடக்கும் வாகனங்கள் கூட அவருக்கு பயத்தை தருகின்ற சூழ்நிலையில் வாழ்ந்த காரணத்தால்  கவனமாக காரில் அழைத்து வந்தேன். ஒருவரின் மாற்ற முடியாத விசயங்களை அப்படியே மாற்றாமல் நாம் ஏற்றுக் கொள்வதும் ஒரு வகையில் நல்லது தானே. ஆனால் அம்மாவிடம் மாறாத கொள்கை ஒன்று உண்டு. 

"பெண்ணாய் பிறக்கக்கூடாது. பெண் குழந்தைகள் என்றால் ஆகாது". 

காரணம் அவரின் துயரக்கதை சீனப் பெருஞ்சுவற்றை நீளமானது உயரமானதும் கூட.  கஷ்டப்படுவதற்கென்ற பிறப்பெடுப்பவர்கள் பெண்கள் என்ற கொள்கையை இன்று வரையிலும் அவர் மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை.

நான் இதனை உணர்ந்திருந்த போதிலும் பேத்திகளை விட்டுக் கொடுக்க மாட்டார் என்று நினைத்தே  அழைத்து வந்தேன். குழந்தைகள் பிறந்த போது பார்த்த முகத்தை பல வருடங்கள் கழித்து பார்த்த போது குழந்தைகளின் தோற்றத்தில் சொக்கிப் போனார். 

புது முகத்தைப் பார்த்த இருவர் விலகி நின்ற போது ஒருவர் மட்டும் எளிதாக ஒட்டிக் கொள்ள, தொடர்ந்து வந்த நாட்களில் அவர்களும் ஒன்றிப்போக இயல்பாகத்தான் போனது.  பல சமயம் விடுமுறை தினங்களில் பாட்டி பேத்திகளின் உரையாடல்களை பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தாலும் அலுவலகச் சுமையின் காரணமாக வீட்டில் இருக்க வாய்ப்புகள் அமையாது.

அந்த பெரிய வீட்டின் மற்ற இடங்களையும் விட வாசலில் அமர்ந்திருப்பதே அம்மாவுக்கு பிடிக்கும். 

வீட்டுக்கு வெளியே இருந்த பெரிய வேப்ப மரக் காற்றின் சுகமே அவருக்குப் போதுமானதாக இருந்தது. வாசலின் குறுக்கே  காலை நீட்டிக் கொண்டு வெற்றிலைப் பையை பிரித்து வைத்துக் கொண்டு மெல்லுவதும் எச்சிலை அருகே உள்ளே தோட்டத்து மண்ணில் துப்பிக்கொண்டிருப்பதும், தெருவில் செல்லும் ஆட்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் அன்றாட வாடிக்கையாக இருந்தது.

இங்கிருந்து தான் பிரச்சனை தொடங்கியது.

உள்ளே விளையாடிக்கொண்டிருக்கும் குழ்ந்தைகள் கத்திக் கொண்டே வாசலை நோக்கி ஓடி வர, விரட்டிக் கொண்டே வருபவர் வெளிப்புற சந்தின் வழியே வாசலுக்கு வர காலை நீட்டிக் கொண்டிருக்கும் அம்மாவுக்கு ஒவ்வொரு முறையும் காலை மடக்குவதும், மீண்டும் நீட்டுவதுமென புதிய வேலையை உருவாக்கத் தொடங்கினர்.  முட்டி வலியும், முதுகு வலியையும் நிரந்தரமாக இருந்தவரால் தாக்கு பிடிக்க முடியவில்லை. 

எரிச்சலை உருவாக்கினாலும் அவரால் வேறொரு இடத்தை தேர்ந்தெடுத்து உட்கார மனமில்லாது கத்தத் தொடங்கினார். இதற்கு மேலாக அவருக்கு பேச்சுத் துணைக்கு ஆட்கள் இல்லை. பக்கத்து வீடுகளில் இருந்தவர்களின் நாகரிக பேச்சும், கொங்கு பாஷையும் வினோதமாகத் தெரிய அதையும் விரும்பாமல் வானத்தை வெறிக்கத் தொடங்கினார்.

நாற்பது வயதுக்கு மேல் நாய்ப்புத்தி என்பதைப் போல அறுபது வயதை மீண்டும் குழந்தையாக மாறும் தருணம் என்கிறார்கள். விதிவிலக்குகளைத் தவிர்த்து நாற்பது வயதிற்குள் தனக்கான இடத்தை அடையாதவர்களின் வாழ்க்கையென்பது இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமலும், அலைவதை குறைத்துக் கொள்ள முடியாமல் அவஸ்த்தைகளின் தொடக்கம் ஆரம்பித்து விடுகின்றது.  

உடல் ஆரோக்கியத்தின் சவாலும் இந்த வயதிலிருந்தே தொடங்குகின்றது. 

இதுவே அறுபது வயதில் கண் பார்வை குறைந்து, செவிப்புலன் திறன் இழந்து எரிச்சலையும் ஏக்கத்தையும் இயல்பான குணமாக மாற்றி விடுகின்றது. இயல்பான விசயங்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களை பார்க்கும் பொழுது எரிச்சல் உருவாகும். மனஉளைச்சல் அதிகமாகும். தலைமுறை இடைவெளி பூதாகரமாக உருவாகும். 

இந்த வயதில் தான் ருசியை மட்டுமே உணவாக வைத்து வாழ்ந்தவர்களின் வாழ்க்கையில் வாய்க்கும் வயிற்றுக்கும் மிகப் பெரிய போராட்டமே தொடங்குகின்றது. 

ருசி தான் வேண்டும் என்ற மனமும் இதெல்லாம் இனி ஆகாது என்று வயிறும் சண்டை போட வாழ்வே நரகமாக மாற வாரிசுகள் மீதுள்ள அன்பு கூட பலசமயம் மாறிவிடுகின்றது.

சிலர் பழக்கத்தினால் தங்களை மாற்றிக் கொண்டு விடுகின்றார்கள்.  பலர் தங்கள் வாழ்க்கையை கழிவிரக்கமாக மாற்றி வைத்துக் கொண்டு உடனிருப்பவர்களை படுத்தி எடுக்கத் தொடங்கி விடுகின்றார்கள். இதற்கு மேலாக வயதானவர்களுடன் உரையாடும் தொடர்பு மொழி முக்கியமானது. அவர்களுக்கு பிடித்த அவர்கள் விரும்பும் நிலையில் இருந்து பொறுமையுடன் உரையாட வேண்டும். பலராலும் இது முடிவதில்லை.

ஒரு சமயம் "அப்பத்தா இதைக் கேளுங்க" என்று மகள் ஒரு அட்டையை எடுத்துக் கொண்டு அவர் அருகே சென்ற போது அம்மாவில் விலகல் என்னை கூர்மையாக கவனிக்க வைத்தது.  மனைவியிடம் கேட்ட போது "இவங்க பேசுறது அவங்களுக்கு புரியலையாம்" என்றார்.

எங்கேயிருந்து இந்த குழப்பம்? என்று ஆராயத் தொடங்கினேன். 

குழந்தைகள் பள்ளிக்கு சென்றார்களே தவிர அவர்களின் கல்வி குறித்தோ, அவர்களின் மற்ற செயல்பாடுகள் குறித்தோ அதிகம் கவலைப்பட்டுக் கொண்டதில்லை. குறிப்பாக தனித்தீவாக ஒதுங்கி போனதால் உறவுகள் கூட வருடத்துக்கு ஒரு முறை என்கிற ரீதியில் இருந்த காரணத்தால் வீடே வாழ்க்கை பள்ளிக்கூடமே உலகம் என்பதாக வளர்ந்து கொண்டிருந்தார்கள் 

தமிழை ஆங்கிலத்திற்கு இடையே பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். பள்ளி கொடுத்திருந்த கல்விச்சூழல் அவர்களை அப்படி மாற்றியிருந்தது. புதிய மொழியும் அவர்களின் பழக்க வழக்கங்களும் அம்மாவிற்கு அதிக குழப்பத்தை உருவாக்கியிருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.

எல்லாமே சின்னச் சின்ன விசயங்கள் தான். அதுவே ஒவ்வொரு முறையும் வினோதமான பிரச்சனைகளை உருவாக்கியது.  

இன்று உள்ளூரில் வேலைவாய்ப்புகள் குறைந்து மாவட்டங்கள்,. மாநிலங்கள் தாண்டி பல்வேறு நாடுகளில் வாழ வேண்டிய சூழ்நிலையில் உறவுகளுக்குண்டான மரியாதை என்பது தற்போது சில நிமிட தொலைபேசி அழைப்புகள் தான் உயிர்ப்புடன் வைத்துள்ளது. இந்த தொடர்பில் தொடர்பு மொழியே பிரச்சனை எனில் அங்கே அந்த சங்கிலியும் அறுபடத் தொடங்குகின்றது.

வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு இந்த மொழித் தொடர்பு பிரச்சனை என்றால் தற்போது இங்கே உள்ள கல்விச்சூழல் என்பது வினோத கலாச்சாரத்தை வளர்த்துக் கொண்டிருப்பதால் மொழியின் தன்மை மாறிக் கொண்டேயிருக்கின்றது.

குழந்தைகள் வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.  சிறுநீர் கழிக்கும் அவசரத்தில் அப்பத்தா ஒன் பாத் ரூம் என்று கத்திக் கொண்டே ஒடிவர இவர் குழப்பத்துடன் என்னவென்று அறியாமல் வாசலுக்கு அருகே படுத்து இருப்பார்.  எந்திரிக்காமலே தலையைத் தூக்கி பார்ப்பார். கவுனை தூக்கிக் கொண்டு அவர்கள் வரும் வேகத்தைப் பார்த்து வேகமாக எந்திரிக்க, வந்த வேகத்தில் ஒருவருடன் ஒருவர் முட்டிக் கொள்ள ரசபாசமாகத் காட்சிகள் மாறிவிடும்.   

பொழுது போகாத சமயத்தில் குழந்தைகளை அழைத்து பேசத் தொடங்குவார். 

அவர் கேட்கும் கேள்விக்கு இவர்களுக்குத் தெரியாது. இவர்கள் சொல்லும் பதில்கள் அவருக்கு புரியாது. ராஜா கதை சொல்லும் போது குறுக்கே ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக குறுக்கு கேள்விகள் எழுப்ப அவருக்கு குழப்பம் வந்துவிடும். அவர் ஒதுங்கி விடுவார். கடைசியாக இவர்கள் நாங்க உங்களுக்கு ரைம்ஸ் சொல்லட்டுமா என்பார்கள்.  பேந்த பேந்த முழித்துக் கொண்டு கேட்பார்.   மொழி புரியாது. சுவராசியம் இருக்காது. 

"ஏதாவது கதை சொல்லுங்க அப்பத்தா" என்றால் இவர் சொல்லும் வட்டார வழக்குத் தமிழ் வார்த்தைகள் அவர்களுக்குப் புரியாமல் அது குறித்து அப்டின்னா? என்று தொடர் கேள்விகளை எழுப்ப அம்மாவுக்கு அலுப்பாகி விடும்.

இரண்டு மாதம் இருக்கின்றேன் என்று சொல்லிவிட்டு வந்தவர் ஒரு மாதத்தில் சென்று விட்டார்.  

மனைவி மூலம் விசயங்களை புரிந்து கொண்டு உறவுச்சங்கிலிகள் உடையும் விதங்களைப் பற்றி யோசிக்கத் தொடங்கினேன்.  அதற்கான பதில் அம்மாவை கொண்டு போய் விட்ட தம்பி வீட்டில் எனக்கு கிடைத்தது.

அம்மாவிடம் தம்பி மகன் வேகமாக வந்து "ஏய் கிழவி கீழே படு" என்றான்.

அம்மா டக்கென்று மல்லாக்க படுக்க நெஞ்சில் ஏறி தொம் தொம்ன்று குதிக்க எனக்கு பாதி உயிர் வாயில் வந்து நின்று விட்டது.  அம்மா சிரித்துக் கொண்டே "இருடா குப்புற படுக்குறேன்" என்று சொல்லிவிட அவன் ஆட்டம் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

கால்வலி, முதுகுவலி, பயணஅலுப்பு மீறி அவரின் நெருக்கமும், பேரனின் வார்த்தைகளும் அவருக்கு புதிய உற்சாகத்தை தந்ததை கவனித்துக் கொண்டே அவர்களின் உரையாடலை கவனித்துக் கொண்டே சில மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கூட நண்பனுடன் பேசியது அப்போது என் நினைவில் வந்து போனது. 

நண்பனின் அண்ணன் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்று இருக்கின்றார். தொடக்கத்தில் ஊருக்கு வருடத்திற்கொருமுறை வந்து கொண்டிருந்தார். கடந்த சிலவருடங்களாக வருவதில்லை.

அவனை சந்ததித்த போது "அண்ணன் வீட்டுக்கு வருவதில்லையா?" என்று கேட்டேன்.

"அம்மா வேண்டாம் என்று சொல்லிவிட்டார்" என்றான்.

காரணம் பேரனுக்கும் பேத்திக்கும் தாத்தா பாட்டியுடன் உரையாட தமிழ்பேச தெரியவில்லை. இவர்களுக்கு அவர்கள் பேசும் ஆங்கிலத்தை புரிந்து கொள்ளத் தெரியவில்லை.  

தொடர்புடைய பதிவுகள்




தீபாவளியை குழந்தைகளுக்காக குடும்பத்திற்காக கொண்டாடியவர்களுக்கும், வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள். (02.11.2013)

29 comments:

saidaiazeez.blogspot.in said...

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை புரிந்துகொண்டால் பிரச்சனைகள் இல்லை.
என்றாலும் இந்தமாதிரி த்ருணத்தில் அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ "இடை தலைமுறையே"
பெற்றோரையும் குறை கூறமுடியாது
பெறப்பட்டவரையும் கடிந்துகொள்ள முடியாது
மத்தளம் மாதிரிதான் முழி பிதிங்கி... பாவம்!

தீமைகளை கொன்று நன்மைகளை நிலைநாட்டி வாழ தீபாவளி வாழ்த்துக்கள்

Kathasiriyar said...

கடந்த 10வருட வளர்ச்சியில் நாம் பல தலைமுறை இடைவெளிகளை ஏற்படுத்திக்கொண்டுவிட்டோம். அதன் வலிகள் தற்போது 60 வயதை கடந்தவர்களை வாட்டி எடுக்கிறது என்பது உண்மை.

Unknown said...

எண்பது வயதைத் தாண்டிவிட்ட எனக்கு இந்த பிரச்சனை இல்லை! கால மற்றத்திற்கேற்ப
வாழ நான் பழகிக் கொண்டேன்! ஆனால் அந்த காலத்தில் என் பெற்றோரை அழைத்து வந்த போது தங்கள் நிலையே எனகும் ஏற்பட்டது !

திண்டுக்கல் தனபாலன் said...

வேறு வழியில்லை... இந்த 'நவீன' உலகத்தில் அனைத்தையும் சமாளிக்க வேண்டும்...

இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

Amudhavan said...

கூர்மையான பார்வை என்பது ஒருபுறம் இருக்க, கொஞ்சம்கூட ஒளிவு மறைவில்லாமல் மனதில் பட்டதை விவரிக்கிறீர்கள் பாருங்கள் அந்த நேர்மை அருமை. வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்குமான இடைவெளி என்பது எந்தெந்த தளங்களில் எப்படி எப்படியெல்லாம் வேறுபடுகிறது என்பதை மிக அழகாகச் சொல்லிச் செல்கிறீர்கள்.
எல்லாருமே ஒவ்வொருவர் பார்வையில் தொடர்பு எல்லைக்கு வெளியேதான் நிற்கிறோம் என்றே படுகிறது.

தி.தமிழ் இளங்கோ said...

// "பெண்ணாய் பிறக்கக்கூடாது. பெண் குழந்தைகள் என்றால் ஆகாது". காரணம் அவரின் துயரக்கதை சீனப் பெருஞ்சுவற்றை நீளமானது உயரமானதும் கூட. கஷ்டப்படுவதற்கென்ற பிறப்பெடுப்பவர்கள் பெண்கள் என்ற கொள்கையை இன்று வரையிலும் அவர் மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை.//

பெண்கள் படும் கஷ்டத்தை, நாம் பட்டிமன்ற மேடைகளிலும், சேனல்களிலும். வலைத்தள்ங்களிலும் அழுத்திச் சொல்வதை அம்மா அமைதியாக அனுபவத்தில் சொல்லி விட்டார்

எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

அது ஒரு கனாக் காலம் said...

நல்ல அனுபவ பதிவு, என் அம்மா காலமாகி பல வருடங்கள் ஆகி விட்டது, என் மகளின் மற்றும் என் மாமியாரின் வார்த்தை பரிமாற்றங்களும் அப்படியே , மகள் ஆங்கிலம் , மற்றும் மலையாளம் தான், தமிழ் அவ்வளவாக கிடையாது. ... இருந்தாலும் அவர்கள் பேசுவது அருமை .

Avargal Unmaigal said...

விஷயங்களை உள்வாங்கி மிக எளிமையாக எடுத்து சொல்லும் உங்கள் திறமை வியக்க வைக்கிறது பாராட்டுக்கள்

எஸ் சம்பத் said...

"விஷயங்களை உள்வாங்கி மிக எளிமையாக எடுத்து சொல்லும் உங்கள் திறமை வியக்க வைக்கிறது பாராட்டுக்கள்"

இந்த இரண்டு வரிகள்தான் மிகச்சரியான விமா்சனம். நான் இன்று பழைய போட்டோ குப்பைகளை கிளறி 1964 அல்லது 65ல் எடுத்த என் தாத்தா- பாட்டியுடன்- அந்த கால கூட்டுக்குடும்ப போட்டோவை முகனூலில் பகிர்ந்த நேரம் இந்த பதிவினை படிக்க கொடுத்தது மிகப் பொருத்தமாக இருந்தது. மகன் வழிப் பேரனில் தலைமைப் பேரன் நான், எனக்கு பிறகு தங்கை, (சித்தப்பா வழி)தம்பிகள் அனைவருமே எங்கள் பாட்டியுடன் மிக நட்பாக இணக்கமாக இருந்திருக்கிறோம். என் 11 வயதில் பெற்றோருடன் திண்டுக்கல் சென்றுவிட்டதால்- விடுப்பிற்கு பாட்டி வீடு வரும் போதெல்லாம்- பாட்டியோடு பல விசயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மொழி ஒரு முக்கியமான இணக்கமாக இருந்திருக்கிறது.

காலச் சுழற்சியில் உறவுகளின் மேன்மை, நெருக்கம் தேவை என பலரும் உணரும் இந்த தருணத்தில் உங்களின் தாயன்பு பதிவு சிறப்பாக இருந்தது.

Zubair siraji said...

ஒருவரின் மாற்ற முடியாத விசயங்களை அப்படியே மாற்றாமல் நாம் ஏற்றுக் கொள்வதும் ஒரு வகையில் நல்லது தானே
அருமையான வரி .ஆனால் , வாழ்க்கையில் கொண்டு வருவது சவாலானது .
பதிவின் கோர்வை மிக அழகு .தொடர்ந்து இது போல் எழுத வாழ்த்துக்கள் .

சேக்காளி said...

நல்லதொரு பதிவு.என்ன செய்ய , தொலைக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டே தடுக்காமலிருக்கிறோம்.

”தளிர் சுரேஷ்” said...

உண்மைதான் தலைமுறை இடைவெளி உறவுகளை சில சமயம் பிரித்து வைக்கத்தான் செய்கிறது! அருமையான பகிர்வு! நன்றி!

ஜீவன் சுப்பு said...

//ஒருவரின் மாற்ற முடியாத விசயங்களை அப்படியே மாற்றாமல் நாம் ஏற்றுக் கொள்வதும் ஒரு வகையில் நல்லது தானே.// கரெக்ட் ...!

ஒருவரிடமிருந்து ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்குற ஆர்வமும் , புரிஞ்சுக்குற ஆர்வமும் , பொறுமையும் இப்பொழுது குறைந்துவிட்டது . அது ஆறு வயது குழந்தையானாலும் சரி அறுபது வயது குழந்தையானாலும் சரி .

ஜோதிஜி said...

கடைசி வரி மிகவும் சரியானது.

ஜோதிஜி said...

நன்றி சுரேஷ்

ஜோதிஜி said...

அழகான விமர்சனம். நன்றி சேக்காளி.

ஜோதிஜி said...

வாழ்க்கையில் கொண்டு வருவது சவாலானது

உண்மை தான். எழுதும் போது எளிதாகவே உள்ளது. எதார்த்தம் சற்று கடினமாகத்தான் உள்ளது.

ஜோதிஜி said...

தெளிவான விமர்சனத்திற்கு நன்றி சம்பத்

ஜோதிஜி said...

நன்றி நண்பரே.

ஜோதிஜி said...

நீண்ட நாளைக்குப் பிறகு எப்படியோ உங்களை விமர்சனம் எழுத வைத்து விட்டேன் பார்த்தீர்களா? நன்றி சுந்தர்.

ஜோதிஜி said...

உங்களின் இரண்டு (பதிவுகளில் வந்த) வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க.

ஜோதிஜி said...

உங்கள் வாசிப்பனுபவம் என்னை ஒவ்வொரு முறையும் வியக்க வைக்கின்றது. தொடர் வருகைக்கு மிக்க நன்றி.

ஜோதிஜி said...

நன்றி தனபாலன்.

ஜோதிஜி said...

வருகைக்கு நன்றி அய்யா. நானும் பழகிக் கொண்டு இருக்கின்றேன்.

ஜோதிஜி said...

கடந்த பத்து வருட இந்தியாவில் நடந்துள்ள வளர்ச்சி என்பது அடுத்த இருபது வருடத்திற்குண்டான வளர்ச்சி என்று நண்பர் சொல்வார்.

கதாசிரியர். பெயரே வித்தியாசமாக உள்ளதே.

வருகைக்கு நன்றி.

ஜோதிஜி said...

நன்றி அஜீஸ்.

மொத்தத்தில் நம்மைப் போன்றவர்கள் பாவம் தானே.

vishwa said...

+1

cidseetha said...

தங்களின் கட்டுரை என் தாய் நினைவு வந்தது அந்த கால அம்மாக்கள் உழைக்காமல் இருந்ததில்லை சும்மாவே இருக்கமாட்டர்கள் இன்று கூட வந்தால் சும்மாவே இருக்கமாட்டர்கள் தாய் இல்லாத வேதனை நன்றகவே உணர்கிறேன்

ezhil said...

மொழிகள் புரிந்தாலும் ரசனைகள் மாறுபடுவதால் பகிர்தல் குறைந்து விடுகிறது எப்படிச் சரி செய்யலாம் நீங்கள் சொல்லுங்களேன். எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்