Saturday, October 06, 2012

மூச்சு விட நேரமிருக்காது. பழகிக் கொள்.


சென்னைக்குச் சென்று விடு. பிழைத்துக் கொள்வாய் என்று தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் வழியனுப்பும் விழா நடந்து கொண்டே தான் இருக்கிறது. சென்னை என்பது வாழ வைக்கும் இடம்.  

படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று தொடங்கி அத்தனை பேர்களின் பயணமும் சென்னையை போன்ற பல நகரங்களை நோக்கி நகர்ந்து கொண்டே தான் இருக்கிறது.  இன்று கிராமத்து அடிப்படை ஆதாரங்கள் மாறிவிட்டது. உடல் உழைப்பு என்பதற்கான மரியாதையை விட மூளை உழைப்பு தான் இன்று வெகுவாக விரும்பப்படுகின்றது. சீக்கிரம் பணம் பார்த்து விட வேண்டும் என்பதே தராக மந்திரமாக உருவாகி ஒவ்வொருவரையும் பெருநகரங்களை நோக்கி பயணிக்க வைத்துக் கொண்டுருக்கிறது. திருப்பூர், கோவை, சேலம், சிவகாசி போன்ற நகரங்களில் உழைப்புக்கு மட்டும் தான் மரியாதை. ஆனால் சென்னையில் மட்டும் தான் அவரவர் மனதில் வைத்துள்ள கனவுகளுக்கும் மரியாதை கிடைக்கின்றது.. இந்த கனவு பிரதேசம் அவஸ்த்தை தந்தாலும் கூட பலருக்கும் சென்னை என்பது முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது. .

திருப்பூரில் ஒரு எழுத்தாளர் தனது புத்தகத்தை வெளியிட வந்தார். அந்த விழாவில் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிகின்ற தொழிலாளி ஒருவர் வரிசையாக தான் எழுதி வைத்த கவிதை என்ற பெயரில் உள்ள ஒரு வஸ்துவை வாசித்துக் காட்டினார். அமர வைக்க முடியாமல் பலரும் பலரும் தடுமாற விழா முடிந்ததும் அவருடன் பேசினேன்.  "இதை இன்னமும் தெளிவாக்கி இன்னும் சிறப்பாக முயற்சிக்கலாமே?" என்றேன்,

யோசிக்காமல் சட்டென்று பேசினார்.

"ஆமா சார்... இந்த வேலையை விட்டுட்டு சென்னைக்கு போயிடலாம்ன்னு நினைக்கிறேன்"  என்றார்.. ஏன்? என்ற போது "அங்கே போனாத்தான் நம்ம திறமைகள் வெளியே வரும்" என்கிறார். 

ஆக திறமைசாலிகளுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு சென்னை என்ற ஒரு ஊர் மட்டும் தான் போலிருக்கு.

ஆசைகள் அதிகமாகும் போது கூடவே நம்பிக்கை வேர் பிடிக்கத் தொடங்குகின்றது. காய், கனியாவது அவரவர் உழைப்பு. இது ஜெயித்தவர்களுக்கான உலகம்.  முயற்சி செய்து கொண்டுருக்கேன் என்பீர்களேயானால் உங்களுக்கான வரிசை பின்னால் உள்ளது என்று அர்த்தம்.  ஜெயித்து விட்டு வா? அப்புறம் முன்னால் வந்து அமர் என்று தயவு தாட்சண்யம் இல்லாமல் கத்தரித்து பேசுபவர்களின் மத்தியில் நாம் சுதாரித்து நின்று பழக வேண்டும்.

கனவுகளுடன் ஆசைகளை மனதில் நிரம்பவே வைத்துக் கொண்டு வாழும் கூட்டத்தால் சென்னை நிரம்பி வழிகின்றது. அத்தனை பேர்களுக்கும் இந்த சென்னை வா...வா.... என்று வரவேற்பு அளித்துக் கொண்டேதான் இருக்கிறது. 

தங்க முடியுமா? வாழ முடியுமா? என்பது போன்ற அவ்சியமான கேள்விகளை கேட்டுக்கொள்ளாமல் நினைத்தவுடன் பயணித்து கரையை தேடுபவர்களாகத்தான பலரும் இருக்கிறார்கள். முறைப்படியான பயிற்சி, முறையான கல்வி என்பதுடன் அடியெடுத்து வைக்கும் கூட்டத்தைவிட ஆசைகளை மட்டும் வைத்துக் கொண்டு பயணித்து வந்தவர்கள் தான் அதிகம். அல்லாட்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருப்பவர்களைப் பற்றித்தான் அதிகம் யோசித்தேன்..

திருப்பூரில் நண்பருடன் பேசிக் கொண்டுருந்த போது "நான் இன்னமும் சென்னைக்கு உள்ளே சென்றதில்லை" என்றார்.  "ரயில் மாறுவதற்காக சென்ட்ரலில் உள்ளே சென்றதுடன் அவ்வளவுதான்" என்றார்.  மனதிற்குள் வியப்பு மேலிட்டது. 

கிராமத்துவாசிகளில் பாதிப் பேருக்கு சென்னை என்பது இன்று வரைக்கும் அந்த அளவுக்கு முக்கியத்துவம் இல்லாத ஊர். வாழும் ஊரிலே வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்பும் அவர்களுக்கு சென்னையின் சொல்லி மாளமுடியாத கவர்ச்சிகள் அவர்களிடம் எடுபடவில்லை என்பதை பலருடன் பேசிய போது புரிந்து கொள்ள முடிந்தது. என்னுடன் உடன்பிறந்த பலரும் ஏதோவொரு விசேடம் என்றால் போய் தலையை காட்டிவிட்டு ஓடி வந்து விடும் பட்டியலில் இருப்பவர்கள் தான்.  சென்னை என்றால் அலர்ஜி என்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டுள்ளேன்.

நானும் சென்னையில் ஒரு வருடத்திற்கு மேல் வாழ்ந்துள்ளேன். பிழைக்க வழி தேடி செல்லவில்லை.  வீட்டிலிருந்து தப்பிக்க வேறு வழி தெரியாமல் நண்பன் அழைப்பை ஏற்று சென்றவனுக்கு சென்னை ஒரு வாழ்க்கை தந்தது.  தோல் சம்மந்தமான ஏற்றுமதி அலுவலகத்தில் ஒரு வருடம் பணிபுரிந்துள்ளேன்.

ஒரு அதிகாலை வேலையில் ஆம்னி பேரூந்தில் சென்று எழும்பூரில் இறங்கி அவனுக்காக காத்திருந்த போது எந்த எண்ணமும் மனதில் தோன்றவில்லை. பெரிதான ஆர்வங்கள் இல்லை. விடுதலை தான் தேவையாக இருந்தது. சென்னை ஏற்கனவே மனதளவில் நன்றாக அறிமுகமாகி இருந்தது. படித்த கதைகள், கட்டுரைகளின் மூலம் ஒரு கனவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருந்த எனக்கு சென்னை ஆச்சரியங்கள் பெரிதான அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை.  "மூன்று வாரங்கள் காத்திரு.  உன்னை அழைப்பார்கள்.  அதுவரைக்கும் தினந்தோறும் சென்னையை சுற்றிப் பார்த்துக் கொண்டுரு" என்று பணம் கொடுத்து என்னை ஒவ்வொரு இடமாக அலைய வைத்தான்.   

நான் பணிபுரிந்த ஒரு வருடமும் சென்னையில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் என் வண்டி போகாத இடமே இல்லை.  சென்னை தான் டிவிஸ் சாம்ப் தந்தது.  வண்டியே ஓட்டத் தெரியாமல் இருந்த என்னிடம் முதலாளி, உங்களுக்கு வண்டி ஓட்டத் தெரியுமா? என்றார்.  கல்லூரிக்கு வண்டியில் தான் சென்றேன் என்று அடித்து விட வண்டி வழங்கப்பட்டது.  சென்னை அண்ணாசாலையில் இருந்த சென்டிகோ ஷோரூம் அந்த புதுவண்டியை தந்தது. 

முதன்முதலாக வண்டி ஓட்டக் கற்றுக் கொண்டது நெரிசல் மிகுந்த அண்ணா சாலையில் தான்.  போக்குவரத்து விதிகள் தெரியாத போதும் ஆட்களை வைத்து அளந்து அளந்து அவர்கள் பின்னால் ஓட்டிச் சென்று வண்டியோட்ட கற்றுக் கொண்டேன்.  தங்கியருந்த இடம் ஒரு பக்கம். அலுவலகம் ஒரு பக்கம். தொழிற்சாலை ஒரு பக்கம்.  செல்லவேண்டிய வங்கிகள் என்று தினந்தோறும் ஆசை தீர அந்த அலைச்சலை அனுபவித்து வாழ்ந்தேன். பிறகு வீட்டில் இருந்து சென்னைக்கு வந்தவர்கள் நான் வண்டி ஓட்டும் லாவகத்தை வைத்து பாராட்டுப் பத்திரம் வழங்கினார்கள்.  கடைசி வரைக்கும் அவர்களிடம் ஓட்டத் தெரியாமல் மோதி பலரிடம் திட்டு வாங்கியதை சொன்னதில்லை. போக்குவரத்து காவலரிடம் நான் கொடுத்த லஞ்சத்தைப் பற்றி பேசியதும் இல்லை.

இருபது வருடங்கள் கழித்து இந்த முறை தான் சென்னையை முழுமையாக உள்வாங்க அவகாசம் கிடைத்தது.  இதற்கிடையே பல தடவைக்ள் சென்னைக்கு சென்றாலும் சென்று இறங்கி சென்று பார்த்து பரபரப்பாய் வந்து விடுவதுண்டு. அலுங்காமல் குலுங்காமல் போய்விட்டு வந்த பயணத்தில் எதையும் பார்க்கவில்லை.  எது குறித்தும் யோசிக்கக்கூட நேரமும் அமைந்ததும் இல்லை.

இந்த முறை வட்டியும் முதலுமாய் வாய்ப்பு அமைந்தது.  கிடைத்த வாய்ப்புகளை தெளிவாக பயன்படுத்திக் கொண்டேன்.  சில பகுதிகளுக்குள் மட்டும் சென்று வந்த போது என்னுள் தோன்றியது

எப்படி இங்கே நிரந்தரமாக வாழ முடியும்? இவர்களால் எப்படி வாழமுடிகின்றது?

திருமணத்திற்கு முன்னால் வாழும் வாழ்க்கையின் அரிச்சுவடிகள் அத்தனையும் திருமணத்திற்கு பிறகு மாறி விடுகின்றது. அதுவே குழந்தைகள் பிறந்த பிறகு வேறுவிதமாகவும், அவர்கள் வளர்ந்த பிறகு மொத்தமாக மாறி நம்முடைய உருவம் மட்டும் தான் உண்மையாக இருக்கிறது.  சிந்தனை, செயல்பாடுகள், நோக்கம் என்று மொத்தமாக மாறி வாழ்ந்தே ஆக வேண்டும் என்பதற்காக ஒவ்வொன்றுக்குள்ளும் பொருத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

வாழ பணம் தேவை என்பதைப் போல வாழ்க்கையை அனுபவித்து வாழவும் அவகாசம் வேண்டாமா? கத்தலும், சப்தமும், நெரிசலுமுமாய் வாழும் ஊரில் முண்டியத்து முண்டியத்து தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டிய ஒரு ஊரில் விடும் மூச்சைக்கூட பொறுமையாக விட நேரம் இருக்குமா?

தற்போது தான் திருப்பூரில் போக்குவரத்து நெரிசல் அந்த அளவுக்கு இல்லை.  ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நெரிசலுக்குள் தான் வாழ்க்கை வாழ முடிந்தது.  ஏறக்குறைய கடந்து போன பத்தாண்டுகளும் திருப்பூரும் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தான் தடுமாறியது. திருப்பூருக்குள் சுற்ற வேண்டும் என்பவர்களின் வாழ்க்கை வேறு. அலுவலக அறை சம்மந்தப்பட்ட வாழ்க்கை என்பது வேறு.

சாய்ப்பட்டறை பிரச்சனை விஸ்ரூபம் எடுக்க சாயம் போலவே இங்குள்ள வாழ்க்கையும் கலைந்து போய் பலரும் பல்வேறு பகுதிகளுக்கும் புலம் பெயரத் தொடங்கி தற்போது திருப்பூர் காத்தாடிக் கொண்டுருக்கிறது. சுவாசம் சீராகி சுகமாக இருக்க முடிகின்றது.  பணத்தேடல்களின் வாய்ப்புகள் குறையும் போது நாம் வாழும் வாழ்க்கை தேவைகளின் அளவீடுகளையும் பரிசிலீனை செய்து வாழ வேண்டியதாக இருக்கிறது.

அன்றும் இன்றும் மாறாமல் இருப்பது சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம் மட்டும் தான். மற்றபடி அத்தனை இடங்களிலும் சின்னதோ பெரிதோ ஏதோவொரு மாற்றம்.  அழகான சென்னை, சீர்மிகு சென்னை, சிங்காரச் சென்னை, சிங்கப்பூர் போல சென்னை என்று ஆட்சிக்கு வந்த ஒவ்வொருவரும் தன் அளவில் சொல்லிச் சென்ற அத்தனை வாக்குறுதிகளைப் பார்த்து சென்னைக்கு வாய் இருந்தால் சிரித்து அழுது வைத்துவிடும் போல. கூவத்தை வைத்தே சம்பாரித்தவர்களைக் கூட நாம் தலைவராக பார்க்க வேண்டியதாக இருக்கிறது.

புகையும் தூசியும் கொசுவும் சூழ்ந்த ஊருக்குள் வாழ வேண்டிய வாழ்க்கையும் ஒருவிதமான சாகசபயணம் போலத்தான் வாழ வேண்டியிருக்கும் போல. முக்கிய சாலைகள் கூட வயதான நடிகைகளின் கன்னங்களைப் போலத்தான் இருக்கிறது தமிழ்நாட்டின் முகப்பு வாசல் என்கிறார்கள்.  ஆனால் புழக்கடையை விட மோசமாகத்தான் இருக்கிறது. சென்னையின் உண்மையான ரூபத்தை பார்க்க வேண்டுமானால் ஒரு மழை பெய்ய வேண்டும். இடையில் நாம் சிக்கிக் கொள்ள வேண்டும். செத்த பிறகு இருப்பதாக சொல்லப்படும் சொர்க்கம், நரகத்தின் வித்யாசங்களை அப்போது நாம் புரிந்து கொள்ள முடியும். 

அக்கறையில்லாதவர்களும், ஆளத் தகுதியில்லாதவர்களும் வந்தமர இது போன்ற அவலங்களை நாம் பார்த்துக் கொண்டுருக்கத்தான் வேண்டும். 

நாம் வாழ்க் ஒழிக என்ற இரு வார்த்தைக்குள் வாழ பழகி விட்டோம். அவர்களுக்கும் அலற வைக்க அடுத்தடுத்து யோசித்தே பழக்கி விட்டார்கள். பிறகென்ன? சாலை விபத்திலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டியது நம்முடைய பொறுப்பு தானே?


நெரிசலைக் காரணம் காட்டி பாலங்களை வைத்து அலங்கரித்த சென்னையின் முகம் முழுமையாக மாறியுள்ளது.  பெரியமேட்டில் இருந்து பெரம்பூர் வரைக்கும் சென்ற பயணத்தில் பாலம் தாண்டி செல்வதற்குள் நான் பழகியிருந்த பாதி இடங்கள் மறந்து விட்டது. அண்ணாசாலை என்பது அண்ணா வளைவு போலத்தான் எங்கங்கோ ஓடி ஒளிகின்றது. ஒரே நேர்கோடாக இருந்த பழைய பாதை அத்தனையும் மாறி புதிதான இடத்திற்குள் வந்தது போல இருக்கிறது. எல்லா இடங்களிலும் ஒரு வழிப்பாதை என்ற அவஸ்த்தைக்குள் பிரகாரம் போல சுற்றிச் சுற்றி கதற வேண்டியதாக இருக்கிறது. வேகமாய் போய் விடு.... முந்திவிடு......முந்தித்தான் செல்ல வேண்டும்....முறைப்படி ஓட்டினால் பின்னால் வருபவர்கள் இடித்து விடுவார்கள் என்று சொல்லியே ஒவ்வொருவரின் முறையற்ற வேகத்தை வேடிக்கை பார்க்கக்கூட முடியாத அளவுக்கு பயத்திலே பயணிக்க வேண்டியுள்ளது.

பாலம் கட்டும் போது பொறுத்துக் கொண்டு வாழ பழகியவர்கள் இப்போது உருவாகிக் கொண்டுருக்கும் ரயில் பாதைக்கும் தங்களை மாற்றிக் கொண்டு வாழ பழகிக் கொண்டுருக்கிறார்கள். இந்த திட்டம் முடியும் போது அப்போது இன்னும் நெரிசல் அதிகமாக இருக்கும். வேறு சில திட்டங்கள் வரும்.  அப்போதும் திட்ட முடியாது.  ஊருக்கும் திரும்பி வர மனமிருக்காது.  


போதை என்பது சாரயத்தில் மட்டுமல்ல.  வாழ்க்கை தேடல்களில் கூட போதை இருக்கத்தான் செய்கின்றது.  சிலருக்கும் இதுவே போதும் என்று தோன்றும்.  பலருக்கும் எதுவும் போதாது. என் திறமைகள் அளவு கடந்தது என்பதை வைத்து அத்தனைக்கும் ஆசைப்படு என்பதாக இருக்கும்.

குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டியிருந்தாலும் அந்த இடத்திற்கு பறந்து செல்ல வாய்ப்பு இருக்குமா? என்று அதிசய கனவை யோசிக்க வைக்கின்றது. வாகனங்கள் வைத்திருப்பவர்கள் ஒரு வகையில் தேசத்திற்கு லாபம் சம்பாரித்து கொடுக்கும் புண்ணிய ஆத்மாக்கள்.  ஒவ்வொரு சிக்னலின் போது காத்திருக்கும் ஆயிரக்கணக்கான வண்டிகள் குடித்துக் கொண்டுருக்கும் எரிபொருளின் அளவை மனதிற்குள் கணக்கிட்டு பார்த்தேன். இன்ஜின் குடிக்கும் பெட்ரோலுக்கும் சேர்த்து சம்பாரிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். பத்து நிமிடம் காத்திருக்கும் வேளையில் அத்தனை வாகனங்களும் குடிக்கும் பெட்ரோலை டீசலைப் பார்க்கும் போது இந்தியா இன்னமும் பல மடங்கு எரிபொருளை இறக்குமதி செய்து கொண்டேதான் இருக்க வேண்டும் போல. சென்னையில் இப்படியென்றால் மும்பை, டெல்லியை நாம் தான் யோசித்துக் கொள்ள வேண்டும்.

சென்னையில் பல பகுதிகளிலும் பார்த்த பலவிதமான கண்ணாடி மாளிகைகள் ஆச்சரியம் தரவில்லை.  அது உறிஞசும் மின்சாரத்தைப் பற்றி தான் யோசிக்க வைத்தது   தென் இந்தியாவில் தமிழ்நாடு தான் அதிக அளவு தனி நபர் மின்சாரத்தை பயன்படுத்துவதில் முதன்மை வகிக்கின்றது என்பதை படித்த போது சென்னைக்கு வெளியே இருக்கும் ஊர்க்களைப் பற்றி யோசிக்க வைத்தது.

என் சொந்த ஊரில் வாழ்ந்து கொண்டுருப்பவர்கள் மின் விசிறியைக் கூட அதிகம் பயன்படுத்துவதில்லை.  விளக்குகள் கூட மாலையில் தான். பகலில் தேவையிருக்காது. மற்றபடி பிழைப்பதற்காக செய்யப்படும் தொழில் சார்ந்த தேவைகளுக்குத்தான் மின்சாரம் பயன்படுத்தப்படுகின்றது. தமிழ்நாட்டில் பெருநகரங்கள், சிறு நகரங்கள் தவிர்த்து மற்ற சிற்றூர்களில் வாழ்ந்து கொண்டுருப்பவர்களின் வாழ்க்கையில் பெரிதான மாற்றமில்லை. தொலைக்காட்சி ஒன்று தான் பெரிதான மாற்றத்தை உருவாகி இருக்கிறது. 

வீணாக்காதே என்று அவர்கள் நம்மிடம் சொல்லும் போது நமக்கு எரிச்சல் வரும். நம்முடைய பழக்கத்தை அங்கே சென்றால் மூட்டை கட்டி வைத்து விடவேண்டும். ஊரில் மதியம் ஓய்வெடுக்கும் போது கூட வாசல்படியில் தலையை வைத்துக் கொண்டு குட்டித் தூக்கம் போடுவதைப் பார்த்து கேட்ட போது இப்படி சொன்னார்கள்.

"காத்து நல்லா அடிக்கும் போது எதுக்கடா ஃபேன்" என்கிறார்கள். படிப்பவனுக்கு ஒரு யூபிஎஸ் போட்டுக் கொள்ளலாமே என்ற போது அதற்கும் திட்டு விழுந்தது. காசை கரியாக்காதே என்கிறார்கள். அவனுக்கு அக்கறையிருந்தால் பகலில் படித்துக் கொள்ள வேண்டியது தானே என்கிறார்கள். 

தேவைகள் குறைவாக இருக்கும் போது தேடல்களும் குறைந்து தான் இருக்கும். மனம் சார்ந்து வாழும் வாழ்க்கையில் அமைதிக்கே முக்கியத்துவம். ஆனால் அவஸ்த்தைகள் என்றாலும் பரவாயில்லை போராடிக் கொண்டுருப்பேன் என்கிற போது தான் அடிப்படை ஆரோக்கியத்தை விலையாக வைத்து பலவற்றையும் பெறமுடிகின்றது.

ஆனால் இந்த அடிப்படை வாழ்க்கைக்குக்கூட மின்சாரம் கொடுக்க முடியாத அளவுக்கு நம் அரசாங்கம் நிர்வாகம் செய்து கொண்டுருக்கிறது. ஆட்சிகள் மாறிய போதும் காட்சிகள் எதுவும் மாறவில்லை.

ஆனால் சென்னையில் தேவையிருந்தாலும் இல்லாவிட்டாலும் வீட்டுக்குள் ஒவ்வொரு அறையிலும் மின் விசிறிகள் ஓடிக் கொண்டே தான் இருக்க வேண்டும் போல. வேண்டாமே என்று நிறுத்தினால் செங்கல் சூளைக்குள் இருப்பது போல இருக்கிறது.  புழுக்கத்தில் இறுக்கமாக மூச்சு விடக்கூட கடினமாக இருக்கும் போல. இதற்கு மேலே குளிர்சாதன வசதி ஒன்று தனியாக உள்ளது.  காருக்குள், வீட்டுக்குள் என்று தொட்ங்கி கக்கூஸ் வரைக்கும் குளிர்ந்தால் தான் வாழ்க்கை வாழ முடியும் என்று இன்று வாழ்க்கையின் ஆதாரமே மாறியுள்ளது.

சுகமாய் வாழ் பழகிக் கொண்டவர்களுக்கு நரகம் கூட சொர்க்கம் தான்.  அதற்காகவே வாழ்ந்து, அதற்கு சம்பாரித்து ஆவி போனாலும் அத்தனைக்கும் அவஸ்த்தைப்பட்டு போராட்ட வாழ்க்கையை அனுபவித்து விரும்பி வாழ பழகிக் கொள்கிறார்கள். தங்கியிருந்த நாட்களில் பட்ட ஒவ்வொரு அவஸ்த்தைகளையும் நான் பாதைகளில் பார்த்த பலரின் வாழ்க்கையைப் பார்த்து ஒப்பிட்டுக் கொள்ள முடிந்தது.

போராடினால் வெற்றி நிச்சயம் என்பதை சென்னையில் உள்ள நடைபாதை வியாபாரிகளை வைத்து தான் புரிந்து கொண்டேன். கூட்டத்தை வைத்து காசாக்கும் கலையை ஓரமாக நின்று அமைதியாக ரசித்தேன்.  இதையே வேறுவிதமாக நடைபாதையில் பிச்சை எடுப்பவர்களையும் வைத்து புரிந்து கொள்ள முடிந்தது. மின்சார ரயில் முதல் ரயில் நடைமேடை வரைக்கும் நிறைந்திருந்த பிச்சை மக்களைப் பார்க்கும் போது ஒரு வேளை இதை ஒழிக்கத்தான் மன்மோகன் சிங் பல பெரிய மனுசங்களை உள்ளே கொண்டு வர ஆசைப்படுகின்றாரோ என்று யோசிக்க முடிந்தது.

பிச்சை வாங்கி வாழும் மக்களின் நடவடிக்கைகளைக்கூட ரொம்பவே ரசிக்க முடிக்கினற்து. மின்சார ரயிலில் கண்தெரியாதவர் பாடிக் கொண்டே வருகிறார்.  அவருக்குப் பின்னால் ஒரு பெண்மணி. ஓடும் ரயிலின் சப்தத்தை மீறி அவர் பாடும் சுருதி கலைந்த பாடல் நம்மை அவர்களை நோக்கி கவனிக்க வைக்கின்றது. தட்டுவதற்கு ஒரு கட்டை. எத்தனை கூட்டம் என்றாலும் தங்களை பொருத்திக் கொண்டு முன்னேறி வந்து விடுகிறார். பலரும் இதனை பொறுத்தும் கொள்கிறார்கள்.  ஒரு நடை நடந்து வந்து வசூல் செய்த பிறகு ஒரு ஓரமாக நின்று தட்டில் விழுந்த காசை, பணத்தை அதன் அளவு வைத்து தங்கள் தனித்தனியான பையில் போட்டுக் கொண்டு அடுத்த நிறுத்தத்தில் இறங்கி சென்று விடுகிறார்கள்.

திடீர் என்று ஏதோவொரு இடத்தில் மொத்தமாக சந்திக்கின்றார்கள். கண் தெரியாத போதும் கூட அவர்கள் அரட்டை அடித்துக் கொண்டு நக்கல் செய்து கொண்டு கலாய்த்து மகிழும் தருணங்கள் ஒரு குறும்படத்திற்கான கதைக்களம். குழந்தையை ஆயுதமாக வைத்துக் கொண்டு கேட்கும் அலறல் மொழியில் அவர்களின் அவஸ்த்தை வாழ்க்கையை விட சோறுக்காக வாழ விரும்பும் வாழ்க்கையை நமக்கு அறிமுகம் செய்கின்றது. ஜகத்தினை அழித்திடுவோம் என்றவனை நினைக்கத் தோன்றியது. ஒரு வேளை உணவு மட்டும் பார்த்து பார்த்து சாப்பிட்டு வாழ்ப்வர்கள் இந்தியாவில் அதிகமில்லை ஜென்டில்மேன் ச்சும்மா 40 கோடி பேர்கள்.  


ஒருவரிடம் கையை நீட்டும் போதே அவர்களுக்கு புரிந்து விடுகின்றது.  இவர் பையில் கை வைத்து பணத்தை எடுக்கும் போதே மற்றொரு கை வந்து கொண்டுருக்கும் வேறொருவரை நோக்கி போகின்றது.  இரண்டு கையிலும் கிடைக்கும் வருமானத்தை விட அடுத்தவரை நோக்கி பார்வை வேகமாக போகின்றது.  தொடர் போல அவர்களின் வேகமான செயல்பாடுகளைப் பார்த்து நாம் இன்னமும் மார்க்கெட்டிங் திறமைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை மனதில் குறித்துக் கொண்டேன். 

18 comments:

ப.கந்தசாமி said...

அவலங்களே வாழ்க்கையாகி விட்டது.

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லாமே கற்றுக் கொள்ளலாம்... (கட்டுப்பாட்டையும் சேர்த்து...) 20 வருட அனுபவம் தான்...

bandhu said...

நானும் சில வருடங்கள் சென்னையில் இருந்தேன். இப்போதும் சென்னை என்றால் அலர்ஜி தான்! யாருக்கும் எதற்கும் நேரம் இல்லை. ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். மனிதர் வாழ தகுதியில்லாத இடம்!

Thekkikattan|தெகா said...

Wow! There are so many places in this write up is to high light... Population explotion and greed is at play - least to say, man!

Anonymous said...

Excellent! Migration from one place to another is challenging! I am 40 years old and migrating since my birth across the globe. It is painful to migrate from one place to another and settle, facing tough times are really complex. I really wonder how srilankan tamils are migrating especially in boats and facing multiple challenges including legal - Bodinayakanur Karthikeyan from Phoenix Arizona

துளசி கோபால் said...

நல்ல அவதானம். வாழ்க்கையை வெளியே இருந்து பார்க்கும் விதம் அருமை!

//தேவைகள் குறைவாக இருக்கும் போது தேடல்களும் குறைந்து தான் இருக்கும். // இதுதான் உண்மை.

இப்ப அளவுக்கு மிஞ்சிப்போச்சு இந்த தேவைகள்:(

ஜோதிஜி said...

டீச்சர் உங்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். நீங்கள் எனக்கு கொடுத்த வாய்ப்பு தான் இந்த கட்டுரை உருவாக காரணம். ரசிப்பதும், கவனிப்பதுமாய் இருக்கும் வாழ்க்கை தான் உலகிலே மிகப் பெரிய செல்வம். ரசினைகள் தொடரும் போது உடல் ஆரோக்கியத்தில் பெரிதான பிரச்சனைகள் உருவாகாது என்பதை வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்க்கை உணர வைக்கின்றது.

கார்த்திகேயன் போடிநாயக்கனூர்

மிக்க ந்ன்றி கார்த்திக்.

உங்களைப் போலத்தான் நானும். அலைய முடியவில்லை. வீட்டில் வெளியே நம்மை விடாமல் வட்டத்திற்குள் வாழ வைக்கின்றார்களே என்று தான் தொடக்கத்தில் வெறியோடு அலைந்து திரிந்தேன். ஆனால் நீங்கள் சொன்னபடி ஈழத் தமிழர்களின் புலம் பெயர்த்லை உள்வாங்கும் போது, இங்கே வாழ்வதற்காக ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு நகர்ந்து தன்னை பொருத்திக் கொண்டே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை கொடுமையானது. திருப்பூருக்குள் இருப்பவர்களின் வாழ்க்கையே அது போலத்தான். பெரிய மரத்தை வேரோடு புடுங்கி மற்றொரு இடத்தில் கொண்டு போய் நடுவதற்குச் சமம். மிக்க நன்றி.

தெகா வாய்ப்பிருந்தால் அழைக்கவும். நன்றிப்பா.

வாங்க பந்து. முழுமையாக அப்படிச் சொல்ல முடியாது. தனக்கான தகுதிகள் மூலம் சென்னையில் தெளிவாகவும் வாழ வகை செய்து கொள்ள முடியும். ஆனால் அதற்கான விலையும் உழைப்பு பல மடங்கு அதிகம். அதன் காரணமாக உருவாகும் மன உளைச்சலின் விலையைத்தான் அதிகமாக யோசித்து இருக்கேன். நன்றி.

வாங்க தனபாலன், கந்தாசமி அய்யா.

Avargal Unmaigal said...

உங்களின் பார்வையும் கவனிப்பும் எண்ணங்களும் எழுத்தாகி இங்கு வரும்ன் போது படிப்பதற்கு மிக இண்டிரெஸ்டிங்காக உள்ளது

Rathnavel Natarajan said...

சென்னை நகர வாழ்க்கையைப் பற்றி திரு ஜோதிஜி அவர்களின் அருமையான பதிவு.
நன்றி திரு ஜோதிஜி.

வவ்வால் said...

ஜோதிஜி,

பெருசா ஒரு பின்னூட்டம் எழுதினேன், பிலாக்கர் சொதப்பிடுச்சு, அடிக்கடி இப்படித்தானாகிறது,

நல்லப்பகிர்வு, எநத ஊரையும் புதிதாக பார்ப்பவர்கள் நிறைய கவனிப்பார்கள்.

டிராபிக் ரொம்ப மோசம்னு யாரேனும் சொல்லும்போது தான்...அட ஆமாம் இல்லன்னு உறைக்குது :-))

ஜோதிஜி said...

வவ்வுஜி

நீங்க சொல்வதும் உண்மை தான். புதிதாக ஒன்றை பாரக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. அதனை நாம் யோசிப்பது தான் குறைவு. ஊரைப் பற்றி ஊரில் இருக்கும் போது யோசித்ததை விட வெளியே வந்த பிறகு தான் அதிகம் யோசிக்கின்றேன். எழுத முடிவதால் வாய்ப்பாக இருக்கிறது.

வாங்க ரத்னவேல் அய்யா.

அவர்கள் உண்மைகள்

உங்கள் ரசிப்புக்கு நன்றி.

Anonymous said...


துளிக்கூட விருப்பம் இல்லாமல் -
கடந்த 7 ஆண்டுகளாக சென்னையில்
தங்கி இருக்கிறேன்.

இந்த மாபெரும் நகரத்தின் கவர்ச்சிகளான -
பெரிய பெரிய குளிர் மிளிரும் அங்காடிகள்,
(shopping malls) மல்டிப்ளெக்ஸ்
திரையரங்குகள், கடற்கரை, பெரிய பெரிய
நூலகங்கள் (கன்னிமாரா, அண்ணா நூற்றாண்டு
உட்பட ),விதவிதமான ஓட்டல்கள் -
எதுவுமே என்னைக் கவரவில்லை.

என் பேத்தி ஒருவள் மட்டுமே என்னை இங்கு
நிறுத்தி, பிடித்து வைத்திருக்கிறாள்.
என்னை பல விஷயங்களுக்கு நம்பி இருக்கும்
அவளிடமிருந்து விடுபட வழியும் தெரியவில்லை -
மனமும் இல்லை.

எனவே - நீங்கள் சாடி இருக்கும் அத்தனை
அவலங்களையும் - தாங்கிக் கொண்டு இன்னும்
இங்கேயே இருக்கிறேன். நீங்கள் சென்னையை
நன்கு ரசித்து (?), அனுபவபூர்வமாக உணர்ந்து
எழுதி இருக்கிறீர்கள் !

வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்

ஜோதிஜி said...

காவேரி மைந்தன்

இப்போது தான் உங்கள் விமர்சனத்தை பார்த்தேன்.

உதயகுமார் பதிவுக்கு நீங்க கொடுத்த பதிலின் மூலம் தான் உங்கள் வயது, உங்க பின்புலம், நீங்க பணிபுரிந்த பணி போன்ற அத்தனையும் புரிந்து கொண்டேன். வியந்து போனேன்.

வேற ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. சில விசயங்களில் நாம் கருத்தளவில் வேறுபட்டு இருக்கோம். குறிப்பாக கூடங்குளம் விசயங்கள் போன்றவைகளில். ஆனால் அடிப்படை எண்ணங்கள் நமக்கு ஒரே மாதிரியாக இருக்கிறது.

பெரும்பாலும் உங்கள் விமர்சனங்களை எங்கும் நான் பார்த்தது இல்லை. தொடர்ச்சியாக என் பதிவுகளை படித்துக் கொண்டு இருக்கீங்க என்பதோடு விமர்சனமும் அவவ்ப்போது தந்து விடுறீங்க.

உங்கள் மரியாதைக்கு என் வணக்கம்.

ஜோதிஜி said...

என் பேத்தி ஒருவள் மட்டுமே என்னை இங்கு
நிறுத்தி, பிடித்து வைத்திருக்கிறாள்.
என்னை பல விஷயங்களுக்கு நம்பி இருக்கும்
அவளிடமிருந்து விடுபட வழியும் தெரியவில்லை -
மனமும் இல்லை.

உங்கள் விருப்பம் தனியாகஇருக்கட்டும். பேத்தி விருப்பத்தை உங்களின் கடைசி காலம் நிறைவேற்ற வேண்டும் என்பதே என் விருப்பம். மகள்கள், பேத்திகள் மூலம் கிடைக்கும் மரியாதை மற்றும் அன்பு பற்றி எழுத்தில் வடிக்க முடியாது. இன்று வரையிலும் எங்கே சென்று விட்டு வீட்டுக்குள் வரும் போது குதுகலிக்கும் மனத்தை பார்த்து தான் நான் பல விசயங்களில் அலைச்சலை குறைத்துக் கொண்டு இவர்களை சார்ந்து வாழ்ந்து கொண்டுருக்கேன். சிறிய வயதில் இவர்கள் எதிர்பார்க்கும் அன்பை கொடுக்க முடியாமல் பின்னால் சம்பாரித்து கொடுக்கும் பணம் எதற்கும் பயன்படாது என்பது பலரின் வாழ்க்கையைப் பார்த்து புரிந்து கொண்ட உண்மை.

கிரி said...

ஜோதிஜி ரொம்ப சூப்பர்! :-) அருமையா எழுதி இருக்கீங்க.

நான் சென்னையில் 11 வருடங்கள் இருந்து இருக்கிறேன். சென்னை தான் எனக்கு வாழ்க்கை கொடுத்த இடம் அதனால், என்றுமே என்னால் சென்னையை புறக்கணிக்க முடியாது.

நெரிசல், கூட்டம், எதற்க்கெடுத்தாலும் நீண்ட வரிசை, வாகனப்புகை போன்றவற்றால் சென்னையே வெறுத்து விட்டது. எனக்கு கோபியில் இருக்கவே விருப்பம் ஆனால், என்ன செய்வது? எனக்கு வேலை சென்னையில் தான் இருக்கிறது. என்னுடைய கடைசி காலத்தில் தான் கோபியில் இருக்க முடியும் போல இருக்கு. இங்கே இருந்து வந்தாலும் சென்னையில் தான் வேலை பார்க்கப் போகிறேன். கோவையில் ஓரளவிற்கு IT வந்தால், குறைந்த சம்பளம் என்றாலும் அங்கேயே செல்ல விரும்புகிறேன். குறைந்த பட்சம் வார இறுதியிலாவது வரலாம்.

வந்தாரை வாழவைக்கும் தமிழகமோ இல்லையோ.. ஆனால் சென்னை உண்மை தான் :-).

ஜோதிஜி said...

வாங்க கிரி. கோவைக்கு வந்து விடுங்க. பணத்தை விட ஆரோக்கியமும் முக்கியமல்லவா.

Ravichandran Somu said...

சிறப்பான கட்டுரை... இந்தியாவிலுள்ள எந்த மாநகரங்களும் வாழ தகுதியில்லாத நரகங்கள்தான் !!! தஞ்சாவூரில் செட்டிலாக வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தியா திரும்பி வந்தேன். குழந்தைகளின் படிப்பு, வேலை காரணமாக பிடிக்காத பெங்களூர் வாழ்க்கை இப்போது :( சீக்கிரம் தஞ்சை வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கையுடன்...

ஜோதிஜி said...

ரவி மீண்டும் சிங்கப்பூர் பயணமா?