Monday, December 27, 2010

அழுவாச்சி காவியம - கதாநாயகன்

"அந்தாளைப் போய் எப்டிங்க பார்க்கமுடியும்?  அலுவலகத்திற்கு போனாலும் ஓய்வு இருக்கும் போது வீட்டுக்கு வான்னு துரத்தி அனுப்பிடுவாரு. அப்புறம் எங்கே போய் நம்ம பிரச்சனையை பேச முடியும்?"

திருப்பூரில் உள்ள ஒரு சாயப்பட்டறை முதலாளி சில நாட்களுக்கு முன் மனம் நொந்து சொன்ன விசயம் இது.. அவர் குறிப்பிட்டது வேறு யாரையும் அல்ல. இப்போது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு தலை பொறுப்பில் வந்துள்ள இறையன்பு (இ.ஆ.ப) குறித்த விமர்சனமே. காரணம் இந்த முதலாளியின் பள்ளித் தோழர் இறையன்பு.


இறையன்பு இதற்கு முன்பு தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் இருந்தவர். என்ன காரணமோ? மாயமோ? இப்போது இந்த பதவிக்கு வந்துள்ளார். எழுத்தாளர், சிந்தனையாளர் இதற்கெல்லாம் மேல் நேர்மையாளர்.  மொத்தத்தில் என் பார்வையில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்.  மற்றொரு இ ஆ ப சகாயம் போலவே அரசியல் வியாதிகளின் அக்கிரமத்தை பொறுத்துக் கொண்டு தன்னால் என்ன முடியுமோ? அதை செய்து கொண்டுருப்பவர்.

வினவு தளத்தில் வெளியான திருப்பூர் சாயப்பட்டறை குறித்து நான் எழுதிய விசயங்கள் மேலிடத்திற்கு சென்றதா? இல்லை இது நடந்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருப்பதா? என்று தெரியவில்லை.  ஆனால் இந்த சமயத்தில் இறையன்பு போன்ற சரியான நபர்கள் இந்த பதவிக்கு வந்திருக்காவிட்டால் டெல்லி நீதிமான்கள் இந்நேரம் பெரிய ஆப்பை மாநில அரசாங்கத்திற்கு சொருகியிருப்பார்கள்.. 

காரணம் ஏற்கனவே தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடுத் துறை மாசடைந்து இருந்தது. அத்துடன் ஏராளமான குற்றச்சாட்டுகளும் நீதியரசர்கள் கொடுத்த அடிகளும் இருந்தது. திருப்பூரில் மாசுகட்டுப்பாடுத் துறையில் பணிபுரிந்த ஒரு அரசு அலுவலர் தன்னுடைய சொந்த ஊரில் ஒரே வருடத்தில் சேர்த்த சொத்தின் அளவு எவ்வளவு தெரியுமா?  எட்டு கோடி ரூபாய். எனக்கு கிடைத்த தகவலின் படி ஒரு நபரே இந்த அளவிற்கு சம்பாரித்து இருக்கிறார் என்றால் அந்த மொத்த துறையின் அளவீடுகளை அவரவர் கற்பனைக்கே விட்டு விடுகின்றேன். 

இப்போது சரியான நபர் சரியான பதவிக்கு வந்துள்ளார். என்னைப் போன்றவர்களுக்கு தனிப்பட்ட முறையில் இழப்புகள் அதிகமென்ற போதிலும் இதையும் கடந்து செல்ல மனம் பக்குவமடைந்து விட்டது.

இந்தியாவின் மத்திய அரசாங்கத்திற்கு திருப்பூரென்பது அந்நியச் செலவாணியை ஈட்டித் தரும் நகரம். திருப்பூர் மட்டும் வருடத்திற்கு பத்தாயிரம் கோடிகளுக்கு மேல் கொடுத்துக் கொண்டுருக்கிறது. ஆனால் இந்நேரம் 14000 கோடியாக உயர்ந்திருக்க வேண்டும்.  ஆனால் இன்று அவரவர் டவுசர் அவிழ்ந்ததோடு மட்டுமல்லாமல் நிர்வாணமாக வேறு நிற்கும் சூழ்நிலை உருவாகிவிட்டது.

கோடிக்கு ஆசைப்பட்டவர்கள் இப்போது தெருக்கோடிக்கு வந்து கொண்டுருக்கிறார்கள். 

மாநில அரசாங்கத்திற்கு திருப்பூர் டாஸ்மார்க் மூலம் வகை தொகையில்லாத வருமானத்தை வாரி வழங்கிக் கொண்டுருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள கிராமத்து மக்களுக்கு மட்டுமல்ல தற்போதைக்கு நேபாளம் வரைக்கும் உள்ள இளைஞர்களுக்கு முக்கிய வேலைவாய்ப்பு கேந்திரமாக இந்த திருப்பூர் விளங்கிக் கொண்டுருக்கிறது. எத்தனை கஷ்டப்பட்டாலும் நம்மால் நிச்சயம் மூன்று வேளை சாப்பிட்டு விட முடியும் என்று வந்து இறங்கிக் கொண்டுருப்பவர்கள் அநேகம் பேர்கள். 

ஆனால் இங்குள்ள தற்போதைய ஒவ்வொரு நிகழ்வுகளும் எறிந்து கொண்டுருக்கும் வெளிச்சத்தை போக்கி விடும் போலிருக்கு.

மத்திய அரசாங்கத்தில் இருக்கும் குறிப்பிட்ட சில தலைகள் இந்தியாவிற்குள் இருக்கும் பஞ்சு மற்றும் நூலை முழுவதும் எப்பாடு பட்டாலும் வெளிநாட்டுக்கு கடத்தியே ஆகவேண்டும் என்று துடியாய் இருக்கிறார்கள். காரணம் ஒவ்வொருவரும் தாங்கள் ஏற்கனவே பினாமி மூலமாக பதுக்கி வைத்திருக்கும் பஞ்சு மற்றும் நூலை வெளியே தள்ளுவதற்கென்று வசதியாக ஒவ்வொருமுறையும் ஏற்றுமதிக்கான காலக்கெடுவை நீடித்துக் கொண்டேயிருக்கிறார்கள். 

மாநில அரசாங்கம் கோவை மாவட்ட அரசியல் கண்க்குளை வைத்து விளையாட்டு காட்டிக் கொண்டுருக்கிறது.. ஆனால் இவர்கள் இருவரையும் விட திருப்பூர் சாயப்பட்டறை முதலாளிகள் செய்யும் காரியம் இருக்கிறதே?  அடேங்கப்பா?  நாங்க திருந்தவே மாட்டோம்? என்று சத்தியம் செய்து கொடுத்து விட்டோம் என்பதைப் போலவே நடந்து கொண்டுருக்கிறார்கள். 

நேற்றைய பதிவில் வெளியிட்டுள்ள சாயமே இது பொய்யடா என்ற பதிவை உங்களுக்கு நேரம் இருந்தால் படித்து விட்டு தொடர்ந்தால் கொஞ்சம் உங்களுக்கு புரியக்கூடும். நீங்கள் இதை படித்துக் கொண்டுருக்கும் போது நீங்கள் போட்டுருக்கும் பனியன் ஜட்டி மற்றும் பெண்களின் உள்ளாடைகளை உருவாக்க ஒரு நகரம் எப்படி நரகத்தை உருவாக்கிக் கொண்டுருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.?

ஒவ்வொரு உடைகளுக்குள்ளும் வெளியே தெரியாத ஓராயிரம் அழுகை மற்றும் அழுக்கு உள்ளது. இதைப்பற்றி உங்களுக்குத் தெரிந்தால் தான் பணத்தாசை என்பது ஒரு மனிதனை எந்த அளவிற்கு கேவலமாக மாற்றும் என்பதை உணர முடியும்.

மொத்தத்தில் நாம் பெற்றுள்ள இன்றைய நவீன விஞ்ஞான வளர்ச்சியில் நாம் பலவற்றை இழந்து இந்த சந்தோஷ வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுருக்கிறோம். இந்த நவீன வசதிகள் மூலம் பெறும் மகிழ்ச்சியென்பது நம்மைப் பொறுத்தவரையிலும் எல்லாமே நிரந்தரம் என்றும் நம்பிக் கொண்டுருக்கிறோம். அடுத்த தெருவில் இருப்பவர்களைப் பற்றியே நம்மால் கவலைப்பட நேரமில்லாமல் ஓடிக் கொண்டுருக்கும் போது எப்படி அடுத்த தலைமுறையைப் பற்றி யோசிக்க முடியும்?  

தொடக்கத்தில் இங்குள்ள சாயக் கழிவு நீரை மானாவாரியாக சாக்கடையில், கால்வாயில், ஆற்றில் என்று ஒவ்வொருவரும் திறந்து விட்டு முடிந்த வரைக்கும் கல்லாவை நிரப்பிக்கொண்டுருந்தார்கள்.

ஆனால் மாற்றமென்பது வந்து தானே தீரும். 

அது போன்ற ஒரு மாறுதல் திருப்பூரில் உருவாகி சூறாவளி சூனாமியாகி திசை தெரியாத காட்டுக்குள் ஒவ்வொரு முதலாளிகளையும் சிக்க வைத்துள்ளது. சாயப்பட்டறை முதலாளிகளின் அக்கிரமங்களையும் பொறுத்துப் பார்த்த கரூர், திருப்பூர்,கோவை மாவட்ட விவசாயிகளின் பலவிதமான போராட்டங்கள் விஸ்ரூபம் எடுக்க அரசாங்கம் விழித்தே ஆகவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. கடைசியாக தில்லி உச்சநீதி மன்றம் வரைக்கும் சென்று இன்று வாய்தா மேல் வாய்தாவாக சவ்வு போல் நீண்டு கொண்டேயிருக்கிறது. 

கடந்த சில வருடங்களில் உருவாக்கப்பட்ட குழுக்கள், மேற்பார்வையாளர்கள், புரிந்துணர்வு குழுக்கள் என்று ஒவ்வொருவரும் உருவாக்கிய ரணகளத்தில் பல மாறுதல்கள் உருவாக ஆரம்பித்தது.  பொறுப்புள்ள சாயப்பட்டறை முதலாளிகள் அவரவர் வெளியாகும் சாயக் கழிவு நீரை சுத்திகரித்து நல்ல நீராக மாற்றி விட அவர்களை நோக்கி எந்த சட்டதிட்டமும் பாயவில்லை.  


வசதி இல்லாதவர்களும், வசதிகள் இருந்தும் செலவு செய்ய மனம் இல்லாதவர்களுக்கும் மற்றொரு வாய்ப்பு உருவாக்கப்பட்டது.  அவரவர் சாயப்பட்டறை நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டுருக்கும் பகுதிகளை தனித்தனியாக பிரித்து காமன் எப்ளூயண்ட் ட்ரிட்மெண்ட ப்ளாண்ட்(C E T P) என்றொரு பொது சுத்திகரிப்பு நிலையம் உருவாக்கப்பட்டது.  

மத்திய, மாநில அரசாங்க பங்களிப்போடு, மானியத்தோடு, வங்கிக் கடன் உதவியால் இது போன்ற சுத்திகரிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டது. 

இதன் பலன் என்ன?  

இதனை சார்ந்து செயல்படும் சாயப்பட்டறை நிறுவனங்கள் தாங்கள் வெளியே அனுப்பும் சாயக்கழிவு நீரை குழாய் வழியாக இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி விடுவதுண்டு. இங்கு வந்து சேரும் நீரில் உள்ள நச்சுத்தன்மை உள்ள கழிவுப் பொருட்களை சுத்திகரிப்பு செய்து அதில் உள்ள காரம் அமிலம் வீரியம் நச்சு போன்ற அத்தனை கெடுதிகளை நீக்கிவிட்டு இயல்பான நீராக மாற்றி தாவரங்களுக்கு பயன்படுத்தும் அளவிற்கு மாற்றி விடுகிறார்கள்..

எல்லாமே சரிதான்.  அப்புறமென்ன பிரசச்னை என்கிறீர்களா?

இது போன்ற ஒவ்வொரு பொது சுத்திகரிப்பு நிலையத்தின் கீழ் குறைந்தபட்சம் முப்பது முதல் அதிகபட்சம் 80 நிறுவனங்கள் வரைக்கும் செயல்பட்டுக் கொண்டுருந்தன.  நீதிமன்றம் கொடுத்துள்ள "ஜீரோ டிஸ்சார்ஜ்" என்ற பருப்பை சம்மந்தபபட்ட முதலாளிகள் இந்த பொது சுத்திகரிப்பு நிலையத்தில் வேக வைக்க முயற்சிப்பதில்லை.  காரணம் தங்களின் லாபத்தொகையை இது போன்ற நல்ல முயற்சிகளுக்கு கொடுக்க எவருக்காவது மனம் வருமா?

அதைவிட கொடுமை இது போன்ற சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அவரவர் கொடுக்க வேண்டிய கட்டணம் போனற இத்யாதி சமாச்சாரங்களை மனதில் வைத்துக் கொண்டு எப்படா வாய்ப்பு கிடைக்கும்? என்று அருகே உள்ள வாய்க்காலில் கலந்து விடும் புண்ணியவான்களும் உண்டு. ஜன நெருக்கடி உள்ள பகுதிகளில் உள்ள பல சாயப்பட்டறைகள் செய்யும் கைங்கர்யத்தால் தெருவில் நுரை சுழித்துக் கொண்டு ஓடத் தொடங்கி விடுகின்றது.

பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீருக்கான குழாய் அடிக்கடி உடைந்து போய் விடுவது எப்போதுமே இங்குள்ள வாடிக்ககையான நிகழ்வாகும். இதுபோன்ற சாயக் கழிவு நீர் இந்த குடிநீர் குழாய்க்குள் நுழைந்தால்?

கற்பனை செய்து பாருங்கள்?.

ஒவ்வொரு சாயப்பட்டறை முதலாளிகளும் தாங்கள் சாயமேற்றிக் கொடுக்கும் துணிகளில் அவர்கள் பார்க்கும் லாபம் என்பது 40 முதல் 60 சதவிகிதம்.  அதாவது ஒரு கோடி ரூபாய்க்கு கேவலமாக கணக்குப் போட்டாலும் 40 லட்சத்தை தனியாக எடுத்து வைத்துவிடலாம்.  ஆனால் இவர்கள் இந்த நிறுவனத்தை உருவாக்க போட்ட முதல் என்பது பல கோடிகளை தொட்டு நிற்கும்.  சிலர் ஓட்ட உடைசல் எந்திரங்களை வைத்துக் கொண்டு இது போன்ற லாபத்தையும் சம்பாரிக்கும் கெட்டிக்காரர்களும் உண்டு.

எங்களுக்கு அரசாங்க மான்யம் வேண்டும் என்று முதலாளிகள் அதிசியமாக ஒன்று சேர்ந்து குரல் எழுப்பினார்கள்.  மத்திய அரசாங்கம் திட்டநிதியாக 700 கோடி ஒதுக்கியது.   முதல் தவணையாக 120 கோடியும் சில மாதங்களுக்கு முன்பு வங்கிக்கு வந்து சேர்ந்து விட்டது. 

ஆனால் அதிலும் அரசாங்கம் கெட்டியாக ஆப்பு வைத்தது.  எவரவர் இந்த நிதியை தாங்கள் சார்ந்துள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு பயன்படுத்த வேண்டும் நினைக்கிறார்களோ அவரவர் தனிப்பட்ட முறையில் வங்கி பிணைத் தொகை கொடுக்க வேண்டும் என்றது. 

அதாவது ஒரு பொது சுத்திகரிப்பு நிலையத்தில் 30 சாயப்பட்டறை நிறுவனங்கள் இருக்கிறது என்றால் இவர்கள் அத்தனை பேர்களும் ஒன்று சேர்ந்து இந்த சுத்திகரிப்பு நிறுவன நிர்வாகத்திற்கு பொறுப்பாகும். அந்த சுத்திகரிப்பு நிலையம் கடைசிவரைக்கும் சரியான முறையில் நிர்வாகம் செய்ய வேண்டும். அதில் பணிபுரியக்கூடிய பணியாளர்களுக்கு மாத சம்பளம் முதல் அதில் பயன்படுத்தப்படும் வேதியியல் சமாச்சாரங்களுக்கு முதலீடு வரைக்கும்  சரியான முறையில் கொண்டு செலுத்த வேண்டும்.  

காரணம் நம்ம மக்கள் மீது வங்கிகள் வைத்துள்ள நம்பிக்கை அப்படிப்பட்டது.  உனக்கும் பெப்பே உங்க ஆத்தாளுக்கும் பெப்பே என்று காட்டி விடுவார்கள் என்று வங்கி உசாராக விதிமுறைகளை வகுத்து வைத்திருந்தது.  

நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். எந்த நிறுவனமும் அரசாங்கம் கொடுத்துள்ள 120 கோடியை பயன்படுத்த முன்வரவில்லை.  மூன்று மாதங்கள் பயன்படுத்தாமல் இருந்தால் இந்த தொகை மத்திய அரசாங்கத்திற்கே திரும்பி சென்று விடும். 

ஒரு சாதாரண சுத்திகரிப்பு நிலையம் செயல்பட வேண்டுமென்றால் மின்சார செலவு முதல் மற்ற அத்தனை விசயத்திற்கும் ஒரு மாதத்திற்கு உத்தேசமாக ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் வேண்டும் இந்த பொது சுத்திகரிப்பை பயன்படுத்தும் நிறுவனங்கள் தாங்கள் வெளியாக்கும் சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பை செய்ய வேண்டுமென்றால் ஒரு லிட்டருக்கு 12 பைசா கொடுக்க வேண்டும்.

எவருக்கு மனம் வரும்?  

சாக்கடையில் திறந்து விட்டு பழக்கப்பட்ட மக்களைப் போய் நீ திருந்துப்பா என்றால் கேட்பார்களா?  இறையன்பு வந்த பிறகு கடந்த மாதங்களில் 300 சாயப்பட்டறை நிறுவனங்கள் மூடு விழா நடத்தப்பட்டு விட்டது. இந்த எண்ணிக்கையில் பழம் பெருச்சாளிகளும், சமூக ஆர்வலர் என்று சொல்லிக் கொண்டு திரிந்தவர்களும் அடங்குவர். 1400க்கு மேற்பட்ட நிறுவனங்களில் இப்போது தப்பி பிழைத்திருப்பது கொஞ்சமே. திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் இப்போது ஈரோடு மற்றும் பெருந்துறைக்கு தங்களின் துணிகளை வண்ணமாக்க படையெடுத்துக் கொண்டுருக்கிறார்கள்.

இந்த 300 நிறுவனங்களும் சேர்ந்து உத்தேசமாக ஒரு மாதத்திற்கு 300 முதல் 500 கோடி ரூபாய் வரைக்கும் அவரவர் தகுதி பொறுத்து வருவாய் ஈட்டிக் கொண்டுருப்பவர்கள்.  ஒரு சாய்ப்பட்டறையில் குறைந்தபட்சம் 75 பேர்கள் பணிபுரிகிறார்கள் என்றால் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். அவரவர் தங்களின் சொந்த ஊருக்குச் சென்று விட வேண்டியது தான். இந்த துறையில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் வெளிஉலகத்தை பார்க்காமல் உள்ளேயே துணியோடு துணிவோடு வாழ்ந்து கொண்டுருப்பார்கள்.  இதன் காரணமாகவே வேறு எந்த சார்பு துறையும் அறிமுகம் இல்லாமல் இருக்கும்.

சமீபத்தில் பெயத் மழையின் காரணமாக பாதிப் பேர்கள் அவரவர் ஊரில் உள்ள விவசாயத்தைப் பார்க்க தங்களின் ஊருக்குச் சென்று விட்டார்கள்.  

மீதி நபர்களை வைத்துக் கொள்ள விருப்பம் இல்லாத முதலாளிகள் ஆளை விட்டால் போதுமடா சாமி என்று பச்சைக் கொடியை உயர்த்தி வழியனுப்பிக் கொண்டுருக்கிறார்கள்.

தனிப்பட்டவர்களுக்கு வேலையிழப்பு என்பதோடு இதன் சார்பு தொழிலை நம்பி வாழ்ந்து கொண்டுருப்பவர்களின் மற்றவர்களின் வாழ்க்கை எப்படியிருக்கும்?  இந்த 300 நிறுவனங்களும் செயல்பட்டால் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கிடைக்கும் வருமானம்?  இந்த சாயப்பட்டறை நிறுவனங்கள் வங்கியில் வாங்கி வைத்துள்ள கடன்களை எப்படி கட்ட முடியும்?  வட்டி குட்டி போட்டுக் கொண்டுருக்குமே? 


இது போன்ற பல கேள்விக்குறிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.  ஆனால் அத்தனையும் கேலிக்குறியாகத்தான் இருக்கின்றது.  

காரணம் இறையன்பு என்ற மாமனிதர். 

"தவறு என்பதை தெரிந்தே செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன" என்ற பாடலை முன் உதாரணமாக எடுத்துக் கொண்டு அவர் காட்டும் கெடுபிடி தனம். 

அதனால் என்ன? 

இறையன்புக்கு ஒரு பாடல் இருக்கிறதென்றால் எங்களுக்கும் ஒரு பாடல் இருக்கிறது என்று சாயப்பட்டறை முதலாளிகள் வேறொரு பாடலை பாடிக் கொண்டுருக்கிறார்கள்.

"ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு.................‘"

35 comments:

Unknown said...

சார், நாந்தான் பர்ஸ்ட், படிச்சிட்டு வரேன்

ஆனந்தி.. said...

இறையன்பா...ம்ம்...கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு...இதுவும் ஒருவேளை அரசியல் சார்பு நெருக்கடியாக இருக்குமா ஜோதிஜி??ஆனால் சில அதீத விதிமுறைகளில் பாதிக்கபடுவது தொழிலாளிகள் தான்...ம்ம்..

Unknown said...

சார் சான்ஸே இல்லை, சும்மா புட்டு புட்டு வச்சிருக்கீங்க, எனக்கும் மொதல்ல புரியல, ரயில்வே ஸ்டேசன்ல உண்ணாவிரதம் இருந்தாங்க மானியம் கேட்டு ஏன் பயன்படுத்தலைன்னு புரியாம இருந்தது, இப்ப புரிஞ்சிருச்சு, ஏற்கனவே அதிக லஞ்சம் PCP ல கேட்கறாங்கன்னு பா மா க கட்சிகாரங்க பந்த நடத்துனாங்க, ஆனா யாரும் அவங்களுக்கு ஆதரவு தரலை ஜாதிக்கட்சின்னு, எந்த கட்சியா இருந்தா என்ன நல்லதுன்னா கண்டிப்பா ஆதரவு கொடுக்க வேண்டியதுதானன்னு நான் நினைச்சிட்டு இருந்தேன், ஆனா இப்ப வரக்கும் லஞ்சம் வாங்குறது குறையெவே இல்லை, நானும் ரினுவல் பண்ண முயர்சி பண்ணும்போதெல்லாம் புரோக்கர்கிட்ட போன்னு அனுப்பி வச்சிடுறாங்க, இதுக்கு எப்பதான் விமோசனம் கிடைக்குமோ?

அன்பரசன் said...

சிம்ப்ளி சூப்பர்..

ஹேமா said...

ஜோதிஜி...இணையத்தில எழுதியே (அடிச்சுத்) தூள் கிளப்புறதா எங்கயோ சத்தியம் பண்ணீட்டீங்க போல.......!

மொக்கராசா said...

கட்டுரை அருமை, ஆனால் இதற்கு தீர்வு தான் என்ன,வளர்ந்த நாடுகளில் மக்கள் புரட்சி நடந்தது போல் ஏன் இங்கே நடபபதில்லை.

http://thavaru.blogspot.com/ said...

இரண்டு கழிப்பறை கட்டிவிட்டு தொழிலாளி இருநூறு பேருடைய சுகாதரம் பேணும் குறுகியமனம் கொண்ட முதலாளிகள் செய்யும் கூத்து இது.

உட்கார்ந்து செலவு பண்ணும் அளவிற்கு அரசாங்கத்தையும் தொழிலாளிகளையும் ஏமாற்றி சம்பாதித்தவர்களுக்கு தான் சுகாதாரமா அப்படின்னா...

அவர் அவர்களுடைய வீட்டில் திறக்கப்படாத கழிப்பறைகள் எத்தனையோ? கழிப்பறைகள் இருக்கும் ஆட்கள் இருக்காது. சம்மந்தமே இல்லாது வகை தொகை இல்லாத காசுக்காய் ஆளாய் பறப்பவர்களின் ஈன செயல் இது.

எனக்கு இவ்வளவு வெட்டு நீ எப்படி வேனாலும் இருந்துக்க சொல்ற கேடு கெட்ட அரசியல் மற்றும் அரசாங்க அதிகாரிகள் இருக்கும் இது தொடரும் அன்பின் ஜோதிஜி.

Unknown said...

சரிதான் ஆன இறையன்பு சில நாட்களில் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்படுவார் பாருங்க... கருப்பு மனம் கொண்ட சாய தொழில் அதிபர்கள்+ மாசு மனம் கொண்ட மாசு கட்டுபாடு அதிகாரிகளின் கொள்(ளை)கை கூட்டணி இதை சாதித்து காட்டும்.

நிகழ்காலத்தில்... said...

நிச்சயம் அதிகாரிகளே இறையன்புக்கு ஆப்பு ஆவார்கள் என நினைக்கிறேன்:))

ஆமா ஏன் இந்த பட்டன் ஜிப் டையிங்க விட்டுட்டீங்க.. நகரின் எந்த சின்ன சந்திலும் கழிவு நீர் கலராக ஓட இவர்கள் மட்டுமே காரணம்.

நிச்சயம் சுமார் பெரிய 50 டையிங் பேக்டரியின் தண்ணீருக்கு இணையாக இவர்க்ள் வெளியேற்றும் கழிவு நீர் இருக்கும்:(

நடக்கட்டும், எல்லாம் நன்மைக்கே...

Saminathan said...

//ஆனால் அதிலும் அரசாங்கம் கெட்டியாக ஆப்பு வைத்தது. எவரவர் இந்த நிதியை தாங்கள் சார்ந்துள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு பயன்படுத்த வேண்டும் நினைக்கிறார்களோ அவரவர் தனிப்பட்ட முறையில் வங்கி பிணைத் தொகை கொடுக்க வேண்டும் என்றது. //

தவறான தகவல். மீண்டுமொருமுறை சரிபார்க்கவும்.
மற்றபடி நல்லதொரு உபயோகமான பதிவு. நன்றி !

Saminathan said...

//ஆனால் அதிலும் அரசாங்கம் கெட்டியாக ஆப்பு வைத்தது. எவரவர் இந்த நிதியை தாங்கள் சார்ந்துள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு பயன்படுத்த வேண்டும் நினைக்கிறார்களோ அவரவர் தனிப்பட்ட முறையில் வங்கி பிணைத் தொகை கொடுக்க வேண்டும் என்றது. //

///தவறான தகவல். மீண்டுமொருமுறை
சரிபார்க்கவும். ///

மன்னிக்கவும், உங்கள் செய்தி சரியானதே. இதுவரை. வங்கிப் பிணைத்தொகை இன்னமும் அமலில் தான் உள்ளது.(விலக்கும் அளிக்கப் படலாம்.)

தவறான தகவலுக்கு வருந்துகிறேன்...

ஜோதிஜி said...

நன்றி சாமி.

மீண்டும் ஒரு முறை செய்தி கொடுத்தவர்களிடம் கேட்ட போது நீங்க சொன்ன மாதிரியே வங்கி விலக்கு கொடுக்க வேண்டும் என்பதை எதிர்பார்த்துக் கொண்டுருப்பதாக தெரிவித்தார்கள்.

உங்கள் அக்கறைக்கு நன்றி சாமி.

நன்றி சிவா.

செய்தி கொடுத்த நண்பர் என்னைத் திட்டிக் கொண்டுருக்கிறார். எப்போதுமே ஏன் பாதியை மட்டுமே எழுதுகிறாய் என்கிறார். ஏற்கனவே என்னுடைய ஒவ்வொரு தலைப்பும் இரண்டு தலைப்புக்கு சமமாக இருக்கிறது என்று ஒரு முறை மயில் வந்து சொல்லிவிட்டு போனார். சற்று பயமாக இருக்கிறது சிவா. நீங்க சொன்ன பிறகு அந்த மக்களைப் பற்றி யோசித்துப் பார்க்கின்றேன்.

ஜோதிஜி said...

வினோத்

ரொம்ப ரசிக்கும்படி எழுதியிருக்கீங்க. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று?

Unknown said...

மாற்றம் மெல்லத்தான் வரும், ஆனால் அதற்குள் நாமெல்லாம் செத்துபோவோம் ....

ஜோதிஜி said...

தவறு

கம்யூனிச சிந்தாந்தம் போல் இருக்கிறதே?

மொக்கராசா

நாமெல்லாம்? வேண்டாம் உங்க தலைப்புக்குள் பெயருக்குள் இருக்கிறது.

ஹேமா பயமுறுத்த வேண்டாம்.

நன்றி அன்பரசன்.

ஜோதிஜி said...

சுரேஷ்

உங்களை நினைக்கும் போது ரொம்ப பெருமையாயிருக்கு. நிச்சயம் உங்களைப் பற்றி எழுத வேண்டும்.

தொடர்வாசிப்புக்கு நன்றிங்க ஆனந்தி.

செந்தில் நீங்க சொல்வது நிதர்சனமான உண்மை.

arasan said...

அருமையான பகிர்வு ....

நல்ல எழுத்தோட்டத்தில், நிறைய விசயங்களை சொல்லி இருக்கின்றீர்....

http://thavaru.blogspot.com/ said...

கம்யூனிச சிந்தாந்தம் போல் இருக்கிறதே?

அப்படி இல்லீங்க அன்பின் ஜோதிஜி..காசு..காசு..இந்த காசு க்காகவும் இயற்கையை வீணாக்கி அதனால பத்து மனிதர்கள் கஷ்டம் எனும்போது அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் உணரும் அளவிற்கு நம்முடைய கரு்த்தை பதிவிட வேண்டும்
என்ற ஆவல்.

அம்பாள்முத்து said...

அருமை ஜோதிஜி,
நிகழ்கால திருப்பூரில் நியாயமான மிக சில முதலாளிகளும் இருக்கிறார்கள் ஆனால் அநியாயம் செய்யும் அதிகம் பேருடன் அனுசரிக்க முடியவில்லை என்பதே உண்மை.

Thekkikattan|தெகா said...

அடுத்த தெருவில் இருப்பவர்களைப் பற்றியே நம்மால் கவலைப்பட நேரமில்லாமல் ஓடிக் கொண்டுருக்கும் போது எப்படி அடுத்த தலைமுறையைப் பற்றி யோசிக்க முடியும்? //

இதுதான் உலகம் தழுவிய முறையில் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. இந்த பூகோளத்தை மாசு ஏற்றி சிதைத்துக் கொண்டிருக்கும் மானுடத்தின் அடிப்படை இயக்கம் இந்த கண்மூடித்தனமான ஓட்டம், ஆட்டிட்யூட்.

கழிவுகள் சுத்தகரிப்பு என்பது தொழிலின் ஒரு பகுதியாக நினைத்து பாவிப்பதில் அப்படி என்ன குஷ்டம். அதனையிம் ஒரு மின்சாரச் செலவு, தண்ணீர் செலவு, தொழிலாளியின் கூலி அடிப்படையில் பார்க்க கத்துக் கொண்டிருந்தால் - இப்படியாக பூமியின் 150 அடி வரைக்குமே கூட நச்சுக்களும், சாயத்தின் நிறமும் கூட அடைந்து அங்கிருந்து அது நச்சாக நமது உடம்பினுள் சென்றுக் கொண்டிருக்காதே!

என் தொழிலுக்கு நான் வாங்கும் தண்ணீரின் அளவுடன், அதே அளவிற்கு சுத்தகரிப்பிற்கென (sewage base pay) பணத்தையிம் கட்டி வருகிறேன். இதனில் எந்தப் பகுதியில் வாழும் முதலாளி லூசர், வின்னர்? பணத்தை தவிர்த்து சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மனிதர்களின் சுகாதாரம் என்பதனை கணக்கில் கொண்டால்...??

தாராபுரத்தான் said...

அபாரமான பார்வை...தொடர்வதை எதிர்பார்க்கிறேன்ங்க.

'பரிவை' சே.குமார் said...

திரு. இறையன்பு நேர்மையாளர்.தேவகோட்டை கலையிலக்கியப் பெருமன்ற விழாவுக்காக அவரை நானும் எனது நண்பனும் மதுரையில் இருந்து தேவகோட்டைக்கு காரில் அழைத்துப் போனபோது அவர் பலவிசயங்கள், குட்டிக்கதைகள் என பேசிக் கொண்டே வந்தார். விழா முடிந்ததும் அவரை காரில் அனுப்ப நினைத்தபோது நாங்கள் இருவரும் அவருடன் மதுரை வரை வரவேண்டும் என்றார். எங்கள் ஐயா வேறு ஆட்களை அனுப்பட்டுமா என்றதற்கு நாங்கள்தான் வரவேண்டும் என்றார். பின் அவருடன் காரைக்குடியில் ஒரு சிறு மீட்டிங், அதன் பின் குன்றக்குடி அடிகளார் சந்திப்பு எல்லாம் முடித்து மதுரையில் அவரது இல்லத்தில் விட்டுவிட்டு திரும்பினோம். அதன் பிறகு கடிதத் தொடர்பு எங்களுக்குள் இருந்தது. இந்த பாலைவன பூமிக்கு வந்த பிறகு நான் தொலைத்த நட்புக்களில் அவரும் ஒருவர்.
நல்ல பகிர்வு அண்ணா.

சென்னை பித்தன் said...

திருப்பூரை விட்டு வந்து 30 ஆண்டுகள் ஆகி விட்டன.உங்கள் பதிவைப் படிக்கும்போது, கவலையும்,வருத்தமும் ஏற்படுகிறது.ஒரு நல்ல தீர்வு எப்போது வரும்?

உமர் | Umar said...

சிறப்பான கட்டுரை.

ஜோதிஜி said...

என்ன கும்மியாரே. நேற்று வீட்டுக்கு வந்திருந்த முமு கூட இதை படித்து விட்டு ஆச்சரியப்பட்டு விட்டார். அதைப்பற்றி தனியாக பேசுவேன்.

Thenammai Lakshmanan said...

சரி ஜோதிஜி இதுக்கெல்லாம் என்னதான் தீர்வு..

முதல்ல உங்க ஊர்ல நல்ல தண்ணி பைப்பையும்., சுகாதாரமான கழிவறைகளையும் வேலை செய்வோருக்கு கொடுக்கணும்..

சிவகுமாரன் said...

சமூக விழிப்புணர்வுள்ள பதிவு. நான் பணிபுரிவது ஒரு கெமிகல்( எரிசாராய ) நிறுவனத்தில் தான். மாசுக்கட்டுப்பட்டு விதிகளுக்கு உட்பட்டு, தமிழகத்தில் முதன்முறையாக zero discharge பெற்றிருக்கிறோம் என்பதில் பெருமை கொள்கிறோம்.

வனம் said...

வணக்கம் ஜி ;

ம்ம்ம் இந்த தொழிலுக்குள்ளேயே இருந்து கொண்டு மற்றவர்கள்போல் அய்யோ எங்களால் வாழவே முடியவில்லை என கண்ணீர் வடிக்காமல் உண்மையிலேயே எங்கு தவறு இருக்கலாம் என்பதை வெளிப்படையாக எழுதியதற்கு நிச்சயம் உங்களுக்கு ஒரு ஓ.....

(நமக்கு மனசாட்சி இருக்கின்றது என தெரிகின்றது )

" பணத்தாசை என்பது ஒரு மனிதனை எந்த அளவிற்கு கேவலமாக மாற்றும் என்பதை உணர முடியும் "

இதை இதைத்தான் தினமும் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்.

ஆனா ஒரு விடயம்

இதை நான் மூன்று முறை படித்து விட்டேன் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை.

இறையன்புவிடம் தவறா ?
சாயப்பட்டரை முதலாளிகளிடம் தவறா ?
மாசு கட்டுப்பபாடு வாரிய ப(பி)ணந்திண்ணிகளிடம் தவறா ?
தொழிலாளர்களுக்கு இழப்பா ?
இந்திய பின்னலாடை தொழிலுக்கு இழப்பா ?.........

ஒன்னும் தெளிவான முடிவுக்கு வர முடியல.

நன்றி

பழமைபேசி said...

Materialistic economy என்பதன் பாதிப்பு ஊர்ல அதிகமுங்க.. அதற்கான காரணி யார்?

ஜோதிஜி said...

சிவகுமரன் ஒரு ஊழியர் தன் நிறுவனத்தை இந்த அளவிற்கு பெருமையாய் பேசும் அளவிற்கு இருப்பதே மகிழ்ச்சியாய் உள்ளது. நன்றிங்க.

தேனம்மை பாதி அளவுக்கு தேறியிருக்கு. இன்னும் மாற வேண்டியது நிறைய இருக்கு.

வனம் பழமைபேசி

இரண்டு பேருக்குமே ஒரு குட்டிக்கதை நீதி தான் என் நினைவுக்கு வருகின்றேன்.

அறிவுக்கு மட்டும் தான் அறிவுக் கண் திறக்க வேண்டும் என்கிறார்கள்.

ஆனால் பணத்துக்கு? கண்ணாவது மண்ணாவது?

சேர்க்கத் தெரிந்தவன் மனதில் இது போன்ற கருமாந்திரங்கள் இருந்தால் பணமே வந்து சேராதாம்?

ஜோதிஜி said...

சென்னை பித்தன் உங்கள் வயதைப் பார்த்து திகைத்துப் போய்விட்டேன். உங்களுக்கு மேலே உள்ள தாராபுரத்தான் அய்யாவுக்குஅடுத்த ஆள் நீங்க தான் போலிருக்கு.

தாராபுரத்தான் அய்யா விழாவுல கணகம்பீரமாக இருக்கீங்க.

ரோஸ்விக் said...

இதனால் சுற்றுபுறம் காக்கப்படுமே...

இந்த தொழிலை தொடங்க முன்வருபவர்கள் உரிய வசதிகளுடன் மீண்டு(ம்) வரட்டும். தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு கிடைக்காமலா போய்விடும்?

இதில் பல முதலாளிகள் பென்ஸ் காரில் வருபவர்கள்தானே. லாபத்தின் சதவீதம் குறைந்தாலென்ன? அவர் மட்டும் சுகமாய் வாழ்ந்துவிட்டுப் போகவா இந்த பூமி. அவரது சந்ததியர்களுக்கும் இந்த பூமி சுத்தமாய் வேண்டும்தானே!

கடன்தொகையை அரசு வசூலிக்கும் விதத்தில் வசூலிக்கட்டும்.

தனசேகர் said...

நல்லது நடக்க எதிர்பார்ப்போம் !

வங்கி பிணைத் தொகை அடுத்த தேர்தல் இலவசமாய் அறிவிக்கப்படாமல் இருந்தால் சரி ! தொழிலாள‌ர்களின் நலன் , வேலை செய்யும் தொழிலகங்களின் வசதி வாய்ப்புகள் பற்றி பல கண்டிப்புகள் இடும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த சாயப்ப்பிரச்சினையை எப்படி விட்டு வைக்கின்றன ?

Unknown said...

தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

சேக்காளி said...

மக்களிடையே மனித நேயம் வளர்ந்தால் இது போன்று ஆதாயத்திற்காக(எல்லா துறைகளிலும்) அடுத்தவர் நலன்களை கெடுக்கும் நிகழ்வுகள் குறைய வாய்ப்பிருக்கிறதா?