Saturday, November 27, 2010

பெண் நட்பூ

நட்பு, தோழமை, ப்ரியம், பரஸ்பர புரிந்துணர்வுகள் போன்ற பல வார்த்தைகள் சம காலத்தில் வலுவிழந்து கொண்டுருக்கிறது. ஒவ்வொருவரும் போட்டியாளர்களாக மாறி வரும் உலகில் புனிதமான உறவுகளுக்குண்டான அர்த்தங்களும் மாறிக் கொண்டே வருகின்றது..

ஒரே தாய் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகள் சொத்துக்காக அடித்துக் கொள்வது முதல் பாரபட்சம் காட்டும் பெற்றோர்கள் வரைக்கும் அவரவருக்குண்டான அவஸ்ய தேவைகளை மனதில் வைத்துக் கொண்டு போலித்தனமாக முகமூடி அணிந்து கொண்டு தான் இந்த வார்த்தைகளை பயன்படுத்திக் கொண்டுருக்கிறார்கள். 


ஒவ்வொரு சமயத்திலும் பள்ளி முதல் கல்லூரி வரையிலுமான நான் பழகி வந்த நண்பர்களை அவ்வப்போது நினைத்துப் பார்த்துக் கொள்வதுண்டு.  முதல் வகுப்பு முதல் பத்து வரைக்கும் என்னுடன் ஒரே பெஞ்சில் இருந்த கோவிந்தராஜனை விட ஒன்பதில் அறிமுகமான மாதவனுடன் அதிகம் நெருக்கமாய் பழகி ஆழமான வேருடன் கிளை பரப்பி நிற்க முடிந்துருக்கிறது.  அதுவே இருவரையும் பல நிலைகளிலும் ஒன்று சேர வைத்திருக்கிறது. இடையில் புகுந்த சிலரால் இருவரையும் பகையாளியாகவும் மாற்றி இருக்கிறது.

அற்ப காரணங்கள் இருவரையும் புரட்டிப் போட்டு தடம் மாறி வெவ்வேறு பாதையில் போய்க் கொண்டுருந்தாலும் இருவரிடத்திலும் இருக்கும் ஆழமான அன்பு மட்டும் இன்னும் மாறாமல் இருக்கிறது. இருவருமே இன்று வரையிலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடித்துக் கொண்டுருந்த போதிலும் கூட.

அவனுடன் கடந்த பத்து வருடங்கள் பேச்சு வார்த்தை இல்லையென்ற போதிலும் ஊரில் இப்போது கூட மற்றவர்களிடத்தில் " ஏன்டா அவன் என்னமோ எழுதிக்கிட்டு இருக்கானாம்ல" என்று மற்றவர்களிடம் கேட்டு இந்த வலைதளத்தை படிக்க முடியா சூழ்நிலையில் வேறொரு வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டுருக்கின்றான். 

மனதிற்குள் இருக்கும் ஆசையை வெளியே காட்டிக் கொள்ளாமல் அங்கலாய்ப்பது வரைக்கும் அவனின் ஏக்கம் இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டுருக்கிறது. ஆனால் அளவாய் நிதானமாய் என்னுடன் இருந்த கோவிந்த்ன் இந்த வலை எழுத்துக்களை சமீபத்தில் உள்நுழைந்து படிக்க ஆரம்பிக்க இன்று "உன்னை நினைத்து பெருமையாய் இருக்கு" என்பது வரைக்கும் புரிந்துணர்வாய் தொடர்ந்து கொண்டுருக்கிறான். 

எந்த இடத்திலும் எதிர்பார்ப்பு அதிகம் இல்லாத போது உருவாகும் அன்பு என்பது சாகும் வரைக்கும் நம்மோடு தான் இருக்கும். சாசுவதமென்பது நம் கையில் மட்டுமே.  சாகாவரம் கூட நம்முடைய வாழ்க்கை முறையில் தான் இருக்கிறது..பழமொழிகள், அறிவுரைகள் என்பதைவிட ஒவ்வொருவரின் அனுபவங்கள் கொடுக்கும் பாடத்திற்கு இணையான வேறு ஏதும் உலகில் உண்டா?

இரு நபர்களை ஒன்று சேர்க்க ஓராயிரம் காரணங்கள் இருக்கலாம்..  திரைப்படம், பாடல்கள், ஓவியம், அரட்டை, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், மற்ற கெட்ட பழக்கங்கள் என்று ஒரே பாதையில் இரு நபர்களை கொண்டு வந்து சேர்க்கும். ஆனால் இருவரும் பிரிவதற்கான காரணங்களை பட்டியலிட தேவையிருக்காது. பணமும் மனமும் தான் காரணமாகயிருக்கிறது. 

நான் ரயில் பயணத்தில் சந்தித்த பெண்ணுக்கும் எனக்கும் முன் பின் பழக்கமோ வேறெந்த வகையிலும் அறிமுகமோயில்லை.அவருடன் நான் பேச வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உருவானதற்கு முக்கிய காரணம் திருப்பூர். 

திருப்பூர் சார்ந்த நபர் என்றதும் அந்த எண்ணம் இயல்பாகத் தோன்றியது. நான் பேசத் தொடங்கியதும் அதுவே தொடர்பு எல்லைகளுக்கு அப்பாலும் தொடர்ச்சியாக நீட்டித்துக் கொண்டு செல்ல இந்த ஆடை உலகமே காரணமாக இருந்து.

அரட்டை என்பதில் தொடங்கி இருவருக்குள்ளும் இருந்த ஏராளமான சந்தேகங்களை தீர்த்துக் கொள்வது வரைக்கும் முடிவில்லாத நிலையாக போய்க் கொண்டுருந்தது. அவர் என்னைப் பற்றி விசாரித்து முடித்ததும் அவரின் அறிமுகம் தொடங்கியது. அப்போது தான் அவரின் தற்போதைய நிலை குறித்து புரிந்து கொள்ள முடிந்தது 

அவரின் பெயர் நாகமணி. ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் ஆடைகள் பிரிவின் இந்திய பிரதிநிதியாக பணியாற்றிக் கொண்டுருக்கிறார். .உலக நாடுகளை சுற்றி வருவதென்பது இவரைப் போன்றவர்களுக்கு உள்ளூர் சுற்றுவது போல. வாங்கும் சம்பளம் பெரும்பாலும் அமெரிக்கன் டாலரில் தான் இருக்கும்.  வரி பிரச்சனையில்லாத வாழ்க்கை.  வாங்கும் சம்பளத்தை வசதிக்ளுக்காக தொலைக்க வேண்டிய அவஸ்யமில்லாமல் எல்லாவிதங்களிலும் வீடு தேடி வரும் வாழ்க்கையை பெற்றவர்.

இது போன்ற பணிகளில் இருப்பவர்கள் வானத்தில் இருந்து குதித்த தேவ தூதர்கள் போலவே இங்கு நடந்து கொள்வார்கள்.

இரண்டு காரணங்கள். 

ஒன்று இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இவரைப் போன்றவர்கள் மிக முக்கியமானவர்கள்.  மற்றொன்று இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் வெளிநாட்டு கலாச்சாரத்தை ஒத்ததாகவே இருக்கும்.  நம்மவர்களுக்கு பிடிக்க சொல்லவா வேண்டும்.  வாய் கொப்பளிக்கக்கூட சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கேட்கும் இவர்களின் நடவடிக்கைகள் நான் ஏற்கனவே அறிந்ததே.

என்னுடைய அனுபவத்தில் வட நாட்டு இந்தியர்களைத் தான் இது போன்ற பதவிகளில் அதிகம் பார்த்துருக்கின்றேன். நம்மவர்கள் இருந்தாலும் அல்லக்கை நொல்லக்கை போலவே தான் இருப்பார்கள். ஒவ்வொருவரும் டெல்லி மும்பாயிலிருந்து பல ஆண்டுகள் திருப்பூர் வந்து போய்க் கொண்டு இருந்தாலும் அல்லது இங்கேயே அலுவலகம் வைத்திருந்தாலும் வாயிலிருந்த ஆங்கிலம் மட்டுமே கொப்பளித்துக் கொண்டுருக்கும்.

தமிழ் பேசத் தெரிந்தாலும் மறந்தும் கூட வந்து விடாது.  ஆனால் தனக்கான பிச்சைக்காசை கேட்கும் போது குழைவில் வரும் மழலைத் தமிழைக் கேட்க நம் காதுகள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். 

ஆனர்ல் அந்த பெண்ணின் உரையாடல் அவரின் பதவி குறித்து நான் மனதில் வைத்திருந்த அத்தனைக்கும் எதிர்மாறாய் இருந்தது. 


அவர் பேசிய வார்த்தைகளில் அவஸ்யமில்லா தருணங்களைத் தவிர ஆங்கில வார்த்தைகளை தேடி கண்டுபிடிக்க வேண்டிய அளவிற்கு பாசாங்கு இல்லாமல் பேசிக் கொண்டுருந்தார்.

எங்களின் உரையாடல்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தது. 

உள்ளேயிருந்த மற்ற நான்கு பேர்களும் வயதானவர்களாக இருந்த காரணத்தால் அவர்களின் உறக்கம் என்னை யோசிக்க வைத்தது. ஆனால் அவர் மடை திறந்த வெள்ளம் போல உற்சாகமாக ஒருக்களித்து படுத்தபடியே என் முகம் பார்த்து பேசிக் கொண்டுருந்தார்.  ரயில் பெட்டியின் உள்ளே எறிந்து கொண்டுருந்த மெல்லிய வெளிச்சத்தில் காற்றில் அவரின் கற்றை சுருள் முடிகள் புதுக் கவிதைகளை எழுதிக் கொண்டுருந்தது. அவரின் இயல்பான தமிழும் எதார்த்தமான வார்த்தைகளும் எனக்குள் இருந்த அவர் குறித்த சந்தேகங்களை அதிகப்படுத்திக் கொண்டேயிருந்தது.  

பன்னாட்டு நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள், அவர்களின் தந்திரங்கள், தரம் குறித்த எதிர்பார்ப்புகள், திருப்பூரில் வாழ்ந்தவர்களின் சரித்திரங்கள், வீழ்ந்தவர்களின் தரித்திர பட்டியலுமாய் இருவரின் பேச்சுகளும் தண்டவாள ரயில் போல ஓரே மாதிரியான சீரான வேகத்தில் ஓடிக் கொண்டுருந்தது. அவரின் உலக அறிவுக்கும் என்னுடைய உள்ளூர் அறிவுக்கும் பெரிதான இடைவெளிகள் தோன்றாமல் இருக்க இருவருமே மனதிற்குள் வியப்புக்குறியை குறித்துக் வைத்துக் கொண்டுருந்தோம். 

பேச்சு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. 

சொந்த வாழ்க்கை பகிர்தல் தொடங்கியது. வெவ்வேறு பாலினமாக இருந்தாலும் ஏதோவொரு நம்பிக்கை இருவருக்கும் பொதுவானதாக இருக்க அதுவே அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவியாய் இருந்தது. 

குடும்பம், குழந்தைகள் என்று பேசத் தொடங்கிய போது அவரின் முகமும் மாறத் தொடங்கியது.  தொடங்கியதும் தொடர விரும்பியதும் அவராக இருந்தாலும் தொழில் குறித்து உரையாடிய போது இருந்த அவரின் வேகம் சற்று மட்டுப்படத் தொடங்கியது.  நான் உணர்ந்து ஒதுங்க நினைத்த போதிலும் பெண் குழந்தைகள் என்றதும் அவர்களைப் பற்றி மிக ஆர்வமாய் விசாரிக்கத் தொடங்கினார். இது போன்ற குறுகிய பயணங்களில் உருவாகும் நட்பென்பது வினோதமானது.  சில சமயம் வீபரீதம் வரைக்கும் கொண்டு வந்து சேர்த்து விடும். 

ஜெம் கிரானைட் வீரமணி அவர்கள் ஒரு விமான பயணத்தில் தன அருகே அமர்ந்திருந்த பெண்ணுடன் உரையாடத் தொடங்கியதன் விளைவே அமெரிக்காவின் பிரபல்ய கட்டிடத்திற்கு கிரானைட் கல் பதிக்கும் ஒப்பந்தம் கிடைத்ததாக ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.  ஆனால் என்னுடைய நண்பர் ஒருவர் வாழ்க்கையில் நடந்து மற்றொருமொரு விபரீத சம்பவம் இந்த சமயத்தில் என் நினைவில் வந்து போனது. 

என்னுடைய நண்பர் நாககோவிலிருந்து திருப்பூருக்கு வந்து கொண்டுருந்தார். பேரூந்து இருக்கையில் அவர் அருகே அமர்ந்த நபரும் திருப்பூர் என்பதால் இருவரும் மிகுந்த சந்தோஷமாகவே பரஸ்பரம் பலவற்றையும் பறிமாறிக் கொண்டு வந்து இருந்திருக்கிறார்கள். . பகவான் வேறொரு வகையில் தன் விளையாட்டை தொடங்க ஆரம்பித்தது வினை. 

என்னுடைய நண்பர் பேச்சு வாக்கில் தனக்கு பிடித்த ஸ்டார் நடிகர் பெயரை வெகு சிலாக்கியமாக பேச பேரூந்தில் அறிமுகமானவருக்கும் பயங்கர சந்தோஷம்.  காரணம் அவர் அந்த நடிகரின் வெறியர்.  கேட்கவா வேண்டும்.  சொந்தக் கதை சோகக்கதையிலிருந்து தடம் மாறி அந்த ஸ்டார் நடிகரின் கதையின் உள்ளே நுழைய இருவரும் கட்டிபிடி வைத்தியர்களாக மாறிவிட்டனர். இடையே ஒரு பேரூந்து நிறுத்தத்தில் வண்டி நின்றது.  அறிமுகமான நண்பர் கட்டாயப்படுத்தி என் நண்பரை உள்ளே இருந்த டாஸ்மார்க் கடைக்கு அழைத்துச் செல்ல இருவரும் உற்சாகத்தில் மிதக்க அவர்கள் வந்த பேரூந்து இவர்களை காணாமல் கிளம்பி விட்டது.  

அடித்த மப்பில் இருவரும் நடிகரைப் பற்றி பேசிக் கொண்டே செல்ல என் நண்பர் தெரியாத்தனமாக ஒரு வார்த்தையை விட்டு விட்டார்.  ஸ்டார் நடிகரின் பழைய வாழ்க்கையில் திருச்சி விமான நிலையத்தில் அந்த நடிகர் மன அழுத்தத்தில் இருந்த சமயத்தில் நடந்த நிகழ்வுகளை பேசத் தொடங்கி விட மப்பு உச்சத்தில் இருந்த நண்பருக்கு கோபம் தலைக்கேறி விட்டது. வாக்குவாதம் தொடங்கி, தொடர்ந்து முற்றி முடிந்த போது ஐந்து நிமிடத்தில் உடைத்த பீர் பாட்டில் என் நண்பரின் கையில் நுழைய உயிர் தப்பினால் போதும் என்று திருப்பூர் வந்து சேர்ந்தார். 

நான் கேட்டு முடித்த போது நண்பர் வருத்தப்படுவாரே என்று வெளியே வந்து சிரித்து விட்டு மீண்டும் மீண்டும் அடக்க முடியாமல் வாயில் தண்ணீர் குடிப்பது போல நடித்து புரையேற்றத்துடன் அவர் அருகில் நின்று ஆறுதல் சொன்னேன். இதை மனதில் நினைத்துக் கொண்டு அந்த பெண்ணிடம் வேறு விதமாக கேட்டேன். 

"உங்களுக்கு நிச்சயம் காலையில் நிறைய வேலைகள் இருக்கும்.  தூங்குங்களேன்" என்றேன்.

அதற்கு அவரின் பதில் வேறுவிதமாக இருந்தது.

"அது என்ன உங்கள் குடும்பத்தைப் பற்றி பேசி விட்டு என் குடும்பக் கதையைக் கேட்க விரும்பமில்லையா?" என்றார்.

ஆமாம் இல்லை என்று சொல்லத்தெரியாமல் மையமாக புன்னகைத்தேன்.
அவரே தொடர்ந்தார். 


"உங்களுக்கு விருப்பம் என்றால் வாசல்படிக்கு அருகே சென்று பேசலாமா?" என்றார்

பயமும் படபடப்புமாய் ரயில் பெட்டியின் இரண்டு வாசலுக்கும் நடுவில் எதிர் எதிரே நின்று கொண்டுருந்தோம்.  

ரயிலின் வேகம் பன்மடங்கு அதிகமாயிருந்தது. இரண்டு பக்கமும் வெளியே தெரிந்து கொண்டுருந்த வெளிச்சம் இருட்டு, ரயில் சத்தம், என்று அத்தனையும் ஒரு கணம் என் காதில் கேட்கவில்லை.  காரணம் அந்த பெண்மணி வீசிய வெடிகுண்டு.

வெடிகுண்டு வந்து என்னைத் தாக்கியது.

"என் அம்மா ஒரு பாலியல் தொழிலாளி" என்று தொடங்கினார்..

38 comments:

ராஜ நடராஜன் said...

பதிவின் சாரத்துக்கு இப்பொழுது போகிறேன்:)

ராஜ நடராஜன் said...

//என்னுடைய அனுபவத்தில் வட நாட்டு இந்தியர்களைத் தான் இது போன்ற பதவிகளில் அதிகம் பார்த்துருக்கின்றேன். நம்மவர்கள் இருந்தாலும் அல்லக்கை நொல்லக்கை போலவே தான் இருப்பார்கள்.//

ஏனோ சிரிப்பு வருவதை தவிர்க்க இயலவில்லை:)

நம்மவர்கள் சரக்கு இருந்தாலும் வெளிக்காட்டிகொள்வதில்லையென்றும் எடுத்துக்கொள்ளலாமா?

ராஜ நடராஜன் said...

கதை சொல்லி ஜோதிஜி:)

Bibiliobibuli said...

பெண் நட்பூ என்று தலையங்கம் வரைந்து விட்டு முன் பாதி கட்டுரை பால்ய கால, தற்கால ஆண் நட்போடு நகர்கிறது.

பெண் "நட்பூ" என்றாலும், ஆண் "நட்பு" என்றாலும் ஒவ்வொருவரின் புரிதல்கள், அதற்கு அவர்கள் கொடுக்கும் அர்த்தம் நம்பிக்கை இவற்றைப்பொறுத்து தான் எல்லாமே.

இது உங்கள் பார்வை, அனுபவம், புரிதல்கள். இதை என்னால் பொதுமைப்படுத்த முடியவில்லை.

தவிர, //"என் அம்மா ஒரு பாலியல் தொழிலாளி" என்று தொடங்கினார்.. // என்று அந்தப்பெண்மணி சொன்னது உங்களுக்கு எந்தவிதத்தில் அதிர்ச்சியை கொடுத்திருக்கும் என்று மனக்கண்ணில் தெரிகிறது. அதனால் அதை கடைசி வாக்கியமாக முடித்து தொடர விட்டிருக்கிறீர்கள்.

Unknown said...

நட்பு பூக்கும் நேரம் பற்றி சரியாக சொல்லியிருக்கிறீர்கள், பழைய நண்பர்களை நாம் பார்க்காது போனாலும் நினைவுகளில் அவ்வபோது மீட்டேடுத்தே வருகிறோம்.. அப்புறம் நுனி நாக்கு ஆங்கிலம், முடிந்தவரை ஆடைகளில் அப்படியே மேற்க்கத்திய கலச்சாரம் கொண்ட நபர்களை நானும் சந்தித்து இருக்கிறேன், அப்போதெல்லாம் மனதிற்குள் சிரித்துக்கொள்வேன். கடைசியில் வைத்த வெடிகுண்டு வெடிக்க காத்திருக்கிறேன்...

ப.கந்தசாமி said...

ஆஜர் போட்டுக்கிறேன். கதை முடியட்டும்.

Paleo God said...

//கடைசியில் வைத்த வெடிகுண்டு வெடிக்க காத்திருக்கிறேன்..//

போதாது இன்னும் சஸ்பென்ஸ கூட்டுங்க! :))

ஜோ ஸ்னேகிதம் என்பது மனக் கதவுகளின் சாவி. ஒவ்வொரு கதவிலேயும் தென்றலையும், சோலையையும் எதிர்ப்பார்க்கலாகாது.

:)

Chitra said...

நன்றாக எழுதி இருக்கீங்க. தொடருங்கள்...... !!!

vinthaimanithan said...

//கதை சொல்லி ஜோதிஜி//
ராஜநடராஜன் வாய்க்கு ஒரு படி சீனி!

vinthaimanithan said...

சுவரஸ்யாமான கதைசொல்லியாகிவிட்டீர்கள்! நடத்துங்க நடத்துங்க!

சங்கரியின் செய்திகள்.. said...

நல்ல ஆரம்பம். வெகு சுவாரசியமாக போய்க்கொண்டிருக்கிறது.....தொடருங்கள்.

a said...

ஜோதிஜி : நல்லதொரு பதிவு. தாங்கள் குறிப்பிட்டிருக்கும் பெயர் நீங்கள் சந்தித்தவரின் உண்மை பெயரெனில் அதனை வெளியிடுவது அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்பது என் எண்ணம்.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

ஆஜர் போட்டுக்கிறேன். கதை முடியட்டும்

அதே,அதே

எஸ்.கே said...

தொடரட்டும்!
நன்றாக செல்கிறது!

Unknown said...

நட்பு நட்பூ நட்பூபூபூபூபூபூபூபூபூபூ

கிளியனூர் இஸ்மத் said...

கதையும் கருத்தும் மிக அருமை நண்பரே இது தொடரும்தானே?

http://thavaru.blogspot.com/ said...

பெண் இப்படிதான் என்று வரையறை செய்துள்ளவர்கள் யாரும் பெண்களிடத்தில் எடுத்தோம் தொடுத்தோம் என்று இருந்துவிட முடியாது. அவர்கள் பேசும் போதும் பழகும் போது சரி எச்சரிக்கை உணர்வுகளுடன் தான் செயல்படமுடியும்.

Thoduvanam said...

சுவாரஸ்யமா இருக்குங்க.அடுத்தது என்ன என்ற ஆவலை தூண்டிட்டிங்க!

Saminathan said...

எப்படித்தான் உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம்.....

ஜோதிஜி said...

சாமி படித்தவுடன் சிரித்து விட்டேன். வேறென்ன சொல்ல முடியும்? விதி சாமி விதி.

நன்றி காளிதாஸ். உண்மை தான் தவறு. மிகுந்த மகிழ்ச்சி இஸ்மத். வினோத் ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்க..........

பழனிசாமி எஸ்கே தொடர்வாசிப்புக்கு நன்றி.

சங்கரி இங்கும் ஒருவர் உண்டு. வருக வருக.

விந்ததையாரே பேசி முடித்துவிட்டு சென்றபோது உருவான முதல் வரி இருபது நிமிடத்திற்குள் உருவாகிவிட்டது.

கலக்குறீங்க சித்ரா. ஜொலிப்பு தான் போங்க.

யோகேஷ் உண்மையான பெயர் அல்ல. இந்த பெயர் என் வாழ்க்கையோடு வேறொரு வகையில் சம்மந்தப்பட்டது.

ஜோதிஜி said...

வணக்கம் கந்தசாமி ஐயா. ஷங்கர் என் எழுத்தை விட உங்கள் விமர்சனப் பார்வையை ரொம்பவே ரசித்தேன்.
செந்தில் இரண்டு பேருமே இன்னும் பல விதங்களில் பட்டிக்காட்டானுங்க தான்.


இது உங்கள் பார்வை, அனுபவம், புரிதல்கள். இதை என்னால் பொதுமைப்படுத்த முடியவில்லை.

ரதி இந்த விமர்சனத்திற்கு மறைமுகமாக திட்ட முடியாமல் பூந்தளிர் சாமி ஒரு விமர்சனம் கொடுத்துருக்கிறார். சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

ராஜநடராஜன் சற்று பெருமையாய் இருக்கிறது. அங்கிகாரம்... ம்ம்ம்ம்.......

ஜோதிஜி said...

நம்மவர்கள் சரக்கு இருந்தாலும் வெளிக்காட்டிகொள்வதில்லையென்றும் எடுத்துக்கொள்ளலாமா?


தமிழ் உதயம் போல கொடுக்கும் விமர்சனத்தில் ஒரு பதிவு எழுத வைத்துவிடுவீங்க போலிருக்கு.

நான் பார்த்தவரைக்கும் நம்மவர்களிடம் உள்ள திறமைகள் எதுவுமே வட மக்களிடம் நான் கண்டது இல்லை. அரசியல் வரைக்கும்...

ஆர்வம், விடாமுயற்சி, கிரகித்தல், அயராத உழைப்பு, அர்பணிப்பு இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்...........

இரண்டு பலவீனங்கள்.......

தான் மேலேறிச் சென்றாலும் அடுத்தவனை வர அனுமதிப்பதில்லை. வந்தாலும் ரணகளம் தான். அப்புறம் ரஜினி அடிக்கடி சுட்டிக்காட்டியபடி ஒருவரை இழுத்து எவரும் மேலே போகாமல் இருப்பது.....................

மிகப் பெரிய உதாரணம் கருப்பையா மூப்பனாருக்கு கிடைத்து இருக்க வேண்டிய பிரதமர் பதவி.

அடுத்து லாபி.

நம்மவர்களுக்கு ஆர்வம் இருப்பதும் இல்லை. அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ள விரும்பவதும் இல்லை.

கேரளா பக்கத்து மாநிலம் மட்டுமல்ல. நாம் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டிய மாநிலமும் கூட.

மூன்று பேர்கள்

ஒரு இனத்தையே மூடி மறைக்க என்ன பாடுபட்டு இருக்கிறார்கள் தெரியுமா?

இது பற்றி எழுத எழுத வார்த்தைகள் வந்து கொண்டேயிருக்கிறது.

இப்போது வேண்டாம்.

Unknown said...

சீக்கிரன் எழுதுங்க சார், சஸ்பென்ஸ் தாங்கலை

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல பதிவு,தொடரலாம்

Unknown said...

present sir

'பரிவை' சே.குமார் said...

நன்றாக எழுதி இருக்கீங்க. தொடருங்கள்.

Seiko said...

சரியான இடத்தில் நிறுத்தி, "கதை சொல்லி" ஆகி விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

//ஆனால் இருவரும் பிரிவதற்கான காரணங்களை பட்டியலிட தேவையிருக்காது. பணமும் மனமும் தான் காரணமாகயிருக்கிறது. //
நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்.

ரதி கேட்டதைப் போல், தலைப்புக்கு எதிராக, பள்ளி ஆண் நட்போடு ஆரம்பித்தது ஏன்? திரைப்படங்களில் "கேரக்டரைசேசன்" செய்வது போல், "நட்பு"க்கு செய்திருக்கிறீர்கள்?

சராசரி வட இந்தியர்கள், ஆங்கிலத்தை விட, இந்தியே அதிகம் பேசுகிறார்கள்.

மற்ற மொழிகள் (இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம்) போல, ஆங்கிலம் ஒரு மொழி. அவ்வளவே. மற்ற மொழிகளைவிட, ஆங்கிலத்தை பாடமாகவே படித்துவிட்டு, சரளமாகப் பேச வராத காரணத்தால், அதற்கு இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு விடுகிறது.

ஆங்கிலம் பேசுவதற்கும், அறிவிற்கும் சம்பந்தமில்லை (மொழி அறிவைத் தவிர). இங்கிலாந்தில் உள்ள பிச்சைக்காரன் கூட (உதாரணத்திற்கு மட்டும்) ஆங்கிலம் சரளமாகப் பேசுவான்??

பதிவு எப்படி தொடருமோ தெரியவில்லை. ஆனால், ஒரு வீழ்ச்சியிலிருந்து உயரே வந்திருக்கும் நாகமணி, வாழ்க்கையில் நிறைய சாதிக்க வாழ்த்துக்கள்.

ஜோதிஜி said...

சைக்கோ?????

தென்ன இத்தனை தெளிவா விமர்சனம் கொடுக்குறீங்க? ஆனா பெயரை அறிவாளி என்றல்லவா வைத்துருக்கவேண்டும்.

ஆண் நட்பு குறித்து என் எழுதினேன் என்று நீங்களே கேள்வியும் பதிலுமாய் எழுதியமைக்கு நன்றி.

நட்பு என்பது பொதுவானது.

ஆண பெண் என்பதெல்லாம் நாம் தான் உருவாக்குகிறோம்.

ஐஐடி கான்பூரில் படிக்கும் பெண்களும் ஆண்களும் பழகுவதை பார்த்து இருக்கீங்களா? அங்கே பாலினம் என்பது அடிபட்டு போய்விடுகிறது. இது போல பல விசயங்களைப் பற்றி பேசிக்கொண்டே போகலாம். இடம் பொறுத்து தான் நீ பெண்.

ஆணுடன் தள்ளி நின்று பழகு என்றெல்லாம் ஒதுக்கப்படுகிறது. இதுவே தான் நாடுகள் வரைக்கும் கலாச்சாரம் என்ற பெயரில் தள்ளிவைத்தலும் நடக்கின்றது.

உடைபட வேண்டும். அதற்கு உள்ளே மன உறுதி வேண்டும். இங்க எப்போது அது வரும்?

பெண் நட்பு என்பது இங்கு கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் எப்போது "சந்தர்ப்பம்" கிடைக்கும் என்பதாகத்தான் ஆண்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். சரிதானே?

அப்புறம் எங்கே இந்த நட்பூ பற்றி சிலாக்கியமாக பேச எழுத முடியும் நண்பா?

ஜோதிஜி said...

இரவு வானம்.

வாங்க. சஸ்பென்ஸை உடைச்சுடுலாம். சரியா.

விக்கி பதிவேட்டில் குறித்துக் கொண்டேன்.

செந்தில் பலமுறை நன்றாக எழுதுறீங்க. சுற்றி சுற்றி திரைப்பட உலகத்திற்கே போயிறீங்களே?

லெமூரியன்... said...

ஹ்ம்ம்.. நிறைய அதிர்வுகளை தாங்கி நிற்கிறேன் கடைசி வரியில்....
தொடருங்கள்...

ALHABSHIEST said...

முடிந்ததா? தொடருமா?

ஜெயந்தி said...

நம்முடைய அனுபவங்களே நமக்கு வாழ்க்கையில் நிறைய கற்றுத் தருகிறது. தொடர் விறுவிறுப்பாக செல்கிறது. தொடருங்கள்.

மங்கை said...

அருமை...அருமை..மனதின் அருகே உணரவைத்த பகிர்வு

Seiko said...

"சைக்கோ" அல்ல நண்பரே. "சீகோ" என்று அழையுங்கள்.
முந்தைய இரு பதிவுகளிலும் கலந்து கொண்டிருக்கிறேன். படித்துப்பார்க்கவும்.

ஜோதிஜி said...

லெமூரியன் அதிர்வல்ல. தொடரும் சரவெடி இது.

சிவா தொடர்தான். இந்த இடுகையே தொடர் போலத்தானே தொடக்கம் முதலே அமைந்து விட்டது.

ஜெயந்தி நன்றிங்க. வருக மங்கை.

மன்னிக்க சீகோ நண்பா. தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் வருகின்றேன். நன்றிங்க. அதென்ன சீகோ வாட்ச் கேள்விப்பட்டுருக்கேன். அதென்ன புதுமையான பெயர்.

சோழன் said...

"இருவரும் பிரிவதற்கான காரணங்களை பட்டியலிட தேவையிருக்காது. பணமும் மனமும் தான் காரணமாகயிருக்கிறது."
ஆணி அடிச்சி மொளகா தடவினமதிரி இருக்கு தல

ஜோதிஜி said...

சோழன் ரொம்பவே அற்புதமான தளத்தை வைத்துக்கொண்டு அதை சரியான முறையில் வெளியே கொண்டு வராமல் இருக்கீங்கன்னு நினைக்கின்றேன்.
தகவல் களஞ்சியமாயிருக்கு.

ரோஸ்விக் said...

இந்த இடுகைக்கு அழைச்சுதான் பேச முடியும். :-)