Wednesday, September 29, 2010

ஈக்கள் மொய்க்கும் உலகம்

குடும்பத்தின் கூட்டு குடித்தன வாழ்க்கை முடிவுக்கு வந்த போது ஒன்பதாம் வகுப்பு அறிமுகமாயிருந்தது.  வரவு செலவுகள் ஒன்றாகவும் வாழும் இடம் தனியாகவும் பேசி முடிவு செய்துருந்தார்கள். அந்த பெரிய கடைத் தெருவில் குறிப்பாக பேரூந்து நிலையத்திற்கு அருகே பெரிய வீட்டு வாழ்க்கை எனக்கு பல விதங்களில் உதவியாய் இருந்தது. .

வீட்டுக்கு அடுத்த வாசல் தட்டெழுத்துப் பயிலகம். இதற்குப் பின்னால் ரொட்டிக் கடை..  சாயங்காலம் என்றால் ரொட்டிக்கடையில் இருந்து விதவிதமான வாசனைகள் வந்து கொண்டுருக்கும். அருகே உள்ள சிறிய பாலத்தில் கூட்டணி அமைத்த நண்பர்களுடன் உட்கார்ந்து கொண்டு வருகிற போகிற மக்களை அளவெடுப்பதோடு ரொட்டிக்கடையில் அனைவரும் சேர்ந்து வாங்கிய வெஜிடபிள் பப்ஸ் தினறு திருப்தியாய் நகர்ந்து விடுவதுண்டு. பேரூந்து நிலையம். அருகில் உள்ள காரணத்தால் வந்து இறங்கும் அத்தனை பேர்களும் பாலத்தில் அமர்ந்துருக்கும் எங்களை தாண்டித்தான் செல்ல வேண்டும். பலரின் திட்டுக்களும் பாவாடை தாவணிகளின் தரிசனமும் இங்கிருந்து தான் தொடங்கியது.

பெயர் தான் பேரூந்து நிலையமே தவிர ஊரில் உள்ள பிச்சைகாரர்கள் கூடும் இடம்.  ஒரே ஒரு தகர டப்பா கூரை.  அதுவும் யாரோ ஒரு புண்ணியவான் தானமாக கொடுத்த இடம். யூ வடிவ ஒரு குட்டிச் சுவரை சுற்றி வந்து ஒவ்வொரு பேரூந்தும் சற்று நேரம் நின்று விட்டு நகரும்.,  இந்தக் குட்டிச் சுவருக்குள் சுற்றி வர சோம்பேறி பட்டுக்கொண்டு மேட்டுக்கடை பக்கமாக திருப்பிக் கொண்டு தனியார் பேரூந்துகள் நகர்ந்துவிடும். இதனால் பலரும் எப்போதும் மேட்டுக்கடை அருகே வந்து நின்றுவிடுவார்கள்.

கனத்த மழையென்றால் ஜனங்கள் முழங்கால் தண்ணீரில் சந்தையில் வாங்கிய நண்டு மீன்களுடன் கப்பு வாடையை கடத்திக் கொண்டுருப்பார்கள். டவுன் பஸ் வரும் போதே ஓட்டிக் கொண்டு வரும் ஓட்டுநர் ஒரு வினோதமான ஒலியை தொடர்ச்சியாக எழுப்பிக் கொண்டே வருவார். அதற்குள் அங்கு கூடியிருக்கும் மொத்த கூட்டமும் முண்டியடித்துக் கொண்டு தயாராய் இருப்பார்கள். உள்ளே நுழையும் போதே பாதிப்பேர்கள் ஓடும் வண்டியில் ஏற் முயற்சிக்க ஓரே களேபரமாக இருக்கும். பேரூந்து நின்றதும் பலரும் டயர் வழியே கால் வைத்து ஏறிக் கொண்டுருப்பார்கள். உள்ளே வடிவேல் பட சிரிப்பு போல் பார்க்க சுவராஸ்யமாக இருக்கும்,

அருகில் உள்ள அத்தனை கிராம மக்களுக்கும் குறிப்பிட்ட இந்த பேரூந்துக்களை விட்டால் வேறு வழியில்லை. ஒவ்வொரு புதன் கிழமையும் சந்தை நடக்கும்.  தொடக்கத்தில் கடைத்தெருவுக்குள் இருந்த சந்தை பிறகு விலலுடையார் பொட்டலுக்கு மாற்றினார்கள். இந்த பொட்டல் என்பது கருவேலக்காடும் காலையில் மலஜலம் கழிப்பவர்கள் வந்து கூடுமிடம். ஒரு ஓரமாக இருந்த மைதானத்தில் அவசரமாக கீற்று கொட்டைகளை உருவாக்கி சந்தை என்று உருவாக்கியிருந்தார்கள். 

அன்று தான் சுற்றியுள்ள அத்தனை கிராம மக்களும் ஒன்றாக வந்து கூடுவார்கள். அன்று மட்டும் இந்த பேரூந்தில் எள் போட்டால் எண்ணெய் போல் வழிந்து ஓடும் போலிருக்கும்.  தொத்தித்துக் கொண்டு தொங்கிக் கொண்டு வயிறு பெருத்த கர்ப்பிணி போல் அந்த டவுன் பஸ் நகரும் போது பத்தடி தள்ளி நின்று வேடிக்கை பார்த்த காலம் அது. நடத்துனரை விட்டு நகர்ந்த பேரூந்தில் கூரையில் அமர்ந்து இருந்த மக்கள் பின்னால் உள்ள ஏணிப்படி கம்பிகள் வழியாக கை கொடுத்து காப்பாற்றி அழைத்த சம்பவங்களும் உண்டு.

எட்டாம் வகுப்பு வரைக்கும் படித்துக் கொண்டுருந்த சரஸ்வதி வித்யா சாலை படிப்பு முடிவுக்கு வந்து அந்தப் பள்ளியும் பெண்கள் உயர்நிலை பள்ளி யாக மாறிப் போனது. எட்டாம் வகுப்பு முடிவுக்கு வந்த போது பள்ளி ஆண்டு விழாவில் லேனா தமிழ்வாணன் பேச்சைக் கேட்டதும் அவர் மேடை யில் பேசியது ஒன்றும் புரியாமல் இவர் ஏன் பகலில் கண்ணாடியை மாட்டிக் கொண்டு இருக்கிறார்? என்று யோசித்தது நினைவுக்கு வருகிறது.

ஊரில் இருந்த இரண்டு பள்ளிகளுமே தனியாருக்குச் சொந்தமானது தான்.  வீட்டில் எவருக்கும் படிப்புக்கென்று பெரிதான செலவுகள் ஏதும் செய்ததாக நினைவில்லை.  பெரும்பாலும் பள்ளியில் படித்த அணைவருமே நடுத்தர வர்க்கம் என்பதோடு பெரிதான சண்டை சச்சரவு இல்லாமல் படிப்பை தவமாக மாற்றிய ஆசிரியர்கள் தான் பணியாற்றிக் கொண்டுருந்தார்கள்.  கிராமத்து மாணவர்கள் சைக்கிளில் வந்துவிட முடியாதவர்கள் டவுன் பஸ்ஸில் தான் வந்து படித்துக் கொண்டுருந்தார்கள். எவரும் எந்த தவறும் செய்து விட்டு தப்ப முடியாது.  ஒவ்வொருவரின் குடும்ப பின்புலமும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் நன்றாகவேத் தெரியும்.  " நாளைக்கு உன் அப்பாவை கூட்டிக்கொண்டு வா " என்றாலே அழுகையுடன் மூத்திரம் பொத்துக் கொண்டு வந்து டவுசரை நனைத்து விடும். அதற்கு தனியாக ரெண்டு அடியும் ஒரு வாளி தண்ணீரும் சுமந்து வர வேண்டும்.

ஊரின் கடைசியில் தொடக்கத்தில் இருந்த வீட்டுக்குப் பின்னால் மிகப் பெரிய தோட்டமும் மிகப் பெரிய சிமெண்ட் தளமும் இருந்தது. வந்து சேர்ந்த புதிய வீட்டில் எந்த மரங்களுமே இல்லை.  ஒரே ஒரு முருங்கை மரம் மட்டும் விற்று விட்டு சென்றவர்கள் வைத்துருந்தார்கள். பழைய வீட்டில் இருந்த கொய்யா மா மரங்கள் எதுவும் இல்லை.  புதிய வீட்டில் கொடுக்காப் புளி மரம் கூட இல்லாத காரணத்தால் பள்ளிக்குச் செல்லும் போது டவுசர் பையில் கொண்டு போகும் எந்த சமாச்சரத்தையும் கொண்டு போக முடியவில்லை. பள்ளியில் பண்ட மாற்று முறையாக பரிமாறிக் கொள்ளும் பென்சில் வியாபாரத்தைக்கூட நிறுத்த வேண்டியதாகி விட்டது.

ஆனால் மற்றொரு வகையில் எனக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு அமைந்தது.  இங்கு கூட்டாளிக் கூட்டம் அதிகமானது. என் லொட லொட பேச்சை கேட்பதற்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள்.  அப்போது எங்கள் கூட்டத்திற்குள் இறுதியில் வந்தவன் பெயர் சண்முக சுந்தரம். அவன் அப்பா பக்கத்து கிராமத்து பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டுருந்தார்..

புதிய வீட்டுக்கு அருகே பஞ்சாயத்து போர்டு அலுவலகம்.,  சனி ஞாயிறு ஒரு காக்கா குருவி கூட உள்ளே வராது.  இரண்டு நாட்களும் பெரும்பாலும் பள்ளி விடுமுறையாகத்தான் இருக்கும். உட்கார, அரட்டை அடிக்க, அத்தனை அக்கிரமும் செய்ய தோதான மறைவு இடங்கள் உண்டு.  புகைப்பவர்களும், அடிப்பவர்களும் வந்து போய்க் கொண்டுருப்பார்கள். ஆனால் அவர்கள் அத்தனை பேர்களும் எங்களுக்கு வேடிக்கை மக்கள்.  கூட்டாளி கூட்டத்தில் இருக்கும் எவனுக்கும் எந்த தைரியமும் இருக்காது.  உயரமும், சதைகளும் இருக்கும் குண்டு மக்கள் கூட சோப்ளாங்கியாய் தான் இருப்பபார்கள். அவன வன் வாயாலே ஊதிக்கொண்டு ஊத்திக் கொண்டு படம் காட்டுவதோடு சரி.  நாள் முழுக்க திருப்தியாய் அளந்து விட்டுக் கொண்டு அன்று பத்திரிக்கையில் வந்த நடிகையை பேச்சு மூலமே கற்பழிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

ஆனால் சண்முகம் கூட்டத்திற்குள் வந்தால் பேசவே மாட்டான். காரணம் அவனின் தம்பியும் உள்ளே இருக்க சற்று நேரம் இருந்து விட்டு வெளியேறி விடுவான்.  போகும் போது எப்போதும் போல தம்பியைப் பார்த்து " சீக்கிரம் வீட்டுக்கு வாடா " ன்னு கத்தலாக சொல்லிவிட்டு சென்று விடுவான். எங்களை பார்த்துவிட்டு வெளியே போகும் போது அவன் வயிறு உப்பலாகவே இருக்கும்.  தொடக்கத்தில் எனக்குப் புரியாததை மாதவன் ஒரு நாள் சொன்ன போது தான் புரிந்தது.

யார் யார் இங்கு கூடியிருக்கிறார்கள்? என்று பார்த்து விட்டு அவன் மெதுவாக நகர்ந்து பக்கத்தில் உள்ள புளிமர தோப்புக்குள் சென்று விடுவான்.  பெரிய தூர் பகுதியாக பார்த்து உள்ளே மறைவு பகுதியை தேர்ந்தெடுத்துக் கொண்டு அமர்ந்து விடுவான்.  மறுபடியும் நான்கு புறமும் பார்த்துவிட்டு வயிற்றுப் பகுதியில் ஒளித்து வைத்த பாடப்புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு படிக்கத் தொடங்குவான்.  ஒரு நாள் ஒளிந்து கொண்டு அவனைப் பார்த்த போது மண்டையில் ஏறாத ஆங்கிலப்பாடத்துடன் பெரிய சண்டையே போட்டுக் கொண்டு யார் யாரையோ திட்டிக் கொண்டு நெஞ்சில் குத்திக் கொண்டு போராடிக் கொண்டுருந்தான்.

அவன் படிப்பதை யாரும் கவனித்து விடக்கூடாது.  கவனித்தவர்களும் படிக்கத் தொடங்கிவிட்டால் அவன் மதிப்பெண்கள் வாங்க முடியாது.  ஆனால் ஒரு நாள் மொத்த கூட்டத்தையும் மாதவன் கலைத்து பூனை போல் நகர்ந்து அவன் உட்கார்ந்து படித்துக் கொண்டுருந்த புளிய மர தூர் பகுதியை காட்டி விட்டு ஒதுங்கி விட்டான். அப்போது தான் மொத்த கூட்டமும் சேர்ந்து அவனுக்கு புதிய பெயர் வைத்தார்கள்.  கிறுக்குச் சண்முகத்தின் சுருக்கமாக கீனா சானா.  கடைசிவரைக்கும் அவனை வெறுப்பேத்த இப்படித்தான் அனைவருமே அழைத்தார்கள்.

கவனித்த எங்கள் கூட்டத்தைக் கண்டு மேல்நிலைப்பள்ளிக்கு பின்னால் இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கரில் உள்ள முந்திரித் தோப்புக்கு தனது ஜாகையை மாற்றிக் கொண்டான். அதற்குப் பிறகு அவனைத் தொடர முடியவில்லை. ஆனால் பத்தாம் வகுப்பில் தமிழைத் தவிர அத்தனையிலும் தேர்ச்சியில்லை என்ற போது அவன் அப்பா அடித்த அடியில் எங்கள் கூட்டத்தில் வந்து முதன் முறையாக மனம் விட்டு பேசினான். அன்று கடைசியாக பார்த்த அவன் இப்போது எதிரே வந்து கொண்டுருந்தான்.

சைக்கிளை தள்ளிக் கொண்டு வந்தவன் என்னை அடையாளம் கண்டு மெதுவாக சிரித்தான். அவன் அருகே வந்தவர் அவன் மனைவியாக இருக்க வேண்டும். எலும்பும் தோலுமாய் கன்னம் ஓட்டி ஒரு மாதிரியாக புடவையை உடம்பில் சுற்றியிருந்தார். சைக்கிளில் முன்னாலும் பின்னாலும் மூன்று குழந்தைகள் உட்கார்ந்து இருக்க தள்ளிக் கொண்டு நடந்து வந்து கொண்டு இருந்தான் அவர்கள் முகத்தைப் பார்க்கும் போதும் உடல் நிலை சரியில்லை என்பது மட்டும் புரிந்தது. சிரித்துக் கொண்டே பேசிய போது " குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை. நான் டாக்டரைப் பார்க்க போய்க் கொண்டுருக்கின்றேன். பிறகு பேசலாம் " என்று நகர்ந்து விட்டான்.

அது வரைக்கும் அவன் என்ன செய்து கொண்டு இருக்கின்றான் என்பதும் தெரியாமல் இருந்தது, ஆனால் அம்மாவிடம் இரவு வந்து பேசிய போது தான் முழுமையாக புரிந்தது.

தொடக்கத்தில் ஊரில் சுப்பையா டாக்டர் என்ற பெயரில் பிரபல்ய டாக்டர் ஒருவர் இருந்தார்..  மருத்துவப் படிப்பு எதும் படிக்காமல் யாரிடமோ ஒரு வருடம் இருந்து குப்பை கொட்டிவிட்டு மிகத் தைரியமாய் ஆர்எம்பி என்ற படிப்பை போட்டுக்கொண்டு டாக்டர் சுப்பையா என்று தொழிலை தொடங்கி விட்டார்.  

அது என்னமோ தெரியவில்லை.  உள்ளே இருந்த ஒரே ஒரு அரசாங்க மருத்துவமனை, அதில் பணிபுரிந்த எம்பிபிஎஸ் டாக்டர் போட்டுருந்த கிளினிக்கை விட இவரிடம் தான் சுற்றியுள்ள அத்தனை கிராமத்து மக்கள் குவிந்து கொண்டுருந்தார்கள்.

உள்ளூர் கிளினிக் போலவே சுப்பையா டாக்டர் பக்கத்து கிராமங்களுக்கும் தான் வைத்து இருந்த ஸ்கூட்டர் மூலம் நடமாடும் கிளினிக் மூலம் பட்டையை கிளப்பிக் கொண்டுருந்தார். ஐந்து அல்லது பத்து ரூபாய் மட்டுமே வாங்குவார். கடன் சொல்பவர்களும் உண்டு. காளை மாடு கன்று போடாத பிரச்சனைகளை யும் கொண்டு வருபவர்களுக்கும் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி நகர்த்தி விடுவார்..  " ஏஞ்சாமி எங்கையில காசு இல்லை " என்று கூட சொல்லிவிட்டு நடையை கட்டிவிடுவார்கள். அவருக்கு நன்றாகவே தெரியும். இது காந்தி கணக்கு என்று. பெரிதாக கோபப்படாமல் செல்லமாக திட்டி விட்டு காத்துக் கொண்டுருக்கும் அடுத்தவரை உள்ளே வரச் சொல்லுவார்.

வருகின்ற 90 சதவிகித கூட்டத்திற்கு கட்டாய்ம் ஊசி போட்டு விடுவார். ரெடிமேடு மாத்திரைகள் தயாராக இருக்கும்.  பேச்சில் தேனும் பாலும் கலந்து அடித்து வருபவர்களை தைரியப்படுத்துவார்.  சாகக்கிடப்பவர்கள் கூட நான் சுப்பையா டாக்டரிடம் தான் போவேன் என்று அடம்பிடித்து தூக்கிக் கொண்டு வந்த பலரையும் பார்த்ததுண்டு.  ஆனால் அவருக்கு வந்த மஞ்சள் காமாலை அவரின் வேலைப்பளூவே காவு கொண்டுவிட்டது.

அவரிடம் பணிபுரிந்த நம்ம கிறுக்குச் சண்முகம் சைக்கிளில் ஒவ்வொரு கிராமமாக மருத்துவ சேவையை செய்து கொண்டுருக்கின்றான். மூன்றே வகையான மாத்திரைகளும் சில ஊசி மருந்துகளும். அதுவும் காசு கொடுத்து வாங்க மாட்டானாம். அவன் தம்பி பணிபுரியும் மெடிக்கல் கடையில் தேத்தி கொண்டு வந்துவிடுவான்.  உடல்வலி, காய்ச்சல், சளி.  அவ்வளவுதான்.

சுப்பையா டாக்டர் போல் இனிமையாக பேசுவானா என்பது தெரியவில்லை.?  ஆனால் பராவாயில்லை.  இப்போது பிழைத்துக் கொள்வான் போலிருக்கு.  காரணம் நல்ல டாக்டராக பார்த்து குடும்பத்தை கூட்டிக் கொண்டு செல்கிறானே...................

என்னைக் கடந்து சென்ற போது அவனின் குரல் மனைவியை நோக்கி பாயந்தது.

என்னை யாரென்று கேட்டுருப்பாரோ?

" புள்ள மேல ஈ மொய்க்குது துண்டைப் போடு " என்று கத்திக் கொண்டுருந்தான்.  அவனின் சொல்ல விரும்பாத ஆதங்கத்தை வந்து மொய்த்த ஈக்கள் தான் எனக்கு அடையாளம் காட்டியது.

23 comments:

Unknown said...

/// புள்ள மேல ஈ மொய்க்குது துண்டைப் போடு " என்று கத்திக் கொண்டுருந்தான். அவனின் சொல்ல விரும்பாத ஆதங்கத்தை வந்து மொய்த்த ஈக்கள் தான் எனக்கு அடையாளம் காட்டியது///
என்ன செய்வது நண்பரே இப்படியும் சிலர்.வாழ்க்கை அதன்போக்கில் அதன் வேலையே செய்கிறது.நல்ல பகிர்வு நண்பரே.///பேச்சில் தேனும் பாலும் கலந்து அடித்து வருபவர்களை தைரியப்படுத்துவார். சாகக்கிடப்பவர்கள் கூட நான் சுப்பையா டாக்டரிடம் தான் போவேன் என்று அடம்பிடித்து தூக்கிக் கொண்டு வந்த பலரையும் பார்த்ததுண்டு///எங்க ஊரிலும் இதேமாதிரி சிந்தாமணி என்ற வைத்தியர் இருந்தார்.

Thomas Ruban said...

//இவர் ஏன் பகலில் கண்ணாடியை மாட்டிக் கொண்டு இருக்கிறார்? என்று யோசித்தது நினைவுக்கு வருகிறது.//

:-))!!!!

//படிப்பை தவமாக மாற்றிய ஆசிரியர்கள் தான் பணியாற்றிக் கொண்டுருந்தார்கள்.//

இன்றைக்கு பெரும்பாலான ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வு இல்லாமல் கடமையே என பணியாற்றுகிறார்கள்.

பகிர்வுக்கு நன்றி சார்....

துளசி கோபால் said...

//புள்ள மேல ஈ மொய்க்குது துண்டைப் போடு//

நச்!!!!!

☼ வெயிலான் said...

நினைவுகளை தேவைக்கேற்ப கலந்து புரியும்படி, அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

தமிழ் உதயம் said...

குறைந்தப்பட்சம், எதிர்காலத்தில் சந்திக்கப்போகும் பால்ய சினேகிதர்களுக்காகவாவது, வாழ்க்கையில் நாம் ஜெயித்தாக வேண்டும். இல்லையென்றால் பார்த்தும் பார்க்காதது போல் போகவேண்டும். தெரிந்தும் தெரியாதது போல் போக வேண்டும். அது ஒரு நரகம்.

Unknown said...

அண்ணே அந்த ஸ்கூல் போட்டோவுல நீங்க எங்க நிக்கிறீங்க ...

எஸ்.கே said...

உங்களின் பதிவு என் நண்பர்களின் நினைவை தூண்டி விட்டது. பொதுவாக நான் நண்பர்களை மிகவும் நேசிப்பவன். அதனால்தானோ என்னவோ பள்ளியும் சரி கல்லூரியும் சரி, என்னுடன் படித்த எந்த நண்பர்களும் இப்போது தொடர்பில் இல்லை. அவர்கள் இன்னும் இதே ஊரில்தான் எங்கோ இருப்பார்கள். ஒருவேளை என் நிலை நன்றாக இருந்து அடிக்கடி வெளியே செல்பவனாக இருந்தால் எப்போதாவது அவர்களில் யாரையாவது சந்தித்திருக்கலாம். ஆனால் நான் துரதிர்ஷ்டசாலி. என்றாவது ஒரு நாள் அவர்களை சந்திப்பேன் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

Unknown said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!

கெ.பி.சுகுமாரன்
மலையாளம் ப்ளோகர்.

ஹேமா said...

ஜோதிஜி....உங்கள் வாழ்வை அப்படியே படம் பிடித்து ஆவணமாக்கிக்கொண்டிருக்கிறீர்கள்.
மத்தியதரக் குடும்ப வாழ்வின் சுவாரஸ்யங்கள்.

உங்களிடமும் பணமிருந்தால் டாக்டர் அல்ல அதைவிட உயர்ந்த பதவிகளில்கூட இன்று நீங்கள் இருந்திருப்பீர்கள் ஜோதிஜி.

அந்த நண்பர்கள் குழாமில் உங்களை எப்படி அடையாளம் கண்டுகொள்வது.தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் போடவேண்டாமோ !

ஜோதிஜி said...

ஹேமா,டீச்சர், செந்தில் மூன்று பேரும் ஒரு பெருசா ஓஓஓஓஓஓஓஓ போடுங்க. எங்க தல ரமேஷ் உணர்ந்து ஒரு நல்ல பாராட்டை கொடுத்துட்டாரு.

ஹேமா செந்தில் முகமா முக்கியம். பாலத்தில் உட்கார்ந்து கொண்டு எடுத்த படமும், குட்டிச்சுவ்ர்களின் மேல் அமர்ந்த போது எடுத்த படமும் பார்த்தா ஓர் அளவிற்கு முகம் தெரியும்.

பொஞ்சாதிக்கிட்ட சொல்ற வசனம் தான் இப்போது உங்களுக்கும் .........

வரக்கூடிய எதிர்கால சந்ததிகள் என்னைப் போன்ற எதிர்கால தலைவர்களின் சிறுவயது படங்களை பார்க்க பத்திரமா பாதுகாத்து வைக்க வேண்டியது உன்னோட கடமை அல்லவா..........

(முறைப்பு)

நீங்க தேடி எடுத்து தந்த அவங்களுக்குத் தான் நன்றி சொல்லனும்.

ஜோதிஜி said...

வணக்கம் திரு சுகுமாரன். இரண்டாவது முறையாக வந்து இருக்கீங்க, ரொம்ப நன்றிங்க. சுந்தர் ஒரு மலையாள வாசகர் கிடைத்து இருக்காரு பாத்துக்குங்க......

ஜோதிஜி said...

எஸ்கே என்ன இப்படி சொல்லீட்டிங்க......

ஹேமா சொல்றாங்க பணம் இருந்தா டாக்டர் இஞ்சினியர்ன்னு. அடக் கொடுமையே. எங்க மூத்த அண்ணன் இஞ்சினியர் ஆயுளுக்கு சம்பாரிக்கும் காசை ஒரு முன்று மாதத்தில் சேர்த்த காலமும் உண்டு. மூச்சு போன காலமும் உண்டு. துரதிஷ்டம் அதிர்ஷ்டம் என்பது என்னுடைய அனுபவத்தில் மாறி மாறி வந்து போய்க் கொண்டே தான் இருக்கிறது. நாலு மணி நேரமா கரண்டு இல்லை. அதனால ஆற்காட்டார் மேல கோபப்பட்டு என்ன ஆகப் போகுது? இந்த புகைப்படத்தில் இருப்பங்களைப் பற்றியே பத்து பதிவுகள் எழுத முடியும்.

ஜோதிஜி said...

எதிர்காலத்தில் சந்திக்கப்போகும் பால்ய சினேகிதர்களுக்காகவாவது, வாழ்க்கையில் நாம் ஜெயித்தாக வேண்டும். இல்லையென்றால் பார்த்தும் பார்க்காதது போல் போகவேண்டும். தெரிந்தும் தெரியாதது போல் போக வேண்டும். அது ஒரு நரகம்

பின்னீட்டீங்க தமிழ்உதயம்.

ஜோதிஜி said...

இன்றைக்கு பெரும்பாலான ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வு இல்லாமல் கடமையே என பணியாற்றுகிறார்கள்.

நண்பா வெறும் பணியை மட்டும் ஆற்றினால் பரவாயில்லையே? இப்ப மணியை வேறு ஆட்டி படிக்கிற புள்ளைங்களை கல்யாணம் செய்துகொள்கின்ற கலாச்சாரம் வேறு அதிகமாகிக் கொண்டு இருக்கிறது.

சிந்தாமணி என்ற வைத்தியர் இருந்தார்

நிச்சயம் சிந்தாமல் சிதறாமல் பணம் பிடுங்க மாட்டார் தானே நண்பா...... கிராமத்து வைத்தியர்கள் கொடுக்கும் நம்பிக்கையே பாதி பலம்.

பவள சங்கரி said...

புள்ள மேல ஈ மொய்க்குது துண்டைப் போடு " என்று கத்திக் கொண்டுருந்தான். அவனின் சொல்ல விரும்பாத ஆதங்கத்தை வந்து மொய்த்த ஈக்கள் தான் எனக்கு அடையாளம் காட்டியது.
அருமை.....அருமையான நடைங்க......உங்களுடைய பால்ய நினைவுகள் சுவாரசியம். வாழ்த்துக்கள்.

Jerry Eshananda said...

ரசிக்கும்படியான....நெஞ்சினிக்கும் நினைவுகளில் தொடர்கிறேன்.

http://thavaru.blogspot.com/ said...

இளமையில் இதுதான் திட்டமிடுதல் இல்லை. காலபுயலில் கல்லாய் சிலபோ் சிறகாய் சிலபேர் வாழ்க்கையின் வட்டத்திற்குள் நாம். வாழ்த்துகள் ஜோதிஜி.

vinthaimanithan said...

நல்லாத்தான் இருக்கு ஜி.... சாம்பார்ல ஒரு கொதி கூடப் போயிடிச்சோ?!

ஜோதிஜி said...

நன்றி முத்து, ஆசிரியரே,

தவறு

கல்லாய் சில பேர். சிறகாய் சில பேர்.

எத்தனை ஆழமான யோசிக்கக்கூடிய வரிகள். மிக சிறப்பு நண்பா

ஏலே ராசா இந்த விமர்சனம் அடுத்த பதிவில் வர வேண்டியதா?

Ravichandran Somu said...

நினைவலைகள் அருமை...

ஜோதிஜி said...

ரவி உங்கள் வேலைப்பளுவில் விடாமல்.... ஆச்சரியம் ரவி.

ரோஸ்விக் said...

எங்க சாமி பாலத்துல எடுத்த போட்டோ...? :-)

ரோஸ்விக் said...

ம்ம் கண்டுபிடிச்சுட்டேன்... நடுவில் வெள்ளை சட்டை வெள்ளை வேஷ்டி - நீங்கதானே? :-)