போராட்ட குணத்திற்கும், போரட்டத்திற்கும் பெயர் பெயற்றவர்கள் ஓரிஸ்ஸா மக்கள்.
தொடக்கம் முதலே விளைநிலத்தை ஆக்கிரமிக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் முடிந்தவரைக்கும் எதிர்த்தே வந்துள்ளார்கள். ஆனால் 2000 ஆம் ஆண்டு முதல் ஒரிஸ்ஸா பூமி இடுப்பு ஒடிந்த பூமியாக மாறிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒரிஸ்ஸா மேல் தனிக்கவனம் உண்டு. இதைப் போலவே வடகிழக்கு மாநிலங்களிலும் உண்டு. காரணம் அங்கே உள்ள இயற்கைச் செல்வங்கள். நிலக்கரிச் சுரங்கங்கள், மற்றும் உலோகக் கனிமங்களும் அதிக அளவில் கொட்டிக் கிடப்பதே முக்கிய காரணமாக உள்ளது.
கண்களுக்கு எட்டிய வரையிலும் நீண்டதாக இருக்கும் விவசாய நிலங்களும் அதனைச் சார்ந்துள்ள துறைமுக வசதிகளும் இருப்பதால் பல பன்னாட்டு நிறுவனங்களின் கழுகுப் பார்வையில் இந்த ஓரிஸ்ஸாவே முக்கிய இடத்தில் உள்ளது.
இதன் காரணமாகவே ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனமும் நாங்கள் இங்கே தொழில் தொடங்க ஆசைப்படுகின்றோம் என்று உள்ளே வரத் தொடங்கினார்கள். இதன் வழியில் உள்ளே வந்தவர்கள் தான் தென் கொரியாவின் ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான பொஹாங் ஸ்டீல் நிறுவனம் (POSCO )
இந்த நிறுவனம் இங்கே வருவதை எதிர்த்து ஒரிஸ்ஸாவில் உள்ள ஜகத்சிங்பூரில் 30 000 கிராம மக்களும் மற்றும் இதனைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் வாழந்து கொண்டிருப்பவர்களும் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர்.
இந்த நிறுவனம் இங்கே மூதலீடு செய்வதாக வாக்களித்த தொகை எவ்வளவு தெரியுமா? 52,000 கோடி.
2005 ஜுன் மாதம் 22 ஆம் தேதி ஓரிஸ்ஸா அரசும் போஸ்கோ நிறுவனமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆறாயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆண்டு தோறும் 120 டன் ஸ்டீல் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தொழிற்சாலை நிறுவுவது தொடர்பான ஒப்பந்தம் உருவானது.
இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இங்கே சுற்றியுள்ள நிலக்கரி சுரங்கங்கள் அணைத்தும் வந்துவிடும். இந்த நிறுவனத்தோடு ஓரிஸ்ஸா அரசு முப்பது ஆண்டுகள் என்ற நோக்கில் இந்த ஒப்பந்தத்தை போட்டுள்ளது. தேவைப்பட்டால் மேலும் இருபது ஆண்டுகள் நீடித்துக் கொள்ளலாம்.
இது இயல்பான நடைமுறைதானே என்கிறீர்களா? இனிமேல் தான் நாம் சந்தோஷப்படவேண்டிய பல விசயங்கள் உள்ளது.
இங்குள்ள நிலங்களில் உள்ள கனிம வளங்களான குரோமியம், மங்கனீஷ் போன்ற தாதுப் பொருட்களை மிக குறைந்த விலைக்கு ஒரிஸ்ஸா அரசாங்கம் இந்த நிறுவனத்திற்கு வழங்க வேண்டும்.
இந்த நிறுவனத்திற்கு ஆண்டுதோறும் 6000 லட்சம் டன் இரும்புத்தாது அரசாங்கம் வழங்க வேண்டும். அதுவும் ஒரு டன் ரூபாய் 2000 முதல் 2600 விலையில் கொடுக்க வேண்டும்.
இது போதாதென்று தொழிற்சாலைக்கான மானியம் என்ற வகையில் டன்னுக்கு 400 ரூபாய் அரசு வழங்கவேண்டும். இந்த வகையில் மட்டும் நிறுவனத்திற்கு 96,000 கோடி ரூபாய் லாபமாக கிடைக்கும்.
இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு பாரதீப் பகுதியில் துறைமுகம் அமைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் அனுமதி தந்துள்ளது. ஏறக்குறைய இந்த துறைமுகமே ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்து விடும்.
இந்திய கடல்சார் பகுதியில் ஒரு தனியார் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினால் எதிர்காலத்தில் என்னவெல்லாம் குளறுபடிகள் உருவாகும் என்பது குறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் கேட்டால் போதும்.. 'மாவோயிஸ்ட்களுக்கு எந்த காலத்திலும் வன்முறை என்பது தீர்வாகாது..' என இன்று வரைக்கும் அவர் அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கிறார்.
துறைமுகம் எளிதில் அமைத்து விடமுடியுமா? இந்த துறைமுகத்திற்கு தேவைப்படும் சாலை போக்குவரத்து முதல் மற்றும் ரயில், மின்சார வசதிகள் வரைக்கும் அரசாங்கமே செய்து தரவேண்டும்.
சரி தொழிற்சாலை அமைத்தாகிவிட்டது. நிர்வாக அலுவலகம் வேண்டுமே? அதற்கும் சில ஏக்கரை தலைநகர் புவனேஷ்வரில் அரசாங்கம் இலவசமாக கொடுக்க வேண்டும். பஞ்சாயத்து இத்துடன் முடியவில்லை. இன்னமும் அனுமன் வால் போலவே இருக்கிறது.
இந்த நிறுவன கட்டுமானத்திற்கு மகாநதியில் இருந்து வருடந்தோறும் 12,000 முதல் 15,000 கோடி லிட்டர் நீரை எடுத்துக்கொள்ளும். இதன் காரணமாக அருகில் உள்ள கட்டக்கிலும் இதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படுவது தவிர்க்க முடியாததே.
மாநில அரசாங்கம் கொடுத்துள்ள சலுகைகளைப் போலவே மத்திய அரசாங்கமும் பல சலுகைகளை வழங்கி உள்ளது. இந்திய தொழிற்சாலைச் சட்டங்கள், இது போன்ற பன்னாட்டு நிறுவனங்களிடம் செல்லுபடியாகாது.
சரி. இத்தனை பிரச்சனைகள் இருக்கிறதே? இந்த நிறுவனத்தினால் இந்தியாவிற்கு எந்தந்த வகையில் லாபம் என்பதையும் பார்த்து விடலாம்.
ஒப்பந்தம் போடப்பட்டுள்ள முப்பது ஆண்டுகளில் வரி வகையில் 22,500 கோடி மாநில அரசாங்கத்திற்கும்,89,000 கோடி ரூபாய் மத்திய அரசாங்கத்திற்கும் கிடைக்கும். அதாவது முப்பது ஆண்டுகளில் மத்திய மாநில அரசாங்கத்திற்கு வரிகளாக 1,11,500 கோடி ரூபாய் கிடைக்கும். சுருக்கமாகத் சொல்லப்போனால் மத்திய மாநில அரசுகளுக்கு ஆண்டுக்கு சராசரியாக 3,700 கோடி ரூபாய் கிடைக்கும். ஆனால் இரும்புத்தாதுவுக்கு அரசாங்கம் கொடுக்கும் மானியம் மட்டுமே இதை விட பல மடங்கு அதிகம்.
அரசாங்கத்தின் கூற்றுப்படி இந்த நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட நிலங்கள் ஒன்றுக்கும் உதவாத நிலங்கள் என்று அறிக்கை சொல்கின்றது. ஆனால் உண்மை நிலவரமென்பது இந்த நிலங்கள் நன்றாக விளையக்கூடியது மட்டுமல்லாது விலை அதிகம் போகக்கூடிய இடங்களாகும்.
இந்த நிறுவனத்திற்காக உருவாகப்போகும் பாரதீப் துறைமுகப்பகுதியில் மீன்பிடித்து வாழக்கூடிய 30 000 மீனவர்களின் வாழ்க்கையும் அதோகதியாகிவிடும் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.
இந்த ஜகத்சிங்பூரில் உள்ள விவசாய நிலங்களுக்கு வேறொரு வகையில் சிறப்புண்டு. நெல், வெற்றிலை, தென்னை, முந்திரி, பாக்கு போன்ற விவசாயத்தின் மூலம் இந்த பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு வருடந்தோறும் ஏதோவொரு வேலை இருந்து கொண்டே இருக்கும். இதேபகுதியில் உள்ள ஜடாதரி பகுதியில் மீன்பிடித்தல் தொழிலும் நடந்து கொண்டேயிருக்கும்.
சாதகபாதக அம்சங்களை பார்த்தாகிவிட்டது.
இப்போது மற்றொன்றையும் நாம் பார்கக வேண்டும்.
எந்த நாட்டிலும் ஒரு அரசாங்கம் நினைத்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்ய முடியும் தானே? மக்கள் கிளர்ச்சி என்பது கடைசி தான். அதற்குள் சாம, பேத, தான, தண்டம் அத்தனையும் கையில் எடுத்து முடிந்தவரைக்கும் அடக்கப் பார்த்தாலும் கடைசியில் சில நாடுகளில் மட்டுமே ஆட்சி மாற்றம் நடக்கின்றது. ஆட்சியில் வருபவர்கள் மாறுவார்களே தவிர பன்னாட்டு நிறுவனங்களுக்காக உருவாக்கப்படும் நலன்கள் மாற்றப்படுவதில்லை.
இது தான் எதார்த்தம்.
குண்டர் படைகள் ஒரு பக்கம். அரசாங்கத்தின் கெடுபிடிகள் மறுபக்கம் என இன்று ஒரிஸ்ஸா யுத்தபூமியாக மாறிக் கொண்டிருக்கிறது. உச்சகட்டமாக அரசாங்கம் இந்த பகுதிகளில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ரேசன் கடைகளில் வழங்கப்பட்டுக் கொண்டிருந்த பொருட்களையே நிறுத்தும் அளவுக்கு தங்கள் விசுவாசங்களை பன்னாட்டு நிறுவன முதலாளிகளுக்கு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவன முதலாளிகளிடம் வாங்கித்தின்ற எலும்புத்துண்டுகளை கடித்து கடித்து வாயில் ரத்தம் வந்த போதிலும் விசுவாசம் மட்டும் இன்று வரையிலும் குறைந்தபாடில்லை.
ஆனால் இன்று வரையிலும் போராடிக்கொண்டிருக்கும் இந்த பகுதி மக்களைப் பற்றி எந்த இந்திய ஊடகமும் கண்டு கொள்ளவில்லை என்பது தான் இதில் உள்ள சிறப்பம்சம்.
இப்போது நீங்கள் ஒன்றை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் போன்ற பகுதிகளுக்கு அருகே செயல்பட்டுக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் முதல் ஹரியானா வரைக்கும் உள்ள அத்தனை நிறுவனங்கள் வரைக்கும் ஒரு விசயத்தில் கெட்டியாக இருப்பதை கூர்ந்து கவனித்தால் நம்மால் சரியாக புரிந்து கொள்ளமுடியும்.
ஒரு ஆலைக்கு தேவைப்படும் நிலத்தைப் போல நூறு மடங்கு இடத்தையும் வளைத்து வைத்துக் கொள்கிறார்கள். காரணம் நில மதிப்புக்காக.
இதன் காரணமாக சுற்றியுள்ள மக்கள் அப்புறப்படுத்தப்படுகிறார்கள். அங்குள்ள விலைநிலங்கள் மாறிவிடுகின்றது. இது தவிர அந்த ஆலையின் காரணமாக வெளியேறும் நச்சு வாயுக்கள் மூதல் கழிவு நீர் வரைக்கும் சுற்றியுள்ள அத்தனை பகுதிகளில் உள்ள நிலங்களின் தன்மைகளையும் மாற்றி விடுகின்றது. ஏறக்குறைய அந்த தொழிற்சாலையை நம்பியே அங்கே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வாழ வேண்டிய கட்டாய சூழ்நிலை இயல்பாகவே உருவாகி விடுகின்றது. இது தான உண்மை.
இதைத்தான் உலகமே ஒரு கிராமமாக சுருங்கி விட்டது என்கிறார்களோ..?. இதைக் கொண்டாடுங்கள் என்று மேலைநாட்டு சமூகம் நமக்கு அறிவுரை தருகிறது. உள்ளுர் கிராமங்கள் படிப்படியாக அழிந்து கொண்டிருக்கிறது. கிராமத்துக்கு தண்ணீர் ஆதாரங்கள் தரும் கண்மாய், ஏரிக்களும் படிப்படியாக தூர்த்து பட்டா போட்டு விற்றுக் கொண்டிருக்கின்றோம்.
நாம் பன்னாட்டு நிறுவனங்களை, நம்மை ஆண்டு கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை எத்தனை குறைகள் சொல்கின்றோமோ அந்த அளவுக்கு நமக்குள் இருக்கும் வியாதிகளையம் நாம் கண்டு கொள்ள வேண்டும்.
மாநிலத்திற்கு மாநிலம் நீருக்காக குடுமிபிடி சண்டையே நடந்து கொண்டிருக்கிறது. மழையும் பொய்த்துப் போனது. கடலில் கலந்தாலும் பரவாயில்லை. ஆனால் உனக்கு தரமாட்டோம் என்கிற மாநில அரசாங்க கொள்கைகளும் பிடிவாதங்களும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறதே?
நதி நீர் பிரச்சனையிலே விவசாயம் அழிந்து கொண்டிருக்கிறதே?
அதுக்கு என்ன தான் தீர்வு?
கங்கை காவேரி இணைப்பு சாத்தியம் தானா?













