Saturday, December 17, 2011

கொள்ளையனே வெளியேறு


போராட்ட குணத்திற்கும், போரட்டத்திற்கும் பெயர் பெயற்றவர்கள் ஓரிஸ்ஸா மக்கள். 

தொடக்கம் முதலே விளைநிலத்தை ஆக்கிரமிக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் முடிந்தவரைக்கும் எதிர்த்தே வந்துள்ளார்கள். ஆனால் 2000 ஆம் ஆண்டு முதல் ஒரிஸ்ஸா பூமி இடுப்பு ஒடிந்த பூமியாக மாறிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒரிஸ்ஸா மேல் தனிக்கவனம் உண்டு. இதைப் போலவே வடகிழக்கு மாநிலங்களிலும் உண்டு. காரணம் அங்கே உள்ள இயற்கைச் செல்வங்கள். நிலக்கரிச் சுரங்கங்கள், மற்றும் உலோகக் கனிமங்களும் அதிக அளவில் கொட்டிக் கிடப்பதே முக்கிய காரணமாக உள்ளது.

கண்களுக்கு எட்டிய வரையிலும் நீண்டதாக இருக்கும் விவசாய நிலங்களும் அதனைச் சார்ந்துள்ள துறைமுக வசதிகளும் இருப்பதால் பல பன்னாட்டு நிறுவனங்களின் கழுகுப் பார்வையில் இந்த ஓரிஸ்ஸாவே முக்கிய இடத்தில் உள்ளது.

இதன் காரணமாகவே ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனமும் நாங்கள் இங்கே தொழில் தொடங்க ஆசைப்படுகின்றோம் என்று உள்ளே வரத் தொடங்கினார்கள். இதன் வழியில் உள்ளே வந்தவர்கள் தான் தென் கொரியாவின் ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான பொஹாங் ஸ்டீல் நிறுவனம் (POSCO )

இந்த நிறுவனம் இங்கே வருவதை எதிர்த்து ஒரிஸ்ஸாவில் உள்ள ஜகத்சிங்பூரில் 30 000 கிராம மக்களும் மற்றும் இதனைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் வாழந்து கொண்டிருப்பவர்களும் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்த நிறுவனம் இங்கே மூதலீடு செய்வதாக வாக்களித்த தொகை எவ்வளவு தெரியுமா? 52,000 கோடி.

2005 ஜுன் மாதம் 22 ஆம் தேதி ஓரிஸ்ஸா அரசும் போஸ்கோ நிறுவனமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆறாயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆண்டு தோறும் 120 டன் ஸ்டீல் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தொழிற்சாலை நிறுவுவது தொடர்பான ஒப்பந்தம் உருவானது.

இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இங்கே சுற்றியுள்ள நிலக்கரி சுரங்கங்கள் அணைத்தும் வந்துவிடும். இந்த நிறுவனத்தோடு ஓரிஸ்ஸா அரசு முப்பது ஆண்டுகள் என்ற நோக்கில் இந்த ஒப்பந்தத்தை போட்டுள்ளது. தேவைப்பட்டால் மேலும் இருபது ஆண்டுகள் நீடித்துக் கொள்ளலாம்.


இது இயல்பான நடைமுறைதானே என்கிறீர்களா? இனிமேல் தான் நாம் சந்தோஷப்படவேண்டிய பல விசயங்கள் உள்ளது.

இங்குள்ள நிலங்களில் உள்ள கனிம வளங்களான குரோமியம், மங்கனீஷ் போன்ற தாதுப் பொருட்களை மிக குறைந்த விலைக்கு ஒரிஸ்ஸா அரசாங்கம் இந்த நிறுவனத்திற்கு வழங்க வேண்டும்.

இந்த நிறுவனத்திற்கு ஆண்டுதோறும் 6000 லட்சம் டன் இரும்புத்தாது அரசாங்கம் வழங்க வேண்டும். அதுவும் ஒரு டன் ரூபாய் 2000 முதல் 2600 விலையில் கொடுக்க வேண்டும்.

இது போதாதென்று தொழிற்சாலைக்கான மானியம் என்ற வகையில் டன்னுக்கு 400 ரூபாய் அரசு வழங்கவேண்டும். இந்த வகையில் மட்டும் நிறுவனத்திற்கு 96,000 கோடி ரூபாய் லாபமாக கிடைக்கும்.

இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு பாரதீப் பகுதியில் துறைமுகம் அமைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் அனுமதி தந்துள்ளது. ஏறக்குறைய இந்த துறைமுகமே ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்து விடும்.

இந்திய கடல்சார் பகுதியில் ஒரு தனியார் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினால் எதிர்காலத்தில் என்னவெல்லாம் குளறுபடிகள் உருவாகும் என்பது குறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் கேட்டால் போதும்.. 'மாவோயிஸ்ட்களுக்கு எந்த காலத்திலும் வன்முறை என்பது தீர்வாகாது..' என இன்று வரைக்கும் அவர் அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

துறைமுகம் எளிதில் அமைத்து விடமுடியுமா? இந்த துறைமுகத்திற்கு தேவைப்படும் சாலை போக்குவரத்து முதல் மற்றும் ரயில், மின்சார வசதிகள் வரைக்கும் அரசாங்கமே செய்து தரவேண்டும்.

சரி தொழிற்சாலை அமைத்தாகிவிட்டது. நிர்வாக அலுவலகம் வேண்டுமே? அதற்கும் சில ஏக்கரை தலைநகர் புவனேஷ்வரில் அரசாங்கம் இலவசமாக கொடுக்க வேண்டும். பஞ்சாயத்து இத்துடன் முடியவில்லை. இன்னமும் அனுமன் வால் போலவே இருக்கிறது.

இந்த நிறுவன கட்டுமானத்திற்கு மகாநதியில் இருந்து வருடந்தோறும் 12,000 முதல் 15,000 கோடி லிட்டர் நீரை எடுத்துக்கொள்ளும். இதன் காரணமாக அருகில் உள்ள கட்டக்கிலும் இதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படுவது தவிர்க்க முடியாததே.

மாநில அரசாங்கம் கொடுத்துள்ள சலுகைகளைப் போலவே மத்திய அரசாங்கமும் பல சலுகைகளை வழங்கி உள்ளது. இந்திய தொழிற்சாலைச் சட்டங்கள், இது போன்ற பன்னாட்டு நிறுவனங்களிடம் செல்லுபடியாகாது.


சரி. இத்தனை பிரச்சனைகள் இருக்கிறதே? இந்த நிறுவனத்தினால் இந்தியாவிற்கு எந்தந்த வகையில் லாபம் என்பதையும் பார்த்து விடலாம்.

ஒப்பந்தம் போடப்பட்டுள்ள முப்பது ஆண்டுகளில் வரி வகையில் 22,500 கோடி மாநில அரசாங்கத்திற்கும்,89,000 கோடி ரூபாய் மத்திய அரசாங்கத்திற்கும் கிடைக்கும். அதாவது முப்பது ஆண்டுகளில் மத்திய மாநில அரசாங்கத்திற்கு வரிகளாக 1,11,500 கோடி ரூபாய் கிடைக்கும். சுருக்கமாகத் சொல்லப்போனால் மத்திய மாநில அரசுகளுக்கு ஆண்டுக்கு சராசரியாக 3,700 கோடி ரூபாய் கிடைக்கும். ஆனால் இரும்புத்தாதுவுக்கு அரசாங்கம் கொடுக்கும் மானியம் மட்டுமே இதை விட பல மடங்கு அதிகம்.

அரசாங்கத்தின் கூற்றுப்படி இந்த நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட நிலங்கள் ஒன்றுக்கும் உதவாத நிலங்கள் என்று அறிக்கை சொல்கின்றது. ஆனால் உண்மை நிலவரமென்பது இந்த நிலங்கள் நன்றாக விளையக்கூடியது மட்டுமல்லாது விலை அதிகம் போகக்கூடிய இடங்களாகும்.

இந்த நிறுவனத்திற்காக உருவாகப்போகும் பாரதீப் துறைமுகப்பகுதியில் மீன்பிடித்து வாழக்கூடிய 30 000 மீனவர்களின் வாழ்க்கையும் அதோகதியாகிவிடும் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இந்த ஜகத்சிங்பூரில் உள்ள விவசாய நிலங்களுக்கு வேறொரு வகையில் சிறப்புண்டு. நெல், வெற்றிலை, தென்னை, முந்திரி, பாக்கு போன்ற விவசாயத்தின் மூலம் இந்த பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு வருடந்தோறும் ஏதோவொரு வேலை இருந்து கொண்டே இருக்கும். இதேபகுதியில் உள்ள ஜடாதரி பகுதியில் மீன்பிடித்தல் தொழிலும் நடந்து கொண்டேயிருக்கும்.

சாதகபாதக அம்சங்களை பார்த்தாகிவிட்டது.

இப்போது மற்றொன்றையும் நாம் பார்கக வேண்டும். 

எந்த நாட்டிலும் ஒரு அரசாங்கம் நினைத்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்ய முடியும் தானே? மக்கள் கிளர்ச்சி என்பது கடைசி தான். அதற்குள் சாம, பேத, தான, தண்டம் அத்தனையும் கையில் எடுத்து முடிந்தவரைக்கும் அடக்கப் பார்த்தாலும் கடைசியில் சில நாடுகளில் மட்டுமே ஆட்சி மாற்றம் நடக்கின்றது. ஆட்சியில் வருபவர்கள் மாறுவார்களே தவிர பன்னாட்டு நிறுவனங்களுக்காக உருவாக்கப்படும் நலன்கள் மாற்றப்படுவதில்லை.

இது தான் எதார்த்தம்.

குண்டர் படைகள் ஒரு பக்கம். அரசாங்கத்தின் கெடுபிடிகள் மறுபக்கம் என  இன்று ஒரிஸ்ஸா யுத்தபூமியாக மாறிக் கொண்டிருக்கிறது. உச்சகட்டமாக அரசாங்கம் இந்த பகுதிகளில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ரேசன் கடைகளில் வழங்கப்பட்டுக் கொண்டிருந்த பொருட்களையே நிறுத்தும் அளவுக்கு தங்கள் விசுவாசங்களை பன்னாட்டு நிறுவன முதலாளிகளுக்கு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவன முதலாளிகளிடம் வாங்கித்தின்ற எலும்புத்துண்டுகளை கடித்து கடித்து வாயில் ரத்தம் வந்த போதிலும் விசுவாசம் மட்டும் இன்று வரையிலும் குறைந்தபாடில்லை.

ஆனால் இன்று வரையிலும் போராடிக்கொண்டிருக்கும் இந்த பகுதி மக்களைப் பற்றி எந்த இந்திய ஊடகமும் கண்டு கொள்ளவில்லை என்பது தான் இதில் உள்ள சிறப்பம்சம்.

இப்போது நீங்கள் ஒன்றை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் போன்ற பகுதிகளுக்கு அருகே செயல்பட்டுக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் முதல் ஹரியானா வரைக்கும் உள்ள அத்தனை நிறுவனங்கள் வரைக்கும் ஒரு விசயத்தில் கெட்டியாக இருப்பதை கூர்ந்து கவனித்தால் நம்மால் சரியாக புரிந்து கொள்ளமுடியும்.

ஒரு ஆலைக்கு தேவைப்படும் நிலத்தைப் போல நூறு மடங்கு இடத்தையும் வளைத்து வைத்துக் கொள்கிறார்கள். காரணம் நில மதிப்புக்காக.

இதன் காரணமாக சுற்றியுள்ள மக்கள் அப்புறப்படுத்தப்படுகிறார்கள். அங்குள்ள விலைநிலங்கள் மாறிவிடுகின்றது. இது தவிர அந்த ஆலையின் காரணமாக வெளியேறும் நச்சு வாயுக்கள் மூதல் கழிவு நீர் வரைக்கும் சுற்றியுள்ள அத்தனை பகுதிகளில் உள்ள நிலங்களின் தன்மைகளையும் மாற்றி விடுகின்றது. ஏறக்குறைய அந்த தொழிற்சாலையை நம்பியே அங்கே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வாழ வேண்டிய கட்டாய சூழ்நிலை இயல்பாகவே உருவாகி விடுகின்றது. இது தான உண்மை.

இதைத்தான் உலகமே ஒரு கிராமமாக சுருங்கி விட்டது என்கிறார்களோ..?. இதைக் கொண்டாடுங்கள் என்று மேலைநாட்டு சமூகம் நமக்கு அறிவுரை தருகிறது. உள்ளுர் கிராமங்கள் படிப்படியாக அழிந்து கொண்டிருக்கிறது. கிராமத்துக்கு தண்ணீர் ஆதாரங்கள் தரும் கண்மாய், ஏரிக்களும் படிப்படியாக தூர்த்து பட்டா போட்டு விற்றுக் கொண்டிருக்கின்றோம்.

நாம் பன்னாட்டு நிறுவனங்களை, நம்மை ஆண்டு கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை எத்தனை குறைகள் சொல்கின்றோமோ அந்த அளவுக்கு நமக்குள் இருக்கும் வியாதிகளையம் நாம் கண்டு கொள்ள வேண்டும்.


மாநிலத்திற்கு மாநிலம் நீருக்காக குடுமிபிடி சண்டையே நடந்து கொண்டிருக்கிறது. மழையும் பொய்த்துப் போனது. கடலில் கலந்தாலும் பரவாயில்லை. ஆனால் உனக்கு தரமாட்டோம் என்கிற மாநில அரசாங்க கொள்கைகளும் பிடிவாதங்களும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறதே?

நதி நீர் பிரச்சனையிலே விவசாயம் அழிந்து கொண்டிருக்கிறதே?

அதுக்கு என்ன தான் தீர்வு?

கங்கை காவேரி இணைப்பு சாத்தியம் தானா?

தொடர்ந்து வரும் பாதை

Thursday, December 15, 2011

பூலோக சொர்ககம் -- அமெரிக்கா

அதிகளவிலான மக்கள் "பூலோக சொர்க்கம் " என அமெரிக்காவைச்  சொல்கிறார்கள்.

படித்த மற்றும் படிக்காத மக்களுக்கு கூட இன்று வரை அமெரிக்கா என்றால் ஒரு ஏக்கப்பார்வை இருக்கத்தான் செய்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல, ஆசிய நாடுகளில் கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் அவரவர் விழிகளில் இந்த அமெரிக்கக் கிறக்கம் உருவாவது இயற்கையே.

அமெரிக்கா போய்விட்டால் நிச்சயம் நம்மால் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் தான் இருக்கிறார்கள். இன்றைய உலகில் வணிக ரீதியான அத்தனை மேற்படிப்புகளும் மேலைநாட்டு கலாச்சாரத்தின் அடிப்படையிலேயே இருக்கிறது.

இன்று ஆங்கிலம் தெரிந்தால் அகிலத்தையும் ஆள முடியும் என உறுதிப்படுத்தப்பட்டாகி விட்டது. காரணம் நம்முடைய இன்றைய வாழ்க்கை தனிமனிதனின் பொருளாதார நிலைப்பாட்டினை அடிப்படையாக வைத்தே முடிவு செய்யப்படுகின்றது.


ஆப்ரிக்க, ஆசிய நாடுகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு வளர்ச்சியடைந்த நாடுகளை பார்க்கும் பார்வையென்பது அங்கங்கே டாலர்கள் அங்குள்ள மரங்களில் காய்த்து தொங்குவதாகத் தான் ஏக்கப்பார்வை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கேயும் திருவாளர் ஓட்டடையாண்டிகளும் உண்டு என்பது வெகுஜனத்திற்கு தெரிவதில்லை. பணக்காரர்களின் கடன்கள் அத்தனை சீக்கிரம் வெளியே தெரியாது.

இதுவே தான் நாடுகளுக்கும்.

உலகத்திற்கே நாட்டாமையாக இருக்கும் அமெரிக்கா தான் இன்று மிக மிகப்பெரிய கடனாளி நாடு. பிறகெப்படி இன்னமும் சட்டாம் பிள்ளையாக இருக்கிறார்கள்?

ஊரில் அடித்து உலையில் போடும் உள்ளூர் சண்டியர்களைப் போலவே உலகத்தையே அடித்து தன் வாயில் போட்டு மென்று கொண்டிருப்பதால் இன்னமும் அமெரிக்கா என்றால் ஆ.....வென்று பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறது.

தனக்குத் தேவைப்படும் எரிபொருளுக்காக பெட்ரோல் வளம் அதிகமுள்ள இஸ்லாமிய நாடுகளை ஒருபுறமும், உணவுப் பொருட்களுக்காக இயற்கை வள ஏழை நாடுகளை மறுபுறமும் வைத்துக் கொண்டு இன்னமும் பஞ்சாயத்துகாரனாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் ராஜதந்திர அரசியல் அது.

இதன் அடிப்படையில் தான் இன்று வரையிலும் அமெரிக்கா பல நாடுகளையும் படுத்தி எடுத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் ஆதிக்கத்தை ஒத்துக் கொள்ள மறுக்கும் சதாம் உசேன், கடாபி போன்றவர்களை போட்டுத் தள்ளிவிட்டால் அந்த பிரச்சனைகளும் முடிவுக்கு வந்து விடுகின்றது. ஒரு பொம்மையை தூக்கி உட்கார வைத்துவிட்டால் காலம் முழுக்க அந்த நாடு அமெரிக்காவுக்கு எழுதிக் கொடுக்கப்படாத அடிமையாக இருந்து விடுகின்றது. பொம்மைகள் பிடிக்கா விட்டால், அல்லது தங்கள் விளையாட்டிற்குப் பொருத்தமாக இல்லாவிட்டால் தூக்கி எறிந்தும் விடலாம்.

இன்று ஆப்கானிஸ்தான் அதிபராக இருப்பவர் யார் தெரியுமா?

அமெரிக்காவின் யூனோகால் எண்ணெய் நிறுவனத்தில் அதிகாரியாக இருந்த கர்சாய் தானே.

இது போலத்தான் ஒவ்வொரு நாட்டிலும் அமெரிக்கா உருவாக்கிய பொம்மைகள் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். மற்ற நாடுகளும் நமக்கேன் வம்பு என்று அமைதிகாத்து விட சண்டியரின் சண்டித்தனம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேதான் இருக்கிறது. இந்த சண்டியருக்கு வால்பிடிக்க பிரிட்டன், கனடா முதல் ஐரோப்பிய நாடுகள் பலவும் தயாராக இருக்க எவருக்கு தைரியம் வரும்? ஆனால் இந்தியாவில் ஆண்டு கொண்டிருக்கும் மன்மோகன் சிங்கோ ஐரோப்பிய பொருளாதாரம் மோசமானால் இந்தியாவிற்கு அதிக கவலையளிக்கும் என்று அக்கறை காட்டுகின்றார்.  

இந்தியா உதவி செய்ய தயாராக இருக்கிறது என்று அறிக்கை விடுகிறார்.


அமெரிக்காவில் பணிபுரிந்த மன்மோகன் சிங்கிற்கு தான் மட்டும் அடிமையாக இருக்க விருப்பமில்லாமல், மொத்த நாட்டையும் இருக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கம் கூட காரணமாக இருக்கலாம். அவருடைய எண்ணத்தில், அது பொருளாதார சீர்சிருத்தம்; ஆனால் புடலங்காய் கூட வாங்க முடியாத அளவுக்கு கஷ்டப்பட்டே ஆக வேண்டிய துர்பாக்கிய சூழ்நிலை இந்தியாவில்.

அமெரிக்காவின் உண்மையான முகத்தை முந்தைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் அரசாங்கத்தில் இருந்த பாதுகாப்பு துறை செயலாளர் டோனல்ட் ரம்ஸ்ஃபீல்ட் "அமெரிக்கர்கள் அவர்களின் வாழ்க்கை முறையைத் தொடர வேண்டியதன் அவசியத்தை இவ்வுலகம் புரிந்து கொள்ள வைப்பதே பயங்கரவாத எதிர்ப்புப் போரில் தன் கடமையாக செயல்படுத்தப்படுகின்றது' என்பதை உலகத்திற்கு தெளிவாக புரியவைத்தார்.

சதாம் ஹுசேனிடமிருந்து குவைத்தை மீட்க 1991 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பன்னாட்டு படைகளின் துணை கொண்டு ஈராக் மேல் அமெரிக்கா போர் தொடுத்தது. அதனைத் தொடர்ந்து போர் முடிவுக்கு வந்த போதிலும், பல ஆண்டுகள் ஈராக் மீது பொருளாதார தடை என்ற பெயரில் நடந்த அக்கிரமத்தை இந்த உலகமே அமைதியாய் வேடிக்கை பார்த்தது. இந்த காலகட்டத்தில் ஈராக்கில் உள்ள ஐந்து இலட்சம் குழந்தைகள் அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைக்கப்பெறாமல் மடிந்தனர்.

அப்போது அமெரிக்காவுக்கான ஐ.நா சபை தூதர் மேடலின் ஆல்பிரைட் சொன்ன கருத்து வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.

"அது ஒரு கடினமான முடிவுதான். இருந்தாலும் அடைந்த லாபத்தை எண்ணும்போது கொடுத்தவிலை சரியானது தான் என்று நினைக்கின்றோம்."

அமெரிக்காவை எத்தனை குறைகள் சொன்னாலும் ஒரு வகையில் நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

ஆமாம்! நான் இப்படித்தான். அதுக்கு என்னங்றே இப்போ? என்கிற தெனாவெட்டு இருக்கும்.

அது அமெரிக்காவின் அதிபராக இருந்தாலும் சரி செனட்டராக இருந்தாலும் சரி, காலம் காலமாக இப்படித்தான் அவர்களது அராஜக அரசியல் நடந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்காவுக்கு வெளியே உள்ள நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் அவர்களுக்கான கலாச்சார பண்பாட்டு வாழ்க்கை முறை இருக்கிறது என்பதை அமெரிக்கா ஏற்றுக் கொள்வதே இல்லை. இது தான் உச்சக்கட்ட கொடுமையான விசயம். இதைத்தான் ஜார்ஜ் புஷ், சீன இந்திய நடுத்தரவர்க்க வாங்கும் சக்தியினால் உலகில் உணவுப்பஞ்சம் ஏற்படுகின்றது என்றார்.

ஆனால் அமெரிக்கர்களின் வாழ்க்கை முறையில், அவர்களின் அத்தியாவசிய தேவைகளைப் போலவே அழிச்சாட்டியம் செய்து உணவுப் பொருட்களை வீணாக்கிக் கொண்டிருப்பதையும் இப்போது நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

2002 ஆம் ஆண்டு முதலே உலகளவில் விலைவாசிகள் ஏறத் தொடங்கியிருந்தாலும் இந்தியாவில் 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் அதிக அளவில் விலைவாசி உச்சத்தை நோக்கி சென்றது. இதற்கு எரிபொருள் விலையேற்றமே முக்கிய காரணமாக இருந்தது. அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளில் தங்களின் எரிபொருள் தேவைக்காக பயோ எரிபொருளை உருவாக்கத் தொடங்கினர்.

அதாவது உணவுப் பொருட்களை பயன்படுத்தி எரிபொருளை தயாரிக்கத் தொடங்கினர். சோயா, சர்க்கரை, பாமாயில், மக்காச் சோளம், மற்ற எண்ணெய் வித்துகளுடன் சூரியகாந்தி எண்ணெய் கூட இதற்காக

பயன்படுத்தப்பட்டது. இதற்கு மானியமும் வழங்கப்படுவதால் இன்று வரைக்கும் உணவுப் பொருட்களை அமெரிக்கா எரிபொருளாக பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

இதன் காரணமாக உலகத்திற்கு தேவைப்படும் உணவின் அளவிற்கு பற்றாக்குறை ஏற்படுகின்றது. இதன் பாதிப்பு 3 சதவிகிதம் என்கிறது அமெரிக்கா. ஆனால் உண்மையான நிலவரம் என்பது வேறு.

மக்காச்சோள விலையில் 70 சதவிகிதமும், சோயா பீன்சின் விலை உயர்வில் 40 சதவிகிதமும் உயர்ந்துள்ளது என்கிறது உலக வங்கியின் ஆய்வறிக்கை.

இந்த அறிக்கை வெளியான பிறகு தான் ஜார்ஜ் புஷ் திசை திருப்பும் பொருட்டு தான் மேலே சொன்ன திருவாசகத்தை ஒப்புவித்தார். ஆனால் அமெரிக்கர்களின் வாழ்க்கை முறைக்கும் இந்தியர்களின் வாழ்க்கை முறைக்கும் உள்ள வித்யாசங்களை நாம் பார்த்தாலே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசங்கள் எனப் புரிந்து கொள்ள முடியும்.

சராசரியாக ஒரு அமெரிக்கன் ஒரு வருடத்திற்கு உண்ணும் இறைச்சியின் அளவு 126.6 கிலோ. ஆனால் இந்தியனோ 5.3 கிலோ. உணவு தானியங்களைப் பொறுத்தவரையில் ஒரு இந்தியனின் அளவு 175.1 கிலோ. ஆனால் அமெரிக்கன் உண்ணும் அளவு 953 கிலோ. இது சராசரி கணக்காக புள்ளிவிபரங்கள் சொன்னாலும் இந்தியாவில் அங்கன்வாடிகள் மூலமாக 44 சதவிகித மக்கள் அடிப்படை ஊட்டச்சத்துக்கே இன்று வரை அல்லாடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

இப்போது புரியுமே?

இந்த பூவுலகில் ஒவ்வொரு அமெரிக்கனும் பூ போலவே வாழப்பிறந்தவர்கள். அவர்கள் நல்வாழ்க்கைக்காக உலகில் உள்ள அத்தனை நாடுகளும் தங்களை அர்ப்பணிக்க ஜென்மம் எடுத்தவர்கள். இவர்கள் இந்த அளவுக்கு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க காரணமாக இருப்பது மூன்று நிறுவனங்கள்.

உலகவங்கி, பன்னாட்டு நிதியம், சர்வதேச வர்த்தக நிறுவனம்.


இந்த மூன்றின் செயல்பாடுகளுமே அமெரிக்காவின் விருப்படியே நடந்து கொண்டிருக்கிறது. இவை மூன்றுமே அமெரிக்காவின் ஆளுமையில் உள்ள அமைப்பு. இவற்றில் எடுக்கப்படும் முடிவுகள் ஒவ்வொன்றுமே ரகசியமாகத்தான் எடுக்கப்படுகின்றது. ஒவ்வொரு ரகசியத்தின் பின்னாலும் அமெரிக்காவின் நலனே மேலாங்கி நிற்கிறது. இவற்றை நிர்வகிப்பவர்களின் நியமனங்களும் ரகசியமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு முடிவும் உலகில் உள்ள நாடுகளை பாதித்துக் கொண்டேயிருக்கிறது.

இதன் காரணமாகவே உலக வர்த்தக அமைப்பில் உள்ள 149 நாடுகளில் 105 நாடுகள் உணவு இறக்குமதியை நம்பியே வாழ்ந்து கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் அன்னை இந்திரா காந்தி இந்தியாவில் அறிமுகப்படுத்திய உணவு உற்பத்தியில் தன்னிறைவு என்ற நோக்கத்தை மறந்து இன்றைய மன்மோகன் சிங் அரசாங்கம் ஏற்றுமதியில் உணவு உற்பத்தி என்ற பாதையில் பீடு நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

இது இந்தியாவின் வளர்ச்சியின் அறிகுறி தானே என்கிறீர்களா?

அப்படியென்றால் தன்னிறைவு அடைந்த உணவுப் பொருட்களின் விலை மலிவாக இருக்க இருக்க வேண்டுமே? ஆனால் மாதத்திற்கு மாதம் இந்தியாவின் விலைவாசி உயர்வு நடுத்தரவர்க்கத்தையே நடுத்தெருவுக்குத் தான் கொண்டு வந்து கொண்டிருக்கிறது.

இது தான் இன்றைய இந்தியாவின் பொருளாதார மேதைகள் உருவாக்கிக் கொண்டிருக்கும் வளமான இந்தியா.

காரணம் யுக பேர வர்த்தகம்.

இன்று உலகம் முழுக்க யுக பேர வர்த்தக அமைப்பு (ஆன் லைன் வர்த்தகம்) சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த யுகபேர வர்த்தகம் 2002 ல் .77 ட்ரில்லியன் (ஒரு ட்ரில்லியனுக்கு 12 பூஜ்யங்கள்) என்கிற அளவுக்குத்தான் இருந்தது. ஆனால் இன்றைய வளர்ச்சியில் 8 ட்ரில்லியன் அளவுக்கு என்ற பிரமாண்டத்தை தொட்டுள்ளது.

எதிர்காலத்தில் அந்நியச் செலவாணி நம் கையிருப்பில் இருந்தாலும் ஒவ்வொரு நாடுகளும் உணவுப் பொருட்களை பதுக்கி வைத்திருக்கும் உலக வர்த்தக நிறுவனங்களைத் தான் சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். அப்போது அவர்கள் வைத்ததே சட்டம்.

காரணம் அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் வர்த்தகர்கள் நடத்தும் ராஜ்ய பரிபாலனங்களில் பாலுக்கும் மோருக்கும் அலைந்து, பச்சை தண்ணீரைக் கூடக் காசு கொடுத்தால் தான் வாங்கி குடிக்க முடியும் என்ற நிலை உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இப்போது எங்கே சென்றாலும் கைக்குழந்தை போல தண்ணீர் பாட்டிலையும் சேர்த்து தூக்கி செல்லும் நடுத்தர வர்க்கத்தைப் போல எதிர்காலத்தில் கிராமத்து மக்களும் செல்லக் கூடிய வாய்ப்பு அதிகம்.

காரணம் பயோ முறையில் விவசாயம் செய்கின்றோம் என்று ஏதோவொரு நிறுவனம் மொத்த நிலங்களையும் ஆக்ரமித்து இருக்கக்கூடும். ஆழ்குழாய் கிணறுகள் மூலம் எடுக்கப்படும் அளவுக்கு அதிகமான தண்ணீர் அந்த பகுதியை விரைவில் வறட்சியாக மாற்றிவிடும். வாழக்கூடிய மக்கள் நீர் ஆதாரத்திற்கு எங்கே செல்வார்கள்? தண்ணீரும் விலைபேசித்தான வாங்கும் சூழ்நிலை உருவாகும்.

ஒவ்வொருவரும் எதிர்காலத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டரையும் முதுகில் கட்டிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காரணம் நம்மைச்சுற்றிலும் உள்ள உலகம் தொழிற்சாலைகளுக்கு மட்டும் முக்கியவத்தும் கொடுத்துக் கொண்டிருக்கிறது.


விலைநிலங்களை அரசாங்கம் துணை நகரம், புதிய பொருளாதார மண்டலம் என்று விருப்பப்படி மாற்றிக் கொண்டு இருக்கிறது. இந்தியாவை படிப்படியாக விலைபேசும் பன்னாட்டு நிறுவனங்கள் ஒவ்வொரு பகுதியாக கபளீகரம் செய்ய, இதந்த நிலை தான் எதிர்காலத்தில் உருவாகும்.

ஆனால் இந்த நேரத்தில் மற்றொன்றையும் நாம் பார்க்க வேண்டும்.

எந்த நாட்டுக்கும் இல்லாத அளவுக்கு, நம் நாட்டுக்கு இந்த பன்னாட்டு நிறுவனங்கள் அவர்களின் கோடிக்கணக்கான மூதலீடுகளைக் கொட்டி, நம்முடைய அந்நியச் செலவாணி கையிருப்பை வளர்க்கின்றார்கள். 

உள்ளூர் வேலை வாய்ப்புகளையும் பெருக்குகின்றார்கள். படித்தவர்களுக்கு வெளிநாடுக்கு வேலை தேடி செல்ல வேண்டிய அவசியமில்லாமல் இருக்கின்றதே? அவர்களைப் போய் நாம் ஏன் குறை சொல்ல வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா?

ஓரிஸாவில் (இப்போது ஓடிஷா) உள்ள புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தைப் பற்றி மட்டும் இப்போது பார்த்து விடலாம். அப்போது புரியம்?  பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய மக்களை வாழ்விக்க வந்தவர்களா? அல்லது வாழ்வு அழித்து,  பாடைகள் தயார் செய்ய வந்த நிறுவனங்களா என்று?



Sunday, December 11, 2011

புள்ளி ராஜாக்கள் ஆளும் இந்தியா

புள்ளிராஜா விளம்பரம் உங்களுக்கு தெரியும் தானே? அவர் எய்ட்ஸ்க்கு சுட்டிக்காட்டப்பட்ட ராஜா. ஆனால் மற்றொரு புள்ளி ராஜா தான் இந்தியாவை காத்துக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.

இவரை வைத்து தான் இந்தியாவின் தொழில் துறை வளர்கின்றது என்று நம்முடைய பொருளாதார மேதைகள் படம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். .

இந்த புள்ளிராஜா வாழுமிடம் பங்குச்சந்தை. இந்த புள்ளிராஜாவை, சென்செக்ஸ், நிப்டீ, பிஎஸ்இ. என வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. நாட்டுக்கு நாடு இந்த பெயர் சொற்கள் மட்டும் சற்று மாறிக் கொண்டேயிருக்கிறது.

இந்த சொற்களை, வார்த்தைகளைச் சொல்லித்தான், இதோ பார் குதிக்குது. அதோ பார் செங்குத்தாக ஏறி விட்டது. என்று படித்த புத்திசாலிகள் நமக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதே போல பலரும் தினந்தோறும் சொல்லிக் கொண்டிருப்பதை டீ குடிக்க காசில்லாதவன், காதில் வாங்க நேரமில்லாமல் பொழைக்கிற வழியைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறான்.

நம்மை ஆண்டு கொண்டிருப்பவர்களுக்கு மற்ற எல்லாவற்றையும் விட, பங்கு சந்தை குறியீடு மட்டுமே முக்கியம். இதை வைத்துக் கொண்டே இந்தியா வளர்கிறது ஒளிர்கின்றது என்று கலர் கலராக நம் காதில், இன்று வரை பூச்சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகளவில் செயற்படும் அத்தனை பங்குச்சந்தை குறியீடுகளுமே ஒரு உத்தேச கணக்கு மட்டுமே. உத்தேசம் தான் இந்த துறையில் முக்கிய குறியீடு. ஆனால் பங்கு சந்தையில் பட்டியலிட்ப்பட்ட ஒரு நிறுவனத்தின் உண்மை நிலவரம் என்பது அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும் எவருக்கும் முழுமையாகத் தெரியாது.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை நிறுவன தணிக்கையாளர் மந்திரிக்கும் தாயத்து கயிறு மூலமே அந்தந்த நிறுவன பங்குகள் ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் தான் நாம் பல மந்திர வித்தைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு நிறுவனத்தின் உண்மையான நிலவரமே ஆண்டு இறுதியில் தான் தெரியும்? பலரையும் பணத்தை கொண்டு போய் முதலீடு செய்ய வைக்கின்றது. ஏமாறவும் வைத்துக் கொண்டிருக்கிறது.

ஏறக்குறைய இந்தியாவின் நிஜ வளர்ச்சி யாருக்குத்தான் தெரியும்?

இங்கே மூதலீட்டை கொட்டியுள்ள பத்து பன்னாட்டு நிறுவனங்கள் மனம் வைத்தால் போதும். ஒரே நாளில், அல்லது ஒரே இரவில் இந்தியாவை போண்டியாக்கி விடமுடியும். இது தான் எதார்த்தமான உண்மை. ஆனால் இந்தியாவில் அவ்வாறு நடக்க வாய்பில்லை என்கிற வரைக்கும் சந்தோஷம் என்றாலும் மற்றொன்றையம் இபபோது பார்க்கலாம். உலகத்திற்கு வழிகாட்டியாக இருக்கும் இந்திய மக்களாட்சியைப் போல நம்முடைய உள்நாட்டு பொருளாதாரம் மட்டும் நம்மை காப்பாற்றி விடாதா? வெளிநாட்டு முதலீடுகள் இருந்தால் மட்டும் தான் நாம் பிழைக்க முடியமா?

காலங்கடந்து போன போதிலும் நிச்சயம் முடியும். வாய்ப்பு அநேக வழிகளில் இருக்கிறது. அப்படியானால் வேறென்ன பிரச்சனை?. இதற்கு ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட முடியாது. ஆதலால் சற்று விரிவாகவே பார்க்கலாம்..


இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருக்கிறது என்று காந்தி சொன்னார் என்ற பழைய பஞ்சாங்கத்தையெல்லாம் இப்போது பார்க்க வேண்டிய அவசியமில்லை. காரணம்;  மேற்கு வங்காளத்தில்  தோழர்களின் கடந்து  போன ஆட்சியில் நடந்த நந்திகிராம  துப்பாக்கி சூட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் கோபால கிருஷ்ண காந்தியும் ஒருவர்.

அவர் தான் நம்முடைய காந்திஜியின் பேரன். அப்போது அவர் தான் கவர்னராக இருந்தார்.

அவரென்ன..?

காந்தியே இப்போது அரசியல் தலைவராக இருந்தாலும் கூட இதே நிலைமை தான். காரணம் தற்கால அரசியல் வல்லமையின் முக்கியத்துவம் கொள்கை அல்ல. கொள்ளை.

கவனியுங்கள் கொள்கை அல்ல..

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்தியாவின் விவசாயத் துறைக்கு மட்டும் ஏன் இத்தனை ஓரவஞ்சனை செய்கிறார்கள்?

இந்தியாவின் மக்கள் தொகை தற்போது 121 கோடி. 2000 ஆம் ஆண்டில் 100 கோடி இருந்த மக்கள் தொகை இப்போது இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது. நாம் உத்தேச கணக்காக 115 கோடி மக்களை எடுத்துக் கொள்வோம்.

ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு அரை கிலோ உணவு தானியம் என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டாலும் நமக்கு 210 மில்லியன் டன் தேவைப்படும். ஆனால் இப்போது உள்ள சூழ்நிலையில் 180 மில்லியன் டன் கணக்கிற்கே ததிங்கிணந்தோம் போட்டுக் கொண்டிருக்கிறோம்.

அப்படியென்றால் நம் தலைவர்கள் இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?.

எவராலும் குறை சொல்ல முடியாத அப்பழுக்கற்ற தியாகச் செம்மல், நம்முடைய விவசாய அமைச்சர் சரத்பவார் தன்னுடைய மாநிலமான விதர்பா பகுதியில் விவசாயிகள் இறந்த போது உதிர்த்த தத்துவம்

 "குடித்துவிட்டு சாகின்றவர்கள் எல்லோரையும் குடியானவர்கள் வரிசையில் சேர்க்க முடியாது" என்பது. 

இவருக்கு ஒரு படி மேலே ஜவுளித்துறை அமைச்சர் சங்கர்சிங் வகேலா வேறொரு வகையில்."குஜராத் விவசாயிகள் புகையிலையை வாயில் போடுகிறார்கள். ஒரு நிமிடத்தில் குதம்பி துப்பி விட்டு வயலில் இறங்கி அடுத்த வேலையை பார்க்கப் போய்விடுகிறார்கள். ஆனால் விதர்பா விவசாயிகளான நீங்களோ புகையிலையோடு முழுக்க குடித்தனம் நடத்திவிட்டு முழுச் சோம்பேறியாக மாறி விடுகின்றீர்கள். அப்புறம் கடன் வராமல் கௌரவமா வரும்?" எனக் கேள்வியெழுப்பினார்.

சரி இவர்கள் தான் புரியாமல் பேசுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். காரணம் இவர்களுக்கு கக்கூஸ் முதல் கட்டையில் வைத்து எரிக்கின்ற மயானம் வரைக்கும் குளு குளு அறையில் இருந்தே அனுபவப்பட்டவர்கள். ஆனால் சென்ற முறை காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த நம்ம ப. சிதம்பரம் திருவாசகம் போல் நச்சென ஒரு வாசகம் சொன்னார்.

"விவசாயிகள் வீட்டுல சனி வக்கிரமெடுத்து உட்கார்ந்து ஒன்பது வருசம் ஆகிவிட்டது.  அதை ஒரே நாள்ல விரட்ட நான் ஒன்றும் அனுமன் இல்லையே"

ஆகமொத்தம் நம்மை ஆள்பவர்களுக்கு விவசாயிகள் என்றாலே வேண்டாத பொருட்களை பார்ப்பது போலவே இருக்கிறது.

இந்தியர்களின் கனவான 2020 வல்லரசு என்ற நோக்கத்திற்கு இடையூறாக இருப்பவர்களே இந்த விவசாயிகள் தான்.

"ஏன் இன்னமும் 60 சதவிகித மக்கள் இந்த விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மாற்று தொழிலில் இறங்கிவிட வேண்டியது தானே".

இது நான் சொன்னதில்லை. மன்மோகன் சிங் அலுவலகத்தில் உள்ள ஒரு பொருளாதார மேதை சொன்னது.

ரகுராம் ராஜன் என்பவரைத் தெரியுமா?

இவர் தான் நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நிதி ஆலோசகராவும் இருக்கிறார்.  சிகாகோ வர்த்தகப் பள்ளியில் பொருளாதார பேராசியராகவும்  இருக்கிறார். இவர் தான் இந்தியாவில் விவசாயம் செய்ய மிகக் குறைவான சதவிகித மக்கள் இருந்தாலே போதுமானது. நவீன தொழில் நுட்பங்கள் மூலம் நாம் சாத்தியப்படுத்த முடியும் என்கிறார்.

ஆனால் நம்முடைய பாரத பிரதமர் மன்மோகன் சிங் மட்டும் எப்போது தீர்க்கதரிசியாய் யோசிக்கக்கூடியவர்.

'இப்போதைய வருத்தத்தை விட எதிர்கால சந்தோஷங்களைப் பாருங்க... ' என்று அவரால் மட்டும் தான் சொல்ல முடிகின்றது. அத்தனை நல்ல விசயங்களை படிப்படியாக செய்து கொண்டிருக்கிறார். இதன் காரணமாக கடந்த பத்தாண்டுகளில் ஏறக்குறைய 9 கோடி மக்கள் நகர்ப்புறங்களுக்கு கிராமத்தை விட்டு பல்வேறு காரணங்களால் குடியேறியுள்ளார்கள்.

ஆனால் இத்தனை சிரமத்திலும் இருண்டு போய்க் கொண்டுருக்கின்ற விவசாயிகளின் வாழ்க்கை நிலை பற்றி,  இரண்டு பேர்கள் பொட்டில் அறைந்தது போல கொட்டித் தீர்த்தார்கள்.

ஒருவர் கமல்நாத் மற்றொருவர் முரசொலி மாறன்.

ஜெனிவாவில் நடந்த மாநாட்டில் கமல்நாத் பேசிய போது "மற்ற நாடுகளில் விவசாய மானியத்தை நிறுத்தச் சொல்லும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு விவசாயிக்கு கொடுக்கும் மானியத்தை நிறுத்தும் வரை ஒரு நெல் மணியைக் கூட இறக்குமதிக்கு அனுமதிக்க மாட்டோம்."

இதையே முரசொலி மாறன் "வயிறு வேறு வாணிபம் வேறு. வாணிபத்துக்காக மானியத்தில் விளைந்து குவியும் பணக்கார நாட்டு விஷ தானியங்களை இந்தியாவுக்குள் அனுமதிக்க முடியாது. வளர்ந்த நாடுகள் தங்கள் விவசாயத்துக்கு கொட்டிக் கொடுக்கும் மானியத்தை நிறுத்தாதவரை விவசாயத்தை உலக வர்த்தக அமைப்பில் சேர்க்க முடியாது "

தோகாவில் நடந்த உலக வர்த்தக மாநாட்டில் சிங்கம் போலத்தான் கர்ஜித்தார். ஆனால் என்ன ஆச்சு? பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிங்கமாவது புலியாவது?

கத்துவது உங்க வேலை. கறப்பது எங்க வேலையென்று அவர்கள் பணியை இடைவிடாது செய்து கொண்டே தான் இருக்கிறார்கள். சில நாடுகளில் போராடி உள்ளே நுழைகின்றார்கள். ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் அத்தனை சட்டதிட்டங்களையும் செல்லாக்காசாக்கி விட்டு செல்வாக்கோடு வலம் வருகிறார்கள்.


ஒரு சின்ன உதாரணத்தை பார்த்து விடலாம்.

இன்று விவசாயிகள் மத்தியில் அலற வைத்துக் கொண்டிருக்கும் பி.டி ரக பருத்தி வகை (BI- BACILLUS THURINGIENSIS) விவசாயத்தில் ஈடுபட்டுருக்கும் அத்தனை பேருக்கும் தெரிந்த ஒன்று தான்.

இது உள்ளே வந்த கதையை பார்க்கலாம்

இப்போது திஹார் சிறையில் இருக்கும் ராஜாவின் கீழ் முன்பு இருந்த துறைகளில் வனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற துறைகளும் இருந்தது. ராஜாவின் கீழ் வந்த துறையில் இருந்த முக்கியமானது சுற்றுப்புற துறை.

GEAC - Genetic Engineering Approval Committee. மரபியல் சார்ந்த தொழில் நுட்பத்தின் கீழ் மாற்றப்பட்ட விதைகளுக்கு இந்த துறை அனுமதி கொடுத்தால் தான் உள்ளே வர முடியும். ஆனால் இந்த பி.டி பருத்தி விதை விவகாரம் இவர் பார்வைக்கு போனதா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் இந்த விதைக்குச் சொந்தமான நிறுவனம் எப்படி அனுமதி வாங்கினார்கள் தெரியுமா?

Science and Technology துறையின் கீழ் வரும் RCGM (Review Committee on Genetic Manipulation) மூலம் மேலோட்டமான அனுமதி பெற்ற போது வயல் வரைக்கும் இந்த விதைகள் வந்து விட்டது. இது குறித்து இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளது. ஒன்றும் பிரச்சனையில்லை என்பதாகவும், இல்லை பருத்தி இலைகளை உண்ணும் மாடெல்லாம் செத்துப் போய்விட்டது என்றும் முரணான தகவல்கள் உண்டு. இந்த சர்ச்சைகள் முடிவே இல்லாமல் போய்க் கொண்டேயிருக்கிறது. ஆனால் இறந்த விலங்கினங்களை ஆராய்ச்சிக்கூடம் வரைக்கும் கொண்டு போய் இன்று வரைக்கும் உண்மையான அறிக்கை வெளியே வந்தபாடில்லை.

பி.டி பருத்தியை இந்தியாவில் அறிமுகப்படுத்திய மன்சாண்டோவின் மேலாண் இயக்குனர் டி.வி.ஜெகதீசப் ஒரு பயமுறுத்தும் உண்மையை 'தெஹல்கா' இதழில் அம்பலமாக்கியிருக்கிறார்.

"பல களைக்கொல்லிகள் எனது தலைமையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றில் எல்லாம் கம்பெனி தரப்பில் என்ன தகவல்கள் கொடுக்கப்பட்டதோ அவை அப்படியே ஏற்கப்பட்டு அனுமதிகள் தரப்பட்டன. இந்திய அரசு அமைப்புக்களிடம் அந்தத் தகவல்களைப் பரிசோதிக்கும் வசதியோ, சக்தியோ கிடையாது. கம்பெனிகளின் தகவல்களை நம்பி அனுமதிகள் தரப்படும்போது, அந்தத் தகவல்களையே தங்களுக்கு சாதகமானதாக அவை தயார் செய்து விடுகின்றன" என்கிறார்.

மொத்தத்தில் இந்திய வயல்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பரிசோதனைக் கூடங்கள். நம்முடைய விவசாயிகள் ஆராய்ச்சிக்கான பொருட்கள்.

அதெல்லாம் சரி? மாறிவரும் யுகத்தில் மரபணு மாற்றம் மூலம் எத்தனை பெரிய லாபங்களை விவசாயத்தில் பெற முடியும்? ஏன் எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவரா நீங்கள்?

இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு பின்னால் உள்ள சர்வதேச அரசியலை புரிந்து கொள்ளப் பார்க்கலாம். அப்போது தான் வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளை புழுவைப் போல பார்க்கப்படுவதை புரிந்து கொள்ள முடியும்

4 தமிழ் மீடியா தளத்தில் காக்க.. காக்க.. நோக்க.. நோக்க என்ற பெயரில் வெளியாகிக் கொண்டிருக்கும் கட்டுரை.  தமிழ் மீடியா தள குழுவினருக்கும், ஆசிரியர் திரு. மலைநாடன் அவர்களுக்கு என் நன்றியை இங்கே எழுதி வைக்கின்றேன்.

தொடரும்.......