Tuesday, December 04, 2012

குழந்தைகள் 2- விதைக்குள் உறங்கும் சக்திகள்


நான் பள்ளிக்குச் சென்ற முதல் நாள் இன்னமும் கலங்கலாக என் நினைவில் இருக்கின்றது. கொண்டு போய் சேர்த்தார்கள் என்ற வார்த்தையே தவறு. ஐந்து வயது ஆனதும் அக்காவுடன் அனுப்பி வைத்தார்கள். 

என் பள்ளிக்கூட ஆசிரியர் சீனிவாசன் அப்பா ஒரு முலையில் அமர்ந்திருந்தார். யாரு வீட்டு கொழந்த என்று கேட்டார். அக்கா அப்பாவின் பெயரை சொன்னார். பெரிய இலையில் நெல் பரப்பியிருந்தது.  என் கையைப் பிடித்து அந்த நெல்லில் அ போட வைத்து என்னை உள்ளே அனுப்பி வைத்தார். 

சுபம். 

அதன் பிறகு பள்ளி என்ற நதிப்பயணம் தொடங்கியது. வேறெந்த முன்னேற்பாடுகளும் முஸ்தீபுகளும் இல்லை. டவுசர், சட்டை கூட ஒரு மஞ்சள் பை. அதற்குள் ஒரு சிலேட்டு. உடைந்த குச்சி. இதை பல்பம் என்றும் சொல்கிறார்கள்.

ஆனால் வீட்டில் இரட்டையரை பள்ளியில் சேர்க்கும் வயது வந்த போது ஒரு மாதம் முன்பாகவே அத்தனை முன்னேற்பாடுகளையும் அக்கறையுடன் செய்ய வேண்டியதாக இருந்தது.

பள்ளி திறந்த முதல் நாளில் அனுப்பவில்லை. திருப்பூரில் இருக்கும்  சரஸ்வதி கோவிலுக்கு அழைத்துச் சென்றோம். கல்விக்கென்று உருவாக்கப்படுத்தப்பட்ட அந்த தெய்வத்தின் கதையை அவர்களுக்குச் சொன்னோம். அது அப்போதிருந்த மனத்தின் தன்மையில் அக்கறை என்ற பெயரில் தொடங்கிய பயணம் அது. ஆனால் அவர்களைப் பொறுத்த வரையிலும் அதுவொரு ஜாலியான ரவுண்ட் போன சுகம். 

மறுநாள் இருவருக்கும் பள்ளிச்சீருடை அணிவித்து மாட்ட வேண்டிய மற்ற சமாச்சாரங்களையெல்லாம் மாட்டி அலங்கரித்து பள்ளிக்கு அழைத்துச் சென்றேன். ப்ரிகேஜி வகுப்பறையில் இரண்டு ஆசிரியைகள் இருந்தார்கள். ஒருவர் வயதானவர். மற்றொருவர் மிக இளமையாக இருந்தார். 

இருவரும் அங்கே செய்து கொண்டிருந்த பணி தான் என்னை அங்கே சிறிதுநேரம் நிறுத்தி வேடிக்கை பார்க்க வைத்தது. காரணம் அங்கே கொண்டு வந்து சேர்த்த எந்த குழந்தைகளும் அடங்குவதாக தெரியவில்லை. ஒரே கத்தல் கதறல். மூக்குச் சளி சிந்தி உள்ளே நடந்த களேபரத்தில் பல கூத்துக்கள் நடந்து கொண்டிருந்தது. 

நிச்சயம் நம்மாளுங்க தலை தெறிக்க ஓடி வரப் போகின்றார்கள் என்று காத்திருந்தேன். 

காரணம் வயதான ஆசிரியை  வகுப்பறையின் உள்ளே இருந்து கொண்டு அழும் குழந்தைகளை சமாதானம் செய்து கொண்டிருந்தார். மற்றொருவர் இரண்டு கதவில் ஒரு கதவை சார்த்தியபடி அம்மா அப்பாவை அனுப்புவதில் குறியாக இருந்து கொண்டு அடுத்து வரும் குழந்தைகளை உள்ளே அனுப்புவதில் கவனமாக இருந்தார். கதவை கெட்டியாக பிடித்தபடியே நின்று கொண்டிருந்தார். அவரின் சேலை தலைப்பை சில குழந்தைகள் இழுத்தபடி அழுதன. இருவரும் தடுமாறி தத்தளித்துக் கொண்டிருந்தார்கள். 

என் அலுவலக வேலையை மறந்து விட்டு அங்கேயே சற்று நேரம் நின்று அங்கே நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன்.  பாதிக் குழந்தைகள் கத்திய கத்தல் அந்த மூடிய கதவைத் தாண்டி வெளியே எதிரொலித்தது. கதவின் இடையே தெரிந்த வெளிச்சத்தில் உள்ளே பார்த்தேன். 

ஆனால் நம்ம இரட்டையர்கள் இருவரும் அழவில்லை. ஆனால் அங்கே அழுது கொண்டிருந்தவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  ஒருவர் கண்களில் மட்டும் லேசாக கண்கள் கலங்கியதை தூரத்தில் இருந்து பார்த்த போது புரிந்து கொள்ள முடிந்தது. என் தலையை கதவிடுக்கின் வழியே கண்ட போது கூட அடம் பிடித்து வெளியே வர முயற்சிக்க வில்லை. 

எனக்கே சற்று ஆச்சரியமாக இருந்தது.  

பெண்னை கட்டிக் கொடுத்து மாப்பிள்ளையோடு அனுப்பும் போது பெற்றோருக்கும் எவ்வித மனோநிலை இருக்குமோ அந்த மனநிலை அப்போது எனக்கும் தோன்றியது. இப்போது நினைத்துப் பார்க்கும் போது சிரிப்பாக வருகின்றது.  

முதல் இரண்டு வாரங்கள் நண்பகல் 12 மணி வரைக்கும் என்று சொல்லியிருந்தார்கள்.  அலுவலக பணியில் மறந்து போய்விடுவோம் என்று அலைபேசியில் அலாரம் வைத்துக் கொண்டு அடிக்காமல் இருந்து விடுமோ என்று அரைமணிக்கு ஒரு தரம் பார்த்துக் கொண்டிருந்தேன். சரியாக 11.45க்கு டாண் என்று அந்த வகுப்பறையில் வாசலில் தவம் கிடந்தேன் என்று தான சொல்ல வேண்டும்.  

காரணம் இரட்டையரில் ஒருவரின் உடல் நலம் குறித்த அதிக அக்கறையில் அதிகம் கவனம் செலுத்திக் கொண்டிருந்த நாட்கள் அது. 

பள்ளி நேரம் முடிந்து. வெளியே வந்தவர்கள் முகத்தில் இருந்த புன்னகையைப் பார்த்த போது தான் எனக்க போன உயிர் திரும்பி வந்தது. பள்ளிக்குள் இருக்கும் அந்த சின்ன பூங்கா பக்கம் அழைத்துச் சென்று ஊஞ்சலில் ஆட விட்டு அன்றைய வகுப்பறை அனுபவம் குறித்து மெதுவாக கேட்டேன்.  மழலை மொழியில் கூறியது இப்போதும் நினைவில் இருக்கிறது.  

நாம தான் அ ஆவன்னா ஏபிசிடி எல்லாமே படிச்சாச்சுல்ல. அதாம்பா சொன்னாங்க என்றார்கள். கொண்டு போயிருந்த மீதியிருந்த திண்பண்டங்களை தின்று கொண்டே வண்டியில் ஏறினார்கள்.  அன்று தொடங்கிய இலகுவான இவர்களின் கல்வி பயணத்திற்கு நாங்கள் முன்னேற்பாடுகளுக்காக செலவழித்த காலம் ஏறக்குறைய மூன்று மாதங்கள்.

பள்ளியில் கட்டணம் கட்டி உறுதியானதும் பள்ளி குறித்து புரிய வைத்தோம். பள்ளியின் அருமையை விளக்கிச் சொன்னேன்.  பல படங்கள் அடங்கிய புத்தகங்களை ஆறு மாதமாக வாங்கி புத்தகங்களின் மேல் உள்ள ஆர்வத்தை உருவாக்கினோம். வீட்டில் எழுத கற்றுக் கொடுத்த போது நான் மட்டும் எழுத வைக்க வேண்டாம். நாலு வயதில் எழுத தேவையில்லை. பேச கவனிக்கத் தெரிந்தால் போது என்று அவர்கள் மேல் வலிய எதையும் திணிக்காமல் அவர்கள் போக்குக்கு அனுமதித்தேன்.  

எந்த புத்தகங்களை வாங்கிக் கொடுத்தாலும் மூன்று நாட்களுக்குள் அது கிழிக்கப்பட்டு கப்பல் போல ஏதோவொன்றை செய்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். அலுவலக வேலை முடித்து வீட்டுக்குள் வரும் போதே வேறொரு புத்தகத்தை வாங்கி வந்து விடுவதுண்டு. பல புத்தகங்கள்.  ஆனால் ஒவ்வொன்றும் வாய் இருந்தால் கதறியிருக்கும். இரண்டு புத்தகங்கள என்று ஒவ்வொரு செலவும் இரண்டு இரண்டாக செய்ய வேண்டியிருந்தது. கடைசியில் அட்டையில் போட்ட படங்கள் அடங்கிய பாடங்களை வீட்டுக்கு கொண்டு வந்த சேர்த்த போது தான் ஒரு முடிவுக்கு வந்தது. அவர்கள் அதையே வைத்துக் கொண்டு விளையாட்டுப் பொருட்கள் வைத்துக் கொண்டு ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். 

எங்கள் மூச்சு சீரானது. 

நம்முடைய கல்வியின் முக்கியப் பிரச்சனையே இங்கு தான் தொடங்குகின்றது. படங்கள் மூலம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல வளர்ந்த பிறகும் பாடம் நடத்தும் போது அது எளிதாக மூளைக்கு கடத்தப்படுகின்றது. ஆனால் இந்திய கல்வியில் செயல்வழி கல்வியை விட எழுத்து வழிக் கல்விக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.  

வலிய திணிக்கும் போது வாந்தி பேதியாகிவிடுகிறார்கள். கல்வி என்பது கசப்பு மருந்து போல ஆகிவிடுகின்றது.  நன்றாக கவனித்துப் பாருங்கள். 

நாமும் படித்து வந்துள்ளோம். நம்முடைய குழந்தைகளும் படித்துக் கொண்டிருக்கின்றார்கள்.  நம்மில் எத்தனை பேர்கள் பள்ளிக்கூட புத்தகங்களை கதை புத்தகம் போல விருப்பத்துடன் அணுகியிருக்கின்றோம். கடமைக்கு, பயத்துக்கு, கட்டுப்பாட்டுக்கு என்று ஏதோவொரு விதத்தில் தான் ஒவ்வொரு வகுப்பையும் கடந்து வந்துள்ளோம்.  அதுவே தான் இன்று குழந்தைகள் வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கின்றது. 

தாய்மொழிக் கல்வி என்பது மாறி அந்நிய மொழி கல்வி என்ற போது இன்னமும் திகட்டல் அதிகமாகி விடுகின்றது.

இந்திய கல்வியில் மட்டுமல்ல கலாச்சாரத்தில் கூட விருப்பங்களை விட திணித்தல் தான் முக்கிய பங்கு வகிக்கின்றது. மதிப்பெண்களுக்கு உள்ள மரியாதை மனதில் உள்ள கருத்துக்களுக்கு கிடைப்பதில்லை.  எதிர்ப்பு சக்தியை இழக்க வைத்துவிட்டு எதிராளிகளோடு போராட வேண்டிய கலையை இங்கே கற்றுக் கொடுக்கின்றார்கள். 

ஒரு பக்கம் முழுக்க பூச்சி பூச்சியாக வெறுமனே எழுத்துக்கள் மட்டுமே இருந்தால் எத்தனை பேர்கள் விரும்பி வாசிப்பார்கள். அதுவே படங்கள் இருக்கும் போது ஆர்வம் இயல்பாக உருவாகின்றது. ஆனால் இங்கே எழுத்துக்கள் மூலம் மட்டுமே அத்தனையும் புகட்டப்படுகின்றது.  மூளையில் உள்ள ந்யூரான்களில் விதைக்கப்படும் விதைகளை விட அதில் செலுத்தப்படும் கருத்துக்களை அடைகாப்பது தான் முக்கியம் என்று போதிக்கப்படுகின்றது.

தொடக்கத்தில் மனித இனம் வேட்டையில் தான் தனது  வாழ்க்கையை தொடங்கியது. அப்போது கலாச்சாரம் என்றொரு வார்த்தையே இல்லை. காலப்போக்கில் பொருளாதார வாழ்க்கைக்கு மாறிய போது தான் கலாச்சாரம் என்றொரு வார்த்தையும் இடையில் வந்து சேர்ந்தது. 

எல்லாமே மாறத் தொடங்கியது. பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு மனித இனம் மாறத் தொடங்கிய போதே அவரவர் விரும்பிய வகையில் சட்டங்கள் வளைக்கப்பட்டது.   சட்டமியற்றும் அதிகாரத்தில் இருந்தவர்கள் சூழ்ச்சி வலையை மறைமுகமாக வைத்துக் கொண்டு ஒவ்வொன்றையும் உருவாக்கினார்கள். உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் தலைமுறை கடந்தும் பலரால் வெளியே வரமுடியாத அளவுக்கு சமூகத்தின் ஓரத்திற்கே செல்லக் காரணமாக இருந்தது. 

அனைவருக்கும் கல்வி மறுக்கப்பட்டு காரணங்கள் கற்பிக்கப்பட்டது.  ஆனால் காலவெள்ளத்தில் ஒவ்வொன்றும் உடைபடவும் தொடங்கியது. வலியவர்கள் பிழைக்க முடியும் என்ற பொது விதி உயிர்பெறத் தொடங்கியது. உலகில் படைக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் மற்றவர்கள் வாழ்க்கையின் நலனுக்கே என்பதாக மாறியது.  கருத்துக்கள் அனைத்தும் பகிர்வதற்கே என்று தோன்றிய போது தான் நவீனங்கள் தங்களது வெளிச்சத்தை உலகத்தின் மேல் பாய்ச்சத் தொடங்கியது.  

விஞ்ஞானம் வளர்ந்தது. பலவற்றையும் வளர்த்தது. 

ஆனால் இன்று நாம் பார்ப்பது என்ன? 

வேடவர் சமூகத்தில் தொடங்கிய நமது பயணம் இன்று வேடர்களைப் போலவே நம்மை மாற்றியுள்ளது.தொடக்கத்தில் மனிதன் சிறு புள்ளியாக இருந்தான். வட்டம் தொடங்கியது. தொடங்கிய இடத்திற்கே தற்போது வந்து சேர்ந்துள்ளோம்.

சக மனிதனை, நாடுகளை சுய லாபத்திற்காக வேட்டையாடுதல் தான் இங்கே நடந்து கொண்டிருக்கின்றது. இனம், மதம், மொழி, சாதி என்ற பெயரைக் கொண்டு வேட்டையாடத் தொடங்கி விட்டது. பொறாமை என்பது உள்ளே ஒழித்து வைக்கப்பட்டு அது வன்மமாக மாறியுள்ளது. அதுவே வாழ்க்கை சூத்திரம் என்ற அங்கீகாரத்தை பெற்றும் விட்டது.  

இறுதியில் இது தான் சமூகத்திற்கான தகுதியாகவும் மாறியுள்ளது.

அப்படியென்றால் இத்தனை காலம் மனித குலம் கடந்து வந்த பாதையில் ஒவ்வொருவரும் கற்ற கல்வி என்ன ஆச்சு?

காரணம் குறிப்பிட்ட மக்களுக்கு கல்வி என்பது ரத்தம் சதை நாளம் நரம்பு என்று அத்தனையிலும் ஊறிப்போய் அதனையே வாழ்க்கையாக ஏற்றுக் கொண்டு வாழ்ந்தவர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்வில் உயரத் தொடங்கினார்கள். கற்ற கல்விக்கும் அப்பாற்பட்டும் சிந்தித்தார்கள். உயர்ந்தார்கள். கல்வி சொன்ன பாதையை மட்டுமே நம்பினார்கள். 

ஆனால் கல்வியை அணியும் ஆடை போல, பூசும் பவுடர் போல பயன்படுத்திய அத்தனை பேர்களும் தானும் கற்க முடியாமல் தனக்குப் பினனால் வந்த தலைமுறைக்கும் கற்றுக் கொடுக்காமல் வன்மத்தை விதைத்து வகைதொகையில்லாமல் வன்முறையை அறுவடை செய்யத் தொடங்கினார்கள். 

கல்வியென்பது மனதில் மலர்ச்சியை உருவாக்க கூடியது. சிந்தனைகளை சிறகாக மாற்றக்கூடியது. இங்கே எத்தனை பேர்களுக்கு சிறகு முளைத்தது.?  இங்கே பலருக்கும் கற்ற கல்வி  எந்த மாறுதல்களையும் தந்துவிடவில்லை என்பது தான் ஒத்துக் கொள்ள வேண்டிய முக்கிய விசயம். வீழ்ச்சியைத் தர்ன் தந்துள்ளது என்ற போது கல்வியை குறை சொல்வீர்களா? கற்றுக் கொடுத்தவர்களை வசை பாடுவீர்களா?  யாரை குறை சொல்ல முடியும்.?

கல்வி என்பது பொதுவானது.  ஆனால் அதை அணுகும் விதம் தான் இங்கே முக்கியமானது. கடந்த 20 ஆண்டுகளில் நம் நாடு கல்வி ரீதியாக மிக பெரிய வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை பாராட்டுரை போல சொல்லிக் கொள்கின்றோம்.  

ஆனால் தரமென்பது அதலபாதாளத்தில் தானே இருக்கிறது.

காரணம் என்ன?

செயல் முறைக் கல்வி என்பது செயலோடு கலந்தது. அது என்றுமே மறக்க முடியாத அளவில் நம்மை மாற்றி விடக்கூடியது. 

நம்மை நமக்கே உணர்த்தக்கூடியது. மற்றவர்களுக்கும் உணர்த்த வைத்து விடும். 

ஒவ்வொரு குழந்தைகளுக்குள் இருக்கும் சக்தியை எதைக் கொண்டு உங்களால் அளக்க முடியும்? . ஆலமரத்தின் வீரியத்தைப் போல தேக்கு மரத்தின் தகுதியைப் போல மாற வேண்டிய குழந்தைகள் எப்படி வளர்கின்றார்கள்?

தற்போதைய கல்வி முறையினால் மொட்டுப் பருவத்திலேயே கருகிப் போய் கனவுகளை மட்டும் விதைத்து அறுவடை செய்ய தயாராக இருக்கின்றோம். 

மனப்பாடமே முதல் தகுதி என்ற வரையறையில் தான் இங்கே சாதனை என்ற வார்த்தையே உருவாக்கப்படுகின்றது. ஆனால் வெறுமனே எழுத்துக்கள் மூலம் கற்றுக் கொடுக்கும் தற்போதைய கல்வியின் பலன் என்ன தெரியுமா?

அரிசி எந்த மரத்தில் வருகின்றது? என்று குழந்தைகள் கேட்கும் அளவிற்கு நாம் வளர்ந்துள்ளோம்.

தொடர்புடைய தலைப்புகள்

மிதிவண்டி வீரமும் சோகமும்

வீட்டு யுத்தமும் விடுபடாத மர்மங்களும்

Monday, December 03, 2012

குழந்தைகள் - பந்தம் வளர்க்கும் ஜீவன்கள்


விட்டு விடுதலையாகி.........

வாசிக்கும் பொழுதே நம் நரம்பில் ஒரு புத்துணர்ச்சி தோன்றுமே?

வானத்தில் பறக்கும் அந்த சின்னச்சிறு பறவையினங்களை பார்க்கும் போது நமக்குள்  உற்சாகம் சிறகடித்துப் பறக்கும். நம்  உள்ளுற உணர்வில் கலந்திருக்கும் கவலைகள் கூட காணாமல் போய்விடும். அந்த நிமிடத்தில் நம் மனதில் தோன்றும் படபடப்பில் நாமும் ஒரு பறவையாகவே மாறியிருப்போம்.   பல சமயம் கற்பனையில் பறந்திருப்போம். 

வெட்டவெளி ஆகாயத்தை அந்த சிறிய குருவிகள் அளந்து பார்க்கும் ஆச்சரியத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே நிற்கத் தோன்றும்.  கூடவே அருகே பறந்து செல்லும் பட்டாம்பூச்சியின் லாவகத்தில் நம்மை நாம் மறந்திருப்போம். 

தேடல்கள் தான் இந்த உலகை இயங்க வைக்கின்றது.  நம்முடைய தேவைகள் தான் தேடல்களை அதிகப்படுத்துகின்றது.

நிர்ப்பந்தங்கள் இல்லாத நிகழ்காலம் சுகமாக இருந்தாலும் அதுவே தொடரும் போது அலுப்பை தந்து விடுகின்றது.   எனக்கு போர் அடிக்குதுப்பா....... என்று சொல்பவர்களின் வாழ்க்கையை உற்று கவனித்துப் பாருங்கள்.

எந்த கலாரசனைகளும் அவர்கள் வாழ்க்கையில் இருக்காது. ரசனைகள் இல்லாத வாழ்க்கையை ரசிக்க முடியாது. .ருசிப்பதும் ரசிப்பென்பதும்  மனிதர்களால் மட்டுமே செய்யக்கூடிய காரியம். அவசர வாழ்க்கையில் வழியில் கேட்கும் ஒரு பாடல் கூட சிலருக்கும் ஆத்ம திருப்தியை உருவாக்கக்கூடியது. வாழ்க்கையில் ரசனை காணாமல் போன வாழ்க்கையில் தினந்தோறும் மிஞ்சுவது ரகளை மட்டுமே. 

ரசனைகளை விரும்பாதவர்கள் தங்கள் வாழ்க்கையை கனவுகளுக்குள் பாதுகாத்துக் கொள்கிறார்கள்.  ஆமை கண்ட வெந்நீர் சுகம் போல அதுவும் கூட ஒரு சமயத்தில் உண்மைகளை உணர்த்திவிடும்.  

நான் வாழ்வில் பட்ட கஷ்டமெல்லாம் நீ படக்கூடாதுடா........என்ற சோகத்தினைத் தான்  இங்கே பலரும் தங்களது குழந்தைகளுக்கு சோற்றுடன் சேர்த்து பறிமாறுகின்றார்கள். 

குழந்தைகளுக்கு வாழ்வில் இயல்பாக தோன்றும் கஷ்டங்கள் என்பது மலை போன்றது என்பதாக உருவகப்படுத்தப்படுகின்றது. உருவகம் உள்ளூற உருவாக்கப்பட்டு அதைக் கண்டு அஞ்சி எதிர்கொள்ள முடியாத அளவுக்கு வாழ பழக்கிவிடுகின்றார்கள்.

எதார்த்தம் என்பது இங்கே பலருக்கும் எட்டிகாயாக கசக்கின்றது. 

இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசிப்பவர்களால் எப்படி இருந்தாலும் நாம் எதிர்கொள்ள எப்படி இருக்க வேண்டும்? என்று யோசிக்க முடிவதில்லை. இது போன்ற சமயங்களில் தான் சாமி போன்ற ஆன்மீகம் உள்ளே வரத் தொடங்குகின்றது. கற்பனைகள் உருவகப்படுத்தப்பட்டு, அதுவே பயமாக மாற்றபட்டு ஆன்மீகத்தை தெரிந்து கொள்ளாமல் அன்பையும் பகிர்ந்து கொள்ளாமல் இடையில் நின்று போன வண்டி போலத் தான் பலரின் பயணமும் தடைபட்டுப் போகின்றது.

தப்பு என்றால் என்ன? என்பதைப் பற்றி விவரிப்பதை விட இதை எப்போதும் செய்யாதே என்பதால் ஒவ்வொருமுறையும் விதிகளை மீறுதல் என்பது இங்கே இயல்பாக நடக்கத் தொடங்குகின்றது. 

இது தான் இங்கே பிரச்சனையின் தொடக்கம். 

நாம் விரும்பும் கனவுகளைப் போல நம் அருகே உயிருள்ள கனவாக வளர்பவர்கள் நம் குழந்தைகளே. .  

நம் விருப்பம், ஆசைகள், எதிர்பார்ப்புகள் என்ற ஏதோவொரு வடிவத்தில் குழந்தைகளே நம்மை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறார்கள் என்பதை உணர்ந்து இருக்கின்றீர்களா?

அவர்களைப் பற்றி மட்டுமே நாம் இனி தொடர்ந்து  பேசப் போகின்றோம். காரணம் அவர்களுக்காகத் தானே நாம் வாழ்கின்றோம். 


ஆனால் நாம் வாழ்க்கையை பார்ப்பதற்கும் குழந்தைகள் தங்கள் வாழ்க்கையை பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசங்களை நாம் உணர்வதே இல்லை. இந்திய கலாச்சாரத்தில் உள்ள திருமண பந்தம் என்பது சாவு வரைக்கும்  இரண்டு தண்டவாளங்கள் போலத்தான் உள்ளது.

இரண்டு மனங்கள் இணையும் வைபோகம் என்று சொன்னாலும் உடல் ரீதியாக இணைந்து உள்ள ரீதியாக இணைய முடியாமல் தண்டவாளம் போலத்தான் இங்கே பலரின் வாழ்க்கையும் இருக்கின்றது. பிரியவும் முடியாமல் புரிந்து கொள்ளவும் முயற்சிக்காமல் மன உளைச்சலோடு தான் முக்கால்வாசி பேர்களின் மூச்சும் இறுதியில் போய்ச் சேர்ந்துவிடுகின்றது.  ஆனால் குடும்ப வாழ்க்கை பயணத்திற்கு இரண்டு தண்டவாளமும் தேவை. 

இந்த தண்டவாளத்திற்கு இடையே இருக்கும் கட்டைகள் போலத்தான் குழந்தைகளும் இருக்கிறார்கள். திருமணம் முடிந்து பத்து வருடத்திற்குள் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியாமல் நடத்தும் வாழ்க்கையென்பது ஏறக்குறைய  நரக வாழ்க்கை.

புரிந்து கொள்ளாமல், விட்டுக் கொடுக்காமல் அவரவர் கொண்ட கொள்கைகள் அத்தனையும் குழந்தைகளை தாக்கி அது அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்றது.

இந்தியாவில் பலரும் இப்படித்தான் வாழ்கிறார்கள். இதுவே தன்னளவில் சரியென்று உரத்துச் சொல்கிறார்கள். சிலர் மட்டுமே குடும்ப வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இணைய முடியாத போதிலும் பயணத்திற்கு தேவையாய் இருப்பதால் இந்திய கலாச்சாரத்தில் குழந்தைகளின் வாழ்க்கையென்பது முக்கியமானதாக இங்கே கருதப்படுகின்றது. 

உன்னை பெத்து வளர்த்து ஆளாக்கி....... என்ற புலம்பலுக்குக் காரணமும் இது தான். 

அதிகப்படியான ஆசைகள் தான் அக்கறை என்ற பெயரில் இங்கே வெளிப்படுகின்றது.

ஆனால் குழந்தைகளுக்கும்  ஒரு மனமுண்டு  என்பதை எளிதில் மறந்து விடுகின்றோம். அவர்களுக்கான சுதந்திரம் என்பதை மாற்றி கட்டுப்பாடு என்ற நான்கு எல்லைக்குள் கொண்டு வந்து நிறுத்துகின்றோம். என் கட்டுப்பாட்டுக்குள் நீ என்பதாக கொண்டு வந்து விடுகின்றோம்.

நல்ல வளர்ப்பு என்ற வார்த்தையை மனதில் கொண்டு வன்முறையை திணிக்கின்றோம். நாம் குழந்தையாய் இருந்த போது கிடைக்காத விசயங்களை மனதிற்கு வைத்துக் கொண்டு இதையே திரும்பத் திரும்ப செய்கின்றோம்.   நாமும் முழுமையான சுதந்திரத்தை அனுபவிப்பதில்லை.  குழந்தைகளையும் விடுவதில்லை. 

இந்த குழந்தைகளின் சுதந்திரத்தை நாம் பேசலாம்.  

இங்கு பாதிக்கும் மேற்பட்டவர்கள் சுதந்திரம் என்பதை தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.

தங்கள் வாழ்க்கையே குழந்தைகளின் சுகத்திற்காகத்தான் என்கிறார்கள். நான் அவனுக்கு என்ன குறைவைத்தேன் என்று மூக்கை சிந்துகிறார்கள். நான் மூச்சை பிடித்துக் கொண்டே வாழ்வதே அவனுக்காகத்தானே என்கிறார்கள். 

ஆனால் எந்த குழந்தைகளும் அப்படி கேட்பதிலலை என்பது தான் நாம் மனதில் குறித்துக் கொள்ள வேண்டிய விசயம். ஆனால் காலம் காலமாக இங்கே இப்படித்தான் பண்டமாற்று போல சுதந்திரமும், சுகமும் பறிமாறப்படுகின்றது. கணவன் மனைவி, அம்மா அப்பா, பெற்றோர் குழந்தைகள் என்று சுழற்சி போல நீ கொடு நான் தருகின்றேன் என்பது போல இங்கே ஒவ்வொன்றும் விலை பேசப்படுகின்றது. பேரமென்பது வெளியே தெரியாது. அதற்கு பாசம் என்ற பூச்சு பூசப்படுகின்றது. 

ஆனால் இந்த குழந்தைகளின் வாழ்க்கையை நம்மால் வாழ்ந்து விட முடியாது என்றாலும் வாழ்ந்ததை, பார்த்ததை, கேட்டதை பகிர்ந்து கொள்ள முடியும் தானே?

தற்போது சுதந்திரம் என்பது எந்த இடத்திலும் அளவாய் கொடுக்கப்பட வேண்டிய ஒன்று என்று நம்ப வைக்கப்படுகின்றது. சுதந்திரம் என்பதன் முழுமையான புரிதல் இருந்தால் அங்கே அளவு தேவையிருக்காது. புரிதல் இல்லாத இடங்களில் பயமும் இயல்பாகவே உருவாகின்றது. 

உண்மையான சுதந்திரம் என்பதன் அர்த்தத்தை ஒவ்வொரு பள்ளிக்கூட வாசலில் நின்று கவனிக்கும் வாய்ப்பிருந்தால் உங்களுக்கு முழுமையாக புரியும். 

விட்டு விடுதலையாகி என்ற வார்த்தைகளின் அர்த்தத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும். 

சுதந்திரத்தைப் பற்றி நாம் பேச அதனை முழுமையாக  அனுபவித்து இருந்தால் தானே புரியும்.?

வகுப்புகள் முடிந்து விட்டது என்று மணியடிக்கும் ஓசைதான் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் கோவில் மணியோசை போல மகிழ்ச்சியை தரும் போல. அழுத்தி வைக்கப்பட்டவர்கள் அத்தனை பேர்களும் அதிலிருந்து விடுபட்டதும் ஓட்டமும் துள்ளல் நடையுமாக பெற்றோருடன் செல்லும் காட்சியை பார்க்கும் போதெல்லாம் நம்முடைய கல்வி குறித்து அதிகம் யோசிக்க முடிகின்றது.

மன உளைச்சல் அதிகமாகும் போது குழந்தைகள் விளையாடுவதை தூர இருந்து கவனித்துப் பாருங்கள்?  அர்த்தமற்ற அவர்களின் உரையாடலில் ஆயிரம் வாழ்க்கை சூத்திரங்கள் நமக்கு கிடைக்கும். கவலையைக் கண்டு, கவலையோடு வாழ்ந்து கழிக்கும் ஒவ்வொரு தினத்தின் அவலத்தினையும் மறக்க உதவும்.

குழந்தைகளும் பல சமயம் ஆசிரியர்களே. நாம் தான் அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஆவலாய் பறக்கின்றோம்.  முடிந்தவரைக்கும் திணிக்கின்றோம்.  ஆனால் அளவு தெரியாமல் அல்லாடவும் செய்கின்றோம்.

இங்கே இன்னமும் மாறுபட்ட சிந்தனைகள் கொண்டு வாழும் கண்வன் மனைவி அநேகம் பேர்கள். ஆனால் இறுதிவரையிலும் பந்தம் அறுபடாமல் வாழ வைத்திருப்பதும் இந்த குழந்தைகளே. குழந்தைக்காகத்தான் பொறுத்துக் கொண்டு இருக்கேன் போன்ற வார்த்தைகளை நீங்கள் சர்வசாதாரணமாக கேட்டுருக்கலாம். 

ஆனால் ஒவ்வொரு குடும்ப போர்க்களத்தை முடித்து வைப்பதும் இந்த குழந்தைகளே. உராய்வு அதிகமாகி சப்தம் எழும் எந்திரத்தின் ஆரோக்கிய காவலனாக இந்த குழந்தைகளே இருக்கிறார்கள்.

குடும்பத்தில் உருவாக்கும் பிரச்சனைகளை விட குழந்தைகள் உருவாக்கும் போர்க்களம் தான் வித்தியாசமானது. கத்தியின்றி, ரத்தமின்றி நடக்கும் இவர்களின் போர்க்களத்தில் கடைசி வரைக்கும் சுவராசியத்திற்கு பஞ்சமிருக்காது.

வீட்டுக்குள் குழந்தைகளால் உருவாக்கும் போர்க்களத்தை தினமும் பார்த்துக் கொண்டு இருக்கின்றேன். 

நீங்கள் ரசித்துருக்கீறீர்களா? 

ஒரு குழந்தை மட்டும் இருக்கும் வீட்டில் இந்த வாய்ப்பு ரொம்பவே குறைவு. போட்டி போட ஆளிருக்கும் போது உருவாகும் களம் தான் முக்கியம். 

இங்கு தினந்தோறும் இவர்கள் உருவாக்கும் ஒவ்வொரு களத்திலும்  விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நான் தான் கடைசியில்  சிரிப்பு நடிகராக மாறிப் போகின்றேன். அழுகை காட்சிகள் பல உண்டென்றாலும் அதுவும் கடைசியில் வயிறு வலிக்கும் சிரிப்புக் காட்சியாகவே மாறிவிடுகின்றது..   


அலுவலகமோ அல்லது வெளியே எங்கு இருந்தாலும் கூட மதிய சாப்பாட்டை பல சமயம் மூன்று மணிக்கு மாற்றி வைத்துக் கொள்வதுண்டு. காரணம் அந்த சமயத்தில் தான் பள்ளி விட்டு மூவரும் வரும் நேரம். கிடைக்கும் அந்த ஒரு மணி நேரத்திற்காக வீட்டில் ஆஜராகி விடுவேன். இவர்கள் வீட்டுக்கு வருவதற்கு  ஐந்து நிமிடத்திற்கு முன்பே வீட்டில் தயாராக இருப்பேன். 

ட வடிவில் உள்ள சந்தின் முனையில் இருக்கும் வீடென்பதால் இரண்டு பக்கத்திலும்  ஆட்கள் வந்து போய்க் கொண்டிருப்பார்கள்.  வீட்டுக்கருகே பள்ளி இருப்பதால் மூன்று நிமிடங்களில் வீட்டுக்கு வந்து விட முடியும். ஆனால் சில சமயம் இவர்கள் வந்து சேர பத்து நிமிடங்கள் கூட ஆகும். காரணம் தெருவில் மூவருக்குள்ளும் ஏதோவொரு பஞ்சாயத்து  நடந்து கொண்டிருக்கின்றது என்று அர்த்தம். ஒருவர் மற்றொருவரை சீண்ட பாதியில் அந்த பயணம் தடைப்பட்டு போயிருக்கும். 

ஒரு நாள் கூட மூவரும் அமைதியாக வீட்டுக்கு வந்ததே இல்லை. வரும் வழியில் அல்லது வந்த பிறகு என்று இந்த களம் விரிவடையும். 

இவர்களின் குணாதிசியம் தெரிந்தே வாசலில் நின்று கொண்டேயிருப்பேன். எப்போது வந்து சேருவார்கள் என்று சொல்லமுடியாது. ஆனால் நாம் தயாராக இருக்க வேண்டும். என் தலையை வாசலில் பார்த்து விட்டால் ஓ..... ...வென்று கத்திக் கொண்டு ஓடி வருவார்கள். 

முதுகில் சுமக்கும் பாரங்கள் ஒரு பக்கம் இழுக்க, கையில் வைத்திருக்கும் கூடை மறுபக்கம் தள்ள ப்ரேக் பிடிக்காத வண்டி போல குலுங்கிக் கொண்டு வருவார்கள். பின்னால் வரும் வீட்டுக்காரம்மா அலுத்துப் போய் மூச்சு வாங்க வந்து கொண்டிருப்பார்.

ஓடி வரும் போதே எனக்கு பதைபதைக்கும். தடுமாறினால்? என்று யோசிக்கும் போதே நான் இருக்கும் பாதி நிர்வாணத்தில் ஓடிப்போய் வாங்க முயற்சிப்பேன். குதியாட்டத்தில் நிற்க முடியாமல் தடுமாறி மூச்சிறைத்து என் கையை விடுவித்து மீண்டும் வீட்டை நோக்கி ஓட நான் தடுமாறி நிற்க  சிட்டுக்குருவி போல பறப்பார்கள். 


வீட்டுக்குள் இருக்கும் இரும்பு கதவு முன்னால் வந்தவர் தள்ளிய தள்ளலில் சுவற்றில் முட்டி  சப்தத்தை உருவாக்கும். பக்கத்து விட்டுக்காரர் பார்த்துவிட்டு நகர்ந்து விடுவார். முதுகில் சுமந்து வந்த பை வாசலின் உள்ளே பறக்கும். மூச்சிரைப்போடு மற்றொருவர் பையை அடுத்தவர் பிடித்து தள்ள அது மற்றொருபுறம் ஜிப் திறந்து போய் புத்தகங்கள் சிதறும். 

அடுத்த அத்தியாயம் ஆரம்பிக்கும்.

நான் தான் முதலில்........... இல்லையில்லை நான் தான் முதலில் .............என்று வேகம் காட்ட காட்டாறு வெள்ளம் அங்கே இயல்பாக உருவாகும். காலில் மாட்டியிருக்கும் காலணிகள் கதறும். அதில் உள்ள கொக்கிகள் இவர்கள் படும் அவசரத்திற்கு ஒத்துழைக்காது. சில சமயம் பிய்ந்துப் போய் சிரிக்கும். நாம் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும். எதுவும் பேசிவிட்டால் வெள்ளம் நம்மை நோக்கி தாக்கும் ஆபத்துண்டு. 

இருவர் தான் இப்போது உள்ளே நுழைந்திருக்கிறார்கள். மீதி ஒருவர் தெருவில் இருக்கின்ற மரத்தில் உள்ள இலைகளை, கண்ணில் தெரிகின்ற பூக்களை சேகரித்துக் கொண்டே வருவார். காரணம் அவர் மூட்டைகளை அம்மா சுமந்து கொண்டு வருவதால். ................

சுதந்திரத்தை நாங்கள் சொன்னதும் இல்லை. அவர்கள் புரிந்து கொண்டதும் இல்லை. காரணம் அவர்கள் வாழ்க்கையில் எதற்கும் தடையிருந்தால் தானே சுதந்திரம் தேவை?  தீர்மானிக்க கற்றுக் கொடுத்த பிறகு திரும்புவும் சொன்னால் அறிவுரை. நாமே கடைபிடித்து காட்டினால் அதற்குப் பெயர் பாடம்.  அவர்கள் எங்களுக்கு சொல்லும் பாடங்களையும் அவர்கள் சமூகத்தில் கற்றுக் கொண்டிருக்கும் பாடங்களைப் பற்றியும் தான் நாம் இனி பேசப் போகின்றோம்.

தொடர்ந்து நடைபயில்வோம்..................

தொடர்புடைய மற்ற தலைப்புகள்


Sunday, December 02, 2012

காரைக்குடி உணவகம் - புகைத்த பின் குடி கடி பிடி


ரில் குளிர்காலங்களில் காலையில் எழுந்து வெளியே பார்த்தால் பொட்டல்காடுகளில் பனிமூட்டம் முழுமையாக தெரியும். எப்போதும் போல இயல்பானதாக தெரிந்தாலும் இது விஷப்பனி வெளியே செல்லாதே என்பார்கள். அப்போது அதன் அர்த்தம் புரியாது.

ஆனால் நேரம் காலம் தெரியாமல் சுற்றித் திரிந்த போதிலும் உடம்புக்கு எந்த பிரச்சனையும் வந்ததில்லை.  வயது அதிகரிக்க நம்முடைய மன பலத்துக்கும் உடல் பலத்துக்கும் ஒரு போட்டி நடப்பதை எத்தனை பேர்களால் உணர்ந்து கொள்ள முடிகின்றது? 

அடங்கிப் போய்விடு. அடக்கி வாசிப்பா என்பது இது தானோ?


ற்போது மாறியுள்ள பருவநிலையில் திருப்பூருக்குள் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. காலை வேளையில் உடம்பு வெடவெடக்கின்றது.  ஒவ்வொரு தீபாவளியின் போது மட்டுமே ஊரில் வெந்நீர் குளியல் உண்டு. மற்ற தினங்கள் எப்போதும் போல கிணற்று நீர் தான். 

ஆனால் நகர வாழ்க்கையில் பழகிய சுடுநீர் பழக்கத்தின் அருமை இப்போதுள்ள மின்தடை என்பது நம்மை நமக்கே உணர வைத்துக் கொண்டிருக்கின்றது. வேலைகளை விரைவாக முடிக்க கற்றுத் தருகின்றது. குளிர்ந்த நீரில் குளிக்கும் போது உடம்பு எந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது. முக்கியமாக குழந்தைகளை விளையாட வெளியே அனுப்புகின்றது. 

இயல்பான பழக்கத்தோடு வாழ்பவர்களை விட ஆரோக்கியமற்ற பழக்கமுள்ளவர்களுக்கு குளிர்காலம் என்பது  நரகம் தான். 

ருசியை பார்த்து பார்த்து சாப்பிடப் பழகியவர்களுக்கு இதயம், புகைக்க பழகியவர்களுக்கு நுரையீரல், குடிக்க பழகியவர்களுக்கு கல்லீரல் என்று இறுதியாக இந்த உறுப்புகள் படும் அவஸ்த்தைகளை விட இவர்களை வைத்து வாழும் குடும்பத்தினர் படும் கஷ்டங்கள் தான் சொல்லி மாளாதாது.

போதை 1

யணங்களில், பார்க்கும் இடங்களில், பழகிய நண்பர்கள் வட்டாரத்தில் புகைப்பழக்கம் இருப்பவர்களுக்கு இந்த குளிர்காலம் என்பது மிகக் கொடுமையானது என்பதை உணர்ந்து கொள்ளமுடிகின்றது.

அன்றாட வாழ்க்கையில் நம்முடைய சுற்றுப்புறத்தில் வாகனங்கள் மூலம் நாம் சுவாசிக்கும் புகை என்பது நம்முடைய உடம்பில் உள்ள இயல்பான எதிர்ப்பு சக்தியை நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டே வருவது ஒரு பக்கம் இருந்தாலும் ஒருவர் புகைபழக்கத்திற்கு அடிமையாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் இந்த குளிர்காலத்தில் படும் அவஸ்த்தைகளை எழுத்தில் வடிக்க இயலாது. 


நம்முடைய உடம்பில் உள்ள உறுப்புக்களின் அருமையை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நோயாளிகளை மருத்துவமனையில் சென்று பார்க்கும் போது தான் புரிகின்றது. ஆனால் பலரும் குறிப்பிட்ட நோயின் ஆரம்பம் தெரிந்த போதிலும் அந்த பழக்கத்திலிருந்து அவர்களால் விடுபட முடிவதில்லை என்பது தான் நிதர்சனம். 

பயமுறுத்தும் விளம்பரங்கள்,கேட்கும் அறிவுரைகள் என்று எல்லாவற்றையும் கடந்ததும் நம்மிடம் தொற்றிக் கொண்டே வருவது தான் இந்த கெட்ட பழக்கங்கள்.  சட்டென்று விடமுடியாத சாகசகாரிகள் போல.

காரணம் மனித மனம் எப்போதும் கீழானவற்றைத் தான் அதிகம் விரும்புகின்றது. அதை நோக்கிச் செல்லவே விரும்பும். கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் கயிற்றை அறுத்து மேய விடுவதும் அவரவர் பெற்ற அனுபவங்கள் கற்றுத் தரும் பாடங்கள்.

நான் பார்த்தவரைக்கும் வருடத்திற்கு வருடம் புகை பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே தான் இருக்கின்றது. மிகச் சிறிய வயதுள்ளவர்கள் இந்த பழக்கத்தை நாகரிகம் என்ற பெயரில் கற்றுக் கொண்டு கடைசி வரைக்கும் விட முடியாமல் அவஸ்த்தைபட்டுக் கொண்டிருப்பதை பார்க்கும் போது சாவை விரும்பித் தழுவும் வீரர்களாகத் தான் தெரிகின்றார்கள்.

பழக்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒவ்வொருவரும் கடைசியில் இறந்து தான் போகப் போகின்றார்கள். 

ஆனால் புகைத்து உருவாகும் நோய்களும், மெல்ல மெல்ல இருமிக் கொண்டே தான் வாழும் வீட்டில் உள்ள மற்ற அத்தனை பேர்களையும் நரகத்தில் தள்ளும் மனிதர்களை பார்க்கும் போது தான் அதிக வேதனையாக இருக்கின்றது.  புகைக்காமல் இருந்தால் கூட இந்த குளிர்காலம் என்பது அவர்களின் நுரையீரலை படுத்தும் பாடு சொல்லி மாளாதது.

பயணத்தில் என் அருகில் இருப்பவர் இருமியதைப் பார்த்து நாலைந்து இருக்கைகள் அப்படியே காலி செய்து விட்டு பேரூந்தின் முன்புறம் ஓடிப்போனார்கள்.  

பயணம் முடிகின்ற வரைக்கும் அவரால் அந்த இருமலை நிறுத்த முடியவில்லை. வண்டி இடையில் நின்றதும் அவர் வேகமாகச் சென்று ஒரு சிகரெட்டை பற்ற வைத்த போது தான் அவரை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடிந்தது. 

இந்த சுழலுக்குள் சிக்கிவிட்டால் அந்த சுழற்சியே உங்கள் அடிப்படை ஆரோக்கியத்தை அதோகதியாக்கி மயானத்திற்கு அழைத்துச் சென்றுவிடும்.


போதை 2

ன்று வரையிலும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலக அளவிலும் செட்டிநாட்டு உணவகம், காரைக்குடி மெஸ் என்ற பெயருக்காகவே கூடும் கூட்டம் அதிகமாகவே இருக்கின்றது. வலைதளங்களில் சாப்பாட்டுக்கடை என்பது இன்றைய சூழ்நிலையில்  பிரபல்யமாக உள்ளது. 

ஆனால் இந்த சாப்பாட்டுக்கடைகள் தரும் உணவும், ஆரோக்கியமும்  அதன் விலைகளும் தற்போதைய சூழ்நிலையில் மயக்க மருந்து இல்லாமலேயே மயக்கத்தை வரவழைத்துக் கொண்டிருக்கின்றது. திருப்பூரில் அடையார் ஆனந்த பவனுக்குள் ஒரு முறை ஒரு குடும்பம் சென்று வந்து விட்டால் தினக்கூலி சம்பாரிப்பவர்கள் தங்களது வாரச் சம்பளத்தை எடுத்து வைக்க வேண்டும். ஆனால் அங்கே செல்பவர்கள் ஓட்டத்தின் மூலம் இடம் பிடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

இது தான் மாறி வரும் கலாச்சாரத்தில் நாம் பெற்றுள்ள சுதந்திரம்.

உணவகங்களின் விலைகள் முறைப்படுத்தப்படாத காரணத்தால் கொடுப்பதே ருசி. வைப்பதே விலை என்பதாக இருக்கிறது. ஆனால் நான் இந்த சாப்பாட்டுக் கடை கலாச்சாரத்தை விட்டு வெளியே வந்த காரணத்தால் அசந்தர்ப்பமாக  ஏதோவொரு தருணத்தில் உள்ளே நுழையும் போது பத்து வருடங்கள் பின்னால் வாழ்வது போல தெரிகின்றது.  

சமீப காலமாக தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த சாப்பாட்டுக்கடைகளுக்குச் சென்று குடும்பதோடு சாப்பிடுவது என்பது ஒரு மோகமாகவே ஆகியுள்ளது. வசதி இருப்பதால் என்பது ஒரு பக்கம். குடும்பத்தில கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் என்பது போன்ற விசயங்கள் மறுபக்கம். ஆனால் இந்த இரண்டுக்குள்ளும் ஒளிந்திருப்பதென்னவோ முழுமையான சோம்பேறித்தனம் என்பது தான் உண்மை. 

வீட்டுச் சாப்பாட்டை மறந்து இந்த சாப்பாட்டுக்கடைகள் தரும் சுவையை பழகிய நாக்குகள்  கொடுக்கும் பரிசு தான் இறுதியில் இதயத்திற்கான செலவு. .

இன்று திரும்பும் பக்கமெல்லாம் வயது வித்தியாசம் இல்லாத அளவிற்கு ஆஞ்சியோகிராமம், பைபாஸ் சர்ஜரி  எனப்து சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றது.

தற்போதுள்ள மருத்துவமனைகளில் உணவக விலைப்பட்டியல் போலவே ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக விலைப்பட்டியல் போட்டு சந்தைப்படுத்த தொடங்கி விட்டார்கள். 

உங்கள் உடம்பை எத்தனை விதமாக டெஸ்ட் எடுக்க முடியும் என்பதிலிருந்து ஒவ்வொன்றுக்கும் என்ன விலை என்பது வரைக்கும் சாதாரணமாக ஆகியுள்ளது. இதில் குறிப்பிட்ட தள்ளுபடி வேறு. ஆனாலும் நாம் நம்முடைய அடிப்படை பழக்கங்களை ஒரு ஒழுங்கு முறைக்கு கொண்டு வர விரும்புவதில்லை. 

வாழும் வரைக்கும் அனுபவித்து விடு என்பது மேலைநாட்டு கலாச்சாரம். ஆனால் சாகும் வரையிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது நம்முடைய கலாச்சாரம். ஆனால் தற்போது அதில் பாதி இதில் என்ற கலவையில் கலாச்சாரம் கதறுகின்றது.  

ஓரு முறை இதயத்தை திறந்தவர்களின் ஆரோக்கியமென்பது அவர்களின் வாழ்க்கையை முடித்து வைக்க எடுத்து வைக்கப்பட்ட முதல்படி என்று அர்த்தமாகும்.  வேகமாக செயல்பட முடியாது, கோபப்பட முடியாது, மன அழுத்தம் இல்லாமல் வாழ வேண்டும் என்பது போன்ற பல கட்டுப்பாடுகளை கட்டாயம் கடைபிடித்தே ஆக வேண்டும்.  


பெரும்பாலும் பணக்காரர்களின் வியாதியாக இருந்த இந்த இதய நோய் இன்று சாதாரண வாழ்க்கையில் இருப்பவர்களையும் தாக்கத் தொடங்கியுள்ளது. முக்கிய காரணம் அவரவர் வைத்துள்ள உணவுப்பழக்க வழக்கங்கள் தான்.

நான் பார்த்த பல பணக்காரர்கள் செய்து கொண்ட பை பாஸ் சர்ஜரியால் அவர்கள் படும் அவஸ்த்தைகள் சொல்லி மாளாது. நடை பிணமாக கவனமாக பார்த்து பார்த்து வாழ வேண்டிய சூழ்நிலையில் தான் இருக்கிறார்கள். அதிகப்படியான கொழுப்பு,அதிக மன அழுத்தம்,தேவையில்லாத விசயங்களில் அதிக நாட்டம் என்று கடைசியில் இதயத்திற்கு நட்டத்தை உருவாக்கி நடைபிணமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆனாலும் அவர்களின் அடிப்படை பண்புகள் எதுவும் மாறியதாக தெரியவில்லை. 

போதை 3

திருப்பூருக்குள் எந்த பகுதிக்குள் நுழைந்தாலும் சந்துக்கு ஒரு மதுக்கடையை பார்க்கலாம். தமிழ்நாட்டில் திருப்பூர் என்பது அரசாங்கத்திற்கு மது மூலம் முக்கிய வருவாய் தரும் ஊராக இருக்கிறது.  வயது வித்தியாசம் பாராமல், சாதி மதம் பார்க்காமல், அந்தஸ்து அதிகாரம் எதுவும் தேவைப்படாத ஒரே இடம் தான் இந்த மதுக்கடைகள். 

12 வருடத்திற்கு முன்பு ஒரே தின வைராக்கியத்தின் மூலம் தலைமுழுக முடிந்தது. பாவம் இன்னமும் என் நண்பர்களால் முடியாமல் அவஸ்த்தைபட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

எந்த பழக்கத்தையும் உங்கள் கை பக்குவத்தில் வைத்திருப்பது ரொம்பவே முக்கியம்.

மதுக்கடைகளை விட நான் அதிகம் ரசிக்கும் இடம் அந்த சால்னா கடைகள் தான்.  முதலாளிகள் கூடும் பாரில் கூட நாம் எதையும் கற்றுக் கொள்ள முடியாது. இருட்டுக்குள் இருந்து அங்கே அவர்கள் பேசும் ரகசியங்களில் எந்த சுவராசியத்தையும் கண்டதில்லை.

ஆனால் சால்னா கடைகளில் ஒவ்வொருவரின் உரையாடலில் தெரியும் வார்த்தைகள் பலரின் உண்மையான வாழ்க்கை தரத்தை உணர வைக்கின்றது.

புத்தனுக்கு கிடைத்த ஞானமெல்லாம் தற்போது மனிதர்களுக்கு இந்த டாஸ்மாக் பார்கள் தான் தந்து கொண்டிருகின்றது. 

கொஞ்சம் மொலாசிஸ் கொஞ்சம் நிறம். நிறைய தண்ணீர். 

இந்த கலவையினால் தமிழர்கள் வாழ்வில் இழந்த நாடுகள், சொத்துக்கள், அரண்மனைகள், ராஜ்ஜியங்கள் என்று தொடங்கி இன்றைய சூழ்நிலையில் அடுத்த வேலைக்கு சோத்துக்கு சிங்கியடித்தால் கூட புத்தி வராமல் இருப்பவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

இதயம், நுரையீரல் கூட ஒரு எச்சரிக்கை மணி கொடுக்கும்.  புரிந்து கொண்டு ஒத்துழைத்தால் சாவை கொஞ்சம் தள்ளிப் போட முடியும்.  

ஆனால் கல்லீரல் என்பது அப்படியல்ல.  கழுதை போல கல்லீரல் பொதி சுமக்கும். 

ஆனால் ஓர் எல்லைக்குச் சென்ற பிறகு ஒன்றுமே செய்ய முடியாமல் துப்பத் தொடங்கி விட்டால் உங்கள் உயிர்க்கூடு தூசியில் கலந்து விடும். பெரும்பாலான அரசியல்வாதிகள்,திரைப்பட பிரபல்யங்கள்  இறந்த செய்திகளுக்குப் பின்னால் இருக்கும் நோய்களில் முதன்மையான இந்த கல்லீரல் சம்மந்தப்பட்டதாகவே இருக்கும். 

பாதை

திர்ப்புகளைக் கண்டு அஞ்சாதே.  இது போராட்ட களத்தில் சொல்லக்கூடிய வார்த்தை.  ஆனால் நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டிய வாசகம் உடம்பில் எதிர்ப்பு சக்தியை வளர்க்கத் தயங்காதே என்பது தான்.  நமது உடம்பில் இயல்பான நாட்டு மருந்துக்கள் மூலம் உருவாக்கக்வடிய எதிர்ப்பு சக்திகளை அடுத்த காரைக்குடி உணவகத்தில் எழுதுகின்றேன். 

என்னுடைய கல்லூரி பேராசியர் நடனராஜ் என்பவர் மிக அற்புதமான மனிதர். கறுத்த மனிதர் புல்லட்டில் வரும் அழகே தனி. 

ஆனால் செயின் ஸ்மோக்கராக இருந்தார்.  கல்லூரியில் இடையே அவர் அறைக்குச் சென்றால் தலைவலியோடு குமுட்டலும் வந்துவிடும்.  ஆனால் எந்த நோயும் தாக்காமல் தன்னளவில் அளவீடுகளை சரியாக வைத்திருந்தார். மாணவர்களை கண்டதும் வேகமாக பின்னால் ஒளித்து வைத்துக் கொண்டு வாயில் கை வைத்துக் கொண்டு பேசுவார்.  தற்போது எந்த நிலையில் இருக்கின்றார் என்பதை பார்க்க வேண்டும் என்பதை மனதில் வைத்துள்ளேன்.

ரில் நாடகத்தில் ராஜபார்ட் வேடம் போடும் ஒருவருக்கு காலையில் சாராயம் குடிக்காமல் இருந்தால் பைத்தியமே பிடித்து விடும். அருகே உள்ள ஒரு ஊரில் தான் சாராயம் விற்பார்கள். அதிகாலையில் முதல் பேரூந்தில்  ஏறிச்சென்று குடித்து விட்டு வந்து சலூன் கடையில் உட்கார்ந்தால் அவர் பாடும் பாடலுக்கென்றே அங்கே ஒரு கூட்டம் கூடும்.  ஆனால் சாவதற்கு முதல் நாள் வரைக்கும் குடித்தபடியே தான் இருந்தார். ஆனால் சாப்பாடு விசயங்களிலும் பலே கில்லாடி. அசைவபட்சியாகவே இருந்தார். 

கடைசியாக செயல்படமுடியாமல் இருந்த அந்த காலகட்டத்தில் அவர் பட்ட பாடுகளை விட அவரால் அவர் குடும்பம் அனுபவித்தது தான் நரகவேதனை. மேலைநாட்டு கலாச்சாரமாக இருந்தால் வேறுவிதமாக கதையை முடித்து இருப்பார்கள்.

ரில் நான் பார்த்த பழகிய 90சதவிகித பேர்கள் அசைவ வெறியர்களாகத் தான் இருந்திருக்கிறார்கள்.

இன்று வரையிலும் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஏதோவொரு வழியில் உடல் உழைப்பு இருப்பதால் அத்தனையும் சக்தியாக மாறிவிடுகின்றது.  ஆனால் நகர வாழ்க்கையில் புத்திக்கு மட்டும் வேலையிருப்பதால் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் இயல்பாகவே நரகம் எட்டிப்பார்த்து விடுகின்றது.

மிர்தம்  ருசியானது தான். ஆனால் அளவு தெரியாதவர்களின் வாழ்க்கை இறுதியில் அழைத்துச் செல்லும் இடம் தான் இன்று  பூங்காவனம் போல அலங்கரிக்கப்பட்ட இடமான  மின் மயானம்.

எல்லோருமே கடைசியில் பிடி சாம்பல் தான். 

ஆனால் கடைசியில் கையில் வாங்கி கரைக்க எடுத்துச் செல்பவர்கள் குறைந்த பட்சம் திட்டித் தீர்க்காமல் நல்ல விதமாக சாவது தான் நமக்கு முக்கியம்.

தொடர்புடைய பதிவுகள்

காரைக்குடி உணவகம்

காரைக்குடி உணவகம் தீபாவளி விருந்து

காரைக்குடி உணவகம்  விருந்தும் மருந்தும்

படங்கள்   4TamilMedia.com