Showing posts with label வரலாற்று நிகழ்வு. Show all posts
Showing posts with label வரலாற்று நிகழ்வு. Show all posts

Wednesday, February 19, 2014

பழம் நழுவி பாயாசத்தில் விழுந்துள்ளது.

நேற்று நண்பர் சென்னையில் இருந்து அழைத்த நண்பர் அங்குள்ள மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ளவர். அவர் சிறிது நேரம் பேசாமல் இருக்க வெடிச்சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருக்கக் குழப்பத்தோடு காத்திருந்தேன். காரணம் மூவர் குறித்த தீர்ப்புக் காரணமாகச் சென்னையில் அவர் இருக்கும் இடத்தில் "நடந்து கொண்டிருக்கும் ஆரவாரத்தை உணர்த்துவதற்காக" என்றார். 

சென்னையில் மட்டுமல்ல. நேற்றும் இன்றும் தமிழ்நாடு முழுக்க இனம் புரியாத மகிழ்ச்சி. 

இயல்பிலேயே தமிழர்கள் உணர்ச்சிகளோடு வாழப்பிறந்தவர்கள். திரையை நம்பி, பலரும் பேசிய உரைகளை நம்பியே தங்கள் வாழ்க்கையைப் பறிகொடுத்தவர்கள்.  

ஆனால் நேற்று வந்த தீர்ப்பை விட இன்று முதல்வர் ஜெயலலிதா எடுத்த அதிரடி நடவடிக்கைத்தான் அவர் காலத்திற்குப் பிறகும் தமிழர்களால் நினைத்துப் பார்க்க வைக்கக்கூடியது. தமிழர், தமிழ்மொழி, தமிழன் என்று சொல்லிக்கொண்டு இங்கே வாய்ச்சவடால் மூலம் பஞ்சாயத்து பண்ணிக் கொண்டிருந்தவர்களை, முதல்வர் ஜெயலலிதா தனது ஒரே அறிக்கையின் மூலம் திக்குமுக்காட வைத்து விட்டார்.  உலகத்தமிழர்கள் அனைவரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

கனமான விசயங்களை எழுதினால் எவர் படிப்பார்கள்? என்று பொழுது போக்கு விசயங்களையே எழுதிய அத்தனை பேர்களும் தாங்களே இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்தவர்கள் போல முகநூலில் நிலைத்தகவலாகப் பகிர்ந்து தள்ளிக் கொண்டேயிருக்கின்றார்கள்.  

அரசியலில் அதிமுகவிற்கு எதிர்முகாமில் உள்ளவர்கள் எப்படி எதைப்பற்றி பேசுவது என்று குழம்பி "நாங்களும் வரவேற்கின்றோம்" என்கிறார்கள். 

ஆனால் இதற்காகத் தொடக்கம் முதல் பாடுபட்ட மதிப்பிற்குரிய வைகோ அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை விடப் பலமடங்கு அட்டகாசமாக அறுவடை செய்து விட்டார் முதல்வர் ஜெயலலிதா. எப்போதும் போல வைக்கோவின் யோகம் உழைப்பது மட்டுமே. 

ஜெயலலிதா எடுத்துள்ள நடவடிக்கைப் பின்னால் பலதரப்பட்ட "அரசியல் கணக்குகள்" இருந்த போதிலும் இது முக்கியமானதொன்று. முதல் முறையாகத் தனது அரசியல் வாழ்வில் ஒரு உன்னதமான காரியத்தை மிகத் தைரியத்தோடு செய்துள்ள முதல்வரை மனதார பாராட்டத் தோன்றுகின்றது. 

ராஜீவ் காந்தி படுகொலை தினத்தைத் "தீவிரவாத எதிர்ப்புத் தினமாக" இன்று வரையிலும் மத்திய அரசாங்கம் கடைபிடித்து வருகின்றது. ஆனால் இந்திரா காந்தி படுகொலையை அவ்வாறு செய்வதில்லை என்பது இங்கே குறிப்பிட வேண்டும். 

மூவர் விடுதலையோடு, போனஸ் பரிசாக ஏழு பேரின் விடுதலையின் மூலம் நாடு தவறான பாதைக்குச் சென்று கொண்டிருக்கின்றது என்று புலம்பும் நண்பர்கள் ஒரு விசயத்தை யோசிக்க மாட்டேன் என்கிறார்கள். 

அவர்கள் இதுவரையிலும் பெற்றுள்ள சிறைத்தண்டனை என்பது அதிகப்படியானது. அவர்களின் குற்றங்களை இன்னமும் முழுமையாக உறுதிப்படுத்தவில்லை என்ற போதிலும்.




கலைஞருக்கு எம்.ஜி.ஆர் மூலம் பாடம் கற்றுக் கொள்ள நிறையச் சந்தர்ப்பங்கள் உருவானது. ஆனால் அவர் மாறவில்லை. அவருக்கு இந்த விசயத்தில் மட்டுமல்ல, தமிழகத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டிய அளவுக்கு காலம் நிறைய சந்தர்ப்பங்களையும் வழங்கியது. ஆனால் இன்று வரையிலும் நல்ல குடும்பத் தலைவனாக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இப்போது முதல்வர் ஜெயலலிதா மூலமும் மீண்டும் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் காலம் கடந்து விட்டது.  

ராஜதந்திரி என்றழைக்கப்படும் கலைஞருக்கு இந்த நாள் மறக்க முடியாத நாளாக இருக்கும். 

இன்று வேலூர் சிறைவளாகத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குரிய மருத்துவ பரிசோதனைகள் நடந்தது. இது விடுதலையின் தொடக்க நிகழ்வாகவே கருதப்படுகின்றது. முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசாங்கத்திற்கு மூன்று நாள் கெடு விடுத்துள்ள போதிலும், ஏழு பேர்களும் திங்கள் அல்லது செவ்வாய் விடுதலை ஆவார்கள் என்றே தெரிகின்றது.

இது குறித்து வடநாட்டு ஆங்கில ஊடகங்களின் ஊதிப் பெருக்கும் புலம்பல்களை கவனிக்கும் போது தமிழ்நாடு என்பது இந்தியாவில் உள்ளதா? என்பதைத்தான் மீண்டும் மீண்டும் நினைக்கத் தோன்றுகின்றது. இந்தியன் என்பதை விட தமிழன் என்ற எண்ணம் தான் இயல்பாகவே தமிழ்நாட்டில் உள்ள எல்லோர் மனதிலும் மேலோங்கும்.

அதிகாரத்திற்கு வந்து சேர்வதை விட அதை சரியான சமயத்தில் சரியான விடயத்திற்கு பயன்படுத்தி தங்களை தகுதியான மனிதர்களாக, தலைவர்களாக மாற்றிக் கொண்டவர்களின் பட்டியலில் இன்று முதல்வர் ஜெயலலிதாவும் ஒருவராக மாறியுள்ளார்.  இவரின் கடந்த இரண்டு வருட ஆட்சி நிர்வாகத்திறன் சகிக்க முடியாதாக இருந்த போதிலும் கூட இது போன்ற ஒரு துணிச்சல் நடவடிக்கையை வேறு எவரும் எடுப்பார்களா? என்று யோசிக்கத் தோன்றுகின்றது.

அற்புதம் அம்மாள் என்ற இடைவிடாத போராட்ட மனுஷியின் கண்களில் இனியாவது ஆனந்தக் கண்ணீர் வரட்டும். நல்லதே நடக்க வேண்டும். நடக்கும்.

இந்த விடுதலைக்காக அரசியலுக்கு அப்பாற்பட்டு, தனிப்பட்ட முறையில், இயக்கம் சார்ந்து, கட்சி அடிப்படையில், அக்கறை சார்ந்து செயல்பட்ட நூற்றுக்கணக்கான தோழர்களுக்கு, நண்பர்களுக்கு என் நன்றியை இங்கே எழுதி வைக்கின்றேன்.








''இங்கு நீதியுமில்லை; நேர்மையுமில்லை; யாருக்கும் மனசாட்சியுமில்லை!'' அற்புதம் அம்மாள் நேர்காணல்


இறந்து போகும் நாளை தெரிந்தவரின் ஒப்புதல் வாக்குமூலம்


உங்களுக்கு என் கண்ணீர் குரல் கேட்கிறதா Arivai Petra Arputham