Showing posts with label புரட்சி. Show all posts
Showing posts with label புரட்சி. Show all posts

Friday, March 11, 2011

ஜட்ஜ் அய்யா ஜட்டி போடுவாரா?

சமீப காலமாக ஒவ்வொரு நாடுகளிலும் மக்கள் புரட்சி தீ போல் பரவிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் இது போன்று வருமா? ஆட்சியாளர்களுக்கு அடிவயிற்றில் சுரக்கும் அமிலம் போல உள்ளே இருந்து கொண்டு தான் இருக்கும்.  காரணம் இன்றைய இணைய வழி தொடர்புகள்.  இணையம் மூலம் புரட்சி உருவாகின்றதோ இல்லையோ அந்தந்த நாடுகளில் நடந்து கொண்டிருக்கும் அடக்குமுறை அராஜகங்களை வெகு எளிதாக வெளி உலகத்திற்கு கொண்டு வர முடிகின்றது.


சில நாட்களுக்கு முன் மகளிர் தினத்தில் திருப்பூரிலும் ஒரு அதிசிய புரட்சி நடந்தது. இந்த புரட்சி அடித்தட்டு மக்களால் முன்னெடுக்கப்பட்டதல்ல.  முழுக்க முழுக்க சுகவாசிகயாக வாழ்ந்து கொண்டிருந்த சாயப்பட்டறை முதலாளிகளின் மனைவிமார்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் உருவாக்கியதாகும்.

குறிப்பிட்ட சாயப்பட்டறைகளில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பெணக்ளும் ஒன்று சேர்ந்து திருப்பூர் டவுண்ஹால் என்ற பகுதியில் சாலையில் திடுமென வந்து உட்கார்ந்து விட்டனர். இந்த பகுதி சென்னையில் உள்ள அண்ணாசாலை போலவே முக்கியமான வாகன போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். அருகே ரயில் நிலையம் இருப்பதால் பரபரப்புக்கு என்றும் பஞ்சமிருக்காது. அருகே உயர்ந்து செல்லும் மேம்பாலமும் ஒன்று சேர அமைந்து இருந்த காரணத்தால் வந்து போய்க் கொண்டிருக்கும் வாகன வரிசைகள் தடுமாறி நிற்க அதிகாரவர்க்கத்தினர் அணிவகுக்கத் தொடங்கினர். கூட்டத்தில் இருந்த பெண்களிடம் சமாதான பேச்சு வார்த்தைக்கு வாருங்கள் என்றனர். .

பிரபல சாயப்பட்டறை உரிமையாளரின் மனைவி உருவாக்கிய திட்டத்தின்படி ஏறக்குறைய 24 மணிநேரத்தில் வாய்வழி செய்திகள் பரப்பப்பட்டு முக்கிய சாயப்பட்டறை உரிமையாளர்களின் மனைவிமார்களும் நடுவீதியில் அமர பரபரப்பு தொற்றிக் கொண்டது. நீதிமன்றம் தலையிட்டு திருப்பூரில் உள்ள மொத்த சாயப்பட்டறைகளையும் மூட உத்தரவு பிறபித்த காரணத்தால் கடந்த இரண்டு மாதங்களாக திருப்பூரை நம்பி வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையை இருள் பரவத் தொடங்கியுள்ளதை எந்த ஆட்சியாளர்களும் கண்டு கொள்ளவில்லை.  காரணம் இது தேர்தல் சமயம் என்பதால் ஊடகங்கள் கூட இந்த பிரச்சனையை துணுக்குச் செய்தியாகவே போட்டுக் கொண்டிருக்கிறது.

கடந்த இரண்டு மாதங்களில் 35 000 பேர்கள் தங்களுடைய குடும்ப அட்டையை (ரேசன் கார்டு) முகவரி மாற்றிக் கொண்டு நகரத் தொடங்கிவிட்டார்கள்.  மேலும் இரண்டு லட்சம் பேர்கள் முகவரி மாற்றத்திற்காக விண்ணப்பித்துள்ளார்கள்.  கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இதே தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்தவர்களின் வாழ்க்கை இனி எப்படி இருக்கும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி?

இந்த சாயப்பட்டறையைச் சார்ந்த தொழிலில் மூன்று விதமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள். தொழிலாளார்களாக, அலுவலக பணியாளர்களாக நிர்வாகத்தில் உயர்பதவியில் இருப்பவர்கள் என்று மூன்று வகையினருக்கும் இனி எந்த தொழிலை கற்றுக் கொண்டு எங்கே செல்ல முடியுமோ? கிராமப் பகுதிகளில் இருந்து வந்து வேலை செய்து கொண்டிருக்கும் இளைஞர்கள் இப்போது சாயப்பட்டறை முதலாளிகளிடம் சொல்வது என்ன தெரியுமா?

"எங்களுக்கு வேறு வேலை எதுவும் தெரியாது?  ஊரில் போய் இருக்கவும் முடியாது.  எங்களுக்கு மூன்று வேளை சோறு மட்டும் போடுங்க. பிரச்சனை முடிந்தவுடன் சம்பளம் கொடுங்க" என்கிறார்கள்.

சாயப்பட்டறை முதலாளிகளுக்கு வங்கி ஒரு பக்கம். இது போன்ற தொழிலாளர்களின் நெருக்கடி மறுபக்கம். அரசாங்க சட்டதிட்டத்தின்படி செயல்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கும் பேரிடியாக நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது.

2006 ஆம் ஆண்டு இந்த பிரச்சனை சூடுபிடிக்கத் தொடங்கிய போது இந்த மனைவிமார்கள் எவரும் தங்கள் கணவர்களுக்கு அறிவுரை எதுவும் சொல்லியிருப்பார்களா என்று தெரியவில்லை.  முதல் நாள் நடுத்தெருவில் உட்கார்ந்து தங்கள் எதிர்ப்பைக் காட்டிய பெண்கள் அடுத்த நாள் மாவட்ட ஆட்சியர்களுக்கு தங்களது கோரிக்கைகளை கொடுக்க ஊர்வலமாக வந்த கூட்டத்தில் பாதி பெண்களை காணவில்லை. குளுகுளு வசதியில் வாழ்ந்தவர்களுக்கு கொளுத்தும் உஷ்ணம் அதிகமாக இருந்த காரணத்தால் ஆளைவிட்டால் போதும் என்று பாதிப்பேர்களை காணவில்லை. 

மற்றொரு ஆச்சரியம் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக சாயப்பட்டறை சங்கம் மட்டுமல்ல ஏற்றுமதியாளர் சங்கம் முதல் திருப்பூரில் உள்ள மற்ற எந்த துறை சார்ந்த சங்கமும் ஆதரவு கொடுக்கவில்லை.  கலந்து கொள்ளவும் இல்லை.  நடு இரவில் எந்தந்த சாய்ப்பட்டறைகள் ஆற்றில் சாயத்தண்ணீரை கலந்து விடும் போது கூட எவரும் கண்டும் காணாமல் இருக்க "இன்று உன்னால நான் கெட்டேன். என்னால நீ கெட்டாய் "என்று நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விட்டுள்ளது.

ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையும் இல்லை. உண்மையான அக்கறையும் இல்லாத காரணத்தால் காலம் கடந்தும் இந்த தெருமுனைப் போராட்டம் வெறும் கேலிக்குறியாகவே போய்விட்டது. மொத்தத்தில் தவறான சமயத்தில் சரியான விழிப்புணர்வு.


வளம் கொழிக்கும் டாஸ்மார்க்கை அரசாங்கம் எடுத்து நடத்தும்.  ஆனால் இது போன்ற சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அரசாங்கம் ஆதரவு அளிக்க முன்வருவதில்லை.  காரணம் உள்ளேயிருக்கும் முதலாளிகளுக்கிடையே உள்ள ஆயிரத்தெட்டு அரசியல் நிலைப்பாடுகள் இருப்பதால் எட்டு திசையிலும் 64 குதிரைகள் பூட்டி இந்த பிரச்சனைகள் தொடக்கம் முதல் வெவ்வேறு பாதையில் சென்று கொண்டிருக்கிறது.  நீதிமன்றம் ஆப்பு சொருகிய பிறகு இனி எந்த ராஜா வந்த ஆப்பை கழட்டப் போகிறாரோ?  அதற்குள் இன்னும் எத்தனை லட்ச குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரப்போகின்றதோ?

அதைத்தான் கூட்டத்தில் பேசிய ஒருவர் இப்படிச் சொன்னார்

"ஜட்ஜ் அய்யா ஜட்டி போடுவாரா?  அந்த தீர்ப்பை எழுதுவதற்கு முன்பு இந்த பிரச்சனையில் தமிழ்நாட்டு அரசாங்கம் என்ன செய்தது என்று பார்த்து எழுதியிருக்கக்கூடாதா? "என்றார்.

இதன் தொடர்பான முந்தைய கட்டுரைகள்

சாயமே இது பொய்யடா

அழுவாச்சி காவியம் கதாநாயகன்