புகைப்படக்கலையில் எனக்குத் தீராத ஆர்வம் உண்டு. ஆனால் இதற்கு அளவு கடந்த பொறுமை தேவை. என்னிடம் சுத்தமாக இல்லை. காரணம் திருப்பூர் வாழ்க்கை கற்றுத் தந்த "நிர்வாகப் பாடங்களின்" காரணத்தினால் வேகம் என்ற வார்த்தையை மட்டுமே அதிகம் கற்றுள்ளேன். இதன் காரணமாக எது நமக்குச் சரியாக வரும்? என்பதை அடையாளம் கண்டு கொண்டு மற்றவற்றை அது சார்ந்த நபர்களிடம் ஒப்படைத்து விட்டு வேடிக்கை பார்ப்பது வழக்கம்.
இந்த எண்ணத்தை நான் வளர்த்துக் கொண்டதற்கு முக்கியக் காரணம் ஒரு பேட்டியில் இயக்குநர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ் (இது நம்ம ஆளு படப்பிடிப்பு நடந்த சமயத்தில்) எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களிடம் சொன்ன அறிவுரையை இப்பவும் மனதில் வைத்துக் கொள்வதுண்டு.
அவர் அப்போது பாலகுமாரனிடம் சொன்னதாக நான் படித்த வரிகள் இது.
"நீங்க எதுக்குப் போட்டோகிராபி கத்துக்கனும்ன்னு அவங்க வேலையைக் கெடுத்துக்கிட்டு இருக்கீங்க. உங்களுக்கு என்ன வேண்டுமோ? அதை அவர்களிடம் சொன்னால், புரியவைத்து விட்டால் அவர்கள் தந்து விடுவார்கள். உங்களின் உழைப்பு இயக்குநர் வேலையில் இருந்தால் தானே அதில் தனிச்சிறப்பை காட்ட முடியும்"
நமக்கு எல்லாத்துறையிலும் ஆர்வம் இருக்கலாம். ஆனால் குறிப்பிட்டத் துறையில் மட்டுமே நமக்குத் தனிப்பட்ட திறமை சற்று மேலோங்கி இருக்கும் என்பதைக் காலம் உணர்த்தும். நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் தான் படம் எடுத்துக் கொண்டிருந்த மதன் மற்றும் குமாரிடம் ஒவ்வொரு இடத்திலும் நான் எதிர்பார்ப்பதை சொல்லிவிட்டு ஆசான் உடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.
இதுவரையிலும் சென்னை முதல் தனுஷ்கோடி வரையிலுமான உள்ள பயணத்தில் ரசித்து வாசித்த கவிதைகள் போலப் பல படங்களை எடுத்ததை வெளியிடுகின்றேன். தொடர்ந்து திருவாவாடுதுறை குறித்த பதிவோடு இந்த பயணம் முடிவு பெறும். இங்கு வெளியிட்டுள்ள படங்கள் குறித்த தகவல்களை அந்தந்த படங்களோடு தருகின்றேன்.
நாம் வாசித்து முடிக்கும் போது அதிகச் சிந்தனைகளைத் தூண்டும் வரிகள் பல சமயம் நமக்கு மன உளைச்சலோடு சோர்வையும் தந்து விடும்.
அது போன்ற தாக்கத்தில் இருந்து கொஞ்சம் விலகி நிற்பதற்காகவும் இந்தப் படங்கள் என்னளவில் ஆவணப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பதற்காகவும் இந்தப் படங்கள் உங்கள் பார்வைக்கு.
நன்றி.
ஆசானின் திருச்செந்தூர் வீட்டில் எடுக்கப்பட்ட படம். இந்தச் சாவி தயார் செய்து 60 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னமும் அற்புதமாக வேலை செய்து கொண்டிருக்கின்றது.
ஆசான் வீட்டின் உள்ளே நுழைந்த போது இந்தக் கதவு என்னை சுண்டி இழுத்தது. ஆசான் வீட்டில் அவரின் அக்கா மற்றும் அவரது குடும்பத்தினர் தான் வசித்து வருகின்றனர். அவர்களின் பழக்கவழக்கங்களும் ஏறக்குறைய 25 வருடங்களுக்குப் பின்னால் உள்ள வாழ்க்கை முறைகளைப் போலத்தான் உள்ளது. மொத்ததில் ஆன்மீகத்தை உயிர் மூச்சாக வைத்துக் கொண்டு எளிமையான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
காலை உணவை இங்கே சாப்பிட்டு முடித்து விட்டு எல்லோரும் வெளியே சென்ற பிறகு இந்த கதவின் பக்கவாட்டில் ஏறிக் கொண்டு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் பயணம் செய்து உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தைத் தனத்திற்கு தீனி கொடுத்தேன்.
முக்கிய சாலையில் இருந்து ஐந்தடி தூரம் கீழே உள்ள வீடு. கடந்த அறுபது ஆண்டுகளில் எந்த அளவுக்கு சாலையின் உயரம் உயர்ந்துள்ளது என்பதை பார்ப்பதற்காக உள்ளே இருந்து எடுக்கப்பட்ட படம்.
இன்று "உலகமே ஒரே கூரையின் கீழ்" என்ற தத்துவம் உருவான பிறகு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்கள் காணாமல் போய் நவீன ரக பொருட்கள் நம் வாழ்க்கையை ஆக்ரமித்து விட்டன. சொளகு, அம்மிக்கல், ஆட்டுக்கல், போன்றவை தேவையில்லாமல் போய்விட்டது.
எங்கள் காரைக்குடி பகுதியில் திருமணத்தின் போது சீர் கொடுப்பது முதல் அன்றாட பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது வரைக்கும் வெண்கலச் சொம்பு மற்றும் பானைகள் தான் பயன்பாட்டில் இருந்தது.
இன்றோ எவர்சில்வர் தொடங்கி பிளாஸ்டிக் குடங்கள் என்று மாறி இன்னமும் அதன் உருவமும் வடிவமும் மாறிக் கொண்டே இருக்கின்றது. கடந்த 25 ஆண்டுகளில் இது சார்ந்த தொழிலில் ஈடுபட்ட லட்சக்கணக்கான குடும்பங்கள் இப்போது எந்த தொழிலுக்கு மாறியுள்ளார்களோ?
இந்த மின் விசிறியின் வயது அரை நூற்றாண்டு. இன்று வரையிலும் அற்புதமாக வேலை செய்து கொண்டிருக்கின்றது.
விளம்பரம் தேவைப்படாமல் இருந்த வரைக்கும் உற்பத்தியாளர்கள் ஒவ்வொருவரும் தரத்தில் மட்டுமே கவனத்தை வைத்திருந்தார்கள். இன்று விளம்பரங்கள் மூலம் மட்டுமே விற்பனை செய்ய முடியும் என்று மாறிய நிலையில் மக்கள் பையில் உள்ள பணத்தை அவர்கள் அனுமதியோடு எப்படி திருடுவது என்பதாக தொழில் முறைகள் மாறியுள்ளது.
இப்படித்தான் நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு நாகரிகம் என்ற பெயரில் பலரும் பலவற்றை கற்றுத் தந்து கொண்டிருக்கின்றார்கள்.
திருச்செந்தூர் என்ற ஊரில் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத போதும் கூட இங்கு வருகின்ற அத்தனை பக்தர்களும் சராசரி வருமானத்திற்கு கீழே உள்ளவர்களாகத்தான் உள்ளனர். இவர்கள் தான் அதிக அளவில் தென்படுகின்றனர். இது குறித்து மேலும் சில படங்கள் அடுத்த பதிவில்.
கடல் அழகு. கடலை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பது அதனை விட அழகு. அழகுக்கு அழகு சேர்ப்பது போல இவர்களின் ஆட்டமென்பது மொத்தத்திலும் அழகு.
ஆசானுடன் ஐந்தாம் வகுப்பு வரையிலும் ஒன்றாக படித்த பள்ளிக்கூட தோழர் இவர். இருவரும் வாடா போடா என்று பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த போது கொஞ்சமல்ல நிறைய வியப்பாகவே இருந்தது. மாறாத குணம் இருந்தால் வாழ்க்கையின் இறுதி வரையிலும் மனதிற்குள் இருக்கும் குழந்தைத்தனம் மாறாது என்பது உண்மை தானே?
பாம்பன் பாலம் என்ற ஒரு வார்த்தை உருவாக்கும் தாக்கத்திற்காகவே எடுக்கப்பட்ட படம்.
தனுஷ்கோடி என்ற ஊருக்குள் நுழைந்த தருணத்தில் வாகனத்தில் இருந்து எடுக்கப்பட்ட படம். பாதை மட்டுமல்ல. பயணமும் கடினம் தான். மாறி மாறி சென்று வந்து கொண்டேயிருக்கும் ஒவ்வொரு வாகனங்களும் இந்த டயர் பாதை அடையாளத்தை வைத்து தான் வண்டியை இயக்குகின்றார்கள்.
இந்த படங்களை பதிவேற்றிக் கொண்டிருந்த போது என் அருகில் இருந்த அழகான ராட்சசிகள் நான் எழுத முடியாத அளவுக்கு கையை தடுத்து ரவுசு செய்து கொண்டிருந்தார்கள். காரணம் அவர்களை நான் அழைத்துக் கொண்டு செல்லவில்லையாம்?
இதையும் எழுதி விடுவேன் என்று மிரட்டிய போதும் நீங்க எழுதுங்க? படிப்பவர்களும் எங்களுக்குத்தான் ஆதரவாக இருப்பார்கள் என்கிறார்கள்.
நீங்களே சொல்லுங்க. செல்லும் இடமெல்லாம் இவர்களை சுமந்து கொண்டு செல்ல முடியுமா? இவர்களுக்கு நான் கொடுத்துள்ள அளவு கடந்த சுதந்திரம் பல சமயம் என்னையே திருப்பித் தாக்கும் பூமராங் போலவே உள்ளது.
 |
| நம்புங்கள், நம் வாழ்க்கையும் கடைசியில் இப்படித்தான். |
தொடர்புடைய பதிவுகள்