Showing posts with label கமல் 50. Show all posts
Showing posts with label கமல் 50. Show all posts

Tuesday, October 20, 2009

கலைஞானி கமல்ஹாசன் கலைஞன் கணவன் தந்தை

"காதல் மன்னராக "  பிறகு இவர் தான் "இளவரசன் "  பட்டத்துக்கு வந்தவர்.  காதல் மன்னராக ஆட்சி புரிந்தவர் கூட தன்னுடைய கடைசி காலத்தில் பொருந்தாத காதலினால் தானும் அவஸ்த்தை பட்டு அவரின் மொத்த குடும்பத்தையும் அவஸ்த்தைக்கு உள்ளாக்கினார்.  ஆமாம்" காதலின்" மொத்த குறீயிட்டின் பலமும் பலவீனமும் இது தான்.



அன்று எனக்கு புரியாத வயதில் அடுத்த வீட்டு அக்கா என்னை விரட்டி விட்டு உங்களை ரசித்தார்கள். இன்று என் குழந்தைகளுக்கு புரியாமல் இருந்தாலும் கூட   உங்களை ரசிக்க முடிகின்றது.

ஆனால் இன்றுவரையிலும் வாலிப வாலிபிகளுக்கு ஜிலேபி உண்ணும் மகிழ்ச்சியை தந்தவர்,  தந்து கொண்டுருப்பவர் நம்முடைய கமல் ஹாசன் என்றால் அதில்  ஹாஸ்யம் இல்லை.  நடிகர் சிவகுமார் சொன்னது போல்  " அப்போது  தேடிக்கொண்டுருந்த அழகான முகம்"

 இன்றுவரையிலும் அதை காப்பாற்றி வைத்து இருப்பது வெறும் சாதனை என்ற வார்த்தைகளுக்குள் அடக்கி விடக்கூடியதா?  ஆனால் இந்தக் கமலம் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த புயல்கள், ஏமாற்றங்கள், இழப்புகள்,சோகங்கள் அத்தனையும் மீறி இன்று கமல் 50.



ஓவியமாய் உள்ளே வந்து கடைசியில் வாணியின் ஓவியம் போல் வாழ்க்கையையும் அமைத்துக்கொண்டீர்கள்?

தாமரைச் சின்னம் கூட பல சமயம் வாடிப்போய் நம்பிக் கொண்டுருந்தவர்களை ஏமாற்றி விட்டதுண்டு.  ஆனால் இந்த கமலம் இன்று வரையிலும் வாடாமல் நம்முடைய தமிழர்களின் வாழ்க்கையையும் பலசமயம் சிந்திக்க வைத்துள்ளார்.
அரசியலில் கலைஞரைப் போல கலையில் இவர் ஒரு ஆச்சரியக் குறியீடு தான். " இசைக்கு ஞானி"  என்ற பட்டம் என்பது இளையராஜாவுக்கு எத்தனை பொருத்தமோ அத்தனை பொருத்தம் இவருக்கு" கலைஞானி "  தொடக்கத்தில் வெறியனாக, ரசிகனாக, பார்வையாளனாக என்னை பரவசமாய் நவரசத்தில் ஆழ்த்தியவர்.  கற்பவர்களுக்கு கரை இல்லை என்று இன்றுவரையிலும் அனைவருக்கும் உணர்த்திக்கொண்டுருப்பவர்.  அதென்னவோ தமிழ்நாட்டில் மட்டும் ஞானி என்றால் பிரச்சனை தான்.


சிந்தனையாளர் ஞானியின் ஓ....... பக்கங்களுக்கு  ஓகோ....... என்று படிக்கவிரும்பாதவர்கள்,  சிறகடித்து காற்றில் பறக்காத சிம்பொனி என்று சீண்டி பார்த்துக்கொண்டுருக்கும் பட்டியலில் இவர் மட்டும் இன்னும் சிக்க மாட்டேன் என்கிறார். எவர் வெறுத்தாலும் ஒதுக்கினாலும் எனக்குள் ஒருவன் தான்.
நடிப்பில் சிறந்தவர் என்றால் நடிகர் திலகம் போதுமே?   எது மக்களுக்குத் தேவை என்று உணர்ந்தவர் என்றால் மக்கள் திலகம் போதுமே?
ஆனால் இவர்கள் இருவரிடத்திலும், தொடர்ந்து வந்து கொண்டுருப்பவர்களிடத்திலும் இல்லாத ஒரு சிறப்பு இவரிடம் உண்டு.

கலைஞானி ஒரு விஞ்ஞானி

தனது கலையை, வாழ்க்கையை, கொள்கையை, எதிர்கால லட்சியங்களை எல்லாவற்றையும் விஞ்ஞானப் பார்வையில் பார்க்கத் தெரிந்த மிகச் சிலரில் இவரும் ஒருவர்.  அதில் தோல்வியும் உண்டு.  தொடர்ந்த வெற்றியும் உண்டு.
அது பலருக்கு புரியாத ஆபூர்வ ராகங்களாக இருந்தாலும் இன்று வரையிலும் வற்றாமல் ஓடிக்கொண்டுருக்கும் மகா நதியாகத் தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்.

சாட்டிலைட் உடன் சண்டை பிடிக்காதீர்கள் என்று நுழையும் போதே சமரசம் பேசியவர்.  சண்டியர் தனத்தை குறைத்துக்கொள்ளுங்கள்.  அனைத்து திரை அரங்குகளிலும் வெளியிடுங்கள் என்று சொல்லி வெற்றி விழா பாதையை காட்டியவர்.

திரை உலகில் நுழைந்த போது, வளர்ந்த போது, தடுமாறி நின்ற போது, மேலேறிய போது, மேட்டுக்கு வந்தடைந்த போது, மேலான மக்களுக்கு அறிமுகமான போதும் தன்னால் என்ன முடியும் என்பதை சோதித்து பார்த்தவர்.  மேம்பட்ட நுட்பம் உள்ளே வந்த போதெல்லாம் அதற்குள் தன்னை பொறுத்திப் பார்த்தவர்.

எட்டு மொழி வித்தகம்.  எல்லா நாட்டு திரை அறிவையும் கரைத்துக்குடித்தவர்.  இவரின் பள்ளி அறிவு சொல்லித் தரமுடியாததை இவர் உள் வாங்கி சொன்ன போது உலகில் இவரும் ஒரு முக்கியப் புள்ளி ஆனார்.   வாழ்க்கை முழுவதும் கோரப்பசி.  ருசித்து ருசித்து குடித்தவருக்கு இன்னமும் கலை தாகம் அடங்கவில்லை.

நல்லவற்றை நடிகர் சிவகுமார் மூலம் பெற்றுக் கொண்டு ரசிகர்களை நாலாம்தர குடிமக்களாக மாற்றாதவர்.  நா நயம் நம்மை விட பெற்றவர். நாணயத்தில் வருமான வரி துறையின் குறும்படத்தில் நடிப்பவர்.  அத்தனை இலக்கிய அறிவும் உண்டு.  ஆற்றாமையில் வரும் கடவுள் மறுப்பும் உண்டு.  இவரின் கிசு கிசு செய்திகள் போல் இவரின் வளர்ச்சியில் புசு புசு என்று புழுக்கம் அடைந்தவரும் உண்டு.

திரையையே குடும்பமாக கொண்ட நோக்கத்தால் தான் என்னவோ நூறு படங்கள் முடித்தும் விரும்பக்கூடிய வீட்டை அடைய அதற்கும் இந்த குருநாதர் பாலச்சந்தரின் அதட்டல் அவஸ்மாக இருந்தது.   கட்டிய மணைவியுடன் கொண்ட வாழ்க்கை இறுதியில் கண்ணீரைத் தந்தாலும் புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யமாகவே புதைந்து விட்டது.  எல்லாமே புதுமை.  சிந்தனை மட்டுமல்ல.  குழந்தை பெற்று தாலி கட்டியதும் புதுமை தான்.

பிரிவினைகள் என்பது மனைவியுடன் மட்டுமல்ல.  சகோதரர்கள் கூட என்ற போதிலும் அத்தனையிலும் சாணக்கியன் தான்.



உங்களின் கலைக்கு மட்டுமல்ல .  உங்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் இவர் தான் கடவுள். உங்களுக்கு இந்த வார்த்தை பிடிக்காவிட்டாலும்?


மாநில பிரச்சனைகள் மீறி மகத்தான மனிதராக காட்டிக் கொண்டவர்.   தலைகோதி, உடை மாற்றி  உள்ளம் கவர்பவர் ஒரு பக்கம்.  ஆனால் அவர் முதல் படம் வருவதற்கும் காரணமாக இருந்தவரும் இவரே.  இன்றளவும் அவருக்கு மட்டுமே போட்டியாக இருப்பவரும் இவரே.  உள்ளத்தை சிரிக்க வைக்க வந்த பல பேர்களில் இன்று வரையிலும் உடலை வருத்தி கலையாத தாகத்தில் தவிப்பவர்களுக்கு தன்னை அர்பணித்துக்கொண்டவர்.


நடிகனாக இருப்பவருக்கு என்ன பாராட்டு பத்திரம்?

ரத்தத்தின் ரத்தமே என்று சொல்லாமல் தந்த ரத்த தானங்கள், உடன்பிறப்பே என்று சொல்லாமல் உடலை தொடக்க காலத்திலேயே தானமாக தந்தவர்.


மதம் இல்லாத பள்ளியை தேர்ந்தெடுத்தபோதே உங்களின் வாழ்க்கையின் பாதை குறித்து பெரிதான ஆச்சரியம் இல்லை. எல்லா நிலையிலும் நாயகன் தான்.

எல்லாவிதத்திலும் முன்னோடி தான்.

அம்மாஞ்சி மலையாள பிரமாணன், தேவர் மகனாக மாறுவார்.  விருமாண்டியின் வீரம் பயமான தெனாலியாக கதைக்க முடியும்.  ஆனால் அவதாரமாக உருவெடுத்து உன் அருகில் தீவிரவாதம் என்பதை உயரத்தில் இருந்து ஊருக்கு உரைக்க முடிகின்ற தைரியசாலி.

மற்றவர்களுக்கு, தொடர்ந்தவர்களுக்கு, நம்பியவர்களுக்கு எதைத்தந்தார்?

சுந்தர் சி, சந்தானபாரதியிடம் கேட்க வேண்டும்.  திரைக்கதை பட்டறையில் பங்கெடுத்தவர்களிடம் கேட்க வேண்டும்.  கமலுக்கு பிறகு விக்ரம் தான் என்று ஞாநியிடம் கேட்க வேண்டும். கற்றது என்னவோ அனந்து, பாலசந்தரிடம் தான்?

ஆனால் இவர் நேரிடையாக மறைமுகமாக மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டுருப்பவரிடம் எதைக் குறிப்பிட்டு கேட்டு விட முடியும்?

இவர் யார் கைபிடித்தும் வரவில்லை?  அதற்கான அவஸ்யத்தையும் உருவாக்கவில்லை.




உங்களின் கான்சாகிப் நிறைவேறாத லட்சியமாகவே இருக்கட்டும். அதற்குள் சிறுபான்மையினர் கொண்டுள்ள கோபக் கனல் மாறிவிடும் ?


கதை, திரைக்கதை, வசனம், இயக்குநர், தயாரிப்பாளர் என்ற தெரிந்த முகமும், அதிகம் வெளியிடாத கவி படைப்பாளியும், மேம்பட்ட தரமான இலக்கிய அறிவாளியும் எத்தனையோ தசவதாரம்.

இவர் பேசும் பேட்டிகள் புரியாத மொழிகள் என்றாலும் புரிந்தவர்களுக்கு சொர்க்கம்.  அது புஷ் மொழியாக இருந்தாலும் சரி,  இல்லை 
குஷ்  மொழியாக இருந்தாலும் சரி.

 எல்லாமே தனி  மொழி தான்.  சந்தேகம் என்பதே இருக்காது.

காரணம் காதல் காட்சியில் கதாநாயகி முகத்தில் திருக்குறளை அவசரமில்லாமல் படித்து ரசிக்கும் ருசிக்கும் அந்த மூன்றாவது பாலை பார்க்கும் பார்வையாளன் , ரசிகன் வீட்டில் (?) தயாராக இருக்க வேண்டும்?  காரணம் அவர் சொல்வது போல் உள்ளே உறங்ககி கொண்டுருக்கும் மிருகத்தை எழுப்பி விட்டுருப்பார்.

எல்லாமே சரி தான்?

குழந்தைகளுக்கு முதல் தரமாக முதன்மை தரமான கல்வியை வழங்கிய கலைஞானி அவர்களுக்கு தரமான வளர்ப்பை தந்துள்ளாரா?

 உலகளாவிய பார்வைகள் என்பது உள்ளூருக்குள் தான் வாழ்ந்தாக வேண்டுமென்ற அவர்களுக்கு எதிர்காலத்தில் சரியானதாக இருக்குமா? என்பதை அவர் சொல்லும் வார்த்தைகளில்  திருமணம் என்பது விரும்பியவர்களுக்காக செய்து கொண்ட ஒரு சமரசம் என்பதாக எடுத்துக்கொள்ளத் தான் வேண்டும்போலிருக்கு.  காரணம் முன்னோடி என்பவர்களின் தத்துவம் எல்லாம் நமக்கு தொடக்கத்தில் புரியாது.  ஒரு வேளை அவர் கடைசி காலத்தில் அவர் விரும்பியபடி கேரளாவில் ஓய்வு எடுக்கும் நிஜ இந்தியன் தாத்தாவாக வாழும் போது ஒரு வேளை மறு பரிசீலினை செய்வாரா?  அல்லது நாம் தான் அன்று நாம் வாழப் போகும் வாழ்க்கையை மறு பரிசீலினை செய்யக்கூடிய கட்டாயம் வருமா? என்று தெரியவில்லை.

காரணம் ஒவ்வொரு முறையும் அவர் அவசரப்பட்டு சொன்ன போதிலும் இறுதியில் அவரது வார்த்தைகள் தான் ஜெயித்துக்கொண்டுருக்கிறது.

குறிப்பு  
நீண்ட 50 போலவே நீண்டு விட்டது. அதிலும் பிரகாசமானவர், மம்முட்டியானவர், லால், வெங்கி உரை திரையை விரும்பாமல் இருப்பவர்களுக்கும் பொன் உரை.