தமிழ் இணையத்தில் நீங்கள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு இருப்பவரா? வாசிப்பாளர், எழுதுபவர், பார்ப்பவர் என்று மூன்று நிலையில் இணையத்தை நாள் தோறும் ஏதோவொரு வகையில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் உங்களுக்கு இதற்குப் பின்னால் இருக்கின்றவர்கள் யார்? இருந்தவர்கள் யார்? என்பது போன்ற தகவல்கள் தெரியுமா? அதைப் பற்றி நீங்கள் யோசித்தது உண்டா?
நான் தமிழ் இணையத்தில் 2009 ஆம் ஆண்டு நுழைந்தேன். அடுத்த இரண்டு வருடத்தில் நிதானத்திற்கு வந்தேன். அடுத்த சில வருடங்களில் இது குறித்த ஆராய்ச்சியில் இறங்கினேன். இன்று அடிப்படை விசயங்களை, நபர்களைப் பற்றி என்னால் புரிந்து கொள்ள முடிந்துள்ளது.
தமிழ் இணையம் எப்படித் தொடங்கியது? தமிழ் எழுத்துருக்களை எவரெல்லாம் உருவாக்கினார்கள்? கணினி மொழியில் எப்படி மாற்றினார்கள்? எத்தனை சவால்களைச் சந்தித்தார்கள்? எத்தனை விதமான அரசியல் இதற்குப் பின்னால் இருந்தது? அரசு சார்ந்த நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் பங்களிப்பு என்ன? தமிழ் மொழி வளர்ச்சிக்கு மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம் என்ன செய்கின்றது?
