Wednesday, March 09, 2022

" 10 பாராளுமன்ற உறுப்பினர்களும் என் இலக்கு"

நான் அறிந்த தமிழ் இணையத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பாக எந்தவொரு கட்சிக்கும் தனிப்பட்ட செல்வாக்கு இருந்ததும் இல்லை. எவரும் தங்களைக் கட்சிக்காரர்களாக அடையாளப்படுத்திக் கொண்டதும் இல்லை.  


ஆனால் திமுக என்ற கட்சியில் இருந்தவர்கள் தங்களை ஏதோவொரு வழியில் திராவிடத்தின் பிள்ளைகள் என்பதனையும் மதச்சார்பற்றவர்கள் என்பதாக நிலை நிறுத்துவதில் அக்கறை காட்டினார்கள். அனைவருடனும் உறவாடினார்கள். படிப்படியாக அனைவரையும் தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டார்கள்.  

இன்று தமிழ் இணையம் முழுக்க எங்கு பார்த்தாலும் பெரியார் மற்றும் பெரியாரியம் என்ற வார்த்தையை இண்டு இடுக்கு விடாத அளவுக்கு மாற்றியுள்ளனர். நிரப்புவதில் வெற்றியும் அடைந்துள்ளனர்.

தொடக்கம் முதல் பாஜக விற்கு தமிழ் இணையத்தில் ஆதரவு இருந்தது இல்லை. பாஜக கட்சிக்காரர்களே அதனைப் பெரிதாக எடுத்துக் கொண்டதும் இல்லை. காரணம் இருந்த எவரும் தொழில் நுட்பம் குறித்து அறிந்ததும் இல்லை.  இதன் பாதிப்பு எப்போது தெரிந்தது என்றால் திரு. கு. அண்ணாமலை அவர்கள் 2021 ஜூலை மாதம் தமிழக பாஜக தலைவராக பொறுப்பு ஏற்றபின்பு தான் அனைவருக்கும் புரியத் தொடங்கியது.

பெரியாரின் பிள்ளைகள், பேரன்கள் என்று மகா கூட்டணி ஒன்று தமிழ் இணையத்தை ஆக்கிரமித்து இன்று உண்மையான தமிழக வரலாற்றை மாற்றுவது தொடங்கி மோடி அவர்களின் நல்ல திட்டங்களின் பலன்கள் பாஜக விற்கு போகாத அளவிற்குத் திட்டமிட்டு திருட்டுத்தனமாக வெளிப்படையாகவே செயல்பட்டு வந்தார்கள். 

இன்று வரையிலும் சுருதி சுத்தமாக செய்து வருகின்றார்கள்.

காத்திருந்த காலம் திரு. அண்ணாமலை அவர்கள் உள்ளே வந்ததும் தன் வேலையைக் காட்டத் தொடங்கியது. 

அண்ணாமலை அவர்களின் நேர்மை, அவரின் எளிமை, அனைவருக்கும் அவர் அளிக்கும் மரியாதை, தொண்டர்களுக்கு ஒன்று என்றால் நான் தான் முதலில் நிற்பேன் என்று அறைகூவல் விடுக்க இன்று இணையம் எங்கும் அண்ணாமலை என்ற பெயருக்காகவே பல லட்சம் பேர்கள் இரவு பகல் பாராது தமிழ் இணையத்தில் உழைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். 

இன்றைய சூழலில் பாஜக என்ற கட்சிக்கு இருக்கும் ஆதரவு திராவிட வாதிகள் நினைத்தே பார்க்க முடியாத ஒன்றாகும். 

இன்று திருட்டு திராவிடம் திக்கு தெரியாத காட்டுக்குள் மாட்டிக் கொண்ட வினோத விலங்கு போல கதறிக் கொண்டு இருக்கின்றது.  நீ ஒன்று என்றால் நாங்கள் நூறு என்பதாக வெளிப்படுத்தப் புதிதாக உள்ளே வந்துள்ள திமுக ஐடி பிரிவு இளைஞர் திரு. அண்ணாமலை அவர்களைப் பற்றி அவதூறு பரப்புவதை மட்டுமே முழு நேரப் பணியாக வைத்திருக்கும் அளவுக்கு அண்ணாமலை  திமுக என்ற நாடக கம்பெனிக்கு மிகுந்த சவாலை அளித்துள்ளார். நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டும் வருவதால் திருட்டு திராவிடத்தின் அக்மார்க் குணமான "தனிமனித தாக்குதலில்" இறங்கியுள்ளனர்.

இணையத்தில் பாஜக சார்பாக செயல்படும் அனைவரும் ஒரு விசயத்தைத் திரும்பத் திரும்ப வெவ்வேறு விதமாக அவரவருக்கும் தெரிந்த வகையில் எழுதுகின்றார்கள்.  

தமிழக பாஜக கட்சியில் உள்ள நிர்வாக நடைமுறைகள் மாற்றப்பட வேண்டும்.  

நீண்ட காலமாக பதவியில் இருந்த போதிலும் செயல்படாமல் இருப்பவர்களை மாற்றி புதிய உத்வேகம் உள்ள இளைஞர்களை உள்ளே கொண்டு வர வேண்டும்.  

மாவட்ட அமைப்புகள் முற்றிலும் புது நிர்மாணம் செய்யப்பட வேண்டும் 

என்று இது போலப் பல கோரிக்கைகளைத் தொடர்ந்து எழுதிய வண்ணம் இருப்பதற்கு இப்போது விடிவு காலம் பிறந்துள்ளதாகவே கருதுகிறேன்.

"இருப்பவர்களை வைத்துச் சிறப்புடன் கட்சியை முன்னேற்றுவேன்". 

"150 சட்டமன்ற உறுப்பினர்கள்"

" 10 பாராளுமன்ற உறுப்பினர்களும் என் இலக்கு" 

என்று சொல்லிக் கொண்டு வந்த அண்ணாமலை  இப்போது ஒவ்வொருமாவட்ட நிர்வாகத்தையும் செயல்பாடுகளின் அடிப்படையில் மாற்றத் தொடங்கியுள்ளார்.

நான் தனிப்பட்ட முறையில் நீண்ட நாட்களாகவே எதிர்பார்த்து காத்திருந்தேன்.

இளையர்களுக்கு நம்பிக்கையளிக்கும் நாயகனாக இருக்கும் அண்ணாமலை அவர்கள் இனி வரும் காலத்தில் தமிழக பாஜக கட்சியில் பதவியில் இருப்பவர்கள் அதனைத் தங்களுக்குரிய அலங்காரப் பதவியாக பயன்படுத்த முடியாத அளவுக்கு நான்கு பக்கமும் திட்டமிடுதலை உருவாக்குவார் என்றே என்னைப் போன்றவர்கள் கருதுகின்றோம்.

அதன் தொடக்கப்புள்ளி இப்போது தொடங்கியுள்ளது. 

வரவேற்கின்றேன்.

_______________

மதச் சார்பற்ற கூட்டணியின் மகத்தான தொண்டர் சென்னை மேயர்.  வாழ்த்துகள். தேவனுக்கு ஆசிர்வாதம்.


நீயும் கோமாளி. நானும் கோமாளி. நாம் தலைவன் என்று அழைப்பவரும் தலைமைக் கோமாளி.



பாஜக வந்துரும் ன்னு சொல்வதற்கு உடம்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமே? விஷத்தை தொடர்ந்து அருந்தினால் என்னவாகும்? என்று என் நண்பர்களிடம் கேட்டால் அவர்கள் உடனே யோசிக்காமல் மோடி ஒழிக என்கிறார்கள்.  இங்கு யார் முட்டாள் என்பதே என்னால் இப்போது யோசிக்க முடிவதில்லை.



எத்தனை அவமானங்கள்.  விதம் விதமான பேச்சுகள்.  
என் கடன் பணி செய்து கிடப்பதே.  
பேசியவர்கள் அங்கங்கே இருக்கின்றார்கள்.  
ஆனால் இன்று உலகமே இந்தியாவை பெருமையுடன் பொறாமையுடன் பார்க்கின்றது.  
இது தான் மோடி ஆட்சி செய்யும் இந்தியா.