Friday, September 16, 2016

(மானம் கெட்ட) காவேரி கலவர எழுத்துக்கள்

அரசாங்கம் மட்டுமே இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி விடமுடியாது. அரசாங்கத்தின் வேலை அதுவல்ல. ஆனால் உலகம் முழுக்க இருக்கின்ற சிறு குறு நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்கள் மூலமாகத்தான் இங்கே வேலைகளும் அது சார்ந்த வாய்ப்புகளும் உருவாகி வருகின்றன. உருவாக்கப்படுவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. 

ஆனால் இந்த நிறுவனங்களுக்கான அரசு ஆதரவு என்பது எல்லா இடங்களிலும் பூஜ்யம் சதவிகிதம் தான் ஒத்துழைப்பு கிடைக்கின்றது. வரி வசூலிப்பதில் காட்டுகின்ற ஆர்வம், கறார்தனம் நிறுவனங்களின் வளர்ச்சி குறித்த எந்த அக்கறையும் எந்த அரசாங்கங்களும் அதன் சார்பாளர்களும் எடுப்பதில்லை. தனக்கு என்ன லாபம் என்பதில் தான் அவர்களின் கணக்கு தொடங்குகின்றது. 

தற்போது நடந்து கொண்டிருக்கும் அண்டை மாநிலமான கர்நாடகா காவேரி நீர் திறந்த விட்டதன் தொடர்ச்சியாக உருவான மற்றும் உருவாக்கப்பட்ட கலவரத்தினால் பாதிக்கப்பட்டது திருவாளர் அப்பாவி பொதுஜனம் மட்டுமல்ல. வளரத்துடிக்கும், வளர்ந்து கொண்டிருக்கும், மற்றும் வளர்ந்த ஆயிரக்கணக்கான பல தொழில்கள் சார்ந்த நிறுவனங்களும் தான். பாதிப்பு என்பது எழுத்தில் எழுத முடியாதது. 

கடந்த ஒரு வாரமாக பெங்களூர் விமானம் நிலையம் வந்து சேர்ந்த பொருளை எடுத்து வர முடியாமல் எங்கள் நிறுவனம் தவிக்கும் தவிப்பு எழுத்தில் எழுத முடியாதது. நேற்று என் பார்வைக்கு வந்த உடனே நேற்றும் இன்றும் பெங்களூர் சார்ந்த அத்தனை நண்பர்களையும் தொடர்பு கொண்டு பேசிய போது அங்கே உள்ள அத்தனை அரசியல் தந்திரங்களும், இந்தக் கலவரத்தினை உருவாக்கியவர்கள், ஆதாயம் பெறத் துடிப்பவர்கள், ஆதாயம் அடைந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என்ற பல தகவல்களைப் பெற முடிந்தது. 

நான் பணிபுரியும் நிறுவனம் சார்ந்த வேலைகளை விட இன்றைய ஓய்வு தினத்தில் மனதிற்குள் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களை முழுமையாக எழுதி வைத்தால் மனம் ஆசுவாசம் அடையும் என்பதால் எழுதத் தொடங்கிய போது நண்பர் வில்லவனின் கட்டுரை கண்ணில் பட்டது. அதனையே இங்கு வெளியிட்டுள்ளேன். 

காரணம் காலம் கடந்து நிற்க வேண்டிய கட்டுரையிது. கோபமும், ஆதங்கமும் கலந்து நான் எழுத நினைத்த பல விசயங்களை நாகரிகமாக சுட்டிக்காட்டி உள்ளார்.  உங்கள் விமர்சனத்தின் அடிப்படையில் நான் சேகரித்த தகவல்களை அடுத்த பதிவில் எழுதுகின்றேன்.

பெங்களூரில் வசிக்கும் நண்பர்கள் எழுதிய பல பதிவுகளை, எழுத்துக்களை வாசித்த போது எழுத முடியாத பல வார்த்தைகள் தான் மனதில் வந்து போனது. 

வலைபதிவு என்பது வெறும் சுதந்திர ஊடகம் மட்டுமல்ல. உண்மை நிலவரங்களை அப்படியே எவருக்கும் அஞ்சாமல் எழுதியே ஆக வேண்டிய ஒரு அற்புத சாதனம். ஆனால் பல காரணங்களால் குறிப்பாக "சுய பாதுகாப்பு" கருதி அமைதியாய் உள்ளது என்று பொத்தாம் பொதுவாக எழுதாதீர்கள். எதிர்காலத்தில் நீங்கள் எழுத்தின் மூலம் அடைந்த புகழே உங்களைக் காவு வாங்கி விடும்.

தண்ணீரில் விளையாடிய நாடுடா இது என்ற இந்த என் பழைய பதிவை படித்துப் பாருங்கள். நம் செய்யும் தவறுகளும், மனம் கூசாமல் செய்யும் அக்கிரம செயல்களும் எந்த அளவிற்கு எதிர்காலத்தை பாதிக்கச் செய்யப் போகின்றது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும்?

+++++++++++++==


கர்நாடகாவில் தமிழக வாகனங்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு இருவகையான எதிர்வினைகளைச் சமூக ஊடகங்களில் பார்க்க முடிகிறது. 

அதாவது பெங்களூர் பாதுகாப்பாக இருக்கிறது எனும் feel good பதிவுகள் அல்லது இந்தக் கன்னடர்களே இப்படித்தான் எனும் பதிவுகள் வெளியாகின்றன. இரண்டும் உண்மை இல்லை எனும் பதிவுகளும் இருக்கின்றன அவையும் தெளிவான கர்நாடக சூழலை காட்டுவதாக இல்லாமல் காவிரியின் வரலாறும் கர்நாடகாவின் வன்முறைகளுக்கான பின்னணி பற்றிய புரிதல் அற்றவைகளாக உள்ளன. 

இதற்கான தீர்வுகள் என வரும் கருத்துக்கள் இன்னும் நகைப்பூட்டுபவையாக இருக்கின்றன. இரண்டு மாநில முதல்வர்களை வைத்துப் பேசுங்கள் என்கிறார் ஸ்டாலின். நதிகளை இணையுங்கள் என்கிறார் நடிகர் சிவகுமார். இன்னொருபுறம் கன்னடனைப் பார்த்து இன உணர்வைக் கற்றுக்கொள் எனப் புலம்பும் தமிழ்த்தேசிய கருத்துக்களும் உலவுகின்றன. 

ஒப்பீட்டளவில் கர்நாடக மக்கள் அதிகம் நட்புணர்வுள்ளவர்கள், சாமானிய கன்னட மக்களிடம் நீங்கள் வெள்ளந்தித்தனமான தோழமையைச் சுலபத்தில் பெற முடியும். பெங்களூர் பேருந்து நடத்துநர்கள் தமிழக நடத்துநர்களைவிட பயணிகளிடம் அதிகம் இணக்கமாக இருப்பதைப் பார்க்கலாம். ஆனாலும் எப்போதும் கர்நாடகா சுலபத்தில் கலவரம் நடக்கச் சாத்தியம் உள்ள இடமாக (எல்லாக் காவிரி வேலைநிறுத்தங்களும் பெங்களூரில் ஒரு மிகையான அச்சத்தைப் பராமரிக்கும்) இருக்கக் காரணம் அந்த மக்களிடம் உள்ள அரசியல் அறிவீனம். 

பலருக்கும் தங்கள் மாநில அமைச்சர்களைக்கூடத் தெரிந்திருக்காது, கொள்கை சார்ந்தெல்லாம் அவர்கள் உரையாடி நான் பார்த்ததில்லை. கட்சியைத் தெரிவு செய்வதே பெருமளவில் சாதி அடிப்படையில்தான் அங்கே நடக்கும். 

//நீங்க எந்தக் கட்சி என்று நண்பர் ஒருவரிடம் கேட்டபோது, நாங்க ஒக்கலிகா சாதிக்காரர்கள் சார், பீஜேபிக்குதான் ஓட்டுப்போடுவோம் என்றார் // 

பெருங்கூட்ட உளவியல் மிகவும் பாமரர்களிடம் சுலபமாக வேலைசெய்யும். தமிழகத்தின் மரியாதை தெரிந்த ஊராகக் கருதப்படும் கோவைக் கலவரத்தின்போது கடைகளைச் சூறையாடியது தொழில்முறை ரவுடிகள் மட்டுமல்ல, சாதாரண மக்களும்தான். முஸ்லீம் பெண்கள் நடுவீதியில் வைத்து சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படுகையில் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து ரசித்தவர்கள் இறைச்சி வெட்டுவதைக்கூடப் பார்த்திராத குஜராத் பெண்கள். 

வன்முறை செய்ய தூண்ட முடியாத மக்கள் கூட்டம் என்றொன்று இல்லை, அதற்கான நியாயத்தைக் கற்பிப்பதிலும் பரவலாக வன்முறையை ஆரம்பித்து வைக்கும் அளவுக்கு ஆள்பலத்தை வைத்திருப்பதிலும்தான் இருக்கிறது சூட்சுமம். 

கர்நாடகாவின் இந்தச் சிக்கலான சூழலுக்கு அடிப்படையாக 3 காரணிகளைக் கருதலாம். 

முதலில் மத மற்றும் இன அடிப்படைவாத இயக்கங்களுக்குக் கிடைக்கும் சற்றே பெரிய எண்ணிக்கையிலான ஆள்பலம். வாட்டாள் நாகராஜ் போன்ற தாதாக்கள் தமிழகத்திலும் இருக்கிறார்கள். 

அவர்கள் குரலுக்காக பாதி மாநிலம் தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளாது, ஆனால் அது கர்நாடகாவில் நிகழ்கிறது. இரண்டாவது அரசியல் அறிவற்ற மற்றும் அதற்கு வழியற்ற மக்கள். மூன்றாவது இதற்கு எதிர்குரல் எழுப்ப போதுமான அளவில் ஆட்கள் இல்லாத சூழல். இங்கே தமிழ் தேசியவாதிகளில் சிலர் இனவெறியைத் தூண்ட முனையும்போதெல்லாம் வினாடி தாமதமில்லாமல் எதிர்க் குரல்கள் எழுகின்றன. 

கர்நாடகாவில் அது அனேகமாக இருக்காது. ஒருங்கிணைப்பும் முன் தயாரிப்பும் இல்லாமல் தற்போதைய பெங்களூர் கலவரம் சாத்தியமே இல்லை. மூன்றாண்டுகளுக்கு முன்னாள்கூட பெரிய அளவிலான எதிர்ப்பை கர்நாடகா சந்தித்தது, கிட்டத்தட்ட மாண்டியா 12 நாட்கள் முடங்கியது. அப்போதுகூட இத்தகைய கலவரம் நிகழவில்லை. 

// கன்னட டிவி ஒன்றில் பேசிய விவசாய சங்க பிரதிநிதி எங்கள் ஊர் மழையில் அவர்கள் பங்கு கேட்கிறார்கள், தமிழகத்தில் பெய்யும் மழையில் ஒரு சொட்டுகூட நமக்கு வராது… தண்ணீருக்கு ரிவர்ஸ் கியர் கிடையாது என நிறைய சீரியசாக பேசுகிறார். அதே விவாதத்தில் அமர்ந்துகொண்டு நதிநீர் பங்கீட்டு சட்டங்களை விளக்காமல் இருந்தார் ஜெயா வழக்கில் அச்சமின்றி வாதாடிய வழக்கறிஞர் ஆச்சார்யா// 

தமிழகத்திலும் முஸ்லீம்களுக்கு எதிராக வெகுமக்களின் மௌனத்தின் வழியேயான வன்முறை இருந்தது. அதுவே அவர்களுக்கு எதிரான அரச வன்முறையின் ஆதாரமாக இருந்தது. 

இராக்கிலும், ஆஃப்கானிஸ்தானிலும் உணவில்லாமல், மருந்தில்லாமல் மடிந்துபோன லட்சக்கணக்கான குழந்தைகளின் மரணத்தின் பின்னால் இருப்பது அமெரிக்கர்களின் மௌனமும்தான். 

குஜராத் கலவரத்தின்போது இந்தியா முழுவதும் இருந்தது அதுதான். இப்போது காஷ்மீர் பெல்லட் குண்டு தாக்குதல்களை இந்தியா அமைதியாய் கடப்பதும் வன்முறையின் passive வடிவம்தான். இவை எல்லா இடங்களிலும் இருக்கிறது, கர்நாடகாவில் வன்முறையைச் செயலில் காட்ட ஒரு கூட்டம் வளர்த்துவிடப்பட்டிருக்கிறது. நமக்கு அது இல்லை அல்லது இன்னும் இல்லை அல்லது போதுமான அளவுக்கு இல்லை, அதற்கு எதிராகச் சிந்திக்கவும் பேசவும் செயல்படவும் நம்மிடம் ஆட்கள் இருக்கிறார்கள், அது அங்கே இல்லை அல்லது போதுமான அளவு இல்லை. 

இந்தக் கலவரத்தின் பலனை முழுமையாக அனுபவிக்கப்போவது பாஜக, தண்ணீர் கொடுக்காதே என உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் எதிர்ப்பது எடியூரப்பாவும் அவர் கட்சியும், விநாயகர் சதுர்த்திக்காகப் பல அடிப்படைவாத இளைஞர்கள் சில நாட்களுக்கு முன்னால்தான் ஒன்றுகூடியிருக்கிறார்கள். 

இப்போது நடந்திருப்பது நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு கலவரம். இந்தப் புள்ளிகளை இணைத்தால் உங்களுக்குப் பிரச்சினையின் அடிப்படை புரியும். இதனை எதிர்க்கத் தெரியாத மற்றும் முடியாத மக்களால் ஒட்டுமொத்த மாநிலமும் ஒரு மோசமான அடையாளத்தைச் சுமக்கிறது. (பிரச்சினை ஏதும் இல்லை எனும் பிரிவினர் உயர் மத்தியதர வகுப்பினர், நிலநடுக்கம், பெருவெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களைத் தவிர வேறெந்த சிக்கலும் இவர்களைக் குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பதில்லை… குறிப்பாக மனிதர்களால் செய்யப்படும் பாதிப்புக்கள்). 

// ஊருக்குள் வரும்போது தமிழில் பேசாதே என தன் தமிழ் நண்பருக்கு எச்சரிக்கை செய்த கன்னட இளைஞர், இருவரும் இணைந்திருக்கும் குழுவில் “ரத்தத்தைக் கொடுப்போம், காவிரியைத் தரமாட்டோம்” எனும் வாசகத்தைப் பகிர்கிறார்// 

தமிழ்த் தேசிய இயக்கங்கள் குறிப்பிடும் கன்னட இன உணர்வு என்பது அங்கிருக்கும் முட்டாள்தனம் மற்றும் பயத்தின் கூட்டு வெளிப்பாடு. உண்மையில் அதனால் கன்னடர்களுக்கு எந்தப் பலனும் கிடையாது. பெங்களுர் மைசூரைத் தவிர்த்து வேறெந்த இடத்திலும் வளர்ச்சி ஏற்படாத மாநிலம் அது. விவசாயிகளுக்காக எனும் பெயரில் ஒரு மாநகரம் அடிக்கடி முடக்கப்படும் மாநிலத்தில்தான் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். 

பெங்களூரின் நிலமும் வளமும் ரெட்டிகளாலும் மார்வாடிகளாலும்தான் ஆளப்படுகிறது, கன்னடர்களெல்லாம் அடிமை வேலைக்குத்தான் இங்குப் போட்டியிட்டாக வேண்டும். 

ஓசூரில் கட்டிட வேலை செய்யும் மண்டியா பகுதி விவசாயக்குடும்பங்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் சிறு நில உடைமையாளர்கள் என்பதையும் விவசாயம் பொய்த்ததால் இந்த கூலிப்பணிகளுக்கு வந்தவர்கள் என்பதையும் நினைவில் வையுங்கள். 

இவையெல்லாம் நாம் எதிர்மறையாக கர்நாடகாவிடம் இருந்து கற்க வேண்டியவை. 

அரசியல் அறிவீனமும், இன மற்றும் மத அடிப்படைவாதிகளுக்கான கிடைத்திருக்கும் எதிர்ப்பு குறைவான பரப்பும்தான் ஒரு மாநிலத்தை வளரவிடாமல் வைத்திருக்கிறது. சிறு எண்ணிக்கையிலான அராஜகவாதிகளின் செயலைக் கண்டிக்க முடியாத பிற மக்கள் அதற்கான மொத்த அவமானத்தையும் சுமக்கிறார்கள். தமிழகத்தில் உருவாகும் பிள்ளையார் பொறுக்கிகளும் அரசியல் பிரக்ஞையற்ற தலைமுறையும் நமக்கு எச்சரிக்கை கொடுக்கும் அறிகுறிகள். 

இவற்றை ஒழிக்காவிட்டால் கர்நாடகாவின் நிலைதான் நமக்கும். (விவசாயம் அழிந்துபோகவிருக்கும் நிலையிலும் தஞ்சாவூரில் விநாயகன் ஊர்வலம் நடக்கிறது எனும் செய்தியை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்) 

நேர்மறையாகவும் அவர்களிடம் கற்க சில விடயங்கள் இருக்கிறது. 

அங்கே அமைச்சர்களையும், முதல்வரையும்கூட சாதாரண மக்கள் எளிதில் சந்திக்க முடியும். மைசூர் சாலை விரிவாக்கப் பணிகளின்போது நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் “நான் பணம் தருகிறேன், உங்கள் வீட்டை காலி செய்வீர்களா? என அப்போதைய முதல்வர் எடியூரப்பாவிடம் வினவினார் ஒரு விவசாயி (அப்போது விகடனில் இந்தச் செய்தி வெளியானது). 

முதல்வருக்காக மணிக்கணக்கில் சாலையை மூடிவைக்கும் அரச ரவுடியிசத்தை நான் பெங்களூரில் கேள்விப்பட்டதில்லை. இப்போதுகூட பத்திரிக்கையாளர் சந்திப்பில் சித்தராமையா நின்றுகொண்டிருக்கும்போது மாநில உள்துறை அமைச்சர் உட்கார்ந்துகொண்டு “சொந்தமாக” பதில் சொல்கிறார். தமிழகத்தில் மதச்சார்பற்றவராகக் காட்டிக்கொள்வது ஒரு அரசியல்வாதிக்கு எத்தனை அவசியமோ அத்தனை அவசியமானது அங்கே ஒரு அரசியல்வாதி எளிமையானவனாக இருப்பது. 

தமிழகத்தில் சாதிச்சங்கங்கள் வலுவடையவும் கர்நாடகத்தில் இனவாத குழுக்கள் வலுவடையவும் அடிப்படையாக இருப்பது மதவாத இயக்கங்கள். இரு இடங்களிலும் அவை வேறு வேறான வழிகளில் தங்கள் நரவேட்டையை நடத்துகின்றன. மக்களின் அறிவுக்குத்தக்கவாறு அவற்றின் வினைவேகம் மாறுபடுகிறது. இவற்றை எதிர்கொள்ள நாம் இன்னும் தீவிரமான அரசியல் அறிவுள்ள சமூகத்தை அமைக்க உழைக்க வேண்டும். 

நிறைவாகச் சொல்லிக்கொள்ள ஒன்றிருக்கிறது, 

லட்சக்கணக்கான மக்களை அச்சமூட்டி எக்காளமிடும் போலித்தனமான கர்நாடக ஒற்றுமையைவிடக் கருத்து சொல்லவும் பயமின்றி நடமாடவும் எல்லா மக்களையும் எப்போதும் அனுமதிக்கும் தமிழக ஒற்றுமையின்மை மேலானது. இரண்டு தரப்பையும் வெறுக்காமல் இருக்கவும் இரண்டு தரப்பில் இருந்து கற்கவும் நமக்கு ஏராளமான செய்திகள் இருக்கின்றன

15 comments:

கே.முருகபூபதி இலக்கியவட்டம் said...

புதிதாக தெளிவு கிடைத்தது நன்றி

கே.முருகபூபதி இலக்கியவட்டம் said...

புதிதாக தெளிவு கிடைத்தது நன்றி

Unknown said...

ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு.

வயது முதிர்ந்த ஒட்டுநரை, கன்னட ரவுடிகள் தாக்கியதை கண்டபோதும், ஆட்டோவில் சென்ற தமிழ் பெண்கள் அபயகூக்குரலை கேட்டபோதும், உள்ளம் வலித்தது.

கன்னடர்களின் வெறிபிடித்த மிருகம் வெளியேறி, செத்த பாம்பை மிதித்து வீர அரிதாரம் பூசிகொள்கிற வேளையில், வீரம் செறிந்த தமிழர்கள், பக்குவப்பட்ட மனதோடு அமைதிகாக்கிறார்கள்.

அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.

saidaiazeez.blogspot.in said...

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று ஒரு சொல்லடை உள்ளது.
ஆனாலும் மனமும் இல்லை ஆகவே வழி/விடியல்/தீர்வு எதுவும் இல்லை.
சாதாரணமாக, வீராணம் தண்ணீரை சென்னைக்கு தரமுடியாது என்று சில ஆண்டுகளுக்கு முன் நம் மக்களே கூறியதையும் பார்த்திருக்கிறோம். எப்படி ஐநா சபை செயல்படுகிறதோ அதே போலத்தான் இந்திய அரசும் செயல்படுகிறது. வோட்டு அரசியல் நடக்கும்வரை இதையெல்லாம் சகித்தே ஆகவேண்டும். இதில் தீக்குளிப்பு என்பது தடுக்கப்படவேண்டிய விபத்து!

கரந்தை ஜெயக்குமார் said...

ஏற்றுக் கொள்ளப் பட வேண்டிய கருத்துக்கள்
ஆனால் பெங்களூர் நகர் பாதுகாப்பற்ற நகர் என்னும் கருத்தை
இச்செயல்கள் கணினி நிறுவனங்களிடம் மெல்ல மெல்ல விதைத்துக் கொண்டிருக்கின்றன. கணினி நிறுவனங்கள் பாதுகாப்பின்னை கருதி
ஒவ்வொன்றாக விரைவில் வேளியேறத்தான் போகிறது,,

Unknown said...

எழுத்து நடை; வரி வடிவம் புரிந்து கொள்ள சிரமமாக உள்ளது
வி.கிருஷ்ணமூர்த்தி

Rathnavel Natarajan said...

(மானம் கெட்ட) காவேரி கலவர எழுத்துக்கள் -ஜோதிஜியின் தேவியர் இல்லம் - அரசியல் அறிவீனமும், இன மற்றும் மத அடிப்படைவாதிகளுக்கான கிடைத்திருக்கும் எதிர்ப்பு குறைவான பரப்பும்தான் ஒரு மாநிலத்தை வளரவிடாமல் வைத்திருக்கிறது. சிறு எண்ணிக்கையிலான அராஜகவாதிகளின் செயலைக் கண்டிக்க முடியாத பிற மக்கள் அதற்கான மொத்த அவமானத்தையும் சுமக்கிறார்கள். தமிழகத்தில் உருவாகும் பிள்ளையார் பொறுக்கிகளும் அரசியல் பிரக்ஞையற்ற தலைமுறையும் நமக்கு எச்சரிக்கை கொடுக்கும் அறிகுறிகள். நிஜம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதி கணேசன்

ஜோதிஜி said...

அடுத்த முறை உங்களுக்கு புரியும் அளவிற்கு எழுத முயற்சிக்கின்றேன். நன்றி.

ஜோதிஜி said...

தெளிவான விமர்சனம். நன்றி.

ஜோதிஜி said...

அப்படி நடந்தால் ஆட்சியாளர்களுக்கு பயம் ஏற்படும். ஆனால் நடக்க வாய்ப்பில்லை.

ஜோதிஜி said...

திருப்பத்தூரில் உள்ள தண்ணீரை காரைக்குடிக்கு கொடுக்கக்கூடாது என்று போராட்டம் செய்தவர்கள் தான் நம்மக்கள். (பழ கருப்பையா அவர்களிடம் கேட்டுப்பார்த்தால் தெரியும்)

ஜோதிஜி said...

அமைதியாகவே இருக்கின்றார்கள் என்பது சரி. எப்போதும் அமைதியாகத்தான் இருப்பார்கள் என்பதும் சரி. நன்றி ஆனந்த்.

ஜோதிஜி said...

நன்றி

Avargal Unmaigal said...

//வலைபதிவு என்பது வெறும் சுதந்திர ஊடகம் மட்டுமல்ல. உண்மை நிலவரங்களை அப்படியே எவருக்கும் அஞ்சாமல் எழுதியே ஆக வேண்டிய ஒரு அற்புத சாதனம்..///


மிக சரியான வரிகள். இந்தியா சுதந்திரமாக இல்லாத காலத்தில் கடும் கட்டுபாடுகள் இருந்த நேரத்தில் சுதந்திரமாக உண்மை செய்திகளையும் கருத்துக்களையும் எடுத்துரைத்த ஊடகங்கள் நாடு சுதந்திரம் பெற்ற பின் தங்களின் லாப நோக்கதிற்காக சுதந்திரமாக செய்திகளை கருத்துக்களை வெளியிடாமல் தங்களுக்கு சாதகமான கருத்துகளையும் செய்திகளையும் திரித்து சொல்லி வருகின்றன. இது இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் இந்து மீடியாக்கள் சிலரின் கைப்பாவைகளாக இருந்து மக்களின் சிந்தனைகளை எண்ணங்களை சிதறடித்து தங்களின் எண்ணங்களை வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல ஏற்றி வருகின்றன.

ஆனால் இணையம் என்று ஒன்ரு வந்த பின் தனிப்பட்ட மக்களின் கருத்துக்களும் மறைக்கப்படாமல் வெளிவருகின்றன. பல நாடுகளில் இப்படி பொதுமக்களின் கருத்துக்கள் சிந்தனைகள் உண்மைகளை அப்படியே போட்டு உடைக்கின்றன. ஆனால் இந்தியாவில் பொது மக்களும் தங்களின் சுயநலம் காரணமாக கருத்துக்களை வெளிப்படையாக சொல்லாமல் திரித்து அல்லது முழு உண்மையை மறைத்துதான் சொல்லுகிறார்கள். அதுதான் கன்னட தமிழர்களின் பதிவுகளிலும் வெளி வந்து இருக்கிறது

கன்னட தமிழ் பதிவர்கள் சொல்லுவது எப்படி இருக்கிறது என்றால் விபத்தில் அடிபட்டு கால் அழுகி கொண்டிருக்கும் ஒருவரிடம் சென்று உங்கள் உடம்பு எப்படி இருக்கிறது என்றால் உடம்பு நன்றாகத்தான் இருக்கிறது அதற்கு ஒரு குறை இல்லை ஆனால் கால்தான் அழுகி இருக்கிறது என்பார் ஆனால் அவருக்கு புரியவில்லை அந்த கால் அவரின் உடலின் ஒரு பகுதி என்று. இப்படிதான் கர்நாடகா அமைதியாக தான் உள்ளது ஆனால் எங்கோ ஒரு பகுதியில்தான் இருக்கிறது என்று கன்னட வாழ் தமிழ் பதிவர்கள் பதிவு எழுதி கொண்டிருக்கிறார்கள்

கன்னட வாழ் தமிழ் பதிவர்கள் மிகவும் நல்லவர்கள் அகிம்சையை விரும்பும் காந்தியை போல உள்ளவர்கள்தான் அதில் எந்த வித மாற்றமும் இல்லை ஆனால் காந்தி அகிம்சைவாதி என்றாலும் தவறுகள் நடக்கும் போது தட்டிக் கேட்காமல் விட்டதில்லை ஆனால் இந்த கன்னட பதிவர்கள் மிகவும் மெளனமாக வாய்முடிக் கொண்டிருக்கிறார்கள்

ஊடகமும் அரசும் மறைப்பதை பொது மக்கள் பொது வெளியில் தட்டிக் கேட்காத வரையில் எந்த நாடும் வளர்வதில்லை அதற்கு இந்தியாவும் தமிழ் நாடும் விதிவிலக்கு அல்ல


இணையம் மூலம் நாம் எந்த வித இயக்கத்தை சார்ந்து இருந்தாலும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் பிரச்சனையை தட்டிக் கேட்க வேண்டும். இல்லையென்றால் நாம் மட்டுமல்ல நமது சந்ததிகளும் தனி குனிந்து நிற்கும் நிலையே ஏற்படும்

'பரிவை' சே.குமார் said...

இணையம் மூலமாக நல்ல எழுத்துக்களை விதைக்க வேண்டும்தான்... ஆனால் இந்தப் பிரச்சினையில் ஊடகங்கள் செய்த செயல்களைப் பார்த்தீர்களா...? அவர்கள்தான் டிஆர்பி ரேட்டிங் பின்னால் பயணிக்க எண்ணெய் வார்த்தார்கள்...

பிரச்சினை என்று வரும் போது கண்டிப்பாக தட்டிக் கேட்க வேண்டும்... நாங்க நல்லாயிருக்கோம் என கர்நாடக வாழ் தமிழர்கள் எழுதியது உண்மையாக இருந்தாலும் போனவன்தானே அடிபட்டான்...

அந்தப் பெரியவரை அடிக்கும் கொடுமை...

எதையும் தட்டிக் கேட்காவிட்டால் நம் சந்ததியும் இப்படியேதான் அடிபட்டுச் சாகும்.

நல்ல பகிர்வு அண்ணா...