Saturday, July 20, 2013

(இன்றைய) கல்வி என்றால் கவலை என்று அர்த்தம்

முந்தைய தொடர்ச்சி

"கல்வியே வாழ்வின் கலங்கரை விளக்கம். அது தான் ஒருவருக்கு என்றுமே அழியாத சொத்து."

"கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு."

"கல்வியறிவு இல்லாதவர் கண் இருந்தும் குருடனாவர்."

இது போன்ற எத்தனை பழமொழிகளை கேட்டுருப்போம்.

ஆனால் இன்றைய கல்வியென்பது இரண்டு கட்டத்திற்குள் தான் நிற்கின்றது.

விற்க தயாராக இருப்பவர்கள்.  அதை வாங்க தகுதியிருப்பவர்கள்.

இவர்கள் இருவரையும் தாண்டி மிச்சம் மீதி இருப்பவர்களைப் பற்றித் தான் நாம் பேசப் போகின்றோம்.
.
என் மகன் பக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கின்றான் என்பது பழைய நிலை.

என் மகன் இந்த பள்ளியில் படிக்கின்றான் என்பதே தற்போதைய கல்விச்சூழல்..

இது தவிர இன்னமும் சிறப்பான கல்வியை எந்த பள்ளி தருகின்றது என்ற ஆராய்ச்சியும் ஒவ்வொருவர் மனதிலும் இடைவிடாது ஓடிக்கொண்டே தான் இருக்கின்றது.

தற்போது சிறப்பான கல்வி என்பதற்கு சில குறிப்பிட்ட வரையறை உண்டு என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

பள்ளியின் பெயர் பிரபல்யமாக இருக்க வேண்டும்.

பள்ளியில் தமிழைத் தவிர மற்ற அத்தனை மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

பள்ளியின் பாடத்திட்டம் மத்திய அரசாங்கத்தின் பாடத்திட்டமான சிபிஎஸ்சி யில் இருக்க வேண்டும்.

குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து ஓராண்டுக்குள் ஆங்கிலத்தில் பேச கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்.

இது போல இன்னமும் பலப்பல.

இங்கு சிறப்பான கல்வி என்பது அறிவின் அடிப்படையில் அல்ல.  அதிகமான மதிப்பெண்கள் வாங்குவது அல்லது வாங்க வைக்க உதவும் கல்விக்கூடங்களுக்குத்தான் இன்று கல்விச் சந்தையில் நல்ல கிராக்கி.

இந்த சிறப்பான கல்விக்காகத் தான் திருவாளர் நடுத்தரவர்க்கம் தங்கள் தகுதிக்கு மீறி தரமில்லாத பள்ளியில் சேர்த்து கையோடு காலையும் சுட்டுக் கொண்டும் புத்தி வராது தடுமாறிக் கொண்டிருக்கின்றது. அரசாங்கமும் கல்வியென்பது எங்கள் பொறுப்பல்ல என்று கைகழுவ தயாராகிக் கொண்டிருப்பதால் தனியார் கட்டண கொள்ளைகளை கொள்கை என்ற பெயரில் கண்டும் காணாமல் நகர்ந்து கொண்டேயிருக்கின்றது.

ஆனாலும் மக்களின் மாறியுள்ள மனோபாவத்தின் காரணத்தால் வருடந்தோறும் கல்வி வியாபாரிகள் வளர்ந்து கொண்டே தான் இருக்கின்றார்கள்.

கடந்த இருபது வருடத்திற்கு முன்னால் ஒரு சிறிய  ஓட்டு வீட்டுக்குள் தொடங்கிய கல்விக்கூடங்கள் இன்று பல ஏக்கர் பரப்பளவில் பெரிய நிறுவனமாக வளர்ந்து வருடந்தோறும் கோடிகளை அள்ளி குவிக்க முடிவதால் கேடிகளின் கடைசி அடைக்கலமே இன்று கல்விச் சந்தையாக மாறியுள்ளது.

நம் நாட்டில் கல்வியென்பது தொடக்கத்தில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே என்பதாக இருந்தது. அதற்கு குரு சிஷ்யன் என்று புனிதம் பூசப்பட்டது. அதுவே படிப்படியாக ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறி திண்னைப் பள்ளிக்கூடம் என்கிற ரீதிக்கு வளர ஏராளமான மாற்றங்கள் தேவைப்பட்டது.

கல்வியென்பது பரவலாக்கம் ஆகாத காரணத்தால் பல நூற்றாண்டுகள் இந்தியா என்பது அறியாமை  இருளுக்குள்ளே முழ்கி கிடந்தது. உழைக்க மட்டுமே தெரிந்த மக்களுக்கு பிழைத்துக் கிடப்பதே இந்த வாழ்க்கை என்கிற சூழ்நிலையில் கல்வியென்பது அந்நியமாகவே இருந்தது.

இந்தியா சுதந்திரமடைந்தும் கூட திடீர் மாற்றங்கள் எதுவும் உருவாகவில்லை. இதுவே குறிப்பிட்ட சிறுபான்மையினர் மட்டுமே அதிகாரத்திலும் ஆதிக்கம் செலுத்தவும் வசதியாக இருந்தது. இந்தியா சுதந்திரம் பெற்றதும் படிப்படியான மாற்றங்கள் உருவான போதிலும் கல்வி ரீதியான மாற்றங்கள் மட்டும் மந்தகதியிலேயே இருந்தது.

காரணம் ஆண்டு விட்டுச் சென்ற ஆங்கிலேயர்கள் உடலளவில் இந்தியன். உள்ளத்தளவில் ஆங்கிலேயன் என்கிற புதிய தலைமுறைகளை உருவாக்கி வைத்திருந்த காரணத்தால் எந்த மாற்றமும் இங்கே எட்டிப் பார்க்கவில்லை.

தமிழ்நாட்டில் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி தோற்றது. அதன் உண்மையான காரணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு அரசியல் சாயம் பூசப்பட ஆட்சி மாற்றம் உருவான போது தான் இங்கே காமராஜர் என்றொரு தனிமனிதனின் சாதனைகளை சரித்திரம் குறித்துக் கொள்ளத் தொடங்கியது.

பெருந்தலைவர் காமராஜர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வந்த பிறகே கல்வியென்பது அனைவருக்கும் உரியது.  அதுவும் அரசாங்கம் இலவசமாக மக்களுக்கு வழங்க வேண்டிய ஒன்று என்பதாக மாறியது.  சாதி, மதம் என்ற அறைக்குள் அடைக்கப்பட்டு வைத்திருந்த கல்விக்கு அதற்குப் பிறகே இறகு முளைத்தது.

வாழ்க்கையென்பது ஒரு வட்டம் தானே?

இன்று கல்வியென்பது தொடங்கிய நிலைக்கே வந்து கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட மக்களுக்கே சிறப்பான கல்வியென்றும் மற்றவர்கள் கல்வி என்பது எட்டா கனியாக மாறிக் கொண்டு வருகின்றது.

இன்று இந்தியாவில் கல்வியென்பது விலை மிக்க பொருளாக மாறியுள்ளது.

அதிக அளவில் பணமிருப்பவர்களுக்கு மட்டும் தான் கலங்கரை விளக்கம். அடுத்த நிலையில் இருப்பவர்களுக்கு மெர்குரிக் விளக்காக மாறுகின்றது. இதுவே படிப்படியாக மாறி கிராமத்தில் வாழும் மாணவனுக்கு சிம்னி விளக்காக மாறுகின்றது.இன்றும் கூட தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் மலைபிரதேசங்களில் வாழ்பவர்களின் குழந்தைகளுக்கு இந்த விளக்கு கூட கிடைக்காமல் சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டுகளுக்குப் பின்பும் கல்வியறிவு இல்லாத இருட்டில் தான் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

சில காரணங்கள்.

அரசாங்கத்தின் தெளிவற்ற கொள்கைகள்.  ஆட்சியளார்களின் கல்வி குறித்த அலட்சிய மனப்பான்மை.

மக்களின் மாறிக் கொண்டிருக்கும் மனோபாவங்கள். உருவான தொழில் வளர்ச்சியால் வளர்ந்த நடுத்தர வர்க்கம்.

அரசு பள்ளிகளின்  பணியாற்றும் ஆசிரியர்களின் செயல்பாடுகளை முறைப்படுத்தாத அரசாங்கத்தின் கொள்கையினால் உருவான வீழ்ச்சி.

அரசு பள்ளிக்கூடங்கள் என்பது அரசாங்கத்தால் கண்டும் காணாமல் இருக்கும் ஒதுக்கப்பட்ட இடங்கள்.

இதனால் எளியவர்களுக்கு கிடைக்கவேண்டிய கல்வியறிவு என்பது இன்று எட்டாக்கனியாக மாறிக் கொண்டு வருகின்றது.

இன்று உலகமென்பது கிராமமாக சுருங்கியிருந்தாலும் இன்றும் இந்தியா என்பது மேலைநாடுகளால் கிராமத்தின் வடிவமாகவே பார்க்கப் படுகின்றது. எந்த மாற்றமும் இங்கே வந்து விடக்கூடாது என்பதில் தான் ஆட்சியாளர்கள் கவனமாக இருக்கின்றார்கள்.  தலையாட்டி மொம்மைகளாக இருக்க வேண்டியவர்கள் தலையை தூக்கி கேள்வியேதும் கேட்டுவிடக்கூடாது என்பதில் தான் கவனம் செலுத்துகின்றனர்.

உருவாகக்கூடிய மாற்றங்களும் குறிப்பிட்ட சதவிகித மக்களுக்கு மட்டுமே போய்ச் சேர்ந்து கொண்டிருப்பதால் இங்கே 90 சதவிகித மக்களுக்கு மழுங்கடிக்கப்பட்ட சிந்தனைகளைத் தான் கல்வி என்ற பெயரில் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். கல்வித்திட்டத்தை இன்று வரையிலும் மாற்ற வேண்டும் என்ற எண்ணமில்லாத ஆட்சியாளர்களால் குமாஸ்தாக்களை உருவாக்கும் கல்வியை கற்பதிலே நாம்  பெருமையடைகின்றோம்.

உண்மையான கல்விக்கும் நாம் கற்றுக் கொண்டிருக்கும் கல்விக்கும் உண்டான வித்தியாசங்களை பார்த்து விடுவோம்.

கேள்வி மீன் எங்கே வசிக்கின்றது?

பதில்.  மீன் தண்ணீரில் வசிக்கின்றது.

இதுவொரு இயல்பான கேள்வி பதில்.

ஆனால் உண்மையான அறிவை வளர்க்கும் கல்வி எப்படி இருக்க வேண்டும்?

மீன் ஏன் தண்ணீரில் வசிக்கின்றது? என்ற கேள்வி எழுப்பப்படும் போது தான் மீனிற்கு உள்ள உடல் அமைப்பு முதல் அதன் வாழ்வியல் குறித்த அத்தனை விபரங்களையும் ஒரு மாணவனால் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் பள்ளியில் நடத்தப்படும் பாடங்கள் அனைத்தும் கேள்வி பதில் என்கிற ரீதியில் இருப்பதால் அது குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் சிந்தனைகள் சென்று விடாதவாறு இருக்க வைக்கப்படுகின்றது.

உண்மையான அறிவு என்பது தேடுதலில் இருந்தே தொடங்கப் படவேண்டும். ஒரு பதிலில் இருந்து கேட்கப்படும் பல கேள்விகள் மூலமே ஒரு மாணவனின் அறிவு கூர்மையாகின்றது..

ஆனால் இங்கே பதில் என்பது வாங்கும் மதிப்பெண்களுக்காக என்கிற ரீதியில் மாற்றப்பட்ட பிறகு கூர்மை குறித்து கவலைப்படுபவர் யார்?

தொடக்கத்தில் இங்கே கல்வியென்பது ஒரு கனவாக இருந்தது. அது குறித்து கூட யோசிக்கக்கூட எவருக்கும் நேரம் இருக்கவில்லை. உடல் உழைப்பை வைத்து வாழ்ந்து வாழ்க்கையை முடித்துக் கொண்டு சென்றுவிட அடுத்து வந்த தலைமுறைகளும் அதன் வழியே நடக்க இருட்டுக்குள் இந்தியாவாக இருந்தது.

அவரவர் நம்பிக்கைகளே  வழி நடத்தியது. ஆனால் இன்று தலைகீழாக மாறியுள்ளது.

கல்வி என்பது இயல்பான ஒன்று. அது வாழ்க்கையின் ஒரு அங்கம். படிக்காதவர்கள் என்றால் அவர்களுக்கு மரியாதையில்லை. கைநாட்டு மக்கள் இன்னமும் அதிக அளவில் உள்ள இந்தியாவில் கல்வி மூலம் வாழ்வில் உயர்ந்து அடுத்த நிலைக்கு நகர்ந்தவர்கள்  கோடிக்கணக்கான பேர்கள் இருந்தாலும்  எந்த மாறுதலும் இங்கே உருவாகவில்லை.

காரணம் தன்னைக் காத்துக் கொள்வதிலேயே ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளை கழிக்க வேண்டிய சூழ்நிலையில் வாழ்கின்றனர்..

இன்று ஏழை, நடுத்தரவர்க்கம், என்று பாரபட்சமில்லாது தங்களின் குழந்தைகளின் எதிர்கால கனவுக் கோட்டையில் கல்வியைத் தான் அஸ்திவாரமாக கருதுகின்றார்கள்.  தங்களது மகன் மகள் எப்படியும் படித்து முடித்து ஒரு நிலையான வேலையில் அமர்ந்து விட வேண்டும் என்று எண்ணமில்லாத பெற்றோர்களே இன்று இல்லை என்று சொல்லலாம்.

நன்றாக நினைவு வைத்துக் கொள்ளவும்.

ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகள் நல்ல சம்பளம் வரக்கூடிய வேலையில் தான் அமர வேண்டும் என்று நினைக்கின்றார்களே தவிர மறந்தும் கூட ஒரு குறிப்பிட்ட தொழில் சார்ந்த விசயத்தில் ஈடுபட்டு மேலே வர வேண்டும் என்று நினைப்பதில்லை.

காரணம் நமது கல்வி சுயசார்புத் தன்மையை போதிப்பதில்லை.  அண்டி வாழ்வதையும் மடங்கி நிற்பதையும் புத்திசாலியாக கற்பிக்கப்படுகின்றது.

காரணம் கூர்மையில்லாத ஆயுதமென்பது குத்திக் கிழிப்பதில்லை. கற்ற கல்வி பயத்தையும், நம்பிக்கையின்மையை வளர்த்துவிட வாழ்வதற்கு ஒரு வேலை போதும் என்கிற நிலைக்கு இயல்பாகவே தள்ளப்படுகின்றது.

இந்தியா சுதந்திரம் பெற்றபோது இருந்த முப்பது கோடி மக்கள் தொகை இன்று 120 கோடியாக மாறியுள்ளது. அதிலும் படிப்படியாக உருவான தொழில் வளர்ச்சியில் இன்று நடுத்தரவர்க்க மக்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

இதுவே வாங்கும் சக்தியை நாளுக்கு நாள் அதிகமாக்கிக் கொண்டிருக்கின்றது. இதனால் எல்லாவற்றையும் வாங்க முடிகின்றது. கூடவே கல்வி என்பதையும் வாங்க வேண்டியதாக மாறிக் கொண்டு வருகின்றது.


இன்னும் கொஞ்சம் அடுத்த பதிவில்...........

பணம் இருப்பவர்களுக்கு (மட்டுமே) அனுமதி

கல்வி பலமான ஆயுதம்

எந்திரன் உருவாக்கும் கல்வி

சமச்சீர் கல்வி வரமா சாபமா?

16 comments:

துளசி கோபால் said...

நினைவாற்றல் எவ்வளவு அதிகமா இருக்கோ அந்தளவுக்கு கல்வியில் வெற்றி. வல்லாரைக் கீரை மாத்திரை விற்கும் வேகம் பார்க்கலையா? அதுவும் பரிட்சை சமயத்தில் அதிக டிமாண்டு!

வாழ்க்கைக் கல்வி யாருக்கு வேணும்? உருப்போட்டதைக் கக்கத் தெரிஞ்சால் போதும்!

அரசாங்கத்துக்கு வேற வேலை இல்லையா? சனம் படிச்சால் என்ன படிக்காட்டால் என்ன? ஓட்டுப்போட ஆளிருந்தால் போதும்.

Anonymous said...

தனித் திறனை வளர்க்கும் சிந்தனை ஆற்றலைத் தூண்டும் கல்வி உண்டா? எஞ்சினிரிங் படித்த ஆசாமிக்கு பியுஸ் பிடுங்கவே தெரிய மாட்டேங்குது. நம்மவருக்கு கல்வி என்பது பணம் பண்ணும் யந்திரம். நிலத்தில் விதைத்தால் அறுவடை செய்யலாம் என்பது போல கல்வியில் விதைத்தால் சம்பாதிக்கலாம். சாதியம் போலவே கல்வியிலும் பல அடுக்குத் தரப் படுத்தப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன, மேம்போக்காய் சில பல ஆங்கிலப் பேச்சும், கொளுத்தும் வெயிலில் துளி சம்பந்தம் இல்லாமல் டை, காலணிகள் என வெந்து நொந்து, விளையாட்டு, கலை, மொழியியல் திறன்களை மழுங்கடித்து உற்பத்திச் சாலைகளாய் நாசிக்களின் முகாம்கள் போல கல்விச் சாலைகள். 120 கோடி மக்கள் கொண்ட புத்துசாலிகள் எனவும், கல்விக் கடவுளை தினம் தினம் போற்றி வணங்கும் இந்த நாட்டில் கடந்த 20 ஆண்டில் என்ன கண்டுபிடிக்கப்பட்டன? எத்தனை நோபல் பரிசுகள்? ஒலிம்பிக் பதக்கங்கள்? ஏழு கடல் நீந்திய குற்றாலீசுவரன் என்ன ஆனான்? இங்கு படிக்கணும், வேலைக்குப் போகணும், கலியாணம் கட்டிக் கொண்டு படுக்கணும், பிள்ளை பெறனும், பின் அது சுழற்சியில் போய்க் கொண்டிருக்கும். கல்வி வாய்க்கப் பெறாதவனே வியாபாரம், விவசாயம் பண்ணுகிறான். எதோ தட்டு தடுமாறி கற்றவன் கல்வி பயில்விக்க் வரான். மெத்தப் படித்ததுகள் பன்னாட்டு கம்பனியில் பெட்டி தட்டவோ, வெளிநாடோ போய்டுறாங்க. இங்கே வந்து அங்கு படித்த ஆங்கிலமோ, மற்ற விடயங்களோ வேகாமல் போக பலர் கிடைத்த வேலை செய்யுறாங்க. ஆக, கல்வி மாயையில் சிக்கி நாந் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கோம்.

திண்டுக்கல் தனபாலன் said...

இனியும் ஒவ்வொருவரும் நல்ல சம்பள வேலையில் தனது குழந்தைகள் அமர வேண்டும் என்கிற எண்ணம் விரைவில் மாறும்... சூழ்நிலை மாற்றும்... என்ன, காலம் தான் சிறிது அதிகமாகும்...!

கிரி said...

உங்களுடைய மீன் கேள்வி உதாரணம் அருமை ரொம்ப ரசித்தேன்

கேள்வியில் சிறு வித்யாசம் தான் ஆனால் அதற்கான பதில்கள் பெரும் வித்யாசம்.

பள்ளிகள் மாணவர்களை மதிப்பெண்கள் அதிகம் பெற வைக்கும் செயலை தான் செய்து கொண்டு இருக்கின்றன. அவர்கள் புரிந்து படிக்கிறார்களா என்பது பற்றி யாருக்கும் அக்கறை இல்லை.. பெற்றோர்கள் உட்பட.

அரசாங்கம் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தினால் மட்டும் இந்த நிலை கொஞ்சம் மாறும் ஆனால் அதற்கு வாய்ப்பு ரொம்பக் குறைவு. உண்மையை கூறினால் நான் படித்த பள்ளியில் என் மகனை படிக்க வைக்காமல் தனியார் பள்ளியில் தான் சேர்த்துள்ளேன். எனவே இதைக் கூற தகுதி இருப்பதாக தெரியவில்லை.

தற்போதைய போட்டி மிகுந்த உலகத்தில் நம் குழந்தை பின் தங்கி விடுமோ என்ற பயமே தற்போதைய தனியார் பள்ளிகளின் பலம். செலவு செய்தாவது இருப்பதில் நல்ல கல்வியை கொடுக்க வேண்டும் என்ற இயல்பான பயம் மக்களை இந்த சிக்கலில் கொண்டு சென்று விடுகிறது. இந்தக் கூட்டத்தில் நானும் ஒருவன்.

Unknown said...

// ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகள் நல்ல சம்பளம் வரக்கூடிய வேலையில் தான் அமர வேண்டும் என்று நினைக்கின்றார்களே தவிர மறந்தும் கூட ஒரு குறிப்பிட்ட தொழில் சார்ந்த விசயத்தில் ஈடுபட்டு மேலே வர வேண்டும் என்று நினைப்பதில்லை.
//

காரணம் தான் பணிபுரியுமிடத்தில் உள்ள ஏற்றத் தாழ்வு அம்மனிதனை இந்த நிலைக்கு தள்ளுகிறது.

இங்கு அடிமைமனநிலையின் வெளிப்பாடு மேலேங்கியிருக்கிறது. தான் அடிமையாக இருக்க வேண்டும் அல்லது தனக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்ற மனநிலை உள்ளது.


ஜோதிஜி said...

தான் அடிமையாக இருக்க வேண்டும் அல்லது தனக்கு அடிமையாக இருக்க வேண்டும்

வளர்ந்த நாகரிகத்தின் எச்சமும் மிச்சமும்.

ஜோதிஜி said...

இந்தக் கூட்டத்தில் நானும் ஒருவன்.

நாம் அனைவரும்.

ஜோதிஜி said...

என் பேரன் காலத்தில் நிச்சயம் மாறும் என்றே நம்புகின்றேன். ஒரு ஜனநாயகம் முதிர்ச்சியடைய 100 ஆண்டுகள் தேவையாம்.

ஜோதிஜி said...

உங்கள் உணர்ச்சி கொந்தளிப்பில் ஓரே மூச்சாக எழுத்தாக வந்துள்ளது என்றே நினைக்கின்றேன்.

ஜோதிஜி said...

மது விற்க அரசாங்கம்.
மயங்கி கிடக்க மக்கள்.

கல்வி கொடுக்க தனியார்
கலவியை கற்றுக் கொடுக்க ஊடகங்கள்.

இப்படி ஒருவர் எழுதியிருந்தார்.

அகலிக‌ன் said...

இன்றைய கல்வியை வாழ்க்கையோடு பொறுத்திப்பார்க்க எந்த அவகாசமும் இல்லை அல்லது பார்க்க பழக்கப்படுத்தப்படவில்லை.என் பள்ளியில் 'கிட்டாதாயின் வெட்டெனமற' என சொல்கையிலேயே அந்த வெட்டென என்ற வார்த்தையை அழுத்தமாகவும் ஒருவித விலகல் தன்மையோடுமே சொல்லித்தந்திருக்கிறார்கள். வாழ்க்கை சம்பவங்களோடு முட்டி மோதும்போதும் முரண்படும்போதெல்லாமும் படித்ததும் பெரியவர்கள் தங்கள் அனுபவங்களாய் நமக்கு அக்கறையாய் சொல்லிச்சென்றதையும் செயலாக்கிப்பார்க்க மிகப்பெரிய பயிற்சி இருக்கவேண்டும்,அதை கற்றுத்தராத எக்ககைய விலையுயர்ந்த கல்விக்கும் நாம் செய்யும் செலவு நொண்டி குதிரையை பந்தயத்திற்கு தயார்படுத்துவதாகவே இருக்கும். இதில் பெற்றோராகிய நம் பொறுப்பும் மிக ப்பெரியது என்பதை மறந்துவிடக்கூடாது.

ஜோதிஜி said...

எழுத்துக்கு உரம் தரும் உங்களுக்கு என் நன்றி.

'பரிவை' சே.குமார் said...

சூழ்நிலை மாற்றம் வரும் காலம் நேரம் எடுக்கும் அண்ணா... ஆனால் கண்டிப்பாக மாற்றம் வரும். அருமையான பகிர்வு.

ஜோதிஜி said...

கண்டிப்பாக மாற்றம் வரும்.நேரம் எடுக்கும்

தி.தமிழ் இளங்கோ said...

// கடந்த இருபது வருடத்திற்கு முன்னால் ஒரு சிறிய ஓட்டு வீட்டுக்குள் தொடங்கிய கல்விக்கூடங்கள் இன்று பல ஏக்கர் பரப்பளவில் பெரிய நிறுவனமாக வளர்ந்து வருடந்தோறும் கோடிகளை அள்ளி குவிக்க முடிவதால் கேடிகளின் கடைசி அடைக்கலமே இன்று கல்விச் சந்தையாக மாறியுள்ளது.//

நாமக்கல்லில் மட்டுமே அதிக மார்க்குகள் எடுக்கும் பள்ளிகள்
இருக்கும் காரணம் என்னவென்று புரிந்து இருக்கும். பைனான்ஸ், படப்பெட்டி, ஈமு கோழி - என்று பணம் பார்ப்பதை விட கல்வியில் முதலீடு என்பது லாபகரமானது என்று அவர்கள் நினைக்கிறார்கள். பதவியில் இருக்கும் போதே கல்வி நிறுவனங்களை, குறிப்பாக பொறியியல் கல்லூரிகளை வாங்குகிறார்கள் அல்லது தொடங்குகிறார்கள். ( இன்றைக்கு அவற்றின் சாயம் வெளுத்து விட்டன. பல கல்லூரிகளில் யாரும் சேரவேயில்லை )


ஜோதிஜி said...

வட்டத்தின் பாதை முடிந்து விட்டது என்றே நினைக்கின்றேன்.