Tuesday, March 09, 2010

சிவராசன் உருவாக்கிய ஐவர் கூட்டணி

இந்தியா அமைதிபடை இலங்கையில் இருந்த போது மற்ற போராளிக்குழுக்களை விட பிரபாகரனின் விடுதலைப்புலிகள் என்ற இயக்கம் மட்டும் தனித்தன்மையோடு இருந்ததற்கு பல வைராக்கியமான காரணங்கள்  இருந்தாலும் அப்போது நடந்து முடிந்த பல நிகழ்வுகள் உள்ளேயிருந்த பல இளைஞர்களுக்கு பிரபாகரன் என்பவர் ஆதர்ஷணமாக மாறியிருந்தார் என்பதையும் மறுக்க முடியாது.  இலங்கையில் இருந்தவர்கள் மட்டுமல்லாது, புலம்பெயர்நது வாழும் தமிழர்கள் என்பவர்களோடு தமிழ்நாட்டில் கூட பிரபாகரன் என்பவர் அதற்குப் பிறகு தான் தனித்தன்மையாக தெரிய ஆரம்பித்தார்.

விடுதலைப்புலிகளின் முதல் பலம் ஊடகம்.  இயக்கம் வலுவடையத் தொடங்கிய காலம் முதல் பிரபாகரன் ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஆவணமாக்குவதில் மிகுந்த கவனமாக இருந்தார். பிரபாகரன் ஊடகத் தொடர்புக்கு என்று உருவாக்கியிருந்த நபர்கள் உலக ஊடகத்திற்காக மொத்த விசயங்களையும் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பில் பிரபாகரன் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் அளவிற்கு மிகச் சிறப்பாக பங்காற்றிக் கொண்டுருந்தனர்.  இந்த சிறப்பு எது வரைக்கும் வந்தது என்றால்ராஜபக்ஷே ஆட்சிக்கு வந்து இப்போது விட்டத்தை வெறித்து பார்த்துக்கொண்டுருக்கும் சதுரங்க ஆட்டத்தில் அடிபட்ட பொன்சேகா தலைமைத் தளபதியாக பொறுப்பு ஏற்றும் கூட இலங்கை அரசாங்கத்தின் ஊடகத் தொடர்பு அந்த அளவிற்கு பரிதாபமாகத் தான் இருந்தது.

உள்ளே நடந்த மொத்த நிகழ்ச்சிகளையும் சாதக அம்சங்களை அளவுக்கு அதிகமான வெற்றிப் பார்வையிலும் பாதக அம்சங்களை லேசாக கோடிட்டு காட்டியும் உலக தமிழ் மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததில் தமிழ் நெட் என்ற விடுதலைப் புலிகளின் ஆதரவு தளம் முக்கிய பங்கு வகித்தது. இந்த தளத்தின் மூலம் மட்டுமே தமிழ் மக்கள் மட்டுமல்லாது செய்தியாளர்களும்  தெரிந்து கொள்ள முடிந்தது.  கோத்தபய ராஜபக்ஷே முப்படைகளின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதும், இதை முடிவுக்கு கொண்டு வர தனித்தன்மையோடு பல புதிய விசயங்களை உருவாக்கத் தொடங்கினார். ஒவ்வொரு நாளும் இலங்கை இராணுவம் பெற்ற வெற்றிகளை கொண்டு ஊடகம் மூலம் சர்வதேச சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார்.

ஊடகத்துறைக்கு சிறிதும் சம்மந்தம் இல்லாதவரை ஏறக்குறைய ஓய்வு நிலையில் இராணுவத்தில் பணியாற்றியவரை இதற்கென்று தலைமைப் பொறுப்பில் நியமித்து விடுதலைப்புலிகளின் பாணியில் ஒவ்வொன்றாக உருவாக்கத் தொடங்கினார்கள். அதன் பிறகு தான் இலங்கையின் ராணுவ வெற்றிச் செய்திகள் வெளிவரத் தொடங்கியது.  தொடக்கத்தில் என்ன தான் இலங்கை ஆட்சியாளர்கள் முயற்சித்தாலும் அவர்களால் முழுமையாக விடுதலைப்புலிகளின் இயக்கத்துடன் போட்டி முடியவில்லை என்பதும் உண்மை.  உணர்ந்தவர்கள் கடைசியாக உருவாக்கியது தான் அழிப்பு வேலை.

அந்த விசயத்தில் மற்றவர்களை விட எப்போதும் சிங்களர்களுக்னென்று சிறப்பான தகுதி அதிகம் உண்டு.  விடுதலைப் புலிகளின் ஊடக தளத்தை அழிப்பதோடு, ஆதரவாக செயல்பட்டுக்கொண்டுருக்கும் அத்தனை விசயங்களையும், நபர்களையும் களையெடுக்கத் தொடங்கினார்கள்.  அதன் பிறகு தான் ஒரு முடிவுக்கு கொண்டு வர முடிந்தது.  இதன் காரணமாகத் தான் இலங்கையின் உள்ளே இருந்த பல ஊடக மக்கள் காணாமல் போவதும், கைதும், திரும்பி வராமலேயே மேலோகம் சென்றதும் விரைவாக கோத்தபய ராஜபக்ஷே மூலம் நடந்தேறத் தொடங்கியது.

அப்போது கோத்தபய சொன்ன வாசகம் இங்கு நினைவுகூறத் தக்கத்து.  ஏறக்குறைய இரட்டைக்கோபுர தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மேல் போர் தொடுக்க ஆய்த்த ஏற்பாடுகள் தொடங்கிய போது அமெரிக்க உள்துறை அமைச்சர் காலின் பாவெல் சொன்னது போல் "எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வில்லை என்றால் நீ எங்களுக்கு எதிரியாக இருக்கிறாய் என்று அர்த்தம்". கெட்டியாக பிடித்துக்கொண்ட சர்வாதிகார மனப்பான்மை தான் கோத்தபய ராஜபக்ஷேவுக்கு அவரால் உருவாக்கப்பட்ட நிர்வாக கட்டமைப்பை ஒரு ஒழுங்குக் கொண்டு வர முடிந்தது.
ஆயுதப் பாதையை தேர்ந்தெடுத்த சிவகுமரன் முதல் பிரபாகரனுக்கு சமமாக வளர்ந்த எத்தனையோ பேர்கள் ஏன் தன்னுடைய ஆளுமையை செலுத்த முடியவில்லை.ஏன் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்? மற்ற இயக்கங்களை அழித்தொழிக்க விடுதலைப்புலிகளின் இயக்கம் தீவிரமாக ஈடுபட்டபோதிலும் இதையெல்லாம் மீறிய ஓரே காரணம் தன்னுடைய கொள்கையில் எப்படி பிடிவாதமாக இருந்தாரோ அந்த அளவிற்கு தானும் சுத்தமாக இருந்தார்.  பிரபாகரன் அதிகம் பேசுவதும் இல்லை. ஒய்வென்றால் குறிப்பிட்ட காலம் வரைக்கும் பிரபாகரனுக்கு புத்தக வாசிப்பு தான் அதிகபட்ச விருப்பமாக இருந்தது. பிரபாகரன் குடும்ப வாழ்க்கை வாழ்ந்தாரே தவிர அந்த வாழ்க்கையை எந்த அளவிற்கு அவருடைய சுபாவம் வாழ வைத்துருக்கும் என்பதை யோசித்துப் பார்த்தால் அது மிகப் பெரிய வெற்றிடமாகத் தான் இருக்கும்.  அந்த வகையில் அவருடை மனைவி மதிவதனி தான் தியாகத்தின் உச்சகட்டம். இவரைப் போலவே அந்தப்பக்கம் கோத்தபய என்பவரின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது எவருடனும் இரண்டு வார்த்தைகளுக்கு அதிகமாகக்கூட பேசும் பழக்கம் இல்லை. சாந்தசொரூபி என்ற அர்த்தம் அல்ல.  காரியத்தில் கண்.  இந்த பதவி என்பது அவர் விரும்பி வந்தது அல்ல.  அமெரிக்காவில் பேராசிரியர் பொறுப்பில் போய் அமைதியாக வாழ வேண்டும் என்று நினைத்தவரை வலுக்கட்டாயப்படுத்தி என்பதாகத் தான் ராஜபக்ஷ கொண்டு வந்து அமர்த்தினார்.

ஏறக்குறைய ஒரே மனோபாவத்தில் தான் இருக்கிறார்கள். இருவருக்கும் அதிக பேச்சு என்பதே கூடாது.  செயல் மட்டும் தான் முக்கியம். ஒருவருக்கு தமிழர் என்ற ஒரு இனமே உள்ளே இருக்கக்கூடாது.  இவருக்கோ தமிழர்களுக்கு ஒன்று என்றால் சிங்கள ஆட்சியாளர்கள் ஒருவர் கூட இருக்கக்கூடாது.  பிரபாகரன் பார்வையில் ஆட்சியாளர்கள் மட்டுமே.  ஆனால் கோத்தபய பார்வையில் தமிழர்கள் ஒவ்வொருவருமே பிரபாகரனாகத் தான் தெரிந்தார்கள்.

முள்ளிவாய்க்கால் போர் என்பது 2009 மே என்று நாம் அனைவருக்கும் தெரிந்து இருந்தாலும் அதன் நதி மூலம் ரிஷி மூலம் என்று பார்த்தால் அதற்கு முந்தைய மூன்று வருடங்களும் அதற்காக உழைத்துள்ளனர்.  ஏறக்குறைய ராஜபக்ஷே பதவிக்கு வந்து அமர்ந்தவுடன் அமைதி ஒப்பந்தம் என்று வாய் கிழிய பேசினாலும் அப்போதே அவர் உள்ளுற எடுத்த முடிவு அது.  கூடயிருந்த அவரின் இரண்டு தங்க கம்பிகளுக்கு மட்டுமே தெரிந்த ரகஸ்யம். அது குறித்து பின்னால் பார்க்கலாம்.  காரணம் ஆண்டு விட்டுப் போன மற்றவர்களை விட ராஜபக்ஷேவின் மிகப் பெரிய பலம் என்பது அவருடைய சகோரர்கள்.  ஆனால் பிரபாகரனின் மூத்த சகோதரர் இன்று வரைக்கும் ஊடகத்தால் வெளிக் கொணரப்படவேயில்லை.  அவரது பெயர் மனோகரன்.  டென்மார்க்கில் இருப்பதாக மட்டும் வெளியே தெரிகிறதே தவிர முழுமையாக விபரங்கள் இன்று வரைக்கும் எவருக்கும் தெரியாது.

பிரபாகரன் நம்பியிருந்தது தன் கருத்து ஒத்தவர்களை மட்டுமே.  அதுவும் தான் சொல்வதை கேட்பவர்களை மட்டுமே. இயக்கத்திற்கு வாழ்க்கையில் பாதிப்படைந்து, விருப்பப்பட்டு, நிர்ப்பந்தமாக என்று எத்தனை விதமான வழியில் உள்ளே வந்தாலும் இறுதியில் பலவிதமான களையெடுப்புகளுக்கு சோதனைகளுக்குப் பிறகு மட்டுமே வந்தவர்கள் இருப்பார்களா இறப்பார்களா என்பதை தீர்மானிக்க முடியும்.அவரவர் தனித்திறமையைப் பொறுத்து உருவாக்கப்பட்டட வட்டத்திற்குள் வாழ முடியும். ஆனால் இறுதிவரையிலும் பிரபாகரன் என்பவரின் தனித்தன்மை என்பது திறமையை வைத்து மட்டும் வைத்தே ஒருவரை மதிப்பிடுவது.  அடிமட்ட நிலையில் உள்ள தொடக்க போராளியாக இருந்தாலும் சரி, ஆளுமையில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி. அவர்களின் திறமை ஒன்றே மூலதனம்.
இரண்டாம் மூன்றாம் உள்வட்டத்தில் நுழைந்து தங்கள் உழைப்புகளை காட்ட வாய்ப்பு கிடைக்குமேயானால் பிரபாகரனை சந்திக்க வாய்ப்பு உருவாகலாம்.  அந்த அளவிற்கு இருக்கும் சில பேர்களின் உளவுத்துறைத் தலைவர் பொட்டு அம்மான் முக்கியமானவராக கருதப்படுகிறார்.  பிரபாகரனின் மூளை என்று சொன்னால் மிகையில்லை.  பின்னால் வரும் பல போராட்டக் களத்தில் இலங்கையின் உளவுத்துறையிலே ஊடுருவி அவர்களின் வயர்லெஸ் செய்திகளை இடைமறித்து இவர்கள் கேட்டுக்கொண்டு அதற்கு தகுந்தாற் போல் களம் மாற்றிய காட்சிகளும் உண்டு.  சிங்கள இராணுவத்தில் இருப்பவர்களே இவர்களுக்கு சாதகமான விஷயங்களை செய்ததும் உண்டு.  அவர்களின் ஊழல் ஒரு பக்கம்.  இவர்கள் மேல் கொண்டுள்ள பயம் மறுபக்கம்.  இந்த பயம் என்பது எந்த அளவிற்கு ஒவ்வொருவருக்கும் இருந்தது என்றால் சற்று வியப்பாக இருக்கும். 

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஒரு தமிழர் ஆட்சிப்பொறுப்பில் அலங்கரிக்க வேண்டிய சூழ்நிலையில் வந்தவர் லஷ்மணன் கதிர்காமர் என்ற தமிழர்.  சந்திரிகா குமாரதுங்காவின் வலது இடது கையைப் போலவே இருந்தவர்.  சந்திரிகாவே இவர் பெயரை பரிந்துரைத்தவர். சுதந்திர கால தமிழ் தலைவர்களைப் போலவே மிகுந்த புத்திசாலி. இவர் தமிழர் என்ற ஒரு நோக்கத்தை வைத்துக்கொண்டு இந்த வாய்ப்பை தட்டிபறித்து ஆட்சியை பிடித்தவர் தான் இந்த ராஜபக்ஷே.  இன்றைய விடுதலைப்புலிகளின் சர்வதேச தடைக்கு முக்கிய காரணமாக இருந்தவரும் இதை மட்டுமே மனதில் கொண்டு உழைத்தவரும் லஷ்மண் கதிர்காமர் மட்டுமே. ஆனால் இவரே தான் சாவதற்கு முன் சுட்டுக்கொல்லப்பட்டு தான் சாகப்போகின்றேன் என்று வாக்குமூலம் கொடுத்து அதன்படியே நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வரும் போது  மேலோகம் அனுப்பப்பட்டார். அவர் உருவாக்கிய சர்வதேச வலைபின்னால் பின்னால் வந்தவர்களுக்கு பலவிதங்களிலும் உதவியாய் இருந்தது.  ஆனால் இவர் உதவிய உதவிகள் சிங்களர்களுக்கு சாதகமாக இருந்ததே தவிர அவர் தமிழராக இருந்து எந்த தமிழர்களுக்கும் செய்ததாக தெரியவில்லை. இவரைப் போன்ற மிக நல்ல ஜீவன்கள் இன்றைய சூழ்நிலையில் ராஜபக்ஷே கழிப்பறையை கழுவிக் கொடுத்து பதவியை கைப்பற்ற தயாராய் இருக்கிறார்கள். இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் இந்த பூமிப்பந்தில் தமிழினம் வாழ்ந்தாலும் அதே மணம் திடம் குணம் தான்.

இத்தனை திறமை உடையவர்கள் உருவாக்கிய ராஜீவ் காந்தி படுகொலை திட்டமிடுதல் என்பது சிவராசனிடம் ஒப்படைக்கும் முன்பே பாதி வடிவம் அடைந்து இருந்தது.  ஒரு வகையில் சொல்லப்போனால் சிவராசன் என்ற நபர் ஏற்கனவே உருவாகியிருந்த நிகழ்வுகளுக்கு குழுவை வழி நடத்துபவராக வந்தவர். மனித வெடிகுண்டாக மாற்றி வைத்திருந்த தணுவை கொண்டு போய் இலக்கில் சேர்க்க வேண்டிய பொறுப்புக்கு வந்தவர்.  தணுவுக்கு ஏதோ ஒன்று என்றால் உடன் வந்த சுபா.  சுபாவுக்கே ஏதோ ஒரு பிரச்சனை என்றால் சிவராசனே அந்த பொறுப்பை நிறைவேற்ற தயாராய் இருக்கக்கூடியவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சிவராசனைப்பற்றி தனியாக நிறைய நாம் புரிந்து கொள்ள வேண்டும். எந்த வகையிலும் தோல்வி என்பது விடுதலைப்புலிகளின் இயக்க அகராதி விரும்பாத வார்த்தை.

இந்த படுகொலையில் புலனாய்வு குழுவினரால் குற்றஞ்சாட்டப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 41. வேலுப்பிள்ளை பிரபாகரன், பொட்டு அம்மன், அகிலா (பெண் போராளிக்குழுக்களின் தலைமை) என்ற மேல்மட்ட அமைப்பு முதல் பங்கெடுத்த சிவராசன், தணு,சுபா என்று தொடங்கி இதற்கு உறுதுணையாய் இருந்த இந்தியர்களான சுபா சுந்தரம், பாக்யநாதன், புகைப்படம் எடுத்து இறந்து போன ஹரிபாபு என்று தொடங்கிய ஒரு பெரிய கூட்டமே இருந்தது. இவர்கள் அத்தனை பேர்களும் உருவாக்கிய திட்டமிடுதல் என்பது மிகுந்த அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தரக்கூடியது.  சிவராசனிடம் ஏப்ரல் (1991) மாதத்தில் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு இதில் முழுமூச்சாக மே 2 முதல் உழைக்கத் தொடங்கினாலும் இதன் தொடர்பாக ஆண்டின் தொடக்கம் முதலே இதற்கான அஸ்திவாரத்தை உருவாக்கி இருந்தனர்.  ஆனால் அப்போது இதற்காக உழைத்துக்கொண்டுருந்தவர்கள்  எவருக்கும் இதற்காகத் தான்?  என்று எவருக்குமே தெரியாது.  பங்கெடுத்த இந்தியர்களுக்கும், விடுதலைப்புலிகளின் மற்ற உளவுப்பிரிவினருக்கும் முழுப் பரிணாமம் தெரியாது.  ஆனால் அபபோது அவர்கள் உணர்ந்தது இப்போது மிகப் பெரிய ஏதோ ஒன்று.  அந்த அளவிற்குத் தான் அவர்கள் உள் மனம் சொல்லியது.  எப்போதும் போல அவர்களின் அர்பணிப்புக்கு அந்த கேள்வியே தேவையாய் இருக்க வில்லை.

இந்த கூட்டணியில் சேர்ந்து இருந்த சுபா சுந்தரம் சென்னையில் பிரபலமான புகைப்படக்காரர்.  அவரது நிறுவனமும், அவர் பழகி வைத்துள்ள அரசியல் திரைப்படத்துறை சார்ந்த பிரபலங்களும் கணக்கில் அடங்கா. அவரைத் தெரியாதவர்கள் எவரும் இல்லை என்கிற அளவிற்கு பிரபல்யமான நபர். தொடக்க காலம் முதல் இவர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்தவர். இவர் இலங்கை சென்று பிரபாகரனை சந்தித்தும் வந்தவர்.  இவரைப் போலவே பேபி சுப்ரமணியம் என்பவர் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கென்று பலம் வாய்ந்த மக்கள் தொடர்பாளர். இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

1980க்கு பிறகு சுபா சுந்தரத்திடம் வேலைக்குச் சேர்ந்த பாக்யநாதன், பேபி சுப்ரமணியடத்திடம் தொடர்பு உருவாக்கிக்கொண்டு அதன் மூலம் தமிழ்நாட்டுக்கு வரும் விடுதலைப்புலிகளிடம் நல்ல தொடர்பை உருவாக்கிக் கொண்டவர். சுபா சுந்தரத்திடம் புகைப்படக்காரராக பணியாற்றிக் கொண்டுருந்தவர் ஹரிபாபு. இவர் வாழ்க்கையும் நளினியைப் போலவே எதிர்பாராத திருப்புமுனை. அவர் வாழ்க்கை சிறைக்கு கொண்டு வந்தது. இவர் வாழ்க்கை சிட்டுக்குருவி போல் உயிர்க்குருவி மேலே பறந்து விட்டது.  என்னவொன்று காந்தியைப் பற்றி பேசும் வரைக்கும் கோட்சே என்ற பெயர் இருப்பது போல ராஜீவ் காந்தி படுகொலைப்பற்றி பேசும் போது இவரும் இவர் பயன்படுத்திய புகைப்பட கருவியும் பேசப்படும்.?

பாக்யநாதனைப் போலவே முத்து ராஜா என்பவரும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக இருந்தவர்.இவர் மேற்கு மாம்பலத்தில் விடுதலைப்புலிகளின் ஆதரவோடு எடுக்கப்பட்ட வீட்டில் இருந்து செயல்பட்டுக் கொண்டுருந்தார்.  இந்த வீட்டின் ஒரு அறையைத் தான் பேபி சுப்ரமணியம் தன்னுடைய அலுவலக மற்றும் வீடாக பயன்படுத்திக் கொண்டுருந்தார். இங்கு தான் விடுதலைப்புலிகளுக்கு தேவையான பிரசுரங்கள், ஒலி ஒளி நாடா, மற்றும் அவர்கள் பிரச்சாரத்திற்கு தேவைப்படும் அத்தனை சமாச்சாரங்களும் தயார் நிலையில் இருக்கும். தேவைப்படும் சமயத்தில் இலங்கைக்கு சென்று கொண்டுருக்கும்.

சிவராசன் உள்ளே நுழையும் மே மாதத்தில் சென்னையில் இருந்த விடுதலைப் புலிகளுக்கு சொந்தமாக அச்சகம் மிக குறைந்து விலைக்கு பாக்யநாதனுக்கு விற்கப்பட்டது.  விடுதலைப்புலிகளின் வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படவேண்டும் என்ற ஒப்புதலுடன்.  இந்த பாக்ய நாதனின் சகோதரி தான் ராஜிவ் காந்தி இறப்பு அன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தில் உள்ள நளினி.  நளினி தன் தயாருடன் வசித்து வந்த வீட்டில் இருந்து அவருடன் சண்டை பிடித்துக் கொண்டு தனியாக வெளியே வந்தார். வெளியே வந்தவரை முத்து ராஜா தன் அம்மா மற்றும் சகோதரியுடன் தங்க வைத்தார். இதன் தொடர்ச்சியாக பெண்கள் தங்கும் தங்கம் விடுதி என்று கடைசியாக வில்ல்வாக்கத்தில் ஹைகோர்ட் காலனியில் கொண்டு போய் குடியமர்த்தினார்.

நளினி வில்லிவாக்கத்தில் இருந்து அடையாறில் உள்ள அனபாண்ட் சிலிகன் பிரைவேட் லிமிட் என்ற தனியார் நிறுவனத்திற்கு (சம்பளம் மாதம் 1700) போய்க் கொண்டுந்தார்.  திமுக ஆட்சியை விடுதலைப்புலி ஆதரவு நோக்கத்தில் கலைக்கப்பட உள்ளே இருந்த விடுதலைப்புலி ஆதரவாளர்களும், தங்கியிருந்த விடுதலைப்புலிகளும் கைதாகிக் கொண்டுருந்தனர்.  இவ்வளவு கெடுபிடி அரசாங்க நிர்வாகத்திலும் விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டில் வந்து இறங்கி அவர்களுக்குண்டான வேலைகளை பார்த்துக்கொண்டு தான் இருந்தனர்.  இதன் தொடர்ச்சியாக இலங்கையில் இருந்து உளவுப்பிரிவில் இருந்து அழைத்து வரப்பட்ட முருகன் இந்த வட்டத்திற்குள் இருந்த நளினியை சந்தித்து நட்பாக்கிக் கொண்டார்.

ஆங்கிலம் கற்க வேண்டும் என்று சொல்லி முருகன் டுட்டோரியல் கல்லூரிக்கு போய்க்கொண்டுருந்தபோதே நளினியுடன் நெருக்கமாக பழகியதும், தான் ஒரு விடுதலைப்புலி என்ற உண்மையை நளினியிடம் சொல்லி இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த அட்டகாசங்களை நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் சொல்லிச் சொல்லியே ஒரு மாதிரியாக மாற்றி வைத்திருந்தார். தனக்கு உதவியாளர் ஒருவர் தேவை என்று சொல்லி அப்போது சுபா சுந்தரத்திடம் பணிபுரிந்து கொண்டுருநத் ஹரிபாபுவை வைத்துக்கொண்டார். முருகன் நளினியுடன் வைத்திருந்த  தொடக்க நட்பு காதலாக மாறியது..  காதல் கடைசியில் கர்ப்பத்தில் முடிந்தது. கர்ப்பத்தில் முடிந்த போது திருப்பதி திருமணம் வரைக்கும் சென்றது. எப்போது சென்றார்கள்?  ராஜீவ் காந்தி இறந்த போது வேண்டுதல் நிறைவேற்றிய திருப்தி. இவர்களுக்கு வேண்டுதல் முடித்த திருப்தியும் திருமணம் நடந்த மகிழ்ச்சியும்  (?)

வீட்டை விட்டு பிரிந்து தனியாக இருந்த நளினியின் வீட்டுக்கு முருகனிடம் பேசி வைத்திருந்த படி சிவராசன் தன்னுடன் அழைத்து வந்த சுபா தணுவை நளினியுடன் சேர்ந்து தங்க வைக்க இந்த இரண்டு பெண்களையும் நளினிக்கு பிடித்து விட்டது.  இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த அத்தனை விசயங்களையும் வந்தவர்களும் புரிய வைக்க நளினி ஏறக்குறைய இலங்கை தமிழராகவே மாறியிருந்தார். முருகன்,சுபா,தணுவுடன் சுற்றிய சுற்றலில் பேசிய பேச்சின் மூலம் நளினியை மூளைச் சலவை போல் மாற்றி வைத்திருந்தனர்.

சிவராசன் குழுவினர் கோடியக்கரையில் இருந்து சென்னையின் உள்ளே வந்ததும் தொடக்கத்தில் குழுவினர் தங்குவதற்கு வீடு கொடுங்கையூரில் முத்தமிழ் நகரில் தயாராக இருந்தது. சிறப்பான ஏற்பாட்டை செய்து இருந்தவர் ஜெயக்குமார். இவர் 1990 டிசம்பர் மாதத்திலேயே இந்த வீட்டை பிடித்து வைத்து இருந்தார். ஆனால் ஜெயக்குமார் 1984 ஆம் ஆண்டு முதல் சென்னையில் இருப்பவர்.  தமிழ்நாட்டு பெண்ணான சாந்தியை மணம் செய்து கொண்டு யாழ்பாணம் சென்றவர் மறுபடியும் 1987 திரும்பி வந்து சென்னை வாசியானவர்.  இவரின் சகோதரி கணவர் ராபர்ட் பயஸ்.  இந்திய அமைதிப்படையால் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் பிடிக்கப்பட்டு சிறையில் இருந்தவர்கள். இவர்கள் இராமமேஸ்வரம் வழியாக தங்களை அகதியாக பதிவு செய்து கொண்டு உள்ளே வந்து களப்பணி ஆற்றிக்கொண்டுருப்பவர்கள்.  இந்த குடும்ப உறுப்பினர்களின் மொத்த செலவுகளையும் கவனித்துக்கொண்டவர்கள் விடுதலைப்புலிகள்.  தங்களுடைய உளவு வேலைக்காக நிக்சன் என்பவரையும் அவர்களுடன் இணைத்துவிட உருவானது நிக்சன் தலைமையிலான INTELIGENCE GROUP,
பிரபாகரனின் தொடக்க கால தோழரான கலாபதி என்பவர் போரூரில் வசித்து வந்தார். இவருடைய முக்கிய பணி அகதிகளாக வருபவர்களுக்கு வீடு பிடித்து கொடுப்பது. இதற்கு இவருக்கு உதவி செய்ய உதவியாய் இருந்தவர் மளிகைக்கடை வைத்துக் கொண்டு தனியாக தரகர் வேலை பார்த்துக்கொண்டுருந்தவர். இவர் மூலம் ஜெயக்குமார் பெயரில் எடுக்கப்பட்ட வீட்டில் இந்த உளவு மக்கள் கூடும் இடமாக இருந்தது.  சிவராசன், நிக்சன், காந்தன், ஒயர்லெஸ் ஆப்ரேட்டர் ரமணன் போன்றவர்களின் அடுத்த கட்ட ஆய்த்தப்பணிகள் இங்கிருந்து தான் உருவானது.
ஆனால் சிவராசன் உள்ளே வந்து இவர்களுடன் சேர்ந்து இருந்தாலும் தான் செய்யப்போகும் காரியம் எதையும் இவர்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லை. காரணம் பொட்டு அம்மன் உத்தரவின் படி இந்த திட்டம் என்பது உள்ளே களப்பணி யாற்றிக்கொண்டுருக்கும் மற்ற எவருக்கும் (?) தெரியக்கூடாது.  அந்த அளவிற்கு இந்த திட்டமென்பது ரகஸ்யமாய் பாதுகாக்கப்பட்டது.  அவர்கள் பணி தனி.  இவருடைய நோக்கம் வேறு. இயக்கத்தின் கொள்கை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றானதால் எவருக்கும் எந்த காலத்திலும் பிரச்சனைகள் வருவதில்லை.

சிவராசன் இந்த கூட்டத்தில் இருந்து வெளியேறி தனியாக தன்னுடைய திட்டத்திற்கு தொந்தரவு இல்லாத வேறு ஒரு வீடு இருந்தால் வசதியாக இருக்கும் என்று அதன் பிறகு பிடிக்கப்பட்ட கொடுங்கையூர் வீடு சிவராசனின் அலுவலகமாயிற்று. இந்த வீட்டில் ஜெயக்குமாரையும் அவர் மனைவியையும் மட்டும் அழைத்துக்கொண்டு சென்று குடும்பம் போல் வெளியே தெரியும் படி உருவாக்கி விட முதல் பிரச்சனை முடிவுக்கு வந்தது.  மேற்கொண்டு சந்தேகம் வராமல் இருக்க காபிக்கொட்டை அறைக்கும் இயந்திரத்தை விடுதலைப்புலிகளின் இயக்கம் சார்பாக அமைத்துக்கொடுக்க அதன் மூலம் தொலைபேசி இணைப்பும் வாங்க முடிந்தது.  சிறப்பான ஏற்பாடுகள் முடிந்து விட்டது.  சுபா, தணு, சுதந்திர ராஜா, ராபர்ட் பயஸ் என்று உள்கட்டமைப்பும் பிரச்சனையும் முடிவுக்கு வந்து விட்டது. ஆனால் முருகன் மூலம் நளினி அறிமுகத்தில் இறுதியில் வில்லிவாக்கம் வந்து சேர சிவராசன், சுபா,தணு,நளினி என்ற நால்வர் கூட்டணியும் நடக்கும் நிகழ்ச்சியை புகைப்படம் எடுக்க வேண்டும் என்று அழைத்துச் செல்லப்பட்ட சுபா சுந்தரம் அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டுருந்த ஹரிபாபு என்ற ஐந்தாவது நபரும் ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்திற்கு செல்லும் வீடாக நளினியின் வீடு அமைந்து விட்டது.

அம்மாவை விட்டு நளினி பிரிந்த போது விதி எழுதத் தொடங்கியது. முருகனை விரும்ப ஆரம்பித்த போது சிரிக்க, சுபா தணுவையும் நேசிக்க நாசப்பாதையை கொண்டு போய் காட்டி அடுத்த 20 வருடங்களை ஆள் அரவமற்ற இருட்டுக்குள் கொண்டு வந்து முடித்தும் விட்டது.

18 comments:

ஜோதிஜி said...

தனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட விடயங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்த நிருபமா ராவ், தமிழ்க்கட்சிகள் இடையே புரிந்துணர்வொன்று ஏற்பட்டால் மாத்திரமே அரசியல் தீர்வு விடயத்தில் தாங்கள் ஏதோவொரு விதத்தில் உதவமுடியும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறினார்.

Anonymous said...

கையறு நிலையில் இந்தியா. தற்போது ஆப்பிழுத்த குரங்கின் நிலை. ஏதாவது சொல்லி தமது அரசியல் பிழைப்பை தக்க வைக்க முயலுகிறது. நிருபமாவும் இந்திய அசிங்க அரசியலில் ஒரு அங்கம். இவர்களின் கையை விட்டு நழுவி விட்டது கொலை வெறி சிஙகள அராஜக அரசியல். இந்திய முட்டாள் அரசியலின் பெறுபேறுகளை வெளிப்படுத்தும் காலம் வெகு விரைவில்.

ஜனா

ஜோதிஜி said...

கையறு நிலையில் இந்தியா. இவர்களின் கையை விட்டு நழுவி விட்டது கொலை வெறி சிஙகள அராஜக அரசியல்.

என்ன நடக்கப்போகிறது என்பதை வெளிப்படுத்தும் காலம் வெகு விரைவில்.

Thenammai Lakshmanan said...

எவ்வளவு விஷயங்களை நுணுக்கமாக தொகுத்து இருக்கிறீர்கள் ஜோதிஜி பிரம்மிக்க வைக்கிறது உங்கள் இடுகை ஒவ்வொன்றும்

ஜோதிஜி said...

தமிழ் உதயம் கூட தராத போதும் உங்கள் அக்கறைக்கு நன்றி.

ஜோதிஜி said...

http://www.4tamilmedia.com/ww1/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-06-18/5700-2010-03-09-13-31-05?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed:+4tamilmedia-feeds+(4tamilmedia+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D)
தமிழீழக் கோரிக்கை தோற்றுப் போனால், இந்தியாவின் பூகோள அரசியல் துக்க சாகரமாக மாறலாம்!

geethappriyan said...

அருமை ஜோதிஜி,
மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்,நல்ல பல அறிய தகவல்கள்,எத்தனை படித்தீர்களோ?என்று ஒருவர் இந்த தகவல்களை தேடி கூகிளில் தேடினாலும் உங்கள் தகவல்கள் அவர்களுக்கு நல்ல பரிசே.லேபிளில் ஒன்றிரண்டு ஆங்கில சொல்லையும் சேர்த்தால் நலம் என நினைக்கிறேன்.நானும் சேர்க்க உள்ளேன்.

--------

அது கூகிலில் ஆங்கிலத்தில் தேடுவோருக்கு வழிகாட்டி இங்கு அழைத்து வரும் என்பது திண்ணம்
வாக்குகள் அளிக்கப்பட்டன

geethappriyan said...

அருமை ஜோதிஜி,
மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்,நல்ல பல அறிய தகவல்கள்,
இரண்டு முதுகலை முடித்த சிறையில் கால் நூற்றாண்டு சிறைவாசத்தை நெருங்கும் அந்த அபலைத் தாயும் அவரின் பெண்ணும் என்று ஒன்று சேர்கிறார்களோ,அன்று தான் கலைஞருக்கு பாராட்டு விழா வாங்கிக்கொள்ள முழு தகுதியும் உண்டு.

இவர் தன் வாழ்க்கை வரலாறை எழுதினாலே எத்தனை துலாபாரம் போன்ற படங்கள் எடுக்க முடியுமோ?
போதும் இவர் பட்ட துயரம்

இந்த கட்டுரைக்காக எத்தனை படித்தீர்களோ?என்று ஒருவர் இந்த தகவல்களை கூகிளில் தேடினாலும் உங்கள் தகவல்கள் அவர்களுக்கு நல்ல பரிசே.லேபிளில் ஒன்றிரண்டு ஆங்கில சொல்லையும் சேர்த்தால் நலம் என நினைக்கிறேன்.நானும் சேர்க்க உள்ளேன்.

--------

அது கூகிலில் ஆங்கிலத்தில் தேடுவோருக்கு வழிகாட்டி இங்கு அழைத்து வரும் என்பது திண்ணம்
வாக்குகள் அளிக்கப்பட்டன

ஜோதிஜி said...

உண்மை கார்த்தி. சுடுதண்ணி உருவாக்கிய புரிதலுக்குப் பிறகு பல விதங்களிலும் மாற்றியுள்ளேன். ஏற்கனவே கூகுள் இதை உணர்ந்து சில விசயங்களை தெரிவித்து உள்ளது. உங்கள் அக்கறை போல் கூகுளுக்கும் நன்றி.

Anonymous said...

Rajiv gandhi assassination
ராஜீவ்காந்தியின் கொலையும் சிபிஜ் ரகோத்தமன் புத்தகமும் காணொளிகள்

http://rajivgandhi-assassination.blogspot.com/

Jerry Eshananda said...

கார்த்தி சொல்வது போல லேபிளில் ஆங்கில வார்த்தை சேர்க்கவும்,உங்கள் புனித யாத்திரையில் நானும் ஒரு யாத்திரிகன்.

ttpian said...

india is in Asean cross roads-due to foolish/selfish attitude of kerala maamaas

Anonymous said...

//மற்ற இயக்கங்களை அழித்தொழிக்க விடுதலைப்புலிகளின் இயக்கம் தீவிரமாக ஈடுபட்டபோதிலும்//

அழித்து ஒழிக்க என்று சொல்லமுடியாது. கொலை கொள்ளை கற்பழிப்பில் மற்றய இயக்கங்கள் முன்னின்றதால் அவர்களை தண்டித்தார்கள் என்று சொல்லலாம். அந்த குழுக்களில் இருந்த அப்பாவிகளை ஒன்றும் செய்ததில்லை.

//தன்னுடைய கொள்கையில் எப்படி பிடிவாதமாக இருந்தாரோ அந்த அளவிற்கு தானும் சுத்தமாக இருந்தார்.//

உண்மை.

//அதுவும் தான் சொல்வதை கேட்பவர்களை மட்டுமே.//

அவர் அப்படிப்பட்டவர் அல்ல. நல்லதை / சரியானதை யார் சொன்னாலும் கேட்பவர். சில வேளைகளில் போராளிகள் தவறு செய்தால் அண்ணைக்கு எழுதி போடுறோம் என்று மக்கள் அவர்களை வெறுட்டும் அளவுக்கு மக்கள் மனதில் இருந்தவர். இருப்பவர்.

Anonymous said...

யோகி ஆவணப் பிரிவிற்குப் பொறுபாக இருந்தவர். திருநாவுக்கரசு அரசியல் துறையுடன் வேலை செய்த ஒரு வெளி ஆள். அதாவது ஆயுதம் ஏந்திய போராளி அல்ல. தமிழினி அரசியல் துறை பெண்கள் பிரிவுக்குப் பொறுப்பானவர். நடேசன் அரசாங்கத்தின் பொலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்து இயக்கத்தில் இணைந்தவர். கிட்டத்தட்ட எங்களூர் பொலீஸ் கமிஷனர் அவர். தமிழ்ச்செல்வன் இறந்த பின்னர் அரசியல் துறை பொறுப்பெடுத்தவர்.

பெண்கள் பிரிவில் இரண்டு பெரிய படையணி இருந்தன. ஒன்றிற்கு விதுஷா (வலது மூலையில் இருப்பவர்) என்பவரும் இன்னொன்றிற்கு துர்க்கா (அடுத்து நிற்கும் சிறு உருவம்) என்பவரும் பொறுப்பாக இருந்தார்கள். ரேடியோவிற்கு ஜவான் / தமிழன்பன். கடைசி வரை உடைந்த வான் ஒன்றின் மீது நின்று தனி ஒருவராக ஒலிபரப்புச் சேவை செய்தவர். அவர் பெயர் இல்லாதது விசனத்தைத் தருகிறது. இந்தப்படம் எங்கே பெற்றீர்கள் என்று சொல்லமுடியுமா? ஒன்றைக்காலுடன் வாகனங்களிலும் மரத்திலும் ஏறி ஒலிபரப்பு செய்த மனிதை மக்கள் எப்படி மறந்துவிட்டார்கள். ஓக்கே, இப்போ எனது பிரசர் ஏறுது. அவ்.

பரா நீதித்துறைக்குப் பொறுப்பாக இருந்தார். இப்படி பலர். இவர்களையும் மறந்துவிட்டார்களே!

Anonymous said...

//பிரபாகரனின் மூளை என்று சொன்னால் மிகையில்லை. //

இல்லை. பிரபாகரனின் மூளை பிரபாகரனே. இவர்கள் அவரின் கருவிகள். திறமையான கருவிகள்.

// இன்றைய விடுதலைப்புலிகளின் சர்வதேச தடைக்கு முக்கிய காரணமாக இருந்தவரும் இதை மட்டுமே மனதில் கொண்டு உழைத்தவரும் லஷ்மண் கதிர்காமர் மட்டுமே. //

உண்மை. லக்சம் கதிர்காமரின் மட்டுமே 100% அதற்கு க்ரெடிட் எடுத்துக் கொள்ள முடியும்.

//இவரைப் போன்ற மிக நல்ல ஜீவன்கள் இன்றைய சூழ்நிலையில் ராஜபக்ஷே கழிப்பறையை கழுவிக் கொடுத்து பதவியை கைப்பற்ற தயாராய் இருக்கிறார்கள். இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் இந்த பூமிப்பந்தில் தமிழினம் வாழ்ந்தாலும் அதே மணம் திடம் குணம் தான்.//

நல்லவர் என்றில்லை. புத்திசாலி என்று சொல்வதை விட கன்னிங்க் (நரிப்புத்தி). அவருடைய தாய் ஒரு சிங்களவர்.

பேபி சுப்ரமணியம் தான் இளங்குமரன். 70களில் அப்ரோ என்ற விமானத்தை துணிப்பையில் குண்டு வைத்து தகர்த்த ஒருவர். வெள்ளை வேட்டி சட்டையுடன், நீண்ட தலைமுடியுடன், சைகிளில் அவர் போய் வருபவராம். சோறும் சம்பலும் / மிளகாயும் வெங்காயமும் கொடுத்தாலுமே ரசித்து சாப்பிடுவாராம்.

//பேசிய பேச்சின் மூலம் நளினியை மூளைச் சலவை போல் மாற்றி வைத்திருந்தனர்.//

மூளைச் சலவை என்று சொல்வது கொஞ்சம் ஹார்ஷாக இருக்கும். இவர்கள் உண்மையைச் சொன்னார்கள் என்று ஒத்துக்கொள்ளலாமே. அந்த வேதனையைப் புரிந்து கொண்ட எவரும் அவர்களுக்கு உதவ முன்வருவார்களே. நளினியைப் போல.

ஜோதிஜி said...

அனாமிகா

இன்று இரவு முழுக்க நீங்கள் வசிப்பது என் இடுகையில் தானோ?

பல விசயங்களை தெரிந்து கொண்டேன். வெறுமனே நன்றிங்க என்று சொல்ல மனமில்லை.

Anonymous said...

பகல் முழுதும் உங்க பக்கம் தான் படிச்சேன். படிக்க ஆரம்பித்தால் நான் ஒரு பிசாசு மாதிரி (மாதிரி எல்லாம் இல்லே, அதே தான் என்று வீட்டில் சொல்லுவார்கள்). முடிக்காமல் தூங்க முடியாது. இரவு 7 மணி ஆச்சு. போய் வயிற்றுக்கு கொட்டிக்கற டைம். நிறைய பின்னூட்டம் போட்டுட்டேன். சாரி. இங்கே சொன்னதெல்லாம் எங்கள் ஊர் மக்களுக்கு நன்கு தெரிந்தவையே. போராட்ட செய்திகளைத் தொடருபவர்களுக்கும் தெரிந்திருக்கும் என்று நினைத்தேன். கடைசி யுத்தம் பழையவற்றை மறக்கச் செய்துவிட்டது. எனிவே, மீண்டும் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுவது,
சுனாமி, அக்க மின்னல், அக்க சூறாவளி,
அனாமிகா.

Anonymous said...

மிகவும் நன்றாக இருந்தது.