Thursday, March 31, 2011

நான் வேட்பாளர்? -- ஒரு டைரிக்குறிப்புகள்

கடந்த சில பதிவுகளில் நண்பர்களின் பின்னோட்டங்களுக்கு பதில் அளிக்காமல் விரைவாக ஓடி வந்து கொண்டிருந்தமைக்கு முக்கிய காரணம் இந்த பதிவில் மொத்தமாய் பதில் அளிக்கலாம் என்பதே ஆகும். மொத்த விசயங்களையும் ஒரே பதிவில் அடக்க வேண்டிய சூழ்நிலையினால் இந்த நீள்பதிவின் இம்சையை பொறுத்தருள்க.


இந்த கட்டுரையின் நோக்கம் என் சுயபுராணம் என்பதைவிட ஒரு வலிமைவாய்ந்த மீடியா ஒரு கட்சியின் கையில் இருந்தால் அதுவே ஆளுங்கட்சியாக இருக்கும்பட்சத்தில் என்ன மாறுதல்கள் உருவாகும்? ஆளுங்கட்சியை பகைத்துக் கொள்ளக்கூடாது என்ற கொள்கையுடைய தொழில் அதிபர்களின் போக்கு எப்படி ஒரு போராட்டத்தை திசை திருப்பிவிடும்? அதுவே பல்வேறு கூறுகளாக ஒற்றுமையற்று இருந்தால் வெகுஜன போராட்டமென்பது எத்தனை கேலிக்குறியதாக மாறிவிடும்? ஒரு பகுதியில் நடந்த உண்மையான விசயங்களுக்கும் வெகுஜன மக்களுக்கு ஊடகம் கொண்டு வந்து சேர்க்கும் விசயங்களும் எத்தனை மாறுபாடுகள் என்பதை உங்களுக்கு உணர்த்தக்கூடும்?

நடைபெறப்போகின்ற ( 2011 ஏப்ரல் 13 ) தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ப்ளாஷ் நியூஸ் என்று சொல்லப்படும் முக்கியத்துவம் பெற்ற ஒரு செய்தி திருப்பூர் வடக்குத் தொகுதி. இப்போது திருப்பூர் நகரம் என்பது மாவட்டம் என்ற அந்தஸ்த்துக்கு வந்துள்ளது. தொகுதி சீரமைப்புக்கு பிறகு திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு தொகுதிகள் உருவானது.  ஒன்று தெற்கு. மற்றொன்று வடக்கு. இந்த வடக்கு தொகுதியில் தான் மா.கம்யூ ல் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து இப்போது உடன்பிறப்பாக மாறிய கோவிந்தசாமி திமுக வின் சார்பாக களமிறங்கியுள்ளார். தெற்கு தொகுதியில் திமுகவின் கூட்டாளியான காங்கிரஸ்க்கு (கட்டக்கடேசியாக) ஒதுக்கப் பட்டுள்ளது.

இங்கு வெளியே காட்டிக் கொள்ளமுடியாத திமுக எதிர்ப்பு பல விதங்களிலும் உண்டு. அதற்கு மேலாக வடக்கு தொகுதி வேட்பாளரான கோவிந்தசாமியின் தனிப்பட்ட 'நடவடிக்கை'களின் காரணமாக திருப்பூர் வடக்குத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்கள் 141 பேர்கள் களமிறங்கி மொத்த ஊடகத்தையும் திரும்பி பார்க்க வைத்தார்கள்.  யார்? ஏன்? எப்படி?

18.03.2011  காலைப்பொழுது

கடந்த இரண்டு மாதமாக வெற்றிகரமாக செயல்படுத்தியபடி வீட்டில் முதல் நபராக மூத்தவள் காலை செய்திதாளை சப்தம் போட்டு படித்துக் கொண்டிருந்தார்.  கால்பக்கம் அளவிற்கு 'வாக்காளர் எழுச்சிப் பேரவை' என்ற பெயரில் ஒரு விளம்பரம் வெளிவந்திருந்தது. வடக்கு கிழக்கு இரண்டு தொகுதிக்கும் தலா ஆயிரம் பேர்களை களமிறக்குவதாக அந்த அறிவிப்பு சொல்ல கேட்டுக் கொண்டிருந்த நான் மனதிற்குள் சிரித்துக் கொண்டு நகர்ந்து போய்விட்டேன்.

19.03.2011 நள்ளிரவு

நள்ளிரவில் நண்பரின் அலைபேசி அழைப்பு என்னை விழிக்க வைத்தது. குறிப்பிட்ட சாயப்பட்டறையில் உயர்பதவியில் இருப்பவர். இவருடன் எப்போதும் என்னுடன் தொடர்பிலிருக்கும் மற்ற நான்கு பேர்களுகளுக்குள் நடந்த உரையாடலின்படி என்னை அழைத்துப் பேசினார்.


'நடைபெறப்போகும் தேர்தலில் நீங்களும் பங்கெடுக்க வேண்டும்' என்றார்.  சப்தம் போட்டு சிரித்து விட்டு காரணத்தைக் கேட்டேன்.  முழு விபரங்களை கேட்டு விட்டு மனதில் சிரித்துக் கொண்டு அவரை கலாய்த்து விட்டு பேசிய விசயங்களை மறந்து விட்டேன்.  அவர் பேசியபோது கேட்ட வேட்புமனுவுக்குத் தேவைப்படும் ஆவணங்கள் என்னிடம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு சிரித்துக் கொண்டே விடைபெற்றார்.

20.03.2011 பகல்பொழுது

இரண்டு முறை நண்பரும் அவரைச் சார்ந்தவர்களும் என்னுடன் உரையாடிய போது இது குறித்து பரஸ்பரம் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் சாயப்பட்டறை சங்கங்களில் பிரிந்துள்ள அரசியல் நிலைபாடுகளையும், ஒவ்வொரு சங்கத்திலும் உள்ள பொறுப்பில் இருக்கும் தனிப்பட்ட மனிதர்களின் சுயநல குணாதிசியங்களையும் மட்டுமே பேசிக் கொண்டிருந்தோம். கடைசியாக வரப்போகும் சென்னை நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது விரைவில் நாங்களும் ஊர்ப்பகம் செல்லக்கூடிய சூழ்நிலை வந்துவிடும் போலிருக்கு என்றார்.

என்னால் பதிலளிக்க முடியவில்லை. 

21.03.2011  அதிகாலை.

நண்பர் தூக்கத்தில் இருந்த எழுப்பி வாக்களர் அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு தாலூகா அலுவகத்திற்கு காலை 11 மணிக்கு வரச் சொன்னபோது வியர்த்துப் போனேன். விளையாட்டு வார்த்தைகள் விபரீதமாக போய்க் கொண்டிருப்பதை அப்போது தான் உணர ஆரம்பித்தேன்.  


பரபரப்பான வேலைகளுக்கிடையே நான் மறந்து விடுவேன் என்று மற்ற நண்பர்களும் அழைத்துச் சொன்ன போது தான் இது ஏற்கனவே 'திட்டமிட்ட பரிபூரண உணவு' என்பதை உணர்ந்து கொண்டேன்.வீட்டில் உள்ள நிதிமந்திரியிடம் எது குறித்தும் எப்போதும் எல்லாவிசயங்களையும் நான் சொல்லிவிடுவது வழக்கம்.  இதையும் சொன்ன போது 'உங்கள் பத்து வருட நட்பு கெட்ப் போகின்றது.  உங்க தனிப்பட்ட குணாதிசியமும் முழுமையாக அவருக்குத் தெரியாது' என்றார் சிரித்துக்கொண்டே.

21.03.2011 மதியம்

திருப்பூர் தாலூகா அலுவலகத்திற்கு அருகே வங்கிகளும் இருப்பதால் பல விதங்களில் எனக்கு வசதியாக இருந்தது.  நான் வீட்டில் இருந்து கிளம்பியது முதல் நண்பர்கள் ஒவ்வொருவரும் அலைபேசி மூலம் என்னை தொடர்ந்து கொண்டிருந்தனர். நான் திருப்பூர் தாலூகா அலுவலகத்தில் உள்ளே நுழைந்த போது முன்னால் இருந்த ஒரு கூரையின் கீழ் ஏராளமான நண்பர்கள் கூடியிருந்தனர்.  பக்கத்தில் ஒரு நீண்ட வரிசையும் நின்று கொண்டிருந்தது. என்னை அடையாளம் கண்டு கொண்ட ஒருவர் அவர் கையில் வைத்திருந்த விண்ணப்ப படிவத்தை என் கையில் கொடுத்து பூர்த்தி செய்து தாருங்கள் என்றார்.

சரிபார்த்துவிட்டு மீண்டும் என்னிடம் தந்தவர் 'அந்த வரிசையில் நின்று விண்ணப்ப படிவத்தை வாங்கி வாருங்கள்' என்று அனுப்பினார்.

என்னைப் போலவே முப்பத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்ப படிவத்தை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். என் பொறுமையின்மை கொண்டு செலுத்த முன்னேறிச் சென்றேன். உள்ளே என்ன நடக்கின்றது? என்று பார்க்கும் ஆவலை அடக்கிக் கொண்டு அநத நீண்ட வரண்டாவில் மேலேறி நின்றபோதுதான் வரிசையில் நின்று கொண்டிருந்த நபர்களை உற்று கவனிக்கத் தொடங்கினேன். 

அத்தனைபேர்களும் 24 வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள். பல்வேறு சாயப்பட்டறைகளில் பணிபுரிந்து கொண்டிருந்தவர்கள்.குறிப்பாக தென்மாவட்டத்தை சேர்த்தவர்கள். நான் போன வேலையை மறந்து விட்டு அந்த ஓங்குதாங்கான உடல்வாகை ரசித்துக் கொண்டு அந்த புஜபலசாலிகளை சிநேகம் பிடித்து பேசிக் கொண்டிருக்க அந்த கருத்த உடல் இளைஞர்களின் மனம் சுத்த வெள்ளையாக இருந்தது. வெறும் அம்பாக உள்ளே வந்து வரிசையில் நின்று கொண்டிருப்பதை உணர்ந்து கொண்டேன். அத்தனை பேர்களும் கடந்த அறுபது நாட்களாக ஒவ்வொரு சாயப்பட்டறைகளின் உள்ளே இருக்கும் உணவகங்களில் மூன்று வேளையும் சாப்பிட்டுக் கொண்டு கிரிக்கெட் மற்றும் கிராமத்து விளையாட்டுக்களை பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பவர்கள்.

பலசமயம் வீடியோ பார்த்து காலம் கடத்திக் கொண்டிருப்பவர்கள்.  

'ஏனப்பா ஊருக்கு போனாலாவது விவசாயத்தை பார்க்கலாமே'? என்றேன்.

'விவசாயம் பார்க்க நிலம் இருந்தாத்தானே போகமுடியும்?' என்று திருப்பிக் கேட்டு சிரித்தனர்.

பெரும்பாலானவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேர்களுமே திருப்பூருக்குள் பல்வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டிருப்பதை அவர்களின் பேச்சின் மூலம் புரிந்து கொண்டேன்.


என் முறை வந்த உள்ளே நுழைந்து பெற்ற வேட்பு மனு விண்ணப்ப படிவத்தை பெற்று கையெழுத்து போட்டு நிமிர்ந்த போது சுவற்றில் மாட்டியிருந்த காந்தி படம் என்னைப் பார்த்து சிரித்தது. அந்த விண்ணப்ப படிவத்தை முழுமையாகக் கூட படித்துப் பார்க்காமல் ஒப்படைக்க வேண்டிய நபர்களிடம் ஒப்படைத்து விட்டு நான் போக வேண்டிய வங்கிக்கு பறந்து விட்டேன்.

22.03.2011 காலை

மறுபடியும் என்னை துரத்திக் கொண்டிருந்தார்கள். ஏதோ விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்ற நினைப்புடன் நண்பர் வரவழைத்த அலுவலகத்திற்குள் நுழைந்த போது தான் இந்த திட்டத்தின் முழு வீர்யமும்  அப்போது தான் எனக்குப் புரிந்தது.  வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அந்த குளிர்சாதன குறுகிய அறைக்குள் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

கூட்டத்தின் வியர்வை நாற்றம் நாசியைத்தாக்க அவசரமாக எனக்கான விண்ணப்ப படிவத்தை நிரப்பி கொடுத்து விட்டு வெளியே வந்து போது நண்பரிடம் கேட்டேன்.

'இதற்கு பின்னால் யார் யார் இருக்கிறார்கள்?' என்றேன்.

'நாளை ஒரு அலுவலகத்திற்கு வருவீர்கள்? அப்போது புரியும்' என்றார்.

அவர் குழுவில் இருந்த மற்ற சாயப்பட்டறை உயர்பதவி மக்களும் சில முதலாளிகளும் என்னைப் பார்த்து 'சாயப்பட்டறை குறித்து வெறுமனே எழுதினால் மட்டும் போதாது?' என்றனர்?

குழப்பத்துடன் நகர்ந்து வீட்டுக்கு வந்த போது வீட்டில் உள்ள நிதி மந்திரி இது குறித்து செய்தி தாளில் உள்ள விளம்பரங்களையும் மற்ற தொகுப்பு விபரங்களையும் சேகரித்து வைத்திருந்தவர் என் கையில் கொடுத்தார்  அப்போது தான் அந்த வார்த்தையை முதன் முதலாக படித்தேன்.

'தொழில் பாதுகாப்பு குழு' என்ற பெயரை வைத்து ஒரு விளம்பரம் வந்திருந்தது.

23.03.2011 காலை

அடிப்படை வேலைகள் கெட்டுப் போய்விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு அவசரமாக தாராபுரம் சாலையில் உள்ள அந்த அலுவலகத்தை கண்டு பிடித்து அந்த மொட்டை மாடிக்கு வந்த போது ஒரு ஈ காக்காயை கூட காணவில்லை.  இந்து முண்ணனிக்கு இப்படி ஒரு காரியாலயம் இருப்பதையே அப்போது தான் உணர்ந்து கொண்டேன்.


நண்பர்கள் அவசரப்பட்டு போய்விடாதீர்கள். வந்து கொண்டேயிருக்கிறோம் என்றபடி என்னை அங்கேயே அமர வைத்தனர்.  காரியாலயத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தவர் என் விண்ணப்பபடிவத்தை நிரப்ப சொல்லிக் கொடுத்தபடி நிரப்பி முடித்த போது நண்பர்களான பஞ்ச பண்டவர்கள் வந்து இறங்கினர். அப்போது கூட எனக்கு முழுமையாக இது குறித்து நம்பிக்கை வரவில்லை.

காரணம் திருப்பூருக்குள் இருக்கும் அத்தனை சங்க நிகழ்வுகளையும், உள்ளேயிருக்கும் ஒவ்வொரு விசயங்களையும் தினந்தோறும் உள்வாங்கிக் கொண்டிருப்பதால் ஏதோவொரு கோமாளி வேஷம் போடுவது போல் இருந்தது. நண்பர்கள் வந்து சேர்ந்தனர். சற்று நேரத்தில் அவர்களின் விண்ணப்ப படிவங்களும் பூர்த்தி செய்யப்பட்டது.

'இதே அலுவலகத்திற்கு மீண்டும் இன்று இரவு வந்து விடுங்க' என்றனர்.

ஏன்? என்று கேட்ட போது உங்களுக்கு பல விசயங்கள் புரியும்! என்று நண்பர்கள் மையமாக புன்னகைத்தனர்.

23.03.2011 இரவு

அவசர வேலைகள் ஏதுமில்லாமல் அமைதியாக அந்த காரியலாயத்திற்குள் நுழைந்த போது முதல் முறையாக அரசியல் கட்சிகள் தங்கள் செயல்பாடுகளை எவ்விதம் செயல்படுத்துகிறார்கள் என்பதை அங்கு நடந்த பல நிகழ்வுகள் எனக்கு உணர்த்தியது. திடீரென்று உருவான மின்தடை பொருட்டாய் இல்லாமல் மினி ஜெனரேட்டர் கூடியிருந்த கூட்டத்தினரின் உரையாடல்களை நடத்திச் செல்ல உதவிபுரிந்து கொண்டிருந்தது.  ஓரு ஓரமாய் இருந்த டீ கேன் மூலம் தொடர்ந்து டீ கேட்பவர்களுக்கெல்லாம் விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது தான் முதல் முறையாக இதற்கு பின்னால் உள்ள அத்தனை முகங்களையும், முதலாளிகளையும் பார்த்தேன்.


இது போன்றதொரு திட்டத்தை வரைவு செய்தவர்களும்,முன்னிலை படுத்தவேண்டும் என்று உருவாக்கியவர்கள் அருள்புரம் பொதுசுத்திகரிப்பு சங்கத்தைச் சேர்ந்தவர்கள். அந்த சங்கத்தைச் சார்ந்த சாயப்பட்டறை முதலாளிகள் மற்றும் அறிமுகமில்லாத பலரும் அங்கே திட்ட ஏற்பாடுகள் குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.

காரணம் மறுநாள் வேட்புமனுத்தாக்கல் செய்ய வேண்டிய நாள்.

ஒவ்வொரு வேட்பாளருக்கும் டெபாஸிட் தொகை கட்டத் தேவைப்படும் நிதி ஆதாரம் குறித்த உரையாடல் நடந்தேறிக் கொண்டிருந்தது. குழப்பங்களும். நம்பிக்கையின்மையுமாய் அந்த கூட்டம் என் பார்வையில் தெரிந்தது.

பொறுமையிழந்து உட்கார்ந்திருந்த போது என்னிடம் நண்பர்கள் 'நாளை காலை இங்கேயே வந்து.விடுங்க' என்றனர்.

'இவர்கள் ஓடத்தை கரையில் சேர்க்க மாட்டார்கள். தவறான பாதையில் போய்க் கொண்டிருக்கிறோம்' என்றேன்.

நண்பர்கள் மறுத்துப் பேசி என்னை சம்மதிக்க வைத்தனர்.

24.03.2011  காலை

என் வேட்புமனுவுக்கான விண்ணப்பபடிவத்தில் பரிந்துரை செய்ய வேண்டிய பத்துப் பேர்கள் என்ற பகுதிமட்டும் நிரப்பப்படாமல் இருந்தது. காலையில் அது குறித்து தெரிவிக்க அதற்கான வேலைகள் நடந்தது. அப்போது வந்த அலைபேசியில் வந்த அழைப்பை பேசுவதற்காக சம்மந்தப்பட்டவரிடம் என் விண்ணப்பபடிவத்தை ஒப்படைத்து விட்டு நகர்ந்து சென்று பேசிக் கொண்டிருந்தேன்.

ஆனால் அப்போது தான் பகவான் என் விண்ணப்ப படிவத்தில் வந்து அமர்ந்ததை கவனிக்காமல் பூர்த்தி செய்யப்பட்ட என் படிவத்தை எடுத்துக் கொண்டு அவர்களிடம் சொல்லிவிட்டு வெளியே வந்து விட்டேன். நேற்று இரவு நிதி ஆதாரம் குறித்து வாக்களித்த எந்த பெரிய தலைகளும் வரவில்லை. அத்தனை பேர்களும் இரவு நடந்த ஏதோவொன்றினால் பின்வாங்கி போயிருப்பதை உணர்ந்து கொண்டேன்.

நண்பர்கள் அவர்களுக்கு மற்ற வேலைகள் இருந்த காரணத்தால் அன்று பகல் பொழுதில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் என் வேட்பு மனுவை கொண்டு போய் சேர்த்தேன். கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளும் வெளியே இருந்தது. என் விண்ணப்பபடிவத்திற்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் எண் கிடைத்த நேரம் பிற்பகல் 3.10. ஆனால் உள்ளே நுழைந்து முறைப்படி ஒப்படைத்த நேரம் மாலை 6.45.  ஆனால் இதற்கிடையே அலுவலக வாசலில் இருந்த மத்திய மாநில உளவுத்துறையினர், மீடியா மக்கள், தனிப்பட்ட ஆர்வலர்கள் என்று ஒவ்வொரு வேட்பாளர்களின் பின்புலம் முதல் ஜாதி வரைக்கும் கேட்டு குறித்து எவருக்கோ கடத்திக் கொண்டிருந்தனர்.  கவனிப்பதற்கு நிறைய விசயங்கள் இருந்தது.  கண்களுக்குள் பசி என்ற பூச்சி மட்டும் பறந்து கொண்டேயிருக்க காணும் கட்சிகள் எதுவும் மனதிற்குள் பதியாமலேயிருந்து.


கோட்டாட்சியர் அலுவலகம் முழுக்க ஏகப்பட்ட காவல்துறை கெடுபிடிகளில் வெளியே எங்கே செல்ல முடியாமல் வயிறு காய வெறுப்பும் சோகமும் எதிரே உள்ள சிறைச்சாலையை உற்றுப் பார்த்துக் கொண்டே வீட்டுக்கு வந்த போது மண்டைக்குள் கிர் என்ற சப்தம் கேட்ட போதிலும் மனதிற்குள் ஒரு பட்டாம்பூச்சி பறந்து கொண்டிருப்பதை உணர முடிந்தது. நேரங்கெட்டு சாப்பிட்ட போதிலும் ஏதோவொரு இனம் புரியாத சந்தோஷ உணர்வு. குறிப்பிட்ட நண்பர்களுக்கு இது குறித்து தெரிவித்தேன்.

25.06.2011 காலை.

இப்போது தான் இந்த 'தொழில் பாதுகாப்பு குழு'வுக்கென்று நியமிக்கப்பட்ட பெண்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ளத் தொடங்கினர்.  ஏற்கனவே வேட்பாளர் விண்ணப்ப படிவத்துடன் கொடுக்கப்பட்ட பேங்க் ஸ்டேட்மெண்ட் மட்டும் போதாது அதற்கான பாஸ்புக் வேண்டும் என்ற கெடுபிடித்தனம் உருவாகியுள்ளதை தெரிவித்தனர். காரணம் ஒவ்வொரு நாளும் சுயேட்சைகளின் எண்ணிக்கை அதிகமாக ஒவ்வொரு சட்டதிட்டமும் மாறிக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.  வங்கிக்குச் சென்றால் பாஸ்புக் கைவசமில்லை என்ற பதிலை கேட்ட போதிலும் பொறுமையாக அங்குள்ள அதிகாரிக்கு புரியவைத்து, அவர்களிடம் இருந்த இரண்டு பாஸ்புக்கில் ஒன்றை பெற்று என் புகைப்படத்தை ஓட்டி ஒப்படைத்துவிட்டு வெளியே வந்த போது அடுத்த அழைப்பு அதே பெண்ணிடமிருந்து வந்தது.

'சொத்து குறித்த கிராம நிர்வாக அதிகாரி சான்றிதழ்களையும் கொண்டு போய்  கொடுத்து விடுங்க' என்றார்.

கிராம நிர்வாக அதிகாரியின் அலுவலகத்திற்கு முதன் முறையாக நான் சென்றபோது அங்கே எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.. என்னுடன் பத்து வருடங்களுக்கு முன் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தவர் கிராம நிர்வாக அதிகாரியாக இருக்க பிரச்சனை முடிவுக்கு வந்தது. அந்த சான்றிதழ்களையும் கொண்டு போய் ஒப்படைத்துவிட்டு வீட்டில் வந்து நிதி மந்திரியும் சொன்ன போது சப்தம் போட்டு சிரித்தார்.


'நாளைக்கு தான் பஞ்சாயத்து ஆரம்பிக்கப் போகின்றது' என்றார்.

ஏன்? என்று கேட்ட போது திமுகவின் முன்னாள் அமைச்சர் சுப்புலெட்சுமி ஜெகதீசன், அதிமுக பொன்னையன் பேசிக் கொண்டிருப்பதையும் பத்திரிக்கையில் வந்த செய்திகளை சுட்டிக் காட்டி பேசினார். இதற்கிடையே சாய்ப்பட்டறை சங்கத்தின் பெயர் மாற்றம், பிரிந்த சாயப்பட்டறைகளின் லாவணிக் கச்சேரி, எதிர் அறிக்கை என்று ஒவ்வொரு பத்திரிக்கையும் ஒவ்வொரு விதமாக எடுத்துக் கூறிக் கொண்டிருந்தது.

இந்து முண்ணனி காரியாலயத்தில் நான் இருந்த நேரத்தில் இந்த தொழில் பாதுகாப்பு குழுவுக்கு ஒருங்கிருணைப்பாளராக இருந்தவருக்கும், அருகே இருந்த மற்றொரு முக்கிய பிரமுகருக்கும் வந்த அலைபேசி உரையாடல்களையும், மிரட்டல்களையும்,வாக்குவாதங்களையும்  கெஞ்சல்களையும், அழுத்தங்களையும் கவனித்தவனுக்கு இந்த செய்திகள் பெரிதாக தெரியவில்லை.  இந்த இடத்தில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்து முண்ணணி அமைப்பு எந்த தேர்தலிலும் போட்டியிடுவதில்லை. ஆனால் இங்கே நடக்கும் அத்தனை வெகுஜன போராட்டங்களுக்கும் முன்னிலையில் ஆதரவு கொடுப்பவர்கள் இவர்களே.  ஆனால் இவர்களின் செயல்பாடுகளை முதல் வரிசையில் நின்று எதிர்ப்பவர்களே சாயப்பட்டறை முதலாளிகள் தான். காரணம் பல விதமான பயங்கள்.

26.03.2011

ஒவ்வொரு ஊடகமும் போட்டி போட்டுக் கொண்டு அலறத் தொடங்கியது. காரணம் திங்கள் கிழமை (28) முதல் போட்டியிடும் அணைத்து சுயேட்சைகளும் வாபஸ் வாங்குகிறார்கள் என்ற செய்திகளை படித்து / கேட்டுக் கொண்டே வந்த போதிலும் அது போன்று எந்த முடிவும் இங்கே இல்லாமல் தான் இருந்தது. மனுத்தாக்கல் செய்த ஒவ்வொரு பாதிக்கப்பட்டவர்களும் பரஸ்பரம் விசாரிக்கத் தொடங்கினர். மேல்மட்ட நிகழ்வுகளையும், உரையாடல்களையும் உணர்ந்து கொள்ள முடியாமல் தவித்தனர். நான் உண்மைகளுக்கும் ஊடகங்களுக்கும் உண்டான தர்மத்தை அப்போது தான் முழுமையாக உணர்ந்து கொண்டேன்.

வேட்பு மனுக்கான டெபாஸிட் தொகையை ஏற்கனவே பேசியபடி எந்த சங்கமும் ஏற்க முன்வராத காரணத்தால் தெரிந்தவர், அறிந்தவர், பழகியவர், நட்பு என்கிற ரீதியில் அவரவர்களும் பகிரிந்து கொண்டு கட்டத் தொடங்கினர். பல சாயப்பட்டறை முதலாளிகளே ஏற்றுக் கொண்டுவிட வேட்பு மனுத்தாக்கலின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த இடத்தில் மற்றொரு ஆச்சரியம் இந்த குழுவுக்கு வழிகாட்டியாக இருக்கும் தணிக்கையாளர் முதல் வழ்க்குரைஞர் வரைக்கும் களமிறக்க தயராய் இருந்தனர்.

வாபஸ் குறித்து எந்த முயற்சிகள் நடக்காத போதும் இது குறித்து வந்து கொண்டிருந்த செய்திகளை கவனித்துக் கொண்டே வந்த எனக்கு கலைஞர் தொலைக்காட்சி இந்த நிகழ்வுக்கு காட்டிய அக்கறையும், சன் தொலைக்காட்சி பிட்டு போல சொல்லிக் கொண்டு வர ஏதோவொன்று நடக்கப் போகின்றது என்பதை உணர்ந்து கொண்டு அடுத்த செய்திக்காக காத்திருந்தேன்.

காரணம் இரவு நடந்த மேல்மட்ட உரையாடல்கள் அழுத்தங்கள் ஒவ்வொன்றாக மறுநாள் வெளிவரத் தொடங்கியது. .

27.03.2011 

நண்பர்கள் ஒவ்வொருவராக அழைத்து வாபஸ் வாங்குவது குறித்து பேசத் தொடங்கினர்.  காரணம் நாளை (28) மனு ஆய்வு தினம்.

நிராகரிப்பட்டவை, சந்தேகம் உள்ளவை, வாபஸ் வாங்க விரும்புவர்கள் போன்ற அத்தனை பஞ்சாயத்துகளும் நடக்கும்.

எனக்கு கொடுக்கப்பட்ட தேர்தல் ஆணைய தாளில் ஒரு பக்கத்தில் இதற்கான அழைப்பு இருந்தது.  எவராவது என்னிடம் பேசத் தொடங்க வார்த்தைகள் வித்யாசமாக வந்து விடுமோ என்று யோசித்துக் கொண்டு அந்த கூட்டத்திற்கு போகாமல் இருந்து விடலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் வாபஸ் வாங்கிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அலைபேசியில் அழைத்த நண்பர்கள் குழுவிடம் மென்மையாக இதை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தே வீட்டில் நிதி மந்திரி சப்தம் போட்டு சிரித்துக் கொண்டிருந்தார்.

28.03.2011  

காலை ஒன்பது மணிக்கு முதல் அழைப்பு வந்தது. 

'தொழில் பாதுகாப்பு குழுவிலிருந்து பேசுகின்றேன். உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு வந்து விடுங்க' என்றார்.

என்ன காரணம் என்று கேட்ட போது அந்த பெண்ணின் குரல் முழுமையற்று கிளிப்பிள்ளை போல திரும்ப திரும்ப ஒரே வாசகத்தை பேச `ஃபோனை வைத்து விடும்மா என்றேன்.

அடுத்த பத்து நிமிடத்தில் அதே எண்ணில் இருந்து மற்றொரு பெண் பேசிய போது பெண்களிடம் கெட்ட வார்த்தைகள் பேசுவது எனக்குப் பிடிக்காது.  வைத்து விடும்மா என்றேன்.

தகவல்கள் மேலே செல்ல ஒவ்வொருவராக அழைக்கத் தொடங்கினர். நண்பர்கள் குழுவிற்கு ஒவ்வொரு அழுத்தமும் வந்து சேர அலைபேசியின் உயிரைப் போக்கி விட்டு அமைதியாக அன்றைய பகல் தூக்கத்தை நீண்ட நாளைக்குப் பிறகு ரசித்து தூங்கிப் போனேன். இடையில் எழுந்து அலைபேசிக்கு உயிருட்டிய போது வந்து விழுந்த கால் அலர்ட் என்று குறுஞ்செய்திகள் வந்து விழுந்து கொண்டேயிருந்தது. அத்தனையும் புதிய எண்கள்.  ஐம்பதுக்கும் குறையாமல் வந்து விழுந்து கொண்டேயிருந்தது. நண்பர்களின் எண்களும் இருக்க மீண்டும் அலைபேசியின் உயிரைப் போகிக்கி விட்டு அமைதி காத்தேன்.

29.03.2011

மீண்டும் காலை ஒன்பது மணிக்கு அலைபேசியை உயிரூட்டிய போது மறுபடியும் பொல பொலவென்று குறுஞ்செய்திகளில் அலைத்த எண்களின் விபரங்கள் வந்து விழுந்து கொண்டேயிருந்தது.

மனம் கேட்காமல் நண்பரை அழைத்த போது கோபப்படாமல் சப்தம் போட்டு சிரிக்கத் தொடங்கினர்.  

'நம்முடைய ஐந்து பேரில் உங்கள் விண்ணப்ப படிவம் மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. உங்களைப் போலவே எழுபது பேர்களின் விண்ணப்ப  படிவங்களையும் நிராகரிப்பு என்ற நிலையில் கொண்டு வந்து விட்டார்கள். எங்கள் முதலாளி சொன்னபடி நாங்கள் நான்கு பேர்களும் வாபஸ் வாங்கி விட்டோம்.  நீங்க தான் விழுந்து விழுந்து எல்லா ஆவணங்களையும் சரிபார்த்து ரொம்ப அக்கறையாக கொண்டு போய்ச் சேர்த்தீங்க.  நாங்களாவது பேங்க ஸ்டேமெண்ட் மட்டும் தான் வைத்தோம்.  நீங்க மெனக்கெட்டு பாஸ்புக் கூட வைத்தீங்க. யாரோ ரொப்பிக் கொடுத்தாங்க.  கையெழுத்து மட்டும் தான் நாங்க போட்டோம்'என்று அவர் சிரித்த சிரிப்பை ஸ்பீக்கரின் வழியாக கேட்டுக் கொண்டிருந்தேன்.

இப்போது என் பக்கத்தில் வீட்டு நிதி மந்திரியும் இந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தார்.   அவர் சிரித்து முடித்ததும் இவர் சிரிக்கத் தொடங்கினர்.

29.03.2011

அவசரமில்லாது மாலையில் கோட்டாட்சியர் அலுவகத்தில் நுழைந்த போது ஒரு ஈ காக்காய் கூட இல்லை.  அப்போது அங்கு அறிமுகமான ஒரு உயர் அதிகாரி தொடர்பு கிடைத்தது. பழகிய சில நிமிடங்களில் நண்பராக பேசத் தொடங்கினார். அந்த அறையில் வேறு யாருமில்லை. தனிப்பட்ட முறையில் முக்கால் மணி நேரம் என்னுடன் பேசிய போது தான் பல விசயங்கள் புரிந்தது.

இங்கும் அந்த அதிகாரியின் இருக்கைக்கு பின்புறம் அதே காந்தி தாத்தா புகைப்படம். வேறுபக்கம் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.

காந்தி தாத்தா சிரிக்கும் சிரிப்பின் அர்த்தம் இப்போது எனக்கு புரிந்தது.

தேர்தல் ஆணையத்திற்கு நன்றி.

பாதிக்கு மேற்பட்டவர்கள் எவரும் வாபஸ் வாங்கத் தயாராக இல்லை என்பதே உண்மை. அவர்களை அழைத்து சமாதானப்படுத்த அலைபேசி வழியாக அலைத்தவர்களின் காதுகளில் ரத்தம் வழியும் அளவிற்கு பேசிய செந்தமிழ் வார்த்தைகளும், நிறைய உண்டு. தொழில் பாதுகாப்பு குழு உருவாக்கிய வேகம் கலையத் தொடங்க ஒவ்வொருவருக்குள்ளும் இருந்த ஆதங்கம் வெளியேறத் தொடங்கியது. திசைதெரியாத பறவை போல மாறத் தொடங்கினர். பத்திரிக்கைகளும் போட்டி போட்டுக் கொண்டு வாபஸ் வாங்குபவர்களின் புகைப்படம் என்று போட்டுத் தாக்க படிப்படியாக வேறு வழி தெரியாமல் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு வரத் தொடங்கினர்.

இதற்கு பின்னால் உள்ள எதிர்மறை நியாயங்களை சமயம் கிடைக்கும் போது எழுதுகின்றேன்.
.

விதைகள் உறங்குவதில்லை. முளைப்பதற்கான காலங்கள் மட்டும் வேறுபடும்.

நன்றி தமிழ்மீடியா, முன்னெடுக்க தயாராகயிருந்த வலையுலக தோழமை களுக்கும், மற்றும் சின்னம் வந்துவுடன் சொல்லுங்க. மற்ற திட்டமிடுதல்களை பேசுவோம் என்ற உள்ளூர் தோழனுக்கும்.

Wednesday, March 30, 2011

இந்திய அரசியல் அமைப்பில் சொல்லப்பட்டவாறு .................

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களாட்சி நடந்து கொண்டிருக்கும் இந்தியாவில் நாமும் வேட்பாளாராக மாற சென்ற பதிவில் சொன்னபடி வேட்புமனுவை முறையாக பூர்த்தி செய்து அத்துடன் வங்கி கணக்கு, சொத்து குறித்த சான்றிதழ்கள், வழக்குரைஞர் சான்றிதழ்கள், கிராம நிர்வாக அதிகாரியின் சான்றிதழ்களுடன் ஒவ்வொரு பகுதியையும் சரியாக பூர்த்தி செய்து உள்ளோமோ என்று கவனித்து தேவைப்படும் அத்தனை இடங்களிலும் நாம் கையொப்பமிட்டு தைரியமாக சிங்க நடை போட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவகத்திற்கு சென்றாலே ஒரு தனிப்பட்ட கம்பீரம் உங்களுக்கு வந்து விடுவதை உணரக்கூடும்.  


காரணம் இந்தியாவில் எத்தனை குறைபாடுகள் இருந்தாலும் இது போன்ற சமயத்தில் நாம் எத்தனை சுதந்திரமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.  நமக்காக எத்தனை வாய்ப்புகள் உள்ளது என்பதை முழுமையாக உணர முடியும்.  

அந்தந்த வருவாய் கோட்டாட்சியாளர் தான் தேர்தல் நடத்தும் அதிகாரியாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர். 

இவர் அலுவலகத்திற்குள் நுழைவதற்கு முன்பு வாசலில் அமர்ந்திருக்கும் நபர் நம்மை வரவேற்பார்.  வரிசையில் நின்று அவரிடம் நாம் பூர்த்தி செய்து வைத்துள்ள மொத்த விண்ணப்ப படிவங்களையும் கொடுத்தால் நம்முடைய பெயர், முகவரி, வாக்காளர் அடையாள அட்டையின் எண் போன்றவற்றை குறிப்பிட்டு ஒரு துண்டுச்சீட்டை நம்மிடம் கொடுப்பார். அதில் வரிசை எண் போடப்பட்டிருக்கும்.

அந்த எண் சொல்லி அழைக்கும் போது அலுவலகத்தின் அடுத்த பகுதிக்குள் செல்ல அனுமதி கிடைக்கும். அங்கே இருவர் அமர்ந்திருப்பார்கள் அவர்கள் கையில் நான்கு பக்கம் உள்ள விண்ணப்ப படிவம் இருக்கும்.  இதுவரையிலும் நாம் கையாண்ட எந்த படிவத்திலும் ஆங்கிலம் என்பது மருந்துக்குக்கூட இருக்காது.

இப்போது வழங்கப்படும் படிவத்தில் ஆங்கிலப் படிவமும் இருக்கும். நம் பெயரை முகவரியை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுப்பதுடன் மற்ற சம்பிரதாய விசயங்களையும் கொடுக்கப்பட்ட மற்ற படிவங்களிலும் பூர்த்தி செய்ய வேண்டும்.

இனிமேல் தான் உங்களுக்கு ஒரு வித்யாச அனுபவம் கிடைக்கும். 

நாம் சராசரி, சாமான்யன் என்று கருதிக் கொண்டிருப்பவர்களுக்கு உள்ள தேர்தல் அதிகாரி (கோட்டாட்சியர்) இருக்கும் அறைக்குள் சென்றதும் கிடைக்கும் ராஜமரியாதை ஆச்சரியப்படத்தக்கது. 

அந்த அறையில் கோட்டாட்சியர் நடுநாயகமாக அமர்ந்திருக்க அவரின் பக்கவாட்டில் ஐந்து அலுவலர்கள் (இரண்டு பெண் அலுவலர்) அமர்ந்து இருப்பார்கள்.  முதல் நபர் நம்முடைய துண்டுச்சீட்டை பெற்றுக் கொண்டு அடுத்தவரிடம் நம்முடைய விண்ணப்ப படிவம் மற்றும் அதனைச் சார்ந்த மொத்த சான்றிதழ்களையும் வழங்குகிறார். இவர் ஒவ்வொன்றையும் சரிபார்த்து விட்டு அடுத்தவரிடம் கொடுக்க அவர் நாம் சொல்ல வேண்டிய பிரமாண பத்திரத்தையும் கொடுத்து கோட்டாட்சியரிடம் கையெழுத்து வாங்க அனுப்புகிறார். 

நம்மிடம் வாங்கிய அந்த விண்ணப்ப படிவத்தில் கையெழுத்து போடுவதற்கு முன்பு பக்கவாட்டில் நிற்கும் புகைப்படக்காரர் கோட்டாட்சியருடன் சேர்த்து நம்மை ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.  நாம் உள்ளே நுழைந்தது முதல் இறுதியாக பிரமாண பத்திரம் வாசிக்கும் வரையிலும் உள்ளேயிருக்கும் வீடியோகிராபர் மொத்த நிகழ்வுகளையும் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.  குறிப்பாக பிரமாண பத்திரம் வாசிக்கும் போது நம்மை மட்டும் தனியாக அந்த குறிப்பிட்ட நிகழ்வுகளை படமாக்கிக் கொள்கிறார்.


இப்போது பக்கவாட்டில் கடைசியாக இருக்கும் அந்த அலுவலரிடம் மீண்டும் மொத்த விண்ணப்பபடிவங்களையும் கொடுத்து விட அவர் ஒரு பிரமாண பத்திரத்தை கொடுத்து எழுந்து நின்று வாசிக்கச் சொல்கிறார். அதன் சுருக்கம் இது.

.................................................. ......................................................இந்த தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவதற்குரிய வேட்பாளராகிய ........................................................ தேதி............................................. அன்று ........................................................ மணிக்கு இந்திய அரசியமைப்பில் சொல்லப்பட்டுளளவாறு ஆண்டவன்/உளமாற மீது சூளுரைத்து உறுதி கூறுகின்றேன்.

இறுதியாக கையொப்பமிடும் போது புகைப்படம் எடுக்கப்படுகின்றது.

விடைபெறும் போது உறுதி மொழி எடுத்துக் கொண்டதற்கான சான்று, நம்முடைய வேட்பு மனு எப்போது பரிந்துரைக்கு எடுத்துக் கொள்ளபடும் என்பதற்கான விபரங்கள் அடங்கிய படிவம், நாம் வேட்பு மனுக்காக செலுத்தப்பட்ட தொகையான ரூபாய் பத்தாயிரத்திற்கான ரசீது (இது தான் டெபாஸிட் தொகை என்றழைக்கப்படுகின்றது. கடந்த தேர்தல்களில் சுயேச்சைகள் அதிகளவில் போட்டியிட்ட காரணத்தால் தான் பத்தாயிரம் என்கிற அளவிற்கு இந்த தொகை உயர்த்தப்பட்டுள்ளது)  பத்திரிக்கையில் டெபாஸிட் காலி என்று வார்த்தை வருமே?  ஜெயித்த வேட்பாளர்கள் வாங்கிய வாக்கு சதவிகிதத்தில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளபடி குறிப்பிட்ட சதவிகிதம் வாக்கு வாங்காத பட்சத்தில் வேட்பாளர் கட்டிய பணம் திருப்பி தரப்படமாட்டது.

இவற்றுடன் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் விதிமுறைகள் அடங்கிய தாள்கள், தேர்தல் முடிந்தவுடன் நாம் ஒப்படைக்க வேண்டிய கண்க்கு குறித்த விபரங்களுக்கான வழிகாட்டிகள் அடங்கிய காகித தாள்கள் வழங்கப்படுகின்றது. தேர்தல் நடைமுறைகள் குறித்து ஏறக்குறைய 30 பக்கங்கள் உள்ள ஒரு கையேட்டை பெற்றுக் கொண்டு வந்து விட் வேண்டும். 

தேர்தல் அதிகாரி குறிப்பிடப்பட்டுள்ள நாளில் சென்று நமக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தை தெரிந்து கொள்ளலாம். இந்த சடங்கு நடைமுறையில் செலவழிக்கும் தொகை ரூபாய் பத்தாயிரம்.  மொத்தத்தில் தமிழ்நாடு சட்டமன்ற வேட்பாளராக ரூபாய் 11500 போதுமானது.   இதற்கு பிறகு தான் அரசியல் கட்சிகள் உருவாக்கியுள்ள 'திருமங்கலம் சூத்திரம்' போன்ற வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை என்ற பஞ்சாயத்து வருகின்றது. ஆனால் இப்போது நடக்கப் போகின்ற தேர்தலில் அதற்கும் வாய்ப்பு குறைவு. கண்ணில் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் நம் தலைவர்கள் எத்தனை பார்த்திருப்பார்கள்? 

ஆனால் மொத்தத்திலும் நமக்கு ஒரே ஒரு பிரச்சனையுண்டு. 


தில்லாலங்கடி மூலம் நம்முடைய வேட்புமனு நிராகரிப்பு ஆகாமல் இருக்க வேண்டும். அது போன்ற ஒரு அனுபவத்தை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கின்றேன்.

Tuesday, March 29, 2011

நீங்களும் (சட்டமன்ற) வேட்பாளர்தான்?

ஒவ்வொரு தேர்தலின் போதும் வேட்பு மனுத்தாக்கல் குறித்த செய்திகளையும், அந்த வேட்பாளர்களின் புகைப்படங்களையும் பார்த்திருப்போம். குறிப்பிட்ட அந்த வேட்பாளர் சிலருக்கு நண்பராக இருக்கலாம். பலருக்கு பள்ளித் தோழராகவும் கூட இருக்கலாம். ஆனால் கட்சி சார்ந்த வேட்பாளர் என்றவுடன் அவர் வாழ்க்கையில் மாறும் காட்சிகள் ஆச்சரியம் அளிக்கக்கூடியதாக இருக்கும். இதைப் படிக்கும் நீங்க அதிக பட்சம் கிராம நிர்வாக அதிகாரி முதல் தாசில்தார் அலுவலகம் வரைக்கும் போய் நின்று ஏதோவொரு சான்றிதலுக்காக மட்டும் போய் வரிசையில் நின்று இருக்கக்கூடும்.

ஆனால் இது போன்ற அலுவலகங்கள் தான் நம் இந்தியாவில் நடக்கும் தேர்தலுக்கு முக்கிய பங்காற்றிக் கொண்டு இருக்கிறது. வருவாய் கோட்டாட்சியர் அதிகாரி தான் அந்தந்த தாலூகாவின் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இவருக்கு தேர்தல் ஆணையம் வழங்கும் அதிகாரம் என்பது ஆச்சரியத்தின் உச்சம். ஒரு வேட்பாளர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வது முதல் அதை இறுதியாக உறுதிப்படுத்துவது வரைக்கும் இங்கு தான் படிப்படியான ஒவ்வொரு நிகழ்வுகளும் நடக்கின்றது.  இந்த வருவாய் கோட்டாட்சியருக்கு பின்னால் ஒரு மிகப்பெரிய படைபட்டாளமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

இது தவிர ஏனைய மற்ற அரசாங்கத் துறைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அரசு ஊழியர்களையும் தேர்தலின் போது நமது அரசாங்கம் பயன்படுத்திக் கொள்கின்றது.

இவர்கள் விரும்பாதபோதும் கூட படாய்படுத்தி தேர்தல் வேளையில் பங்கெடுக்க வைத்து விடுகிறார்கள். மொத்தத்தில் மக்களுக்கு தேவைப்படும் சார்பாளர்களை தேர்ந்தெடுக்க ஒரு மிகப் பெரிய அரசு எந்திரம் தேர்தல் முடிவு அறிவிக்கும் வரையிலும் இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு தேர்தலின் முடிவு வந்த போதிலும் கூட அத்தனை ஆவணங்களையும் பாதுகாக்க வேண்டியதாகவும் இருப்பதால் இதன் முக்கியத்துவம் ஆச்சரியப்படக்கூடியது.

இப்போது வலைபதிவுகளில் எழுதிக்கொண்டிருப்பவர்களின் மனதில் எதிர்காலத்தில் கட்சி சார்ந்து அல்லது சார்பில்லாமல் 2016 அன்று நடக்கப்போகும் (அல்லது அமையப்போகும் கூத்து அரசாங்கம் கவிழ்ந்து இடையில் உருவாகப்போகும்) தேர்தலில் நீங்கள் பங்கெடுத்துக் கொள்ள விரும்பினால் இந்த கட்டுரை உங்களுக்கு பயன்படக்கூடும்.

உங்களுக்கு தேர்தலில் போட்டியிட ஆசையா? 

நீங்கள் வேட்பாளராக வேண்டுமென்றால் சில ஆவணங்கள் உங்கள் கைவசம் இருக்கிறதா என்பதை இப்போதே சோதித்துப் பார்த்துக் கொள்ளவும்.

வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை (ரேஷன் கார்டு), ஓட்டுநர் உரிமம், பள்ளியில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ், உங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அதிகாரியிடம் வாங்கியுள்ள சொத்து குறித்த சான்றிதழ், ஒரு வேளை உங்களுக்கு சொத்து இல்லாவிட்டாலும் கூட அதை குறிப்பிட்டு எழுதி வாங்கி வைத்திருக்க வேண்டும்.  உங்களுக்கு நிரந்தராக தொழில் இருந்தால் அது குறித்த தணிக்கையாளர் சான்றிதழ் மற்றும் வருமான வரி கட்டிய விபரங்கள் போன்றவை அவஸ்யம் தேவை.

இது தவிர தேர்தலுக்காகவென்று ஒரு புதிய வங்கி கணக்கு.  இது சேமிப்பு கணக்காகக்கூட இருக்கலாம். வங்கியிடம் கேட்டு நம்முடைய கணக்குக்கான அட்டையை வாங்கி வைத்திருக்க வேண்டும்.  கடைசியாக 20 ரூபாய் மதிப்புள்ள பத்திரத்தில் (நோட்டரி பப்ளிக்) வழக்குரைஞரிடம் உறுதி மொழி சான்றிதழ்..

தேர்தலுக்கான விண்ணப்ப படிவத்தை முதலில் பெற அந்தந்த தாலூகா அலுவலகத்தில் சிறப்பு பிரிவாக உருவாக்கப்பட்டிருக்கும் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் ஒரு விண்ணப்ப படிவத்தை இலவசமாக தருகிறார்கள். அதில் அனுப்புநர், பெறுநர் (தேர்தல் அதிகாரி) போன்ற சம்பிரதாய வாசகங்களுடன் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கும் விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். 

உங்கள் பெயர், அப்பா பெயர், தற்போது வசிக்கும் முகவரி, உங்கள் வாக்காளர் அடையாள அட்டையின் எண், பிரிக்கப்பட்ட தொகுதி என்றால் எந்த பிரிவில் வருகிறது? தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புத்தகத்தின்படி எந்த பக்கத்தில் உங்கள் பெயர் வருகின்றது போன்றவற்றை இந்த விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டு நீங்கள் கையொப்பமிட்டு உள்ளே கொடுக்க வேண்டும். உங்களிடம் வாக்களர் அடையாள அட்டை இருந்து அது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புத்தகத்தில் வராதபட்சத்தில் ஆசையை அடக்கிக் கொண்டு அடுத்த வேளையை பார்க்க போய்விடலாம்.

ஏனப்பா என் பெயர் இதில் வரவில்லை என்று உங்களால் கேட்க முடியாது.  காரணம் இதற்காகத்தான் பல வாய்புக்கள் வழங்கப்படுகின்றது.  அது போன்ற சமயத்தில் அடித்தல், திருத்தல், மற்ற மாற்றங்கள் குறித்து குறிப்பிட்ட அலுவலரிடம் தெரிவித்து முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக இருக்க வேண்டும்.

முதலில் தேர்தலுக்கான விண்ணப்ப படிவம் வாங்க உள்ளே நுழையும் போது மூன்று அலுவலர்கள் உங்களை வரவேற்கிறார்கள். ஒருவர் உங்கள் விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொண்டு ஒரு குறிப்பேட்டில் குறித்துக் கொண்டு அவர்கள் வைத்திருக்கும் ஆவணங்களை வைத்து சரி பார்த்து அடுத்தவரிடம் கொடுக்கிறார். அவர் நாம் கொடுத்துள்ள விபரங்களை நம்மிடம் கேட்டு உறுதிபடுத்திக் கொண்டு நம்மிடம் இருந்து பத்து ரூபாய் கேட்டு வாங்கிக் கொண்டு ரோஸ் கலர் விண்ணப்ப படிவத்தை தருகிறார். 

இது தான் வேட்பாளருக்கான விண்ணப்ப படிவம். 

மூன்றாவது நபர் நாம் கொடுத்த பத்து ரூபாய்க்கு உரிய ரசீதும், அவர் வைத்துள்ள குறிப்பேட்டில் நம்மைப் பற்றி விபரங்களையும் பெற்று எழுதிக் கொண்டு வழியனுப்பி வைக்கிறார்கள்.

முதல் கட்டம் முடிந்தது.

இந்த ரோஸ் கலர் விண்ணப்ப படிவமானது இந்திய தேர்தல் ஆணையத்தின் படிப்படியான கெடுபிடிகளால் சமீபகாலமாகத்தான் உருவாகியிருக்கும் போலிருக்கு.  ஏழு பக்கங்கள் இருக்கிறது.  முதல் வரியே 

தேர்தல் நடத்துவது குறித்த 1961 ஆம் ஆண்டு விதிகளின் 4 வது விதியைக் காண்க.  ( இதுக்கு அப்புறம் எவரும் இதில் கையை வைக்கலையோ?)

இதில் ஒவ்வொரு பகுதியாக பிரித்துள்ளார்கள்.

முதல் பகுதியில் நம்மைப்பற்றி விபரங்கள், முகவரி, வாக்காளர் அடையாள அட்டையின் எண், பிரிவு, பாகம் போன்ற விசயங்கள்.

இதில் தொடர்ச்சியாக மற்றொரு அதி முக்கியமான விசயம் ஒன்று உண்டு.  நம்மை பத்து பேர்கள் பரிந்துரை செய்ய வேண்டும்.  ஒவ்வொருவரின் பெயர், அவரின் வாக்காளர் அடையாள அட்டையின் எண், பாகம், பிரிவு அத்துடன் அவரின் கையொப்பம். 


இரண்டாவது பகுதியில் வேட்பாளர் வயது, நாம் விரும்பும் (மூன்று) சின்னங்களை கேட்டு அதில் குறிப்பிட வேண்டும்)

இந்த பிரிவின் கடைசியாக "தற்போது நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் நான் இரண்டுக்கும் மேற்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளிலிருந்து வேட்பாளராக நியமனம் செய்யப்படவில்லை என்று அவ்வாறு நியமனம் செய்யப்பட மாட்டேன என்றும் மேலும் உறுதியளிக்கின்றேன்" என்றும் முடிவு பெறுகின்றது.

அடுத்த பிரிவில் அற்புதமான பஞ்சாயத்து சமாச்சாரங்கள் நிரம்பி வழிகின்றது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டு, வழக்கு விபரங்கள், அதன் குற்றவியல் குறித்த விபரங்கள் என்று இரண்டு பக்கத்திற்கு விலாவாரியாக விவரிக்கப்பட்டுள்ளது.

கடைசி இரண்டு பக்கங்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிக்குரிய பக்கங்களாகும்..  
இந்த வேட்புமனுவை பரிசீலித்து கீழ்கண்டவாறு முடிவு செய்கின்றேன் என்று அவர் இறுதியாக கையொப்பமிட வேண்டும்.

ஏறக்குறைய ஏழு பக்கங்கள். ஒவ்வொரு பக்கத்தின் முன்பின் நிரப்பப்படும் இந்த விண்ணப்பபடிவத்தின் மூலமாகத்தான் நம்மை ஆட்சியப் போகும் ஏழரை பகவான்களை நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம்.  ஆனால் இத்துடன் நமக்கு வழக்குரைஞர் அளிக்கும் 20 ரூபாய் மதிப்புள்ள பத்திர சான்றிதழ் அதி முக்கியமானது. 

இந்த பத்திரம் 16 பக்கங்கள் வருகின்றது. 

இது முழுக்க முழுக்க நம்முடைய சொந்தக்கதை சோகக்கதையை நிரப்பியாக வேண்டும்.

பெயர், முகவரி, வாக்காளர் அடையாள அட்டை குறித்த விபரங்ளுடன், குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால், தண்டனை பெற்றிருந்தால், மனு நீதி மன்றத்தில் இருக்கும்பட்சத்தில், வாய்தாவாக இழுத்துக் கொண்டே இருந்தால்...  

விலாவாரியாக ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொன்றையும் சொல்லிக் கொண்டே செல்கிறது.  (கிட்னி மோசடியில் ஈடுபட்டு வழக்கு மன்றத்தில் இருப்பவரை தங்கபால் தேர்ந்தெடுத்துள்ள வேட்பாளர் குறித்து இப்போது உங்கள் நினைவுக்கு வந்து இருந்தால் நான் பொறுப்பல்ல) 

இத்துடன் நாம் வாங்கியுள்ள சொத்துக்களையும் குறிப்பிட வேண்டும். அசையும் சொத்து, அசையாச் சொத்து, நாம் வைத்திருக்கும் வாகனங்கள், அதன் மதிப்பு, துணைவியார் பணியில் இருந்தால் அவரின் வருமானம் குறித்த விபரங்கள், வீட்டில் உள்ள நகையின் இன்றைய மதிப்பு.........................

நாம் தான் கலைஞர்,ஜெயலலிதா போன்றோர்கள் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள அவர்களின் சொத்து மதிப்பை நாம் பத்திரிக்கைகளில் படித்துக் கொண்டு தானே இருக்கிறோம்(?)

நாம் குறிப்பிட்டுள்ள சொத்தின் அளவைப் பொறுத்து, வருமான வரி சான்றிதழ்கள், பான்கார்டு விபரங்கள், தணிக்கையாளர் சான்றிதழ் போன்றவற்றை தனியாக குறிப்பிட வேண்டும்.  இத்துடன் நாம் தேர்தல் செலவுக்கென்று புதிதாக ஒரு வங்கிக் கணக்கு அது குறித்த விபரங்கள்.

கையொப்பம் இட வேண்டிய அத்தனை இடங்களிலும் கவனமாக பார்த்து கையொப்பமிட்டு விட்டால் முதல் கட்ட தகுதி முடிவுக்கு வந்து விடுகின்றது.


விண்ணப்ப படிவத்திற்கு பத்து ரூபாய், மற்றபடி வழக்குரைஞருக்கு, ஒவ்வொன்றையும் நகல் எடுக்க, அலைச்சலுக்கு தேவைப்படும் பெட்ரோல், வங்கிக் கணக்கு தொடங்க ஆயிரம் ரூபாய் என்று இந்த முதல் பகுதியில் நமக்குத் தேவைப்படும் செலவீனம் மிக அதிகபட்சமாக 1500 ரூபாய்.

அடுத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைப்பதற்கான நடை முறைகள்........