Saturday, December 29, 2018

கவனிப்பது வேறு கவலைப்படுவது வேறு.

மகள்களில் தேர்வுத் தாளில் கையெழுத்துப் போட்டு விட்டு வரச் சென்ற போது மகள் ஒருவர் எடுத்த படம். 

எனக்கு அறிமுகம் ஆன ஆசிரியர்கள் மட்டுமல்ல? அறிமுகம் ஆகாத ஆசிரியர்களுக்கும் என்னைப் பற்றி நன்றாகவே தெரியும். இந்த முறை என்ன பிரச்சனையோ? என்று யோசிப்பார்கள். நான் சந்தித்த ஆசிரியர்களும், மகள்கள், ஏன் மனைவி கூட ஏன் பள்ளியில் யாரிடமும் நீங்கள் ஒன்றுமே பேசவில்லை? என்று திரும்பி வரும் போது அங்கலாய்த்துக் கொண்டே கேட்டார்கள். 

"இந்த உலகம் இனி கேள்விகளை கேட்க விரும்பாத மனிதர்களை விரும்புகின்றது. தொண்டர் என்றால் தலைவனை ஏற்றுக் கொள்ள வேண்டும். ரசிகன் என்றால் அவர் செய்வதெல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நம்ப வேண்டும்.  வாடிக்கையாளர் சேவை என்பது மறந்து போன வார்த்தை. வங்கி முதல் வாங்கும் பொருட்கள் வரைக்கும் அவரவருக்கான நியாயங்கள் அதற்கான எல்லாவிதமான உரிமைகளையும் அவர்களுக்கு வழங்குகின்றது. "

"ஒருவரின் தொடர்பு எல்லை என்பது அவர் தேவைகளுக்கு அடுத்தவர்கள் எந்த அளவுக்குப் பயன்படுகின்றார் என்பதனைப் பொறுத்தே அமைகின்றது. பயனில்லை என்றால் அவர் கலாவதியானவர் என்று அர்த்தம். மீண்டும் அவர் பலன் உள்ளவராக மாறும் போது தொடர்பு எல்லை புதுப்பிக்கப்படும். கொடுப்பவரும், வாங்குபவருக்கும் இடையே நடப்பது உறவு ரீதியான புரிதல் அல்ல. இது நவீன பண்டமாற்று முறை. இப்படித்தான் இப்போதைய உலகம் இயங்குகின்றது. அதையே விரும்புகின்றது. "

"நம் அனுபவங்கள் வாயிலாக மீண்டும் மீண்டும் அதனை நமக்கு உணர்த்திக் கொண்டேயிருந்தாலும் ஒரு கட்டத்தில் இதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் நம்மை நெட்டித்தள்ளிக் கொண்டேயிருக்கின்றது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். "

"இங்கு எந்தக்குறையையும் ஒருவர் மேல் மட்டுமே சுமத்த முடியாது. அந்தச் சங்கிலியில் அவர் ஒரு அங்கம். அவருக்கு மேலே பலரும் உள்ளனர். தொடர்புப் படுத்திப்பார்த்தால் நாம் கோபப்பட்டவரும் ஒரு விதத்தில் பாவப்பட்ட ஜீவன் தான். வணிக நோக்கங்கள் மட்டுமே கல்வித்துறையில் முன் நிற்கும் இந்தச் சூழலில் முடிந்தவரைக்கும், கிடைத்தவரைக்கும் எடுத்துக் கொண்டு உங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொள்வது உங்களின் தனித்திறமை" என்றேன் மகள்களிடம். 

காரணம் இந்த வருடம் முழுக்க மகள்களுக்கு ஒரு வகையில் உதவியாய் இருந்தேன். அவர்களுக்கு எந்த நிலையிலும் மன அழுத்தம் தாக்கிவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தேன். முக்கியமாக என் பேச்சைக் குறைத்துக் கொண்டேன். அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டேன். வித்தியாசம் தெரிந்தால் மனைவி மூலம் அதனைப் பற்றி மெதுவாக தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்தேன். பள்ளியில் 12 மணி நேரம். வீட்டில் 3 மணிநேரம் என்று அவர்களின் வாழ்க்கை முறை என்பது படிப்பு என்ற வட்டத்திற்குள் சுருக்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றனர்.

அளவு கடந்த பாடத்திட்டம். அவசரமாக நடத்தும் ஆசிரியர்கள். முடித்தே ஆக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு. முயற்சிப்பதே உங்கள் கடமை என்று மாணவர்களின் நிலை

பலவிதங்களில் நான் கவனித்துக் கொண்டே வந்தேன். இந்தச் சமயத்தில் தலைமுறை இடைவெளியின் தாக்கத்தை முடிந்த அளவு குறைக்க என்னை மாற்றிக் கொண்டே வந்தேன். அவர்களுக்குப் பிடித்த அனிருத், ஹிப்பாப் தமிழா பாடல்களை அவர்களுடன் சேர்த்து ரசித்தேன். முக்கியப்படங்கள் வரும் போது திரையரங்கத்திற்கு அழைத்துச் சென்றேன். இடைவிடாத வாக்குவாதங்கள் தொடர்ந்து முடிவே இல்லாமல் சென்று கொண்டிருக்கும் மனம் சார்ந்த புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்தேன். யூ டியூப் ல் உள்ள சில தளங்களை அறிமுகம் செய்து வைத்தேன். 

இடைவெளி விட்டு முக்கியப் படங்களைச் சிடி மூலம் வாங்கிக் கொடுத்து பார்க்கச் சொன்னேன். வாட்ஸ் அப் பார்க்க குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் கொடுக்க ஒரு மாதிரியாக அரசு தேர்வு என்ற பயத்தைப் போக்க முடிந்துள்ளது. பயத்தை உருவாக்கி, பயத்தை வளர்த்து, பயமுறுத்திக் கொண்டே இருக்கும் ஆசிரியர்களைப் பார்த்து நக்கலடிக்கும் நிலைக்கு வந்துள்ளார்கள். 

காரணம் படிக்க முடியாத மாணவர்கள் தங்கள் கைகளைக் கிழித்துக் கொள்ளும் நிலையெல்லாம் இந்த வருடம் கேட்க நேர்ந்தது. 

இந்த வருடத்தில் தமிழகக் கல்வித்துறையில் மிக முக்கியமான மாற்றம் நடந்ததுள்ளது. பாடத்திட்ட மாற்றங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் இனி வரும் காலங்களில் படித்து வாங்கும் மதிப்பெண்களை விட இனி துறை சார்ந்து எழுதப் போகும் நுழைவுத் தேர்வு தான் உங்கள் எதிர்காலத்தை நிச்சயமானதாக ஆக்கும் என்ற நிதர்சனம் இங்கே மொத்த அமைப்பையும் மாற்றியுள்ளது. பலவற்றைக் கண்கூடாகப் பார்த்தேன். 

அதன் தாக்கம் உருவாக்கிய மாற்றங்கள் எனக்குப் பல விதங்களில் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது. ஆசிரியர்கள் அதிகச் சிரத்தையெடுத்துத் தங்கள் கடமைகளைச் செய்யத் தொடங்கியுள்ளனர். எல்லாவற்றையும் முழுமையாகப் படித்துத்தான் ஆக வேண்டும் என்ற எண்ணமும் உருவாகியுள்ளது. 

தற்போதைய சூழலில் மகன் அல்லது மகள் வாழ்க்கையில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரைக்கும் உண்டான வாழ்க்கைக்கும் அதற்கு மேல் இரண்டு வருடம் படிக்கும் வாழ்க்கைக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. வளர் இளம் பருவம் அல்லது பதின்ம வயது என்று சொல்லக்கூடிய டீன் ஏஜ் சமயத்தில் மனமும் உடலிலும் உருவாகும் மாற்றங்களைத் தாய் தந்தையர் உணர்ந்து கொண்டாலே பாதிப் பிரச்சனைகள் முடிவுக்கு வந்து விடும். நான் எல்லாம் எப்படி இருந்தேன் தெரியுமா? என்று புலம்பத் தேவை இருக்காது. 

வயதாகும் போது நாம் மாற்றத்தை எதிர்கொள்ளத் துணிவில்லாமல், ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் உருவாகும் பிரச்சனைகள் பலவற்றைப் பல இடங்களில் பார்த்தேன். எட்டாம் வகுப்பு மாணவி அவர் அம்மாவைப் போல நெடுந்தொடர் விமர்சியாக மாறியுள்ளார். பத்தாம் வகுப்பு மாணவனுக்குப் பீர் அடிப்பது சாதனையாகத் தெரிகின்றது. ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சக்கர வாகனமென்பது இயல்பானதாக மாறியுள்ளது. பள்ளி நிர்வாகம் தடை போட்டாலும் குடும்பக் கௌரவம் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்த தகப்பனின் பேச்சைக் கேட்ட போது வியப்பாக இருந்தது.

ஒரு மாணவன் அல்லது மாணவி வைத்திருக்கும் அலைபேசி அத்தனை நியாயங்களையும் அடித்துத் தும்சம் செய்து விடுவதை இந்த ஆண்டு பார்த்தேன். வைத்திருக்கும் மாணவர் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அருகில் உள்ள கூட்டாளிக்கூட்டமும் மொத்தமாகப் பாதிக்கப்படுகின்றது. 

காரணம் எப்படி? எதனை? எதன் பொருட்டுப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவதற்குள் அனைத்தும் இயல்பாகக் கிடைத்து விடுவதால் அதன் மதிப்பு பயன்படுத்துபவர்களுக்குத் தெரிவதில்லை என்பது தான் இந்த ஆண்டு பல சமாச்சாரங்கள் மூலம் கண்டறிந்த உண்மை. இதற்கிடையே தான் ஒவ்வொருவரும் கடந்து வர வேண்டியுள்ளது. 

இப்போதைய மாற்றங்கள் எதுவும் இயல்பானதாகத் தெரியவில்லை. எல்லாமே படிப்படியாகத் திட்டமிட்டு ஊடகங்கள் மூலம் திணிக்கப்படும் ஒன்றாகவே இருப்பதால் தரம் குறைந்த பொருட்கள் விலை அதிகமாகவும், தரமிக்கப் பொருட்கள் விலை மலிவானதாகவும் மாறியுள்ளது. 

வாழ்க்கை முறையும் அப்படித்தான் உள்ளது. 

தாய் தந்தையர் சரியாக இருந்தால் போதும். ஆசிரியர்கள் மேல் அதிகத் தவறு சொல்லத் தோன்றாது. எனக்குத் தோன்றவில்லை. குழந்தைகள் என்பவர்கள் தனியான ஆத்மா. எத்தனை கவலைகள் கவனிப்புகள் இருந்தாலும் உங்களின் கவனிப்பு செல்லாக்காசாகி விடும். அவர்களின் வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து தான் ஆக வேண்டும்.

என்னைக் கண்காணிப்புப் பட்டியலில் வைத்திருந்த மனைவிக்கு இப்போதெல்லாம் ஒரே கேள்வி? 

ஏன் இப்படி ஓரேடியாக மாறிவிட்டார்?

Friday, December 28, 2018

இங்கே முகங்கள் விற்பனைக்கு உண்டு

இந்த வருடத்தின் முக்கியச் சில குறிப்புகளை மட்டும் இங்கே எழுதி வைத்திட தோன்றுகின்றது. 

"நினைவுக்குறிப்புகளைப் படமாக எடுத்து வைத்துப் பாருங்கள். அது உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டும். நம்பிக்கையூட்டும்" என்று சென்ற வருடம் இறுதியில் நண்பர் சொன்ன போது சற்று வித்தியாசமாகத் தெரிந்தது. 

பயணங்களில், மற்ற நிகழ்விடங்களில் எதிரே காணும் காட்சி சித்திரமாக மனதில் ஓடிக் கொண்டேயிருக்கும். புகைப்படம் எடுக்கத் தோன்றாமல் அப்படியே உள்வாங்கிக் கொண்டு வார்த்தைகளாக மாற்றிக் கொள்வதுண்டு. இந்த வருடம் செல்லுமிடங்களைப் புகைப்படமாக மாற்றும் எண்ணம் உருவானது. 

பத்திரிக்கைளுக்கும், மற்ற ஊடகங்களும் தினந்தோறும் ஏராளமான முகங்களைத் தினந்தோறும் உங்களுக்குக் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டேயிருக்கின்றது. பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள், வெறுக்கும் முகம் என்று ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு விருப்பமில்லாவிட்டாலும் உங்கள் எண்ணத்தில் மாற்றங்களை விதைத்துக் கொண்டேயிருக்கின்றது. இது தவிர நீங்கள் பணிபுரியும் சூழல், வாழுமிடம் போன்ற இடங்களில் உள்ள முகங்கள் மறுபக்கம். மொத்தத்தில் உங்களின் உண்மையான முகம் என்பதனை மறந்து எத்தனையோ விதவிதமான முகங்களைத் தான் உங்கள் மனம் நினைவில் வைத்துக் கொள்கிறது. 

சென்ற வருடம் நடந்த நிகழ்வுகளை நாமே மறந்து கடந்து வந்து விடும் மன அழுத்தமான உலகில் நாம் வாழ்ந்தாலும் வலைதளங்கள் ஏதோவொரு வழியில் நமக்கு அதனை நினைவு படுத்திக் கொண்டேயிருக்கின்றது. பழைய புகைப்படங்களைப் பார்க்கும் போது அட!, ஆமாம்!. நாம் இப்படியா இருந்தோம்? என்ற முக மாற்றங்கள் நம்மைக் கலவரப்படுத்துகின்றது. கூடிக் கொண்டேயிருக்கும் வயது, நினைவு அடுக்குகளில் இருந்து நம்மைப் புன்னகைக்க வைக்கின்றது. அதன் பொருட்டு இந்த வருடத்தின் பலவிதமான சூழலில் எடுத்த என் முகங்களை இங்கே பொருத்தி வைக்கத் தோன்றியது. மீண்டும் ஒரு சமயத்தில் இதனை வைத்து ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில். 

எந்த வருடத்திற்கும் இல்லாத பல சிறப்புகள் இந்த வருடத்திற்கு உண்டு. ஆனால் அவை அனைத்தும் தொடராக எழுத வேண்டிய விசயமது. உடனே எழுதும் போது அதன் பக்கவிளைவுகளின் தாக்கங்கள் எப்படி இருக்கும் என்பதனை வருகின்ற வருடத்தில் பார்க்க வேண்டும் என்பதற்காகக் காத்திருக்கின்றேன். தமிழகத்தில் வந்து போன புயல்களுக்குப் பெயரிட்டு அழைத்தார்கள். ஆனால் அதே போலத் திருப்பூருக்குள் எல்லா மட்டத்திலும் புயல் தாக்கியது. ஆனால் யாரும் இதைப்பற்றிப் பேசவே இல்லை. திருடனுக்குத் தோள் கொட்டியது போல அமைதியாகவே இருந்து விட்டார்கள். இவை எல்லோருடைய வாழ்வையும் திருப்பிப் போட்டது. நிறுவனங்களை நடத்திக் கொண்டிருந்தவர்கள் விற்றார்கள், வாடகைக்கு விட்டார்கள், உள்வாடகைக்கு ஒதுக்கீடு செய்து தான் செய்து கொண்டிருந்த அளவை குறைத்துக் கொண்டார்கள். 

பெரிய பதவிகளுக்கு ஆட்களைத் தவிர்த்தார்கள். தரம் என்பதனை மறந்து தவித்தார்கள். பலரும் நிம்மதியிழந்தார்கள். சிலரால் பிரச்சனையின்றி இயங்க முடிந்தது. பலரும் இயங்கித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார்கள். இருக்கின்றார்கள். சக்கரம் இடைவிடாமல் சுழன்று கொண்டேயிருக்கின்றது. இதன் முக்கிய விளைவுகள் அடுத்த வருடம் இறுதியில் தெரியும்? 

90 சதவிகிதம் எதிர்மறைகளும் 10 சதவிகிதம் நேர்மறைகளும் நம்மைச்சுற்றிலும் இருக்க இதற்குள் தான் நாம் நம்மை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. நேர்மை, கை சுத்தமானவன், ஒழுக்கம்,கடின உழைப்பாளி,உதவிடும் உள்ளம் கொண்டவன், அரவணைத்துச் செல்லக்கூடியவன், தியாக மனப்பான்மை கொண்டவன். இந்த வார்த்தைகளுக்கான முழுமையான அர்த்தம் மாறிவிட்டது என்பதனையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த வார்த்தைகள் போற்றப்படலாம். ஆனால் எவரும் பின்பற்றப்படக்கூடாது என்ற நிலையில் இருக்கும் வார்த்தைகளாக மாற்றம் பெற்றுள்ளது.  மற்றொருவர் நல்லவன் என்பதற்கும் வல்லவன் என்பதற்கும் உண்டான அர்த்தம் புரிந்தால் போதும்.  குழப்பம் வராது என்றார்.

இது போட்டி உலகம். உள்ளூர் போட்டியிலிருந்து இன்று உலகாளவிய போட்டி வரைக்கும் பரந்து விரிந்துள்ளது. போட்டி போடுபவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு விதமான கொள்கை. ஆனால் நம் கொள்கை எந்த இடத்தில் அடி வாங்கும்? ஏன் இப்படி நடந்தது? என்று யோசிப்பதற்கு வாழ்வின் திசையே மாறிவிடும். சிந்தனை முழுக்க வணிக நோக்கம் என்பதனைத் தவிர வேறு எதுவும் இல்லாத நிதர்சன உலகத்தையும் நான் கணக்கில் எடுத்துக் கொண்டால் போதும். இதன் அடிப்படையில் வருடத்தின் தொடக்கம் தொடங்கியது. 

ஐந்தாவது தலைமுறையைத் தாண்டி முதல் முறையாக டாடா குழுமத்தில் அவர்கள் குடும்ப உறுப்பினர்களைக் கடந்த ஒரு தமிழர் முதன்மைப் பொறுப்பில் இருக்கும் தற்போதைய காலம் வரைக்கும் வாசித்து முடித்த போது திருப்பூர் குறித்து அதிக யோசனை வந்தது. முடிந்தவரைக்கும் அள்ளிக்கோ என்ற இங்குள்ள கட்டமைப்பு கவலையைத் தந்தது. எஸ்கார்ட்ஸ் நிறுவன சேர்மன் நந்தா அவர்களின் சுயசரிதத்தை வாசித்து முடித்துப் போது சுதந்திரத்திற்கு முன், சுதந்திரத்திற்குப் பின் என்று அவர் கடந்து வந்த பாதையையும், ஆட்சி மாற்றங்களின் போது அவர் சந்தித்த சவால்களையும் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. 

மூன்றாவது தலைமுறையில் ஒருவர் உருவாக்கிய நிறுவனம் உருக்குலையாமல், நிர்வாக ரீதியாக, லாப ரீதியாக இன்னமும் சந்தையில் இருக்கும் விதத்தை, வித்தைகளையெல்லாம் பார்க்கும் திருப்பூர் சூழல் உறுத்தலாகத் தெரிந்தது.  செய்யும் தொழில் மூலம் கிடைக்கும் சிறிய லாபம் மட்டுமே நமக்குச் சொந்தம் என்பதற்கும் முதலீட்டில் உள்ள மொத்த பணமும் நாம் அனுபவிப்பதற்கே என்ற இங்குள்ள நடைமுறைகளைப் பற்றியும் புரிந்து கொள்ள முடிந்தது.

மூன்று தலைமுறைகளைக் கடந்தும் இன்று சந்தையில் நிற்கும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அரசாங்க ஊழியர்கள் போலக் கடைசி வரை நிலையாக இருப்பதும், பலர் ஓய்வு பெற்ற போதும் பணியாற்றிய நிறுவனத்திற்கு வேறொரு வகையில் உதவிடும் வகையில் தங்கள் சொந்த பொருளாதாரத்தைச் செழிப்பாக வைத்திருப்பதையும் படித்த போது தீர்க்கதரிசனம் என்ற வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.  இன்றைய சூழலில் திருப்பூரில் வட இந்திய இளையஞர்கள் ஐந்து லட்சம் இருக்கின்றார்கள்.  

தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் துடைத்து எறியப்பட்டுள்ளனர். பாதை மாறியுள்ளனர்.  வேறு துறைக்கு மாறியுள்ளனர். நம்பகத் தன்மையில்லாத நிர்வாக அமைப்பும், நம்ப முடியாத தொழிலாளர்களின் மனோபாவம் இரட்டை தண்டவாளம் போலவே இன்றும் சென்று கொண்டிருப்பதன் தாக்கம் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அதன் தாக்கம் வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

இந்த வருடத்தில் மிக அதிக யூ டியூப் வாயிலாகப் பலரின் பேச்சுக்களைத் தொடர்ந்து கேட்க வாய்ப்பு அமைந்தது. குறிப்பாகச் சுப. வீரபாண்டியன் பேச்சுக்கள், உலக அளவில், இந்திய அளவில் உள்ள தொழில் அதிபர்களின் உரைகள் போன்றவற்றைப் பார்க்க கேட்க முடிந்தது. சுருக்கமாகச் சொல்லப்போனால் உலகத்திற்கும் தமிழகத்திற்கும் தொடர்பில்லாத ஒரு கட்டமைப்பு உருவாகி, உருவாக்கி அதையே சரியென்று நம்பவைத்துப் படித்து வருபவர்களின் சிந்தனை முழுக்கப் பாதுகாப்பு என்று வார்த்தையின் பொருட்டுக் காலம் முழுக்கக் கூலியாகவே வாழ்ந்து விடலாம் என்ற எண்ணத்தை மேலோங்கச் செய்துள்ளது. 

முகம் மட்டுமே அரசியல் மற்றும் நிர்வாகம் என்கிற ரீதியில் உள்ள கட்டமைப்பு உடைபடும் நாள் எந்நாளோ அந்நாளில் உண்மையான திறமைசாலிகள் தங்களை அடையாளம் காணக்கூடியதாக இருக்கும். வந்து கொண்டிருக்கின்ற தொழில் நுட்ப வசதிகள் இந்த மாய உலகத்தை அடியோடு மாற்றும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.  அப்போது அரசியல், சமூக, தொழில் உலக மாற்றங்கள் வேறொரு திசையில் பயணிக்கக்கூடும். அப்போது இப்போது புனிதமாக பார்க்கப்படும் பலரின் முகங்கள் காலாவதி ஆனதாக இருக்கக்கூடும்.

Wednesday, August 08, 2018

மு.க. - வாழ்வும் மரணமும்

அன்றுதான் கருணாநிதி முதன்முறையாகப் பேசப் போகிறார்.

``என்ன கலைஞரே! இன்று என்ன பேசப்போகிறீர்கள்?” என்று கேட்கிறார் நெடுஞ்செழியன். ‘`நங்கவரம் விவசாயிகள் பிரச்னை பற்றிப் பேசப் போகிறேன். ‘நாடு பாதி; நங்கவரம் பாதி’ என்று நிலம் வைத்துள்ளார் அந்த நிலச்சுவான்தார். உள்ளூர் மக்களுக்குக் கூலி அதிகம் கொடுக்க வேண்டும் என்று வெளியூர் ஆட்களை வைத்து வேலை வாங்குகிறார். அவர்களுக்கும் ஒழுங்கான கூலி இல்லை. இதை இந்த அரசின் கவனத்துக்குக் கொண்டுவரப் போகிறேன்” என்றார் கருணாநிதி. கையேர் வாரம், மாட்டேர் வாரம் என்ற கூலி முறை பற்றியும், இவர்களுக்காகப் போராடிய கவுண்டம்பட்டி முத்து என்ற விவசாயி பற்றியும் விலாவாரியாகச் சொன்னார்.

சாப்பிட்டு முடித்ததும் வெற்றிலை போட்டுக் கொண்டே தன் அருகில் இருந்த ஏ.வி.பி. ஆசைத்தம்பியிடம் அண்ணா சொன்னார்: ‘`நாவலருக்குக் கருணாநிதி விளக்கம் அளித்தான் என்றா நினைக்கிறாய். கருணாநிதி இன்று சட்டசபையில் பேசப் போகிறான். அதற்காக ஒத்திகை பார்க்கிறான்” என்றார். மொத்தப் பேரும் சிரித்துவிட்டார்கள். ‘`இல்லைண்ணா’’ என்று நெளிந்தார் கருணாநிதி. வாயில் வழிந்த எச்சிலைத் துடைத்தபடி, ‘`சட்டசபையில் பேச இவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். தயார் நிலையில் இருந்து பேசும் பேச்சே தரமான பேச்சாக இருக்க முடியும்” என்றார் அண்ணா. புறப்பட்டார் கருணாநிதி.

“கவர்னர் உரையை நான் போற்றவும் வரவில்லை. தூற்றவும் வரவில்லை. என் கருத்துரையை ஆற்றவே வந்துள்ளேன்” என்று ஆரம்பித்து நங்கவரம் விவசாயிகள் பிரச்னைக்கு வந்து... தனது பேச்சை முடித்தார். முடித்ததும் தான் பேரவைத்தலைவர் கிருஷ்ணாராவ் அந்தத் துண்டுச் சீட்டை அனுப்பினார். அது காங்கிரஸ் ஆட்சிக் காலம். காமராஜர் முதலமைச்சர். ‘`நான் கருணாநிதி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அன்று பார்த்து வியந்தேன்” என்று அன்றைய அமைச்சரும், பின்னர் முதலமைச்சராகவும் ஆன பக்தவத்சலம் சொன்னார். முதன்முறை பேசும் போது எப்படி ஒத்திகை பார்த்துப் போனாரோ, அப்படித்தான் ஒவ்வொரு நாளும் போனார்.

“சட்டசபைக்குப் போகும்போது கற்றுக்கொள்ளும் மாணவனாகவும் கற்பிக்கும் ஆசிரியனாகவும் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்” என்றார் கருணாநிதி. அப்படித்தான் இருந்தார் மாணவனாக, ஆசிரியனாக. கருணாநிதி ஒரு சுயம்பு. அதனால்தான் ஒரே நேரத்தில் இரண்டுமாக அவரால் இருக்க முடிந்தது.
மணிக்கணக்கில் பொதுக்கூட்ட மேடையில் பேசலாம். 

ஆனால், சட்டசபையில் வண்டி ஸ்டார்ட் ஆகாது. அது வேறு களம். இரண்டிலும் வென்றவர்கள் ஒரு சிலர்தான். அதில் ஒருவர் கருணாநிதி. கேள்வியை முடிக்கும் முன் பதில் சொல்வதும், பதில் சொன்னதும் எதிர்க் கேள்வி தொடுப்பதும் கருணாநிதி பாணி.

“வெளிநாட்டிலிருந்து வருபவர்கள், எங்களைப் பார்த்து ‘சிறப்பான ஆளுங்கட்சி’ என்று பெருமைப்படுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களைப் பார்த்துக் கேவலமாக நினைக்கிறார்கள்” என்று முதலமைச்சர் பக்தவத்சலம் சொன்னதுமே, ‘`இவ்வளவு கேவலமானவர்களை வென்றது உங்களுக்குப் பெருமையா?” என்று திருப்பி அடித்தார் கருணாநிதி. “தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே” என்று பேசிக்கொண்டிருந்த கருணாநிதியைப் பார்த்து, “கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றி எதற்குக் கவலை?” என்றார் டி.என்.அனந்தநாயகி. “கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்?” என்று துடுப்பைப் போட்டார் கருணாநிதி.

“அடைந்தால் திராவிட நாடு; இல்லையென்றால் சுடுகாடு... என்றீர்களே! இப்போது சுடுகாட்டிலா உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார் கருத்திருமன். அவர் உட்காருவதற்குள் கருணாநிதி பதில் சொன்னார்: ‘`இல்லை. உங்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறோம்!”

அன்றைய தினம் வெளியான இதழ் ஒன்றில் கருணாநிதியைக் கிண்டல் செய்து கவிதை ஒன்று வெளியானது.

“தமிழ் எனும் தங்கச் சீப்பு உங்கள் கையில்
இருந்தும் என்ன பயன்?
நீங்கள்தான் ஏற்கெனவே
தமிழர்களை மொட்டையடித்து விட்டீர்களே!” -

இந்தக் கவிதையை தமிழகச் சட்டமன்றத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்போது காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் சொன்னார். உடனே எழுந்த கருணாநிதி, ‘`தம்பி! என் கையில் இருப்பது உன்னைப் போன்ற சுருள் முடிக்காரர்களுக்கு சீவி விட” என்று ஐஸ் வைத்தார். பீட்டருக்கு நாக்கு எழுமா அதன் பிறகு? கேள்விக்கு உள்ளே இருந்தே பதிலைச் சொல்வதும், பதிலுக்குள் இருந்து அடுத்த கேள்வியைத் தோண்டுவதும் கருணாநிதிக்குக் கைவந்த கலை.

அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை எழுத்துக்கு எழுத்து கவனிக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியின் கடைசி சட்டமன்றக் கூட்டத் தொடர் அது. பக்தவத்சலம் முதலமைச்சர். இன்னும் சில மாதங்களில் நடக்கப்போகும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வரப் போகிறது என்ற நிலைமை. கருணாநிதி பேசும்போது, ‘`ஆண்டவன் என்ற ஒருவன் இருந்து நான் அவனைச் சந்தித்தால் அவனைப் பார்த்து, ‘முதலமைச்சரைப் போன்று சுறுசுறுப்பைக் கொடு’ என்றுதான் வரம் கேட்பேன். அவர் முதலமைச்சராக இருந்து ஓர் ஆளுங்கட்சித் தலைவர் எப்படிச் செயல்பட வேண்டும் என்று எங்களுக்கு இதுவரை கற்றுக்கொடுத்தார்” என்றார். காங்கிரஸ் உறுப்பினர்களே மகிழ்ச்சி அடைந்தார்கள். 

கருணாநிதி ரிவர்ஸ் கியர் போட்டார். “அதுபோல் அடுத்த தடவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து ஓர் எதிர்க்கட்சித் தலைவர் எப்படிப் பணியாற்ற வேண்டும் என்பதை அவர் எங்களுக்குச் சொல்லித் தர வேண்டும்” என்றார். தி.மு.க-வினர் மகிழ்ச்சியில் குதித்தார்கள். சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு முன்பே கதை- வசனகர்த்தாவாக இருந்ததால், கருணாநிதிக்கு வாதம் - எதிர்வாதம் இரண்டும் கைவந்த கலையானது.

கருணாநிதியின் அரசியல் மிகக் கடுமையான விமர்சனத்துக்குரியது.அவரது பொதுவாழ்க்கையில் களங்கம் உண்டு. ஆனால் சட்டமன்றத்தில் ஒரு முதலமைச்சர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக அனைவரும் படிக்க வேண்டிய பாடப் புத்தகமாக, 1997-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கைக்கு அவர் அளித்த பதிலுரை இருந்தது. தனக்கு முன்னால் பேசிய 40 பேருக்கும் பதில் சொல்லி இரண்டு மணி நேரத்துக்கு மேல் அவர் அளித்த பதில் தான், சட்டமன்ற விவாதத்தை ஒருவர் எப்படி கவனிக்க வேண்டும், மதிப்பளிக்க வேண்டும் என்பதைக் கற்றுத்தந்தது. அதேபோல், ஓர் எதிர்க்கட்சித் தலைவர் எப்படிப் பேச வேண்டும் என்பதை எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது கருணாநிதி பேசிய பேச்சு உணர்த்தும். பூம்புகார் நிறுவனத்துக்காக பல்கேரியா பால்டிகா கப்பல் வாங்குவதில் என்னென்ன விதி மீறல் என்பதை 20-க்கும் மேற்பட்ட ஆதாரங்களுடன் ஒவ்வொன்றாக அடுக்குவார் கருணாநிதி. இந்தப் பேச்சுக்குப் பிறகுதான் கப்பல் வாங்குவதை நிறுத்தினார் எம்.ஜி.ஆர்.

1996-2001 அவரது முதலமைச்சர் காலமும், 1980-84 அவரது எதிர்க்கட்சித் தலைவர் காலமும் தி.மு.க-வினருக்கு மட்டுமல்ல; அரசியல் ஆர்வமுள்ள அனைவருக்குமான சட்டசபைப் பாடம். நேர்மறை, எதிர்மறை என எல்லா பாடங்களையும் நடத்திவிட்டு பழுத்த இலையாய்ப் படுத்திருக்கிறார் கலைஞர்.

-ப.திருமாவேலன்