Tuesday, March 05, 2013

உங்களுக்கு மனமிருந்தால் "மார்க்கம்" உண்டு

இதைப்படிக்கப் போகும் நீங்கள் அடிப்படையில் தமிழ் வழிக் கல்வி மூலம் இந்த நிலைக்கு வளர்ந்து இருப்பீர்கள். தற்போது இருக்கும் உங்களின் பணி என்பது முழுக்க முழுக்க ஆங்கிலம் வழியாகவே இருக்கும். 

நிச்சயம் தங்களின் ஆங்கில அறிவே தங்களை இந்த நிலைக்கு உயர்த்திருக்கும்.  ஆனால் நிச்சயம் உங்கள் தாய்மொழி உங்கள் மனதளவில் மறக்காமல் இருப்பதால் வலைதள வாசிப்பென்பது இயல்பாக இருப்பதோடு பலராலும் வலைதளத்தில் எழுதவும் முடியுகின்றது.

புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த போதிலும் உங்களால் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள காரணமாக இருப்பதும் நமது தாய்மொழி தான் என்பதை உணர்ந்து இருப்பீர்கள் தானே?  என்னைப் போல உங்களைப் போல இன்னும் பலரும் இந்த தமிழ்மொழி மூலம் உலகளவில் உள்ள தமிழ்ர்களோடு ஒருங்கிணைக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டா?  அடுத்து வரும் தலைமுறைகளும் இந்த மொழியை ருசிக்க ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் உண்டா?

நம் கண்களுக்குத் தெரியாத எத்தனையோ பேர்கள் தான் இந்த வலைதள அமைப்பை உருவாக்கினார்கள். திரட்டிகளின் வடிவத்தை அறிமுகம் செய்து வைத்தார்கள். 

இன்று நாம் இதை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றோம்.  அடிப்படைக் காரணம் அவரவர் கற்ற தமிழ் மொழி அறிவு. 

குறைந்த பட்சம் நம் குடும்பத்தில் உள்ள குழந்தைகளை தமிழ் மொழி சார்ந்து அல்லது அந்த எண்ணத்தையாவது அவர்களுக்கு உணர்த்தி இருக்கின்றோமோ? என்பதை எப்பொழுதாவது உணர்ந்து இருப்பீர்களா?

ஆனால் இன்றைய வாழ்க்கையில் என் குழந்தைகள் என்னைப் போல மொழியறிவுக்காக கஷ்டப்படக்கூடாது என்பதற்காக பலரும் நிச்சயம் ஆங்கில கல்வி மூலமே வளர்த்துக் கொண்டிருக்ககூடும். ஆனால் இன்று பலரும் பள்ளியில் தமிழ்ப்பாடம் தேவையில்லை என்பதை கருத்தில் கொண்டு ஹிந்தி முதல் மற்ற பாடங்கள் வரைக்கும் கற்க வைத்து தமிழ் மொழியை மறந்து போகும் கொடுமையும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

காரணம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவ வேண்டிய ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும் கண்களை மூடிக் கொண்டு ஆங்கிலம் பக்கம் மக்களை தள்ளிக் கொண்டு இருப்பதால் இயல்பாகவே தமிழ்மொழியை அடிப்படையாக வைத்து பாடம் நடத்தும் அரசு பள்ளிகள் அனைத்தும் தரமற்றதாக மாறி மக்களை அந்த பக்கமே செல்லத் தேவையில்லை என்பதாக கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி இன்று ஆங்கிலம் என்பது திடீர் பணக்காரர்களை உருவாக்கும் சிறந்த தொழில் வாய்ப்புக்கான காரணமாக அமைந்துள்ளது. இதன் காரணமாகவே இன்று இந்தியா முழுவதும் ஆங்கில வழி கல்விக்கூடங்கள் புற்றிசல் போல பெருகி விட்டது.  நாள்தோறும் புதிதாக முளைத்துக் கொண்டேயிருக்கின்றது.

ஆனாலும் சிலர் தன்னளவில் இந்த தமிழ்மொழிக்காக தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் சமர்ப்பித்து தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கின்றர்.  நான் பார்த்தவரைக்கும் திருப்பூரில் திரு. தங்கராசு அவர்களும் இந்த பணியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தாய்த்தமிழ் பள்ளியின் மூலம் ஏராளமான குழந்தைகளுக்கு எளிய கட்டணத்தில் தனது சேவையை செய்து கொண்டிருக்கின்றார். அவர் பள்ளியின் நிதிநிலை அறிக்கையை நீங்கள் படித்துப் பார்க்கும் போது நம்மைச்சுற்றிலும் இப்படியான மனிதர்களும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்களா? என்று எண்ணம் உங்களுக்குள் உருவாகக்கூடும்.

தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நூற்றுக்கணக்கான தாய்தமிழ் பள்ளிகள் மூடு விழாவை நோக்கி போய்க் கொண்டு இருக்கின்றது.  காரணம் மக்களின் மனோபாவம் அந்த அளவுக்கு இருக்கின்றது.  இனி நமது குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுமென்றால் ஆங்கிலம் ஒன்றே அருமருந்து என்பதை உறுதியாகவே நம்பத் தொடங்கி விட்டனர்.

என்னுடைய நோக்கம பல மொழிகள் கற்றுக் கொள்வது தவறல்ல.  குழந்தைகளின்  ஆங்கில வழிக்கல்வி தவறல்ல.  ஆனால் அடிப்படையில் நமது தாய்மொழி அறிவு குழந்தைகளுக்கு இல்லாதபட்சத்தில் எதிர்கால அவர்களின்  சமூக வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும்  காரணம் இன்று ஆங்கில வழிக்கல்வியில் படிக்கும் அத்தனை மாணவர்களும் அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் போய் வாழத்தான் போகின்றார்கள் என்பது நிச்சயமல்ல. 

இன்னமும் நமது தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளை கௌரவத்திற்காக ஒரு பட்டம் வாங்க வைக்க வேண்டும் என்று கருத்தில் கொண்டு தான் படிக்க வைக்கின்றார்கள். அதற்குப் பிறகு எப்போதும் போல தங்களது கடமையான திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்ற முற்றுப் புள்ளியில் கொண்டு போய் அவர்களை முடங்க வைத்து விடுகின்றார்கள்.

இவ்வாறு வளர்ந்தவர்களின் மொழி அறிவு என்பது சமூக வாழ்க்கையில் மிகவும் சவாலாக இருப்பதோடு தான் வாழ வேண்டிய வாழ்க்கையையும் மாற்றி விடுகின்றது.   உணர்பவர்கள் எத்தனை பேர்கள்.

எனது குழந்தைகளின் தமிழ் மொழி அறிவை மீட்டெடுக்க, வளர்க்க எனக்கு ஐந்து ஆண்டுகள் ஆனது. தற்போது தான் இயல்பான மற்றும் வெகுஜன பத்திரிக்கைகளை விரைவாக வாசிக்கும் அளவு வளர்ந்துள்ளார்கள். ஆனால் நம் பெற்றோர்கள் தொலைக்காட்சியின் உள்ளே தனது தலையை அடகு வைத்து விட்டதால் தங்களது வாரிசுகளுக்கு தேவைப்படும் இயல்பான பழக்க வழக்கங்களில் கூட கவனம் செலுத்துவதில்லை.

காரணம் தற்போதையை சமூகத்தில் எல்லாமே அந்தஸ்து சார்ந்ததாகவே பார்க்கப்படுவதால் அதுவே சரியான வாழ்க்கை என்று உணரப்படுகின்றது.

வாழ்க்கை என்பது வட்டமென்றால் நிச்சயம் ஒவ்வொன்றும் ஒரு சமயத்தில் முடித்து வைக்கப்படும்.  மாற்றம் உருவாகும் என்பதும் உண்மை தான்.

நாம் மாறத் தயாராக இருக்க வேண்டும் என்பதும் உண்மை தான்.  

திருப்பூரில் உள்ள தாய்த்தமிழ் பள்ளியின் நிதி நிலை அறிக்கை இங்கே வெளியிட்டுள்ளேன். சொடுக்கி படித்துப் பாருங்கள்.

நிச்சயம் உங்கள் மனதில் மார்க்கம் இருந்தால், உங்களால் உதவக்கூடிய வாய்பிருந்தால் திரு. தங்கராசு அவர்களை நேரிடையாக தொடர்பு கொண்டு பேசுங்கள் என்று உங்களிடம் கோரிக்கை வைக்கின்றேன். 

சில உதவிகள் சிலருக்கு அப்போது மட்டும் தேவைப்படும். 

ஆனால் சிலருக்கும் நாம் செய்யும் உதவி என்பது சில தலைமுறைகளுக்கேச் சென்று சேர்ந்து விடும் என்பதை நினைவில் வைத்திருக்கவும்.

17,03,2013 ஞாயிறு அன்று மாலை பள்ளியின் ஆண்டு விழா நடைபெறுகின்றது, உங்களை அன்போடு அழைக்கின்றேன். அசாத்தியமான குழந்தைகளின் திறமைகளை அவர்களின் கலைநிகழ்ச்சிகளை அவசியம் காண வாருங்கள.




பள்ளியின் நிதிநிலை அறிக்கை

தொடர்பு கொள்ள  


தொடர்புக்கு 
கு. தங்கராசு அவர்கள்
அலைபேசி எண் 984 39 440 44

Monday, March 04, 2013

தமிழ் இளங்கோ - ஆசையும் என் அச்சமும்


நான் வங்கி வேலைக்கு சேர்ந்த பிறகு திருப்பூரைப் பற்றி கேள்விப் பட்ட தகவல், திருப்பூரில் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளின் கிளைகளும் உள்ளன என்பதுதான். 

எனக்குத் தெரிந்த கிராமத்தைச் சேர்ந்த இருவர் திருப்பூருக்கு சென்றனர். ஒருவர் 15 நாளிலேயே ” என்னால் ஈரத்தில் ரொம்பநேரம் நிற்க முடியவில்லை என்று தாக்கு பிடிக்க முடியாமல் வந்து விட்டார். 

இன்னொருவரால் கடினமாக உழைக்க முடியவில்லை. அவரும் ஓடி வந்து விட்டார். ஆனாலும்  மற்றொருவர் (கடுமையான உழைப்பாளி) எங்கள் கிராமத்துக்காரரோடு திருப்பூருக்கு சென்றவர், இன்று நல்ல நிலைமையில் இருக்கிறார். தனது கடைசி தம்பிகள் இருவரையும் நன்கு படிக்க வைத்தார். கிராமத்தில் நிலங்களை  வாங்கி போட்டார் . 

எனவே எனக்கு திருப்பூரில் என்னதான் நடக்கிறது என்று தெரிந்து கொள்ள ரொம்ப நாளாக ஆவல். அந்த கேள்விக்கு விடை சொன்ன நூல்தான்  ஜோதிஜி (திருப்பூர்) எழுதிய “டாலர் நகரம்” –  என்ற நூல் ..

“ கோவில் விசேடத்திற்கு ஊருக்கு வந்திருந்த செட்டியார் மூலம் இந்த முதல் வேலை வாய்ப்பு வந்தது. ஊரில் வாட்ச் கடை நாச்சியப்பனிடம், படித்த ஒரு பையன் தேவையென்று செட்டியார் சொல்லி வைத்திருக்க; கூட்டாளிகளுடன் சுற்றிக் கொண்டிருந்த என்னை வாட்ச் கடை நாச்சியப்பன் தான் திருப்பூருக்கு அனுப்பி வைத்தார். பள்ளித்தோழன் மாதவன் செலவுக்கு பணங்கொடுத்து வழியனுப்ப திருப்பூருக்கு வந்து சேர்ந்தேன்.” - என்று தொடங்கி தான் மஞ்சள் பையோடு திருப்பூரில் தொடங்கிய வாழ்க்கை அனுபவத்தினை விளக்குகிறார். 

”திருப்பூரிலுள்ள எந்த நிறுவனங்களையையும் நம்ப முடியாது. உள்ளே பணிபுரிபவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் தங்களின் அடுத்த நாள் எப்படியிருக்கும்? என்பதே யூகிக்க முடியாது. இன்று நிறுவனத்திற்கு லாபமாக வந்த பத்து லட்சம், நாளை பத்து கோடி நட்டத்தில் சிக்க வைத்து விடும். ஏற்றுமதி நிறுவனங்கள் வளர உழைப்பு, தரம், நிர்வாகத்திறமை வேண்டும். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலே அதிர்ஷடம்., நம்ப கடினமாக இருக்கும், ஆனால் இது தான் உண்மை. மாமனாரும் சகலையும் என்னைப் பார்த்து விட்டு சென்ற போது மற்றொரு நிறுவனத்தில் உள்ளே நுழைய முயற்சித்துக் கொண்டிருந்தேன்.” என்று தான் கூடு விட்டு கூடு பாய காரணம் என்ன என்பதனை விளக்குகிறார். - 

ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாறி மாறி உழைத்த அவர், ” 15 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருந்த சொந்த தொழில், சொந்த நிறுவனம் என்ற எண்ணம் இயல்பாக என்னைத் தேடி வந்த போது சரியாக பயன்படுத்திக் கொண்டேன். வாழ்வின் அடுத்த மறுமலர்ச்சி அத்தியாயங்கள் உருவாகத் தொடங்கியது “ என்று சொல்கிறார்.

அப்போது தனக்கு தொழில் ரீதியாக ஏற்பட்ட அனுபவங்களை சுவைபட சொல்லிச் செல்கிறார். அவருடைய ஒவ்வொரு அனுபவமும் திருப்பூரில் வேலைதேடி செல்வோருக்கும் தொழில் முனைவோருக்கும், கலங்கரை விள்க்கங்களாக உள்ளன.

திருப்பூரில் ஆடை தயாரிப்பு:

திருப்பூரில் தயாரிக்கப்படும் ஆடைகள் எவ்விதம் உருவாகின்றன,  சாயப் பட்டறையில் ஏற்றப்படும் சாயங்கள் ,தயாரிக்கப் பயன்படுத்தும் எந்திரங்கள் பெயர் என்பது உட்பட அலுப்பு தட்டாத வகையில் எழுதுகிறார்.

“உருவாகும் ஒவ்வொரு ஆடைக்கும் ஒவ்வொரு சூத்திரம். அத்தனையும் பயன்படுத்தும் நூலில் தான் தொடக்கம் பெறுகிறது. நீங்கள் போடும் ஜட்டி, போர்வை போல கடினமாக இருந்தால் உங்கள் உறுப்புகளை உண்டு இல்லை என்று படுத்தி எடுத்தி விடாதா? குளிர் காலத்தில் போடக்கூடிய ஆடைகள் உள் உறுப்புகள் தெரியும் அளவிற்கு இருந்தால் எப்படியிருக்கும்? குளிர் நடுங்க வைத்து விடாதா? “ 

“நீங்கள் உடுத்தும் சில ஆடைகளில் ஜட்டியின் துணி ஒரு விதமாகவும் பனியனி துணி வேறுவிதமாகவும் இருப்பதை பார்த்திருப்பீர்கள் தானே? சில துணிகளில் உள்ளே கடினமாக சொர சொரப்பாக இருக்கும். அதே துணியின் வெளிப்புறம் முயலை தடவிப் பார்க்கும் சுகம் தெரியும். அத்தனையும் நிட்டிங் எந்திரத்தின் மூளைப் பகுதியில் செய்யப்படும் ஜாலவித்தையாகும்.” - 

திருப்பூர் சாய பட்டறைகள்:

திருப்பூர் என்றாலே சாயப் பட்டறைகள் நினைவுக்கு வராமல் போகாது. அந்த அளவுக்கு இப்போது செய்தித் தாள்களில் ஊடகங்களில் சாயப்பட்டறை பற்றிய தகவல்கள் வருகின்றன. 

“இந்த சாயப்பட்டறை மற்றும் சலவைப் பட்டறைகளில் பணிபுரியும் 90 சதவிகித தொழிலாளிகள் தஞ்சாவூர், திருவண்ணாமலை, இராமநாதபுரம், மதுரை சிவகங்கை, கம்பம், தேனி, போடி, சுற்று வட்டார பகுதியில் இருந்த வந்த 16 முதல் 40 வயது வரைக்கும் உள்ள நல்ல உடல்வலிமை  வாய்ந்த  இளைஞர்கள்.. படிப்பை பாதியில் விட்டு ஓடி வந்தவர்கள் முதல்,  வாழ்க்கையை வாழ்ந்தாகி விட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் வரையுள்ள அத்தனை பேரையும்  இந்தத்  தொழிலில் பார்க்கலாம். “ 

மேலும் இந்த சாயக்கழிவுநீரால் ஒரத்துப் பாளையம் அணை, விவசாயம், குடிநீர் ஆகியவற்றில் ஏற்பட்ட பாதிப்புகளையும் அதனை நீக்க எடுக்கப்பட்ட முயற்சிகளையும் அதில் நடக்கும் தில்லுமுல்லுகளைப் பற்றியும் சொல்கிறார்.

திருப்பூர் நிறுவனதாரர்கள்:

திருப்பூர் இந்த அளவுக்கு ஒரு தொழில் நகரமாக உருவாக அங்கு முதல் போட்ட நிறுவனதாரர்களின் பங்கு முக்கியமானது. இந்த நூலின் ஆசிரியர் ஜோதிஜி அவர்கள், இந்த தொழில் ஈடுபட்ட நிறுவனதாரர்கள் எனப்படும் முதலாளிகளைப் பற்றியும் அவர்கள் செய்த, ஏற்றுமதி – இறக்குமதி தொழில் திருப்பூரில் பெற்ற வளர்ச்சியைப் பற்றியும் எடுத்துக் காட்டுகளோடு விளக்குகிறார். அதேசமயம் இறக்குமதியாளரிடம் தான் பேசியபடி போட்ட  ஒப்பந்தத்தை நிறைவேற்றாததால் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆர்டர்களை இழந்தவர்கள், காமத்தால் தொழிலை சொத்துக்களை அழித்தவர்கள்,  என்றும்  உதாரணம் காட்டுகிறார்.

“உலகமயமாக்கல் தத்துவத்தில் இறக்குமதியாளரின் சட்டங்கள் ஒவ்வொன்றாய் திருப்பூருக்கு உள்ளே வர, நிறுவன முதலாளிகள் தங்களின் வாலைச் சுருட்டிக் கொள்வதை தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை . நிறுவனங்களின் உள்ளே பணிபுரிபவர்களின் வயது கணக்கெடுக்கப்பட்டது. தொழிலாளிகளின் அடிப்படை வாழ்வாதார வசதிகள் சோதிக்கப்பட்டது. 

சோதித்த முடிவு சாதகம் என்றால் ஒப்பந்தம். இல்லையென்றால் நிறுவனங்களுக்குப் பாதகம்.. நிறுவனத்தின் கழிப்பறை சுத்தம் முதல் பணியாளர் வசதி வரை கண்கொத்திப் பாம்பாய் இறக்குமதியாளர்கள் கவனிக்கும் போது முதலாளிகளால் என்ன செய்து விட முடியும்? இன்றைய நவீன வசதியில் நேரடி ஒலி ஒளி காட்சியாய் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு திருப்பூரில் உள்ள நிறுவனத்தின் மொத்த நிர்வாகத்தையும் தனக்குள் வைத்துக்கொள்ளும் இறக்குமதியாளர்களும் உண்டு. 

இறக்குமதியாளர்களின் வெளிப்படையான ஒப்பந்தம் குறித்து.... 
...
“ நான் இப்படித் தான். இது தான் எனக்கு வேண்டும். உனக்கு என்ன தேவை? அப்படியா? இது தான் என்னால் முடியும்? உனக்கு வாய்ப்பு இருக்கா இல்லையா? சரி இதை வைத்துக் கொள்? இதுதான் இதற்கான சட்டதிட்டம். மாறாதே........ நீ மாறினால் நானும் வேறு பக்கம் மாற்றிக் கொள்வேன். எளிமையான சட்டதிட்டம். அதற்கு நீங்கள் சுயநலம், பொதுநலம் போன்ற எத்தனை பெயர்களை வைத்துக்கொண்டாலும் அவர்கள் கவலைப்படுவது இல்லை. 

மேலும் ஏற்றுமதி – இறக்குமதியில் விளையாடும் அரசியல் பற்றியும் கோடிட்டு காட்டுகிறார்.

திருப்பூர் தொழிலாளர்கள்:

திருப்பூர் என்றாலே உழைப்பு என்று அழைப்பு தருகிறார்.

“தூங்கா நகரம், கோவில் நகரம், என்ற பெயர்கள் மதுரைக்கு இருப்பது போலவே திருப்பூரும் நிட் சிட்டி, டாலர் சிட்டி, பின்னாலாடை நகர், பனியன் நகரம் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஆயத்த ஆடைகளின் (HOSIERY GARMENTS) உற்பத்தியை நம்பி மட்டுமே இந்த நகர் இயங்கிக் கொண்டிருக்கிறது. வெளிநாட்டுக்கு ஏற்றுமதி அல்லது உள்நாட்டுக்கு தேவைப்படும் ஆடைகள் என்று  இரண்டு விதங்களில் இங்குள்ளவர்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.” 

”தினந்தோறும் எட்டு மணி நேரம் தான் என்னால் உழைக்க முடியும்? என்பவர்கள் இந்த ஊர்ப்பக்கம் எட்டிப்பார்க்காமல் இருப்பது நல்லது.  தினந்தோறும் 16 மணிநேர உழைப்பு என்பது இங்கு சர்வசாதாரணம். “

புதுக்கோட்டை பக்கம் ஆலங்குடி அருகே உள்ள ஒரு கிராமம்தான் கருணாகரனுக்கு சொந்த ஊர். படிப்பு வரவில்லை என்று திருப்பூருக்கு வந்த அவன் ஆரம்பத்தில் செய்த வேலை தினக் கூலிக்கு காஜா பட்டன் அடிப்பது. அவன் தனது உழைப்பால் முன்னேறி பெரிய ஆளாகிய கதையை எடுத்துக் காட்டுகிறார்.

பணம் துரத்திப் பறவைகள்  என்ற தலைப்பில் திருப்பூர் தொழிலாளர்களது நிலையக் காட்டுகிறார். அதில் ஆண் தொழிலாளர்களை மட்டுமன்றி பெண் தொழிலாளர்களைப் பற்றிய விவரங்களையும் வெளிப்படையாகவே பேசுகிறார்.

” பெண்களின் பணி நேரமென்பது, தினமும் காலை எட்டு மணிக்குள் நிறுவனத்திற்குள் இருக்க வேண்டும். காலை ஐந்து மணிக்குள் சமையல் செய்தாக வேண்டும். இதற்கிடையே பெண்களின் மற்றொரு வேலையில் கவனம் வைத்தாக வேண்டும். தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அவசரமாய் டப்பாவில் காலைக்கும் மதியத்திற்கும் சேர்த்து உணவை அடைத்துக் கொண்டு எடுத்துச் செல்ல வேண்டும். இரவு ஒரு மணி வரைக்கும் வேலையென்றால் நிறுவனங்களுக்கருகே கிடைக்கும் இரண்டு புரோட்டாக்கள் தான் உணவாகயிருக்கும். நள்ளிரவு வேலை முடித்து வந்தாலும்,  மறுநாள் காலை , எப்போதும் போல , காலை ஐந்து மணிக்கு எழுந்து தங்கள் கடமைகளைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் காலை எட்டு மணி வேலைக்கு செல்லமுடியாது. இரவு எத்தனை மணிக்கு வேலை முடிகின்றது ? என்பது முக்கியமல்ல. மறுநாள் காலை எட்டு மணிக்கு நுழைவது தான் முக்கியமாக இருக்கும். அரை மணி நேரம் தாமதம் என்றாலும் உள்ளே அனுமதிக்கமாட்டார்கள். “ 

மேலும்  தொழிலாளர்களது குடியிருப்புகள், அங்கும் வேலை பார்க்கும் இடங்களிலும்  நடக்கும் பாலியல் குற்றங்கள், கட்டை பஞ்சாயத்துக்கள் குறித்தும் அத்தியாயம் – 21 இல்” காமம் கடத்த ஆட்கள் தேவை” என்ற தலைப்பில் பேசுகிறார்.
.
திருப்பூர் இடைத் தரகர்கள்:

இப்போது  எல்லா மட்டத்திலுமே  இடைத் தரகர்கள் ஊடுருவி விட்டார்கள். மந்திரி பதவி வாங்கித்  தருவதற்கு  கூட ஆட்கள் இருக்கிறார்கள். 

திருப்பூர் மட்டும் இதற்கு விதிவிலக்கா? என்ன?

நிறுவனதாரர்களும் தொழிலாளிகளும் உழைத்து உருவாக்கும் திருப்பூரில் எல்லாவற்றிற்கும் இடைத் த்ரகர்களே முன் வந்து நிற்கிறார்கள். “ தரகர்கள் எனும் தரமற்ற கூட்டம் ( அத்தியாயம் – 4.) “ என்ற தலைப்பில் இடைத் தரகர்களின் மோசடித்தனங்களை சொல்லுகிறார்.

திருப்பூரில் வேலை வாய்ப்பு, மார்க்கெட்டிங்:

திருப்பூர் செல்லும் அனைவருக்கும் வேலை கிடைத்து விடுமா? இந்த வேலை வாய்ப்பை வைத்து நடக்கும் மோசடிகள் குறித்தும் அலசுகிறார்.” 

வேலை காலி இருக்கு ” என்ற பக்கங்களைப் படியுங்கள். 

 “ சந்தைக்கு போகலாம் வாரீங்களா ? “ என்று மார்க்கெட்டிங் முறைகளைப் பற்றி விவரிக்கிறார். மார்க்கெட்டிங் பற்றி ஆராயும் மாணவர்களுக்கு தேவையான குறிப்புகள்.

முடிவுரை:

ஆசிரியர் ஜோதிஜி (திருப்பூர்) அவர்கள் எழுதிய “டாலர் நகரம்” –  என்ற நூல் அனைவருக்கும் பயன்படக் கூடியது.  எனவே இந்நூலை  ஆங்கிலம், ஹிந்தி போன்ற பிற மொழிகளிலும் மொழி பெயர்க்க வேண்டும். ஒரு ஆராய்ச்சி நூல் போல பல விவரங்கள் அடங்கிய இந்த நூலுக்காகவே ஆசிரியருக்கு “முனைவர்” பட்டம் தரலாம்.

நூல் வெளியீடு: 4தமிழ்மீடியா படைப்பாய்வகம்
நூலின் விலை ரூ 190/ பக்கம் – 248  

புத்தகம் வாங்க

புத்தக விமர்சனங்கள்



Sunday, March 03, 2013

கடுகு சிறிது. காரம் அதிகம்

பிரபல பதிவர்களைப் படிக்கும் பிற பல  பதிவர்களில் நானும் ஒருவன். திடங்கொண்டு போராடு  என்னும் தலைப்பில் எழுதி வருகிறேன். 

தேம்பி அழும் குழந்தை நொண்டி - நீ  
திடங்கொண்டு போராடு பாப்பா  

என்று பாரதி சொன்ன வரிகளை தலைப்பாக மாற்றிக் கொண்டேன்.

பெரிதினும் பெரிது கேள், 

ரௌத்திரம் பழகு 

போன்ற பாரதியின் தலைப்பை மற்ற நண்பர்கள் எடுத்துக் கொண்டதால் நான் திடங்கொண்டு போராடுகிறேன்.

திடங்கொண்டு போராடு சீனு (டாலர் நகரம் புத்தக விமர்சனம்)

முன்குறிப்பு

டாலர் நகரம் புத்தகத்தில் இடம் பெற்ற ஜோதிஜியின் எழுத்துக்கள் நீல நிறத்தில் 

டாலர் நகரம். இருநூறுக்கும் அதிகமான பக்கங்களை உடைய சற்றே பெரிய புத்தகம். முதலில் புத்தகத்தைப் பார்த்த பொழுது சற்றே மலைப்பாய் இருந்தது. 

பொழுது போக்கிற்காகப் படிக்கும் புத்தகங்களுக்கும்,'குறிப்பிட்ட ஒரு விசயத்தைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்' என்பதற்காகப் படிக்கும் புத்தகங்களுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.

ஜோதிஜி எழுதி இருக்கும் டாலர் நகரம் இரண்டாவது ரகம்.

உண்மையை சொல்லவேண்டும் என்றால் முதலில் படிக்கும் பொழுது ஒரு சில இடங்களில் சலிப்பு தட்டியது என்னவோ உண்மை, 

ஆனால் புத்தகத்தை மீண்டும் ஒருமுறை புரட்டும் பொழுது தான் அதில் ஜோதிஜியின் உழைப்பு மிக தெளிவாக தெரிந்தது. 

திருப்பூர், திருப்பூர் சார்ந்த தொழிற்சாலைகள், அதிகார வர்க்கத்திற்கும், அரசியல் வர்க்கத்திற்கும் இடையில் பலிகடாவாகும் திருப்பூர் சார்ந்த மக்கள் என்று அனைத்து தளங்களிலும் இந்தப் புத்தகம் பயணிக்கிறது. 
  
கல்லூரிப் படிப்பு முடிந்ததும் ஒரு சாதாரண மனிதனாக திருப்பூருக்குள் நுழைந்தவர், தன் அசாதாரணமான உழைப்பின் மூலம் திருப்பூர் உற்பத்தி உலகத்தின் மிக முக்கியமான சக்தியாக உருவெடுத்துள்ளார். அவர் கடந்து வந்த பாதைகளின் மூலம் டாலர் நகரத்தை முழுமையாக சுற்றிக் காட்ட முயன்றுள்ளார்.

"சுற்றிக் காட்ட முயன்றுள்ளார்" என்று நான் கூற காரணம் வீடு சுரேஷ் அவர்களின் விமர்சனம் தான், 

ஒருவேளை அவரது விமர்சனத்தை படிக்காமல் டாலர் நகருக்குள் நுழைந்திருந்தால் "சுற்றிக் காட்ட முயன்றுள்ளார்" என்பதற்குப் பதிலாக சுற்றிக் காட்டியுள்ளார் என்று தான் எழுதியிருந்திருப்பேன். 

ஜோதிஜியின் ஆரம்பகட்ட வாழ்க்கை தோல்விகளை மட்டுமே அடித்தளமாகக் கொண்டு ஆரம்பித்ததால், புத்தகம் முழுவதுமே சில தன்னம்பிக்கை வார்த்தைகளை ஆங்காங்கே பதிவு செய்துள்ளார்.  

என்னுடைய திட்டமிடுதலும், விருப்பங்களும் நிறைவேறாத ஆசையாகவும், கனவாகவும் தான் தொடர்ந்தது. ஆனால் விடா முயற்சிகளை மட்டும் நான் பத்திரப்படுத்தி வந்தேன். 

திருப்பூர் பற்றி நான் அறிந்தது, கொடிகாத்த குமரன், உள்ளாடைகள் உற்பத்தியாகும் இடம், சாயக் கழிவால் நொய்யலாறை முடமாக்கி விவசாயிகளை நடக்க விடாமல் செய்த மற்றும் செய்து கொண்டிருக்கும் இடம், தமிழகத்தின் முக்கியமான ஏற்றுமதி நகரம் மற்றும் தொழிற்களம் தளத்தின் இயங்குதளம். 

ஓட்டுமொத்த தமிழகமும் தற்போது இந்தியாவும் திருப்பூரை தேடி வருவதற்கான முக்கியமான காரணம்,"முக்கால்வாசிப் பேர்கள் தங்களுடைய குடும்பக் கடன் தொல்லைகள் பொறுக்க முடியாமற் தான் திருப்பூருக்கு வருகிறார்கள்." என்று ஜோதிஜி குறிப்பிடுவது நானும் நேரிடையாக அறிந்து கொண்ட உண்மை., 

குடும்ப சூழலும், திருப்பூர் வேலை வாய்ப்புகளும் ஒரு குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேருக்கும் வேலை கொடுத்து விடுவதால் திருப்பூர் முழுவதும் ஒரு அசாதரணமான சூழல் நிலவுவதை இந்தப் புத்தகம் தெளிவாகக் காட்டுகிறது.

உழைப்பிற்குப் பெயர் போன திருப்பூரின் மற்றொரு முகம் சோகமும் கொடூரமும் சமவிகிதத்தில் கலக்கப்பட்ட, விடைதெரியா வாழ்வாதாரக் கேள்விகளை சுமந்து கொண்டு நிற்கும் நகரமாக இருக்கிறது.     

பெண்களும் குழந்தைகளும் வேலைக்குச் செல்வதால் குடும்பத் தலைவனின் குடும்ப பாரம் சற்றே குறைகிறது, ஆனால் அவனோ புகை மது மாது என்று தடம் மாற அவன் மனைவியின் தலையில் மொத்த பாரமும் விழுகிறது. 

காலை எட்டு மணி வேலைக்குச் செல்வதற்கு முன், குடும்பத்திற்கு, குழந்தைகளுக்கு தேவையான முன்னேற்பாடுகளை அதிகாலையிலேயே எழுந்து செய்தாக வேண்டும். மூன்றுவேளைக்குமான உணவு, குழந்தைகள் பள்ளி செல்வதற்கான ஏற்பாடுகள் அத்தனையையும் செய்திருக்க வேண்டும். இவற்றைக் கடந்து வேலைக்கு சென்றால் அங்கே ஆண்வர்க்கம் தரும் காம தொல்லைகள். தேவைபட்டால் பின்னிரவு வரையிலும் வேலை பார்க்க வேண்டிய சூழலில் சிக்கித் தவிக்கும் பெண்கள். பின்னிரவு கடந்து வீடு வந்தாலும், அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து அதே போன்ற மற்றுமொரு நாளில் சிக்கித் தவிக்க வேண்டிய சூழல் தான் திருப்பூர் வாழ் பெண்களுக்கு.

அப்பா அம்மா இருவரும் வேலைக்கு செல்வதால், அரவனைக்கப்பட வேண்டிய குழந்தைகள் தறிகெட்டுசெல்ல நேர்கிறது, பின் அவர்களும் வேலைக்கு செல்ல, கிடைக்கும் வருமானத்தை என்ன செய்வதென்று தெரியாமல் தவறான வழிகளில் செலவிடுகிறார்கள். 

திருப்பூரில் வேலைக்கு செல்லும் பெண்களின் நிலைமை நினைத்துப் பார்க்கவே கஷ்டமாய் இருக்கிறது. 

ஜோதிஜியின் எழுத்துக்களில் திருப்பூர் பெண்கள்,

சில சமயம் வேலை முடித்து ஒன்பது மணிக்கு உள்ளே நுழையும் அம்மாவின் குரலை, பாதி தூக்கத்தில் காதுகள் கேட்கும்.. குழந்தைகளின் மூளை உணராது. 12 மணி நேரமும் நின்று கொண்டே பார்த்த வேலையின் காரணமாக வீட்டுக்கு திரும்பி வரும்பொழுது பாதி உயிருடன் தான் வந்து சேர முடியும். 

வீட்டுக்குள் நுழையும் போது மூலைக்கொன்றாய் புரண்டு கிடக்கும் குழந்தைகளின் பாசத்தை விட, அவளின் உயிர் கேட்கும் பசியே, பிரதானமாய் இருக்கும். குழந்தைகள் கொட்டி கவிழ்த்து இருந்தால் கூட திட்ட முடியாமல், இருப்பதை உண்டு ஓரமாய் சுருள வேண்டும். காலையில் எழும் போது, காதுக்குள் கேட்கும் இரைச்சல் காணமல் போய் இருக்கும்.                

வாரத்தில் எந்த நாளில், பொதுக் குழாயில் குடிதண்ணீர் வருமென்று இங்குள்ள மாநகர மேயருக்கும் தெரியாத ரகசியமாய் இருக்கிறது. உடைபட்ட குழாய்கள் தாண்டி, ஒழுகிய தண்ணீர் போக, வரக்கூடிய தண்ணீர் வாராவாரம் என்பது மாறி சிலசமயம் மாதம் கூட ஆகலாம். 

அதனால் என்ன?

நாலு சந்து தாண்டி போனால், நடு சாமத்தில் அமைதியாய் பிடித்து வர, வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு தெம்பு இருக்கிறது. இவர்களிடம் ஓட்டு வாங்கி அடுத்த முறையும் ஆட்சியைப் பிடித்து விடலாமென்று ஊரெங்கும் கழுதை கூட திங்க முடியாத பிளக்ஸ் போர்ட் கட்ட அரசியல்வாதிகளிடம் பணமும் இருக்கிறது. 

காமப் பார்வைக்கு பலியாகும் பெண்களின் நிலை குறித்து 

எவருக்கும், எந்த குற்ற உணர்வும் தோன்றாத அளவிற்கு, சராசரி சிந்தனைகளுடன் கலந்துவிட்டது. தற்போது பாலுணர்வு என்பது பண்டமாற்று மிறை போல் ஆகிவிட்டது. 

பணிபுரியும் படித்த பெண்கள், தாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இது போன்ற நரக வேதனையை தாண்டி தான் வர வேண்டும். பலர் தாண்டி வருகிறார்கள். சிலர் ஆசைகளுக்காக தங்களை மாற்றிக் கொண்டு விடுகிறார்கள். பெண்களை தங்கள் இச்சைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளும் சில முதலாளி அம்மாக்களும் இதில் அடக்கம்

முறையான நிர்வாகமின்மை, தரகர்கர்கள் தரும் தொல்லை, குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க ஏற்படும் இடையூறுகள், குடும்ப உறுப்பினர்களின் நிர்வாக தலையீடல், தொழிலாளர்களுக்குள் நடைபெறும் உள் அரசியல் என்று தொழிற்சாலைகளுக்குள்ளும் அசாதாரணமான சூழலே நிலவுகிறது.   

பல லட்சங்கள் முதலீடு மற்றும் பல தொழிலாளர்களை நிர்வாகம் செய்து தொழிற்சாலை நடத்தும் நிர்வாகம் கூட மூளையையும், ஆங்கில அறிவையும் மட்டுமே மூலதனமாக கொண்டு செயல்படும் தரகர்கள் முன் அடிபணிந்து போக வேண்டிய ஒரு வித்தியாசமான சூழல் நிலவுகிறது. அத்தகைய தரகர்கள் பற்றி ஜோதிஜி குறிபிடுவது 

அவருக்கு மெசர்மென்ட் டேப் பிடித்து ஆடைகளை அளக்கத் தெரியாது. துணிகளுக்கு இடையேயான வித்தியாசம் தெரியாது. மொத்தத்தில் இந்தத் தொழில் குறித்து எந்த அறிவும் இல்லை. கற்று வைத்துள்ள ஆங்கில அறிவின் மூலம் இரண்டு மாதத்தில் நான்கு லட்ச ருபாய் கிடைத்து இருக்கிறது. நான் இந்தத் தொகையை சம்பாதிக்க வேண்டுமென்றால் குறைந்தது இரண்டு வருடங்களாவது உழைக்க வேண்டும். இது தான் இந்த தொழிலின் சாபக் கேடு. 

தொழிற்சாலைகளுக்கு தேவையான பல லட்சம் லிட்டர் தண்ணீர் பூமியில் இருந்து உறிஞ்சப்படுகிறது, நிலத்தடி நீர் வற்ற வற்ற ஆழ்துளைக் குழாய்கள் இன்னும் இன்னும் ஆழமாய் சென்று கொண்டுள்ளன. விவசாயம் படுத்துவிட்டது, விவசாயத்திற்கு தேவையான குடிநீர் முற்றிலும் சாய நீராக மாற்றப்பட்டு விவசாய பூமி முழுமையான சாய பூமியாக மாற்றப்பட்டுவிட்டது.

சாயப்பட்டறைகளை மூடும்படி விவசாயிகள் போராடுகிறார்கள், சாயநீர் சுத்திகரிகபட்டு மீண்டும் உபயோகப்படுத்தும் படியாக மாற்றப்படுகிறது என்று நிர்வாகம் உறுதி கூறினாலும் அவர்கள் எப்படியெல்லாம் அரசாங்கத்தை ஏமாற்றுகிறார்கள் அல்லது வளைத்துப் போட்டுள்ளார்கள் என்பதை தெளிவாக எழுதியுள்ளார்.   

தொழிற்சாலை கழிவுகள் மொத்தமாக திருப்பூரை பாழ் செய்துவிட்டது. அதுபற்றி 

பல நாட்கள் கழித்து மழை பெய்ய, மழை நீருடன் சாயக் கழிவு நீரும் ஒன்றாக சேர்ந்து விட, நீரனைத்தும் பாழாகிப் விடுகிறது. ஒரத்துப்பாளையம் அணையில் ஒரே நாளில் 20 அடி உயரும் சாயக் கழிவு கலந்த நீரால், யாருக்கும் எந்தப் பயனும் இல்லை.

மத்திய அரசாங்கத்தின் பொறுப்பில்லாத வர்த்தக மற்றும் ஏற்றுமதிக் கொள்கைகள் திருப்பூரை நலிவடைய செய்து கொண்டே உள்ளது என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டு உள்ளார். உலக சந்தையில் போட்டி நாடுகள் நம்மை போட்டி போட்டு முந்திக் கொண்டிருக்கும் வேளையில் சிங் அரசு இன்னும் சைலண்ட் மோடிலேயே இருப்பது வருங்கால திருப்பூருக்கும் இந்தியாவிற்கும் ஆபத்து, தனது மொத்த கோபத்தையும் ஒற்றை வரியில் வெளிப்படுத்தி இருக்கிறார் ஜோதிஜி. 

ஜட்டி போடாமல் இருக்க பழகிக் கொள்ளுங்கள் அது பின்னால் உங்களுக்கு உதவக்கூடும். 

எவ்வளவு தொழிற்சாலைப் பிரச்சனைகள் இருந்தாலும் பிழைக்க தெரிந்த முதலாளிகள், அரசியல் தெரிந்த முதலாளிகள் பிழைத்துக் கொண்டு தான் இருகிறார்கள்.

"இன்றைய திருப்பூர் ஏற்றுமதியில் முதன்மை இடத்தில் இருக்கும் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 700 முதல் 800 கோடிக்குள் உங்களுக்குப் பிடித்த எண்களை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் வருத்தப்பட மாட்டார்கள்." என்று ஜோதிஜி குறிப்பிடும் இந்த வார்த்தைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.    

மேலும் அந்த பணம் தின்னும் முதலாளிகள் விரும்புவது கீழ்க்கண்ட வார்த்தைகளைத் தான் 

நீ உழைத்துக் கொண்டே இரு. இரவு பகல் பாராமல் உன்னால் உழைக்க முடியுமா? முழு இரவும் முழித்து வேலை பார்த்துவிட்டு மறுநாள் காலை  எட்டு மணிக்கு வந்து நிற்க முடியுமா? நீ தான் முதல் தகுதியாளன். நாளை செத்துவிடப் போகிறாயா? நல்லது? உன் தம்பியை கொண்டு வந்து சேர்த்து விட்டு செத்துப் போ. எட்டு மணி நேர நிர்வாக அமைப்பா? அது எதற்கு? சொன்னதை செய். சட்ட திட்டங்கள், அரசு அதிகாரிகள்? அவர்கள் கிடக்கிறார்கள். அவர்கள் வந்து இறங்கும் பொது பார்த்துக் கொள்ளலாம்.             

ஜோதிஜியிடம் சில கேள்விகள் அல்லது வேண்டுகோள்கள் 

இது விறுவிறுப்பான கதை சொல்லும் புத்தகம் அல்ல. விசயங்களை தெரிந்து கொள்வதற்கான புத்தகம் அதனால் சில இடங்களில் மீண்டும் மீண்டும் வரும் சில பகுதிகளை வெட்டி இருக்கலாம்.

ஆங்கிலப் பள்ளியும் அரை லூசுப் பெற்றோரும் என்னும் பகுதி சிறப்பான கட்டுரையாக இருந்தாலும் அந்தக் கட்டுரைக்கும் டாலர் நகரத்திற்கும் தொடர்பு இல்லை, புத்தகம் படிக்கும் பொழுது அதன் வேகத்தை இது தடுப்பது போல் இருந்தது. அதில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். 

திருப்பூர் பஞ்சாலை நூற்பாலை நிட்டிங் செக்சன் போன்றவற்றை புத்தகம் மூலம் சுற்றிப் பார்த்துவிட்டேன், நேரில் பார்க்க வாய்ப்பு கிடைக்குமா. (இது சற்றே தனிப்பட்ட அவா)...  

திருப்பூர் உங்களை இனிதே வரவேற்கின்றது. டொங்...டொங்...

என்னுடைய பார்வையில் 
   
டாலர் நகரம் - நம்மைத் தொட்டுக் கொண்டிருக்கும் உள்ளாடைகளைப் பற்றிய புத்தகம் அல்ல இது, ஆடை உற்பத்திக்காக உழைக்கும் மக்களின் வாழ்வியலை தொட்டுச் செல்லும் புத்தகம். திருப்பூர் பற்றி தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் தைரியமாக வாங்கிப் படிக்கலாம்.   

டாலர் நகரம் புத்தகம் வாங்க நினைக்கும் நண்பர்கள் ஜோதிஜியின் எண்ணையும் 94431 71966, சென்னையை சேர்ந்த நண்பர்கள் எனது 99402 29934 எண்ணையும் தொடர்பு கொள்ளவும். 

டாலர் நகரம் - ஜோதிஜி - 4தமிழ்மீடியா வெளியீடு- விலை 190   

புத்தக விமர்சனங்கள்