Monday, August 06, 2012

அடுத்த தலைமுறை தமிழ் -- OCR (Optical Character Recognition)

OCR (Optical Character Recognition) ஓசிஆர் மென்பொருள்களின் முக்கிய நோக்கம் பழைய ஆவணங்கள், புத்தகங்கள் போன்றவற்றை ஸ்கேன் செய்து அவற்றை மீண்டும் புதிய வகையில் பதிப்பிப்பதற்காக, திருத்தம் செய்யும் வகையிலான கோப்புகளாக உருவாக்குவதே ஆகும். மேலும் கோப்புகளை விரும்பும் வகையில் ஃபார்மெட் செய்யலாம், பல்வேறு டிவைஸ்களில் பயன்படுத்தும் வகையில் கோப்புகளை மாற்றியமைக்கலாம். 

ஆங்கிலத்தில் ஏராளமான வர்த்தகரீதியான மற்றும் கட்டற்ற இலவச மென்பொருள்கள் ஏராளமாக உள்ளன. ஆனால் இந்திய மொழிகளில், அதுவும் தமிழ் மொழியில் சிறப்பான ஓசிஆர் மென்பொருள் இதுவரை உருவாக்கப்படவில்லை.

ஏன் உருவாக்கப்படவில்லை? என ஒரு கேள்வி எழலாம். அதற்கு ஓரளவிற்கு இந்த கட்டுரை பதில் கூறும். தமிழ் ஓசிஆர் மென்பொருள் உருவாக்கப்படுவதில் எழக்கூடிய இடையூறுகள் பற்றி காண்போம்.

Scan:
பெரும்பாலும் ஓசிஆர் மென்பொருட்களின் முக்கிய நோக்கமே பழைய ஆவணங்களை புதுப்பிப்பதே ஆகும். எனவே அவ்வகை பழைய ஆவணங்களின் பதிப்பு சற்று சேதப்பட்டு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். எனவே இவ்வகை ஆவணங்களை ஸ்கேன் செய்யும்பொழுது அதில் தெளிவற்ற படங்கள் கிடைக்கும் வாய்ப்பு அதிகமாகின்றது. இந்த தெளிவற்ற படங்களிலிருந்து ஓசிஆர் மென்பொருள் மூலம் துல்லியமான எழுத்து வடிவங்களை கொண்டு வருவது என்பது மிக கடினமான வேலையாகும்.

Font:
தமிழில் Unicode, Non-Unicode என இருவகைப்பட்ட ஃபோண்ட்கள் உள்ளன. யுனிகோட் வகை ஃபோண்ட்களை இணையத்தில் பரவலாக பயன்படுத்தி வருகிறோம். புத்தக பதிப்புகளுக்காக பயன்படுத்தப்படும் மென்பொருட்கள் இந்த யுனிகோட் வகை ஃபோண்ட்களை சப்போர்ட் செய்வதில்லை. எனவே இப்படிப்பட்ட மென்பொருட்களில் non-unicode வகை ஃபோண்ட்களே பயன்படுத்தப்படுகின்றது. இவற்றிலும் tscii, tab, tam, shrilipi போன்று பலவகையான ஃபோண்ட்கள் உள்ளன. ஒவ்வொரு பதிப்பாளரும் தனக்கென ஒவ்வொரு வகையான ஃபோண்ட்களை பயன்படுத்துகின்றன. எனவே ஓசிஆர் உருவாக்கப்படும்போது ஒவ்வொன்றின் எழுத்து வடிவம், அவற்றின் நுணுக்கமான வேறுபாடுகள் என எல்லாவற்றை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது.

Script:
Inline image 1
தமிழ் மொழியின் எழுத்து வடிவமைப்பு ஓசிஆர் உருவாக்கத்தில் மிகவும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய அம்சமாகும். மேற்கண்ட படத்தில் காணுமாறு எழுத்துக்கள் மூன்று பிரிவுகளை கொண்டதாக அமைகின்றது. மேல்பகுதி மற்றும் கீழ்பகுதி பிரிவில் வரும் வளைவுகள் எந்தெந்த எழுத்துக்களுக்கு எப்படி வரும் என்பதையும் நடுவில் உள்ளவற்றோடு அவற்றை ஒத்திசைத்து முழு எழுத்தாக வெளிக்கொண்டு வருவது ஓசிஆர் நுட்பத்தில் மிகவும் கடினமான செயலாகும். மேலும் கா, மெ, போன்ற துணையெழுத்துகள் வரும் எழுத்துக்களை இணைத்து கொண்டு வருவதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியாதகும். இவை தவிர, தமிழ்மொழியில் ஏற்படும் ல-வ, க-சு, ன-ள போன்ற எழுத்துக்களின் வடிவ ஒற்றுமை பல சமயங்களில் குழப்பம் விளைவிக்கும் ஒன்றாகும்.

மேலும் italic, bold போன்ற ஸ்டைல்கள் கலந்து வருவது, பலவகை ஃபோண்ட்கள் கலந்து வருதல், பல்வேறு எழுத்து அளவுகள் கலந்து வருதல், பழைய கிரந்த எழுத்துகள் கலந்திருத்தல், படங்கள் இணைந்திருத்தல், column பிரச்சினை போன்ற எல்லா வகையான இடையூறுகளை சமாளிக்கும் வகையிலான மென்பொருள் தயாரிக்கப்பட வேண்டும்.

இதுவரை தமிழ் ஓசிஆர் மென்பொருள் வளர்ச்சியில் எடுக்கப்பட்டுள்ள முயற்சிகளைக் காண்போம். 2002ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு PonVizhi எனும் தமிழ் ஓசிஆர் மென்பொருளை வெளியிட்டது. இந்த மென்பொருள் ஆவணங்களின் ஸ்கேன்கள் துல்லியமாக இருந்தால் 90% சிறப்பாக எழுத்துக்களை பிரதியெடுக்கின்றன. இருந்தபோதிலும் இந்த மென்பொருள் ஒரு ஆரம்ப நிலை மென்பொருளாகவே இருக்கின்றது. இதுவரை இதில் பெரிதான மேம்பாடுகள் எதுவும் வரவில்லை. இதுபோக இணையத்தில் gTamilOCR எனும் மென்பொருளும் கிடைக்கின்றது. இது எவ்வகையில் செயல்படுகின்றதென தெரியவில்லை.

ஒரு முழுமையான தமிழ் ஓசிஆர் மென்பொருளை உருவாக்க மென்பொருள் வல்லுநர்கள் முனைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழ் மட்டுமின்றி இந்திய மொழிகள் பலவற்றிற்கும் ஓசிஆர் மென்பொருட்கள் உருவாக்கும் பணிகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. புதிதாக முயற்சிப்பவர்களுக்கும், அதற்கான அடிப்படை மூலங்களும் தேவையான தகவல்களுக்கும் இணையத்தில் ஏராளமாக கிடைக்கின்றன. கடினமான உழைப்பு மற்றும் முயற்சியுடன் முனைந்தால் நிச்சயம் மேற்கண்ட அனைத்து இடையூறுகளையும் சரிசெய்யும் வகையிலான மென்பொருளை உருவாக்குவது சாத்தியமே. ஆனால் அதற்கு எவ்வளவு காலம் ஆகும் என தெரியவில்லை. இம்முயற்சி வெற்றியடைந்தால் அடுத்ததாக கையெழுத்துப் பிரதிகளை படியெடுக்கும் Handwriting recognition மென்பொருள் உருவாக்கத்திற்கு அடியெடுத்து வைக்கலாம். 

Friday, August 03, 2012

காப்பது கடமை

வாழ்நிலைகளை கல்வெட்டுக்கள் மூலமும், செப்பேடுகள் மூலமாகவும், ஆவணப்படுத்தி வந்த தமிழர்களின்   ஆவணப்படுத்தல் என்பது காலவோட்டத்தில் அருகி வருகிறது. அதற்கான முன்னேற்பாடு செய்பவர்களை ஆதரிப்பது என்பதும்  குறைந்து வருகிறது. 

காலம் காலமாக இப்படித்தான் தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகள் தேய்ந்து வந்துள்ளது. எஞ்சியுள்ள சான்றுகளை வைத்துதான் மூத்தகுடி தமிழர்களின் வாழ்க்கை தடங்களை நம்மால் உணர முடிகின்றது. ஒரு தலைமுறை முடிந்து அடுத்த தலைமுறைக்கு இந்த ஆவணங்கள் கடத்தப்படுவதில்லை. அதன் அவசியமும் உணரப்படுவதில்லை. 

இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியில் ஆவணப்படுத்தலை இலகுபடுத்தலுக்கான ஏராளமான சாத்தியக்கூறுகள் நம்மிடம் உள்ளது. மனமிருந்தால் மார்க்கமுண்டு. 

ஆனாலும், ஒவ்வொன்றுக்கும் பின்னாலும் ஓராயிரம் காரணங்கள்.

உத்தேச கணக்காக இந்த உலகம் 460 கோடிகள் ஆனது. இந்த உலகத்தில் முதல் மனிதன் தோன்றி 30 லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்டது. தன்னுடைய பிரச்சனையை உணரத் தொடங்கி, மனிதன் மிருகத்தன்மையில் இருந்து மாறி 50 ஆயிரம் ஆண்டுகள் ஆகி உள்ளதாக மானிடவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அந்த 50 ஆயிரம் ஆண்டுகள் என்பது ஏறத்தாழ உத்தேச கணக்காக 600 தலைமுறைகள். 

இதில் கவனிக்க வேண்டியது என்ன தெரியுமா? 

ஏறக்குறைய 36 ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வெளி உலகம் ஏதும் தெரியாமல்  தன்னுடைய குறைகள் ஏதும் தெரியாமல் குகைக்குள்ளேயே வாழ்ந்து கழித்து இருக்கின்றான்.

கடந்த 70 தலைமுறைகளில் தான் எழுத்து, பேச்சு, விவசாயம் போன்ற அத்தனை முன்னேற்றங்களும், குறிப்பாக ஆறு தலைமுறைக்கு முன்னால் தான் அச்சடித்த வார்த்தைகள், எழுத்துக்கள் என்று அத்தனை முன்றேங்களும் நிகழ்ந்துள்ளது. அச்சடித்த வார்த்தைகள் உருவான பின்பு தான் நாகரிகம் என்பது மிக வேகம் பிடித்து ஓடத் தொடங்கியது. 

ஆனால் இந்த கால கட்டத்தில் எத்தனை மொழிகள், கலாச்சாரம், பண்பாடுகள், எழுத்துக்கள் உருவாகி உள்ளது என்பது யோசித்துப் பாருங்கள்? 

வாழ்ந்த மக்களை எத்தனை விதமாய் புடம் போட்டு பார்த்து இருக்கிறது. ஆனாலும் இந்த தமிழ் மொழி இன்று வரையிலும் சுட்ட தங்கம் போல ஜொலிப்பாய் தான் விளங்கிக்கொண்டு இருக்கிறது.

அமெரிக்காவின் மிக உயர்ந்து பொக்கிஷமாக கருதப்படும் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் போல முப்பது மடங்கு பெரிதான பிரமிடுகளை தந்த எகிப்தியர்களின் எகிப்திய மொழி எங்கே போயிற்று?

3000 ஆண்டுகளுக்கு முன்னால் உலகில் சிறந்த மொழி சமஸ்கிருதம் தான் என்று சொல்லப்பட்ட மொழியின்  இன்றைய நிலை என்ன ?

மாபெரும் வல்லரசை உருவாக்கிய ரோமபுரி மன்னர்களின் இலத்தின் மொழியை இன்று காணவில்லை?

புத்தர் பரப்பிய பாலி மொழி, மகா அலெக்சாண்டர் பேசிய கிரேக்க மொழி, ஏசு நாதரின் கிப்ரூ மொழி என்று இன்று வரையிலும் நீண்ட பட்டியல் உண்டு.

இவையெல்லாம் காத்திருப்பு பட்டியல் அல்ல? காணாமல் போன மொழிகளின் பட்டியல்? 

ஆனால் தமிழனின் தமிழ்மொழி?

இன்று வரையிலும் எத்தனையோ வேடதாரிகள் நாங்கள் தமிழை வளர்க்கின்றோம் என்று சொல்லியே தங்கள் குடும்பங்களுக்கான சொத்துக்களை வளர்த்துக் கொண்டார்களே தவிர வேறொன்றும் பெரிதாக நடக்கவில்லை. அவர்களின் உண்மையான அக்கறையை நாம் தினந்தோறும் செய்திதாள்களின் மூலம் பார்த்துக் கொண்டும் இருக்கின்றோம்.

கி.பி. 20ம் நூற்றாண்டில் பொது நூலகங்களின் வளர்ச்சி என்பது மிகவும் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றம் என்று சொல்லாம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நூலக இயக்கம் சிறந்து விளங்குகின்றது நூலகப் பாதையில் இருபதாம் நூற்றாண்டினைப் “பொற்காலம்” என்று குறிப்பிடலாம்.

சென்னையிலுள்ள கன்னிமாரா பொது நூலகம் இந்தியாவின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகும். கன்னிமாரா பொது நூலகத்தை முதன் முதலில் தொடங்க, திட்டம் செய்து அடிக்கல் நாட்டியவர் “போபி இராபர்ட் போர்க் கன்னிமாரா பிரபு” (Bobby Robert Bourke Baron Connemara 1827 - 1902) என்பவர். இந்த நூலகம். 1890-ல் மக்களுக்காக, மக்களே, மக்களால் நடத்தும் வகையில்தான் பொது நூலகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

“படிக்க ஆர்வமுள்ள அனைவருக்கும் நூலகம் பயன்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன். அந்த ஆசை நிறைவேறும் என்று நம்புகிறேன்” என்றார். பிரிட்டிஷ் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அவருக்கு பின்வந்த “ஆளுநர் சர் ஆர்தர் ஹாவ்லக்” என்பவரால் 1896ல் டிசம்பர் 5 ம் நாள்   பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் திறந்து விடப்பட்டது.

இந்தியாவை ஆள வந்த பிரிட்டன் ஆட்சியாளர்களைப் போல நமது தமிழ்த் தாத்தா என்றழைக்கப்படும் உ.வே.சா பங்களிப்பு என்பது தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாதொன்றாகும். 

ஓலைச்சுவடி வடிவிலும், கையெழுத்தேடு வடிவங்களிலும் இருந்த பழங்கால நூல்கள் அச்சில் ஏறுவதற்கு காரணமாக இருந்தவர் உ.வே.சா. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, நெடுநல்வாடை என பல பழம்பொக்கிஷங்களும் அழியாமல் பாதுகாத்த பெருமை அவருக்குண்டு.

சமய நூலான சீவக சிந்தாமணியின் ஓலைச்சுவடிப் பகுதி அக்காலகட்டத்தில் சமயக்காழ்ப்பினால் புறக்கணிக்கப்பட்டிருந்த சமண இலக்கியங்களைப் பற்றி அறியும் ஆவலையும், அதனை அழிய விடாது அச்சேற்ற வேண்டும் எனும் எண்ணத்தையும் உ.வே.சா வினுள் தூண்டியது.

சமண இலக்கியங்களோடு பல ஓலைச்சுவடிகளையும் உ.வே.சா தேடித் தேடிச் சேகரித்தார். சேகரித்தது மட்டுமின்றி அவற்றைச் சேமித்து, பகுத்து, பாடவேறுபாடு கண்டு, தொகுத்து, பிழை திருத்தி அச்சிலேற்றும் பணியையும் துவங்கினார். பின்னாளில் அவற்றுக்கு உரையெழுதும் அரும்பணியையும் ஆற்றினார். இப் பணியானது அவர் தனது 84 ஆம் அகவையில்  இயற்கையெய்தும் வரை இடையறாது தொடர்ந்தது.

அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.

உ.வே.சா போலவே தற்போது தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டையில் உள்ள ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது துணைவியார் தங்களால் முடிந்த மகத்தான பணியை செய்து கொண்டிருக்கிறார். 


ஞானாலயாவைப் பற்றி நாம் முழுமையாக தெரிந்து கொள்ள இந்த வலைதளம் உதவுகின்றது.

வலைதள முகவரி http://www.gnanalaya-tamil.com/ 

ஞானலாயா போன்ற தனிப்பட்ட நபர்களை ஊக்குவித்து வளர்ப்பதை விட தனது நலன் சார்ந்து ஒவ்வொரு விசயத்தையும் பார்ப்பது தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பண்பாடு. மொத்த தமிழ்நாட்டில் உள்ள நூலக வளர்ச்சியை விட ஒரே இடத்தில் முடக்கப்பட்ட இந்த அறிவுசார் சொத்துக்களை பரவலாக்கப்பட வேண்டும்.

இந்த தமிழ்மொழி இன்று வரைக்கும் வளர்ந்து இன்று இணையத் தமிழ் மூலம் உலகத் தமிழர்களை ஒன்றிணைத்துக் கொண்டிருக்கிறது.

கிராம, நகர்ப்புற நூலகங்களை, அரசாங்கத்திற்கு வரும் ஆட்சியாளர்கள் சிறப்பான திட்டத்துடன் உதவி செய்வதன் மூலமும், ஞானலயா கிருஷ்ணமூர்த்தி போன்றோர்களுக்கு பொருளூதவி செய்வதன் மூலமும் பலரும் வந்து வாசிக்க வழி வகுக்கும்.இதேவேளை  'ஞானாலயா 'வின் சேகரிப்புகளை புதியதொழிட்பத்தினடிப்படையில் ஆவணப் படிவங்களாக்கி, இணையப் பெருவெளியில் இணைப்பதன் மூலம் அதன் சேவை விரிவாக்கம் பெறவும், பாதுகாக்கப்படவும் முடியும் என்பதனையும் இவ்வாறான பணிகளில் ஈடுபடும் அன்பர்கள் கருத்திலும், கவணத்திலும் கொள்ள வேண்டும்.

தாய் என்பது ஒரு தலைமுறைக்கான பந்தம். தாய் மொழி என்பது தலைமுறைகளை தாண்டிச் செல்லும் பந்தம்.. அந்த மொழியை ஆவணப்படுத்தி வளர்க்க உதவும் திரு. கிருஷ்ணமூர்த்தி தம்பதிகளின் முயற்சிக்கு,  ஒளிபடைத்த கண்ணினராய், உறுதி மிக்க நெஞ்சினராய் உதவுவோம் வாருங்கள் !

ஞானாலயா பற்றிய மேலதிக விபரங்கட்கு;



ஞானாலயாவுக்கு நெட் பேங்கிங் வழியாக உலகின் எந்த இடத்தில் இருந்தும் நிதி  உதவி செய்யலாம். 

தொடர்புக்கான முகவரி, மற்றும்
நிதி அனுப்புவதற்குத் தேவையான விவரங்கள்:
வங்கி விவரம்:
Account Holder: B. KRISHNAMOORTHY
S B Account Number: 1017047
Bank Name: UCO Bank
Branch: PUDUKKOTTAI

Wednesday, August 01, 2012

ஒரு நதியின் பயணம் -- 4ஆம் ஆண்டு


நாம் வாழ்க்கைக்காக எந்த தொழிலில் வேண்டுமானாலும் இருக்கலாம்.  ஆனால் அந்த தொழில் நமக்கு உளப்பூர்வமாக பிடிக்கின்றதா இல்லையா என்பது நம்முடைய மனதுக்கு மட்டுமே தெரியும். நான் இருக்கும் ஏற்றுமதி தொழில் என்பது பணத்தை மட்டுமே யோசிக்க வைக்கும் தொழில்.  மனிதர்களின் மனங்களைப் பற்றி அக்கறைபட வேண்டிய அவசியமில்லாத தொழில்.  

அப்படி யோசிக்கும் பட்சத்தில் அதிக இழப்புகளை சந்தித்தே ஆக வேண்டும்.  நான் அவ்வாறு ஏராளமான இழப்புகளை சந்தித்து இருக்கின்றேன்.

அவ்வாறு ஒரு தருணத்தில் தான் இந்த எழுத்தும் வலைபதிவுகளும் அறிமுகமானது.

உள்ளே இருக்கும் ஆர்வத்தினால் மடை திறந்த வெள்ளம் போல ஒரு 2008 ஜுலை 3  அன்று தொடங்கிய இந்த பயணம் சென்ற மாதம் நான்காம் வருடத்திற்கு அழைத்து வந்துள்ளது.  

சென்ற மாதத்தில் எப்போதும் போல எழுத வேண்டிய கட்டுரை கூட மறந்து விட்டது.  

பணம் துரத்திப் பறவைகளுக்கு திருப்தியும் வராது. திகட்டவும் செய்யாது. குடும்பம், குழந்தைகள், விருப்பம், கடன்கள், கடமைகள் என்று அடுத்தடுத்து ஆப்பு அடிப்பதும், அடித்த ஆப்புகளை கழட்டிக் கொள்வதுமாக பணத்தை நீ வீரும்பியே ஆக வேண்டும் என்று ஒவ்வொரு சந்தர்ப்பங்களும் உணர்த்திக் கொண்டேயிருக்கிறது. 

வெறித்தனமான ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளத்தான் வேண்டும்.  குழந்தைகள் உன் கண் எதிரே வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று வாழ்க்கை  ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உணர்த்திக் கொண்டேயிருக்கிறது.  

எழுதுவதை விட ஏற்றத்தின் பாதையில் கடந்த  ஏழு மாதங்களாக பயணித்த காரணத்தால் இந்த வருடத்தில் கடந்த ஏழு மாதங்களில் எழுதிய மொத்த பதிவுகளின் எண்ணிக்கை ஏழு மட்டுமே.

அதுவும் சிலரின் கட்டாயத்தின் பேரில் மீண்டும் எழுதத் தொடங்கினேன். மற்றவர்களைப் போல ஆகா நம்மால் எழுத முடியவில்லையே என்ற அங்கலாய்ப்பு இல்லாமல் வலையுலகத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஆகஸ்ட் 1 மிக முக்கியமான நாள் என்பது போல சென்ற மாதத்தில் உள்ள ஜுலை 3 இதைவிட முக்கியமான நாளாகும்.  

காரணம் இந்த நாள் நான் வலைபதிவுகள் என்று உலகத்திற்கு வந்த தினம்.  


என்னைச் சுற்றிலும் உள்ள மனிதர்களை கவனிப்பதை நிறுத்தவில்லை.
ஆனால் அதை எழுத்தாக்க நேரம் அமையவில்லை.

                                                               ---------------------------

சமீப காலமாக முகப்பு நூலை அதிகம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கின்றது.  இது தவிர கூகுள் ப்ளஸ்.  

இரண்டிலும் நடக்கும் கூத்துக்களை கவனிக்கும் போது கீழே வினவு தளத்தில் ஐந்தாம் ஆண்டு தொடக்க கட்டுரை வரிகள் தான் பொருத்தமாக இருக்கிறது.

"வினவின் ஆரம்ப வருடங்களிலேயே காத்திரமாக எழுதக்கூடிய பதிவர்கள் கொஞ்சம்தான் இருந்தனர். தற்போது பலர் பதிவுகளை எழுதுவதில்லை. முன்னாள் பதிவர்களும், இலக்கிய குருஜிக்களும், கூகிள் ப்ளசிலும், ட்விட்டரிலும் ‘அறிவார்ந்த அரட்டை’ என்ற பெயரில் ஒதுங்கி விட்டனர். அதிலும் பழையவர்கள் மெல்ல மெல்ல ஓய்வு பெற்றுக் கொள்ள, அவர்களது அடியொற்றியபடியே புதியவர்கள் ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். அரசியலும், இலக்கியமும், திரைப்படமும் சென்சேஷன் தரத்திலேயே பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

இடைக்காலத்தில் சூடுபிடித்த முகநூல் – ஃபேஸ்புக் அறிவுஜீவிகளுக்கும் கருத்துரிமையாளர்களுக்கும் கருத்தாழமற்ற உரையாடலை கற்றுக் கொடுத்து ஏதோ கொஞ்சம் வாழ வைக்கின்றது. முகநூலில் நான்கு வரியில் பகிறப்படும் நிலைச்செய்தியினைத் தாண்டி வாசிப்பதற்கு விருப்பமற்ற மனங்களோடு அவர்கள் காலந்த தள்ள வேண்டிய நிலையில் வினவு அப்படி மாறியோ, சோர்ந்தோ வீழ்ந்து விடவில்லை. அரசியலை மேலும் மேலும் ஆழமாக கற்றுக் கொள்ளும் நெடிய கட்டுரைகளோ, நீண்ட விவாதங்களோ வினவில் மட்டும்தான் அரங்கேறுகின்றன.

ட்விட்டரிலும், முகநூலிலும் அறிமுகமாகி அரசியல் ஆர்வத்தோடு தேடி வரும் நண்பர்களை நாங்கள் வினவு தளத்திற்குள் அழைத்துச் செல்கிறோம். வாசகரையும் வாசிப்பையும் உயர்த்துதல் எங்களது நோக்கமாக இருக்கிறது. ஆனால் பின்நவீனத்துவ அறிஞர்கள், இலக்கியவாதிகள், சிறுபத்திரிகைகாரர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சி ஆர்வலர்கள் அனைவரும் தங்களது ‘அறிவார்ந்த’ படைப்புகளை ஆளில்லாத டீக்கடையில் ஆறவிட்டுவிட்டு சூடான பாப்கார்ன் கடையில் வார்த்தைகளை கொறித்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுவான வாசக வெளிக்கு பாப்கார்னே போதுமானது என்றாகி விட்டது".
                                                                          -----------------

புதுக்கோட்டை ஞானலயா என்ற தனிநபரால் நிர்வகிக்கப்படும் ஒரு நூலகத்திற்காக நண்பர்களுடன் சேர்ந்து சில முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டுருக்கின்றோம்.  அது குறித்து 4 தமிழ்மீடியா தளத்தில் வெளியான கட்டுரை இது.  

இது தொடர்பாக ஒரு நீண்ட பயணம் தொடங்க வேண்டியிருக்கிறது.  நிதி உதவி என்பதைத்தாண்டி தமிழ் என்பதை கணினியுகத்திற்கு தகுந்தாற்போல இன்னும் மேம்படுத்த வேண்டிய விசயங்களில் மென்பொருள் துறை சார்ந்த நண்பர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.  

அது குறித்து அடுத்த பதிவில்.......
 

மூன்றாம் ஆண்டு கட்டுரை