ஈழத்தில் இப்போது ஆட்டத்தில் பிரபாகரன் மட்டுமே. தமிழீழ (LTTE) விடுதலைப்புலிகளின் ஆட்சி அதிகாரம் மட்டுமே. இன்றைய சூழ்நிலையில் பிரபாகரன் மட்டுமே தமிழர்களுக்கு ஆதர்ஷணம் என்கிற நிலைமையில் இருக்கிறார். காரணம் இப்போது நாம் 1986/87 ஆம் ஆண்டில் பயணித்துக்கொண்டுருக்கிறோம்.
கரும்புலி தாக்குதல்
" நாங்கள் உங்களுக்கு எதிராக இருக்கிறோம், செய்த கொலைகளின் பட்டியல் இது தான், இத்தனை கொலைகளுக்கும் நாங்கள் தான் காரணம். வேறு எவரும் பொறுப்பு ஏற்க முடியாது" என்று இலங்கை அரசாங்கத்திற்கு அறிக்கை மூலம் சவால் விட்டு இப்போது ஒன்பது ஆண்டுகள் ஆகி விட்டது.
மற்ற இயக்கங்களை ஒவ்வொரு காரணங்கள் சொல்லி ஆட்டத்தில் இருந்து நீக்கியாகி விட்டது. தொத்தலும் வத்தலுமாய் இருப்பவர்களும் பிரபாகரன் கடைக்கண் பார்வை பட்டு அப்படியே ஒரு ஓரமாய் இருந்துவிட்டுப் போகட்டும். நமக்கு அவர்கள் இப்போது தேவையில்லை. ஆதரவு கொடுக்காவிட்டாலும் அக்கறையுடன் பார்த்த இந்திரா காந்தி இப்போது இல்லை. முழுமையான ஆதரவு கொடுக்க முடியாவிட்டாலும் தன்னால் என்ன உதவி அளிக்க முடியுமோ? பணமாக, ஆதரவாக கொடுத்த எம்.ஜி.ஆர் கூட இப்போது இல்லை. இவர்கள் இருவரின் இழப்பு என்பது ஈழ மக்களின் உண்மையான பிரச்சனைகளை அக்கறையுடன் பார்த்த இந்திய தலைவர்கள் என்ற கௌரவம் இனியேதும் வேறு எந்த தலைவர்களுக்கும் எந்த காலத்திலும் வரப்போவதும் இல்லை.
இப்போது பிரபாகரன் இயக்கத்திற்கென்று தனி வானொலி நிலையம், தமிழ், ஆங்கில செய்திதாள்கள், துண்டுப்பிரசுரங்கள் வெளியிடும் அமைப்புகள், இலங்கை முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் ஆளுமை செலுத்தக்கூடிய அளவிற்கு ஆள், அம்பு, சேனை, அதிகார படைகள். இது போக தனி ஆட்சி நிர்வாக பரிபாலணம். வரி, வசூல், போன்ற உள்கட்டமைப்பு வசதிகள். இதற்கு மேலாக புலம் பெயர்ந்தவர்களின் மூலம் வந்து கொண்டுருக்கும் நிதி ஆதாரங்கள், இறக்குமதி செய்யப்படும் நவீன ரக ஆயுதங்கள், அதற்கென்று ஒரு குழு, அவர்களுக்கென்று ஒன்று என்ற எண்ணிக்கையில் தொடங்கி தொடர்ந்து கொண்டுருக்கும் சிறிய பெரிய கப்பல்களின் அணிவகுப்பு. உலகமெங்கும் எல்லா நாடுகளிலும் வங்கிக்கணக்கு என்று ஆலமரம் போல் விழுது படர்ந்து நிற்கிறது. உலக தலைவர்களுக்கு புரிய வைக்க ஆன்டன் பாலசிங்கம். உள்ளுர் தலைவர்களுடன் போரிட தேவையான ஆயுத கொள்முதலுக்கும் கேபி என்ற நிழல் மனிதர். நடுவில் பிரபாகரன். அவரைச்சுற்றிலும் கண் இமை போல பாதுகாப்பாளர்கள். கிட்டத்தட்ட ஈழத்து எம்.ஜி.ஆர் போல. ஈழம் என்றால் விடுதலைப்புலிகள். புலிகள் என்றால் பிரபாகரன். பிரபாகரன் மட்டும் தனி ஈழத்தை வாங்கித்தர முடியும் என்றதொரு பிம்பம் உருவாக்கப்பட்டு விட்டது?
இப்போது இலங்கையின் உள்ளே நடந்து கொண்டுருக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் இந்தியாவின் பார்வையில் நற நற. ஜெயவர்த்னே பார்வையில் எப்போதும் பீதி. எவரோ போகிற போக்கில் தனி ஈழம் என்றொரு பிரகடனத்தை பிரபாகரன் விரைவில் வெளியிடப் போகிறார் என்று காதில் ஓதி விட்டு போயிருக்கிறார்கள். யாழ்பாணத்தில் இருந்து அப்படியோ தாரை தப்பட்டையோடு கிளம்பி வந்து நம்முடைய இருக்கையில் அமர்ந்து விடுவார்களோ? இராணுவத்தையும் நம்பித் தொலைக்கவும் முடியவில்லை. கொடுக்கும் அடியை விட வாங்கிய அடிகளுக்கு ஒத்தடம் கொடுக்கவே நேரம் சரியாக இருக்கிறது. இவர்கள் எப்போது எழுந்து போய் தாக்குவார்கள். அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான் என்று வரவழைப்பவர்கள் எல்லோருமே " நாங்கள் தெளிவான முறையில் உங்க வீரர்களுக்கு பயிற்சி கொடுத்து விட்டோம் " என்கிறார்கள். ஆனால் பய புள்ளைக திருந்த மாட்டேன் என்கிறார்கள். நம்மால் இனி மாறவும் முடியாது. வயசு வேறு ஆகிவிட்டது. மாறப் போவது தெரிந்தாலே பிக்குகள் வந்து பிச்சு பிடுவானுங்க. கூலிப்படைகளும் ஆகாவெளியாகி விட்டது. " அண்ணன் எப்ப போய்ச் சேருவான்? திண்ணை எப்ப காலியியாகும்" என்று காத்துக்கொண்டுருக்கும் மற்ற அமைச்சர்கள் வேறு ஒரு பக்கம் பீதியை கிளப்பிக்கொண்டுருக்கிறார்கள்? என்ன செய்வது?
ஏற்கனவே சிரிக்காத மூஞ்சியைப் பெற்ற ஜெயவர்த்னே நிறையவே யோசித்த ஆண்டு. விழித்த மூஞ்சியும் சரியில்லை. ராஜிவ் நோக்கமும் புரியவில்லை.
இந்திய ஆட்சியாளர்களுக்கு கடுக்கா கொடுப்பது போல் பிரபாகரனை ஒரு வழிக்கு கொண்டு வரமுடியவில்லை. பிரபாகரனும் மிகத் தெளிவாக இருந்தார். ஒப்பந்தமா? சரி சரி பேசி முடித்ததும் மொத்த விசயங்களையும் நான் செய்தித்தாளில் பார்த்துக்கொள்கின்றேன். நமக்கு இதெல்லாம் ஆகாது என்று எப்போதும் போல் துப்பாக்கியை துடைத்து காத்துக் கொண்டுருந்தார். இப்போது கரும்புலி அமைப்பு வேறு " எங்க போய் முட்ட வேண்டும்" என்று அடம்பிடித்துக்கொண்டுருக்கிறது. அவர்களுக்கு வேறு வேலை கொடுத்தாக வேண்டும்?
டட்லி சேனநாயகா, பண்டாரா நாயகா, சீறீமாவோ என்று எத்தனையோ ஒப்பந்தங்கள். கழிப்பறையில் துடைக்கும் காகிதம் போல ஆனதை கவனமாக குறித்து வைத்திருந்த பிரபாகரன் இந்தியாவை பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக இவர்கள் பின்னால் போய் நின்றால் குனிய வைத்து சவாரி செய்கிறார்கள். வல்லரசு மக்களுக்கு முன் இந்த ஜெயவர்த்னே எத்தனை தெளிவாக தண்ணி காட்டிக்கொண்டுருக்கிறார். அந்த பய புள்ளைகளுக்கு ஒரு மண்ணும் புரியமாட்டேன் என்கிறது. சந்தோஷமாக வானத்தில் சுற்றிக்கொண்டுருந்தவரை கொண்டுருந்தவரை பிரதமர் என்று உட்காரவைத்தவர்களை எப்படி திட்டித்தீர்ப்பது.
இத்தனை வெகுளியாக இருக்கிறாரா? வாழ்த்துக்கடிதம் எழுதியும் கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார். பேச வருகிறாயா? அப்படியென்றால் முதலில் காட்டும் தாளில் கையெழுத்தை போடு? பிறகு பேசலாம் என்பவரை எப்படி எதிர்கொள்வது?
ஐயா இது மனிதர்கள் சம்மந்தப்பட்ட விசயங்கள்? வெறும் காகிதம் அல்ல. சிங்களர்களைப் பற்றி குறிப்பாக ஜெயவர்த்னே பற்றி உங்கள் அம்மாவிடம் கேட்டுப் பாருங்கள். உலக அரசியலுக்கே அவர் ஞானி. ஞானத்தை கொடுத்த புத்தர் வழியில் வந்தவர் என்று அவரை தவறாக புரிந்து கொண்டுருக்கிறீர்கள்? அவர் உங்களுக்கும் அல்வா கொடுப்பார்? உங்கள் மகன் ராகுலுக்கும் ஜிலேபி சுற்றிக்கொடுப்பார் என்று நாயாக கத்தினாலும் இடையில் தீட்சித் இருந்து கொண்டு கபடி ஆட்டம் ஆடுகிறாரே?
தொடர்ச்சியாக ரொமேஷ் பண்டாரி, ப சிதம்பரம், நட்வர்சிங். எத்தனை எத்தனை பேர்கள். இவர்கள் இலங்கைக்கு செண்டிங் அடிப்பதை விட உள்ளே போய் தொகுதியில் நாலு நல்ல விசயங்களை பார்த்தாலாவது ஓட்டுப் போட்டவுங்களுக்கு பிரயோஜனமாயிருக்கும்.
புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள். நீங்க ஒதுங்கி போய்விடுங்க? நாங்க பார்த்துக்கிறோம் என்றாலும் கேட்க மாட்டேன் என்கிறார்கள். அதென்னவோ சமாதானப்புறா போல் வாங்க வேண்டி அவார்டு ரிவார்டு எல்லாம் காத்துக்கிட்டுருக்கிற மாதிரி ராஜிவ் காந்தி துடிதுடியா துடிச்சுக்கிட்டு இருக்கிறாரு? இனி என்ன செய்யலாம்?
பிரபாகரன் கூட அதிகம் யோசித்த ஆண்டு.
பூடானில்(திம்பு) நடந்து பேச்சு வார்த்தை தோல்வி. பெங்களுர் சார்க் மாநாடு தோல்வி. பிரபாகரன் வடக்கு கிழக்கு மாகாண உரிமைகளும், தமிழர்களை பிரிக்கக்கூடாது என்ற நோக்கம். ஆனால் ஜெயவர்த்னேவோ வடக்கு கிழக்கு என்பதை விட சாத்யமில்லாத தமிழர், முஸ்லீம்,சிங்களர்கள் என்று பிரித்து நரித்தனமாக முன்வரைவு கொண்டு வரப்போகிறேன் என்று தீட்சித்திடம் படம் காட்டுகிறார். ராஜிவ்க்கு வேறு ஏதும் புரியாத நிலைமையில் அவசரமாய் ஏதோ ஒரு வழியில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்து ஆக வேண்டும். தடுப்பவர்கள் அழித்துவிடவேண்டும். உள்நாட்டு டேமேஜ் இமேஜ் சற்று தூக்கி நிறுத்தவேண்டும்? அவரவர்களுக்கு அவரவர் பாதையில் மொத்தமும் அவசரம்?
நம்மாளு ஜெயவர்த்னேக்கு இப்போது கொஞ்சம் கெட்ட நேரம். முற்றுகைப் போரை யாழ்பாணத்தை நோக்கி தொடங்கினார். இதற்கு வழியனுப்பு விழா போல் அவர் கூறிய வாசகம் இங்கு முக்கியமானது.
" மொத்தமாக யாழ்பாணத்தை அழித்து விடுங்கள். பிறகு நிர்மாணம் செய்து கொள்ளலாம். இந்த போர் மொத்த இறுதிப் போராக இருக்க வேண்டும் ".
ஏற்கனவே அத்யாவசியமான பொருட்களுக்கான தடைகளையும் உருவாக்கி விட்டது. பச்சத்தண்ணி கூட இல்லாமல் நா வரண்டு சாகட்டும். சாப்பிட்டால் தானே துப்பாக்கி தூக்க முடிகின்றது. உரிமை என்று போர் செய்ய முடிகின்றது. வயிற்றில் அடித்தால்?. ஆக்ரோஷமாய் கிழட்டுச் சிங்கமாக உருமினார்.
ஜெயவர்த்னே செயல்பாடுகளை பார்த்துக்கொண்டுருந்த இந்தியாவிற்கு இரண்டுங்கெட்டான் நிலைமை? கொஞ்சம் பொறுய்யான்னா இந்தாளு கேட்கமாட்டேன் என்கிறாரே? ஆக்கப் பொறுத்தவன் ஆற பொறுக்க மாட்டாம இதென்ன இத்தனை அடம்?
நாட்டாமை இந்தியாவிற்கு வந்த கோபத்தை பார்க்க வேண்டுமே? எங்கள் பேச்சை மீறி போர் தொடக்கிறாயா? என்ன செய்கின்றேன் பார் என்று கப்பலில் தமிழர்களுக்கு தேவையான பொருட்கள் அனுப்ப இலங்கை கடற்படை தடுத்து (1987 ஜுலை 3) திருப்பி அனுப்பியது. வல்லரசு சும்மா இருக்குமா? கௌரத என்ன ஆகும்? வானூர்தி மூலமாக பொட்டலங்களை சும்மா சர் சர் என்று தமிழர்கள் பகுதியில் (1987 ஜுலை 4 மிராஜ் வகை விமானம்) வீசத் தொடங்கியது.
இதற்கிடையில் 1987 மே மாதம் Operation Liberation என்ற பெயரில் விமான, கடற்படை, கனரக, பீரங்கி அணிவகுப்பு என்ற படைபட்டாளத்துடன் புலிகளின் ஆதிக்கத்தில் இருந்து இதயப்பகுதியான யாழ்பாண வடமராட்சி பகுதியை நோக்கி பீடுநடை போட்டு தனது ஆட்டத்தை இராணுவம் தொடங்கியது. எடுப்பார் கைப்புள்ள என்ன செய்யும்? அத்தனை அட்டூழியங்களும், கோரத்தாண்டவங்களும், எறியூட்டல்களும், கற்பழிப்பு, சொத்துக்களை சூறையாடுதல் என்று முன்னேறிக்கொண்டு வர புலிப்பட்டாளம் பின்வாங்கிக் கொண்டே போனது. இந்தப் பகுதியில் தமிழர்களின் புராதன அத்தனை நினைவுச் சின்னங்களும் குறித்து வைத்து அழிக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சி ராஜீவ் காந்திக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் பிரபாகரனுக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. வா ராஜா வா ராஜா என்று பின்வாங்கிக்கொண்டே போனவர்கள், 1987 ஜுலை 7ந் தேதி அன்று முதல் தடவையாக கேப்டன் மில்லர் என்ற கரும்புலி வீரன் தான் வெடிபொருட்கள் நிரம்பி ஓட்டிச்சென்ற கவச வாகனத்தின் மூலம் இராணுவத்தினர் மையம் கொண்டு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுக்கொண்டுருந்த நெல்லியடி மகாவித்யாலயத்திற்குள் உட்புகுந்து வெடிக்க வைக்க தமிழ் திரைப்படத்தில் சாகச சண்டைக்காட்சி போல மொத்தமாக அந்த பகுதியே கிடுகிடுத்தது.
உயிர் இழப்பு, பொருட்சேதம் என்று கணக்குப் பார்த்த ஜெயவர்த்னே அன்று நிச்சயம் கூட ரெண்டு மாத்திரை போட்டுத் தான் தூங்கியிருக்க வேண்டும். பய புள்ளைகளுக்கு படிச்சு படிச்சு சொன்னாலும் இத்தனை அசால்டா இருந்து தொலைச்சுட்டானுங்களே என்று தலையில் அடித்துக்கொண்டுருப்பார். அப்போதைய சூழ்நிலையில் ராஜிவ் கூட சற்று யோசித்துருப்பார். பிரபாகரன் என்பவர் யார்? அவர் பின்னால் இருக்கும் படையணி என்பதன் உண்மையான வீரம் என்ன? என்பதை புரிந்து இருக்கக்கூடும்?
காரணம் விரைவில் ராஜீவ் ஜெயவர்த்னே ஒப்பந்தம் கையெழுத்தாக போகின்றது? இப்போது ஓப்பந்த முன் வரைவுகள் நிச்சயார்த்தம் நிலைமையில் இருக்கிறது. தாலி கட்ட நாள் குறிக்க அவர் பின்னால் ஒரு படைபட்டாளம் ஓத காத்துக்கொண்டுருக்கிறது என்பதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். ஒரு படுகொலைக்காக காலன் உருவாக்கிய COUNT DOWN அன்றில் இருந்து தான் தொடங்குகிறது. அதுவே அமைதிப்படை உருவாக்கிய அக்கிரம செயல்பாடுகள் மொத்தத்தையும் உறுதிப்படுத்தியது.
மற்றொரு ஆச்சரியம் அரசியல் முதிர்ச்சி, ஆழ்ந்த ஞானம் இல்லாமல் உள்ளே வந்த ராஜீவ் காந்தி செய்த தவறுகளும், அவரின் அவசரத்தை மொத்த சாதக பாதக அம்சங்களையும் அவருக்கும் முறைப்படி புரிய வைக்க முயற்சிக்காத அதிகாரவர்க்கத்தினர் என்று மொத்தமாக இந்தியா பக்கம் எத்தனை கைகள் சுட்டிக்காட்டினாலும், உலக தமிழர்களின் வீரத்தின் விளைநிலமாக இருக்கும் இருந்த இருக்கப்போகும் பிரபாகரன் எந்த தைரியத்தை வைத்துக்கொண்டு இந்த படுகொலையை நிகழ்த்தினார் என்று இந்த நிமிடம் வரைக்கும் ஆச்சரியம். அதே சமயம் இலங்கை தமிழர்கள் உலகத்தில் மொத்தமாக வாழும் கடைசி தமிழன் வரைக்கும் இந்த ராஜீவ் படுகொலை என்பது பெரும் கரும்புள்ளியாக இருக்கும் என்பதை எப்படி உணர மறுத்தார் என்பது மற்றொரு திகைப்படைய வைக்கும் வெட்கக்கேடு?








