Friday, January 22, 2010

கரும்புலி அதிர்ந்த ராணுவம்

ஈழத்தில் இப்போது ஆட்டத்தில் பிரபாகரன் மட்டுமே.  தமிழீழ (LTTE)  விடுதலைப்புலிகளின் ஆட்சி அதிகாரம் மட்டுமே.  இன்றைய சூழ்நிலையில் பிரபாகரன் மட்டுமே தமிழர்களுக்கு ஆதர்ஷணம் என்கிற நிலைமையில் இருக்கிறார்.     காரணம் இப்போது நாம் 1986/87 ஆம் ஆண்டில் பயணித்துக்கொண்டுருக்கிறோம்.
                                                            கரும்புலி தாக்குதல்
" நாங்கள் உங்களுக்கு எதிராக இருக்கிறோம், செய்த கொலைகளின் பட்டியல் இது தான், இத்தனை கொலைகளுக்கும் நாங்கள் தான் காரணம்.  வேறு எவரும் பொறுப்பு ஏற்க முடியாது" என்று இலங்கை அரசாங்கத்திற்கு அறிக்கை மூலம் சவால் விட்டு இப்போது ஒன்பது ஆண்டுகள் ஆகி விட்டது.

மற்ற இயக்கங்களை ஒவ்வொரு காரணங்கள் சொல்லி ஆட்டத்தில் இருந்து நீக்கியாகி விட்டது.  தொத்தலும் வத்தலுமாய் இருப்பவர்களும் பிரபாகரன் கடைக்கண் பார்வை பட்டு அப்படியே ஒரு ஓரமாய் இருந்துவிட்டுப் போகட்டும்.  நமக்கு அவர்கள் இப்போது தேவையில்லை.  ஆதரவு கொடுக்காவிட்டாலும் அக்கறையுடன் பார்த்த இந்திரா காந்தி இப்போது இல்லை.  முழுமையான ஆதரவு கொடுக்க முடியாவிட்டாலும் தன்னால் என்ன உதவி அளிக்க முடியுமோ?  பணமாக, ஆதரவாக கொடுத்த எம்.ஜி.ஆர் கூட இப்போது இல்லை.  இவர்கள் இருவரின் இழப்பு என்பது ஈழ மக்களின் உண்மையான பிரச்சனைகளை அக்கறையுடன் பார்த்த இந்திய தலைவர்கள் என்ற கௌரவம் இனியேதும் வேறு எந்த தலைவர்களுக்கும் எந்த காலத்திலும் வரப்போவதும் இல்லை.

இப்போது பிரபாகரன் இயக்கத்திற்கென்று தனி வானொலி நிலையம், தமிழ், ஆங்கில செய்திதாள்கள், துண்டுப்பிரசுரங்கள் வெளியிடும் அமைப்புகள், இலங்கை முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் ஆளுமை செலுத்தக்கூடிய அளவிற்கு ஆள், அம்பு, சேனை, அதிகார படைகள்.  இது போக தனி ஆட்சி நிர்வாக பரிபாலணம்.  வரி, வசூல், போன்ற உள்கட்டமைப்பு வசதிகள். இதற்கு மேலாக புலம் பெயர்ந்தவர்களின் மூலம் வந்து கொண்டுருக்கும் நிதி ஆதாரங்கள், இறக்குமதி செய்யப்படும் நவீன ரக ஆயுதங்கள், அதற்கென்று ஒரு குழு, அவர்களுக்கென்று ஒன்று என்ற எண்ணிக்கையில் தொடங்கி தொடர்ந்து கொண்டுருக்கும் சிறிய பெரிய கப்பல்களின் அணிவகுப்பு.  உலகமெங்கும் எல்லா நாடுகளிலும் வங்கிக்கணக்கு என்று ஆலமரம் போல் விழுது படர்ந்து நிற்கிறது.  உலக தலைவர்களுக்கு புரிய வைக்க ஆன்டன் பாலசிங்கம்.  உள்ளுர் தலைவர்களுடன் போரிட தேவையான ஆயுத கொள்முதலுக்கும் கேபி என்ற நிழல் மனிதர்.  நடுவில் பிரபாகரன்.  அவரைச்சுற்றிலும் கண் இமை போல பாதுகாப்பாளர்கள்.  கிட்டத்தட்ட ஈழத்து எம்.ஜி.ஆர் போல. ஈழம் என்றால் விடுதலைப்புலிகள்.  புலிகள் என்றால் பிரபாகரன்.  பிரபாகரன் மட்டும் தனி ஈழத்தை வாங்கித்தர முடியும் என்றதொரு பிம்பம் உருவாக்கப்பட்டு விட்டது?

இப்போது இலங்கையின் உள்ளே நடந்து கொண்டுருக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் இந்தியாவின் பார்வையில் நற நற.  ஜெயவர்த்னே பார்வையில் எப்போதும் பீதி.  எவரோ போகிற போக்கில் தனி ஈழம் என்றொரு பிரகடனத்தை பிரபாகரன் விரைவில் வெளியிடப் போகிறார் என்று காதில் ஓதி விட்டு போயிருக்கிறார்கள்.  யாழ்பாணத்தில் இருந்து அப்படியோ தாரை தப்பட்டையோடு கிளம்பி வந்து நம்முடைய இருக்கையில் அமர்ந்து விடுவார்களோ?  இராணுவத்தையும் நம்பித் தொலைக்கவும் முடியவில்லை.  கொடுக்கும் அடியை விட வாங்கிய அடிகளுக்கு ஒத்தடம் கொடுக்கவே நேரம் சரியாக இருக்கிறது.  இவர்கள் எப்போது எழுந்து போய் தாக்குவார்கள்.  அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான் என்று வரவழைப்பவர்கள் எல்லோருமே " நாங்கள் தெளிவான முறையில் உங்க வீரர்களுக்கு பயிற்சி கொடுத்து விட்டோம் " என்கிறார்கள்.  ஆனால் பய புள்ளைக திருந்த மாட்டேன் என்கிறார்கள்.  நம்மால் இனி மாறவும் முடியாது.  வயசு வேறு ஆகிவிட்டது.  மாறப் போவது தெரிந்தாலே பிக்குகள் வந்து பிச்சு பிடுவானுங்க.  கூலிப்படைகளும் ஆகாவெளியாகி விட்டது.   " அண்ணன் எப்ப போய்ச் சேருவான்?  திண்ணை எப்ப காலியியாகும்"  என்று காத்துக்கொண்டுருக்கும் மற்ற அமைச்சர்கள் வேறு ஒரு பக்கம் பீதியை கிளப்பிக்கொண்டுருக்கிறார்கள்?  என்ன செய்வது?

ஏற்கனவே சிரிக்காத மூஞ்சியைப் பெற்ற ஜெயவர்த்னே நிறையவே யோசித்த ஆண்டு.  விழித்த மூஞ்சியும் சரியில்லை.  ராஜிவ் நோக்கமும் புரியவில்லை.

இந்திய ஆட்சியாளர்களுக்கு கடுக்கா கொடுப்பது போல் பிரபாகரனை ஒரு வழிக்கு கொண்டு வரமுடியவில்லை.  பிரபாகரனும் மிகத் தெளிவாக இருந்தார்.  ஒப்பந்தமா?  சரி சரி பேசி முடித்ததும் மொத்த விசயங்களையும் நான் செய்தித்தாளில் பார்த்துக்கொள்கின்றேன்.  நமக்கு இதெல்லாம் ஆகாது என்று எப்போதும் போல் துப்பாக்கியை துடைத்து காத்துக் கொண்டுருந்தார்.  இப்போது கரும்புலி அமைப்பு வேறு " எங்க போய் முட்ட வேண்டும்"  என்று அடம்பிடித்துக்கொண்டுருக்கிறது.  அவர்களுக்கு வேறு வேலை கொடுத்தாக வேண்டும்?

டட்லி சேனநாயகா, பண்டாரா நாயகா, சீறீமாவோ என்று எத்தனையோ ஒப்பந்தங்கள்.  கழிப்பறையில் துடைக்கும் காகிதம் போல ஆனதை கவனமாக குறித்து வைத்திருந்த பிரபாகரன் இந்தியாவை பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக இவர்கள் பின்னால் போய் நின்றால் குனிய வைத்து சவாரி செய்கிறார்கள்.  வல்லரசு மக்களுக்கு முன் இந்த ஜெயவர்த்னே எத்தனை தெளிவாக தண்ணி காட்டிக்கொண்டுருக்கிறார்.  அந்த பய புள்ளைகளுக்கு ஒரு மண்ணும் புரியமாட்டேன் என்கிறது.  சந்தோஷமாக வானத்தில் சுற்றிக்கொண்டுருந்தவரை கொண்டுருந்தவரை பிரதமர் என்று உட்காரவைத்தவர்களை எப்படி திட்டித்தீர்ப்பது.

இத்தனை வெகுளியாக இருக்கிறாரா?  வாழ்த்துக்கடிதம் எழுதியும் கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார்.  பேச வருகிறாயா?  அப்படியென்றால் முதலில் காட்டும் தாளில் கையெழுத்தை போடு?  பிறகு பேசலாம் என்பவரை எப்படி எதிர்கொள்வது?

ஐயா இது மனிதர்கள் சம்மந்தப்பட்ட விசயங்கள்?  வெறும் காகிதம் அல்ல.  சிங்களர்களைப் பற்றி குறிப்பாக ஜெயவர்த்னே பற்றி உங்கள் அம்மாவிடம் கேட்டுப் பாருங்கள்.  உலக அரசியலுக்கே அவர் ஞானி.  ஞானத்தை கொடுத்த புத்தர் வழியில் வந்தவர் என்று அவரை தவறாக புரிந்து கொண்டுருக்கிறீர்கள்?  அவர் உங்களுக்கும் அல்வா கொடுப்பார்? உங்கள் மகன் ராகுலுக்கும் ஜிலேபி சுற்றிக்கொடுப்பார் என்று நாயாக கத்தினாலும் இடையில் தீட்சித் இருந்து கொண்டு கபடி ஆட்டம் ஆடுகிறாரே?

தொடர்ச்சியாக ரொமேஷ் பண்டாரி, ப சிதம்பரம், நட்வர்சிங்.  எத்தனை எத்தனை பேர்கள்.  இவர்கள் இலங்கைக்கு செண்டிங் அடிப்பதை விட உள்ளே போய் தொகுதியில் நாலு நல்ல விசயங்களை பார்த்தாலாவது ஓட்டுப் போட்டவுங்களுக்கு பிரயோஜனமாயிருக்கும்.

புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.  நீங்க ஒதுங்கி போய்விடுங்க?  நாங்க பார்த்துக்கிறோம் என்றாலும் கேட்க மாட்டேன் என்கிறார்கள்.  அதென்னவோ சமாதானப்புறா போல் வாங்க வேண்டி அவார்டு ரிவார்டு எல்லாம் காத்துக்கிட்டுருக்கிற மாதிரி ராஜிவ் காந்தி துடிதுடியா துடிச்சுக்கிட்டு இருக்கிறாரு?  இனி என்ன செய்யலாம்?

பிரபாகரன் கூட அதிகம் யோசித்த ஆண்டு.

பூடானில்(திம்பு) நடந்து பேச்சு வார்த்தை தோல்வி.  பெங்களுர் சார்க் மாநாடு தோல்வி.  பிரபாகரன் வடக்கு கிழக்கு மாகாண உரிமைகளும், தமிழர்களை பிரிக்கக்கூடாது என்ற நோக்கம்.  ஆனால் ஜெயவர்த்னேவோ வடக்கு கிழக்கு என்பதை விட சாத்யமில்லாத தமிழர், முஸ்லீம்,சிங்களர்கள் என்று பிரித்து நரித்தனமாக முன்வரைவு கொண்டு வரப்போகிறேன் என்று தீட்சித்திடம் படம் காட்டுகிறார்.  ராஜிவ்க்கு வேறு ஏதும் புரியாத நிலைமையில் அவசரமாய் ஏதோ ஒரு வழியில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்து ஆக வேண்டும்.  தடுப்பவர்கள் அழித்துவிடவேண்டும்.  உள்நாட்டு டேமேஜ் இமேஜ் சற்று தூக்கி நிறுத்தவேண்டும்? அவரவர்களுக்கு அவரவர் பாதையில் மொத்தமும் அவசரம்?

நம்மாளு ஜெயவர்த்னேக்கு இப்போது கொஞ்சம் கெட்ட நேரம்.  முற்றுகைப் போரை யாழ்பாணத்தை நோக்கி தொடங்கினார்.  இதற்கு வழியனுப்பு விழா போல் அவர் கூறிய வாசகம் இங்கு முக்கியமானது.

" மொத்தமாக யாழ்பாணத்தை அழித்து விடுங்கள்.  பிறகு நிர்மாணம் செய்து கொள்ளலாம்.  இந்த போர் மொத்த இறுதிப் போராக இருக்க வேண்டும் ".
ஏற்கனவே அத்யாவசியமான பொருட்களுக்கான தடைகளையும் உருவாக்கி விட்டது.  பச்சத்தண்ணி கூட இல்லாமல் நா வரண்டு சாகட்டும்.  சாப்பிட்டால் தானே துப்பாக்கி தூக்க முடிகின்றது.  உரிமை என்று போர் செய்ய முடிகின்றது.  வயிற்றில் அடித்தால்?.  ஆக்ரோஷமாய் கிழட்டுச் சிங்கமாக உருமினார்.

ஜெயவர்த்னே செயல்பாடுகளை பார்த்துக்கொண்டுருந்த இந்தியாவிற்கு இரண்டுங்கெட்டான் நிலைமை?  கொஞ்சம் பொறுய்யான்னா இந்தாளு கேட்கமாட்டேன் என்கிறாரே?  ஆக்கப் பொறுத்தவன் ஆற பொறுக்க மாட்டாம இதென்ன இத்தனை அடம்?

நாட்டாமை இந்தியாவிற்கு வந்த கோபத்தை பார்க்க வேண்டுமே?  எங்கள் பேச்சை மீறி போர் தொடக்கிறாயா?  என்ன செய்கின்றேன் பார் என்று கப்பலில் தமிழர்களுக்கு தேவையான பொருட்கள் அனுப்ப இலங்கை கடற்படை தடுத்து (1987 ஜுலை 3) திருப்பி அனுப்பியது.  வல்லரசு சும்மா இருக்குமா?  கௌரத என்ன ஆகும்?  வானூர்தி மூலமாக பொட்டலங்களை சும்மா சர் சர் என்று தமிழர்கள் பகுதியில் (1987 ஜுலை 4  மிராஜ் வகை விமானம்) வீசத் தொடங்கியது.

இதற்கிடையில் 1987 மே மாதம் Operation Liberation என்ற பெயரில் விமான, கடற்படை, கனரக, பீரங்கி அணிவகுப்பு என்ற படைபட்டாளத்துடன் புலிகளின் ஆதிக்கத்தில் இருந்து இதயப்பகுதியான யாழ்பாண வடமராட்சி பகுதியை நோக்கி பீடுநடை போட்டு தனது ஆட்டத்தை இராணுவம் தொடங்கியது.  எடுப்பார் கைப்புள்ள என்ன செய்யும்?  அத்தனை அட்டூழியங்களும், கோரத்தாண்டவங்களும், எறியூட்டல்களும், கற்பழிப்பு, சொத்துக்களை சூறையாடுதல் என்று முன்னேறிக்கொண்டு வர புலிப்பட்டாளம் பின்வாங்கிக் கொண்டே போனது.   இந்தப் பகுதியில் தமிழர்களின் புராதன அத்தனை நினைவுச் சின்னங்களும் குறித்து வைத்து அழிக்கப்பட்டன.  

இந்த நிகழ்ச்சி ராஜீவ் காந்திக்கு அதிர்ச்சியாக இருந்தது.  ஆனால் பிரபாகரனுக்கு எந்த ஆச்சரியமும் இல்லை.  வா ராஜா வா ராஜா என்று பின்வாங்கிக்கொண்டே போனவர்கள், 1987 ஜுலை 7ந் தேதி அன்று முதல் தடவையாக கேப்டன் மில்லர் என்ற கரும்புலி வீரன் தான் வெடிபொருட்கள் நிரம்பி ஓட்டிச்சென்ற கவச வாகனத்தின் மூலம் இராணுவத்தினர் மையம் கொண்டு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுக்கொண்டுருந்த நெல்லியடி மகாவித்யாலயத்திற்குள் உட்புகுந்து வெடிக்க வைக்க தமிழ் திரைப்படத்தில் சாகச சண்டைக்காட்சி போல மொத்தமாக அந்த பகுதியே கிடுகிடுத்தது.

உயிர் இழப்பு, பொருட்சேதம் என்று கணக்குப் பார்த்த ஜெயவர்த்னே அன்று நிச்சயம் கூட ரெண்டு மாத்திரை போட்டுத் தான் தூங்கியிருக்க வேண்டும்.  பய புள்ளைகளுக்கு படிச்சு படிச்சு சொன்னாலும் இத்தனை அசால்டா இருந்து தொலைச்சுட்டானுங்களே என்று தலையில் அடித்துக்கொண்டுருப்பார்.  அப்போதைய சூழ்நிலையில் ராஜிவ் கூட சற்று யோசித்துருப்பார். பிரபாகரன் என்பவர் யார்?  அவர் பின்னால் இருக்கும் படையணி என்பதன் உண்மையான வீரம் என்ன? என்பதை புரிந்து இருக்கக்கூடும்?
காரணம் விரைவில் ராஜீவ் ஜெயவர்த்னே ஒப்பந்தம் கையெழுத்தாக போகின்றது?  இப்போது ஓப்பந்த முன் வரைவுகள் நிச்சயார்த்தம் நிலைமையில் இருக்கிறது.  தாலி கட்ட நாள் குறிக்க அவர் பின்னால் ஒரு படைபட்டாளம் ஓத காத்துக்கொண்டுருக்கிறது என்பதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்.  ஒரு படுகொலைக்காக காலன் உருவாக்கிய COUNT DOWN அன்றில் இருந்து தான் தொடங்குகிறது.  அதுவே அமைதிப்படை உருவாக்கிய அக்கிரம செயல்பாடுகள் மொத்தத்தையும் உறுதிப்படுத்தியது.

மற்றொரு ஆச்சரியம் அரசியல் முதிர்ச்சி, ஆழ்ந்த ஞானம் இல்லாமல் உள்ளே வந்த ராஜீவ் காந்தி செய்த தவறுகளும், அவரின் அவசரத்தை மொத்த சாதக பாதக அம்சங்களையும் அவருக்கும் முறைப்படி புரிய வைக்க முயற்சிக்காத அதிகாரவர்க்கத்தினர் என்று மொத்தமாக இந்தியா பக்கம் எத்தனை கைகள் சுட்டிக்காட்டினாலும், உலக தமிழர்களின் வீரத்தின் விளைநிலமாக இருக்கும் இருந்த இருக்கப்போகும் பிரபாகரன் எந்த தைரியத்தை வைத்துக்கொண்டு இந்த படுகொலையை நிகழ்த்தினார் என்று இந்த நிமிடம் வரைக்கும் ஆச்சரியம்.  அதே சமயம் இலங்கை தமிழர்கள் உலகத்தில் மொத்தமாக வாழும் கடைசி தமிழன் வரைக்கும் இந்த ராஜீவ் படுகொலை என்பது பெரும் கரும்புள்ளியாக இருக்கும் என்பதை எப்படி உணர மறுத்தார் என்பது மற்றொரு திகைப்படைய வைக்கும் வெட்கக்கேடு?

Thursday, January 21, 2010

விடுதலைப்புலிகள் சகோதர யுத்தங்கள் (2)

உலக நாடுகளில் இன்று வரை பலவீனமான , அரச கட்டுப்பாடு இல்லாத, அராஜகமான, தார்மீக பொறுப்பு என்றால் என்னவென்றே அறியாத, அர்பணிப்பு உணர்வு இல்லாத ஒரே இராணுவம் என்றால் இலங்கைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இருப்பதாக தெரியவில்லை.  இன்றைய நவீன விஞ்ஞான வளர்ச்சி கூட அவர்களை எந்த விதத்திலும் மாற்றம் அடையச் செய்யவில்லை.  முடவன் போல் எவரையோ ஒருவரைச் சார்ந்து சவாரி ஏறி நாங்களும் இராணுவம் வைத்திருக்கிறோம்? என்ற மாயையை காட்டிக்கொண்டு வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.  ஒரே காரணம் ஆட்சியாளர்கள்.  ஒரு வகையில் இராணுவம் என்பது அடியாள் பட்டாளம் அல்லது கூலிப்படை.  குத்து என்றால் கொன்று விட வேண்டும்.  போர் என்றால் கீழ்த்தரமான செயல்களை செய்து நாங்களும் எங்கள் பங்களிப்பை வாங்குகின்ற சம்பளத்திற்கு செய்து விட்டோம் என்ற மூன்றாந்தர இராணுவ சேவையாளர்கள் கொண்ட நாடு இலங்கை.  இது கற்பனை அல்ல.  மொத்த அவர்களின் இராணுவ தாக்குதல்களையும் பார்த்து வந்து இருந்தால், படித்துப் பார்த்தால் புரியும்?

பின்னால் வரப்போகின்ற பல உக்கிரமான பிரபாகரன் கொடுத்த தாக்குதல்களை கண்டு அஞ்சி பல இராணுவ வீரர்கள் பணிக்காலம் முடிவதற்குள் ஓட்டம் பிடித்ததும், அவர்களைத் தேடிக்கண்டு பிடித்து கொண்டு வந்ததும், கட்டாய ராணுவ சேவை என்று இளைஞர்களை அழிச்சாட்டியம் செய்ததும் என்றும் இன்று வரையிலும் இந்த நிலைமை மாறவில்லை.  இதுவே எந்த அளவிற்கு சென்றது என்றால் ஏழு மாதங்களுக்கு முன் நடந்த முள்ளிவாய்க்கால் கோரத்தில் பங்கெடுத்த இராணுவ வீரர்களுக்கு வெறியூட்டும் பொருட்டு பல போதைப் பொருட்களை உண்ணவைத்து களத்தில் இறக்கியதும் நடந்த கொடுமை நடந்தது.  அதனால் தான் இந்த நூற்றாண்டின் இணையற்ற கோரங்களை நிகழ்த்த முடிந்தது.

இன்றைய பொதுவேட்பாளர் சரத்பொன்சேகா கூட புலிகளின் கோட்டையில் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்தவர் தான்.  நாலு பேர்கள் ஒன்றாக சேர்ந்த கூட்டத்தைப் பார்த்ததும் ஆய் ஊய் என்று ரவுசு விடும் போக்கிரிகள் போல் தான் உயர்பதவி அதிகாரிகளும் அவர்களுடைய அதிகாரங்களும்.  அதுவே தொடக்கத்தில் பிரிந்து நின்று செயல்பட்டுக் கொண்டுருந்த மொத்த போராளிக்குழுக்களும் இராணுவ எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தாலும் பதிவின் தொடக்கத்தில் பார்த்த தமிழர்களுக்கென்று இருக்கும் தனித்துவமான ஒற்றுமையின்மை காரணமாக தங்களையும் உணரவில்லை.  தாங்கள் செல்ல வேண்டிய பாதையின் அருமையையும் உணரத் தயாராய் இல்லை என்பதே உண்மை.
ஏன் பிரபாகரன் மற்றவர்களை அழித்தார்?
ஆள் கடத்தி பணம் பறிப்பது, மக்களை பயமுறுத்தி வைப்பது, தங்களுடைய இடங்களில் மற்ற போராளிக்குழுக்களின் ஆதிக்கத்தை வளர விடாமல் தடுப்பது,தமிழ்நாட்டில் வைத்து செயல்பட்டுக்கொண்டுருந்த Corporate அலுவலகமும், புலம் பெயர்ந்தோரிடமிருந்து வரும் நிதி ஆதாரங்களை வைத்துக்கொண்டு தாங்கள் வாழ்ந்த ராஜவாழ்க்கை, என்று இன்னும் பல கீழ்த்தரமான வேலைகள் என்று போராடும் பாதைக்கும், பயணிக்கும் பாதைக்கும் சம்மந்தம் இல்லாமல் இருக்க இதற்கிடையில் தன்னுடைய ஆளுமையை நிலை நாட்ட வேண்டிய அவஸ்யமும், தன்னுடைய தனி ஈழம் என்ற கனவு இவர்களால் சிதைந்து வெறும் கற்பனையாக போய்விடுமோ என்ற அச்சமும் முதலும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

டெலோ என்ற இயக்கத்தை தூர்வாறி முடித்ததும் அடுத்த எச்சரிக்கை EPRLF, PLOTE..EROS .   டெலோ இயக்கத்தை அழித்துக்கொண்டுருந்த போதே பிரபாகரன் விடுத்த எச்சரிக்கை "  வேறு எவரும் இந்த விசயத்தில் தலையிடக்கூடாது".  காரணம் EPRLF  பத்பநாபா தமிழ்நாட்டில் Corporate  அலுவலகம் போல் அமைத்து பக்காவாக செயல்பட்டுக் கொண்டுருந்தார்.  சிறீ சபாரெத்தினம் பத்பநாபாவை மனதரா நம்பிக்கொண்டுருந்தார்? எப்படியும் தன்னைக் காப்பாற்றி தமிழ்நாட்டுக்கு அழைத்துச் சென்று விடுவார் என்று கொண்டுருந்த இறுதி நம்பிக்கையும் பொய்த்துப் போனது. மற்ற இயக்கங்கள் வேறு வழி இல்லாமல் எதிர்க்க முடியாமல் ஒதுங்கிக்கொண்டது. மொத்த பொதுமக்களுக்கும் விடுதலைப்புலிகளின் எச்சரிக்கையை மீறி டெலோ இயக்கதினர் எவருக்கும் புகலிடம் கொடுக்க முடியாத சூழ்நிலை.  தேடித் தேடி ஒவ்வொருவரையும் அழித்த விடுதலைப்புலிகள் இறுதியில் புகையிலை காட்டுக்குள் ஒளிந்து இருந்த சிறீ சபாரெத்தினத்தை கண்டனர்.  புகையிலை கட்டுடன் ஒன்றாக மறைந்து தமிழ்நாட்டுக்கு தப்பிப் போய்விடும் எண்ணத்தில் இருந்தவர் யாழ் தளபதியாக இருந்த கிட்டு என்ற சதாசிவ பிள்ளையின் துப்பாக்கி 28 குண்டுகளை தொடர்ச்சியாக துப்பி வெறி தீர்ந்த போது தான் கிட்டு வுக்கு சுய நினைவு வந்துருக்க முடியும்?  அந்த அளவிற்கு சிறி சபாரெத்தினம் விடுதலைப்புலிகளுக்கு உறுத்தலாக இருந்தார்?

டெலோவின் தொடக்கம் போல் EPRLF உடன் பிரச்சனை வேறுவிதமாக தொடக்கம் பெற்றது.   EPRLF இயக்கத்தினர் தாங்களே உருவாக்கிய அஞ்சல் அட்டையை யாழ்ப்பாணத்தில் விநியோகம் செய்து இனி அணைவரும் இதையே பயன்படுத்த வேண்டும் என்று சொல்ல கிட்டு இனி EPRLF தன்னுடைய இயக்க நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கட்டளையை பிறப்பித்தார்.  அப்போதே தொடங்கி விட்டது.  துப்பாக்கி ரவைகள் தங்களுடைய பசியின் வேகத்தைத் தேடி அலைய ஆரம்பித்தது.

PLOTE  இயக்க செயல்பாடுகள் ஏற்கனவே வலுவிழந்து முடங்கியிருந்த வேலையில் காலப்போக்கில் அதுவும் காணாமல் போய்விட்டது. விடுதலைப்புலிகளின் அச்சத்தின் காரணமாக பாலகுமார், பிரபாகரன் கூட சமாதானமாகி ஒன்று சேர்ந்து பின்னாளில் ஒதுங்கிவிட்டார்.
EPRLF   பத்பநாபா
ஆனால் பிரபாகரன் பார்வையில் எதிரியாக ஒருவர் மாற்றம் பெற்றுவிட்டால், அவர்களின் துரோகம் அளவு கடந்து போயிருந்தால் அவர்களின் கதை முடிவு பெற்றதாக இருக்க வேண்டும். சமமாக அல்லது இணையாக களத்தில் இருந்தவர்களின் வலுவை குறைத்து வைத்திருந்த பிரபாகரனால் அவர்களை முழுமையாக துடைத்தாரா? என்பது இங்கு ஒரு பெரிய கேள்விக்குறி?  ஆனால் பத்பநாபாவை தமிழ்நாட்டில் வைத்து கொன்றது பின்னாளில் இராஜிவ் காந்தி மரண புலனாய்வின் போது தான் கண்டுபிடிக்கப்பட்டது.  இப்போது ராஜபக்ஷே விசுவாசியாக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா (EPRLF) தங்களுடைய அலுவலகமான சூளை மேட்டுக்கு ஆட்டோ மூலம் வந்து கொண்டுருந்த போது, ஆட்டோ ஓட்டுநரிடம் உருவான சண்டையில் தானியங்கி துப்பாக்கி மூலம் சுட,அப்பாவிகள் கொல்லப்பட ஆண்டு கொண்டுருந்த எம்.ஜி.ஆருக்கு மொத்தத்திலும் தர்மசங்கடம்.

எம்.ஜி.ஆர் போட்ட ஒரே உத்தரவு. காவல் துறை அதிகாரி மோகன்தாஸ் மொத்த போராளிகளின் ஆயுதங்களையும் பறிமுதல் செய்து தடுப்புக்காவலில் வைத்தார். காரணம் பெங்களூர் சார்க் மாநாடு.  ஜெயவர்த்னே வருகை.  ராஜீவ் காந்தியின் தனிப்பட்ட இலங்கை குறித்த அக்கறை.  மொத்த இந்திய அதிகார வர்க்கமும் இந்த துப்பாக்கி சூட்டின் மேல் கவனம் செலுத்த தமிழ்நாட்டில் இருந்த மொத்த போராளி குழுக்களையும் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை. அப்போது தமிழ்நாட்டில் இருந்த பிரபாரனுக்கு இது போன்ற சூழ்நிலை இலங்கையில் நடந்து இருந்தால் துப்பாக்கி ரவை பேசி இருக்கும். மேலும் இது எம்.ஜி.ஆரின் உத்தரவு. இது தமிழ்நாடு.  தம்மை வளர்ப்பவர், தம் மீது அளவில்லா அக்கறை செலுத்துவர்.  எதிர்க்க முடியாது.  காரணம் எவரோ செய்த தவற்றின் விளைவாக தன்னுடைய வயர்லெஸ் முதல் அத்தனையும் காவல் துறை வசம் போய்விட்டது.  எம்.ஜி.ஆரை நேரிடைடையாக எப்போது வேண்டுமானாலும் சந்திக்கும் நிலைமை மாறி பிரபாகரன் சந்திக்கு வந்த பரிதாப நிலைமை.

காந்திய வழியில் அறப்போராட்டத்தை தங்கியிருந்த இடத்தில் பிரபாகரன் தொடங்கினார். தங்களுடைய ஆயுதங்களை ஒப்படைக்கும் வரைக்கும் உண்ணாவிரத போராட்டம்.  மொத்த ஊடகமும் ஊதிப் பெரிதாக்க மொத்த கவனமும் பிரபாகரன் மேல்.  இதற்கிடையே டெல்லியில் இருந்த ப.சிதம்பரம் இதற்கும் மத்திய அரசாங்கத்திற்கும் சம்மந்தம் இல்லை என்று கொளுத்திப்போட இறுதியில் ஆயுதங்களை பிரபாகரனிடம் ஒப்படைத்த  எம்.ஜி.ஆர் பிறகு தனியே அழைத்து ஆசுவாசப்படுத்தியது தனிக்கதை. இந்த இடத்தில் மற்றொரு உண்மையும் உண்டு.  ஆயுதங்கள் திரும்ப ஒப்படைத்த போது மற்ற போராளிகுழுக்களிடம் இருந்து பறிமுதல் செய்த அத்தனை ஆயுதங்களும் பிரபாகரன் வசமே ஒப்படைக்கப்பட்டது, அது தான் எம்.ஜி.ஆர்.  இவர் தான் பிரபாகரன்?

இந்திய இறையாண்மை என்ற பெயரில் ராஜிவ் அழுத்தம் ஒரு பக்கம்.  பிரபாகரன் கொண்டுள்ள தனி ஈழத்தின் உண்மை நிலைமையை அறிந்த எம்.ஜி.ஆர் தன்னால் ஒரு அளவிற்கு மேல் இதில் தலையை நீட்ட முடியாது என்பதாக ஒதுங்க ஆரம்பித்தார்.  பெங்களுரில் வைத்து பிரபாகரனை மொத்த அதிகார வர்க்கத்தினரும் சமாதனப்படுத்தி முடிவுக்கு கொண்டு வர முயற்சித்து தோல்வி கண்ட போதிலும், இறுதியாக ராஜிவ் உத்தரவின் பேரில் பெங்களூருக்கு எம்.ஜி.ஆர் வரவழைக்கப்பட்டு பிரபாகரன் கூட பேசவைத்தனர்.  அன்று ஜெயவர்த்னே உருவாக்கி இருக்கும் இலங்கை என்பது தமிழர், சிங்களர், மற்றும் முஸ்லீம் என்று மூன்று பகுதிகளாக பிரித்த நரித்தந்திரத்தை எம்.ஜி.ஆர் உணர்ந்து கொண்டாலும் அந்த சூழ்நிலையில் அவர் எடுத்துப் பேசினாலும் கேட்பவர்கள் எவரும் இல்லை.  பிரபாகரன் பக்கம் உண்மைகள் அதிகம் இருந்தாலும், ஆதரவு கொடுக்கும் சூழ்நிலையில் அவரும் இல்லை.  எம்.ஜி.ஆர் செல்லும் அறிவுரைகளைக் கேட்கும் மனோநிலையிலும் எந்த டெல்லி அதிகாரிகளும் இல்லை.  மொத்தமாக சார்க் மாநாடு மூலம் ஜெயவர்த்னே உருவாக்கிய முன் வரைவு ஒப்பந்தத்தை முன் மொழிய வேண்டும்.  கையெழுத்துப் போட வேண்டும்.  மற்றவை எல்லாம் பின்னால் பார்த்துக்கொள்ளலாம்.

ஒதுங்கியவர், ஓரமாக தள்ளப்பட்டதும் பின்னாளில் ராஜிவ் ஜெயவர்த்னே ஒப்பந்தம் வரைக்கும் வெறும் பொம்மையாகத் தான் நடத்தப்பட்டார். மொத்தமும் கை மீறி விட்டது என்பதை உணர்ந்தவர் எம்.ஜி.ஆர்.   மொத்தமாக தங்களின் உரிமைகளை கை கழுவி விட்டது இந்தியா என்பதை உணர்ந்தவர் பிரபாகரன்.  அன்றைய சூழ்நிலையில் ஆதாயம் ஒருவருக்கும் மட்டுமே.  அது தான் அரசியல் ஞானி ஜெயவர்த்னே.  அவருடைய பிரித்தாளும் சூழ்ச்சியும், விடுதலைப்புலிகளுக்கும் இந்தியாவிற்கும் இடையே உருவாக்க வேண்டிய தீராத பகைமை நாளொரு பொழுதும், பொழுதொரு வண்ணமும் வெகு ஜோராக வளர்ந்து கொண்டுருந்தது.  கற்றுக்கொள்ள வேண்டிய இந்திய தலைவர்கள் இன்று வரைக்கும் கற்றுக் கொள்ளவும் இல்லை.  இலங்கை ஆட்சியாளர்கள் உருவாக்கிய நரித்தந்திரங்களை உணர்ந்து கொள்ளவும் தயாராய் இல்லை.
இலங்கையை பொறுத்தவரையில் தமிழர் எதிர்ப்பு என்பது ஓட்டுக்கான அரசியல்.  தமிழ்நாட்டில் இலங்கைப் பிரச்சனை என்பது அனுதாப அரசியல்.  போராளிகளைப் பொறுத்தவரையிலும் யார் பெரியவன்?  ஆனால் மொத்த இலங்கை வாழ் அப்பாவி பொதுமக்களுக்கும் தினந்தோறும் சுடுகாடு?

ராஜிவ் காந்தி சார்க் மாநாடு மூலம் பெற வேண்டிய புகழ் தள்ளிப்போய்விடுமோ என்ற அச்சம்.  எம்.ஜி.ஆருக்கு வளர்த்த கிடா மார்பில் குத்துகிறதே? என்ற ஆயாசம்.  பிரபாகரனை எப்படி வழிக்கு கொண்டு வரலாம் என்ற இந்திய அதிகாரிகளின் ஆத்திரம். பிரபாகரனுக்கே மொத்த தமிழர்களின் பிரச்சனைகள் என்னவென்று தெரியாமல் ஜெயவர்த்னேவை அநியாயத்திற்கு நல்ல பௌத்தர் என்று நம்பிக்கொண்டு இவர்கள் அத்தனைபேர்களும் ஒப்பந்தத்திற்கு உழைத்துக்கொண்டுருக்கிறார்களே என்ற ஆத்திரம்.

வல்லரசு ரா உளவுத்துறை பேயரசு ஆனது தான் மிச்சம்.  பிரபாகரன் தன்னை வளர்த்துக் கொண்ட ஆதிக்கம் என்பது அவர்களின் மொத்த திட்டங்களையும் தவிடு பொடியாக்கி தனியான LTTE யின் ராஜ்யமும் ராஜபாட்டையும் தொடக்கம் பெற்றது.  மிச்சம் இருந்த போராளிக்குழுக்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று ஒட்டமும் நடையுமாக பாதிப்பேர்கள் தமிழ்நாட்டில், மீதிப்பேர்கள் வெளிநாட்டில்.  அது போகவும், மிஞ்சி இருந்தவர்கள் பிரபாகரனிடம் கெஞ்சல் பார்வை பட்டு தன்னைக் காத்துக்கொள்ளும் சூழ்நிலை.

இலங்கை பிரச்சனை என்ற பூட்டப்பட்ட இரண்டு(இந்தியா இலங்கை) மாடுகளும் வெவ்வேறு திசையில் பயணித்தாலே பிரச்சனை.  இங்கே நான்கு மாடுகள்.  நான்கு திசைகள்?  ஜெயவர்த்னே, ராஜிவ் காந்தி, பிரபாகரன், இந்திய அதிகாரிகள்.  இன்றுவரையிலும் தீர்வும் கண்டபாடில்லை.  தீர்க்கதரிசனத்தை உணர்த்துபவர்கள் யாருமில்லை?

Wednesday, January 20, 2010

தமிழீழ விடுதலைப்புலிகள் சகோதர யுத்தங்கள் (1)

1986 ஆம் ஆண்டு.  பிரபாகரன் உருவாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் (LTTE) தனிப் பெரும் இயக்கமாக உருவான ஆண்டு.

பத்பநாபா, சீறீ சபாரெத்தினம், பாலகுமார், உமா மகேஸ்வரன் எங்கே போனார்கள்?   மற்ற இயக்கங்கள் என்னவாயிற்று?

இன்று வரையிலும் முழுமையான புரிதல்கள் இல்லாமல் பிரபாகரன் மேல் வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டுகளை சற்று உள்வாங்கிவிடலாம்.  காரணம் இப்போதைய சூழ்நிலையில் இந்தியா பிரபாகரன் மேல் கொலை வெறி பார்வை பார்த்துக்கொண்டுருக்கிறது.  திம்பு, பெங்களூர் பேச்சுவார்த்தை என்று எல்லாமே தோல்வியில் முடிந்து கொண்டுருப்பதால் ஜெயவர்த்னே நமுட்டுச் சிரிப்பும், ராஜீவ் காந்தி தடுமாற்ற சிந்தனைகளும், மொத்த இந்திய அதிகார வர்க்கத்தினர் முடிவுக்கு கொண்டு வந்தே ஆக வேண்டும் உள்ளுற புகைச்சலுடன் வாழ்ந்து கொண்டுருக்கும் சூழ்நிலை இது.

பிரபாகரன் தலைமறைவு வாழ்க்கை தொடங்கிய இளவயது முதல், தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரை இலங்கை அரசாங்கத்திடம் அறிக்கை மூலம் வெளியிட்ட 1978 ஆம் ஆண்டு,     " மொத்த கொலைகளுக்கும் நாங்கள் தான் பொறுப்பு " என்று உமா மகேஸ்வரன் கையெழுத்து போட்டு பத்திரிக்கையின் வாயிலாக அரசாங்கத்திற்கு தெரிவித்தது வரையிலும் தனக்குத் தானே உருவாக்கிக் கொண்ட எந்த கொள்கையிலும் சந்தர்ப்பவாதம் என்பது இல்லாமல் மொத்த லட்சிய முன்வரைவாகவே நகர்த்திக்கொண்டு வந்தார்.

1983 ஆம் ஆண்டுக்குப் பிறகு தன்னை விட மற்ற இயக்கங்களின் வளர்ச்சி மிக வேகமாக இருந்தாலும், நிதி ஆதாரங்கள் தங்களை விட மேம்பட்டு இருந்த போதிலும் கூட தன்னுடைய பாதையை மாற்றிக் கொள்ளவில்லை.  இனி சேர்ந்து செயல்பட்டுத் தான் ஆக வேண்டும் என்று ஆன்டன் பாலசிங்கம் கொடுத்த அழுத்தம் கூட பல முறை யோசித்து, பல நாட்கள் கழித்து வேறு வழியில்லை என்பதாகத்தான் மொத்த மற்ற இயக்கங்களுடன் கை கோர்த்தார்.  எவருடனும் எந்தப் பிரச்சனையும் இல்லை.  அவர்களிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவும் இல்லை.

ஆனால் இதே காலகட்டத்தில் ரா உள்ளே நுழைந்து சந்திரஹாசன் மூலம் டெலோ இயக்கத்தினர், அதனைத் தொடர்ந்து மற்ற இயக்கங்களுக்கு கிடைத்த இந்திய மரியாதை யோசிக்க வைத்ததே தவிர கலக்கத்தை உருவாக்கவில்லை.  பயிற்சி முக்கியம் என்பதாக தானாகவே ரா விரித்து வைத்திருந்த வலையில் போய் மாட்டிக்கொண்டார்.  ஜெயவர்த்னே ஒரு பக்கம், இந்தியா மறு பக்கம்.  இது போக வேறு வழியே இல்லாமல் இந்தியாவின் அதிகாரவர்க்கத்தினர் முன் கைகட்டி மண்டியிட வேண்டிய அவஸ்யம்.  அவர்களின் ஏச்சும், பேச்சும், அவமரியாதையும், மிரட்டலும் என்று எல்லாவகையிலும் மனோரீதியாக மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கியிருந்ததும் உண்மை.

ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கிறார்கள்?  ஆனால் ஒவ்வொருவரும் தங்களுடைய ஆளுமையை நிலைநாட்டத்தான் தயாராய் இருக்கிறார்கள்.  காரணம் ரா வலைக்குள் உள்ளே நுழைய முயற்சித்த போது (தந்தை செல்வாவின் மகன் சந்திரஹாசன் பொறுப்பாளராக இருந்து மற்ற இயக்கங்களுக்கு செயல்பட்டுக் கொண்டுருந்தவர்)  கிடைத்த பாடம் மொத்தத்திலும் கொடுமையானது.  ரா அதிகாரி கேட்ட முதல் கேள்வியே பிரபாகரனின் மொத்த கோபத்தையும் வெளியே காட்டும் அளவிற்கு இருந்தது.   " LTTE க்கு ஆயுதப் பயிற்சி வேண்டுமென்றால் மற்றவர்களைப் போல நீங்களும் சந்திரஹாசனை தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டும்".  பிரபாகரன் கோபத்தை விட ஆன்டன் பாலசிங்கம் மனைவி அடேல் பாலசிங்கம் கூட பொங்கும் அளவிற்கு உருவாக்கியது.

ஆனால் ரா உள்ளே நுழைந்து முதல் டெலோவிற்கு சிறப்பான பாதை உருவாகிக் கொண்டுருந்தது.  அவர்களின் தைரியமும் அளவுக்கு மீறி வளர்ந்து கொண்டுருந்தது.  மொத்தமாக நிதி உதவி என்று வேறு ஒரு தளத்திற்கு அவர்களை மாற்றி தங்களுடைய ஏவலாளிகள் போல் மாற்றிக்கொண்டுருக்க ஒவ்வொரு இயக்கத்தின் செயல்பாடுகளும் இயல்பான போராளிக்குழுக்களின் வாழ்க்கையில் இருந்து மாற்றம் பெறத் தொடங்கியது.  ஆடம்பரம், தான்தோன்றித்தனம், இந்தியா தங்களுடன் இருக்கும் வரை வேறு யாரும் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது, இந்தியா உதவியுடன் எதிர்காலத்தில் சிறப்பான இடத்தை அடைந்து விடமுடியும், என்று ஒவ்வொருவரும் தனக்குண்டான எதிர்கால அபிலாஷைகளுடன் முன்னேறிக்கொண்டுருந்தனர்.

இது போக மனதிற்குள் இருக்கும் " நான்" " தான் மட்டும்"   என்ற இந்த இரண்டு மன அழுக்கு பல அசிங்கமான பாதையில் பயணிக்க வைத்தது.  பொதுமக்களின் சொத்துக்களை சூறையாடுதல், மிரட்டுதல், கொலை, கொள்ளை, வழிப்பறி, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் இது போக மற்ற இயக்கங்களை வம்புக்கு இழுத்து அழித்தல், குறிப்பிட்ட பகுதியில் தங்களுடைய ஆளுமைய நிலைநாட்டியவர்கள் அதன் தொடர்ச்சியாக மற்ற பகுதிகளுக்கும் நகர்த்தும் போது, உருவான பல பிரச்சனைகளையும் கண்டும் காணாமல் முன்னேறிய போது தான் மொத்தமாக பிரபாகரன் பார்வை அவர்கள் மேல் பட்டது.  காரணம் இதைத்தான் ரா வெகுநாளாக எதிர்பார்த்துக்கொண்டு இருந்தது. போராளிகள் இருக்க வேண்டும்.  ஆனால் வளரக்கூடாது.  ஒருவருடன் ஒருவர் ஒற்றமையாக இருக்கக்கூடாது.  இப்போது நாம் இந்த ஒவ்வொரு ரத்தச் சகதியிலும் கால்வைத்து மேல் நோக்கி நகரலாம்.

முதலில் உமா மகேஸ்வரன்.   (PLOTE)

 பிரபாகரன் வளர்ச்சிக்கு எத்தனையோ அடி உரமாய் இருந்து இருக்கின்றனர்.   தொடக்கத்தில் ராகவன் போல,

இந்த உமா மகேஸ்வரன் இயக்கத்தை ஒரு தெளிவான பாதைக்கு, மக்கள் இயக்கமாக, உலகளாவிய மற்ற நாடுகள் அங்கிகரிக்கும் அளவிற்கு இறுதி வரைக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று விரும்பியவர்.  நல்ல புத்திசாலி, படிப்பாளி, தீர்க்கமான சிந்தனை உள்ளம் படைத்தவர்.  ஆனால் பிரபாகரன் கொண்டு வாழ்ந்த தனி மனித ஒழுக்கம் என்பதில் அடிபட்டு  ஒதுங்கிப் போனவர்.  பெண்ணாசை காரணமாக இருவரும் பிரிந்து செயல்பட வேண்டிய சூழ்நிலை.  பிரபாகரன் கொள்கையின் படி இயக்கத்தில் இருந்து பிரிந்து வேறு இயக்கம் தொடங்கக்கூடாது என்பதையும் மீறி PLOTE இயக்கம் தொடங்கி, வெவ்வேறு பாதையில் இருவரும் பயணித்தனர்.  ஆனால் உமா மகேஸ்வரன் விரும்பிய ஜனநாயக பாதையே அவரின் ஓட்டுநர் மூலம் அவர் உயிரை பறித்தது. இந்த இடத்திலும் ரா திருவிளையாடல் இருக்கிறது. அதை பிறகு பார்க்கலாம். ஏற்கனவே தொத்தலாக போய்க்கொண்டுருந்த இயக்கம் மெதுமெதுவாக தன் இயக்கத்தை நிறுத்திக்கொண்டது.  சென்னையில் ஆன்டன் பாலசிங்கம் முன், பிரபாகரன் கொடுத்த சத்தியத்தை கடைசி வரையிலும் உமா மகேஸ்வரன் விசயத்தில் காப்பாற்றியது முதல் ஆச்சரியம்.

உமா மகேஸ்வரன் கொடுத்த வாக்குறுதியான " இனி நான் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரின் மீது சொந்தம் கொண்டாட மாட்டேன்".   இதைப் போலவே பிரபாகரன் " நான் உமா மகஸ்வரன் விசயத்தில் தலையிட மாட்டேன்.  என்னால் எந்த பிரச்சனையும் வராது".

இயக்கத்திற்கான ஒழுக்கக் கோட்பாடுகள் என்று ஏழு கட்டளைகள் போல் வகுத்து இருந்தாலும் பிரபாகரனை பொறுத்தவரையில் தானும் மீறுவதில்லை மீறுபவர்களையும் பொறுத்துக் கொள்வதில்லை.  ஆனால் இதிலும் சில விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்கின்றது.  காரணம் பிரபாகரனை எதிர்ப்பவர் எவரும் உயிருடன் வாழ முடியாது என்ற குற்றச்சாட்டுக்கும் சில விளக்கங்கள்.

தொடக்கத்தில் இயக்கத்தை புணர் நிர்மாணம் செய்தவர்களில் முக்கியப் பங்காற்றியாற்றியவர் ராகவன்.  இவர் தொடர்ச்சியாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்.  பிரபாகரனுக்கு சிகரெட்டின் வாடை கூட பிடிக்காது.  மரியாதையின் காரணமாக அனுமதித்த முதல் நபர் ராகவன்.  இவரும் கருத்து வேற்றுமை காரணமாக பிரிந்து பின்னாளில் வெளிநாட்டுக்கு புலம் பெயர்ந்தவர்.  பின்னால் வந்த ஆன்டன் பாலசிங்கம் கூட இந்த சிகரெட் பழக்கத்தை விட முடியாமல் தவித்தவர். இறுதிவரையிலும் இவர்களின் தனிப்பட்ட பழக்கங்களை பிரபாகரன் பொறுத்துக்கொண்டார் என்பது அடுத்த ஆச்சரியம். இதன் தொடர்ச்சியாக பின்னால் வரப்போகும் மாத்தையா முதல் கருணா வரைக்கும்.  பிரபாகரன் நினைத்து இருந்தால் கருணா ஒரு பொருட்டே அல்ல.  பொட்டு அம்மன் சொல்லியும் கேட்காத பிரபாகரன் கருணாவுக்கு வழங்கியது ஏறக்குறைய உயிர்ப்பிச்சை. காரணம் கருணாவின் வீரம் அந்த அளவிற்கு பிரபாகரனை ஆளுமை செய்து இருந்தது.  எப்போதே தோன்றும் இந்த இரக்க உணர்வு தான் மொத்த வாழ்க்கையையும், தமிழர்களின் வாழ்வுரிமையும் இன்று கேள்விக்குறியாக்கி இருக்கிறது?

மாத்தையா மீது பொட்டு அம்மன் உளவு அறிந்து கொண்டுவரப்பட்ட செய்திகளின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைத்த போதிலும் அவர் தரப்பு அத்தனை வாத பிரதிவாதங்களையும் அனுமதித்து பிறகு தான் தண்டணை நிறைவேற்றப்பட்டது.  முதன் முறையாக மொதுமக்கள் முன்னிலையில் அறிக்கை வாசிக்கப்பட்டது.

ஒரே காரணம் திறமையாளர்களின் பங்களிப்பு என்பது சில சமயம் பாறை மனதில் விதை முளைக்கும் என்பதை நிரூபிக்கும் ஆதாரம்.

மாத்தையாவின் விசுவாசம் என்பதும், அவருடைய திறமை என்பது அளவிடற்கரியது.  ஆயுதப்பயிற்சிக்காக பிரபாகரனை தமிழ்நாட்டில் வைத்து ரா உளவுத்துறையுடன் நேரிடையாக சந்திக்க வைக்க ஆன்டன் பாலசிங்கம் முயற்சித்த போது, அப்போது தி நகரில் காவல்துறை பிரச்சனைகளும், பின்னாளில் இலங்கைக்குச் சென்றதும், இதன் தொடர்ச்சியாக காவல்துறை மீண்டும் தன்னை கைது செய்து விடுமோ என்று பயந்த பிரபாகரன்,  ஆன்டன் பாலசிங்கத்தின் கோரிக்கையை நிராகரித்தார்.  மீண்டும் அழுத்தம் கொடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க பிரபாகரன் சார்பாக தமிழ்நாட்டுக்கு வந்தவர் மாத்தையா.  வேலை முடிந்தது மாத்தையா அன்று பாலசிங்கத்திடம் சொன்ன வாசகம் இது.

" தலைவருக்கும் ஏதாவது ஒன்று என்றால் நீங்கள் உயிருடன் இருக்க மாட்டீர்கள்"

இதே இந்த மாத்தையா கூட உளவுத்துறையின் திருவிளையாடல் காரணமாக மரணிக்க நேர்ந்தது. பின்னால் வரும் சம்பவங்கள் மூலம் அதை கண்டு உணரலாம்.

பிரபாகரனைப் பொறுத்தவரையில் தொடக்கம் முதல் ஒரே சொல். ஒரே வார்த்தை.ஒரே நோக்கம்.

ஆங்கிலத்தில் சொல்வார்களே?  Why Should I Compromise?

இரண்டாவது சிறீ சபாரெத்தினம்.

பிரபாகரனின் தொடக்க போராட்ட காலத்தில் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்த போது குட்டிமணி தங்கதுரை உருவாக்கி இருந்த டெலோ இயக்கத்தில் தான் போய்ச் சேர்ந்தார். சேர்ந்தார் என்று சொல்வதை விட பிரபாகரன் திறமைக்காக அவர்களே இவரை அழைத்தனர் என்பது தான் உண்மை.  வயதில் சிறியவர் என்பதால் செல்லமாக அழைக்கப்ட்ட தம்பி என்ற பெயரே காலம் முழுக்க நிலைபெற்றது. சொல்லப்போனால் அவர்களுடன் போய் பணியாற்றிய போது, துப்பாக்கிகள் பற்றிய முழுமையான அறிவு, இயக்கத்திற்கான மொத்த எதிர்கால நோக்கங்கள் என்று எல்லாமே கற்றுக் கொண்ட நிகழ்வுகள் நடந்தது.  ஆனால் தன்னுடைய மனதில் அடைகாத்து வைத்திருந்து, தனக்கு பிடித்தமான தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரை விட மனதில்லாமல் பின்னாளில் உமா மகேஸ்வரனை இணைத்துக்கொண்டு தனக்குச் சமமான பதவியையும், மரியாதையும் அளித்து மொத்தமாக தன்னுடைய இயக்கத்தை வளர்ப்பதில் உறுதியாய் இருந்தார்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் "பிரபாகரன் சர்வாதிகாரி" என்று ஒவ்வொருவரும் ஒதுங்குவதும், தூற்றுவதும் நடந்து கொண்டுருந்த போதிலும் தன்னுடைய பாதையில் மட்டும் கவனமாக முன்னேறிக்கொண்டுருந்தார்.  அடுத்த வேளை சோற்றுக்குக்கூட கடினமாக வாழ்ந்து கொண்டுருந்த காலகட்டம் அது.  ஆனால் வெளியேறிவர்கள் தூற்றுதலை அதிகப்படுத்தியதும், வெளிநாட்டு வாழ் தமிழர்களிடம் மொத்தமாக பிரபாகரன் குறித்து அவதூறுகளை பரப்பிய போது, எச்சரிக்கைகளையும் மீறி தொடர்ந்து கொண்டே இருந்த போது தான் எதிரிகளை நோக்கி பிரபாகரனின் துப்பாக்கி ரவை பேசியது.

ஆனால் டெலோ இயக்கத்தில் சிறீ சபாரெத்தினம் இறப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பதற்கு சில காரணங்கள்.  தொடக்கம் இப்படித் தான் தொடங்கியது.
TELO FLAG
" 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி விடுதலைப்புலிகள் பயணம் செய்த படகை இலங்கை இராணுவம் சிறைபிடித்தது.  அதில் இருந்தவர் சிறீ சபாரெத்தினத்தின் உறவினரும், பிரபாகரனின் வலது கரமான மட்டக்களப்பு மேஜர் அருணா கொல்லப்பட்டார்.  அதன் துக்க சுவரெட்டிகளை டெலோ இயக்கத்தினர் கிழித்து எறிந்ததும், கடையடைப்பு நடத்திய மக்களை மிரட்டியதும், இதைக் கேட்கப் போனவர்களை உதைத்து அனுப்பியதும், சிலரை (லிங்கம் )சுட்டுக்கொன்றதும் நடந்தது".

ஆனால் விடுதலைப்புலிகளின் கோட்பாட்டின்படி பிடிபடும் போது சயனைடு சுவைத்து உயிர் இழப்பது தான் கொள்கை.  அதையும் மீறி அருணாவை இராணுவத்தினர் உயிருடன் தான் பிடித்து வைத்து இருந்தனர்.  ஆனால் அதுவரைக்கும் டெலோ மேல் கொண்டுருந்த கசப்பான நிகழ்வுகள் இதை தொடக்கமாக வைத்தும், ரா உளவுத்துறையுடன் கொண்டுருந்த நெருக்கமான புரிந்துணர்வுகளுக்காக காலத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டுருந்தார் என்பது தான் முற்றிலும் உண்மையாக இருக்க முடியும். மேலும் அவர்களின் தினசரி மோசமான நடவடிக்கைகள் அத்தனையும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டுருந்தது.

கெட்ட நேரம் வரும் போது சிந்தனைகளும் மழுங்கிப்போகும் என்பது போல் டெலோ அமைப்பினர் வெறியாட்டம் நடத்திக்கொண்டுருந்தனர்.  கொலை, கொள்ளை, வழிப்பறி, மிரட்டல், தங்களுடைய ஆதிக்கத்தை மட்டும் நிலை நிறுத்துதல், கடத்திச் சென்று கதற அடித்தல் என்று இது போல மூன்றாந்தர அத்தனை வேலைகளையும் நடத்திக்கொண்டுருந்தனர்.  இதன் தொடர்ச்சியாக தேடித்தேடி டெலோ இயக்கத்தினர் அத்தனை பேர்களையும் விடுதலைப்புலிகளின் துப்பாக்கி ரவை தின்று தீர்த்தது.  இறுதியில் ஓளிந்து வாழ்ந்த சிறீ சபாரெத்தினத்தை, விடுதலைப்புலிகள் மக்களுக்கு கொடுத்துருந்த அச்சுறுத்துதல் காரணமாக புகலிடம் எவரும் கொடுக்க மறுக்க, புகையிலை காட்டுக்குள் ஒளிந்து இருந்த சிறீ சபாரெத்தினத்தை யாழ் தளபதி கிட்டு வெறி தீர மொத்த (28) தோட்டங்களும் சீறிப் பாயும் அளவிற்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.  சிறீ சபாரெத்தினம் கெஞ்சிய உயிர்பிச்சை காற்றில் கரைந்து மறைந்தது.
எண்ணம் உள்ளே இருந்ததை வெளிக்கொண்டு வர உதவியதும், அதுவே இறுதியில் தன்னுடைய ஆளுமையை நிலைநாட்ட உதவியதும் என்று நடந்தேறியது.  இரண்டும் முக்கியக் காரணம். பிரபாகரனின் சுயநலமும் மக்களின் பொதுநலமுமாக, டெலோ இயக்கம் முடிவுக்கு வந்தது.

டெலோ அழிக்கப்படாமல் இருந்தால் என்ன நடந்து இருக்கும்?                                                                

ரா உளவுத்துறையின் ஆதிக்கம் இன்னும் அதிகமாக தொடக்கம் முதலே வலுப்பட்டு இருக்கும்.

                                                                                                சிறீ சபாரெத்தினம்                                                                                      
இலங்கைக்கும், பிரபாகரன் இயக்கத்திற்கும் மிகப் பெரிய சவாலாக இருந்து இருக்கும்.

இயக்கத்தின் கொள்கைகள் என்று மொத்த நாலாந்தரமான அத்தனை கீழ்த்தரமாக செயல்பாடுகளும் நடந்தேறி மொத்த மற்ற போராளிகுழுக்களுக்கும் உலக மக்களிடம் வெறுப்புணர்வை உருவாக்கியிருக்கும்.

பிரபாகரன் இலங்கையுடன் போராடி ஜெயிப்பதை விட இவர்களைப் போன்றவர்களிடம் போராடுவதும், பின்னடைவுகளை சந்திப்பதும் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டுருந்துருக்கும்.  பின்னாளில் பெற்ற பிரபாகரனின் மகத்தான வளர்ச்சி என்பது வெறும் கற்பனையாக இருந்துருக்கலாம்.
காரணம் தொடக்கம் முதல் கடற்கரையோரமாய் வாழும் மக்கள், மொத்த முஸ்லிம் மக்கள் என்று இலங்கையின் குறிப்பிட்ட சாரரிடம் பிரபாகரன் செல்வாக்கு வளரவில்லை என்பது முக்கியம் போல அந்த மொத்த மக்களும் பிரபாகரனை அந்த அளவிற்கு வெறுத்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அடுத்து மிஞ்சியுள்ள இயக்கங்கள்?.