இயலாமை என்பது அக்கறையின்மையின் பக்கத்து வீட்டு பங்காளி.
தமிழன் என்ற இனத்தில் இன்று வரையிலும் இயலாமை என்ற வார்த்தை வசதிகளுக்கு ஏற்றபடி மாறி வந்து கொண்டேதான் இருக்கிறது. காலம் மாறும். காட்சிகள் மாறும். ஆனால் மாற்றம் ஏதும் பெறாமல் இந்த இயலாத்தனம் மொத்தத்தையும் மற்ற இனத்தை விட தமிழினம் அதிகமாக பெற்றுள்ளது.
மாற்றம் என்பது மாறாதது. ஆனால் இங்கு மாற்றம் ஏதும் இல்லை.
இத்தனை இயலாமையா? நம்முடைய தமிழின முன்னோர்களிடம் இருந்தது என்று வழிநெடுக பல உதாரணங்கள் பார்த்த போதும், கீழே உள்ள உதாரணத்தை பார்த்தபோது இன்று பார்த்துக்கொண்டுருக்கும் அவலத்தை விடவும் கொடுமையாக இருக்கிறது.
தில்லி அரசாட்சி நடத்திக்கொண்டு இருந்தவன் (கிபி 1311) மாலிக்காபூர் என்ற அலி மன்னர்(?). நம் ஊரை நோக்கி படையெடுத்து வரப் போகிறார் என்ற செய்தி வந்தது. செய்தி கிடைத்ததும் தான் தாமதம் திருச்சிக்கு அருகே உள்ள ஊரில் (ஊர் குறிப்பு இல்லை) உள்ள அத்தனை பொதுமக்கள் செய்த செயலை அங்கு சேவை பணியில் இருந்த கிறிஸ்துவ பாதிரிமார்கள் போப்பிற்கு கடிதம் வாயிலாக தெரியப்படுத்தி உள்ளனர்.
"ஊர் மக்கள் அனைவரும், ஊரின் திறந்த வெளிக்குத் திரண்டனர். ஆண்கள், பெண்கள், முதியோர், இளையோர், குழந்தைகள் என்று இன்ன பிறர், அவர்களுடன் கூடத் தாம் வளர்த்த ஆடுகள், மாடுகள் அனைத்தையும் ஒருங்கு கூட்டினர். அனைவரையும் சுற்றிப் பெரிய விறகுகளைக் கொண்டு வந்து விறகு வேலி அமைக்கப்பட்டது. முடிவில், விறகு வட்டத்தின் உள்ளே திரண்டிருந்த ஊர்மக்கள், விறகுகளுக்குத் தாமே தீ மூட்டிக் கொண்டனர். அனைவரும் கதறிக் கதறித் தீயில் வெந்து செத்தனர்"
தடுக்க முயன்றவர்கள் தட்டுத்தடுமாறியது தான் மிச்சம். வேறு என்ன அவர்களால் செய்து விடமுடியும்?
தொடக்க காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் என்பவர்கள் வீரம் என்பதை வீரனாக வாழ்ந்து காட்டினர். ஓரளவிற்கேனும் நாகரிகம் என்பது தவழத் தொடங்கிய காலத்தில் இருந்த தொழில் நுட்பத்தை வைத்துக்கொண்டு 500 ஆண்டுகளுக்கு முன்னால் கடல் பயணத்தின் மூலமாக வந்த அத்தனை மேலைநாட்டினரும் கடல் கடந்து வாணிபம் செய்ய என்ற போர்வையில் உள்ளே வந்து அத்தனை நாடுகளையும் தங்கள் ஆளுமைக்குள் கொண்டு வந்தார்கள்.
ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் மன்னர்களான சோழர்கள் நான்கு வகையான படைகளையும் தாங்களே வடிவமைத்து, பயணம் செய்து வெற்றிக்கொடி நாட்டிய நாடுகளின் பட்டியல் இது.
கடாரம் (மலேசியா), சீயம் (தாய்லாந்து), சாவகம் (இந்தோனேசியா), குமர் (கம்போடியா), புட்கம் (பர்மா), சிங்களம் (இலங்கை).
கற்பனையில் கொண்டு வாருங்கள். யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, மற்ற போர் வீரர்கள், தேவையான உதவியாளர்கள், என்று இத்தனை பேர்களுக்கும் தேவையான அன்றாட தேவைகள். ஆயிரம் மைல்களை கடந்து சென்றதோடு அல்லாமல் அத்தனை இடங்களிலும் வெற்றிக்கொடிகட்டு என்று வெற்றியை நாட்டிய இவர்களின் வீரத்தை வெறும் வார்த்தைகளால் புகழ்ந்து விட முடியுமா?
வளர்ந்த இன்றைய தொழில் நுட்பத்தில் இன்று எத்தனையோ ஓட்டைகள். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏராளமான தொழில் நுட்ப உதவிகள் இருந்தாலும் வீரம் என்பது என்னவென்று தெரியாதவர்கள் ஏதோ ஒரு குளிர்சாதன அறைக்குள் அமர்ந்து கொண்டு ஆளுமை செய்து கொண்டுருப்பவர்களை எந்த வகையில் கொண்டு வருவீர்கள்?
அவர்கள் முதிர்ச்சி அடையாதவர்கள், முன்னேற்றத்தை பயன்படுத்த தெரியாதவர்கள் என்று எளிதான வார்த்தைகளுக்குள் அடக்கினாலும் தமிழனின் வீரம் என்பது மற்ற எந்த இனத்தையும் விட மாசற்றது. விளங்கிக்கொள்ள முடியாத கால நிலை, பருவ நிலை, சூழ்நிலை, அத்தனையும் தங்களுடைய வீரம் ஒன்றினால் மட்டுமே சாதித்து காட்டியவர்கள்.
சென்ற இடங்களில் எவரும் காலணி ஆதிக்கத்தை நிலைநாட்டவில்லை. எதையும் திணிக்கவில்லை. புலிக்கொடியை பறக்க விட்டத்தில் அவர்களின் புனிதப்பயணம் முழுமை அடைந்தது. ஆமாம். கல்வெட்டுகளும், காப்பியங்களும், இலக்கியங்களும் அவ்வாறு தான் ஒப்புவிக்கினறன.
பொருளாதார ரீதியாக அங்குள்ளவற்றை இங்கே கொண்டு வராத மன்னர்கள் கூட ஆச்சரியமாக தெரியவில்லை. ஆனால் கல்வெட்டுகள், குறிப்பேடுகளில் கூட சமஸ்கிருதம் தான் ஆட்சி மொழியாக அங்கங்கே பரிணமிக்கின்றன. வீரமாய் இருந்தவர்களை விவேகம் கொண்டு அருகில் இருந்தவர்களின் அற்புத ஆலோசனைகள் விளைவாக உருவானது.
தன்னுடைய பலம் என்பதையே பலவீனமாக கருதிக்கொண்டவர்கள். இன்று வரையிலும் அதுவே தொடர்ந்து கொண்டுருப்பது தான் ஆச்சரியத்தின் உச்சம்.
மரபுக்கோளாறு ஒரு பக்கம். மாற்ற முடியாத சிந்தனைகள் மறுபக்கம்.
மரபு சார்ந்த விசயங்களில் அத்தனை மயக்கம் நம்முடைய தமிழனத்திற்கு. பேரனுக்கு தாத்தாவின் பெயரை சூட்டுவதுடன் நம்முடைய கடமை முடிந்து விடுகிறது. பண்பு, பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றை எளிதில் மறந்து மறைத்து விடுகின்றோம். ஆளுமை என்பதில் உள்ள உண்மையான அர்த்தத்தை உணர்த்த தவறி விடுகிறோம். அவனே அது உணரும் போது அனர்த்தமாகிவிடுகிறது.
நம்முடைய ஆற்றலை நாம் உணராத போதும் கூட நம்மை ஆள வந்தவர்கள் மிக எளிதாக உணர்ந்தார்கள். நம்மிடம் உள்ள உழைப்பை மிக எளிதாக கண்டு கொண்டார்கள்.
ரப்பர் உற்பத்தியில் முதலிடம் வகித்துக்கொண்டுருந்த பிரேசில் நாட்டை வீழ்த்த வேண்டும் என்பதற்காக 20 ரப்பர் செடிகளை திருட்டுத்தனமாக மலேசியா நாட்டுக்கு கொண்டு வந்தவர் வெள்ளையர் (1877) சர் ஹென்ரி விக்ரஹாம் என்பவர். ஆனால் மலேசியாவை மொத்த ரப்பர் காடாக மாற்றியவர்கள் அத்தனை பேரும் இங்கிருந்து அழைத்துச் சென்ற நம்முடைய
தமிழின மக்கள்.
இங்கு மட்டுமல்ல. இலங்கை, பீஜீத் தீவு,யூனியன் பிரதேசங்கள், ஆப்ரிகா வைரச்சுரங்கங்கள் அத்தனை உழைப்பும் தமிழனத்தின் உழைப்பு. ஆமாம் உழைப்பு மட்டும் தமிழனத்தின் பங்கு. கிடைத்தபங்கு அத்தனையும் எடுத்துக்கொண்டு போனவர்கள் வெள்ளை மக்கள்.
எடுத்தார்கள். போனார்கள்.
வென்றார்கள். வாழ்ந்தார்கள்
வசதியான இடத்தில் இருந்து கொண்டு இன்று நமக்கே அறிவுரை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் நாம் ?
நாம் இன்று உணரத் தயாராய் இருந்தாலும் நம்மை ஆட்சி செலுத்திக்கொண்டுருப்பவர்களின் அக்கறை என்பது அக்கரையில் உள்ளவர்களின் வாழ்க்கையை விட மோசமாகத்தான் இருக்கிறது. அவர்களின் வாழ்வியல் அவலம் வெளியே தெரிகிறது. இங்கு உள்ளே சிறிது சிறிதாக கட்டுமானத்தில் உள்ள கற்கள் உருவப்பட்டுக்கொண்டுருப்பது தெரியாமல் இந்தியா ஒளிர்கிறது என்பதை உரத்து வாசித்துக்கொண்டுருக்கிறோம்.
எத்தனை தடைகளை அமெரிக்கா அரசாங்கம் இந்திய மாணவர்களுக்கு விசா கெடுபிடிகளை உருவாக்கினாலும் பில்கேட்ஸ் குரல் முதன்மையாக எதிர்த்து குரல் வருகிறதே? காரணம் புரிந்தவர் கணக்கற்ற சொத்துக்கு அதிபதி. காரணத்தை உணர நேரமில்லாமல் தினந்தோறும் வளர்ந்து கொண்டுருக்கும் ஊடகத்தின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிக்கொண்டுருக்கிறோம். ரசித்துக்கொண்டுருக்கிறோம்?
வாய்ப்பு உருவாக்கப்படவில்லை என்பது ஒரு பக்கம். உருவாகி உள்ள வாய்ப்புகளை உன்னதமாக பயன்படுத்த தெரியாத முட்டாள் தனம் மறுபக்கம்.
உணர்ந்தவர் ஏறுவதில் ஆயிரம் தடைக்கற்களை போட்டு வைப்பது ஒரு பக்கம். ஓய்ந்து போனவர்களை பார்த்து "பார்த்தாயா? நான் அப்பவே சொன்னேன்ல?" என்பவர் மறுபக்கம்.
பிய்ந்து போன செருப்பை தைக்கக்கூட தெருவில் ஆள் கிடைக்கிறார்கள்? நைந்து போன மனத்துடன் வாழும் தமிழனை காக்க எந்த அவதாரம் மனித ரூபத்தில் வரப்போகின்றான்?
தமிழனின் வாழ்வியல் தொடக்கம் முதல் இன்று வரையிலும் உள்ள தொடர் சிந்தனையோட்டம் இது.
முன்னெடுத்துச் செல்லும் உங்கள் கரங்கள் அளிக்கும் ஓட்டுக்கு நன்றி.
விமர்சித்து தொடர்பவர்களுக்கு வணக்கம்

.jpg)





.jpg)
