ஆய்தத ஆடைத் தொழிலில் பெண்களின் இடம் மிகச் சிறப்பானது. அர்பணிப்பு, அக்கறை, ஆர்வம் இதற்கு மேல் பணிபுரியும் நிறுவனம் பாதுகாப்பு எனில் மொதத குடும்ப உறுப்பினர்களும் ஒன்றாக உள்ளே வந்து விடுவார்கள். ஆண்கள் மற்றும் இளைஞர்கள் என்றால் மரங்கொத்திப் பறவை போல காசு கிடைக்கும் இடமெல்லாம் சிறப்பு என்று தாவி ஓட்டம் பிடித்து கடைசியாக ஓட்டையாண்டியாகி ஒன்றுக்கும் உதவாத ஒதுக்கப்பட்ட ஆடைகள் போல ஏதோவொரு கீழ்த்தரமான நிர்வாகத்தில் சிக்கி சின்னாபின்னா பட்டுக் கொண்டுருப்பார்கள்.
ஒரு தைக்கும் பெண் எண்ணிக்கை அடிப்படையில் தைக்கும் வாய்ப்பு இருந்தால் தினந்தோறும் 1000 ரூபாய் சம்பாரிப்பது சர்வ சாதாரணம். இதுவே ஆண்கள் என்றால் வாரத்தில் 7 ஆயிரம் வரைக்கும் கொண்டு போய் டாஸ்மார்க்கில் சேர்த்து விடுவார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் உள்ளே வந்த நவீனங்கள் அத்தனையும் தொழிலாளர்களுக்கு வரப்பிரசாதம். முதலாளிகளுக்கு உயிர் மூச்சை போக வைத்துக் கொண்டுருக்கும் முதலீடுகள். பணத்தை கொட்டிக் கொண்டே இருந்தால் அந்நியச் செலவாணி வாழ வைக்கும். இல்லாவிட்டால் உள்ளூர் களவாணியாய் மாற்றி விடும்.
ஒரு ஆய்த்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தின் முக்கிய இரண்டு பகுதிகள். துணியாக வந்து கத்திரி வைக்கும் இடமும், பல படிகள் தாண்டி இறுதியாக அயரன் (IRON & PACKING) செய்யும் பிரிவும். கத்திரி வைப்பவன் கூட ரெண்டு இன்ஞ் வெட்டி எறிந்தால் முதலாளி வெகு சீக்கீரம் தெருவுக்கு வரப் போகிறார் என்று அர்த்தம். சரியான முறையில் அளவு பார்த்து தேய்க்காமல் மடித்து வைக்கின்றார்கள் என்றால் வெளிநாட்டில் இருந்து வரும் ஓலையின் மூலமாக வங்கி அதிகாரி நிறுவனத்திற்குள் வந்து உட்காரப் போகின்றார் என்பதை சோசியம் பார்க்காமலே தெரிந்து கொள்ளலாம்.
வெளிநாடுகளுக்குச் செல்லும் ஆடைபயணத்தின் தொடக்கமான அலங்கரிக்கப்பட்ட பாலீதின் கவர்களில் உற்பத்தியின் போது உடைபட்ட ஊசிகள் சிக்கியிருந்தால் அல்லது அந்த ஆடைகளுக்கிடையே ஒட்டியிருந்தால் வெளிநாட்டில் இந்த ஆடைகளை இறக்குமதி செய்தவர் அவரின் மொத்த சொத்துக்களையும் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் இழக்கப் போகின்றார் என்பதை எந்த தொழிலாளர்களும் உணர்வது இல்லை. அதை உணர வைக்கும் பொறுமையும் எந்த முதலாளிகளுக்கும் இருப்பதும் இல்லை. ஒரே காரணம் சொல்வதை மட்டும் செய் என்ற இந்திய மனோபாவம்.
பெட்டி பெட்டியா ஆடைகளை அடைத்து எங்கங்கோ அனுப்புறோம். யார் யாரோ போடுவாங்க. கப்பலையும், ஏரோப்ளேனையும் படத்ல தான் பார்த்துருக்கோம். இந்த பெட்டி கூட பயணம் செய்யுது. அரசாங்க கஜானாப் பெட்டிக்குள்ள டாலாரும் யூரோவும் பவுண்டும் ரொம்பி வழியுதாம். மேலேயும் கீழேயும் களவாணிப் பய கூட்டம் அதிகமாகிப் போனதால நாங்க நடந்து வர்ற பாதை பாதிகூட போட்டு முடியல. அக்கா கால்ல குத்துன முள்ளக்கூட எடுக்க நேரமில்ல. எங்க முதலாளிக்கு நேத்து வந்த பாரின் காரு வாங்கனுமாம். ஏற்கனவே ஏழு காரு உள்ளே நிக்குது. அம்மா கேட்ட ஆயிரம் ரூபாயை அடுத்த கடிதம் வர்றதுக்குள்ள அனுப்பி வைக்கனும்.
கடந்து வந்த ஆடையுலக தொடர் இடுகையில் இன்று விஸ்ரூபம் எடுத்து நிற்கும் சாயப்பட்டறை பிரச்சனைகள். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் தனிப்பட்ட நபர்களின் ஆசை அல்லது பேராசைகள். அடுத்து வரும் பல தலைமுறைகளை வாழவே கூடாது என்பதாக பணப்பேய்களின் தான் தோன்றித்தனம்.
அரசாங்கம், அவர்களின் கொள்கைகள், ஒத்துழையாமை போன்றவற்றையும் தாண்டி
குறிப்பிட்ட முதலாளிகள் ஒன்று சேர்ந்தாலே இதை என்றைக்கோ முடிவுக்கு கொண்டு வந்துருக்க முடியும். ஆனால் சேர மாட்டார்கள். சேரவும் தோன்றது. திருப்பூர் மின் மயானத்தில் உள்ளே விட்டு வெளியே வரும் பிடிசாம்பலை தினமும் பல முதலாளிகள் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.
பணம் துரத்திப் பறவைகளின் ஆசைகள் அடங்கிய பாடில்லை.
காணொளியின் முதல் பகுதி
இரண்டாம் பகுதி
ஆடை உலக தொடர் பயணத்தில் வந்தவர்களுக்கும் ,படித்தவர்களுக்கும், பார்த்தவர்களுக்கும், கருத்துரைத்தவர்களுக்கும், எப்போதும் போல அக்கறையுடன் ஓட்டளித்து நகர்த்திக் கொண்டுருப்பவர்களுக்கும்
நன்றிங்கோ