Showing posts with label மு. Show all posts
Showing posts with label மு. Show all posts

Saturday, March 19, 2011

கொங்குநாடு முன்னேற்றக் கழகம் (கொ.மு.க,) - ஏழுக்குள் ஏழரை

கலைஞர் எப்போதும் மற்றவர்களுக்கு இதயத்தில் மட்டுமே இடம் கொடுப்பவர்.  இந்த முறை உளவுத்துறையில் உள்ள எந்த புண்ணிய ஆத்மா தகவல் கொடுத்தார்களோ கொங்கு முன்னேற்றக் கழகத்திற்கு ஏழு சீட்டுகளை தராளமாக வழங்கியுள்ளார்.  

தற்போது நடக்கப் போகும் 2011 தேர்தலில் பா.ம.க. வுக்கு கிடைத்த அதிர்ஷ்ட சீட்டுகளைப் போலவே இந்த கொ.மு.கவுக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பு அமைந்துள்ளது. காரணம் காங்கிரஸ்க்கு பாடம் கற்பிக்கலாம் என்று எடுத்த முடிவின் இறுதியில் கலைஞரே கவிழ்ந்து போனது தான் மிச்சம்.

தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் கொங்கு மண்டல பகுதிகள் அமைந்துள்ளது. கொங்கு மண்டலத்தில் நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி பகுதிகளில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.  தமிழ நாட்டு அரசாங்கத்தின் கஜானாவை நிரப்புவதில் இந்த மாவட்ட மக்களின் பங்களிப்பு அதிகம்.  கணக்கீட்டின்படி தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் இந்த பகுதிகளில் இருந்து மட்டும் 42 சதவிகித வருமானம் அரசாங்கத்திற்கு செல்கின்றது என்று புள்ளி விபரங்கள் சொல்கின்றது.

தென்னை, ஆய்த்த ஆடை ஏற்றுமதி தொழில், கனரக வாகனங்கள், பஞ்சு சார்ந்த துணைத் தொழில்கள் மற்றும் நூற்பாலைகள், கோழிப்பண்ணைகள் என்று பல தொழில்களிலும் சக்ரவர்த்தியாக இருக்கும் இந்த கொங்கு இன மக்களுக்கு இந்த அரசியல் அமைப்பு தொடங்க வேண்டிய அவஸ்யம் என்ன? 


தொடக்கத்தில் கோவை செழியன் கொங்கு இன மக்களுக்கு காவலராக இருந்தார். அவருக்குப் பிறகு பெரிய அளவில் எவரும் உருவாகவில்லை.  ஒவ்வொருவருக்கும் இருக்கும் தொழில் அடிப்படையில் எந்த கட்சி ஆட்சிக்கு வருகின்றதோ அவர்களுக்கு சலாம் போட்டு விட்டு தாங்கள் உண்டு தங்கள் தொழில் உண்டு என்று தான் இதுவரையிலும் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். வெறுமனே கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை என்கிற ரீதியில் பலமற்ற நிலையில் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் கடந்த மூன்று வருடங்களில் படிப்படியான வளர்ச்சிக்குப் பிறகு இன்று தமிழ்நாட்டு அரசியலில் 'கொங்கு நாடு முன்னேற்றக் கழகம்' முக்கிய இடத்தை பெற்றதோடு ஏராளமான பிரச்சனைகளையும் உருவாக்கியுள்ளது. 

இவர்கள் சொல்லும் கோரிக்கை வித்யாசமானது. 

"அதிகாரத்திற்கு வருபவர்கள் கொங்கு மணடலத்தை புறக்கணிக்கிறார்கள். பிற்படுத்தப்பட்டவர்கள் நிலையில் இருக்கும் கவுண்டர் இன மககளை மிகவும் பிற்பட்ட இனத்தில் கொண்டு வந்து அரசாங்கம் சேர்க்க வேண்டும். கொங்கு மண்டலத்தில் பி.சி.ஆர் என்ற தீண்டாமை வன்கொடுமை சட்டத்தை நீக்க வேண்டும். இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தி கவுண்டர் இன மக்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்கள் உருவாக்கப்படுகின்றது. இதன் காரணமாகத்தான் 'கொங்கு முன்னேற்றப் பேரவை'யை 'கொங்கு நாடு முன்னேற்றக் கழக'மாக மாற்றியுள்ளோம் " என்கிறார்கள்.

தொடக்கத்தில் தொடங்கிய 'கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை'யினர் அரசியல் எழுச்சி மாநாடு என்று ஒன்று சேர்ந்து 'கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை'யாக மாற்றினர். கோவைக்கு அருகே உள்ள கருமத்தம்பட்டியில் பிப்ரவரி 15 2009 அன்று 'கொங்கு நாடு முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சியாக மாற்றி இதன் தலைவராக பெஸ்ட் ராமசாமி, பொதுச் செயலாளராக ஈஸ்வரன் தலைமையிலும் இந்த இன மக்கள் ஒன்று சேரத் துவங்கினர். 

பெஸ்ட் இன்டர்நேஷனல் என்ற ஆய்த்த ஆடைகளுக்கான மிகப் பெரிய ஏற்றுமதி சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டு வரும் ராமசாமி தன்னுடைய பெயருடன் தன் நிறுவன பெயரையும் செர்ந்து பெஸ்ட் ராமசாமி என்று மர்றியுள்ளார். எந்த விசயத்தில் இவர் பெஸ்ட் என்பதை அவருக்கு எதிரெணியில் உள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும். இவரைப் போலவே பொதுச் செயலாளர் பதவியில் இருக்கும் ஈஸ்வரன் என்பவரும் ஏற்றுமதி தொழிலில் தான் உள்ளார்.  

பெஸ்ட் ராமசாமியை அவரின் குணாதிசியங்களை விமர்சிக்கும் மாற்று அணியினரைப் போல ஈஸ்வரனை அவரின் பிறப்பு குறித்து வரைக்கும் அக்குவேறு ஆணி வேறாக பொளந்து கட்டுகின்றனர்.  காரணம் கவுண்டர் முஸ்லீம் கலப்பு மனத்தில் பிறந்த இவர் எப்படி கவுண்டர் இன மக்களுக்கு காவலராக வர முடியும்? என்பது வரைக்கும் ஏராளமான சர்ச்சையை கிளப்புகின்றனர்.  

ஆனால் அரசியலுக்கு வந்தவுடன் இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தால் நீடிக்க முடியுமா?

கோவைக்கு அருகே கருமத்தம்பட்டி பகுதியில் நடந்த மாநாட்டுக்கு அணைவரும் திரண்டு வாரீர் என்று அழைப்பு விடுக்க ஏறக்குறைய ஒவ்வொரு வீட்டிலும் இருந்து கவுண்டர் இன மக்கள் தங்களது வாகன சகிதமாக போய் கலந்து கொண்டனர்.  திமுக, அதிமுக கட்சிகள் மிரண்டு பார்த்த மாநாடு அது.  ஆனால் இன்று கலந்து கொண்ட அத்தனை மக்களும் இப்போது முகத்தை திருப்பிக் கொண்டு எப்போது தேர்தல் வரும்? இவர்களை கவிழ்க்க என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். 

திருப்பூரைப் பொறுத்தவரையில் சாயப்பட்டறை முதலாளிகள் ஆளுங்கட்சி மேல் கொலை வெறியோடு சமயத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஏற்றுமதியாளர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் மின்சாரத் தடையினால் ஆளுங்கட்சியை நேரிடையாக பகைத்துக் கொள்ளாமல் மனதிற்குள் வன்மத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதுவும் திமுகவுடன் கொமுக கூட்டணி வைத்துள்ளதை பார்த்த பலரும் கொமுக மேல் வெறுப்புடன் விலகி நின்று வேடிக்கை காட்ட தயாராக உள்ளனர். 

இங்குள்ள பெரும்பான்மை கவுண்டர் இன மக்களே இந்த கொங்கு நாடு முன்னேற்ற கழகத்தால் பத்து காசுக்கு பிரயோஜனமில்லை என்று பொறுமிக் கொண்டிருப்பதைப் போலவே எதிரேயிருக்கும் மாவட்ட விவசாயிகள் அமைப்பு அடுத்த சவாலான நிலையில் திமுகவை பழிவாங்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். 

இதற்கு மேலாக இந்த கொங்கு மண்டலம் முழுக்க பரவியிருக்கும் தலித்துகள் இந்த கொமுகவுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கிறார்கள்.  இந்த பகுதிகளில் இருக்கும் தலித்துகளுக்கும் கவுண்டர்களுக்கு காலம் காலமாக நடந்து கொண்டிருக்கும் பனிப்போர்கள் விபரம் புரிந்தவர்களுக்கு நன்றாக தெரிந்த விசயமாகும்.  இந்த கொங்கு மண்டலம் இரட்டை இலையின் கோட்டையாக இருப்பதற்கு முக்கியமான காரணமே இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் ஓட்டுச் சீட்டே காரணமாக இருக்கிறது. இதிலும் கூட இப்போது உருவாகியுள்ள கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் இந்த தலித் ஓட்டுகளை வாரிக் கொண்டு விட்டதால் இன்னும் இடியாப்பச் சிக்கல் அதிகமாகிக் கொண்டே தான் போகின்றது.

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் ஜாதி ரீதியான அமைப்பாக இருந்து போது, பின்னால் பேரவையாக மாறிய போதும் இருந்த புரிந்துணர்வு, படிப்படியாக அரசியல் கட்சியாக மாற வெளியே தெரியாத ஏராளமான பூசல்கள் உருவாகத் தொடங்கியது.  பணத்திற்கும் பஞ்சமில்லை.  ஏதோவொரு வகையில் மொத்தத்தில் கணக்கு காட்ட வேண்டிய சூழ்நிலையில் இந்த இனக் காவலர்கள் இருப்பதால் ஒவ்வொருவரின் முகமூடிகளும் கிழ்த்து தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த மாவட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் எந்த பிரச்சனைக்கும் கொமுக முன்னிலை வகித்தது இல்லை. 

சாயப்பட்டறை பிரச்சனையாக இருக்கட்டும் ஒவ்வொரு தொழில் நிறுவனத்தையும் வீதிக்கு கொண்டு வந்து கொண்டிருக்கும் மின்சாரத் தடையாக இருந்தாலும் தனக்கு என்ன லாபம் என்கிற ரீதியில் தான் ஒவ்வொருவரும் தனித்தனி அணியில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். சில நாட்களுக்கு முன் நீதிமன்றம் உத்தரவிட்ட தீர்ப்பு விபரம் கூட (மாசுக்கட்டுபாடு வாரியம் தான் ஏற்று நடத்த வேண்டும்) வெகுஜன ஊடகத்தில் வெளிவர முடியாத அளவிற்கு அரசாங்கம் கெட்டிக்காரத்தனமாக நடந்து கொண்டிருக்கிறது.  

சென்ற முறை அதிமுக ஆட்சிக்கு வராமல் போனதற்கு விஜயகாந்தின் தேமுதிக பிரித்த ஓட்டுக்களே முக்கிய காரணமாக இருந்தது. அதே போல் கொங்கு மண்டலத்தில் அதிமுகவுககு உண்டான் சரிவுக்கும் இந்த கொங்கு முன்னேற்றப் பேரவை சிதறடித்து பெற்ற பெரும்பான்மையான வாக்கும் முக்கிய காரணியாக இருந்தது. காரணம் சென்ற பாராளுமன்ற தேர்தலில் தனியாக நின்று மொத்தம் ஆறு லட்சம் வாக்குகளை பெற்றனர். சூலூர், பல்லடம் தொகுகளில் பெற்ற பெரும்பான்மையான வாக்குகளை பெற்று அரசியல் கட்சிகளை ஆச்சரியப்படுத்தினர்.

ஆனால் கட்சி ரீதியாகவே ஓட்டுப் போடும் பழக்கத்தில் உளளவர்களை மாற்றுவது கடினம் என்று உணர்ந்து கொண்டு இந்த முறை கொமுக தங்களது கதவை அகல திறந்து வைத்துக் கொண்டு காத்துக் கொண்டிருந்தனர். எப்போதும் போல ஆத்தாவின் தரிசனம் கிடைக்கவில்லை. சந்திக்கும் போது எப்படி குனிய வேண்டும்? எப்படி பேச வேண்டும் என்று வகுப்பு மட்டும் நடக்க நொந்து காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு திமுக அதிசியமாக வரவேற்ப்பு கொடுத்துள்ளது. இதற்குப் பின்னால் உள்ள பேரங்கள் வேறு தனியாக இந்த பகுதியில் சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு வகையில் கலைஞரின் முதல் கோணல் முற்றிலும் கோணலுக்கு இதுவும் காரணமாக இருக்கப் போகின்றது.

காரணம் கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் இந்த அளவிற்கு வளர்ந்து வந்தமைக்கு முக்கிய காரணம் கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை என்ற அமைப்பே முக்கியமாகும்.  ஆனால் அரசியல் ரீதியாக கொமுக செல்வாக்கு பெற படிப்படியாக இந்த அமைப்பை ஒதுக்கி வைக்க இப்போது இவர்கள் 'மாநில கொங்கு பேரவை' என்ற அரசியல் கட்சியை உருவாக்கி மணிக் கவுண்டர் தலைமையில் இந்த முறை தேர்தலில் களத்தில் இறங்குகின்றனர். இவருக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை என்ற அமைப்பில் உ.தனியரசு என்பவர் அதிமுகவில் பெற்ற ஒரு சீட்டு மூலம் இந்த இன மக்களுக்கு பாடுபடப் போகின்றேன் என்று களம் புகுந்துள்ளார். 

இதற்கு மேலாக 49 ஓ என்ற ஆயுதமும், ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்காளர் எழுச்சிப் பேரவை என்ற அமைப்பு 1000 பேர்களையும் இந்த தேர்தல் களத்தில் இறக்குகின்றனர். இவர்களுக்கு கட்ட வேண்டிய டெபாஸிட் தொகையை குறிப்பிட்ட அமைப்பினர் திரட்டி 'யார் வேண்டுமானாலும் வரலாம். ஆள் மட்டும் போதும்' என்கிற ரீதியில் ஆளுக்கட்சியான திமுகவின் ஓட்டுகளை சிதறடிக்க சூறாவளியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இரண்டு பணக்காரர்கள் ஒன்று சேர்ந்தால் என்ன பேசுவார்கள்? 

சேர்க்க வேண்டிய சொத்துக்களை, சேர்த்த சொத்துக்களை காப்பாற்றுவது பற்றி பேசக்கூடும்.  இயல்பாகவே ஈகோ அதிகமுள்ள இந்த இன மக்களின் நல்வாழ்க்கையை காக்க நான் வந்துள்ளேன் என்று சொன்னால்?  அதுவும் திமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு வந்து நிற்கப் போகும் கொமுக வினருக்கு இது போதாத காலம் போலிருக்கு.

ஒரு கட்சிக்கு இரண்டு எதிரிகள் இருந்தாலே சமாளிப்பது சிரமம்.  ஆனால் கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்திற்கு நூற்றுக்கணக்கான எதிரிகள். அதுவும் இந்த பகுதி மக்களின் முக்கிய எதிரியான திமுகவுடன் கூட்டணி வேறு வைக்க கொமுக வின் தலையில் பகவான் சம்மணமிட்டு அமர்ந்துள்ளார். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள கவுண்டர்கள் சிரிக்கும் சிரிப்பில் கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் என்பது சங்கு ஊதி முடிக்க வேண்டிய கழகமாக மாறியுள்ளது.